Sunday, October 5, 2014

அர-மெட்-ஜீ-பேங்!

சமீபத்தில் நான் கண்ட 4 திரைப்படங்கள்!

1. அரண்மணை:
மூணுவாரமா ஓடுதே. சிரிக்க வைக்கறாங்கறாங்களாமே என்றெல்லாம் நம்ம்ம்ம்பிப் போனோம்.

சந்திரமுகியை அப்டியே உல்டா பண்ணியிருக்கிறார். தானாவுக்கு தயிர்வடைன்னா சானாவுக்கு சாம்பார்வடை என்பதுபோல, வழக்கமாய் சலித்துப் போன சந்தானம் காமெடிதான்.

‘சிகரெட் குடிக்கறப்பல்லாம் கீழ ரெண்டு வரி போடறாங்கள்லப்பா, அதே மாதிரி, இவரு ஜோக் சொல்றப்ப ‘காமெடி: தயவு செய்து சிரிக்கவும்’ன்னு போடலாம்லப்பா?” என்றாள் மீரா. வெடித்துச் சிரித்தேன். ஸ்க்ரீனில், ஏதோ சீரியஸாய் சுந்தர் சி பேசிக் கொண்டிருக்க, சுற்றியிருப்பவர்களெல்லாம் என்னை முறைத்தனர்.

“படம் எப்டி?” என்றால் “பார்க்கலாம்” என்பார்களல்லவா? இதற்கு கேட்டால், பார்க் இல்லாமல் வெறும் “லாம்’தான்.
--------------

2. மெட்ராஸ்:

நல்ல கதைக்களம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதைச் சூழலில் நம்மை கொண்டு செல்லும் திரைக்கதை. அன்பு-மேரியாய் வாழ்ந்திருக்கும் கலையரசன், ரித்விகாவின் நடிப்பு. நிறைவான படம். சண்டைக்காட்சியில் கால்பந்தாட்டத்தைக் கலந்திருக்கும் விதம் – சபாஷ். முதலில் விஜியை உட்காரச் சொல்லும்போது அவர் உட்காராமலிருப்பதும், பின்னொரு முறை உட்கார்ந்து அவர் உடல்மொழியில் பெருமிதத்தைக் காண்பிப்பதுமாய் பல குறியீடுகளைச் சொல்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன் - பாடல்களை விடுங்கள். பின்னணி இசையில் மனுஷன் படத்துக்குப் படம் பின்னுகிறார்.

ரஞ்சித் - Waiting For Your Hat trick Movie!
---------------------------------------

3. ஜீவா:

சமீபத்தில் பார்த்ததில் த பெஸ்ட் படம். க்ரிக்கெட், அதில் காதல் என்று, யதார்த்தத்திற்கு வெகு அருகில் பயணிக்கிறது படம். விஷ்ணுவின் நடிப்பு அட்டகாசம். விஷ்ணுவுக்கு நண்பனாய் வருபவர் நடிப்பில் ‘கொன்னுடார்யா!.’ ஆனால், ஹீரோவின் நண்பன் என்பதாலேயே, டைரக்டர் ‘கொன்னுடார்யா!’


குறியீடுகள் என்று பார்த்தால், இதிலும்.  கனிவுடன் ஜீவாவிற்கு உதவும் ஸ்போர்ட்ஸ் கடை ஓனர், ஜீவாவின் கேரியருக்கே உதவும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் இருவரையும் முஸ்லிமாகக் காண்பித்திருப்பதைப் பாராட்டுவதோடு விட்டுவிட்டு குறியீடெல்லாம் தேடவேண்டாம் என்று நினைக்கிறேன். இப்படியே எல்லாப் படத்திலும் குறியீடு தேடிக் கொண்டிருந்தால், நமக்கு சீசோபெர்னியாவே வந்துவிடும் போல!

பாடல்களில் இமான், தன் கன்ஸிஸ்டென்ஸியைக் காட்டிவிட்டார். ‘ஒருத்திமேலே..’ சமீபத்தில் கேட்டதில் அட்டகாஷ். ஆனால் அதில் பாடகர் அபய் ஜோத்புர்கர் (என்கிறது இணையம்) ‘மையலாணேன்’, ‘கொண்டாலடி’, ‘சென்றாலடி’, 'ஆணாலுமே’, என்றெல்லாம் உச்சரிப்பது திருஷ்டி.

OUT OF THE BOX சிந்திப்பதைப் போல Out Of The Film சிந்தித்தால் ஒரு விஷயம் மகிழ்ச்சியளிக்கிறது. CCLல் விஷால், ஆர்யா, விஷ்ணு, ஜீவா எல்லாம் எவ்ளோ ஃப்ரெண்ட்லி என்பதைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் இந்தக் கதைக்கான Knot உருவாகியிருக்க வேண்டும். விஷால், ஆர்யா தயாரிக்க விஷ்ணு நடிக்கிறார். ஜீவாவுக்கு? “அவன் பேரையே படத்துக்கு வெச்சுடலாம்டா” என்று முடிவெடுத்திருக்க வேண்டும்.


ச்சும்மா, என் கற்பனைதான் ஆமென்றால் - அந்த நண்பர்களுக்கு என் கைகுலுக்கல்கள்.
-----------

4. BANG BANG

மெட்ராஸ், ஜீவா பத்திலாம் பேசிட்டு இதப் பத்தி பேசினா, தாமஸ் ஆல்வா எடிசன் கண்ணைக் குத்தீடுவாரு. ஆமா!
.

Friday, October 3, 2014

கிருஷ்ணகதா 03-10-2014 - மதுப்பழக்கம் கேடானது எப்படி?

“புராணகாலத்துல எல்லாம் சோம பானம் சோம பானம்னு சொல்லப்படுது. முனிவர்கள், தேவர்களெல்லாம் குடிச்சதா படிச்சிருக்கேன், இந்த மதுப்பழக்கம் எப்டி கெட்ட பழக்கம்னு ஆச்சு?’ – ஃப்ரெண்ட் கேட்டாப்ல. அதுக்காகத்தான் இந்தக் கதை.

மொதல்ல கேரக்டர்ஸை தெளிவா உள்வாங்கிக்கோங்க. அப்ப படிக்கறப்ப குழப்பம் இருக்காது. மொத்தம் நாலே கேரக்டர்ஸ்.

1. அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யார்.  2. அவர் மகள் – தேவயானி
3. தேவர்களின் குரு பிரகஸ்பதி.  4. அவர் மகன் – கசன்.

மனப்பாடம் பண்ணீட்டீங்களா? சரி.

தேவர்கள் – அசுரர்கள் போர் நடந்துட்டிருச்சு. அசுரர்கள்ல இறந்தவங்களை, சுக்கிராச்சார்யார் டெய்லி உயிர்ப்பிச்சுட்ட்டே இருந்தார். தேவர்கள், தங்களோட குருகிட்ட போனாங்க.

“ஹல்லோ குருஜி, வாட்டீஸ் திஸ்”ன்னு கேட்டாங்க.

அதுக்கு பிரகஸ்பதி, ‘வாட் கேன் ஐ டூ மை பாய்ஸ்? சுக்கிராச்சார்யார்க்கு, இறந்தவர்களை உயிர்ப்பிக்கற சஞ்சீவினி மந்திரம் தெரியும். எனக்கு தெரியாதே”ன்னாராம்.

உடனே தேவர்கள், ‘உங்க பையன் கசன் இருக்கான்ல? அவனை சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா அனுப்ச்சு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துட்டு வரச் சொல்லுங்க”ன்னாங்க. அதன்படி, பிரகஸ்பதி, தன் மகன் கசனை, சுக்கிராச்சார்யார்கிட்ட சிஷ்யனா சேர்த்திவிடறார்.

கசன், சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்கத்தான் தன்கிட்ட சிஷ்யனா வந்திருக்கான்னு சுக்கிரருக்கு தெரியும். அவரும், குருகுல வழக்கப்படி சேர்த்துகிட்டு எல்லா வேலையும் வாங்கீட்டிருக்கார். அந்த மந்திரத்தை சொல்லிக் குடுக்கறபாட்டையே காணோம்.

இப்ப, அசுரர்களுக்கு இந்த மேட்டர் கேட்டு கிலியாகிடுது. எங்க சுக்கிராச்சார்யார் சொல்லிக் குடுத்துடுவாரோன்னு பயப்படறாங்க. சுக்கிரர், ‘அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். பயப்படாதீங்க’ன்னுடறாரு. ஆனாலும் அசுரர்களுக்கு மனசு கேட்கல. ஆடு மேய்க்கப்போன, கசனைக் கொன்னு நாய்க்கு உணவாப் போட்டுடறாங்க.

இங்க ஒரு ட்விஸ்ட். சுக்கிராச்சார்யாரோட மகளான தேவயானிக்கு கசன் மேல ஒன் சைட் லவ்வு. சாயந்திரமாச்சு, கசனைக் காணோம்னு கவலையோட அப்பாகிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. அவரு ஞானதிருஷ்டில பார்த்து, கசன் இறந்துட்டதைத் தெரிஞ்சுக்கிறார்.

தேவயானி அழ, மகள் மேல பாசமா இருக்கற சுக்கிரர், ‘டோண்ட் வர்ரிம்மா.. வெய்ட்டீஸ்’ன்னுட்டு சஞ்சீவினி மந்திரம் சொல்லி கசனை உயிர்ப்பிக்கிறார். கசனும், நாய் வயித்தைக் கிழிச்சுட்டு உயிரோட வந்துடறான்.

அசுரர்களுக்கு கோவம் வருது. ரெண்டாவது தடவையா கசனைக் கொன்னு கடல்ல போட்டுடறாங்க. மறுபடி தேவயானி கண்ணீர். எகெய்ன் மந்திரம். கசன் எண்ட்ரி.

அசுரர்களுக்கு கடுப்பாவுது. இந்தாள் என்ன இப்டியே பண்றாருன்னு மூணாவது வாட்டி கசனைக் கொன்னு, அவன் அஸ்தியை சுக்கிராச்சார்யார் தினமும் குடிக்கற சோமபானத்துல கலந்துடறாங்க.

அப்பல்லாம் டெய்லி கொஞ்சம் சோமபானம் சாப்டுட்டு தூங்குவாங்க. சுக்கிராச்சார்யாரும் அதன்படி லைட்டா சாப்டுட்டு தூங்கப்போறார்.

கசன், இன்னும் வர்ல. தேவயானிக்கு டென்ஷனாவுது. அப்பாட்ட மறுக்கா கம்ப்ளெய்ண்ட் பண்றாங்க. வழக்கம்போல தன் ஞா.தி-ல கசன் எங்கன்னு பார்க்கற சுக்கிரருக்கு ஷாக்!

கசன், தான் குடிச்ச சோமபானம் மூலமா, தன்னோட வயித்துக்குள்ளதான் இருக்கான்னு தெரியுது. இப்ப அவனை உயிர்ப்பிச்சா,  வயிறு பொளந்து, இவர் இறக்க நேரும். தேவயானிகிட்ட ‘வாட் டு டூ?’ன்னு கேட்கறாரு.

“டாடி, எனக்கு நீங்களும் வேணும். அவரும் வேணும். ப்ளீஸ்..”ன்னு கெஞ்சறாங்க தேவயானி.

’நாம சொல்லித்தரக்கூடாதுன்னு நெனைச்சோம். இப்ப அசுரர்களோட துர்புத்தியே, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைக் கத்துக்க வைக்குது’ன்னு நெனைச்ச சுக்கிராச்சார்யார், வெளில இருந்தபடி வயித்துக்குள்ள இருக்கற கசனை உயிர்ப்பிச்சு, சஞ்சீவினி மந்திரத்தை சொல்லிக்குடுத்து, ‘என் வயித்தக் கிழிச்சு வந்து, அப்பறம் இதே மந்திரத்தைச் சொல்லி என்னை உயிர்ப்பி’ங்கறார். அதன்படியே நடக்குது.

வெளில வந்த கசன், தேவயானியோட லவ்வை, ‘உங்கப்பா வயித்துல இருந்து வந்ததால நான் உன் சகோதரன் அல்லவா? ஸாரிம்மா”ன்னு ரிஜெக்ட் பண்ணது கிளைக்கதை. மெய்ன் மேட்டருக்கு வருவோம்.

சுக்கிராச்சார்யார் உயிர்த்து எழுந்ததும், அந்த சோமபான பாட்டிலைப் பார்க்கறார். “இந்தக் கெரகத்தைக் குடிச்சதாலதான் எதிரிப் படையோட குரு மகனுக்கு சஞ்சீவினி மந்திரத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டி வந்தது? இதக் குடிக்கலைன்னா இவ்ளோ டெலிகேட் பொஸிஷன் வந்திருக்காதுல்ல?”ன்னு யோசிச்சு,

“இனி இந்த சோமபானத்தைக் குடிக்கறவங்க, தன் மதியிழந்து போகக் கடவது”ன்னு சாபம் விட்டுடறாரு!

அதுக்கப்பறம்தான் மதுன்னா, கெட்டதுன்னு ஆச்சாம்! அக்காங்ப்பா!

**

Saturday, September 27, 2014

கற்காததினால் ஆய பயன்...

ப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.

போய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.

உடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.

அடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.

“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க?”

“வெளில, ஹோட்டலுக்குத்தான்”

“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே?”

“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே?” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.

அப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.

*

டெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.

நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.

காரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.

அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.

காரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

நேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்த்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.

கற்றதினால் ஆன பயனென் கொல்?

Tuesday, September 16, 2014

அவியல் 16-9.2014

‘ஐ’ பட இசைத்தட்டை சக நண்பர் அர்னால்ட் ஸ்வாஷ்ஸ்னகர் வந்து ரிலீஸ் செய்துவிட்டார். இனி மாதம் மும்மாரி பொழிவதுடன், தமிழ்நாட்டின் மின்சாரப் பிரச்சினை உள்ளிட்டவைகள் தீர்ந்துவிடும் என்று நம்புவோமாக.

என்னதான் இப்படி நக்கலடித்தாலும், ஷங்கர் தன் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றிவிட்டார் என்றே கூறவேண்டும். நாடு முழுவதும் ‘ஐ’ ஜுரம்தான். டீசரும் வெளியாகிவிட்டது. பத்து ஸ்க்ரோலிங்கில் ‘இதான்பா கதை’ என்றொன்று வாட்ஸப்பில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘ஏ.. இந்தாரு, எந்திரன் மாதிரியே செவப்புச்சாரி, மல்லிப்பூ’ என்றொரு படம் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது. நான் கவனித்தது இன்றைய தினசரிகளில் அர்னால்ட்டின் இரண்டு படங்கள்.

அர்னால்ட், யாரோ பூக்கடை துணை கமிஷனர் செந்தில்குமாரிடம் தோளில் கைபோட்டு ஜாலியாக பேசியதை ‘தி இந்து’வெளியிட்டிருந்தது. பொது இடங்களில் எதிர்ப்படும் முகங்களைப் பார்த்து புன்னகைப்பதும், ஹலோ சொல்வதும் அவர்களுக்குண்டான பழக்கம்தான். பக்கத்து வீட்டினரையே முறைத்தபடி கடக்கும் நமக்கு இது கண்டிப்பாக நியூஸ்தான். நான் அமெரிக்கா சென்றிருந்தபோதும், பாரீஸில் வேலை நிமித்தம் இருந்தபோதும், அதேபோல லண்டன் பக்கிங்ஹாம் அரண்மணையில்..

சரி விடுங்க. நான் ஜாலி வாலி ஜாதி. எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை.

இரண்டாவது அம்மாவும் அர்னால்டும் புகைப்படம். கவனித்தீர்களா என்று தெரியவில்லை. அம்மா ஹாயாக சாய்ந்திருக்க, நான்குமுறை மிஸ்டர் யுனிவர்ஸும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியாவும் வென்ற பாடி பில்டர் அர்னால்ட், சாயாமல் வெகு பவ்யமாக அமர்ந்திருந்தார்.

யாரோ சொல்ல்ல்லி, அனுப்ச்சிருக்காங்க!
------------------------------

இன்று காலை கன்னாபின்னாவென்று கோவை நோக்கி பேருந்துகள் பறந்து கொண்டிருந்தன. பல தனியார் பேருந்துகள். உள்ளே ஓரிருவர் கூட இல்லை. விசாரித்தால் கோவையில் முதல்வர் விழாவுக்காம்.

‘அதுக்கேன்யா காலியா போவுது?’ என்று கேட்டேன்.

‘கணக்கு காட்டத்தான். ஹெலிகாப்டர்லேர்ந்து அம்மா பார்த்தா பூரா பஸ்ஸா தெரியணும். அதுக்குத்தான்”

உடனே நான்..

ப்ச். வேணாம். அர்னால்டே அவ்ளோ பவ்யம்னுட்டு நான் பேசினா அவ்ளோதான்.

-------

ஸ்டார் மகாபாரதம். இதிகாசத்தை சீரியலாக்கி இருக்கிறார்கள். அபிமன்யு வதமெல்லாம் “கர்ண” கொடூரம்! எந்த மொழியிலும் இப்படி எழுதப்பட்டிருக்கும் என்று தோன்றவில்லை. இன்னும் என்னென்ன நிகழப்போகிறதோ!

கிருஷ்ணா!!!
------------


நேற்று முன்தினம் YCI சார்பாக, உடுமலையில் IMA ஹாலில் பேசியபோது, உடுமலை இரயில்நிலையம் காணாமலே போய்விட்டது என்று அங்கலாய்த்தேன். எனக்குப் பின் பேசிய டாக்டர் பாலசுப்ரமணியம், உடுமலை மக்கள் பேரவை அதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியிருப்பதாகவும் இன்னும் நான்கு மாத காலத்திற்குள்ளாக இரயில் நிலையம் செயல்படும் என்றும் தெரிவித்தார். அவர்களுக்கு நன்றி.

போலவே என்னைக் கடுப்புக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம், உடுமலையின் ஒரு சாலை விடாமல் எல்லாச் சாலைகளையும் தோண்டி வைத்திருக்கிறார்கள். பாதாள சாக்கடையாம். பேசாமல் பூமிக்கு கீழேயே வழியமைத்து புரட்சி பண்ணலாம். அத்தனை குழிகள். என்றைக்கு சரி செய்வார்களோ!

--------------


Friday, September 12, 2014

வரு-மானம்

நண்பனோடு அந்த உணவகத்தில் டின்னரில் இருந்தபோது, ரேடியோ போன்றொரு ஒலி கேட்டது.

‘நால்ரோடு சிக்னல் நால்ரோடு சிக்னல்’

நிமிர்ந்தால் வாக்கிடாக்கியுடன் ஒரு ட்ராஃபிக் போலிஸ்காரர் உள்ளே வந்தமர்ந்தார். கொஞ்சமே கொஞ்சம் அந்த வாக்கி டாக்கியின் சத்தத்தைக் குறைத்தார். வாஷ் பேசினில் போய்க் கைகழுவி வந்தவர், “ஏம்ப்பா டிஷ்யூ பேப்பர் இல்லையா?’ என்றார். நார்மலாக இந்த எழுத்து 12 ஃபாண்ட் சைஸ் என்றால், அவர் கேட்டதை ஃபாண்ட் சைஸ் 30ல் எழுதலாம் அவ்வளவு ச-த்-த-மா-க-க் கேட்டார்.

‘இல்லை சார்’ என்று மிகவும் தன்மையாக பதில் சொன்ன சர்வர், இடதுபுறச் சுவற்றைப் பார்த்தார். அங்கே டிஷ்யூ பேப்பர் உபயோகத்தால் அழியும் மரங்களைப் பற்றிய ஒரு சிறிய போஸ்டர் இருந்தது. போக்குவரத்து காவல்துறை நண்பர் அதைக் கவனித்ததாய்த் தெரியவில்லை.

“என்ன இருக்கு?” என்றார். அதே 30 ஃபாண்ட் சைஸ் குரல்.

ஆர்டர் செய்துவிட்டு, வாக்கி டாக்கியின் சப்தத்தைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, ஃபோனை எடுத்தார்.

“அப்பறம் மாப்ள? எங்க இருக்க?”

“..............................” - எதிர்முனையின் பேசியது - நல்லவேளை - கேட்கவில்லை.

“நான் இங்க சாப்டுட்டு இருக்கேன் மாப்ள. கல்யாணம் முடிஞ்சு விருந்துக்கெல்லாம் போகாமயே டூட்டீல ஜாய் பண்ணீட்ட போல?”

அவரது குரலுக்கு உணவருந்திக் கொண்டிருந்த எல்லாருமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் அதை சட்டை செய்ததாய்த் தெரியவே இல்லை.

சில நொடிகள் சம்பாஷணைக்குப் பிறகு, “அப்பறம்? இன்னைக்கு என்ன வசூல்?” என்றார் அதே சத்தமான குரலில்.

நான், திடுக்கிட்டு -  நிமிர்ந்து நேராய் அவரையே பார்த்தேன். அவர் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார். தலை நிமிரவில்லை. அது தலைநிமிரக்கூடிய உரையாடலும் இல்லை.

“அவ்ளோதானா? இதை வெச்சுட்டு என்னய்யா பண்ணப்போற? கல்யாணத்துக்கே எப்டியும் செலவு ரெண்டு ரெண்டரை ஆகிருக்காது? டெய்லியும் வெறும் 500, 600தான்னா என்ன பண்ணுவ?”

இதற்கு எதிர்முனை, ‘உனக்கு?’ என்று கேட்டிருக்கவேண்டும் என்பது இவரது பதிலில் தெரிந்தது.

“ப்ச்..  இங்க அதவிட மோசம் மாப்ள. காலைல இருந்து ஒண்ணும் சிக்காம, சாயந்தரம் ஒரே ஒரு மணல் லாரிக்காரான் வந்தான். வெறும் 400 ரூவாதான் கறக்க முடிஞ்சது. கடுப்பாய்டுச்சு மாப்ள இன்னைக்கு”

பொது இடத்தில், நான்கைந்து பேர் அங்கங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவகத்தில் லஞ்சப் பரிமாற்றம் குறித்து வெளிப்படையாய், இத்தனை சத்தமாய்ப் பேசிக் கொள்வது குறித்த கவலை கிஞ்சித்தும் அவருக்கு இருக்கவில்லை. அதை ஏதோ ‘இன்னைக்கு எங்க பாஸ் என்னைப் பாராட்டினார்’ என்று ஊழியர்கள் செய்தி பரிமாறிக் கொள்வதைப் போல, பெருமையாய்ப் பகிர்ந்து கொள்கிறார்.

எனக்கு அதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பனிடம் புலம்பிக் கொண்டே, அவசர அவசரமாய் அந்த இடம் விட்டு நகர்ந்தேன். கை கழுவிட்டு, பில் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். அதிகபட்சமாய் அந்தக் காவல்துறை நண்பரைக் கடக்கும்போது அவரை முறைக்க மட்டுமே முடிந்தது. அதுவும் அவர் பார்க்கவில்லை என்றதால் இருக்கலாம்.

வெளியே வந்து பைக் எடுக்க நிற்கையில் நண்பன் சொன்னான். “அவனுக்கே அக்கறை இல்லை, பயம் இல்லை. நீ ஏன் இவ்ளோ டென்ஷனாகற?”

“இல்ல பாஸ். முப்பது வயசுக்குள்ளதான் இருக்கும். இத்தனை பேர் கவனிக்கறாங்கன்னுகூட தெரியாதா? பொது இடத்துல பெருமையா பேசற விஷயமா இது?”

“தைரியமா பேசறான்னா அவ்ளோ லஞ்சம் குடுத்துதான் அவனும் வேலை வாங்கீருப்பான். அத அடைக்கணும்ல?”

‘அது சரி” என்ற நான் ஒரு நிமிஷம் நின்றேன். போனமுறை இதைப்போன்ற ஷாப்பிங் மால் விவகாரம் ஒன்றைப் பகிர்ந்தபோது, நண்பர்கள் ‘நானா இருந்தா சும்மா வந்திருக்க மாட்டேன். நாலு கேள்வி கேட்டுட்டுதான் வந்திருப்பேன்’ என்றெல்லாம் உசுப்பேற்றியது ஞாபகம் வந்தது. கேட்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நொடிகள் யோசித்துவிட்டு, ‘ப்ச்’ என்று பைக்கை எடுக்கப் போனேன்.

திடீரென்று ஒன்றை கவனித்து, “இரு வர்றேன்” என்று நண்பனிடம் சொல்லிவிட்டு, நேராக அந்த போலீஸ்காரரை நோக்கி சென்றேன்.

சாப்பிட்டு முடித்திருந்த அவர் என்னைப் பார்த்ததும் “என்ன?” என்பதாய் புருவமுயர்த்தினார்.

“உங்க பைக்கை, க்ராஸா நிறுத்திருக்கீங்க. என் பைக்கை எடுக்க முடியல. கொஞ்சம் வர்றீங்களா?” என்றேன். இப்போது என் குரல் சாதாரணத்தை விட கொஞ்சம் கடுமையாய், உயர்ந்திருந்தது.

“சைடுல தள்ளி வெச்சுட்டு எடுத்துப் போங்க பாஸ்”

“இல்லைங்க.. சைடு லாக் பண்ணீருக்கு. நீங்களே வந்து எடுங்க” என்றேன்.

அவர் மிகுந்த சலிப்புடனே எழுந்து வெளியே வந்தார். Anti Snatching Squad என்றெல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த தன் பைக்கை சைட் லாக் விடுவித்து நகர்த்தினார்.


அப்போது நான் என் பைக்கை எடுத்தவாறே, என் நண்பனைப் பார்த்து சொன்னேன்.

“நான் சொன்னேன்ல.. ? இவருதான் பாஸ்”

என் நண்பன் குழப்பமாய்ப் பார்க்க, அந்த போலீஸ்காரரும் என்னைப் பார்த்தார்.

“ஒண்ணும் இல்ல சார்.. வெறும் நானூறுதான் வருமானம் வந்துச்சுன்னு புலம்பிட்டிருந்தீங்கள்ல.. அதைப் பத்திதான் பேசிட்டிருந்தோம் சார்.. வர்ட்டுங்களா?” என்று பைக்கை உதைத்து விரட்டினேன்.

இன்றைக்கிலிருந்து அவர் திருந்துவாரா என்று தெரியாது. ஆனால், இன்றைக்கு அவர் வாங்கும் லஞ்சப்பணத்தை பொது இடங்களில் இவ்வளவு சத்தமாய்ப் பகிர்ந்துகொள்ள மாட்டாரென்பது மட்டும் நிச்சயம்.
.

Sunday, September 7, 2014

கேள்வி கேட்டா தப்பா சார்?

வரிசையில் நான் முதல் ஆள். Counter Opening Time: 8.45 AM என்றிருந்தது. நான் வாட்சைப் பார்த்தேன். 9.01 என்று காட்டியது. கொஞ்சம் தள்ளி, சலவைக்கல் பெஞ்ச்சில் உமாவும், மகள்களும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

அது கோவையின் ஒரு Shopping Mall. ‘8.45க்கு டிக்கெட் வாங்கிட்டு, மால் ரெஸ்டாரண்ட்ல சாப்ட்டு, 9.30 ஷோ பார்க்கலாம்’ என்பது எங்கள் திட்டம்.

என் வாட்ச், ‘9..02’ என்றபோது சாவகாசமாக அரட்டை அடித்தபடி மூன்று பேர் கவுண்டர் கதவைத் திறந்து உள்ளே சென்றனர். உள்ளிருந்த, ஸ்க்ரீன் உயர்த்தப்படவில்லை. அவர்கள் உள்ளே நுழைந்ததும், நான்கைந்து கவுண்டர்கள் முன்னிலும் அங்கங்கே அமர்ந்திருந்தவர்கள் வந்து ஆக்ரமித்துக் கொண்டனர்.

9.03

9.04

9.05

9.06

இப்போது மாலின்,  பணிப்பெண் ஒருத்தி சீருடையில் அந்த கவுண்டர் கதவைத் திறந்து, ஒரு கையில் கதவைப் பிடித்தவாறே உள்ளிருந்த ஒருத்தியிடம் 500 ரூவாய்த் தாளை நீட்டி டிக்கெட் கேட்டார். உள்ளிருந்த பெண்ணும் ஜாலியாக சிரித்துக் கொண்டு, ஏதோ அரட்டை அடித்தபடியே அவளுக்கு முதல் டிக்கெட்டை வழங்க ஆயத்தமானார்.

வழக்கம்போல என்னுள் இருந்த அம்பி விழித்துக் கொள்ள, “ஏங்க 8.45 கவுண்டர் ஓபன்னு போட்டிருக்கு. டிக்கெட் வாங்கிட்டு சாப்டுட்டு படம் பார்க்கலாம்னு வந்தா, 9.10 ஆகப்போவுது.. இன்னும் டிக்கெட் இஷ்யூ ஆரம்பிக்காம இருக்கீங்களே?’ என்றேன்.

நான் சொன்னது உள்ளிருந்தவர்களுக்குக் கேட்க வாய்ப்பில்லை. பாதிக் கதவை திறந்தபடி நின்றிருந்த பெண் நான் சொன்னதை உள்ளே வழிமொழிந்தார்:

”எட்டே முக்கால்ன்னு போட்டு, எட்டேமுக்காலுக்குத் தொறக்கலியாம். இப்டி லேட் பண்ணினா எப்டி டிஃபன் சாப்டு படம் பார்க்கறதுன்னு கேட்கறாரு” என்றார், கொஞ்சம் அதிகபட்ச டெசிபலில்.

அதற்கு உள்ளிருந்து ஏதோ கமெண்ட் வர சட்டென்ற ஒரு பயங்கரச் சிரிப்பு அவர்களுக்குள்ளே பரவியது.

‘என்ன சொன்னாங்க?’ என்று கேட்டேன் சற்றே கோபமுற்ற நான்.

“அவங்க என்கிட்ட சொன்னாங்க”

“நான் சொன்னத உள்ள சொன்னீங்கள்ல? அவங்க என்ன சொன்னாங்கன்னு எங்கிட்டயும் சொல்லுங்க”


“அவங்க என்கிட்டதான் சொன்னாங்கன்னு சொல்றேன்ல?”

இதற்குள் உள்ளே இருந்த பெண், ‘ஏய்.. உள்ள வந்து கதவைச் சாத்துடி. இப்டி பாதிக் கதவை தொறந்து நின்னு பேசாத’ என்று அதட்ட அந்தப் பெண்ணும் உள்ளே சென்றார்.

ஓரிரு நிமிடங்களில் கண்ணாடியைத் தடுத்திருந்த திரை உயர்த்தப்பட, என் முன்னே இருந்த கவுண்டரில் டிக்கெட் கொடுக்கும் பெண்ணும், அவருடன் வெளியிலிருந்து வந்த பெண்ணும் நின்றிருந்தனர். என்னைப் பார்த்ததும், அந்தப் பெண், டிக்கெட் வழங்கும் பெண்ணிடம் ஏதோ சொல்ல, டக்கென்று அவர் சீட் மாறி வேறு கவுண்டரில் சென்றமர்ந்தார். இப்போது நான் நின்றிருந்த கவுண்டரில் டிக்கெட் வழங்க யாருமில்லை.

நான் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். மாலின் ஊழியப் பெண் வெளியே வந்து என்னை அவசரமாய்க் கடந்து சென்று விட, மற்ற டிக்கெட் கவுண்டர் வழியே ஆளாளுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

ஏதுமறியாத என் மகள் மீரா என்னிடம் வந்து, ‘என்னாச்சுப்பா.. ஃபோன் குடுங்க நான் அந்தக் கவுண்டர்ல நின்னு வாங்கிடறேன்’ என்று என் ஃபோனை வாங்கி இன்னொரு வரிசையில் நின்றாள். இதையெல்லாம் முகத்தில் வெற்றிக் களையுடன் டிக்கெட் கொடுக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

நுழைவுச் சீட்டு கிடைத்ததும், நேராக மேலே திரையரங்குக்குப் போனோம். லிஃப்ட் கதவு திறக்கப்பட்டதும், அங்கிருந்த வரிசையில் போய் நின்றோம். 20 பேர்கள் இருந்த வரிசை, என் முன்னே நான்கைந்து பேராக குறைந்ததும் கவனித்தேன். கீழே 500 ரூபாயைக் கொண்டு வந்து டிக்கெட் வாங்கிய பெண் நின்று கொண்டிருந்தார். என்னைக் கண்டதும், அவர் அருகே நின்று கைப்பயைச் சோதித்துக் கொண்டிருந்தவரிடம் ஏதோ சொல்ல, அந்த அம்மணி என் முன் நின்றவர்களை விடுத்து, நேராக என்னைப் பார்த்தார்.

‘நான் சொன்னேன்ல.. இவன்தான் கீழ ரூல்ஸ் பேசினது’ – இதாகத்தான் இருக்க வேண்டும் என்பது உ.கை.நெ.கனி.

எனக்கு மீண்டும் ஒரு மாதிரி அவமான உணர்வு மேலிட, அவர்கள் அருகே சென்றதும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டேன்:

“ஜெயிச்சாச்சா? நான் நியாயமாக் கேட்ட கேள்விய உள்ள கிண்டலா சொல்லி, அந்தம்மாவை சீட் மாறி உட்கார வெச்சு எனக்கு லேட்டா டிக்கெட் கெடைக்க வெச்சதுல ஒரு சந்தோஷம் உங்களுக்கு.. இங்க இவங்ககிட்ட என்னைப் பத்தி கமெண்ட் பண்றதுல ஒரு சந்தோஷம். இப்ப நல்லா ஃபீல் பண்றீங்கள்ல?”

இதைக் கேட்டதும் சற்றுத் தள்ளி இருந்த சஃபாரி ஆசாமி வந்தார்.

”என்னம்மா ப்ரச்னை?’

“தெரியல சார். கீழயும் இப்டித்தான் ஏதோ கேட்டு ப்ரச்னை பண்ணாரு”

“என்ன சார் வேணும்?”

“கஸ்டமர் கேர்தான் சார் வேணும். வேறென்ன வேணும்? 50, 60 ரூவா டிக்கெட்டை விட்டு 120 ரூவா டிக்கெட் குடுத்து வர்றோம்னா, சொன்ன டயத்துக்கு எல்லாம் நடக்கும்னுதானே வர்றோம்? 8.45க்கு போட்டுட்ட்டு 9.10 வரைக்கும் கவுண்டர் திறக்கல. அதக் கேட்டதுக்குத்தான் இத்தனையும்....”

இதற்குள் உமாவும் மகள்களும், ‘வாங்க போலாம்’ என்றழைக்க, நானும் நகர்ந்தேன்.

இடைவேளையில் நடந்தவற்றை என் மகள்களிடம் பகிர்ந்து கொண்டேன். படம் முடிந்ததும், ‘வெளில போறப்ப அந்தப் பொண்ணைப் பார்த்து மறுபடி கேட்கலாமாப்பா?’ என்றாள் மீரா. ‘வெளில போற வழி வேற.. அதுனால அவங்களைப் பார்க்கப் போறதில்ல” என்றேன்.

ஆனால், சாப்பிட்டு விட்டு வேறு வழியாக எஸ்கலேட்டரில் இறங்க, கீழே அந்தப் பணிப்பெண் நின்று கொண்டிருந்தார்.

“ப்பா.. அந்தக்கா நிக்குது. ஏதும் கேட்கப் போறீங்களா?’

”இல்ல குட்டீம்மா. அவங்க கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்ப்பாங்கன்னு நினைக்கறேன்” என்றேன்.

கீழே இறங்கி, அவரைக் கடக்க எத்தனிக்கையில் என்னைத் தடுத்து, “ஸாரி சார்.. நான் பண்ணது தப்புதான். ஃபேமலியோட, ஒரு லீவு நாளைக்கு வந்த உங்க மூடை ஸ்பாய்ல் பண்ணீட்டேன். மேனேஜர்ட்ட சொல்லி, கரெக்ட் டைமுக்கு கவுண்டர் திறக்க வைக்கறேன்” என்று சொல்வாரென்று நினைத்தேன். ம்ஹும். முன்னைவிடக் கடுமையாக முறைத்துவிட்டுக் கடந்தார்.


அடுத்தமுறை அங்கு செல்கையில், இந்தச் சம்பவம் மறந்து - அந்தப் பெண்ணைப் பார்த்து புன்னகைக்கும் மனோபாவம் எனக்கு வாய்க்கவேண்டும். பார்ப்போம்!
.

Saturday, August 2, 2014

வரம்!

அலுவலகத்தில் சிலபல டென்ஷன்ஸ். சிரிக்க மறந்து நாளாகிவிட்டது. மெய்ல், வாட்ஸப் நட்பு வட்டங்களிலிருந்து நான் ஒதுங்கி - அவர்களும் என்னை ஒதுக்கி - மாதங்களாயிற்று. சம்பிரதாய ஹலோ ஹாய்களுடன் கழிகிறது காலம். புன்னகைக்கு பதில் டார்கெட்களும், கைகுலுக்கல்களுக்குப் பதில் கமிட்மெண்ட்களுமாய் இடமாறிவிட்டிருக்கிறது காலச்சுவடில். ‘படிக்க நேரமில்லையா.. சிரிக்க நேரமில்லையா..’ என்றொரு காலத்தில் எதிர்ப்படுவோரிடமெல்லாம் கேட்டவனுக்கு ‘இதற்கெல்லாம் நேரம் மட்டுமில்லை, மனதும் சூழலும் வாய்க்க வேண்டும்’ என்று எதுவோ உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் அதேபோன்றதொரு மனதுடன் வீடடைந்து, வழக்கமாய் ரெகார்ட் ஆகியிருந்த மகாபாரதம், சூப்பர் சிங்கரைப் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்வே குழம்பியிருக்க, பாரதம் சீரியலில் - அர்ஜுனனை - குழப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். முடிந்ததும் சூப்பர் சிங்கர்.

அசுவாரசியமாய்ப் பார்த்துக் / கேட்டுக் கொண்டிருந்த என்னை நிமிரச் செய்தது செந்தில்நாதன் வருகை.

வந்தவர், ‘பத்ரி, ஏஞ்சலின்னா யாரு?; என்கிறார். அவருக்கு எல்லாருமே பத்ரிதான்.

ஓடிவருகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். சூப்பர் சிங்கரின் டாப் 20 போட்டியாளர். அவர் கையைப் பற்றி, வருடியபடி கேட்கிறார் செந்தில்நாதன்:-

“ஏஞ்சலினுக்கு டெல்லிக்கு ராஜான்னாலும் தெரியுமா?”

“தெரியும்” - ஏஞ்சலின்.

“பாடு?”

பாடுகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். அவ்வளவுதான். செந்தில்நாதன் ‘க்ளுக்’ என்றொரு சந்தோஷ ஒலியை வெளிப்படுத்துகிறார். அடுத்த நிமிஷம் தொட்டு நாலு வரிகளை அவர் பாடும் வரை, துள்ளிக் குதிக்கிறார் செந்தில்நாதன். தாங்கமுடியாத மகிழ்ச்சி என்பார்களே.. அதைப் பார்க்க முடிகிறது அவர் முகத்தில், உடல் மொழியில். கால்கள் தரையில் நிற்க மறுத்துக் குதிக்கிற சந்தோஷம்.

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்கு:-

கண்கள் தெரியாது. மனவளர்ச்சியில் குன்றியவர். பெற்றவர்கள் விட்டுவிட்டுப் போய்விட எடுத்து வளர்த்தவர்கள் யாரோ. அவர்களில் தான் தாயாய் பாவித்து வந்தவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அவர் இறந்துவிட்டாரென்பதையும் இவரால் புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும் நடுவில் ஒரு பாடல் அவருக்களிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.

நமக்கு?

தோசைக்கு வைத்த சட்னியில் கொஞ்சம் கடுகில்லை என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.

செந்தில்நாதனாய் இருப்பதும் வரம்தான். என்ன, அது செந்தில்நாதனுக்குத் தெரிவதில்லை.
.

Friday, February 7, 2014

நேர்மைடா!

வன் அந்தக் கடையை விட்டு வந்தபோது வெளியே நின்றிருந்தார் ஒருவர். பழுப்பேறிய மேற்சட்டை. கிழிந்த பேண்ட்.

இவனைப் பார்த்ததும் அருகே வந்தார்.

“ப்ரதர்..”

நல்ல தெளிவான உச்சரிப்பு.

“ப்ரதர்... அந்தக் கடையில சாப்பிடறதுக்கு எதாவது வாங்கித் தர முடியுமா?”

அவர் கைகாட்டிய திசையில் ஒரு கையேந்திபவன்.

இவன் சில கணம் யோசித்தான்.

“காசு வேணாம் ப்ரதர். பசிக்குது. சாப்பிட ஏதும் வாங்கித் தாங்க”

அவர் கை, தானாக அவரது வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தது.

இவன் யோசித்து ஓர் இருவது ரூவாய்த் தாளை எடுத்தான்.

“இந்தாங்க... ஆனா.. இங்க பாருங்க.. சிகரெட், ட்ரிங்க்ஸுன்னு வாங்கக் கூடாது ஆமா..” - சொன்னான்.

“நோ ப்ரதர்... நீங்களே வாங்கிக் குடுங்க”

இவன் தலையாட்டினான்.

“இல்லல்ல... வாங்கிக்கோங்க. ஆனா இந்தக் காசுல..”

”சிகரெட்.. ட்ரிங்ஸ் வாங்க மாட்டேன் ப்ரதர். ப்ராமிஸ்” என்றார்.

இவன் அவர் கையில் காசைக் கொடுத்து விட்டு சற்றே தூரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனம் நோக்கிப் போனான். போகும்போது திரும்பித் திரும்பி அவரைப் பார்த்தபடியே இருந்தான்.

அந்தக் கையேந்தி பவன் கைவண்டியில் எதுவோ அவர் ஆர்டர் செய்வதும், அவர்கள் பார்சல் பேப்பர் எடுப்பதும் தெரிந்தது.

இவனது வாகனத்தில் அருகில் சென்று, சாவியைக் கொடுத்து வாகனத்தை திருப்பிக் கொண்டிருக்கும்போது அவர் கையில் சிறு பார்சலோடு திரும்புவதைப் பார்த்தான்.

இவன் வாகனத்தில் ஏறி, ஸ்டார்ட் செய்ய எத்தனிக்கும்போது, அவர், பூட்டப்பட்டிருந்த - சற்றே இருட்டிய கடை ஒன்றின் முன் அமர்வதைக் கண்டான்.

இவன் வாகனத்தை ஸ்டார்ட் செய்து நான்கைந்து அடி தாண்டி, ஒரு முறை திரும்பிய போது - கவனித்தான்.

அவர், தன் சட்டையை உயர்த்தி, இடுப்பிலிருந்து ஒரு மது பாட்டிலை எடுத்து மூடியைக் கழட்டிக் கொண்டிருந்தார்.

சற்றே ரௌத்ரம் தலைக்கேற, வண்டியை அவர் அமர்ந்திருந்த கடை முன் செலுத்தி, அவர் அருகே நின்றான்.

அவர் -பாட்டிலை உயர்த்திக் காண்பித்து,  கொஞ்சம் உரத்த குரலில்  சொன்னார்:

“ப்ரதர்... டோண்ட் வர்ரி.. இது உங்க காசுல வாங்கினதில்லை...”

.