Saturday, March 16, 2013

பரதேசி - நியாயம்ம்மாஆஆஆஆரேஏஏஏஏஏஏ...!



ரதேசி திரைப்படத்தின் விமர்சனத்தையெல்லாம் எழுதுமளவு கொஞ்சம் கூட அருகதையெல்லாம் இருக்கிறதா எனக்கென்று தெரியவில்லை. பாலா என்கிற படைப்பாளி இன்னும் என்னை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எனக்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்காது. ஆனால்- பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தாண்டி, பாலா எதைப் படைத்தாலும் பார்த்துக் கொண்டாடுவேன். பரதேசியும் அப்படியே.

கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இந்நேரம். அதைக் காட்சிப்படுத்திய விதம் பாலாவுக்கு மட்டுமே வாய்க்கிற வித்தை. இடைவேளையில் அந்த ஒற்றைக் கை, அசைத்து அழைக்கியிலேயே அழவைத்துவிடுகிறான் மனுஷன். இடைவேளைக்குப் பின், தொடரும் காட்சிகளில் அறைகிறது உண்மைகள். 

அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் கருத்தகன்னியாக நடித்திருக்கும் நடிகை, அவர் கணவனாக நடித்தவர், அதர்வாவின் பாட்டி என்று எல்லோரையும் நடிக்க வைத்தவிதத்திலேயே ‘அடிக்கிறாரா பாலா’ என்று விமர்சித்தவர்களையெல்லாம் அடித்துவிட்டார். கொட்டடித்தபடி ‘நியாயம்மாஆஆஆரேஏஏஏ’ என்கிற அதர்வா, கடைசியில் அதே நியாயம்மாஆஆஆரேஏஏஏ-வை நியாயமே இல்லாமல் நடந்து கொள்பவர்களையும் பார்த்துக் கதறிக் கேட்கிற இடம் வலி. இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கதறல்.

கேமரா- செழியன். முதல் சீனில் இதுதான் இவர்கள் உலகம் என்று சந்து பொந்தெல்லாம் ஓடி, சாலூர் கிராமத்தைக் காட்டும் செழியனின் கேமரா, கடைசிக் காட்சியில் 360 டிகிரி கோணத்தில் தேயிலைத் தோட்டத்தைக் காட்டியதன் மூலமே ‘இனி இதுதான் இவர்கள் உலகம் என்று சொல்லாமல் சொல்லி - கனக்க வைக்கிறது.

நாஞ்சில் நாடனின் வசனம், படத்துக்குப் பொருந்தி வருகிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல், சாலூர் கிராமத்தில் பெரிசுகளெல்லாம் பேசிக் கொள்வதை வசனப்படுத்திய விதம் அருமை. மந்திரி என்றாலே இனி சிரிப்புதான் வரும். 

இசை: ஜி.வி.பிரகாஷ். பாடல்களெல்லாம் சரி. ஆனால், இசைப்பது மட்டும் இசையல்ல. சில இடங்களில் மௌனமும் இசை என்பதை இவர் உணரவேண்டும். பின்னணி இசையில், கடைசி சில இடங்களில் இசை தூக்கலாக இருப்பது உறுத்துகிறது.

கவிஞர் வைரமுத்து, கலை இயக்குனர் பாலசந்தர், கேமராமேன் செழியன் - மூவரும் தங்கள் ஷோகேஸில் ஓர் அடுக்கை காலி செய்து வைக்கலாம். இந்தப் படத்திற்கான விருதுகளை அடுக்கிவைக்க.

இயக்குனர் பாலா?

ஒரு புதிய, பெரிய ஷோகேஸுக்கு ஆர்டர் செய்துவிடுங்கள்.

Friday, March 8, 2013

முதல்கதை எழுதிய கதை

1993-1994 இருக்கும். கதை, கட்டுரைகளை சுவாசம் போல வாசித்துக் கொண்டிருந்த காலகட்டம். சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கமெல்லாம் படித்து - பிடித்த வரிகளையெல்லாம் அடிக்கோடிட்டு, ஒரு கட்டத்தில் ரூல்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட புத்தகம் போல ஆகிவிட்டது அது. டைரியில் அவ்வப்போது சிலபலவற்றைக் கிறுக்கி வைத்திருக்க, அதைப் பார்த்த நண்பர்கள், ‘உன் நடையே நல்லாத்தான் இருக்கு. நீயும் எழுதலாமே’ என்று ஊக்குவித்தார்கள். அவர்கள் சொன்னது எழுத்து நடையை.

எதற்கு கதை எழுதிப்போடுவது என்று குழப்பம். அப்போது திருப்பூரில் கரும்பு என்றொரு கையெழுத்துப் பத்திரிகை வந்துகொண்டிருந்தது. நூலகங்களில் கிடக்கும். (கிடைக்கும் அல்ல. கிடக்கும்தான்) நான் பார்த்ததுண்டு. யாரைத் தொடர்பு கொண்டேன், எப்படி எழுதி அனுப்பினேன் என்றெல்லாம் நினைவுச்சங்கிலியில் இல்லை. என் சொந்தக் கையெழுத்தில், அந்தப் பத்திரிகையில் முதன்முதலாக ஒரு கதை வந்தது. அதாவது, சேர்க்கப்பட்டது.

அடுத்தநாள் நூலகம் போனபோது அதை அறிந்து கொண்டேன். கடைசியாகக் கோர்க்கப்பட்டிருந்தது எனது கதை. பெரியவர் என்று தலைப்பு. அந்தக் கதைக்குப் பிறகு இரண்டு வெற்றுத்தாள்கள், வாசகர் கருத்துகளுக்காக விடப்பட்டிருந்த்து.


நான், அதை எடுத்துப் படித்தேன். நாலைந்து முறை படித்திருப்பேன். பின்னணியில் இளையராஜாவின் வயலின் இசையோடு படித்தேன். அப்படி ஒரு போதை. பிறகு அதை புத்தகங்கள் கிடந்த டேபிளிலேயே போட்டுவிட்டேன். 

புழுக்கமாக இருந்ததால் ஒரு ஜன்னலோரத்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்த டேபிள் பார்வைக்குப் படுமாறு அமர்ந்து கொண்டேன்.  கையெழுத்துப் பிரதியை யாராவது எடுக்கிறார்களா / படிக்கிறார்களா என்று ஆவலோடு. இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த நூலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அந்தக் கதையைப் படித்து, குறிப்புகளுக்கான பக்கத்தில் அதைப் பாராட்டி, யாரிந்த கே.பி. கிருஷ்ணகுமார் என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு.....

ம்ஹும். ஒன்றுமே நடக்கவில்லை. கையில் ஒரு நாளிதழையும் மறைத்துக் கொண்டு –அதையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். யாரும் சீண்டியபாடில்லை.

என்ன குறை என்று போய்ப் பார்த்தேன்.

பெரிய டேபிள். சுற்றிலும் நாற்காலிகள் முழுக்க ஆட்கள். படிக்க விரும்பும் புத்தகங்களைத் தேடித்தேடி அங்கங்கே கலைந்த புத்தகங்கள். அதில் பலராலும் விலக்கி வைக்கப்பட்ட சில புத்தகங்கள் ஓர் ஓரமாய்ச் சேர்ந்திருந்தன. நல்ல புத்தகங்கள்தான். ஆனாலும் அவற்றைத் தேடுபவர்கள் குறைவு. அதில் - ராமகிருஷ்ண விஜயம், சைவ சிந்தாந்தப் புத்தகங்களுக்குப் பக்கமாக அது கிடந்தது. மார்க்கெட்டிங் சரியில்லை என்று நினைத்து, அந்தக் கையெழுத்துப் பத்திரிகையைக் கையில் எடுத்தேன். நைஸாக வேறு எதையோ தேடுவது போல - அப்போது கிடந்த விகடன், குமுதம் வகையறாக்கள் இருந்த சைடில் – அதைப் போட்டேன். பிறகு மீண்டும் வந்து தூரமாக அமர்ந்து கொண்டேன்.

ஐந்து நிமிடம்.

பத்து நிமிடம்.

பதினைந்து நிமிடம்.

இருபது நிமிடம்.

ம்ஹும். யாரும் அதை எடுத்துப் படிக்கவில்லை. நான் ரொம்ப நேரமாக அங்கேயே இருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி வேறு உந்த, போகலாமா என்று எழுந்தேன். அப்போதுதான் – ஒருவர் அவசர அவசரமாக வேறொரு நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அந்த கையெழுத்துப் பத்திரிகையை எடுத்தார். தொடர்ந்து படிக்கும் வாசகர் என்று நினைத்துக் கொண்டேன். காரணம், பெயரையெல்லாம் பார்க்கவில்லை. அதை எடுக்க என்றே வந்ததைப் போல, அவசரமாக எடுத்துச் சென்று தூரமாக ஒரு நாற்காலியில் அமரச் சென்றார்.

இந்த நேரத்தில், ஓரிருவர் என்னைக் கடந்து சென்றனர். அந்தப் பிரதியை எடுத்த நபர் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டார். பெரிய அறை. அப்போதெல்லாம் நூலகங்களில் நல்ல கூட்டம் வேறு இருக்கும். ஆஹா.. அந்த வாசகரை விட்டுவிட்டுமோ என்று மனம் பதற – அவரைத் தேடினேன். ஒவ்வொரு நாற்காலியாக அமர்ந்திருந்தவர்களை உற்று நோக்க ஆரம்பித்தேன். ஆள் அடையாளம் தெரியாது. கையில் அந்தப் பத்திரிகை இருக்கும். முழுக்க முழுக்க வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட, நோஞ்சானாய்த் தெரியும் கையெழுத்துப் பத்திரிகை. அதை வைத்துத்தான் பார்க்க வேண்டும்.


சில நொடிகளுக்குப் பிறகு, எனக்கு நேரே ஒரு நாற்காலி கண்ணை மறைக்க –அதையும் தாண்டி, அவர் கை மட்டும் என் கண்ணில்பட்டது. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையோடு தெரிந்த கை. ஆர்வமாக, எழுந்து பார்த்தேன்.

கண்கள் சொருக, அதை வைத்து விசிறிக்கொண்டிருந்தார் அவர்.
.