*****
வாஆஆஆஆஆஆஆவ்!எத்தனை நாளாச்சு இப்படி ஒரு கலக்கலான திகில் படம் பார்த்து!*****
மாதவனின் கர்ப்பவதி மனைவி ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 24 மணிநேரமாகியும் டாக்டர்கள் திட்டவட்டமாக ஒன்றும் கூறாமல் இருக்க, மாதவனின் குடும்பமே அவள் பிழைப்பாளா, கர்ப்பம் கலைந்திருக்குமோ என்று கலங்கி நிற்க.. மாதவன் மணி பார்க்கிறார்.
மதியம் ஒன்று.
‘யாவரும் நலம்’ என்ற சீரியல் போடப்படும் நேரம். அவசர அவசரமாக அந்த சீரியல் பார்க்க வீட்டிற்கு காரில் பறக்கிறார் மாதவன்.
மனைவி ஐ.சி.யு-வில். கணவன் சீரியல் பார்க்க ஒடுகிறானா... நம்பமுடிகிறதா?
ஆம். அந்த சீரியலைப் பார்த்து, தன் மனைவி பிழைப்பாளா மாட்டாளா என அறிந்து கொள்கிறார்.
நம்பமுடிகிறதா?
நமது வாழ்வில் தவிர்க்க முடியாத பொருளாகிவிட்ட தொலைக்காட்சியில் உங்கள் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகள் அச்சு அசலாக – ஆள் மட்டும் வேறாக – ஒளிபரப்பட்டால் எப்படி இருக்கும்?
அதுதான் நடக்கிறது மாதவனுக்கு.
அண்ணன், அண்ணி, அவரது குழந்தைகள், தனது மனைவி, தங்கை, அம்மா- என அழகான குடும்பம். புதியதாக கடனில் வாங்கிய ஃப்ளாட்டில் குடிபோகிறார்கள். ஃப்ளாட் நம்பர் 13 B. லிஃப்ட் மாதவன் போகும்போது மட்டும் வேலை செய்வதில்லை. பூஜையறை சுவற்றில் ஆணி அடித்து சாமி படம் மாட்டமுடியவில்லை. செல்ஃபோனில் தனது படத்தை எடுத்தால் கோணல்மாணலாக வருகிறது. இதையெல்லாம் ஆரம்பத்தில் சாதாரண நிகழ்வுகளாகத்தான் எடுத்துக் கொள்கிறார் மாதவன்.
குடிபோன அன்றே மதியம் ஒரு மணிக்கு (அதாவது டிஜிட்டல் கடிகாரம் 13 எனக்காட்டும்போது!), சீரியல் பார்க்க அம்மா, மாதவன் மனைவி, அண்ணி உட்கார சேனல் 13ல் நிற்கிறது. வேறு சேனலை மாற்ற முடியவில்லை. சரி என்று பார்க்க, யாவரும் நலம் என்ற சீரியல் ஒரு குடும்பம் புதிய வீட்டிற்க்கு வருவதில் ஆரம்பமாகிறது.
மாதவன் ஒரு நாள் அந்த சீரியலைப் பார்க்க நேர்கையில், இவர் வீட்டில் நடந்த சம்பவங்களே அதில் காட்டப்படுவதை கவனிக்கிறார். அந்த நாளில் சீரியலில் அண்ணனாக வரும் கதாபாத்திரம் தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்.
வீட்டிற்கு வரும் மாதவனின் அண்ணன் அதே போல தனக்கு பிரமோஷனும், 10000 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்திருப்பதாகச் சொல்ல திகிலடிக்கிறது மாதவனுக்கு.
தொடர்ந்து பக்கத்து ஃப்ளாட்டில் வசிக்கும் கண்ணில்லாதவரின் நாய் தன் வீட்டு வாசலுக்குள் வராமல் குரைத்துக் கொண்டே இருக்க.. சந்தேகமடைந்த மாதவன் வீட்டு வாசலுக்கு வெளியே நின்று தனது செல்லில் தன்னையே படம் பிடிக்கிறார். நன்றாக இருக்கிறது. அரையடி பின்னே வந்து வீட்டிற்குள் நின்று படம் பிடிக்கிறார். கோணல் மாணலாகிறது. வீட்டிற்குள் ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார் மாதவன்.
இடையிடையே அந்த சீரியல் சம்பவங்கள் அதனதன் படியே தனது குடும்பத்தில் நடக்க.. சீரியல் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு போகிறார். அங்கே குஷ்பு வேறொரு ஜாக்பாட் டைப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். மணி 1. சந்தேகமடைந்த மாதவன் அருகிலுள்ள ஷோரூம் ஒன்றிக்கு சென்று அந்தக் குறிப்பிட்ட சேனலைப் போட அது ‘யாவரும் நலம்’ என்ற பெயரில் குஷ்பு நடத்தும் நிகழ்ச்சிதான். சீரியல் அல்ல. மாதவனின் வீட்டில் மட்டும்தான் அது சீரியலாகத் தெரிகிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை தனது போலீஸ் நண்பன் துணையுடன் துப்பறிகிறார். அந்த சீரியலில் தனது குடும்பமே கொல்லப்பட்டதாய்க் காண்பிக்கப்படுவதை அறிந்த மாதவன்.. அது நடக்காமல் காப்பாற்றினாரா என்பதை வெள்ளித்திரையில் நிச்சயமாகக் காண்க.
மாதவனுக்கு அசத்தலான வேடம். ஹீரோ என்ற எந்த கிரீடமுமில்லாமல் ஒரு குடும்ப வேடத்தை கன கச்சிதமாகச் செய்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக தனது வீட்டை அமானுஷ்யம் ஆட்டிப்படைக்கிறது என அறியும்போது முகபாவங்களில் அதிர்ச்சியைக் காண்பிப்பதிலாகட்டும், சீரியலில் தனது குடும்பமே சுத்தியலால் அடிக்கப்பட்டு கொலையாவதை அறிந்த அவர், க்ளைமாக்ஸ் பார்க்கும்போது அந்தக் கொலைகாரன் அவர்தான் என்பதை சீரியலில் பார்த்து, தன்னால் தன் குடும்பத்திற்கு நேரும் ஆபத்தைத் தவிர்க்கப் போராடுவதிலாகட்டும்.. மாதவன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வேறு எல்லா கேரக்டர்களும் அவரவர்கள் பணியை அற்புதமாக எந்த மிகையுமில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சீரியல் விஷயத்தைச் கேட்ட மாதவனின் போலீஸ் நண்பன் சிரிக்கிறார். மாதவன் அவரை நம்ப வைக்க மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல, சீரியலில் தம்பி கதாபாத்திரம் அவனது போலீஸ் நண்பனை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாய் காண்பிகிறார்கள். அடுத்த சீன் அந்த போலீஸ் நண்பன் மனைவிக்கு ஏதோ ஆபத்து நிகழ்வதாய்க் காண்பிக்கப்பட, மாதவன் நண்பனை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக அவன் வீட்டிற்கு செல்ல... அங்கே கேஸ் அடுப்பு லீக் ஆகி வீடுமுழுவதும் வாசனை!
போலீஸ் நண்பன் மாதவனிடம் சொல்கிறார்: “டேய் அந்த சீரியல்ல போலீஸ் கேரக்டருக்கு என்ன ஆகுதுன்னு டெய்லி கேட்டு சொல்டா. அந்த கேரக்டர் வர்ற நேரம் காய் நறுக்கப் போகவேண்டாம்னு சொல்டா” என்பது கலகல.
இசை – சங்கர் எஷான் லாய். திகிலாகத்தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அளவுக்கதிகமான இரைச்சல். ஒளிப்பதிவு படத்தின் திகிலூட்டலுக்கு நல்ல உறுதுணை புரிந்திருக்கிறது. அதுவும் 1977களில் நடக்கும் ஃப்ளாஷ்பாக் சீன்களில் காமிரா..விளையாடியிருக்கிறது. (பி.சி.ஸ்ரீராம்க! சும்மாவா!!)
நான் உமா, மீரா மேகாவோடு போனேன். குழந்தைகள் பயந்து பயந்து விழுகிறார்கள். க்ளைமாக்ஸில் உமாவும் கண்ணைமூடி, காதைமூடி உட்கார்ந்து விட்டார். குழந்தைகளை அழைத்துப் போகாவிட்டாலும், மனைவியை அழைத்துப் போங்கள். நம் மனைவி பயப்படுவதைக் கண்முன்னே காணலாம். (என்னா வில்லத்தனம்!)
ஒரே நேரத்தில் ஹிந்தியில் 13B, என்ற பெயரிலும், தமிழில் யாவரும் நலம் என்ற பெயரிலும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் விக்ரம்.கே.குமார். இப்படி ஒரு கதையை 90% லாஜிக்கோடு கொண்டு சென்றது இயக்குனரின் பலம். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்... கைகுடுங்க விக்ரம் என்று சொல்ல வைக்கிறது. ஆவி, அமானுஷ்யங்கள் குறித்த நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால் எந்தக் குறையும் இல்லை.
மாதவன் தனது வீட்டின் கதை என்று உணர்ந்தை அவர் குடும்பம் உணராதது ஏன்? சீரியலை தனது உறவினரோடு பகிர்ந்து கொள்ளும் சரண்யாவுக்கு மற்ற வீடுகளில் இந்த சீரியல் இல்லை என்பது தெரியாமல் போனது எப்படி, அது ஏன் லிஃப்ட், செல்ஃபோன் தொந்தரவுகள் மாதவனுக்கு மட்டும்? – போன்ற லாஜிக் ஓட்டைகளை தாராளமாக மன்னித்து படத்தைப் பார்த்து பயந்து நடுங்கி வரலாம்.
யாவரும் நலம் – யாவரும் பார்க்க.