Saturday, August 2, 2014

வரம்!

அலுவலகத்தில் சிலபல டென்ஷன்ஸ். சிரிக்க மறந்து நாளாகிவிட்டது. மெய்ல், வாட்ஸப் நட்பு வட்டங்களிலிருந்து நான் ஒதுங்கி - அவர்களும் என்னை ஒதுக்கி - மாதங்களாயிற்று. சம்பிரதாய ஹலோ ஹாய்களுடன் கழிகிறது காலம். புன்னகைக்கு பதில் டார்கெட்களும், கைகுலுக்கல்களுக்குப் பதில் கமிட்மெண்ட்களுமாய் இடமாறிவிட்டிருக்கிறது காலச்சுவடில். ‘படிக்க நேரமில்லையா.. சிரிக்க நேரமில்லையா..’ என்றொரு காலத்தில் எதிர்ப்படுவோரிடமெல்லாம் கேட்டவனுக்கு ‘இதற்கெல்லாம் நேரம் மட்டுமில்லை, மனதும் சூழலும் வாய்க்க வேண்டும்’ என்று எதுவோ உணர்த்திக் கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் அதேபோன்றதொரு மனதுடன் வீடடைந்து, வழக்கமாய் ரெகார்ட் ஆகியிருந்த மகாபாரதம், சூப்பர் சிங்கரைப் பார்க்க ஆரம்பித்தேன். வாழ்வே குழம்பியிருக்க, பாரதம் சீரியலில் - அர்ஜுனனை - குழப்பிக் கொண்டிருந்தார் கிருஷ்ணர். முடிந்ததும் சூப்பர் சிங்கர்.

அசுவாரசியமாய்ப் பார்த்துக் / கேட்டுக் கொண்டிருந்த என்னை நிமிரச் செய்தது செந்தில்நாதன் வருகை.

வந்தவர், ‘பத்ரி, ஏஞ்சலின்னா யாரு?; என்கிறார். அவருக்கு எல்லாருமே பத்ரிதான்.

ஓடிவருகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். சூப்பர் சிங்கரின் டாப் 20 போட்டியாளர். அவர் கையைப் பற்றி, வருடியபடி கேட்கிறார் செந்தில்நாதன்:-

“ஏஞ்சலினுக்கு டெல்லிக்கு ராஜான்னாலும் தெரியுமா?”

“தெரியும்” - ஏஞ்சலின்.

“பாடு?”

பாடுகிறார் குட்டிப்பாப்பா ஏஞ்சலின். அவ்வளவுதான். செந்தில்நாதன் ‘க்ளுக்’ என்றொரு சந்தோஷ ஒலியை வெளிப்படுத்துகிறார். அடுத்த நிமிஷம் தொட்டு நாலு வரிகளை அவர் பாடும் வரை, துள்ளிக் குதிக்கிறார் செந்தில்நாதன். தாங்கமுடியாத மகிழ்ச்சி என்பார்களே.. அதைப் பார்க்க முடிகிறது அவர் முகத்தில், உடல் மொழியில். கால்கள் தரையில் நிற்க மறுத்துக் குதிக்கிற சந்தோஷம்.

செந்தில்நாதனைத் தெரியாதவர்களுக்கு:-

கண்கள் தெரியாது. மனவளர்ச்சியில் குன்றியவர். பெற்றவர்கள் விட்டுவிட்டுப் போய்விட எடுத்து வளர்த்தவர்கள் யாரோ. அவர்களில் தான் தாயாய் பாவித்து வந்தவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்காது. அவர் இறந்துவிட்டாரென்பதையும் இவரால் புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும் நடுவில் ஒரு பாடல் அவருக்களிக்கும் மகிழ்ச்சி அளப்பரியது.

நமக்கு?

தோசைக்கு வைத்த சட்னியில் கொஞ்சம் கடுகில்லை என்பதெல்லாம் பெரிய பிரச்சினையாகிவிடுகிறது.

செந்தில்நாதனாய் இருப்பதும் வரம்தான். என்ன, அது செந்தில்நாதனுக்குத் தெரிவதில்லை.
.