Friday, December 30, 2011

காலையில் வாங்கிய ப்ரகாசமான பல்ப்

காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் வந்தாள்.

“டாடா ஸ்கை ஷோ கேஸ்ல ரா-ஒன் போட்டிருக்காங்க. ஆர்டர் பண்ணீட்டு போங்க. நாங்க பார்க்கணும்”

தெரியாதவர்களுக்கு: டாடா ஸ்கை டிஷ் இணைப்பில், ஷோ கேஸ் என்று புதிய படங்கள் காண்பிப்பார்கள். ஒரு படம் 50ரூ, 75 ரூ என்று நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். நாம் பதிவு செய்திருக்கும் அலைபேசியிலிருந்து, அந்த ஷோ கேஸ் திரையில் காண்பிக்கப்படும் குறியீட்டு எண்ணை, அவர்களுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினால், அது சேர்ந்த அடுத்த நொடி, நம் தொலைக்காட்சித் திரையில் அந்தப் படம் ஒளிபரப்பாகும். ஒரு நாளைக்கும் மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். நமக்கு வசதிப்பட்ட நேரம் பார்த்துக் கொள்ளலாம். என் இணைப்பிற்கு வருடத்திற்கு 12 படங்கள் இலவசம். பெரும்பாலும் இந்திப் படங்கள்தான்.

நான் டாடா ஸ்கையில் அந்த சேனலை ஆன் செய்து, அதில் குறிப்பிட்டிருந்த குறியீட்டு எண்ணை, டாடா ஸ்கைக்கு எஸ்ஸெம்மெஸினேன். அப்படி அனுப்பும்போதே, கொஞ்சம் பெருமையாக “பாரு.. இந்த மெசேஜ் டெலிவரி ஆச்சுங்கறதுக்கு அடையாளமா என் மொபைல்ல டொய்ங் சவுண்ட் வர்றதுக்கு முந்தி, சேனல்ல படம் வரும்பாரு” என்றேன்.

ம்ஹும். என்னமோ வரவில்லை.

வழக்கமாக அடுத்த நொடியே வரும்.. இதென்ன இப்படின்னு ஐந்து, பத்து நிமிடங்களுக்கு காத்திருந்தேன். அலுவலகத்திற்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது.

என் மகள் என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள். ‘என்னமோ சொன்னீங்க?’ என்றது அவள் கண்.

அவ்வளவுதான். நாமதான் ஏற்கனவே இந்த கஸ்டமர் கேர் ஆளுகன்னாலே ஆய் ஊய்னு திட்டுவோமே… இதென்ன இப்படிப் பண்றாங்க’ன்னு எனக்கு கோவம் வேற வந்துச்சு.

அடிச்சேன் டாடா ஸ்கை கஸ்டமர் கேர்-க்கு.

“ஹலோ.. குட் மார்னிங்” – அந்தப்புற அழகி குரல்.

“வாட் குட்மார்னிங்? ஐ’ம் டோட்டலி டிஸ் அப்பாய்ண்ட் வித் யுவர் சர்வீஸ்” – நான். கோவமா இருக்கேனாம்.

“ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் சார்” அப்படி ஒரு குழைவு குரல்ல. பாவமாத்தான் இருந்துச்சு. என்னன்னே சொல்லாம இப்படி எகிறுனா என்னதான் பண்ணுவாங்க பாவம்.. அதுக்காக சும்மா விடமுடியுமா? கஸ்டமர்!!!

சொன்னேன்: “ஷோ கேஸ்ல ஒரு படம் ஆர்டர் பண்ணினேன். வழக்கமா எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்ச அடுத்த நொடி சேனல்ல படம் வந்துடும். இப்ப ஆர்டர் பண்ணி கால் மணி நேரமாச்சு. இதுவரைக்கும் வர்ல”

மறுபடியும் அந்தப் பொண்ணு மன்னிக்கச் சொன்னாங்க. சில விபரங்கள் வேணும்னாங்க. “யெஸ் டெல் மீ”ன்னேன் கடுமையான குரல்ல. கோவமா இருக்கோம்ல!

“ஆம் ஐ ஸ்பீக்கிங் டு கிருஷ்ணகுமார்?”

“ஆமா”

“யுவர் டாடா ஸ்கை ஐடி ஈஸ் 104142……….?”

“ஆமா”

“யு ஆர் காலிங் ஃப்ரம் யுவர் ரெஜிஸ்டர்ட் மொபைல் நம்பர். ஆம் ஐ ரைட்?”
‘ஆமாம்மா ஆமாம்’னு கத்தினேன். கீழ வந்து பார்த்த ஹவுஸ் ஓவர் “எப்ப வீட்டைக் காலி பண்ணப் போறீங்க’ன்னு கண்லயே கேட்டுட்டுப் போனார்.

அந்தப் பொண்ணு, இந்த விபரமெல்லாம் சொன்னதுக்கு நன்றி சொன்னாங்க. ‘ம்ம்.. சரி சரி.. எனக்கு என்ன நீதி வழங்கப் போறீங்க?’ங்கற பாணில ‘இட்ஸ் ஓகே..”ன்னு முறுக்கீட்டு “மொதல்ல சாதாரண டாடா ஸ்கை வெச்சிருந்தப்ப உடனே படம் வந்துடும். இப்ப டாடா ஸ்கை ப்ளஸ். ஹும்! ஆக்சுவலி இது டாடா ஸ்கை மைனஸ்’ன்னுதான் சொல்லணும்’ன்னேன்.

கலாய்ச்சுட்டேனாம். சொன்னது அந்தப் பொண்ணுக்கு சுருக்னிருக்கும். மறுபடியும் இடைஞ்சலுக்கு வருத்தப்பட்டாங்க. .

சிஸ்டம்ல டீடெய்ல்ஸ் பார்த்திட்டிருந்தாங்கபோல. பார்த்துட்டு கேட்டுச்சு.

“நீங்க ரா-ஒன் படம் ஆர்டர் பண்ணீருக்கீங்க. கரெக்ட்?”

“ஆமாம்”

“உங்க ரெஜிஸ்டர்ட் மொபைல்லேர்ந்து எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்சிருக்கீங்க.. கரெக்ட்?”

‘உஸ்ஸ்…. முடியலடா’ன்னு நினைச்சுட்டே ஆமாம்னேன்.

“டிவி ஆன்ல இருக்கா சார்?”

“ஆமாம். ஆன்லதான் இருக்கு..”

“ஷோ டைம் என்ன போட்டிருக்கு சார் அந்த ஷோ கேஸ் சேனல்ல”

“எத்தனை கேள்விதான் கேட்பீங்க? இண்டர்வ்யூ பண்றீங்களா? இட்ஸ் டூ மச்’ன்னு கடுமையா சொன்னேன். நாம யாரு! கஸ்டமர். இப்படித்தான் நம்ம உரிமைக்காக போராடணும்.

“சாரி சார். கேன் யூ டெல் மி த ஷோ டைம் விச் ஈஸ் ஷோயிங் இன் யுவர் சேனல்?”ன்னாங்க.

மறுபடி கோவமா சொன்னேன்” “9 மணின்னு போட்டிருக்கு”

“நாவ் வாட் ஈஸ் த டைம்சார்?”

“எட்டேகாலாச்சு. அதுக்கென்ன?”ன்னேன்.

“தட்ஸிட் சார். அவர் ஷோ ஸ்டார்ட்ஸ் அட் 9 ஏ.எம் சார். இன்னும் முக்கால் மணி நேரத்துல படம் வரும் சார்”னு சொல்லீட்டே ‘எனிதிங் கேன் ஐ ஹெல்ப் யூ சார்”ன்னுச்சு.




எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வழிஞ்சு ஸாரி சொல்லீட்டு ஃபோனை கட் பண்ணீட்டேன்.

அங்க, அந்த கஸ்டமர் கேர் பொண்ணு பக்கத்து சீட்ல இருக்கற ஃப்ரெண்டுகிட்ட சொல்லீட்டிருப்பாங்க:

‘அவ்ளோ தெளிவா சேனல்ல ஷோ ஸ்டார்ட் டைம் 9 மணின்னு போட்டிருக்கோம். அப்றமும் கூப்ட்டு கேட்கறான் கேனைப்பய. இந்த லட்சணத்துல ப்ளஸ், மைனஸுன்னு கலாய்க்க வேற செஞ்சான். இவனுகளையெல்லாம்….”

புறப்படறப்ப பைக் ரிவர்வ்யூ மிர்ரர்ல என்னைப் பார்த்து நானே கேட்டுகிட்டேன்:

‘இந்த அவமானம் உனக்குத் தேவையா?’


.


Wednesday, December 28, 2011

அவியல் 28.12.2011

லகம் அழியாமல் எப்படி சுழல்கிறது? நாட்டில் - பெரும்பாலும் -குறித்த நேரத்தில் மழை பொழிந்து நாடும் நாட்டு மக்களும் எப்படி சுபிட்சமாக இருக்கிறார்கள்? என்னதான் ஒருபுறம் இயற்கை சீற்றங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும், பேராபத்துகளேதுமின்றி அதது அதனதன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது.. இதெல்லாம் எப்படி என்பதற்கு நேற்றெனக்கு விடை கிடைத்தது.

அது என்ன என்பதைக் கடைசி பத்தி படித்து அறிந்து, கொல்லவும். (எ.பி.அல்ல)

-----------------

மூணு, நண்பன், ராஜபாட்டை, கழுகுன்னு போனவாரம் பூரா இசை வேட்டைதான். ஆங்.. வேட்டை வேற.. அத விட்டுட்டேன் பாருங்க..இந்த அஞ்சுல மூணு யுவன்.

என்னது…. மூணு அனிருத்-தா? ஹலோ.. அஞ்சு படங்கள்ல மூணு படம் யுவன் இசைன்னு சொல்றேன்.

அதுல ராஜபாட்டை ‘பொடிப்பையன் போலவே’, ‘பனியே பனிப்பூவே’-வை விடவும் ‘வில்லாதி வில்லன்கள்’ செம ரெட்ரோ சாங். அதோட ட்ரம்ஸுக்காக அத கேட்டுட்டே இருந்தேன்.

வேட்டைல ‘வெச்சுக்கவா உன்னை மட்டும்’ ம்யூசிக்ல தொடங்கி, ’ஆறு’ படத்துல வர்ற ‘சோடா பாட்டில் கைல’ பாட்டோட மெட்டுல வர்ற ‘பப்பபப்பா பப்பபா” நல்லாருக்கு. இன்னொரு சுவாரஸ்யம்: இந்தப் படத்துல வர்ற பாட்டோட ஆரம்பமெல்லாமே கவனிச்சீங்களா? தம் தம் தம் / டம்ம டம்ம டம்மா / பப்ப பப்ப பப்ப்பா / தையத் தக்கா தக்கா - ன்னு ஒரே மாதிரி இல்ல?

யுவன் ம்யூசிக்ல வந்த இந்த மூணு படத்துலயும் கழுகுதான் பெஸ்ட். எல்லாமே நல்லா இருக்கு. (அல்லது நல்லா இருக்கற மாதிரி இருக்கு) யுவன் குரல்ல ‘பாதகத்தி கண்ணுபட்டு’ டிபிகல் யுவன் சாங்! ‘ஆத்தாடி மனசுதான்’, இளையராஜா பாடல் மாதிரியான மெலடி. (கார்த்திக் ராஜா குரல்)

3. அனிருத் கொலவெறியோட காணாமப் போற ஆளில்லைன்னு நினைக்கறேன். எல்லா பாட்டுமே நல்லாத்தான் இருக்கு. கம் ஆன் கேர்ள்ஸ், இதழின் ஓரம் எல்லாமே. கொலவெறி நான் கேட்கவே இல்லை. சலிச்சுட்டுது. மோஹித் சௌகான் & அனிருத் சேர்ந்து (யுவன் ஸ்டைல்ல) பாடின போ நீ போ – வாவ் ரகம். நிச்சயமா கேளுங்க.

நண்பன்: ஹாரிஸ் –சங்கர் கூட்டணி எப்பவும் போலவே ஏமாத்தல. அதுவும் அஸ்க லஸ்கா – அஸ்கா! விஜய் ப்ரகாஷ் - சின்மயி!

சின்மயியை விட, விஜய் ப்ரகாஷ் பாடறப்ப அந்த ‘சிந்தா சிந்தா / ப்யாரோ ப்யாரோ-வுல ஒரு துள்ளல் தெறிக்குது பாருங்க.. சூப்பர்!

இந்தப் பாட்டோட வரிகள்... இந்த மாதிரி எழுதறப்பதான் ஒரு கவிஞர் தன்னோட இடத்தை கெட்டியா பிடிச்சுக்கறார். வரிகளை கவனிச்சு, ரசிக்கற என்னை மாதிரி ஆனவங்களுக்கு மதன் கார்க்கியோட வரவு – வரம். சும்மா இல்லாம, பல மொழிகள்ல காதல்ங்கற வார்த்தையை கோர்த்து எழுதிருக்கற இந்தப் பாட்டுல

“முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே..
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்” - அபார கற்பனை! (இப்படிச் சொல்லிக் குடுத்திருந்தா ஜ்யாமெண்ட்ரில ஆஹா ஓஹோன்னு மார்க் வாங்கீருப்பேனே..)

அதே பாட்ல ரெண்டாவது சரணத்துல வர்ற

‘புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே’ -

வாவ்!

பதினாறு பதினாறா பல அடிகள் தாண்டப்போகுது இந்தக் குட்டி!

----

போன வாரம் ஒரு பிரபலத்தை அழைத்தேன்.

“பிஸிங்களா.. பேசலாமா? ஜி.நாகராஜன் படிச்சிட்டிருக்கேன். உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு”

“இல்ல.. சொல்லு பரிசல். விகடனுக்காக நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை கேட்டிருக்காங்க. எழுதிட்டிருந்தேன்’ என்றார்.

“ஓ! சூப்பர்ங்க” என்றுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்டார்: “சரி பரிசல்.. நீ எப்ப நட்சத்திர எழுத்தாளரா மாறப்போற”

அன்னா ஹசாரே, ஆஸ்திரேலியா டெஸ்ட், இளையராஜா இசைவிழா என்று அவர் கவனத்தை திசை திருப்பிப் பேசிவிட்டு வைத்துவிட்டேன்.

கிறிஸ்துமஸ் டைம். ஒரு நல்ல நட்சத்திரமாக வாங்கி வீட்டு முன் மாட்டி நட்சத்திர எழுத்தாளராகியே தீருவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

--

விஜய் டிவி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- நிகழ்ச்சிக்காக சூர்யா கேட்கும் கேள்விகள் அடடா.. அபாரம். இதுபற்றி ட்விட்டரில் போட்டுக் கிழிக்கப்பட்டது. இப்படிக் கூட கேட்பார்கள் என்று. அவற்றில் நானெழுதிய சில கேள்விகள்:

சமீபத்தில் ஒன்-டேவில் இரட்டை சதம் அடித்த வீரர்
1) விஸ்வநாதன் ஆன்ந்த் 2) மைக் டைசன் 3) சேவக் 4) பிடிஉஷா

ஜனகனமண என்பது நம்
1) தேசியப் பறவை 2) தேசியக்கொடி 3) தேசிய விலங்கு 4) தேசிய கீதம்

சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட உலக அழகி
1) கொல்லங்குடி கருப்பாயி 2) ஐஸ்வர்யா ராய் 3) சௌகார் ஜானகி 4) பரவை முனியம்மா


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயற்பெயர்
1) சாந்தி 2) பூந்தி 3) காந்தி 4) சிவாஜிராவ் கெய்க்வாட்

இரட்டை ஆஸ்கார் வாங்கிய தமிழன் / இசையமைப்பாளர் யார்?
1) கே.ஆர்.விஜயா 2) ஏ.ஆர்.ரஹ்மான் 3)எம்.ஆர்.ராதா 4) ஜி.ஆர்.தங்கமாளிகை

தமிழக ஆட்சி மாற்றத்தில் தன்னை அணில் என்று விளித்துக் கொண்ட நடிகர்
1) என்னத்தே கண்ணையா 2) டாம்க்ரூஸ் 3) ஜாக்கிஜான் 4) விஜய்

ஜெயலலிதாவால் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழி பெயர்
1) சசி 2) பசி 3) குஷி 4) மஷி

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த படம்
1) பாட்ஷா 2) முத்து 3) படையப்பா 4) தசாவதாரம்

--------------------


நேற்று மதியம் ஒருவர் அழைத்தார்.

“பரிசல்.. ஏன் இப்பல்லாம் எழுதறதே இல்லை?”

வழக்கம் போல நான் அசடு வழிந்ததை, அந்த அழைப்பு வீடியோ காலிங் அல்லாததால் அவரால் பார்க்க முடியவில்லை.

“இது ரொம்ப தப்பு பரிசல். நீங்கள்லாம் எழுதாம இருக்கறது ரொம்பவே தப்பு. ஒரு கட்டத்துக்கு மேல நிறுத்திடறீங்க. நானும் உங்க பழைய போஸ்ட் ஒவ்வொண்ணா எத்தனை நாள்தான் படிக்கறது?” என்று கேட்டார். பாவமாகத்தான் இருந்தது. என்னாலேயே அதில் பலவற்றைப் படிக்க முடிவதில்லை.

“இல்லைங்க.. வேலை..” என்று ஆரம்பிக்கப் போனவனை ஒரு அதட்டலாக இடைமறித்தார். “அதெல்லாம் சோம்பேறிக சொல்றது பரிசல்” (அப்பறம் நான் யாரு? ரொம்பச் சுறுசுறுப்பானவனா? அதுசரி!) “எஸ்.ரா, ஜெ.மோ இவங்களையெல்லாம் எடுத்துக்கோங்க. அவங்களுக்கு இல்லாத வேலைப்பளுவா உங்களுக்கு இருந்துடப் போகுது? அவங்கள்லாம் எவ்ளோ படிக்கறாங்க.. எவ்ளோ உலகப்படங்கள் பார்க்கறாங்க.. அவங்க எழுதறதில்லையா?”

“அவங்க கூட என்னை ஒப்பிடறதா..” என்று கேட்கவும் மறுபடி பொங்கினார்.

“அப்படி ஒரு நெனைப்பு வேறயா? அவ்ளோ பிஸி ஷெட்யூல்ஸ் இருக்கறவங்களே எழுதறப்ப உங்களுக்கென்ன கேடுன்னு சொல்ல வந்தேன்” என்றவர் “கண்டிப்பா வாரம் ரெண்டு மூணாவது எழுதுங்க பரிசல்.. ஆமா சொல்லீட்டேன்” என்று என் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார்.

நான் எழுதணும்னு ஒரு ஜீவன் இப்படிக் கிடந்து துடிக்கும்போது, உலகம் சுழலாம என்ன பண்ணும்!


---

Tuesday, December 20, 2011

சவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா

ரு வாரம் முன்பு அழைத்தார் ஒரு நண்பர்:

“பரிசல்.. உங்க ப்ளாக் ஐடி என்ன?”

“parisalkaaran.com” என்றேன்.

“அது வெறும் சவால் போட்டிக்குன்னு தாரை வார்த்துட்டீங்கன்னு நெனைக்கறேன். எந்த வெப்ல எழுதறீங்க இப்ப”

என் வலைப்பக்கத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. ஒரே சவால் போட்டி அறிவிப்பு, விளக்கம், முடிவுகள் என்று.. அந்த வகையில் இன்றைக்கும் அதேதான். :)

18.12.2011 ஞாயிறு அன்று சென்னை டிஸ்கவரி புக் பேலசில் சவால் சிறுகதைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா யுடான்ஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற வருடம் போலவே கூரியரில் அனுப்ப உத்தேசித்திருந்த வேளையில் யுடான்ஸ் அதிபர்கள் கேபிள் சங்கரும், ஜோசப் பால்ராஜும் இதை ஒரு விழா போல ஏற்பாடு செய்து அளிக்கலாம் என்று முன்வந்தனர். அதன்படி சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் எளிதே நடத்த திட்டமிட்டிருந்தோம்.

விழாவுக்கு இயக்குனர்கள் நவீன், பத்ரி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து அசத்தினார் கேபிள். அறுபதுக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தனர்.

இயக்குனர் பத்ரி பதிவர்களின் விமர்சனங்கள் – கதைகள் திரைத்துறையால் கவனிக்கப்படுவதாகச் சொன்னார். இயக்குனர் நவீன், தான் நிகழ்ச்சி நடந்த டிஸ்கவரி புக் பேலஸை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை தன் பேச்சில் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் அடுத்த படத்தில் பதிவுலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆறு பெண் கவிதாயினிகளுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைத் தருவதாய் சொன்னபோது அரங்கம் கைதட்டல்களால் நிறைந்தது.

இரண்டு வருடங்களிலும் சவால் சிறுகதைப் போட்டிக்கு நடுவராய் இருந்த அப்துல்லா, போட்டி மற்றும் சிறுகதைகளைப் பற்றி சிற்றுரை ஆற்றினார்.

விழாவில் என்னால் மறக்க முடியாத இரண்டு அம்சங்கள். நான் மிகவும் மதிக்கும் ரமேஷ் வைத்யா, ராஜசுந்தர்ராஜன் இருவரின் வருகையும் வாழ்த்துகளும்.

ரமேஷ் வைத்யா நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பே வந்திருந்து, இறுதிவரை அமர்ந்து சிறப்பித்தார். பதிவர்கள் திடீரென ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்களை எல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததை ஆதாரத்தோடு சொன்னார். முடிவில் ‘இந்தப் போட்டியை நடத்திய என் தம்பிகளுக்கு ஆசிகள்’ என்றது நெகிழ்ச்சி.

அடுத்தவர் எழுத்தாளர் ராஜசுந்தர்ராஜன். நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் நாடோடித்தடம் (தமிழினி வெளியீடு) புத்தகத்தின் ஆசிரியர். படிக்க ஆரம்பித்த்தில் இருந்து பலபேரிடம் அந்தப் புத்தக்கத்தில் அவர் பயன்படுத்தியுள்ள தமிழ் குறித்துப் பேசிவருகிறேன். அத்தனை தமிழ் வார்த்தைகள். சென்னையில் அவரை சந்திக்க முடியுமா என்றெல்லாம் கேட்டிருந்தேன். அவர் நிகழ்ச்சிக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் நிகழ்ச்சியை வாழ்த்தியும், எழுதுவது குறித்தும் ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியபோது ‘நான் எழுதிய எல்லா வார்த்தைகளும் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன’ என்றார். இருந்தாலும் அவற்றைப் பொருந்தப் பல இடங்களில் பயன்படுத்தியதொரு புத்தகத்தைப் படித்த மகிழ்வில் அவருக்கு நன்றி சொன்னேன்.

டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன் அவர்களுக்கு ஸ்பெஷலாக நன்றிகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இடம் தந்ததோடு, வெற்றியாளர்களுக்கு ரூ.1220 மதிப்பிலான புத்தகங்களை அவர் சார்பில் பரிசாக அளித்தார். (அந்த சுக்குகாபி அருமை நண்பரே!)

இறுதியில் நானும் ஆதியும் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுபெற்றது.


ரூ.3000 மதிப்பிலான புத்தகங்கள் என்று ஆரம்பித்து நடுவரான அனுஜன்யா, அப்துல்லா ஆகிய பலரின் பங்களிப்பின் காரணமாக ரூ.7000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் பெற்றுக் கொண்டவர்களுக்கு போக, மீதிப் பேருக்கு கூரியரில் அனுப்பப்பட்டது. விழாவும், போட்டியும் சிறப்புற நடைபெற நடுவர்கள், யுடான்ஸ், டிஸ்கவரி, இயக்குனர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.


விழா குறித்த பதிவு, படங்களுடன் ஆதியில் வலையில் பதிவேற்றப்படும். காத்திருங்கள்.

.

Tuesday, December 13, 2011

சவால் சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு விழா

ர் ஆர்வத்தில் ஆரம்பித்த சவால் சிறுகதைப் போட்டி, இரண்டாம் வருடமாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சென்ற வருடம் போலவே பார்சலில் அவரவர் முகவரிக்கு அனுப்பலாம் என்று உத்தேசித்திருந்த போது, யுடான்ஸ் -லிருந்து கேபிள் சங்கர் அழைத்து ஒரு விழாவாக ஏற்பாடு செய்து அதில் பரிசளிக்கலாம் என்று சொன்னார்.

அதன்படி, வருகிற டிசம்பர் 18ம்தேதி (ஞாயிறு) மாலை ஆறுமணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலசில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் சிறுகதைப் போட்டி குழுவினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.


இந்த அழைப்பை விடுக்கும் நேரத்தில், நடுவர்களாகப் பங்காற்றிய ஸ்ரீதர் நாராயணன் - அனுஜன்யா - எம்.எம்.அப்துல்லா மூன்று பேருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இவர்கள் முடிவைச் சொல்வதற்கு நான்கு நாட்கள் முன்னிருந்து எடுத்துக் கொண்ட சிரத்தையான விஷயங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் எல்லாமே எனக்கு ஒரு பாடமாக இருந்தன. முடிவைப் பொறுத்தவரை நானோ - ஆதியோ தலையிடவில்லை. ஆனால் ஒரு பார்வையாளர்களாக இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை வியந்து கொண்டே இருந்தோம். மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றியை அவர்களுக்கு பார்சல் செய்து கொள்கிறேன்!


சவால் சிறுகதைப் போட்டி 2011 - பரிசளிப்பு விழா
நாள்: 18.12.2011
நேரம்: மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா)
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்


விழாவில் கலந்து கொண்டு ஊக்குவிக்க பதிவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு:

ஆதி: 97890 66498
கேபிள் சங்கர்:98403 32666


.