Wednesday, December 31, 2008

ஸ்பெஷல் அவியல் – 31 DEC 2008

அந்தப் பிரபலம் தனது நண்பரை பிரபல இயக்குனர்கள், எழுத்தாளர்களெல்லாம் கலந்து கொள்ளும் ஒரு விழாவுக்கு அழைக்கிறார். நண்பருக்கு வர முடியாத சூழல். மறுக்கிறார். பிரபலம் வற்புறுத்துகிறார்.

நண்பர் தயக்கமாய் “வாழ்க்கைல இந்த சான்ஸ் கிடைக்காதுதான்..” என்றதும் சட்டெனச் சொல்கிறார் பிரபலம்
“இந்த சான்ஸ்னால வாழ்க்கையே கிடைக்கலாம் இல்லியா?”

யார் அந்தப் பிரபலம்? அது என்ன விழா?

----------------------
பென்சனர் கணனி, பன்மலர், ஜெயமாலா, கவிதா மண்டலம், இன்றைய கல்வி, செய்திமடல், தமிழாலயம், கவிதை உறவு, உதவிக்கரம், ஆட்டோக்காரர், தில்லை சுடர், குடிமக்கள் முரசு, வானமே எல்லை, தொழில் நுட்பத் தோட்டக்கலை, தமிழ்ப்பணி, இமயகீதம், தமிழ் மூவேந்தர் முரசு, கண்ணியம், இலக்கியப்பீடம், கனிமொழி, தமிழ்நானூறு, வளரும் தமிழ் உலகம், அமுதம், ஆளுமைச் சிற்பி, இளந்தமிழன், முகம்


இதெல்லாம் என்ன?

ஆனந்தவிகடன், குமுதம் மாதிரியான வார, மாத, மாதமிருமுறை இதழ்கள்!

எந்த நூலகத்திற்குப் போனாலும் இவற்றைப் பார்க்கலாம். இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா இவற்றை? (வேலன் அண்ணாச்சி – இந்தக் கேள்வி உங்களுக்கு இல்லை!)படித்தால் பிரபல பத்திரிகைகளை விட நல்முத்துக்கள் இதில் சிக்குவதுண்டு!

******************************
விகடன் அலுவலகத்தில் வலைப்பூ படிக்கிறார்கள் என்பது எல்லாரும் அறிந்ததே. வால்பையன் அதை உறுதிப்படுத்தி இருந்தார். மானாட மயிலாட டீமிலும் BLOG படிக்கிறார்களோ? ஏன் கேக்கறேன்னா... நான் ஒருமுறை அவியலில் இவ்வளவு சூப்பராக செட் போடும் கலைஞர்களை அறிமுகப்படுத்தினால் என்ன என்று எழுதியிருந்தேன். அது MM 1, அல்லது MM 2 என்று நினைக்கிறேன். ஞாயிறு ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் செட்டில் படம் வரைந்திருந்த ஓவியக் கலைஞர் சின்னத்தம்பியை அறிமுகப்படுத்தினார்கள்!

ரொம்ப ஓவரா சிந்திக்கறேனோ?

**************************

பெண்கள் ரோஜாப்பூவை தலையில் வைக்கும்போது தலைகீழாக வைத்திருந்தால் எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. என்னமோ, ‘உன் தலைல வந்து ஒக்கார வேண்டியதாப் போச்சே’ என்று அந்தப் பூ தலைகுனிந்திருப்பதாய் எனக்குத் தோன்றும். ஒரு சிலரே பூவை மேல் நோக்கிய வண்ணம் வைக்கிறார்கள். ஏன் இப்படி?

***************************

சிம்பு ஒரு நல்ல திறமைசாலிதான். ஆனால் டான்ஸ் ஆடச் சொன்னால் ஜிம்னாஸ்டிக் செய்வதுதான் ஏனென்று தெரியவில்லை. போதாத குறைக்கு அவரது அப்பாவின் காமெடி பேட்டிகளும் சேர்த்து அவரை காணாமல் போக்கிவிடுமோ என்று தோன்றுகிறது. எப்போ பார்த்தாலும் ‘இன்னிக்கும் நான் ஹீரோவா நடிச்சா கைதட்டி ரசிக்க கூட்டம் கூட்டமா வருவானுக சார்’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு பேட்டி தருகிறார். போதாக் குறைக்கு ‘ரஜினி, கமலை எல்லாம் ஏத்துக்கறீங்க? நான் அவங்களை விட வயசுல சின்னவன் சார்’ என்கிறார்.

இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!

********************************************
ஒருத்தன் ஆஃபீஸுக்கு லீவு லெட்டர் எழுதினானாம்.. ‘நாளை நான் விஷம் குடித்து சாக இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு....’

ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?

இன்னொரு ஜோக்..

மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”

அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.

அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.

”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”

**********************************

முதல் பத்தியில் சொன்ன அந்தப் பிரபலம் நர்சிம். (இதையே எம்ஜியார், கவிஞர் வாலின்னு எதுனா போடலாம்!) அந்த விழா சாரு நிவேதிதாவின் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா. மதன், இயக்குனர்கள் அமீர், சசிகுமார் என்று பலர் கலந்து கொள்ளும் அந்த விழா முடிந்து ‘தேநீர் விருந்து' நடக்குதாம்... நம்ம நர்சிம்மின் ஏற்பாட்டில்!!மேலதிக விபரங்களுக்கு சாருவின் இந்தப் பதிவைப் பாருங்கள்.

நர்சிம்.... எனக்கு ஒரு செட்டு பார்சல்! (புக்ஸ்ங்க!)

**************************************

ஏற்கனவே என்னுடைய ஃபாலோயர் லிஸ்டில் ஸ்வாமி ஓம்கார் என்றொரு பதிவர் இருக்கிறார். போய்ப் பார்த்தால் வயது 108, இருப்பிடம் ‘ஈஸ்வரனின் மனதில் புருவ மத்தியில்’ என்று அவரது ப்ரொஃபைலில் போடப்பட்டிருந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். (பதிவுகள் நல்ல தரம்!) இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஃபாலோயர்.. பார்த்தால் சாணியடி சித்தராம். வயது 84. மூலிகைப்பண்ணை வைத்து நடத்தி வருகிறாராம். இருப்பது தென்பொதிகையாம்.

ம்ம்..நடத்துங்க..நடத்துங்க...

--------------------------

2008 எனக்கு ஒரு முக்கியமான வருடம். வலைப்பூ ஆரம்பித்தது, பல சொல்லிக் கொள்ளும்படியான நண்பர்களைப் பெற்றது என்று மறக்க முடியாத வருடம். என்னை உயிப்பாய் வைத்திருக்கும் எழுத்துக்கும், என் இனிய உங்களுக்கும் என்றென்றும் நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!

(இந்தப் புத்தாண்டில் எந்தச் சபதமும் ஏற்க மாட்டோம் என்ற சபதம் ஏற்போம்! ஓக்கே?)

---------------------------------------------------

தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
-கல்யாண்ஜி

அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து
-கல்யாண்ஜி

எத்தனையோ எழுதிவிட்டேன்
ஒரு முறையும் எழுத முடியவில்லை
உன் பெயரை.

எழுதப்போவது
உன் பெயரையென்று தெரிந்ததும்
தலை நிமிர்ந்து கொள்கிறது
என் பேனா..
எப்படி எழுத?

(கடைசி கவிதையை எழுதினது தபூ சங்கர் அல்ல.. பேரைச் சொன்னா திட்டுவீங்களோன்னு பயமா இருக்கு.... ஹி..ஹி..!)

Monday, December 29, 2008

சரியா... தப்பா?

அந்தச் சிறுவனுக்கு பதினோரு வயது. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். கூட்டுக் குடும்பத்தில் இருந்த அவனது மாமா, பெரியப்பா, அவரது மகன்கள் எனப் பலரும் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார்கள். இவனுக்கு அவர்களோடு அதிகாலை எழுவதும், குளிர்ந்த தண்ணீரில் குளித்து பெரியப்பா ஐயப்பன் கதைகளைச் சொல்லியபடி நடந்தே ஐயப்பன் கோவிலுக்குப் போவதும் மிகப் பிடித்துப் போக, அவர்கள் விரதமிருந்த நாற்பத்தெட்டு நாளும் இவனும் விரதமிருந்தான். விரதம் என்றால் எந்த வித்தியாசமும் இவனுக்கிருக்கவில்லை. ஆறுமணிக்கு பதில் ஐந்து மணிக்கு எழுந்ததும், அவர்களோடு சரணகோஷம் போட்டதும்தான் வித்தியாசம். வாரம் ஒரு முறை வீட்டில் நடைபெறும் பஜனையில் கஞ்சிராவை இசைத்தபடி இவன் பாடல்கள் பாட ‘அட’ என்று எல்லாரும் பார்ப்பார்கள். மற்றபடி மாதத்திற்கொரு முறை அவன் ஊரில் பிரபலமாயிருந்த நேரு கபே ஹோட்டலில் குடும்பத்தோடு சாப்பிடுவது அந்த மாதத்திற்கு மட்டும் கட்! (விரதம் என்றால் வெளியே சாப்பிடமாட்டார்கள்!)

இருமுடி கட்டும் விழா நடந்தது. பெரியவர்களுக்கு இணையாக இவன் சாமியே ஐயப்பா என்று கோஷம் போட்டதை எல்லாரும் வியப்பாய் பார்த்தனர். ராகத்தோடும், பாவத்தோடும் இவன் பஜனைப் பாடல்கள் பாடியதற்கும் பலரது பாராட்டுகள் கிடைத்தது. ஆயிற்று. எல்லாரும் காரில் ஏறப்போகும் சமயம் ‘நாம் போகப் போவதில்லை’ என்ற உண்மை இவனுக்கு உறைக்க அந்த அம்பாசிடர் காருக்கு முன் விழுந்து கதறி அழுதான். யார் சமாதானப்படுத்தியும் அது அடங்கவில்லை. அண்ணா ஒருத்தர் ‘அடுத்த வருஷம் உன்னை நிச்சயமா கூட்டிகிட்டுப் போறேன்’ என்று சொல்லியும் அழுகை நிற்கவில்லையெனினும் இவனை கட்டுப்படுத்தி காரை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்த வருஷம் மலைக்குப் போக யார் யார் என்ற லிஸ்ட் போடப்பட்டபோது முதலில் இவன் பெயர் எழுதப்பட்டது. ‘நாங்க போறப்ப ஐயப்பனை நெனைச்சதை விட இவனை நினைச்சதுதான் அதிகம்’ என்றார்கள் போய் வந்த குடும்பத்தார் எல்லாரும். அந்த வருஷம் அவன் எட்டாவது படித்துக் கொண்டிருந்தான். பக்தி சிரத்தையாய் கோவிலுக்குப் போவது, பூஜைகள் செய்வது எல்லாவற்றையும் செய்தான். (அவனுக்கு அப்போதும் பிடிக்காத ஒரு விஷயம் அவனை விட பெரியவர்கள் ‘சாமி’ என்று சொல்லி இவன் காலில் விழ வருவது. அதை மட்டும் அவனால் ஏற்கவே முடியவில்லை.) மிகுந்த உள்ளத்தூய்மையோடும், சந்தோஷத்தோடும் அவன் சபரிமலை சென்று வந்தான்.

அடுத்த வருடம். அவன் ஒம்பதாவது படித்துக் கொண்டிருந்தான். வழக்கம்போலவே குடும்ப உறுப்பினர்கள் மாலை போடும்போது இவனும் போட்டுக் கொண்டான். ஆனால் முதல் நாள் சரணகோஷத்தின் போது, இவன் மனம் ஒன்றவில்லை. இவனுக்குள் என்னமோ மாற்றம். ஒட்டாமல் இருந்தான். ‘பல கேள்விகள். நான் ஏன் இப்படி இருக்கிறேன். போன வருஷத்தின் அமைதி இந்த வருஷம் என் மனதில் இல்லையே அது ஏன்’ எதற்கும் விடை கிடைக்கவில்லை. ஏதோ ஒப்புக்கு மாலை போட்டுக் கொண்டது போல ஆயிற்றே என்று வருந்திக் கொண்டிருந்தான். ஆனால்...

அவன் பெரியப்பா – குருசாமியாக எல்லாரையும் வழிநடத்தியவர் – காலமானார். இவன் மாலையைக் கழற்ற வேண்டியதாயிற்று. ‘மனம் ஒட்டாமல் இருந்த என்னை வரவேண்டாம் என்றான் ஐயப்பன்’ என்று மனதில் எண்ணிக் கொண்டான். அதற்குப் பிறகு இன்றுவரை அவன் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்ளும் வாய்ப்பே வரவில்லை.

அந்தச் சிறுவன்தான் இன்றைக்குப் பிரபலமாய் இருக்கும்..... சரி.. கோபப்படாதீங்க... நான்தான்!

அதற்குப் பிறகு இன்றுவரை பலமுறை சில ஐயப்ப சாமிகளின் பக்திப் பரவசத்தைப் பார்க்கும்போது, இவர்கள் வீட்டில் இழவு விழுந்து மாலையைக் கழட்ட மாட்டார்களா என்று நினைத்ததுண்டு. மன்னிக்கணும். கொஞ்சம் ஜாஸ்திதான் அப்படி நினைக்கறது. ஆனா அப்படி நினைச்சேன்-ங்கற உண்மையை உங்ககிட்ட மறைக்க விரும்பல.

ஒரு பெட்டிக் கடைல சிகரெட் வாங்கறாரு ஒரு சாமி. தீப்பெட்டி கேட்கறாரு. கடைக்காரர் ‘அங்க கயிறுல நெருப்பு இருக்கு சாமி’ங்கறாரு. அந்த சாமி கடைக்காரரை ஒரு முறைப்பு முறைச்சுட்டு (சாமி குத்தமாம்!) ‘மத்தவங்க பிடிச்சதுல பிடிக்கச் சொல்றியே சாமி. மாலை போட்டிருக்கேன்ல. தனியா தீப்பெட்டி குடு’ங்கறாரு.

அந்தப் பெட்டிக் கடைக்காரர்கிட்ட பேசிகிட்டிருந்தேன். டாஸ்மாக்ல இவங்களுக்கு தனி டம்ளராம். தண்ணி அடிக்கும்போது, போட்டிருக்கற மாலைல இருக்கற ஐயப்பன் டாலரை தூக்கி கைல பிடிச்சுட்டு சரக்கு அடிப்பாங்களாம். ஐயப்பன் டாலர் நெஞ்சோட ஒட்டி இருக்கும்போது சரக்கடிக்கடிக்கக் கூடாதுன்னு குருசாமி சொல்லியிருக்காம்.

என்னாங்கடா நெனைச்சுட்டிருக்கீங்க?

நான் பெரும்பாலும் கோவிலுக்குப் போவது அங்கிருந்து கிடைக்கும் அமைதியை வேண்டித்தான். ஆனால் செயற்கையாக கோவிலில் டமடம என்று அடிக்கிற ஒரு மெஷினின் மூலம் இயற்கையான உடுக்கை சத்தத்தையோ, பெரிய மணியின் நாதத்தையோ கொடுக்க முடியவில்லை. ஐயப்ப பக்தர்களின் அன்னதான விழா என்று சிலர் நடத்தும் ஒரு வார ஆர்ப்பாட்டத்திலும், மைக்செட் போட்டு ஊரையே தூங்க விடாமல் குழந்தைகளைப் படிக்க விடாமல் இவர்கள் செய்யும் வீண் அலப்பறையை பக்தி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. என் நண்பன் சௌந்தர் ‘உங்களுக்காவது பரவால்ல. அவ்ளோ தூரம். என் வீட்டு வாசல்ல மைக்கை கட்டிருக்காங்க. நான் என் குழந்தைகள், மனைவிகிட்டகூட பேச முடியறதில்லை.’ என்று புலம்புகிறார். அவ்வளவு சத்தம். அதுவும் பாட்டு என்றால் ஏசுதாஸ், வீரமணி பாட்டில்லை. ‘முக்காலா முக்காப்பலா’- வை ஐயப்பனுக்காக ‘ஐயப்பா... ஐயா அப்பா வா வா.. நீ வா வா’ என்று மாற்றி.. ச்சே! (இது அந்த மைக் செட் கோபத்தால் எழுதிய பதிவல்ல. ஒரு மாதம் முன்பே எழுத ஆரம்பித்தது. நாளாக நாளாக கோபம் குறையாமல் அதிகரிக்கும் வண்ணமே சம்பவங்கள் நடக்கிறது!)

இன்னொரு பக்கம் குருசாமி என்ற பெயரில் நடக்கும் பிஸினஸ். ஒரு குருசாமிக்கும் இன்னொரு குருசாமிக்கும் ரேட் வித்தியாசம் ஏனென்றால் அவர் இருமுடி கட்டும்போது டிராக்டர் வண்டி வைத்து ஐயப்பன் படத்தை ஊர்வலமாக கொண்டுவந்து ஊரையே கலக்கு கலக்குவாராம். எந்த சாமி இதைக் கேட்டது?

இப்போதும் உண்மையான பக்தியுடனும் உள்ளத்தூய்மையுடனும் மாலை போட்டுக் கொண்டு, பக்திப் புராணங்களைப் படித்துக் கொண்டு மலைக்குப் போகும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் பலர் குறைந்து சிலராகாமலும், நான் குறிப்பிட்ட சிலர் அதிகரித்து பலராகாமலும் இருக்க எல்லாம் வல்ல இறைவன், கண்கண்ட தெய்வம், வில்லாளி வீரன், வீரமணிகண்டன், அரிகரசுதன், ஆனந்த சித்தன், ஐயன் ஐயப்ப ஸ்வாமிதான் அருள்புரியவேண்டும்!

Tuesday, December 23, 2008

அயோக்கியன்

இதை முதலிலேயே உங்களிடம் சொல்லியிருக்கிறேனா எனத் தெரியவில்லை.

அவர் பெயர் வெங்கடாசலம். எனது நண்பர். ஜனனி ஆர்ட்ஸ் என்ற பெயரில் உடுமலைப்பேட்டையில் கலைக்கூடம் நடத்தி வருகிறார். பல வருடங்களுக்கு முன் ஒரு சில சினிமாக்களுக்கு டைட்டில்ஸ் எழுதியிருக்கிறார். ஆர். பார்த்திபன், பொண்டாட்டி தேவை என்ற படம் இயக்கப் போவதாய் அறிவிப்பு வருகிறது. அதற்காக இவர் பல டிசைன்களில் படப்பெயரை எழுதிக் கொண்டு போகிறார்.

இவரது டிசைன்களைப் பார்த்த இயக்குனர் பார்த்திபன் அடக்க முடியாமல் சிரிக்கிறார். இவருக்கு ஒன்றும் புரியவில்லை.

“நல்ல எழுதியிருக்கீங்க. ஆனா எல்லாத்துலயும் ஒரு தப்பு இருக்கு. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்” என்று சொல்லி டிசைன்களைத் திருப்பித் தருகிறார்.

மீண்டும் பார்த்தும் வெங்கடாசலத்திற்கு ஒன்றும் புரியவில்லை.

பார்த்திபன் சொன்னார்: “ஆர்.பார்த்திபன் இயக்கும் பொண்டாட்டி தேவை” - ன்னு எழுதணும். “பார்த்திபனின் பொண்டாட்டி தேவை” -ன்னு எழுதியிருக்கீங்க. அர்த்தமே தப்பா வருது”

இவர் பதறி மன்னிப்பு கேட்க, பார்த்திபன் தொடர்ந்தார். “பரவால்ல. என் குருநாதரே இந்தத் தப்பைப் பண்ணியிருக்கார். சின்னவீடு படத்தோட ஃபர்ஸ்ட் போஸ்டர்கள்ல ’ஏ.வி.எம்மின் சின்ன வீடு’ன்னுதான் இருக்கும். அப்புறம்தான் ‘ஏ.வி.எம். அளிக்கும் சின்னவீடு’-ன்னு மாத்தினாங்க”

இது மாதிரி தெரியாமல் எத்தனையோ தவறு எழுத்தில் செய்துவருகிறோம். கலைஞர் கருணாநிதி சொல்லும் ஒரு விஷயம்... ‘முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்’ என்று எழுதாதீர்கள். ‘சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்’ என்று எழுதுங்கள் என்று. எவரும் கேட்பதாய்த் தெரியவில்லை. சட்டமன்றத்துக்கு முன்னாள், இந்நாளெல்லாம் இல்லை. உறுப்பினர்களுக்குத்தான் அதெல்லாம்!

எழுதும்போதும் பேசும்போதும் இப்படி நம்மை அறியாமலே செய்யும் தவறுகள் சில. தோசை சுட்டாச்சா, மாவு அரைச்சாச்சா - இப்படி. (அரிசி அரைச்சாச்சா, மாவு சுட்டாச்சா என்றுதானே இருக்க வேண்டும்? தோசையை சுட்டால் கருகும், மாவை மறுபடி அரைத்து என்ன ஆகப் போகிறது?)

*******************************

அகலிகை சாபம் பெற்ற கதை தெரியுமில்லையா?

கௌதம முனிவரின் மனைவியான அகலிகை மீது மோகம் கொண்ட இந்திரன், விடிவதற்கு முன்னமே சேவல் போலக் கூவ, விடிந்துவிட்டதாய் எண்ணி நீராட குளத்திற்குச் செல்கிறார் கௌதம முனிவர். அந்த நேரத்தில் கௌதம முனிவரின் வடிவம் தாங்கி பர்ணசாலைக்குள் புகுந்த இந்திரன் அகலிகையை ஆள்கிறான். சிறிதுநேரத்திலேயே இது தனது கணவன் கௌதமனல்ல என்று உணர்ந்தாலும் தன்னை மறந்து, தாகத்தால் தளர்ந்து இருக்கிறார் அகலிகை. (உணர்ந்தனள் உணர்ந்த பின்னும் ‘தக்கது அன்று' என்ன ஓராள் தாழ்ந்தனள் - என்கிறார் மிஸ்டர் கம்பர்!) வெளியே சென்ற கௌதமர் விடியவில்லை என்பதை உணர்ந்து திரும்பி வருகிறார். வரும்போது அறைகுறை ஆடையோடு அகலிகை எழ, இந்திரன் பூனையாக மாறி எஸ்கேப்பாகிறான். கௌதமர் அகலிகை கல்லாகவும், இந்திரன் உடல் முழுதும் ஆயிரம் பெண்குறி வரவும் சாபமிடுகிறார்.

இதைப் படிக்கும்போது, ஒன்று தோன்றியது.

'ஏன்யா, கௌதமா.. பர்ணசாலையை விட்டு வெளியே பார்க்கும்போதே, விடியலைன்னு தெரியாதா? என்னாத்துக்கு அவ்ளோ தூரம் போவ? அப்பாலிக்கா வந்து சாபம் வுடுவ? சரி.. நீ முக்காலமும் உணர்ந்த முனிவர்தானே... இது சேவல் இல்ல, என்னமோ டகால்ட்டி நடக்குது-ன்னு தெரிஞ்சுக்க வேணாமா.. அகலிகை பண்ணினது தப்புன்னா ஒரு முனிவரா நீ பண்ணினதும் தப்புதான்'

இப்படி இதைப்பத்தி தம்பி கிரேசி கிரிகூட விவாதிச்சிகிட்டிருக்கறப்ப, அவன் புதுமைப்பித்தன் ஒரு சிறுகதைல இதைக் கேட்டிருக்காருன்னான். உடனே தேடிப்பிடிச்சு நேஷனல் புக் டிரஸ்ட்ல வெளிவந்த அவரோட சிறுகதைத் தொகுப்பை வாங்கி அந்தச் சிறுகதையைப் படிச்சேன். சாபவிமோசனம். அவர் சீதைக்கும், அகலிகைக்கும் இது சம்பந்தமா விவாதம் பண்ணிக்கற மாதிரி (நீ என்னாத்துக்கு தீக்குளிச்சு நிருப்பிக்கற? உள்ளத்தூய்மைதான் முக்கியம். அத ராமன் நம்பலீன்னா அப்பறம் என்ன புருஷன்-னு சீதையை அகலிகை கேட்கறா) எழுதிருக்காரு. ரொம்ப வளவள நடை.

*****************************
அந்தக் கல்யாண வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார் அந்தக் கவிஞர். எங்கிருந்தோ அந்தப் பிரபல இயக்குனரை அழைத்து வந்து கவிஞர் முன் நிறுத்திய ஒரு நண்பர், இயக்குனரிடம் “இவர்தான் அந்தக் கவிதையை எழுதினவர்” என்கிறார். கவிஞர் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையைப் பற்றிக் குலுக்கி “அயோக்கியா..!” என்கிறார் இயக்குனர். சுற்றி இருந்தவர்க்கெல்லாம் அதிர்ச்சி, வியப்பு. கவிஞரும், இயக்குனரும், நண்பரும் சிரித்துக் கொண்டிருக்கிறனர்.

அந்த இயக்குனர் சசி. ('சொல்லாமலே' உங்களுக்குத் தெரியும் இவர் 'பூ' பட இயக்குனர் என்று!)

அவர் அயோக்கியா என்று விளிக்கக் காரணம் அப்போது நடந்த தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் கவிஞர் பாடிய ஒரு கவிதை.

கவிதை

ஊரெல்லாம் மழை பொழிய
வயிற்றிலோர் தீ எரிய
கைக்குழந்தை சுமையோடு
கார்க்கதவைச் சுரண்டுகிறாள்.

உதவுகிறான் உத்தமன்
மறுக்கிறான் மத்திமன்
கவிதை எழுதுகிறான்
அயோக்கியன்.

கவிஞர்..

ரமேஷ்வைத்யா.

*******************************

Monday, December 22, 2008

அபியும் நானும் - விமர்சனம்

ஒரு மகளைப்பெற்ற தந்தையான பிரகாஷ்ராஜ் வாக்கிங்போகும்போது அங்கே சந்திக்கும் பிரித்விராஜிடம் தான் மகளைப் பெற்று வளர்த்த கதையை – நிஜத்தை – பகிர்ந்துகொள்ளுகிறார். இதுதான் அபியும் நானும்.


இதுதானா என்றால் இதுதான். இடையில் எந்த ஒரு திடுக்கிடும் திருப்பங்களோ, அதிர்ச்சிகளோ ஒன்றுமே இல்லை. ஏன் க்ளைமாக்ஸ்கூட இல்லை. இதை ஒரு படம் என்று சொல்லாமல் ஒரு நல்ல பதிவு என்று சொல்லலாம். ஒரு மகள்-தந்தையின் பாசப்பிணைப்பை பதிவு செய்திருக்கிறார் ராதாமோகன்.

மகள் த்ரிஷா – ரொம்ப ப்ராக்டிகல்லான மகள். அப்பா ப்ரகாஷ்ராஜ்தான் பாசம் பாசம் என்று கொட்டுகிறார். அதை முதலில் வரும் வெந்நீர் கொட்டிவிடுகிற சீனிலேயே சொல்லிவிடுகிறார்கள்.

மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது, இவர்தான் அழுகிறார். மகள் சிரித்தபடி (அப்போது அவள் கைகாட்டுவது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. ச்சோ.. ச்ச்வீட்ட்ட்!) டாட்டா காட்டி பள்ளி செல்கிறார்.

பெரியவளானதும் சைக்கிள் வாங்கிக் கொடுத்து, சரியாக ஓட்டுவாளோ என்று பயந்தபடி ஜீப்பில் பின்தொடரும்போது, மகள் நிறுத்தி “I KNOW WHAT I AM DOING” என்று திட்டி அனுப்பிவிடுகிறார். அது பிரகாஷ்ராஜூக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இப்படி படத்தில் அங்கங்கே “I KNOW WHAT I AM DOING” சீன்கள்.
அங்கங்கே பிரகாஷ்ராஜூக்கு அதிர்ச்சி தரப்படுவதாய் சொல்லப்படும் இவை எதுவுமே நமக்கு அதிர்ச்சியைத் தரவில்லை என்பதே படத்தின் குறை.

விஜி இல்லாமல், ராதாமோகனும் அங்கங்கே நகைச்சுவையை தெறித்திருக்கிறார். மகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க பிரகாஷ்ராஜும், ஐஸ்வர்யாவும் பேசிக்கொள்ளும் காட்சி, மகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை வீடு, அறை ஏன் கொசுவலை கூட பிங்க் நிறத்தில் வைத்திருப்பது என்று படத்தில் டைரக்டர் அங்கங்கே தெரிகிறார்.

ஐஸ்வர்யாவிற்கு அம்மா கேரக்டர். நிறைவாய் செய்திருக்கிறார். எதிர்பார்த்தது போலவே திருமணமாகிப் போகும் சீனில் அழுகிறார்.

முஸ்தபாவிற்கு சொல்லிக் கொள்ளும்படியான கேரக்டர். ஒரு பிச்சைக்காரனான அவரை தன் சின்னவயதில் த்ரிஷா பார்த்து, வீட்டோடு வைத்துக் கொண்டு, அவரை பிரகாஷ்ராஜின் திருமணநாளின் போது பெரியதொரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று (முஸ்தபா ஹோட்டலை பிரமிப்பாய் பார்க்கும்போது பின்னணி இசை அருமை!) எல்லாருமாய் சாப்பிடும்போது, த்ரிஷாவைப் (3 வயது) பார்த்து முஸ்தபா ‘இது என் அம்மா சார்’ என்று சொல்லும் காட்சியில் மட்டும் கண் கலங்கினேன். சபாஷ் முஸ்தபா!

மனோபாலாவின் (எனக்கு மனோபாலாவின் பாடி லேங்குவேஜை பார்க்கும்போது எழுத்தாளர் சுஜாதா நினைவுக்கு வந்தார்) கேரக்டரை வைத்து ஏதாவது செய்வார்கள் என்று நினைத்தால் கடைசிவரை ஒன்றுமே செய்யாமால் விட்டுவிட்டார்கள். இப்படி படத்தில் எதிர்பார்த்த எதுவும் நடக்காது. இயல்பாக வாழ்க்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடக்கிறது. சினிமாத்தனம் என்று எந்த திருப்பமும் இல்லை! வேண்டுமானால் அந்த ஏர்போர்ட் சீனில் தன் மகளில் காதலனாக யாரையோ எதிர்பார்த்திருக்க, ஒரு டர்பன் கட்டிய சிங் வந்து பிரகாஷ்ராஜிடம் ஹலோ சொல்வதை வேண்டுமானால் ஆச்சர்யப்படுத்தும் சீன் என்று சொல்லலாம்!

மொத்தத்தில் படம் நல்லாயில்லையா?

அப்படியெல்லாம் இல்லை. நிச்சயமாய் நல்ல படம். குடும்பத்தோடு பார்க்கலாம். ஆனால் ராதாமோகன், பிரகாஷ்ராஜ் என்ற கூட்டணிக்கு என்னைப் போன்ற ஆட்களிடமிருக்கும் எதிர்பார்ப்பை முழுமை செய்ததா?

படத்தில் முஸ்தபாவின் காதலியாக வரும் ஒரு கேரக்டர் சாரி எடுக்கும்போது, துணிக்கடையில் தூரத்தில் நின்றிருக்கும் முஸ்தபாவிடம் ‘நல்லாயிருக்கா’ என்று சைகையில் கேட்பார். அப்போது முஸ்தபா இரண்டாவது சாரிக்கு காட்டும் சைகைதான் முந்தைய கேள்விக்கு பதில்!

Saturday, December 20, 2008

நன்றி நண்பர்களே!

ஒரு முதலாளிக்கு விசுவாசமா, அவரோட அன்புக்கு பாத்திரமா அவர் உங்கமேல வெச்சிருக்கற நம்பிக்கையைக் காப்பாத்தி நடந்துக்கணும். அந்த விஷயத்துல அதிஷா என்னை ரொம்பக் கவர்ந்துட்டாரு.

நேற்று ஒரு லட்சம் ஹிட்ஸ்சை தொட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்! முதலில் என்னை அழைத்துச் சொன்னதுக்கு என் நன்றிகள்!


*********************

அந்தப் பதிவர் அழைத்தார்..

“அண்ணே.. நீங்க மக்கள் டிவில புதிய கோணங்கிகள் நிகழ்ச்சியைப் பத்தி எழுதியிருந்தீங்க இல்லையா? அந்த நிகழ்ச்சியை நடத்துற பிரகதீஸ்வரன் என் நண்பர்தான். பக்கத்துல இருக்காரு. பேசுங்க”

எனக்கு மகிழ்ச்சி கரை புரண்டு ஓடியது. பேசினேன்.


நன்றி அந்த நண்பருக்கு!

***************************

“தம்பி.. என் ஃபோன் நம்பர் இதுதான். நோட் பண்ணிக்கோ”

“அண்ணா. சந்தோஷம்ணா. ஃபோன் ரெடியாய்டுச்சா?”

”இல்லடா.. அதுதான் ஜீன்ஸ் பேண்ட்ல ஜீஸஸ், கண்ணாடி போட்ட கண்ணபரமாத்மான்னு சொல்வேனே.. உன்னால அறிமுகமான அந்தப் பதிவர்கிட்ட பேசிட்டிருந்தேன். என்னை லைன்ல வெச்சுட்டே இன்னொரு ஃபோன்ல ‘இன்னும் அரைமணி நேரத்துல நான் சொல்ற அட்ரஸுக்கு ஃபோனும், சிம்கார்டும் போகணும்’னு ஆர்டர் போட்டாரு. 29வது நிமிஷம் என் கைல ஃபோன். என்ன மாதிரி ஆளுகடா இவங்கள்லாம்? எவ்ளோ பெரிய பதவி, பொறுப்பு. ஆனா எப்படி இவ்ளோ அன்பைக் கொட்டி நம்மளை கொலை பண்றாங்க?”


அது எனக்கும் தெரியல. அவருக்கு என் நன்றி!

************************

“பரிசல்... என்ன ஆச்சு. என் பதிவுகள் பக்கமே காணோமே..”

“இல்ல ***, வேலை கொஞ்சம் அதிகமாய்டுச்சு. அதான்”

“நல்லால்லயோன்னு நெனைச்சேன். கொஞ்ச நாளாவே நம்ம செட் ஆளுகல்லாம் காணோம்..”

அவரிடம் யார் யார் எப்படி எப்படி இருக்கிறார்கள் என்று விவரித்தேன்.

“எல்லாருமே பிஸியா இருக்காங்கபோல. சரி..சரி. நான்கூட என்னமோ ஏதோன்னு பயந்துபோய்ட்டேன்”

வந்தா வா, வராட்டி போ- என்று இல்லாமல் நட்போடு அழைத்துக் கேட்ட அவருக்கு என் நன்றிகள்.

********************

“கிருஷ்ணா.. நல்லாயிருக்கியா”

“ஆங்... நல்லாயிருக்கேண்ணே. என்ன அதிசயம் ஃபோன் பண்றீங்க?”

“இன்னைக்கு நீ எழுதினது நல்லாயிருந்தது. அதான் கூப்ட்டு சொல்லலாம்ன்னு ஃபோன் பண்ணினேன்”

“நன்றிண்ணே”

இவருக்கும் நன்றி. ஃபோன் செய்ததற்கு மட்டுமல்ல, வேறொன்றுக்கும். முகநக இல்லாமல், நெஞ்சத்தக நட்பு வைத்திருப்பதற்கு!

*****************************

”பரிசல்.. ஸாரி. இந்த நேரத்துக்குக் கூப்பிடறதுக்கு. நான் ஜெர்மன்லேர்ந்து **”

“பரவால்ல சொல்லுங்க”

“*******************************************
**************************************************
*********************************************
**************************************
***************************************”

“ஐயையோ... நான் ரெண்டு மூணு நாளா பதிவுகள் பக்கமே போகல”

“இது இப்போதான். ஒரு மணிநேரம்கூட இருக்காது”

“சரி.. இப்பவே பார்க்கறேன். முடிஞ்சா கூப்ப்ட்டு சொல்றேன்”

“ரொம்ப தேங்க்ஸ் பரிசல்”

பதிவுகளைப் படித்துவிட்டு போகாமல், நண்பருக்கு ஒன்று எனும்போது அதற்கு ஆறுதலாய் இருக்கவும், உணர்ச்சிமயமான நேரத்தில் அவர் தவறேதும் செய்து பின்னாளில் வருந்தாமலிருக்க வேண்டுமே என்ற உந்துதலாலும் உடனே என்னை அழைத்து பகிர்ந்து கொண்ட அவருக்கு என் நன்றிகள்.

************************
சம்பந்தமில்லாத ரெண்டு விஷயம்.....

அபியும் நானும் எப்போ வரும்ன்னு ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டிருந்தேன். நேத்து ரிலீஸ். ஆனா போக முடியல. காரணம் சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி எல்லாம் முக்கியமான தியேட்டரை ஆக்ரமிச்சுடுச்சு. அபியும் நானும் தூரத்துல ஒரு தியேட்டர்ல போட்டிருக்காங்க. இன்னைக்கு நிச்சயமா போகணும்.

(ஒரு சின்ன சந்தேகம்... பெண் குழந்தைகள் இருக்கறங்க தவறவிடாம பாக்க வேண்டிய படம்னு சொல்றாங்க. அப்ப நான் ரெண்டு தடவை படம் பார்க்கணுமா?)

************************

இந்தியா- இங்கிலாந்து மேட்ச் நடக்குது. டிராவிட் இப்போ, கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவுட். 328 பால்ல 136 ரன். இன்னும் கொஞ்ச நேரம் ஆடியிருந்தார்னா இங்கிலாந்து கேப்டன் “ஒண்ணு விளையாடச் சொல்லுங்க. இல்லீன்னா அவுட் ஆகச் சொல்லுங்க”ன்னு அம்பயர்கிட்ட அழுதிருப்பாரு போல. டிராவிட்டுக்குப் பதிலா இப்போ லட்சுமணன் இறங்கியிருக்காரு. டிராவிட், சேவக், காம்பிர் டிரஸ்ஸிங் ரூம்ல கேரம் போர்டு விளையாடறாங்களாம். ஒரு கை குறையுது, சீக்கிரம் வாங்க’ன்னு சேவக் கைகாமிச்சாராம். இதோ, டெண்டுலகர் உள்ள போறாரு. 11 ரன் அடிச்சுட்டு.

லட்சுமணன் 18 பால்ல முடிஞ்சா என்னை ரன் எடுக்க வைங்கடான்னு நின்னுட்டிருக்காரு. இதுக்கு டிராவிட்டே பரவால்ல-ன்னு இங்கிலாந்து கேப்டன் சொல்றாராம். பார்க்கலாம்!

*******************

Friday, December 19, 2008

ரொம்ப ரசிச்சேங்க.....! (IT கம்பெனிகளின் இன்றைய நிலை)

மெயிலில் வந்ததுதான். இதிலிருக்கும் க்ரியேடிவிடியை மிக மிக ரசித்தேன்!






இறுதியாக..







Thursday, December 18, 2008

விதுரநீதி - AN INTERESTING BOOK!

பிறர் செய்வதைக் காரணமாகக் காட்டி செயல்படுபவர் இருவர்.

1) மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.
2) பிறரால் வழிபட்டவர்களையே வழிபடுகிற மூடர்கள்.

இவர்கள் சுய அறிவுடன் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் நாடுகிறார்களே, அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மூட நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் இவர்கள்.

***********

இந்த இருவரும் கல்லைக் கட்டி நீர்த்தேக்கத்தில் போட வேண்டியவர்கள்.

1) செல்வமிருந்தும் வேண்டுவோர்க்கு உதவி செய்யாத செல்வந்தன்
2) உடலை வருத்தி உழைக்க விரும்பாத ஏழை.

**********
இந்த மூவரையும் எந்த நிலையிலும், எந்த நெருக்கடியிலும் கைவிடக்கூடாது.

1) உங்களிடம் மனத்தால் ஒன்றியவர்.
2) உங்களுக்கு அன்புடன் பணிபுரிபவர்
3) தன்னைக் காப்பான் என்று நம்பி உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்.

***********

இதுபோல நிறைய ஒன்று, இரண்டு என்று பத்துவரை இந்தப் புத்தகத்தில் உண்டு.

விதுரநீதி.

பத்துவருடங்களுக்கு முன் எனது உறவினர் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்து, புரட்டிப் படித்துவிட்டு இரவல் கேட்டபோது “இன்னும் படிக்கல” என்று சொல்லப்பட்டதால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால் அடிக்கடி இந்தப் புத்தகத்தை நினைத்துக் கொள்வேன். காரணம் திருக்குறள் போல பல நல்ல கருத்துகளை உள்ளடக்கிய புத்தகம் இது. மஹாபாரதம், உத்தியோகபர்வதத்தில் 33-40 அத்தியாயங்களில் உள்ள இதை, புத்தக வடிவில் அச்சிட்டு ஒரு திருமணத்தில் பரிசாகக் கொடுத்ததைத்தான் அவர் வீட்டில் வைத்திருந்தார். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது, மறக்காமல் அவர் வீட்டுக்குச் சென்று போராடி, தேடி வாங்கிவந்து ஒரே மூச்சில் படித்தேன்.

வெரி இண்ட்ரஸ்டிங்கான சில புராணக் கதைகளை உள்ளடக்கியது இது. சொல்கிறேன் கேளுங்கள்.

விதுரநீதி யாருக்குச் சொல்லப்பட்டது?

பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து நாடு கேட்டு வந்தப்போ, திருதிராஷ்டிரன் தனது மெய்க்காவலனான ஸஞ்சயனை பாண்டவர்கள்கிட்ட அனுப்பி, “அவங்களை அப்படியே ஓடிப் போகச் சொல்லு. எனக்கு போர்ல விருப்பமில்ல”ன்னு சொல்லிவிடறாரு. ஸஞ்சயன் போய் பாண்டவர்கள்கிட்ட சொல்றப்போ, மிஸ்டர்.தர்மருக்கும் ஸஞ்சயனுக்கும் சில சம்பாஷணைகள் நடக்குது. கடைசியா தர்மர் “உங்காளுக அதர்மத்தை, தர்மம்ன்னு நெனைச்சு அரசாளறாரு. அத எப்படி நாங்க அலவ் பண்றது ஸஞ்சயா? சரி, ஒனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், நான் சொல்ற ஒரு அஞ்சு நகரத்தை மட்டும் எங்களுக்கு குடுத்துடுங்க”ன்னு சொல்லிவிடறாரு.

ஸஞ்சயன், திரும்பி திருதிராஷ்ட்ரன்கிட்ட வந்து “ஹலோ மிஸ்டர் கிங்கு, சீக்கிரம் ஒனக்கு சங்கு. அவனுக ரொம்ப நல்லவங்கப்பா. நீங்க அதர்மத்துக்கு சொம்பு தூக்கிகிட்டு இருக்கீங்க. எனக்கென்னமோ கௌரவகுலம் அழியும், அதுக்கு நீங்கதான் காரணமாயிருப்பீங்கன்னு தோணுது”ன்னு சொல்லீட்டு அங்க பேசினதை முழுசா சொல்லாம “ட்ராவல் பண்ணினதால டயர்டா இருக்கு. விரிவா காலைல சொல்றேன்”ன்னு சொல்லீட்டு போயிடறாரு. (யோசிச்சுப் பாருங்க. இன்னிக்கு மன்னனோ, நம்ம முதலாளியோ ஒரு வேலை சொல்லீட்டு நாம் இதுமாதிரி பாதி ரிப்போர்ட் பண்ணி, மீதியைக் காலைல சொல்றேன்னு தூங்கப்போகமுடியுமா? ஹூம்ம்ம்ம்!)

சஞ்சயன் தூங்கப் போயிட்டார். இங்க மன்னன் திருதிராஷ்ட்ரனுக்கு தூக்கமே வர்ல. மனசு ரொம்ப சஞ்சலப்படுது. உடனே விதுரரைக் கூப்ட்டனுப்பி “யப்பா. ஸஞ்சயன் காலைல என்ன சொல்லப்போறானோன்னு கெடந்து தவிக்குதுப்பா. என்ன பண்றதுன்னே தெரியல. கொஞ்சம் ஆறுதலா எதுனாச்சும் சொல்லு”ங்கறாரு. அப்போ விதுரர் சொல்ற அறிவுரைகள்தான் விதுரநீதி.

அந்த கௌரவர் கூட்டத்துல எப்படி விதுரர் மட்டும் நீதி, நேர்மைன்னு இருக்காரு? அதுக்கும் இருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்.

மாண்டவ்யர்-ங்கற முனிவர் தன்னோட ஆசிரமத்துல அடைக்கலம் கேட்டுவந்த சிலருக்கு அடைக்கலம் தர்றார்.. அவங்க மொத நாள் நைட் அரண்மணைல ஆட்டையப் போட்டவங்க. (திருடினவங்க). அதுதெரியாம இவரு, தங்க வெச்சுட்டாரு. இப்போமாதிரி, ரெண்டுமூணு வருஷம் கழிச்சா திருடங்களைப் பிடிக்கறாங்க? அப்போவெல்லாம் உடனே பிடிச்சிடுவாங்கள்ல? அப்படி அரண்மணைக் காவலர்கள் வர்றப்போ, இந்த முனிவரையும் திருடன் ஒருத்தன்தான் வேஷம் போட்டிருக்கான்னு புடிச்சுட்டு போயிடறாங்க. எல்லாரையும் கழுவில ஏத்துங்கன்னு மன்னன் சொல்றாரு. அப்படி ஏத்தறப்போ முனிவர் மாண்டவ்யர் தன்னோட தவ வலிமையால் அப்படியே கழுமரத்தில் இருந்தார். இறக்கவில்லை. தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கும் அப்படி இருந்துகிட்டே போதனையெல்லாம் சொல்றாரு. காவலர்கள் இதை ராஜாகிட்ட சொல்றப்போ ‘ங்கொக்கமக்கா, தப்பு பண்ணீட்டேனே”ன்னு ஒடிப்போய் கழுமரத்திலிருந்து அவரைப் பிரிக்கச் சொல்றான். முடியல. இரும்பில ஆன அந்தக் கழுமரத்திலிருந்து அப்படியே அவரை உரிச்சு எடுக்கச் சொல்றான். உடம்பில அங்கங்கே ஆணியோட, அரச மரியாதையோட மறுபடி ஆசிரமத்துக்கு போறார் மாண்டவ்யர்.

இவரோட காலம் முடிஞ்சு மேல யமலோகத்துக்கு போறப்ப மாண்டவ்யர் யமன்கிட்ட “என்ன கொடுமை யமா இது? எனக்கு ஏன் இப்படி நடந்துச்சு”ன்னு கேட்கறாரு.

யமன் அவரோட ரெகார்டையெல்லாம் பார்த்து, “சின்ன வயசுல பட்டாம்பூச்சிகளப் பிடிச்சு, அதோட வாலுல ஈர்க்குச்சியை சொருகி விளையாடியிருக்கீங்க. அதுக்குண்டான தண்டனைதான் இது”ங்கறாரு.

மாண்டவ்யர்க்கு கோவம் வருது. “ஆஸ் பர் யமலோக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ், பன்னிரெண்டு வயசு வரைக்கும் ஒருத்தன் பண்ற பாவத்துக்கு அவனுக்கு தண்டனை இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ எனக்கு தண்டனை குடுத்த?”ன்னு கேக்கறாரு. யமன் “ஐயையோ... மிஸ்டேக் பண்ணீட்டோமே”ன்னு தலை குனிஞ்சு நிக்கறாரு. அப்போ மண்டவ்யர் சாபம் விடறாரு. “நீதியைக் காப்பாத்த வேண்டிய நீயே நீதி தவறினதால நீ மனுஷனாப் பொறந்து மத்தவங்களுக்கு நெறிமுறையைப் போதிச்சு, நீயும் அதன்படி வாழு”ன்னு.

அந்த யமன்தான், விதுரர்!

விதுரர் சொன்னதுதான் விதுரநீதி!

சில கருத்துகள் முரண்பாடா இருந்தாலும் (ஒரு இடத்துல ஒண்ணுமில்லாத ஆண்டி, நலப்பணிகள்ல ஈடுபட்டா விளங்கமாட்டான்னு சொல்றாரு. அடுத்த ஸ்லோகத்துல இல்லாட்டியும் வாரி வழங்குற ஏழை வானத்துக்கு மேல உயர்ந்தவன்-ங்கறாரு) பல கருத்துகள் ‘அட’ போட வைக்குது!

கடைசியா, இதையெல்லாம் கேட்ட திருதிராஷ்டிரன் ஏன் சண்டை போட்டான்? ஏன்னா, அவருக்கு கணிகர்-ங்கற அர்த்தசாஸ்திர வல்லுனர் சில போதனைகளைச் சொல்றாரு. ‘நீதி நேர்மையெல்லாம் தூக்கி குப்பைல போடுல. நான் சொல்றத கேளுல’ன்னு சில (அ)நீதி போதனை சொல்றாரு. மகாபாரதத்துல ஆதிபருவம்-139வது ச்சாப்டர்ல இருக்கு இது. கூடநீதி. (கூடம் = வஞ்சனை) அப்படியே இன்னைக்கு இருக்கற அரசியல்வாதிகள், இதைப் படிச்சிருப்பாங்களோன்னு நினைக்க வைக்குது!

தன்குறைகளை மறை, பிறர் குறைகளை விரிவுபடுத்து. அடைக்கலம் புகுந்தாலும் பரிவு காட்டாதே. நல்லவனா இருந்தா, சிறுகச் சிறுக பணம் குடுத்து அவனைக் கெடு. உனது செயல் முறையை முன்னதாக ஊகிக்க இடம் குடுக்காதே. திட்டத்தை திடீர்னு தள்ளிப்போடு. பிறர் உன்கிட்டேர்ந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய். எதிர்பார்த்து இருக்கும்போது மறுபடி தள்ளிப் போடு. தள்ளிப்போட ஏதாவது காரணத்தை சொல்லிகிட்டே இரு. அவன் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனோட காரியத்துல கவனக் குறைவா இருக்கறப்போ போட்டுத் தாக்கி அவனை அழி.


இப்படி கூடநீதி படிக்கப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். (கேடுகெட்ட மனசு! விதுர நீதி புத்தகத்துல வெறும் மூணு பக்கம் இருந்தாலும் இந்த கூடநீதில நாட்டம் கொள்ளுது பாருங்க!)

இந்தப் புத்தகம் சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்டுக்காக வெளியிட்டவர் சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரி, 22, வீரேஸ்வரம் அப்ரோச் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620006 ன்னு போட்டிருக்கு. கிடைச்சா நிச்சயமா வாங்கிப் படிங்க!

Monday, December 15, 2008

அவியல் - 15.12.08

மக்கள் தொலைக்காட்சியின் ‘புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சி தவறாமல் நான் பார்க்க நினைக்கும் ஒரு நிகழ்ச்சி. நாட்டு நடப்பை, வெகு ஜாலியான இரு நண்பர்களின் பேச்சில் எள்ளலும், எகத்தாளமுமாக பேசி ‘சரிதான்ல இவங்க சொல்றது’ என்று நினைக்க வைப்பதில் இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வார நிகழ்ச்சியில் பத்திரிகைகள் குறித்தும், பத்திரிகை தர்மம் குறித்தும் பேசினார்கள். அதில் கேட்ட இரண்டு நகைச்சுவைகள்..

பக்கிரிசாமி என்பவர் மரணமடைந்து விட்டார். ஒரு பத்திரிகையில் தவறாக குருசாமி காலமானார் என்று எழுதிவிட்டார்கள். குருசாமி கடுங்கோபத்தோடு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று நியாயம் கேட்கிறார். ‘மன்னிச்சுக்கோங்க.. நாளைக்கே மறுப்பு போட்டுடறோம். தப்பாப் போட்டதுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கறோம்’ என்கிறார்கள்.

அடுத்த நாள் மறுப்பு வெளிவருகிறது.. இப்படி..

“காலமானவர் பக்கிரிசாமி. குருசாமி என்று தவறாக அச்சாகி விட்டது. குருசாமி உயிருடன்தான் உள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”

இன்னொன்று..

ஒரு பத்திரிகையை இரு ஆசாமிகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..

கவுண்டமணி:

‘சேலத்தில் நகைக்கடை உடைத்து துணிகர கொள்ளை.. மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு’

பேப்பரைத் திருப்பி, “கோவையில் ஒடும் ரயிலில் லேப்டாப் திருடிய மர்ம ஆசாமியின் அடையாளங்கள் சிக்கின”

அடுத்த பக்கத்தைத் திருப்பி.. “மும்பையில் கைவரியை காட்டிய மர்ம ஆசாமியைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்தது”

செந்தில் குறுக்கிட்டு கேட்கறாரு.. “அது எப்படிண்ணே.. மர்ம ஆசாமிங்கற ஒரு ஆளு, ஒரே நாள்ல கோவை, மும்பை, சேலம்ன்னு போய் கைவரிசையைக் காட்டறான்?”

**********************
மலேசிய மந்திரி ஒருத்தரது பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் தான் தனது கனவுத் திட்டம் என்று சொல்லியிருந்தார். மலேசியா அரசுத் துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறார்களாம்.

'இங்கயும் இப்படி மாறினா நல்லாயிருக்கும்ல?; என்று இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

"கஷ்டம். ஏன்னா லஞ்சம் நோட்டாத்தானே குடுக்க முடியும். அது பேப்பர்தானே? அப்புறம் எப்படி பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் சத்தியமாகும்?" என்று கேட்டார் ஒருவர்.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்! (நம்ம இல்ல, லஞ்சம் குடுக்க/வாங்கறவங்க!)

*********************************

சமீபத்தில் ஆக்ஸிடெண்டலாக ஒரு இன்சிடெண்டைப் பார்க்கநேர்ந்தது. அந்த இன்சிடெண்ட் ஒரு ஆக்ஸிடெண்ட்! சிறிய விபத்துதான். ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் தனது பைக்கால், மொபட்டில் வந்துகொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்கவர் மீது மோதிவிட்டார். இருவருமே சிதறி விழுந்துவிட்டனர். உடனேயே கூடிய கூட்டத்தில் அந்த இளைஞனுக்கு ஆதரவாய் சிலர் அந்தப் பெரியவரை அடிக்காத குறையாக திட்ட ஆரம்பிக்க, அந்தப் பெரியவருக்கு ஆதரவாய்ப் பேசிய சிலரோ, இளைஞனை அடித்தே விட்டனர்!

என் கேள்வி இதுதான். அந்த இளைஞன் மீது தவறில்லை என்று நினைத்தவர்கள் அந்த இளைஞனை உடனே தூக்கி முதலுதவி செய்ய, அந்தப் பெரியவருக்கு
ஆதரவாய் வந்த சிலர் அவரை எழுப்பி தேவையான உதவிகள் செய்ய என்று இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!


மனிதம் குறைந்துவிட்டதற்கு இது போன்ற சம்பவங்கள்தான் சாட்சியாய் நிற்கின்றன!

********************

நட்பில் ஆண்-ஆண் நட்பு, ஆண்-பெண் நட்பு, பெண்-பெண் நட்பு இந்த மூன்றில் எது மிக ஆழமானது? எப்படியும் இதில் ஆண்-பெண் நட்பு அடிபட்டுப் போகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பல ஆண்-பெண் நட்பு பிரிந்து போய்விடுகிறது. ஆணும் ஆணும் நட்பு சர்வசாதாரணமானதுதான். அடிக்கடி பேசிக் கொண்டேயிருப்போம்! ஆனால், நீங்கள் மணமானவராயிருந்தால் உங்கள் மனைவி அவரது நண்பிக்குப் பேசும்போது கவனித்துப் பாருங்கள், எப்போதாவது பேசினாலும் அளவுகடந்த அன்னியோன்னியம் அதில் ஆண்- ஆண் நட்பைவிட அதிகமாக இருக்கும்.

என் ஓட்டு பெண்-பெண் நட்புக்குத்தான்!

வேண்டுமென்றால் ஏ.சி.நீல்சனை வைத்து சர்வே எடுப்போமா? எந்த சர்வே எடுத்தாலும் ரொம்பவும் கூலாக முடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள். அவர்கள்தான் 'ஏ.சி' நீல்சன் ஆச்சே!


*********************

நான் சிறுகதை எழுதுவது எப்படி என்றொரு போஸ்ட் போட்டிருந்தேன். அதிலுள்ள சம்பவத்தை வைத்து, மிகச் சிறிய, அதே சமயம் சுவாரஸ்யமான முடிவில் கதை எழுதிய இவருக்கு என நன்றிகள்! ரொம்பப் பிடிச்சிருக்கு சாரே! நிச்சயம் சுஜாதா உங்களை.... பாராட்டியிருப்பாரு!

*********************

எனது மாமன் மகன் கிரேசிகிரியைப் பற்றி அடிக்கடி வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறேன். எந்தச் சூழலிலும் ஒரு சின்ன வார்த்தைப் பொறியில் கலகலக்க வைத்துவிடுவான்.

கடந்த வாரம் அவனது தந்தையார் காலமாகிவிட்டார். நல்ல மனிதர். நிறைந்த வயதில் மரணம். நேற்று பார்த்தபோது, கிரியின் அண்ணா தனது சில பூஜைச் சடங்குகளைச் செய்து கொண்டிருக்க, “அப்பாவுக்கு காரியங்களை நல்ல சிரத்தையாகச் செய்கிறாய்” என்று ஒரு பெரியவர் பாராட்டினார். உடனே சொன்னான் கிரி.. “பார்க்கறதுக்கு அப்பாதான் இல்ல”

எல்லாரும் சட்டென்று சிரிக்க, கிரியும் சிரித்துக் கொண்டிருந்தான்.. கண்ணில் நீருடன்.

***

Saturday, December 13, 2008

வார இறுதி புதிர்கள் – 13.12.2008 (EXCLUSIVE PHOTOவுடன்!)





1.. காலீல நியூஸ் பேப்பர் படிக்கச் சொல்லோ, அதுல கீற மொத்த பேஜூல, ஒரு நாலு பேஜூ மிஸ்ஸாகுதுன்னு கண்டுக்கற நீ. மிஸ்ஸாகிப் பூட்ட 4 பேஜுல ஒரு பேஜோட நெம்பரு 21, அதே மாரி கடேசி பேஜூ நெம்பரு 28ன்னாக்கா, மிஸ்ஸான மத்த மூணு பேஜ் நெம்பர் இன்னாபா?

என்னாது? சாய்ஸா? அடிங்....


2. க்ரிக்கெட் மேட்ச் முடிஞ்சு, மூணு பேர் பேசிட்டிருக்காங்க. அவங்க சொன்னது கீழே..

கங்குலி: “சச்சின் சிக்ஸர் அடிக்கவில்லை”
ட்ராவிட்: “நான் சிக்ஸர் அடிக்கவில்லை”
சச்சின்: “நான்தான் சிக்ஸர் அடித்தேன்”


மேற்கண்டதில் குறைந்தது ஒன்று உண்மை. குறைந்தது ஒன்று பொய்.

யாருப்பா சிக்ஸர் அடிச்சது?


3. 12=10, 32=26ன்னா, 22= எவ்வளவு?

அ) 16
ஆ)18
இ)20
ஈ)19


4. ஒருத்தனிடம் 4 ஆடு, 2 கழுதை, 3 கோழி, 6 பசு உள்ளது. அவன் ஆட்டையும் கழுதை என்றே அழைப்பது வழக்கம். அப்படியானால் அவனிடம் எத்தனை கழுதைகள் உள்ளன?

5. ரொம்பப் பழசுதான். ஆனாலும் கொஞ்சநேரம் உங்க மூளையை ரி-ஃப்ரெஷ் பண்ணிக்கறதுக்காகக் கேட்கறேன்.

ஆற்றின் கரையில் ஓர் ஆள். ஒரு புலி. ஓர் ஆடு. எல்லாரும் அக்கரைக்குப் போகவேண்டும். அங்கிருக்கும் பரிசலில் ஒரு சமயத்தில் பரிசல்காரன் உட்பட இரண்டுபேர்தான் (புல்கட்டையும் ஆள்கணக்கில் சேர்க்கவும்) போக முடியும். நான்கு தடவைக்குமேல் போக முடியாது. எனில் எப்படி எல்லாவற்றையும் அக்கறையாக அக்கரைக்கு கொண்டு செல்வான் அந்த புத்திசாலி பரிசல்காரன்?

தேவையில்லாத குறிப்பு: ஆட்டையும் புலியையும் தனியே விட முடியாது. ஆட்டையும், புல் கட்டையும் தனியே விட முடியாது.


6. போற போக்குல பேசற மாதிரி சில வாசகங்களைச் சொல்றேன். அத வெச்சு இந்தப் பதிவர்களைக் கண்டுபிடிங்க. க்ளூ: பதிவர்கள் பேராவும் இருக்கலாம். அங்க வலைப்பூ பேராவும் இருக்கலாம்!

a) நல்ல வேளை, இவர் பேர்ல ஆட்டோ இல்ல.

b) இப்படி ***** இல்லாம பேசலாமா?

c)மொதல்ல ஐஸ்வர்யாராய்க்கு அபிஷேக்பச்சன். மீரா ஜாஸ்மினுக்கு மாண்டலின் ராஜேஷா? இப்போ சங்கீதாவுக்கு பாடகர் க்ரிஷ்..

d) இந்த மாதிரி கேள்விகேட்கறதெல்லாம் என்னோட ** ****தான்.

e) உருப்படியா ஏதாவது வேலைக்குப் போகாம சும்மா ******* கணக்கா சுத்திகிட்டிருக்க?

f) என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். சரியான *****!


7) ஒரு நூறுகிலோ சர்க்கரை மூட்டை இருக்கிறது. உடன் ஒரு மூன்று கிலோ படியும், ஐந்து கிலோ படியும் மட்டுமே இருக்கிறது. இது இரண்டையும் பயன்படுத்தி நாலு கிலோ சர்க்கரை எடுக்க வேண்டும். இந்த இரண்டு கலன்கள், அந்த மூட்டை தவிர வேறெங்கும் சர்க்கரையைக் கொட்டக் கூடாது. எப்படி அளப்பீர்கள்?

8) 1942ல் அமெரிக்க நைட் கிளப்பான தி கோகனட் குரோவ்-வில் நடந்த ஒரு தீ விபத்தில் கிட்டத்தட்ட 400 பேர் இறந்தனர். ஒரு சின்ன குறையால்தான் இந்த அளவுக்கு உயிரிழப்பு என்று கண்டுபிடிக்கப் பட்டு, அதற்குப் பிறகு கட்டப்படும் பொதுக் கட்டடங்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டது. அது என்ன தெரியுமா?

9) ஒரு புயலும், மழையும் கொண்ட இரவில் ஒருத்தன் அவசர அவசரமாக தன் மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தான். திடீரென பாதி வழியில் கார் பழுதடைந்தது. மனைவியைத் தனியே விட்டுப் போக பயந்து, காரின் எல்லாக் கதவுகளையும் பூட்டிவிட்டு அருகில் மெக்கானிக்கைத் தேடிச் செல்கிறான் கணவன்.

திரும்பி வரும்போது, கதவு திறக்கப்படவில்லை. ஆனால் இவன் திறந்து பார்க்கையில், உள்ளே மனைவி இறந்து கிடக்கிறாள். காருக்குள் ஒரே ரத்தம். பின் சீட்டில் இன்னொருத்தனும் இருக்கிறான்!

எப்படி சாத்தியம்?

10) இந்த வக்கியத்திலுள்ள மூன்று தவறுகளைக் கண்டுபீடியுங்கள்.


******************************************

பின்குறிப்பு:
1) வீக் எண்ட் புதிர்கள் முழுதும் எந்தச் சொந்தச் சரக்கல்ல. பதிவர்கள் சம்பந்தமானது மட்டுமே நான் கேட்பது. மற்றவையெல்லாம் படித்த, கேட்ட சமாச்சாரங்கள்தான்.

2) நெருங்கிய நண்பர்களின் வாரிசுகள் சிலருக்காக சில பழைய ஈஸியான கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. கண்டுக்காதீங்கப்பா...!

Thursday, December 11, 2008

மூன்று அனுபவங்கள்

நான் செல்லும் கடைகளில் ஏதாவது குறையிருப்பின் முடிந்தவரை பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஷோ-வாக இருக்கும் கடைகளில் அப்படி இல்லை. சின்ன கடை, பேக்கரிகளில் குறையிருப்பின் கொஞ்சம் பாலிஷாக சொல்ல நினைப்பேன்.

சமீபத்தில் (1970கள் அல்ல. போன வாரம்) உடுமலைப் பேட்டை போயிருந்தேன், தம்பியோடு போய்க்கொண்டிருந்தபோது, ஒரு தெருவின் ஓரத்தில் பெஞ்சில் வைத்து மசால் பொரி போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அதைப் பார்த்ததும் உடுமலையைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களோடு தினமும் செல்லும் (லைப்ரரிக்கு எதிரிலிருக்கும்) செட்டியார் பொரிக்கடை ஞாபகம் வரவே அங்கே காரைச் செலுத்தினேன். அசத்தலான டேஸ்டில் இருக்கும் அங்கே மசால்பொரி.

கடை பூட்டியிருக்கவே... மசால் பொரி ஆசை உந்தவே, மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து பொரி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். மசாலே இல்லை. வெறும் எண்ணையாக இருந்தது. இதற்குத்தான் முன்னபின்ன வராத கடைக்கு போகக்கூடாது என்று தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு முடித்ததும் “என்னங்க பெரியவரே.. நல்லாவே இல்லையே” என்று சொன்னேன். அவர் முகம் ஒரு மாதிரி ஆகி “என்னது?” என்று செய்திருந்த வேலையை நிறுத்திவிட்டுக் கேட்டார்.

எனக்கு பாவமாக இருக்கவே.. “இல்லீங்கண்ணா.. உங்க டேஸ்டுக்காகத்தான் எப்ப வந்தாலும் தேடி வர்றேன். உங்க வழக்கமான டேஸ்ட் இல்லைண்ணா” என்றேன்.

அவர் சிரித்தபடி “இப்போதான் மசால் கலக்கினேன். லெமன் இன்னும் மிக்ஸ் ஆகல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சா நல்லா மிக்ஸ் ஆகி காரமா வரும். அதுதான் தம்பி வேறொண்ணுமில்ல. நான் உங்ககிட்ட பத்துநிமிஷமாகும் சொல்லிருக்கலாம், என் தப்புதான்” என்றார்.

“ஐயையோ பரவால்லீங்க” என்று இவ்வளவு பொறுமையா விளக்கம் சொல்றீங்களே.. அது போதும்” என்றதற்கு அவர் சொன்னார்...

“‘உங்க வழக்கமான டேஸ்ட்டுக்கு வந்தேன்’னு நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது அதுதான் சொன்னேன். உண்மையா நான் இந்த ஊருக்கு வந்தது போனவாரம். கடைங்கற பேர்ல ரெண்டு ஸ்டூலையும், பெஞ்சையும் போட்டு பொரி யாவாரம் ஆரம்பிச்சது இன்னைக்குத்தான்” என்றார்.

சாப்பிட்ட பொரியிலிருந்த எண்ணையெல்லாம் என் முகத்தில் அசடாய் வழிந்தது!

**********************************

வெகுநாட்களுக்குப் பிறகு உறவினர் ஒருவரது வீட்டிற்கு துக்க நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றேன். ஊரில் இருக்கும்போதெல்லாம் தினமும் போய்க் கொண்டிருக்கும் வீடென்பதால் அக்கம் பக்கத்தவரையெல்லாம் பழக்கம்.

ஒவ்வொருவராய் வந்து போய்க் கொண்டிருக்க, இவர்கள் முன்பிருந்த ஒரு வீட்டு ஓனரின் மனைவி வந்தார். அந்த அம்மாவைப் பார்த்ததும், நாலைந்து மாதங்களுக்கு முன் அவரது கணவன் இறந்தது நினைவுக்கு வந்தது. அதற்கு நான் போகவில்லை.

என்னைப் பார்த்ததும்... “எப்படி இருக்க கிருஷ்ணா”என்றவாறு வந்தார்.

நான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு “சொல்லுங்கக்கா. அண்ணன்தான் இப்படிப் போய்ட்டாரு பாருங்க” என்றேன்.

“அதையேன் கேக்கற? இங்க வரச் சொன்னேன்.. சொன்னாக் கேட்டாத்தானே.. டவுனுக்குப் போய்ட்டு சாயந்திரமா வரேன்னு அடம்பிடிச்சு போய்ட்டார்” என்றார்.

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரேடியா டிக்கெட் வாங்கீட்டுப் போனவரை, இங்கே எப்படி வரச்சொன்னாங்க இவங்க என்று நினைத்துக் கொண்டேன்.

அவரே உடனே.. “ஆமா.. உனக்கெப்படி அண்ணன் டவுனுக்குப் போனது தெரியும்?”

முகத்தில் ஈயாடாமல் நின்றிருந்த என்னிடம் என் தம்பி ஆங்கிலத்தில் “வீட்டுக்காரம்மாவோட தங்கச்சிண்ணா இவங்க. நீ அக்கான்னு நெனைச்சுப் பேசற” என்று சொன்னபோதுதான் தெளிந்தது.

சுதாரித்துக் கொண்டு.. “நான்தான் அண்ணன்கிட்ட ஃபோன்ல பேசினேனே..” என்றேன்.

“அவர்கிட்டதான் ஃபோனே இல்லையே..”

இது என்னடா கொடுமை, விடாது போலிருக்கே- என்று நினைத்த நான்” என்கிட்ட ஃபோன் இருக்கே” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து காதில் வைத்தபடி எஸ்கேப்பானேன்!

***************************

ஆஃபீஸ் விட்டு நேரா, என்கூட வேலை செய்யற நண்பரோட வீட்டுக்கு ஒரு வேலையா போயிருந்தேன். அவரோட மகன் அன்னைக்கு வந்த பரீட்சைப் பேப்பர்களை அப்பாகிட்ட காட்டிகிட்டிருந்தான். நண்பர் அவனுக்கு பயங்கர அட்வைஸ் பண்ணிகிட்டிருந்தாரு.

“ஃபர்ஸ்ட் இல்லீனா செகண்ட் ரேங்க்-ன்ன, இப்போ ஃபோர்த் ரேங்க்ல வந்து நிக்கற. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா ஃபர்ஸ்ட் ரேங்க்கே வாங்கியிருக்கலாம்ல” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்லிகிட்டிருந்தாரு. என் மகளும் அவர் மகனும் ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ்தான். இந்த ரேங்க் சமாச்சாரங்களுக்கு நான் அவ்வளவாய் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இருந்தாலும் வேறெதாவது பேசி அவர் மூக்கை ஏன் உடைப்பானேன் என்று பேசாமலிருந்தேன்.

என்னைப் பார்த்ததும் “வா கிருஷ்ணா” என்றுவிட்டு தொடர்ந்து மகனை கொஞ்சம் அட்வைஸ் பண்ணிவிட்டு, என்னுடன் பேச ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவர் எதற்கோ வீட்டுக்குள் சென்றுவிட, பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் மகனிடம் “ஏம்ப்பா.. ரேங்க் வர்லீன்னு அப்பா ரொம்பத் திட்டறாரா..” என்று கேட்க “ஆமா அங்கிள்” என்று பாவமாய்ச் சொன்னான். நான் சும்மா இருக்காமல் “என் பொண்ணையெல்லாம் நான் இப்படித் திட்டனதில்லை. வரட்டும் உங்கப்பா” என்றேன்.

“ஐயையோ.. வேணாம் அங்கிள். எதுவும் கேட்காதீங்க. உங்க பொண்ணைவிட ரெண்டு மார்க்காவது அதிகமா எடுத்திருக்கணும்ல’ன்னுதான் திட்டே விழுந்திட்டிருக்கு” என்றான்.

‘ஙே’ என்று முழித்தேன் நான்.

*********************

அவள் விகடனில் - இவன்!

ஒளிமயமான ‘கரண்ட் கட்’!

“ரமா.. எதிர் வீட்டுக்கு வினோத்தோட பாட்டி, தாத்தா வந்திருந்தாங்களே... போய்ட்டாங்களா?” - அலுவலகம் விட்டு வந்த கண்ணன் பேச்சோடு பேச்சாகக் கேட்டான்.

“ம்ம்.. இன்னிக்குத்தான் கெளம்புறாங்களாம்!” ரமாவின் பதிலில் எரிச்சல் கலந்திருந்ததைக் கவனித்தான்.

“ஏன்.. ஒரு மாதிரி பேசற? காலியில் கூட அவங்க அம்மாகிட்ட நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்த?”

“பேசினேன். அந்தம்மா சரியான லூசு. கரண்டை இப்படி கட் பண்றாங்களே’ன்னு கடுப்பா சொல்லிட்டு இருக்கேன்.. கரண்ட் கட் டை ஒரு மணி நேரத்துக்கு பதிலா ரெண்டு மணிநேரமா மாத்தினா தேவலாம்’னு சொல்றாங்க..”

“ஏன்னு காரணம் கேட்டியா?”

“அதுக்குள்ள வினோத் அம்மா வந்து அவங்களைக் கூட்டீட்டு போய்ட்டாங்க” ரமா சொல்லி முடிப்பதற்கும் வினோத்தின் பாட்டி அவர்கள் வீட்டில் நுழைவதற்கும் சரியாக இருந்தது.





“வாங்கம்மா” என்றான் கண்ணன்.

“நைட் ஒம்பது மணி டிரெயினுக்கு ஊருக்குக் கெளம்பறோம் தம்பி. அதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்”

“ஏம்மா.. வழக்கமா அஞ்சு மணி டிரெயினுக்குத் தானே போவீங்க? இந்த தடவை ஏன் இருட்டுல கிளம்பறீங்க?”

“இல்ல தம்பி. நாங்கதேன் ஒம்பது மணி டிரெயினுக்கு புக் பண்ணச் சொன்னோம். ஏன்னா..” என்று அவர் நிறுத்த, கேள்வியுடன் பார்த்தான் கண்ணன்.

“முன்னெல்லாம் நாங்க ஊர்ல இருந்து வந்தாலும் பேரன், பேத்திக எங்களோட சரியா பேசாதுக. ஸ்கூல் விட்டு வந்ததுமே ஃப்ளாட் குழந்தைக கூட விளையாடப் போயிடும்க. இருட்டினதும் டி.வி., இல்லைன்னா ஹோம் வொர்க்னு உக்காந்திடும்க.

ஆனா, இந்த முறை ‘ஏழு டு எட்டு கரண்ட் கட்’ங்கறதால என் பக்கத்துல வந்து உட்கார்ந்து “கதை சொல்லு பாட்டீ’ன்னு கேட்டுச்சுங்க. தினமுமே ஆசை தீரக் கதை சொன்னேன். ராத்திரியும் ரெண்டும் என் கழுத்தைக் கட்டிகிட்டுத்தேன் தூங்கிச்சுங்க.

இன்னிக்கு ஒரு நாள்தான இருக்கோம்? பேரப்பிள்ளைங்களோட இருந்துட்டு கெளம்பலாம்னு நைட் டிரெயினுக்கு புக் பண்ணினோம்”

அவர் சொல்லவும், பட்டென்று கரண்ட் போகவும் சரியாக இருந்தது. ‘பிள்ளைக தேடும்’ என்று கிளம்பியவரின் முகத்தில் சூரியப் பிரகாசம்! ரமா முகத்தில் அபார்ட்மெண்ட் இருள் முழுக்கவும்!



டிஸ்கி. 1: இந்தக் கதைக்கு நான் வைத்திருந்த தலைப்பு: இருட்டுக்கும் நிறம் உண்டு.

டிஸ்கி.2: என் மனைவி பெயர் உமாகௌரி.

STOP THIS NONSENSE!

அங்கீகாரம் என்பதற்குத்தான் எல்லாருமே ஏங்குகிறோம். கணவன் தன் சமையலை பாராட்ட மாட்டானா என்று அவன் முகம் பார்க்கும் மனைவிகளாலும், டீச்சர் கடகடவென்று டிக் அடித்துக் கொண்டே புரட்டுவார் என்று தெரிந்தும் அழகழகான கையெழுத்தில் ஹோம் வொர்க்கைச் செய்து, அவர் கையெழுத்துப்போடும் போது, நிமிர்ந்து பார்த்து தன் எழுத்தை மெச்ச மாட்டாரா என்று ஏங்கும் மாணவ, மாணவிகளாலும், முதலாளி சொன்ன வேலையைச் செய்துவிட்டு, அவரது முதுகு தட்டலுக்குக் காத்திருக்கும் தொழிலாளிகளாலும், கடைக்கண் பார்வையால் ‘உன் விசுவாசத்தை மெச்சினேன்’ என்றொரு வார்த்தை கிடைக்காதா என்று ஏங்கும் தொண்டர்களாலும் நிறைந்ததுதான் இவ்வுலகம்.

ஆனால், அங்கீகாரம் என்ற பெயரில் உங்களைத் தவறாக ஏற்றிவிட்டுக் கொண்டே இருக்கும் நண்பர்களால் என்ன பயன்? அவர்கள் மறைமுகமாக நம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

எங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஒரு பெண். அவரது அயராத உழைப்பில் இருபது வருடங்களுக்கு மேல் நின்று நிலைத்து, ஏற்றுமதியில் பேர் வாங்கிய நிறுவனங்களில் ஒன்று இது.

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். முதன் முதலாக ஒரு வெளிநாட்டு BUYERக்காக ஆயத்த ஆடைகள் தயாரித்து, அது தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்தது. மனம் தளர்ந்து, ‘என்னுடைய உற்பத்தியில் நீங்கள் சொல்லுமளவு குறைகள் ஏதுமில்லை’ என்று வாதாடினார் எங்கள் மேடம். இன்ஸ்பெக்‌ஷன் செண்டரில் வைத்து நடந்த இந்த வாக்குவாதங்களின் போது, அந்த BUYERன் இந்திய ஏஜண்ட் எங்கள் மேடத்தை தனியாக அழைத்தார்.

“லுக்... நீங்கள் வாதாட வேண்டியது இங்கே அல்ல. உங்க ஊழியர்கள்கிட்டதான். உங்க GOODSஐ நீங்களே CHECK பண்ணிக்கலாம். இதை ஓக்கே செய்ய எங்களுக்கு அஞ்சு நிமிஷம்தான் ஆகும். ஆனா ஒரு வளரப்போற நிறுவனமான உங்களுக்கு அது நல்லதில்ல. இதுதான் ஓக்கேன்னா, இதுக்கு மேல முயற்சிக்க முடியாம உங்க நிறுவனமும், நீங்களும் நின்றுவிட வாய்ப்புண்டு” என்று அறிவுறுத்தினார்.

‘அன்றைக்கு ‘உங்க உற்பத்தி ஏ-ஒன்’ என்று சமாதானப்படுத்தி, சமரசம் செய்து கொண்டு அனுப்பப் பட்டிருந்தால் இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன்’ என்று எங்கள் மேடம் அடிக்கடி சொல்வதுண்டு.

அந்தத் தரக்கட்டுப்பாட்டில் ஓகே ஆகவில்லை என்றால் RECHECK செய்யப்பட்டு, அது ஓக்கே ஆகிப் போய்விட வாய்ப்புண்டு. ஆனால் தவறான அங்கீகாரமும், வெற்றுப் பாராட்டுக்களும் என்னப் போன்ற ஒருவனுக்கு முன்னேற்றத்தைத் தரவே தராது.

எதுக்குய்யா இப்போ இந்தக் கதையெல்லாம் என்று கேட்பவர்களுக்கு..

பாரிஸ் திவா என்றொருத்தர் தமிழில் சிறந்த முதல் மூன்று இடங்களைப் பிடித்த வலைப்பூக்கள் என்று லக்கிலுக், பரிசல்காரன், அதிஷா மூன்று பேரையும் வெளியிட்டிருக்கிறார். என்ன கொடுமை இது?

நிச்சயமாக எனக்கோ, மேலே குறிப்பிட்டுள்ள என் நண்பர்கள் லக்கிலுக், அதிஷாவிற்கோ இந்த நம்பர் கேமில் எள்ளளவும் உடன்பாடில்லை. நாங்கள்தான் சிறந்ததென்றால் சிறந்ததை அவர் என்னவென்று வகைப்படுத்துவார்?

இதுபற்றி அவர் அறிவிப்பு வெளியிட்டபோதே கோவம் வந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் விடுவதே சரி என்று பேசாமல் இருந்தேன். ஆனால், இப்படி முடிவுகள் வெளியிட்டு எங்கள் நண்பர்கள், எங்களைப் படிக்கிறவர்கள் முன் எங்களை தலைகுனிந்து நிற்கச் செய்கிறார் அவர். இன்னும் எழுத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைப்பிற்கு முட்டுக்கட்டையாகவே இது போன்ற பிதற்றலான கருத்துக் கணிப்புகளும், பாராட்டுகளும் இருக்கின்றன.

எங்கள் எழுத்தின் தரம் என்ன என்பது எழுதி முடித்துப் படிக்கும்போதே எங்களுக்குத் தெரியும். மரண மொக்கை எது, நன்றாக எழுதப்பட்டது எது என்பதை அறிந்தேதான் இருக்கிறேன். உதாரணத்திற்கு நேற்று எழுதப்பட்ட ஒண்டிக்கட்டை உலகம் புத்தக விமர்சனம் கொஞ்சமும் சரியில்லை என்பதை உணர்கிறேன். வேலைப்பளு, வேறு சில டென்ஷன்களால் எழுதித் தொலைத்து பதிவேற்றம் வேறு ஆயிற்று. (இந்த லட்சணத்தில் அது 200வது பதிவு!)

இப்படிப்பட்ட நிலையில் சும்மா ஒரு பத்து, பதினைந்து பேரைப் போட்டு ஒரு வாக்கெடுப்பு நடத்தி, முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் என்று வெளியிட்டு சிறப்பாய் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் பதிவர்களின் சாபத்தையும், கோபத்தையும் எங்கள் பக்கம் திருப்பி விட்டிருக்கும் இவரது இந்தச் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இனியும் இவர் இதுபோன்ற வேலைகளைத் தொடரவேண்டாமெனக் கண்டிப்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, December 10, 2008

ஒண்டிக்கட்டை உலகம் – சிபி.கே.சாலமன்

பேச்சிலர் அதிஷா தனிமையில் வாடியதைப் பதிவாகப் போட்டதன் விளைவாக தனிமை-கொலை-தற்கொலை என்றொரு சிறுகதை எழுதி, அதைப் பதிவிட்ட நாளில்தான் கிழக்கு பதிப்பகத்திலிருந்து இந்தப் புத்தகம் வந்தது. என்ன பொருத்தம்!!!

ஒண்டிக்கட்டை உலகம் (A COMPLETE GUIDE FOR BACHELORS) by சிபி.கே.சாலமன்.

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு, அதற்கென்று தனியாக இடம் ஒதுக்கப்பட்ட என் புத்தக அலமாரியில் ஏற்கனவே சாலமனின் மிஸ்டர் பாப்புலர், கவுண்ட் டவுன், 5S உட்பட சில புத்தகங்கள் உண்டு. கிழக்கு பதிப்பகத்தாரின் எல்லாப் புத்தகங்களுமே எதைச் சொன்னாலும் படிக்கறவனை உன் ஃப்ரெண்டா நெனைச்சு ஃப்ரீயா பேசற மாதிரி சொல்லு’ என்கிற ஃபார்மூலாவில்தான் இந்த ஒண்டிக்கட்டை உலகமும் இருக்கிறது.

அங்கங்கே நகைச்சுவை தெறிக்க புத்தகத்தை எடுத்தால் அப்படியே படித்துக்கொண்டே போகச் சொல்கிறது. (எங்க போக? எனக்குத்தான் குடும்பம் இருக்கே!)

சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு பெட்டியுடன் வந்திறங்கும் பேச்சிலர் பாய்ஸைக் கருத்தில் கொண்டே எழுதப்பட்டது இந்தப் புத்தகம். அவர்கள் ரூம் பிடிப்பது எப்படி, அறையில் பொருட்களை நண்பர்கள் சுட்டுவிடாமல் இருப்பது எப்படி, ஒத்துப் போகாத நண்பர்களை சமாளிப்பது (அ) அனுசரிப்பது எப்படி, செல்ஃப் குக்கிங், வீட்டு உரிமையாளரைச் சமாளிப்பது எப்படி (அவருக்கு சூப்பர் ஃபிகர் மகளாக இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூட கூறியிருக்கிறார்!!!), ஓய்வு நேரத்தை உபயோகமாக செலவழிப்பது எப்படி, பேச்சிலராக இருக்கும்போது என்னென்ன செய்தால் உங்கள் எதிர்காலத்துக்கு அது உதவும் என்பது உட்பட பலப்பல விஷயங்களை ‘வா மச்சி.. உன்னாண்ட ஒரு மேட்டர் சொல்லோணும்’ என்பது போல தோளில் கைபோட்டு விளக்கியிருக்கிறார் சிபி.கே.சாலமன்.

உங்களுக்கு மது, புகை பழக்கமில்லை. உங்கள் அறை நண்பர்களுக்கு இருக்கிறது எப்படி சமாளிப்பது?

‘நான் ரொம்ப நல்லவன் தெரியுமா’ என்று ஒதுங்கி இருந்தீர்களென்றால் உங்களுக்கு ஆப்புதான். ‘சரி.. எனக்கும் ஊத்துடா ஒரு பெக்கு’ என்றால் அப்புறம் உங்க லைஃப் சங்குதான். வேறென்னதாண்டா செய்யணும்கற? என்கிட்ட கேட்காதீங்க. சாலமன் சார் 56,57ம் பக்கங்களில் சொல்வதைக் கேளுங்க.

நீங்க ஒழுங்கா வாடகைக் கொடுக்கறீங்க. ஆனாலும் உங்க வீட்டுக் குழாய்ல தண்ணி வர்ல. உங்க வீட்டுக்காரரை என்ன வேணும்னாலும் கேட்க உங்களுக்கு உரிமை இருக்குன்னு அவரை டார்ச்சர் செய்தீங்கன்னா என்னாகும்? 63ம் பக்கம் படிங்க.

சரி, எப்படித்தான் சமாளிக்கறதுங்கறதுக்கும் ரொம்ப சிம்பிளான தீர்வு சொல்லியிருக்காரு.

‘இவர் நம்ம ஆளுப்பா’ இந்த பிம்பம் இருக்கிறதே, இதுதான் முக்கியம். அறையில் முரண்பட்ட மனிதர்களுடன் நாம் இருந்தாலும் நம் அணுகுமுறை, செயல்கள், பேச்சு எல்லாம் மற்றவர்களிடம் ‘இவன் நம்ம ஆளுப்பா’ என்ற பிம்பத்தையே தோற்றுவிக்க வேண்டும். நம் நடவடிக்கைகள் நம்மை எந்த விதத்திலும் அறை நண்பர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக் கூடாது. நம் கருத்துக்களுக்கும் குரலுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பு கிடைக்கும்’

இவர் சொல்லியிருக்கும் மேற்கண்ட பாரா (Paragraph – Not Writer PARA!) பேச்சிலர்களுக்கு மட்டுமல்ல, அலுவலகத்திலும், உறவினர்களிடத்திலும் ஏன் வலையுலகுக்கும்கூட பொருந்துகிறது.


பின்னிணைப்பாக முக்கியமான சில சமையல் குறிப்புக்களைக் கொடுத்திருக்கிறார். புத்தகம் முழுவதும் நகைச்சுவை நடை என்றேனல்லவா... அதற்குச் சில சாம்பிள்களை இந்த சமையல் குறிப்புகளிலிருந்து தருகிறேன்.

தோசையை வட்டமாகத்தான் வார்க்க வேண்டும் என்று சட்டமெல்லாம் இல்லை என்கிறார்.

உப்புமா செய்முறையில் ஐந்து நிமிடம் கழித்து என்பதற்குப் பதில் ‘உங்கள் கேர்ள் ஃப்ரெண்டுக்கு ரெண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு வந்துவிடுங்கள்’ என்கிறார்.

கேசரி செய்முறையில் சர்க்கரைக்கு இவர் சொல்லும் அளவு ‘அது உங்கள் நண்பனது நட்பின் இனிமையைப் பொறுத்த விஷயம்’

ரசம் செய்முறை சொல்லும்போது உப்பு சேர்க்கச் சொல்ல மறந்து விடுகிறார். கடைசியில் ‘உப்பு சேர்க்க மறந்துவிட்டது. இப்படித்தான் அடிக்கடி நிகழும் மறக்காமல் சேர்க்கவும்’ என்று சொல்வதன் மூலம் உப்பை மறக்காமல் சேர்க்கச் செய்து விடுகிறார்.


சென்னைக்கோ, வேறெந்த ஊருக்கோ போய் பேச்சிலராகத் தங்கப் போகிறவர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இந்தப் புத்தகத்தைக் கொடுத்து, அவர்களை கண்ணைத் திறந்து கொண்டு இதைப் படிக்கச் செய்தால் போதும். நிச்சயம் அவர்கள் 90% பிரச்சினைகளுக்கு இதில் தீர்வு உண்டு.


ஒண்டிக்கட்டை உலகம்
சிபி.கே.சாலமன்
Pages: 144
விலை: ரூ.70
ISBN: 978-81-8368-549-8
Category: Self Improvement

ஆன்லைனில் இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக்குங்கள்.

Tuesday, December 9, 2008

அவியல் 09.12.08 – பாவம் ஷகீலா!

அந்தக் கவிஞர் தனது நண்பர்களோடு சிற்றுண்டிக்கு செல்கிறார். தோசை கொண்டுவரச் சொல்கிறார்கிறார்கள். பணியாளர் தோசையுடன் வரத் தாமதமாகிறது. தூரத்தே அவன் வரும்போது நண்பர்கள் கவிஞரிடம் “அவனுக்கு சட்’டென்று ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்” என்று சவால் விடுகிறார்கள். பக்கத்தில் அவன் வந்ததும் ‘பட்’டென வெண்பா சொல்கிறார் கவிஞர்....

“ஏண்டா இதற்குப்போய் இவ்வளவு நேரமா
போண்டா எடுத்துவா போ”

யாரந்தக் கவிஞர்...? கடைசியில் பார்ப்போம்.

**********************
நான் எந்த மெயில் அனுப்பினாலும் முடிவில் அளவில்லா அன்போடு.. கிருஷ்ணா’ என்று முடிப்பது வழக்கம். சில மெய்ல்த்ரெட் நடப்பில் இருக்கும்போது, இந்த அளவில்லா அன்போடு-வை நம்ம ஃப்ரெண்ட்ஸ் போட்டு, தாளிக்கும் தாளிப்பைப் பாருங்கள்...


அளவில்லா அட்டெண்டன்ஸோடு, அளவில்லா மப்போடு, மனமில்லா குசும்போடு, காலி வயிறோடு, அளவிலா ஆர்வத்தோடு, அளவில்லா அலுப்போடு, அளவில்லா அளவோடு அளவில்லா பியரோடு, அளவில்லா ஏழரையோடு, அளவில்லா துயரத்தோடு, அளவில்லா எதிர்பார்ப்புகளோடு அளவில்லா எச்சரிக்கையோடு, ஆப்புவைக்கும் அன்போடு., அளவான அளவோடு....

நம்ம ஃப்ரெண்ட்ஸ் கலக்கறாங்கப்பா!

***************************

ட்வெண்டி-20 படம் பார்த்தேன். மலையாளம்.

பெங்களூரில் ஒரு கொலை. அதைச் செய்தவனைக் கைது செய்கிறார் நேர்மையான போலீஸ் அதிகாரி சுரேஷ்கோபி. அவனை ஜாமீனில் எடுக்கிறார் அவனது திறமையான வழக்கறிஞர் மம்முட்டி. ஜாமீனில் வெளிவந்த அவனைக் கொல்கிறார் தாதா மோகன்லால். மோகன்லாலை யாரென்று தெரியாமல், வாதாடி நிரபராதி என்று வெளியே கொண்டுவருகிறார் மம்முட்டி. பிறகு அவரை போலீஸ் சுரேஷ்கோபியிடம் மாட்டிவிடுகிறார். அவர் தப்பிக்கும்போது உதவுகிறார் மம்முட்டி. மூன்றுபேரும் க்ளைமாக்ஸில் வில்லன்களைப் போட்டுத் தள்ளுகிறார்கள்.

குழப்பமாய் இருக்கிறதா? படம் ஒன்றும் குழப்பவில்லை. இதை தெளிவாக காரணகாரியங்களோடும், காமெடியோடும் நகர்த்தி வெற்றிப் படமாக்கியிருக்கிறார்கள்!

சுரேஷ்கோபி, மம்முட்டி, மோகன்லால் என்று ஒவ்வொருவரின் என்ட்ரிக்கும் வித்தியாசமாக யோசித்து எல்லோருடைய ரசிகர்களின் திருப்திக்கும் உழைத்திருக்கும் இயக்குனர் சபாஷ் போடப்பட வேண்டியவர்.

மலையாள திரைப்பட சம்மேளனமான ‘அம்மா’விற்காக தயாரிக்கப்பட்ட படம் இது. இந்தப் படத்தின் வசூலை வைத்து நலிந்த திரைப்படக் கலைஞர்களுக்கு உதவப் போகிறார்கள் என்பதால், அங்கே இருக்கும் எல்லா ஆர்டிஸ்டும் நடித்திருக்கிறார்கள். மறைந்த ஸ்ரீவித்யாகூட ஒரு சீனில் மம்முட்டியின் அம்மாவாக – ஃபோட்டோவில் – வந்துபோகிறார். என் ஒரே ஒரு குறை மலையாள சினிமாவை அகிலமெங்கும் பரப்புவதில் சிறிதளவேனும் பங்கிருக்கிற ஷகீலாவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பதுதான். டைட்டில் போடும்போது, பல நடிகர்களின் ஸ்க்ரோலிங் காட்டுகிறார்கள்.. அதில்கூட அவருக்கு இடமில்லை! பாவம்!!! (இவர் மெலிந்த கலைஞர் இல்லை, படத்தில் நடிக்காமல் இருப்பதால் நலிந்த கலைஞராக ஆகிவிட்டாரோ என்னமோ!)

***********************
சென்றவாரத்தில் நண்பர் பழமைபேசி மாங்கா மடையன்’ என்பதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் இதுபற்றி நான் கேள்விப்பட்டது...

தேங்கா மடையன், மாங்கா மடையும் இரண்டுமே புழக்கத்தில் இருந்ததாம். (தேங்கா மடையன் இப்போது இருக்கிறதா?) அதாவது அடிக்கடி முட்டாள்தனமாக செயல்படுபவன் தேங்கா மடையன். எப்போதாவது முட்டாள்தனமாக செயல்படுபவன் மாங்கா மடையன். காரணம் எப்போதும் காய்க்கும் தேங்காய். சீஸனில் மட்டும் காய்க்கும் மாங்காய். அதனால்!

*************************

சென்னை வந்திருந்தபோது நண்பர்களுடனான கலை இரவில் - பாடல்கள், காப்பி அடிப்பது குறித்த பேச்சின்போது வெளிவந்த தகவல்கள்....

‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ – இந்தப் பாடல்தான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ வின் இன்ஸ்பியரேஷன். பாடிப்பாருங்கள்.

‘தந்தனத்தோம் என்று சொல்லியே.. வில்லினில் பாட..’ – இதுதான் ‘சிங்கமொன்று புறப்பட்டதே.. சபதம் செய்து’. இன்ஸ்பியரேஷனெல்லாம் இல்லை. டைரக்ட் காப்பி!

‘கொக்கரக்கோ கோழி..கொக்கரிக்கும் தோழி’ (கலைஞன்) இதுதான் ‘தோஸ்த்துபடா தோஸ்த்து’ (சரோஜா) என்றான் சகா கார்க்கி.

ஜித்தன் படத்தில் ‘அ முதல் அஃகு தானடா’ பாடலின் சரணம்...

‘ஒத்தரூபா பொட்டுக்காரி
ஒத்துழைக்க கெட்டிக்காரி
தளதளன்னு குலுங்கிவரும்
தாகம்தீர்க்கும் தண்ணிலாரி..’ முழுச்சரணமும் ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’ பாடலின் சரணமாகிய
‘படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன்மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் சுருட்டிக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்..’ சரணத்தோடு ஒத்துப் போகும்!

இந்தப் பட்டியல் முடியாது.

சபாஷூன்னேன்!

****************************
முன்பெல்லாம் வெறும் படம் மட்டும் போட்டு, கலக்கலாக ஒரே வரியில், டயலாக்கில் குபுக் கென்று சிரிக்கவைக்கிற நகைச்சுவைகள் நிறைய வரும். சிம்பு, சரண் எல்லாரும் இதில் எக்ஸ்பர்ட்! இப்போதெல்லாம் இந்த டைப்பில் வருவது அரிதாகிவிட்டது.

விகடனில் சிம்புவின் ஒரு ஜோக்.. (2000ல் வந்தது)

நகராட்சி வண்டி நிற்கிறது. அதிகாரிகள் அந்த மோசமான ரோட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். ‘ரோடா இது’ என்பது போல ஒரு முகபாவம் அவர்களிடத்தில். பக்கத்தில் ஒரு கிராமத்துப் பெரியவர், அந்த அதிகாரிகளிடம்...

‘ஆமாங்க.. கடைசியா தேர்தல் சமத்துல போட்ட ரோடுதான். ஜவஹர்லால் நேரு பிரசாரம் பண்ணவர்றார்னு அவசர அவசரமா போட்டாங்க’

படத்திலிருப்பவர்களில் முகத்தைப் பார்த்தால் அப்படிச் சிரிப்பு வரும்!

இதைவிட இன்னொன்று.. 1943ல் (ஜூலை 11 இதழில்) வந்தது..

ஒரு பேஷண்ட் வாயை அகலமாகத் திறந்திருப்பார். பல்டாக்டர் சொல்வார்..

‘வாயை அளவா திறங்க போதும். நான் வெளில நின்னுதான் பல் பிடுங்கப் போறேன்’

*******************

அந்தக் கவிஞர், வைரமுத்து!

இனி இந்த வாரக் கவிதை

தமிழர்
கடவுள்
முருகன்
கும்பிட
நீண்ட
வரிசை
ஜனவரி 1.

-நெல்லை கண்ணன்

Saturday, December 6, 2008

வீக் எண்ட் புதிர்களின் விடைகள் - அதிரடி ரிலீஸ்!

1) பதிவர்கள் குறித்த கேள்விகள்....


a) இவர் பெயரை திருப்பிப் போட்டால் என்னா? நேராய்ச் சொன்னால் சுத்தமான நெடில்.


தூயா

(யாது = என்ன என்பதால் என்னா’ என்று நெடிலில் கொடுத்தேன். சுத்தமான = தூய)

b) இவர் பெயரின் கடைசி எழுத்தில் ஒரு நல்ல படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது!

வெண்பூ (ஆட்டைக்கு வரவே இல்லை இவர்!)

c) நல்லது... கர்ணனாக சிவாஜி நடித்ததும்!

-இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓரெழுத்து எடுத்து இந்தப் பதிவரைக் கண்டுபிடியுங்க பாஸ்!

நர்சிம்.

d) முதல் + கடைசி எழுத்து.. ம்ம்ம்... ஏதாவது சாப்பிடணுமே..

நடு எழுத்து எழுத உதவும்! கண்ணிலும் எழுதலாம்.

பழமைபேசி

e) முதல் + கடைசி எழுத்து = வடஇந்திய யார்?
இரண்டாவது + கடைசி எழுத்து = வெற்றி
மூன்றாவது + கடைசி எழுத்து = தீவிரவாதிகளிடமும் இருந்தது, நம்ம படைவீரர்களிடமும் இருந்தது!

கோவி கண்ணன்

f) முதல்+ கடைசி எழுத்து = கொஞ்சம் நீட்டிச் சொன்னால் ஆங்கிலநிலா.

இரண்டாவது + கடைசி எழுத்து = லிங்குசாமிக்கும், பி.டி.உஷாவுக்கும் பிடிக்கும்!

இதற்கு முன்னவருக்கும், இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.


முரளிகண்ணன்

பதிவர்கள் குறித்த மேலுள்ள ஆறு கேள்விக்கும் பொதுவான ஒரு க்ளூ... முதல் கேள்வி, இரண்டெழுத்துப் பதிவர், இரண்டாவது கேள்வி மூன்றெழுத்துப் பதிவர்.. மூன்றாவது – நான்கெழுத்து........ இப்படியே தொடருங்கள்..

என்ன ஈஸீயாய்டுச்சா இப்போ?


2) (அ) உங்களுக்குச் சொந்தமானது, உங்களை விட அடுத்தவர்களே அதிகம் பயன்படுத்துவது எது?

பெயர்.

(ஆ) யாருக்காக உபயோகப் படுத்தப் படுகிறதோ, அவர்கள் வாங்கமுடியாது. அது என்ன?

சவப்பெட்டி

3) எட்டுமணிக்கு பார்ட்டிக்கு விருந்தினர்கள் வந்தாயிற்று. 9 மணியளவில் இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சென்றுவிட்டார்கள். பார்ட்டி தொடர... 10 மணியளவில் மீதி இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விடைபெற்றுப் போய்விட்டார்கள். மீதமிருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 11 மணிக்கு போய்விட்டார்கள்.. இப்போது எட்டுபேர் பார்ட்டியைத் தொடர்கிறார்கள்...

8 மணிக்கு இருந்த மொத்தவிருந்தினர் எத்தனைபேர்?

27 பேர்.

4) லாஜிக்கலாகச் சொல்லுங்கள்.. ரோடுகளில் மேன்ஹோல் இருக்கிறதல்லவா? அதற்கு சதுரமூடி, வட்டவடிவ மூடி.. இரண்டில் எது பெஸ்ட்? ஏன்?

வட்டவடிவமூடி. பல காரணங்கள்... உருட்டிக் கொண்டு போகலாம் (வேலை செய்யும்போது) அதனால் ஆட்கள் கம்மிதான் தேவை. சதுரமென்றால் மூலைவெட்டில் உள்ளேவிழ வாய்ப்புண்டு.

நர்சிம் சொன்ன ‘விளிம்பு தட்டாது’ புதிய சிந்தனை! சபாஷ்.

5) நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிளும் சேர்த்து 40 பைசா. அதே, நாலு ஆப்பிளும், மூன்று ஆரஞ்சும் சேர்த்து 37 பைசா என்றால் ஒரு ஆரஞ்சு எவ்வளவு பைசா?

7 பைசா.

##இந்தக் கேள்விக்கு 7 பைசா என்று மட்டும் விடை எழுதுபவர்களுக்குத்தான் மார்க் குடுப்பார்களாம். ஆரஞ்சு எத்தனை என்று மட்டும் தானே கேள்வி. ஆரஞ்சு 7, ஆப்பிள் 4 என்றால் நோ மார்க்! இங்கே அல்ல. ஐ.ஏ.எஸ்-ஸில்!

## அதேபோல அனுஜன்யா, தாரணிப்ரியா எந்த ஊர்ல இந்தவிலை என்று கேட்டிருக்கிறார்கள். பைசாவில் கேட்டதும் உங்கள் பர்ஃபெக்‌ஷனை சோதிக்க. ஒருத்தர் 7 ரூபா, 4 ரூபா என்று மாட்டிக்கொண்டுவிட்டார்.

6) ஒரு தெருவில் குறிப்பிட்ட அளவு எதிரெதிர் வரிசையிலான வீடுகள் உள்ளன. ஒரு பக்கம் 1,2,3,4 என்று ஆரம்பித்து எதிர்வரிசையில் அப்படியே எண்கள் தொடர்ந்து கீழ்வரிசையில் போடப்பட்டுள்ளன.(அதாவது 1ம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீடு கடைசி நம்பர்)

பத்தாம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீட்டு எண் 23 எனில்.. மொத்தம் எத்தனை வீடுகள் அந்த வீதியில்?

32.

7) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி..

தாஜ்ஹோட்டலின் பாருக்கு சென்று ஒருத்தன் அவசரமாக தண்ணீர் கேட்கிறான். பார் அட்டெண்டர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, தனது துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றிப்பொட்டில் வைக்கிறான்.


ஒரு நிமிடம் கழித்து, தண்ணீர் கேட்டு வந்த கஸ்டமர் சிரித்தபடி நன்றிகூறி வெளியேறுகிறான்.

என்ன மேட்டர்?

விக்கல்.

8) இது லாஜிக்கல்...


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கொன்று என்று சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. (ஜூஸெல்லாம் போடலைப்பா!) கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

கடைசி ஆளுக்கு கூடையோடு கொடுக்கப்பட்டது!

9) க்ரிக்கெட் க்விஸ்... 1946ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியா டூர் ரத்தானது. ஏற்கனவே முடிவான இந்தத் தொடர் ரத்தானதற்கு காரணம்..

அ) போருக்குப்பின் உடனே பயணம் சாத்தியமில்லை என மே.இ. பயணக்குழுவினர் மறுத்துவிட்டதால்.

ஆ) மே.இ.போர்ட், இந்தியாவின் செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்டில் திருப்திப் படாததால்.

இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால்.

ஈ) மேற்கிந்திய வேகப்பந்து வீரர்களைப் பற்றி கேள்விப்பட்டு, இந்திய வீரர்கள் விளையாட மறுத்ததால்.

நம்புங்கள்! இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால். - இதுதான் சரியான பதில்!

(தாரணி.. நெக்ஸ்ட் டைம் டென்னிஸ் ஓக்கே?)

10) இது இளையராஜாவின் பிரபலமான ஒரு பாட்டின் இரண்டாவது சரணம்..

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

கலைபலவும் பயிலவரும்
அறிவுவளம் பெருமைதரும்

என் நினைவும் கனவும் இசையே
இசை இருந்தால் மரணமேது

என் மனதில் தேன் பாய...

பல்லவிக்குப் போக இன்னும் ஒரு வரிதான் பாக்கி. அதைச் சொன்னால் பாடல் ஈஸீயாகத் தெரிந்துவிடும்.

கண்டுபிடுங்க பார்க்கலாம்!

...தமிழே நாளும் நீ பாடு...


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே...


கலந்து கொண்டு கலக்கிய எல்லாருக்கும் நன்றி!!!

வீக் எண்ட் புதிர்கள் - 06.12.08




1) பதிவர்கள் குறித்த கேள்விகள்....


a) இவர் பெயரை திருப்பிப் போட்டால் என்னா? நேராய்ச் சொன்னால் சுத்தமான நெடில்.

b) இவர் பெயரின் கடைசி எழுத்தில் ஒரு நல்ல படம் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது!

c) நல்லது... கர்ணனாக சிவாஜி நடித்ததும்!

-இந்த வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓரெழுத்து எடுத்து இந்தப் பதிவரைக் கண்டுபிடியுங்க பாஸ்!

d) முதல் + கடைசி எழுத்து.. ம்ம்ம்... ஏதாவது சாப்பிடணுமே..

நடு எழுத்து எழுத உதவும்! கண்ணிலும் எழுதலாம்.


e) முதல் + கடைசி எழுத்து = வடஇந்திய யார்?
இரண்டாவது + கடைசி எழுத்து = வெற்றி
மூன்றாவது + கடைசி எழுத்து = தீவிரவாதிகளிடமும் இருந்தது, நம்ம படைவீரர்களிடமும் இருந்தது!


f) முதல்+ கடைசி எழுத்து = கொஞ்சம் நீட்டிச் சொன்னால் ஆங்கிலநிலா.

இரண்டாவது + கடைசி எழுத்து = லிங்குசாமிக்கும், பி.டி.உஷாவுக்கும் பிடிக்கும்!

இதற்கு முன்னவருக்கும், இவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.


பதிவர்கள் குறித்த மேலுள்ள ஆறு கேள்விக்கும் பொதுவான ஒரு க்ளூ... முதல் கேள்வி, இரண்டெழுத்துப் பதிவர், இரண்டாவது கேள்வி மூன்றெழுத்துப் பதிவர்.. மூன்றாவது – நான்கெழுத்து........ இப்படியே தொடருங்கள்..

என்ன ஈஸீயாய்டுச்சா இப்போ?


2) (அ) உங்களுக்குச் சொந்தமானது, உங்களை விட அடுத்தவர்களே அதிகம் பயன்படுத்துவது எது?

(ஆ) யாருக்காக உபயோகப் படுத்தப் படுகிறதோ, அவர்கள் வாங்கமுடியாது. அது என்ன?


3) எட்டுமணிக்கு பார்ட்டிக்கு விருந்தினர்கள் வந்தாயிற்று. 9 மணியளவில் இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சென்றுவிட்டார்கள். பார்ட்டி தொடர... 10 மணியளவில் மீதி இருந்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விடைபெற்றுப் போய்விட்டார்கள். மீதமிருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 11 மணிக்கு போய்விட்டார்கள்.. இப்போது எட்டுபேர் பார்ட்டியைத் தொடர்கிறார்கள்...

8 மணிக்கு இருந்த மொத்தவிருந்தினர் எத்தனைபேர்?


4) லாஜிக்கலாகச் சொல்லுங்கள்.. ரோடுகளில் மேன்ஹோல் இருக்கிறதல்லவா? அதற்கு சதுரமூடி, வட்டவடிவ மூடி.. இரண்டில் எது பெஸ்ட்? ஏன்?

5) நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிளும் சேர்த்து 40 பைசா. அதே, நாலு ஆப்பிளும், மூன்று ஆரஞ்சும் சேர்த்து 37 பைசா என்றால் ஒரு ஆரஞ்சு எவ்வளவு பைசா?

6) ஒரு தெருவில் குறிப்பிட்ட அளவு எதிரெதிர் வரிசையிலான வீடுகள் உள்ளன. ஒரு பக்கம் 1,2,3,4 என்று ஆரம்பித்து எதிர்வரிசையில் அப்படியே எண்கள் தொடர்ந்து கீழ்வரிசையில் போடப்பட்டுள்ளன.(அதாவது 1ம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீடு கடைசி நம்பர்)

பத்தாம் நம்பர் வீட்டுக்கு எதிர்வீட்டு எண் 23 எனில்.. மொத்தம் எத்தனை வீடுகள் அந்த வீதியில்?


7) ஒரு லேட்டரல் திங்கிங் கேள்வி..

தாஜ்ஹோட்டலின் பாருக்கு சென்று ஒருத்தன் அவசரமாக தண்ணீர் கேட்கிறான். பார் அட்டெண்டர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு, தனது துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றிப்பொட்டில் வைக்கிறான்.


ஒரு நிமிடம் கழித்து, தண்ணீர் கேட்டு வந்த கஸ்டமர் சிரித்தபடி நன்றிகூறி வெளியேறுகிறான்.

என்ன மேட்டர்?


8) இது லாஜிக்கல்...


ஒரு கூடையில் ஆறு ஆப்பிள்கள். ஆறு பேருக்கு ஆளுக்கொன்று என்று சமமாகப் பிரித்துக் கொடுத்தாயிற்று. (ஜூஸெல்லாம் போடலைப்பா!) கூடையில் ஒரு ஆப்பிள் இருக்கிறது. எப்படி?

9) க்ரிக்கெட் க்விஸ்... 1946ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியா டூர் ரத்தானது. ஏற்கனவே முடிவான இந்தத் தொடர் ரத்தானதற்கு காரணம்..

அ) போருக்குப்பின் உடனே பயணம் சாத்தியமில்லை என மே.இ. பயணக்குழுவினர் மறுத்துவிட்டதால்.

ஆ) மே.இ.போர்ட், இந்தியாவின் செக்யூரிட்டி அரேஞ்ச்மெண்ட்டில் திருப்திப் படாததால்.

இ) அந்தச் சுற்றுபயணத்தின் செலவுகளை தங்களால் தாங்க இயலாது என்று இந்திய கிரிக்கெட் போர்ட் நினைத்ததால்.

ஈ) மேற்கிந்திய வேகப்பந்து வீரர்களைப் பற்றி கேள்விப்பட்டு, இந்திய வீரர்கள் விளையாட மறுத்ததால்.

10) இது இளையராஜாவின் பிரபலமான ஒரு பாட்டின் இரண்டாவது சரணம்..

பொன்னல்ல பூவல்ல
பொருளல்ல செல்வங்கள்

கலைபலவும் பயிலவரும்
அறிவுவளம் பெருமைதரும்

என் நினைவும் கனவும் இசையே
இசை இருந்தால் மரணமேது

என் மனதில் தேன் பாய...

பல்லவிக்குப் போக இன்னும் ஒரு வரிதான் பாக்கி. அதைச் சொன்னால் பாடல் ஈஸீயாகத் தெரிந்துவிடும்.

கண்டுபிடுங்க பார்க்கலாம்!

***********************

யோசிச்சு பதில் சொல்லுங்கப்பா. கமெண்ட் மாடரேஷன் போட்டுடறேன். ஓக்கேவா?

Friday, December 5, 2008

சிறுகதை எழுதுவது எப்படி?

‘சிறுகதை எழுதுவது எப்படி’ என்ற தலைப்பில் சுஜாதாவின் புத்தகம் ஒன்றை புத்தகப்பித்தன் வெளியிட்டிருந்தார். ‘ஆஹா’ என்று மிகவும் ஆவலாக வாங்கினால் அவர் நமக்கு எந்த ஆலோசனையும் சொல்லவில்லை. அந்தத் தலைப்பில் அவர் எழுதிய கதை ஒன்று உட்பட அவரது பல கதைகள் அடங்கிய தொகுப்பு அது!!!

சரி.. சிறுகதை எழுதுவது எப்படி?

நிச்சயமாக அனுபவங்களிலிருந்துதான் கதை பிறக்கும். அதிஷா தனிமையில் இருந்து அவர் வருந்தியமாதிரியே, அவரது பழைய நண்பர் யாராவது வருத்தப்பட்டிருக்கலாம் அல்லவா என்பதிலிருந்து பிறந்ததுதான் தனிமை-கொலை-தற்கொலை என்ற கதை. அனுஜன்யா சமீபத்தில் எழுதிய, என்னை மிகக் கவர்ந்த நடையில் அமைந்த மும்பை பயங்கரம் - சூஸன் ஜார்ஜ் கதையும் நிச்சயம் அவரது அனுபவம் கலந்ததாய்த்தான் இருக்கவேண்டும். சதவிகிதத்தில் நிஜம் எத்தனை, கற்பனை எத்தனை என்பதில்தான் எழுத்தாளனின் சாமர்த்தியம் இருக்கிறது.

சரி... இப்போது ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்...


********************

உடுமலைப்பேட்டை. லதாங்கி தியேட்டர்.

படம் தர்மதுரை என்றுதான் நினைக்கிறேன். சரியாக ஞாபகமில்லை. இரண்டாவது தடவை பார்க்கப் போயிருந்தோம். நானும் என் நண்பன் ஸஸியும். (ஆர்ட்ஸ் வைத்திருக்கிறான்.. சசியை ஸஸி என்றுதான் எழுதுவான்)

எப்பவுமே, படம் முடிந்து எல்லாரும் என்னென்ன கமெண்ட் அடித்தபடி எழுந்து போகிறார்கள், அவர்கள் முகம் படத்தைப் பற்றி என்ன ரியாக்‌ஷன் செய்கிறது என்று பார்ப்பதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் என்பதால் எல்லாரும் போனபிறகு சாவகாசமாக எழுந்துபோவது வழக்கம். (அழகி படம் திருப்பூர் டைமண்டில் பார்த்தபோது, படம் முடிந்தும் ஒரு பெண்மணி ஏதோ மாதிரி அமர்ந்துகொண்டே இருக்க, கணவன் பக்கத்திலேயே அமர்ந்து தேற்றிக் கொண்டிருந்த காட்சி, படத்தைவிட கவிதை!)

அப்படி, கடைசியாக எழுந்து போகும்போது, ஒரு சீட்டில் இரண்டு புத்தகங்கள். ஸஸிதான் பார்த்தான். ‘டேய். இந்தா லைப்ரரி புக்ஸ் போலிருக்கு. நீதான் எல்லா லைப்ரரிக்கும் போவியே’ என்று என்னிடம் குடுத்துவிட்டான்.

ஒன்று தமிழ்வாணனின் சங்கர்லால் துப்பறிகிறார் என்பது ஞாபகமிருக்கிறது. இன்னொன்று ஞாபகமில்லை.

அன்றிரவே நண்பர்கள் கூடும்போது அந்தப் புத்தகங்களை எப்படி உரியவரிடம் ஒப்படைப்பது என்று கூட்டாலோசனை நடந்தது. நூலகத்திலேயே கொடுத்துவிடலாம் என்ற ஆலோசனை நிராகரிக்கப்பட்டது.

‘புக்கை தவற விட்டவர், தொலைஞ்சுடுச்சுன்னு எப்போ போய் சொல்லுவாரோ.. அதுவரைக்கும் நூலகத்துல இருக்கறவங்களும் அதை சம்பந்தப்பட்டவர்கிட்ட சொல்ல எந்த முயற்சியும் எடுத்துக்க மாட்டாங்க’ என்று நினைத்ததால் அந்த புத்தகத்தை நூலகத்தில் கொடுத்து கார்டை வாங்கிக் கொண்டு, அதிலிருக்கும் விலாசத்தில் சென்று அவரிடம் கார்டை கொடுத்தால்தான் அந்த உதவி முழுமைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அடுத்தநாள் அதேபோல, புத்தகத்தைக் கொடுத்து விலாசத்தைப் பார்த்தபோது ‘வி.ஜி.ராவ் நகர்’ என்றிருந்தது. அப்போதுதான் முளைத்திருந்தது அந்த நகர். பல பக்கம் விசாரித்து, ஈ.பி.க்கு எதிரில் என்று கண்டுகொண்டு, அந்த விலாசத்தில் போய் நின்றோம் நானும் இன்னொரு நண்பனும்.

தொலைத்த அந்த நபரின் பெயர் நினைவில் இல்லை. குமார் என்று வைத்துக் கொள்வோமே..

அங்கங்கே விசாரித்து, ‘குமார் வீடு எது.. 163ம் நம்பர் எது என்று அலைந்து அவர் வீட்டை அடைந்தோம்.

சிறிய கேட். திறந்து உள்ளே சென்று கதவைத் தட்டினோம்... அல்லது காலிங்பெல்லை அடித்தோம்.

பக்கத்திலிருந்த ஜன்னல்வழி ஒரு முகம் தெரிந்தது. சிறுவன். எட்டாவதோ, ஒன்பதாகவோ படித்துக் கொண்டிருக்கக் கூடும்.

“யார் வேணுங்க?”

“குமார் சார் வீடு இதுதானே?”

“ஆமா.. இருங்க அப்பாவைக் கூப்பிடறேன்”

உள்ளே சென்ற சிறுவன் இரண்டொரு நிமிடங்களில் திரும்ப வந்தான்.. அதே ஜன்னலில் முகம் காட்டி..

“என்னன்னு கேட்கறாரு..”

என் நண்பன் கடுப்பாகிவிட்டான்.

“கதவையே திறக்கமாட்டானுகளா? கார்டைக் குடுக்காதடா” என்று முணுமுணுத்தான். ‘ச்சும்மா இரு’ என்ற நான்...


“இல்லப்பா.. தியேட்டர்ல ரெண்டு புக்கை மறந்து வெச்சுட்டாரு உங்கப்பா. அத லைப்ரரில குடுத்து, இந்தக் கார்டை அவர்கிட்ட குடுத்துட்டுப் போகலாம்னு வந்தோம்” எனச் சொல்லவும்.. “எங்கே..” என்று அவன் ஜன்னல் வழி கைநீட்ட.. அந்த இரண்டு கார்டையும் அவன் கையில் கொடுத்தோம். வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினான்...

ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தவன்.. “அப்பா தேங்ஸ் சொல்லச் சொன்னாரு” என்று ஜன்னலைச் சாத்திவிட்டு உள்ளே ஓடிவிட்டான்!

*********************

அவ்ளோதான். இதுல என் நண்பர்கள் எல்லாரும் நீ குடுத்திருக்கக் கூடாது, அப்படி கதவையே திறக்காதவனுக்கு எதுக்கு நீ அதைக் குடுத்து உதவின?’ என்று திட்டினார்கள். எனக்கு அவர் கதவு திறக்காமல், வராமல் இருந்ததற்குப் பின்னால் என்ன இருக்கக்கூடும் என்று பலநாட்கள் சிந்தனை இருந்தது.

இதில் ஒரு சிறுகதை இருப்பது உங்களுக்குத் தெரிகிறதா?

முயன்று பாருங்களேன்...

Wednesday, December 3, 2008

ஜோக்ஸ்

எல்லாரும் மன்னிக்கணும். சபரிமலைக்கு மாலைபோடற
ஆ-சாமிகளைப் பத்தி ஒரு பதிவு எழுதிகிட்டிருந்தேன். ரொம்ப சீரியஸா இருக்கு. கொஞ்சம் அந்தக் கோவம் தணியட்டும். ஏற்கனவே மு.க - கிட்டேர்ந்து அதிகமா கோவப்படக்கூடாது ன்னு அட்வைஸ் எல்லாம் வந்துகிட்டிருக்கு. அதுனால அப்பறமா அதை வெளியிடலாம்ன்னு நிறுத்தி வெச்சுட்டேன்.

************************************

சரி... இன்னைக்கு ஒண்ணும் எழுதாம இருக்கலாம். ஆனா அதுவும் முடியல. அதெப்படி ஒரு நாளைக்கு உங்களை சும்மா விடறது? அதுனால நான் ரசிச்ச சில நகைச்சுவைகளை போட்டுத் தாக்கலாம்ன்னு ஒரு ப்ளான்.

அவசரத்துக்கு உப்புமா மாதிரி, இதுதான் நம்மகிட்ட நெறைய ஸ்டாக் இருக்கு!

**********************************

ஒரு நேர்முகத்தேர்வில்:

கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி ஓடுகிறது?

வேலைக்கு வந்த நாதாரி: டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கே.கே: யோவ்... நிறுத்து..நிறுத்து

நா: டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!

****************************

காதலி: நாளைக்கு என் பொறந்த நாள்.. எனக்கு ஒரு ரிங் தருவியா?

காதலன்: ஓ! லேண்ட்லைன்லயா.. செல்ஃபோன்லயா?

**************************
ரொம்ப குண்டான ஒருத்தர் பஸ்சுல போனாராம். ரெண்டு டிக்கெட் புக் பண்ணி, உள்ள ஏறினார். கண்டக்டர் எங்க இன்னொருத்தர்ன்னு கேட்க, எனக்குத்தான் ரெண்டு. குண்டா இருக்கறதால’ ன்னார்.

கண்டக்டர் சொன்னாராம்... “சீட்21, சீட் 37 ரெண்டும்தான் காலி. போய் ஒக்கார்ந்துக்கோங்க”

*************************

“நம்ம கலா பூகோளத்துல டரொமப் ‘வீக்’கா இருக்கா”

“அவங்கப்பா, அம்மா அவளை உலகம் தெரியாம வளர்த்துட்டாங்க”

*****************************

போலீஸ்காரர் மனைவி தன் தோழியிடம்:

“என் கணவர் வெச்சிருந்த நிஜத் துப்பாக்கியை எடுத்து என் மகன் என் நெத்திப் பொட்டைப் பார்த்து சுட்டுட்டான்”

“ஐயையோ.. அப்பறம்?”

“நல்லவேளை, நெத்திப்பொட்டை ட்ரெஸ்ஸிங் டேபிள்மேல ஒட்டிவெச்சிருந்தேன்”

**************************

மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

“மகனே, மேலத்தெரு முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”

“கரெக்டா வாங்கிக்கறேன்ப்பா”

“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா வாங்கிருக்கான்”

“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”

“எதிர்வீட்டு கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”

“ஐயையோ.. எங்கப்பா நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”


****************************

பத்திரிகை ஆஃபீஸுக்கு வந்த ஒரு பெண்..

“என் கணவர் காலமாய்ட்டார். காலமானர் விளம்பரம் போட எவ்வளவு?”

“வார்த்தைக்கு நூறு ரூபாய்”

“ப்ச்.. என்கிட்ட இருநூறு ரூபாய்தான் இருக்கு. சரி.. ஹென்றி காலமானார்’ அப்படின்னு ரெண்டே வார்த்தை போட்டுடுங்க”

பத்திரிகைகாரருக்குப் பாவமாய்த் தோன்றவே..

“சரி..உங்களுக்கு சலுகை தர்றோம். நாலு வார்த்தை எழுதிக் கொடுங்க. இருநூறு ரூபாய் போதும்”

அந்தப் பெண்மணி எழுதிக் கொடுத்தார்...

“ஹென்றி காலமானார். கார் விற்பனைக்கு..”

***************************

ரெண்டு மருமகள்கள்..

“போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார் விழுந்து செத்துப் போய்ட்டாங்க”

“ம்ஹ்ம்... என் வீட்லயும்தான் கிணறு இருக்கு.. மாமியாரும் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்”

“அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”

*******************************


ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன். அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன். அவன் பேசற மொழி தெரியல. ஒரு மந்திரியை கூப்ட்டு பேசச் சொன்னாரு ராஜா. மந்திரி ‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ன்னாரு. அவனும் பயத்துல கட கடன்னு எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..

‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்லமாட்டேங்கறான். இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’

******************************

டிஸ்கி: முதல் பாரால சொல்லிருக்கற மு.க., நம்ம முத்துலெட்சுமி கயல்விழி!

Monday, December 1, 2008

தனிமை-கொலை-தற்கொலை





நீங்கள் அலுவலத்தில் பிஸியாக பலபேருக்கு பதில் சொல்வதற்கு இடையிலோ, வீட்டில் மனைவி, குழந்தைகள் சூழ இருக்கும்போதோ, பிரயாணத்தின் கூட்டத்திலோ இந்தக் கதையைப் படிக்கிறீர்களா?

ப்ளீஸ்.. வேண்டாம். மூடிவிடுங்கள். உங்களுக்கென்று நமீதாவோ, நயன்தாராவோ வேறெந்தப் பக்கத்திலாவது காத்திருக்கக்கூடும். அங்கே செல்லுங்கள். இது வேறு மாதிரி கதை. இதைப் படிக்க நீங்கள் தனிமையாய் இருக்க வேண்டும். மெல்லிய இசை ஒலிக்கும் இரவு உசிதம். வீட்டில் மனைவி, குழந்தைகள் இன்றி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இந்தக் கதையைப் படிக்கலாம். வெறும், டிரைவர், கண்டக்டர் மட்டுமே இருக்கும் பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்தும் படிக்கலாம். யாருமற்ற இரயில் பயணத்தில் படிக்கலாம். காரணம், தனிமையை நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் என்றால் இந்தக் கதையை எழுதுபவனல்ல. அவன் நண்பர்களால் சூழப்பட்டவன். அவனுக்குக் குடும்பம் இருக்கிறது. இந்தக் கதையை எழுதவே லாயக்கில்லாதவன் அவன். அவனுக்கு எங்கே தெரியப் போகிறது என் வலி. தனிமையின் வலி. அவனை மறந்துவிடுங்கள். நான் என்றால் நான். விக்னேஷ்.

பதினைந்து வயதில் தந்தையை இழந்தவன். பதினாறு வயதில் அன்னை, அண்ணனை விட்டு சென்னை வந்தவன். அவர்களோடு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒரே ஒருமுறை ஊருக்குச் சென்று அன்னையைப் பார்த்தேன். அவளை சிதையில் படுக்கவைத்திருந்தபோது.

கடந்த பத்து வருடங்களில் நண்பனாய் எனக்கிருந்தவன் அமுதன் மட்டும்தான். என் சந்தோஷம், துக்கம், சிரிப்பு, கண்ணீர் எல்லாவற்றையும் நான் பகிர்ந்துகொள்வது அமுதனிடம் மட்டும்தான். எந்த சஸ்பென்சுக்கும் இடமில்லாமல் இப்போதே சொல்லிவிடுகிறேன். நான் அமுதனைக் கொல்லப் போகிறேன். அதுதான் கதை.

ஐயையோ கொலையா.. அதுவும் பத்து வருட நண்பனையா என்று அட்வைஸ் சொல்லப் போகிறீர்களா? வேண்டாம். அந்த நேரத்தில் உருப்படியாக வேறெதாவது செய்யுங்கள். காரணம் நான் தீரயோசித்துத்தான் இந்த முடிவெடுத்தேன்.

அவனுக்கு அந்த தண்டனையைக் கொடுக்கக் காரணம்-மிருதுளா.

மிருதுளா. என் இரண்டுவருட நண்பி. அடிக்கோடிடும் வசதி இல்லை. ஆனாலும் அடிக்கோடிட்டுப் படியுங்கள்.. நண்பி. ஏதோ ஒரு பழைய புத்தகக் கடையில் நானும், அவளும் கல்யாண்ஜியின் ஒரே கவிதைத் தொகுப்பைத் தேடி, கிடைக்காமல் நட்பாகி, பிறகு எனக்குக் கிடைத்தபோது, அவளைத் தொடர்பு கொண்டு..

ப்ச்.. விடுங்கள். பழைய கதையெல்லாம் சொல்லி போரடிக்கிறேன். இப்போது மிருதுளாவைப் பார்ப்போம்.

தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? அதுவே சடாரென்று ஒரு நொடியில் மலர்வது எப்படி இருக்கும்?

மிருதுளாவின் சிரிப்பைப் பாருங்கள். அப்படித்தான் இருக்கும்.

வெல்வெட்டைத் தொடும் உணர்வு அவளை ஸ்பரிசிக்கையில் இருக்கும். இரண்டு ஆரஞ்சுச் சுளைகளைப் பக்கவாட்டில் பார்த்தால் அவள் உதடுகள். அவள் பார்வை...

ஐயையோ.. இதையெல்லாம் சொல்வதால் அவளை என் காதலியாய் கற்பனை செய்யாதீர்கள். எங்களுடையது வெறும் நட்பாகத்தான் இருக்கிறது. ஸாரி.. இருந்தது. இறந்தகாலம். காரணம் – அமுதன்.

அவளுக்கும், எனக்குமான நட்பு உங்களால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாதது. எதுபற்றியும் அவளிடம் விவாதிக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ நான் தயங்கியதில்லை. அவளும். முன்பு நானிருந்த ஒரு வாடகை வீட்டின், ஓனர் மகளின் வயதுக்கு மீறீய வளர்ச்சி உட்பட எதையும் அவளிடம் மறைத்ததில்லை. அவளும் தன்னை வேறு கண்ணோடு பார்க்கும் சக நண்பர்களின் மனமாறுதல் உட்பட எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வாள். அதை வேறு எவரிடமும் நான் சொல்லமாட்டேன் என்ற நம்பிக்கையில். நானும் அதைக் காப்பாற்றிவந்தேன். அதனால்தான் அவள் என்னோடு அதே நட்பாக இருக்கிறாள்.. ச்சே.. இருந்தாள்.

அவளுக்கு என்மீதோ, எனக்கு அவள்மீதோ காதல் என்ற உணர்வோ, காமமோ எழவில்லை. அப்படி உணர்ந்தால் தயக்கமின்றி சொல்லலாம் என்பதே எங்கள் உடன்பாடு. ஆனால்.. ம்ஹூம்.

பழைய பேச்சிலர் அறையிலிருந்து, இப்போதிருக்கும் தனி அறைக்கு நான் குடிவந்தபோது, ஒரு மழையிரவில் அவள் வந்து என் வீட்டில் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஈர உடையுடன் இருந்தபோதும், காமம் வரவில்லை. ‘உனக்கு ஒண்ணுமே தோணலியாடா’ என்று தலைகோதிவிட்டு அவள் வெளியேறியது நேற்று போல நினைவிலிருக்கிறது.

என் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்கென்றே படைத்து அனுப்பப்பட்டவள் அவள். அப்படி இருந்த எங்களைப் பிரித்தது அவன்தான்.. அமுதன்.

மிருதுளா என்ற பெண், அதுவும் பேரழகி எனக்கு தோழியாய் வாய்த்தது என் பாக்கியம். யாருமற்ற எனக்குத்தான் தெரியும் தோழமையின் சுகம். அது பெண்ணாய் அமைந்துவிட்டால் எவ்வளவு சுகம்? அதை அவள் தந்தாள். சிலசமயங்களில் நான் யாருமற்றவன் என உணர்கையில் அவள் தோளில் சாய்ந்து அழுதிருக்கிறேன். ‘அழுடா.. அடுத்தவங்க பார்க்கறாங்கன்னு அடக்காதே. அழு’ என்று தலைகோதிவிடுவாள்.

அப்படிப்பட்டவளின் அழகை, ஒரு பீரடித்திருந்த இரவில் சிலாகித்துவிட்டேன் அமுதனிடம். அவள் ரோஸ் உதடுகளின் அழகு, அவள் வழ வழ இடை, அவள் நடை.. இன்னும் என்னென்னவோ.. எனக்குள்ளிருந்த ஆண்மிருகம் விழித்து என்னென்னவோ உளறியதை அடுத்த ஓரிரு நாளில் போட்டுக் கொடுத்துவிட்டான் அமுதன். என் தோழியிடம்.

அவள் அழகைப் பற்றி, ஏற்கனவே அவளிடம் நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். ‘போதும்டா ராஸ்கல். எனக்கு நீ புருஷனா வரப் போறதேயில்ல. அதுனால அளவுக்கு மீறி வர்ணிக்காத’ என்பாள். இப்போது அதே வரிகளை, அமுதனிடமிருந்து கேட்டதும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மற்றொருவனிடம் தன்னைப் பற்றி இப்படிப் பேசுவதை எந்தப் பெண்தான் தாங்கிக் கொள்வாள்? கொஞ்சம் கொஞ்சமாக என்னிடமிருந்து விலகி.. இப்போது சந்திப்பதே இல்லை.

அமுதன் போட்டுக் கொடுத்ததால்தான் அவள் விலகினாள் என்பதே எனக்குப் போனவாரம்தான் தெரியும். அமுதனே ஒரு பீரிரவில் உளறிவிட்டான். ‘டேய்.. நாந்தாண்டா உன்னைப் பத்தி அவகிட்ட சொல்லி பிரிச்சேன்.. இப்ப என்னாங்கற’ என்று அவன் சொன்னது அடுத்தநாள்தான் உறைத்தது. அந்த ஒரு சம்பவத்தால் மட்டும் அவள் பிரிந்திருக்க வாய்ப்பில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஏதேதோ சொல்லி அவளை என்னிடமிருந்து பிரித்திருக்கிறான். ஒரு மாதமாக அவள் சிநேகமான புன்னகையோ, கையசைப்போகூட இல்லாமல் போகிறாள். ம்ஹூம்... பெண்கள்.. பெண்கள்..!

அவன் சொன்னபோது, ஒன்றும் செய்யும் மனநிலையில் இல்லை. போனவாரம் தோன்றி, அந்த வேகத்தில் ஒரு கத்தியெல்லாம் வாங்கி வைத்து... அப்புறம் விட்டுவிட்டேன். ஆனால் அந்த வன்மம் ஒரு வாரமாக வளர்ந்து, இதோ கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மேலாக மழையில் வெளியே போகாமல், யாருடனும் பேசாமல் பித்துப் பிடித்து இருக்கும்போது – அமுதனைக் கொலைசெய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

இதைவிட்டால், வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. அவன் அறையில் தனியாகத்தான் இருப்பான். மழைபெய்து ஊரே வெள்ளக்காடாக இருக்கிறது. முடிந்தால் அவன் மூக்கைப் பொத்தி, தலையணையால் அழுத்தி மூச்சை நிறுத்திவிட்டு வெளியே தண்ணீரில் குட்டையில் போட்டுவிடலாம். இல்லையா.. கத்தியால் ஒரே குத்து. இந்த தண்ணிர் வடிந்து, அவனை எடுப்பதற்கு ஒரு வாரமாகிவிடும். அப்படியே என்னைக் கண்டுபிடித்தாலும் கவலையில்லை. ஜெயிலுக்குப் போகத் தயார். இல்லை... அவனைக் கொன்றுவிட்டு நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேனா.. தெரியவில்லை. இப்போதைக்கு அவனைக் கொல்லவேண்டும்.. அவ்வளவுதான்.



கத்தி.. கத்தி.. ஓ! இங்கே இருக்கிறது. எவ்வளவு சுலபமாகக் கிடைக்கிறது..

‘சும்மா.. ஒரு டிராமாக்கு அண்ணே..’

‘நீ ட்ராமாக்கு வாங்கு. நெசமாவே போட்டுத் தள்ள வாங்கு. எனக்கின்னாபா? துட்டக் குடு’

நல்ல நீளம். முனைக்கருகில் சுருள்.. சுருளாய்...

‘நெசமாவே போட்டுத் தள்றீன்னா.. இப்படிப் புடிச்சு, ஒரே சொருவு.. வெளில எடுக்கறப்ப அவன் கொடலை நீ பார்க்கலாம்’






வெளியே மழை வெறும் சாரலாக மாறிவிட்டிருந்தது. எந்த நேரத்திலும் மறுபடி பிடித்துக் கொள்ளும். இடுப்பளவு தண்ணீரில் சிலர் தெரிந்தனர். ஏதோ கட்சிக்காரர்களின் உதவியோடு, படகில் ஏறி அமுதன் இருக்கும் அறை நோக்கி சென்றேன்.

கத்தி இடுப்பில் உறுத்திக் கொண்டே இருந்தது.

அமுதனின் அறையை நெருங்கியபோது சூரியன் மறையத் தொடங்கியிருந்தான். அறைக் கதவை பலமுறை பலமாகத் தட்டியபிறகுதான் வந்து திறந்தான் அமுதன்.

குடித்திருக்கிறானா? அழுதிருக்கிறானா... கண்கள் சிவந்து, முகமெல்லாம் வீங்கிப் போய்..

“வா.. வாடா விக்கி.. என்ன திடீர்னு?”

“ஒண்ணுமில்ல..” – பழகியவனைக் கொலை செய்வதில் உள்ள சிக்கல் இதுதான். வந்தோமா, போட்டுத் தள்ளினோமா என்று போக முடியாது. பேச ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஐயையோ.. என்ன இது.. ஏதோ ப்ரொஃபஷனல் கில்லர் பாணியில் யோசிக்க ஆரம்பித்துவிட்டேனே..

கட்டிலுக்கருகில் இருந்த ஸ்டூலில், பிராந்தி பாட்டிலும், டம்ளரும் இருந்தது. ஊற்றிவைக்கப்பட்ட அதை குடித்தால் அவனை ஒரே குத்தில் முடித்துவிடும் தெம்பு வந்துவிடும்.

நேராக கட்டிலில் அமர்ந்து அதை எடுக்கப் போனபோது, தடுத்தான்.

“வேணாம். குடிக்காத”

“ஏன்?”

“ப்ச்.. வேணாம்னா விடேன்”

“ஏண்டா? நீ குடிச்ச டம்ளர்ல நான் குடிச்சதில்லையா?”

“அதுல விஷம் கலந்திருக்குடா” என்றவன் அடுத்தநிமிடம் ‘ஓ’வெனக் அழ ஆரம்பித்துவிட்டான்.

“நான் குடிச்ச டம்ளர்ல நீ குடிச்சதெல்லாம் மூணு வருஷத்துக்கு முந்திடா. இப்போ எங்க என்கூட வர்ற? எப்பப் பாரு மிருதுளா.. மிருதுளா.. டேய்.. ஒனக்காவது எங்கயோ அண்ணன்னு ஒருத்தன் உயிரோட இருக்கான். எனக்கு பத்துவருஷமா எல்லாமே நீதாண்டா. ஆனா ரெண்டு, மூணுவருஷமா என்கூட நீ மனசு விட்டுப் பேசிருக்கியா? நீ கூட இருக்கேன்னு, மேன்ஷனைக் காலி பண்ணி இங்கே வந்தோம். இங்க இருந்தா அவ வர சங்கடப்படறான்னு ரூமையும் மாத்தீட்ட. தனியா இருக்கறதோட கஷ்டம் தெரியுமாடா ஒனக்கு? எவ்ளோ ராத்திரி நான் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா? அப்படியே ஒன்கூட இருந்தாலும் பாதி நேரம் அவளைப் பத்திதான் பேச்சு. அதுனாலதான் அவளை வெட்டிவிட்டேன். அப்படியும் என்கிட்ட முந்திமாதிரி பேச மாட்டீங்கற. இந்த ரெண்டு, மூணு நாளா மழையில வெளியில எங்கயும் போகமுடியாம பேசறதுக்கும் ஆளில்லாம இந்த ரூம்ல அடைஞ்சிருக்கேன். அதான் முடிவு பண்ணி மழை விட்ட கேப்புல போய் வாங்கிட்டு வந்து, குடிச்சு சாகலாம்ன்னு முடிவு பண்ணினேன். என்னால முடியலடா. நான் சாகறேன். விட்டுடு”

அமுதனை அறைய கையை ஓங்கிய நான், ஏதோ வேகத்தில் என்னையே பலமாக மாறி மாறி அறைந்து கொள்ள.. ஏனென்று புரியாமல் தடுக்கப் பாய்ந்தான் அவன்.


(புகைப்படங்கள்-நன்றி:

http://stillintheworld.blogspot.com/2008/02/blog-post_20.html)

www.terminally-incoherent.com)

அவியல் 01.12.08 – ஸாரி லக்கிலுக்!




முதலிலேயே சொல்லிவிடுகிறேன். தலைப்பு சூடான இடுகையில் இடம்பெற கொடுக்கப்பட்டதேயன்றி வேறொரு மண்ணாங்கட்டியும் இல்லை.

**********************

வாரணம் ஆயிரம் பார்த்தேன் நேற்று. எனக்குப் படம் பிடித்திருந்தது. பாடல்களின் பிக்சரைசேஷனில் தற்போதைய இயக்குனர்களில் கௌதம் மேனன் ‘த பெஸ்ட்’ என்று அடித்துச் சொல்லலாம்.

லக்கிலுக்கின் விமர்சனத்தில் ஷமீரா ரெட்டி சரியில்லை என்று எழுதியிருந்ததற்கு ‘ஆமாம்’ போட்டிருந்தேன். அது ஸ்டில்களைப் பார்த்து. ஆனால், Sorry Lucky... படத்தில் பார்த்தபோது பிடித்திருந்தது. மாநிறம், கோதுமை மாதிரி வழு வழு உடல்.. நல்ல உயரம். ஒரு மார்க்கமான பார்வை. செழித்த உதடுகள். என் ஃபேவரைட் ஃபிகர் திவ்யா ஸ்பந்தனா-வுடன் போட்டி போடும் அளவுக்கு இருந்தார் என்றால் மிகையில்லை!

படத்தில் சரோஜாதேவி ஸ்டைலில் வரும் சிம்ரனும் என்னைக் கவர்ந்தார். (படிக்கற சரோஜதேவி அல்ல.. பார்க்கிற சரோஜாதேவி)

அப்புறம் பாடல்களில், சி.டி.வந்தபோது கேட்கையில் என்னைக் கவராத ‘அஞ்சலை’ பாடல் (இது கௌதம் மேனன் படப் பாடலாவே இல்லை என்றிருந்தேன்) அரங்கில் பலத்த கைதட்டலைப் பெற்று முன்னிலையில் இருந்தது. சூர்யாவின் ஆட்டமும் அபாரமாக இருந்தது.

ஈஷா யோகா சார்பாக ஆண்டு தோறும் நடக்கும் மகாசிவராத்திரி விழாவிற்குச் செல்வதுண்டு. அப்போது சத்குரு ஜக்கி வாசுதேவின் உரையின் போது பலர் TRANCE-க்கு செல்வதைக் கண்டிருக்கிறேன். அப்போது அவர்கள் தங்களை மறந்து இடும் கூக்குரல், ஆட்டம் ஆகியவற்றை இந்தப் பாடலின் போது தியேட்டரில் கண்டேன். விசாரித்தபோது, பலர் அதில் குடித்திருந்தனர். ஆனால் ஒருவர் குடிக்காமலே தன்னை மறந்து கத்திக் கொண்டும், அழுதுகொண்டும் இருந்தார். ‘காதல் தோல்விபோல’ என்று பேசிக்கொண்டனர்.

படம் முடிந்து வரும்போது ஒரு விஷயத்திற்காக மிகவும் வருந்தினேன்.. கௌதமும், ஹாரிசும் பிரிந்ததற்கு.

************************

மும்பையில் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை மீடியாக்கள் ஒளிபரப்பியது குறித்து எதிர்க்குரல்கள் நிறைய வருகிறது. ‘அப்படி ஒளிபரப்பியது தவறு, உள்ளே உள்ள தீவிரவாதிகளுக்கு செய்தி போய்க்கொண்டே இருக்காதா’ என்று பலர் வாதிடுகிறார்கள்.

அது உண்மையானால், மீடியாவைக் கேள்வி கேட்க எவருமே இல்லையா? அப்படி அவர்கள் ஒளிபரப்பியதை, அரசு தடுக்காதது ஏன்?

இதுகுறித்து தெரிந்தவர்கள் யாராவது விளக்கம் கேட்டு எழுதினால் பரவாயில்லை.

*********************

மும்பை பயங்கரத்தின்போது ஆங்கில சேனல்களில் வந்த எஸ்.எம்.எஸ்-களில் என்னைக் கவர்ந்த இரண்டு..

# எங்கே அந்தப் பால்தாக்கரே? வந்து மும்பை மக்களைக் காப்பாற்றட்டுமே.. மும்பைக்கர் அல்லாத கமாண்டோக்களை அனுப்பிவிடலாமா? (இந்த SMS-தான் இப்போது பல விவாதங்களை ஆரம்பித்திருக்கிறது!)


# வி.ஐ.பி-க்களுக்குக் கொடுத்துள்ள Z பிரிவு பாதுகாப்பை நீக்கி, இனி சாமானிய மக்களுக்குக் கொடுங்கள். நாட்டில் அவன் நிலைமைதான் படுமோசமாய் இருக்கிறது!

*****************************

NDTV-யின் பர்காதத் – என்னைக் கவர்ந்த ஒரு ரிப்போர்ட்டர். இந்த சம்பவங்களின்போது, வீட்டுக்கே போகாமல் குரல் கம்ம பேசிக்கொண்டே இருந்தார்.

பர்காதத் நேற்றிரவு முமப் பயங்கரம் குறித்து ஒரு கருத்துரையாடல் (TALK SHOW) நடத்தினார். டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் எடிட்டர், நெஸ் வாடியா (பாம்பே டையிங்), எம்.என். சிங் (முன்னாள் போலிஸ் கமிஷன்ர்) ஆகியோருடன் சிமி கேர்வால் (டி.வி. நடிகை), மற்றும் VTV-யின் வீடியோ ஜாக்கி/காம்பியரர் ஆகியோர் கலந்து கொண்டு ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தினர்.

நான், நம் டி.வி. நடிக, நடிகையர், காம்பியரர் குறித்து நினைத்துப் பார்த்தேன்..


ஜோடி நெ.1, காமெடி டைம்களில் பிஸியாக இருக்கிறார்கள்.


வாழ்க.. வாழ்க!!

*************************

கலைஞர் டி.வி-யின் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியில் காதல் படத்தில் நடித்த சுகுமார் சிறப்பு விருந்தினராக கால்மேல் கால் போட்டு உட்கார, ஜட்ஜாக இருக்கும் டெல்லி கணேஷ் அவரிடம் ‘இவரைப் பத்தி என்ன நெனைக்கறீங்க..’ என்று கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்..

கடுப்பாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரை நாகேஷூக்கு இணையான நடிகர் டெல்லிகணேஷ்.

அதேபோல, ஒரு பாடல் பாடியவர்கள் சூப்பர் சிங்கர் ப்ரோக்ராம்களுக்கு நடுவர்களாகவும், ஒரு ஆட்டத்தில் ஃபேமஸானவர்கள் டான்ஸ் போட்டிகளுக்கு நடுவர்களாகவும் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போதும் எரிச்சலாகத்தான் இருக்கும். இதுபற்றி ஒரு தனிப்பதிவு எழுதி, வெளியிடவைத்திருந்தேன். அன்றைக்குப் பார்த்து ஒரு ஃபோன்கால் வந்தது.. ஒரு வலைப்பதிவு நண்பரிடமிருந்து..

“கிருஷ்ணா.. ******* அவரோட ப்ளாக்ல சிறுகதைப் போட்டி வைக்கிறாராம். நடுவரா *********ஐயும், உங்களையும் இருக்கச் சொல்றாங்க. சம்மதமா?”

அதற்குப் பிறகும் அந்தப் பதிவை வெளியிட நான் என்ன கேனையனா?.

*****************************

ஒரு பிரபலத்திடமிருந்து எனக்கு தினமும் வரும் SMS மிகுந்த எதிர்பார்ப்பைத் தரும். இன்னைக்கு என்ன அனுப்புவார் என்று. சமீபத்தில் அவர் அனுப்பியதில் எனக்கு மிகப் பிடித்த இரண்டு..

“CLEVERNESS IS WHEN YOU BELIEVE ONLY HALF OF WHAT YOU HEAR. BUT BRILLIANCE IS WHEN YOU KNOW WHICH HALF TO BELIEVE” – WARNER

சட்டக்கல்லூரி, மும்பை தீவிரவாதம் எல்லாவற்றிலும் மேலே கண்ட Brilliance மிகமுக்கியம்.

இன்னொன்று..

‘தீவிரவாதியை மன்னிப்பது எங்கள் கையில் இல்லை. அதை கடவுள்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், அவனைக் கடவுளைச் சந்திக்க ஏற்பாடு செய்வது எங்கள் கடமை’ – இந்திய இராணுவம்

********************

இந்தவாரக் கவிதை..

நாகரிகம்

கடன் வைத்துக் கொள்வதில்லை – இந்தக்
கன்னிப் பெண்கள்
தினந்தோறும்
காதல்பையன்கள் அனுப்பும் பூக்களை
சேர்த்துவைத்திருந்து
மொத்தமாகத் திருப்பித் தந்துவிடுகிறார்கள்


மாலையாகவோ மலர்வளையமாகவோ

-ரமேஷ் வைத்யா