Thursday, December 31, 2009

2009 - சொல்லாததும் உண்மை!

நாளைக்கு நியூ இயர். போன நியூ இயர்ல என்னென்ன நடந்ததுன்னு திரும்பிப் பார்க்கிறேன்.

முக்கியமா சொல்லணும்னா – பெரிசா எதுவும் நடந்துடல. ஆனா பெரிசா சொல்லணும்னா முக்கியமா பலவிஷயம் நடந்தது.

அதுல ஒரு நாலு மேட்டரை வரிசைப்படுத்தறேன். படிக்கற நெருங்கிய நண்பர்கள் இதை ஏன் இவ்ளோ நாளா என்கிட்ட சொல்லலன்னு திட்டாதீங்க.. ப்ளீஸ்...

*************************************

யுவன் ஷங்கர் ராஜாவைச் சந்திச்சது:

அரவிந்தன் பட இசை வெளியிட்டப்போ என் நண்பன்கிட்ட சொன்னேன்: “டேய்.. கார்த்திக் ராஜாவை விட யுவன் பெரிய ஆளா வருவாரு பாருடா”ன்னேன். (சந்தேகமிருக்கறவங்க எனக்கு மெயில் அனுப்பினா அந்த நண்பனோட நம்பர் தர்றேன். ஆமாம்பான் அவன்.) அதே மாதிரி எங்கெங்கயோ போயி இதோ பையா வரைக்கும் கலக்கீட்டு இருக்காரு.

எப்படியாவது அவரைச் சந்திக்கணும்னு பலமுறை முயற்சி பண்ணி போன மே மாசம் சென்னை போயிருந்தப்ப அது நடந்துச்சு. ஆனா சரியா பேசமுடியல. அவர் ஸ்டுடியோவுக்கு ராத்திரி நேரம்தான் வருவாருன்னு நம்ம நண்பர் சொல்ல, காத்திருந்து சரியா 11.45க்கு சிரிச்சுட்டே வர்றாரு. ‘ஹாய் கிருஷ்ணா.. ஸாரி கொஞ்சம் லேட்’ங்கறாரு. என்கிட்ட இல்ல. வேறொரு கிருஷ்ணாகிட்ட. எங்களைக் கூட்டீட்டு போனவரைப் பார்த்து சிரிக்கறாரு. அவரும் என்னைக் காமிச்சு ‘உங்களோட ஃபேன்’ன்னு சொல்றாரு. ‘ஓ’ன்னு சிரிச்சுட்டு கை குடுத்தாரு. அப்புறம் உள்ள போய்ட்டாரு. நான் ரெண்டு வார்த்தை பேசலாம்னு நெனைச்சேன். ஆனா முடியல. விடிய விடிய ரெகார்டிங் நடக்கும்னாங்க. நான் தூரத்திலேர்ந்து அரைமணி நேரம் பார்த்துட்டு வந்துட்டேன்.

*****

ச்ச்சின் டெண்டுல்கர் - ஒரு பயணமும், ஆட்டோக்ராஃபும்


என்னதான் சொல்லுங்க. சச்சின் சச்சின்தான். அந்தாளுமேல என்ன விமர்சனக் கணையை செலுத்தினாலும் சிக்ஸருக்கும், ஃபோருக்கும் அனுப்பீட்டே இருக்காரு. அந்த வகைல நான் சச்சினோட மிகப்பெரிய ஃபேன். அவரு கொச்சின் வந்திருந்தார் ஏதோ ஒரு விளம்பர ஷூட்டிங்குக்கு. எனக்கு அந்த விளம்பர கம்பெனியோட ப்ரொடக்‌ஷன் மேனேஜர் பயங்கர ஃப்ரெண்டு. சின்ன வயசுல 25 ரூபா கடன் வாங்கிட்டு இன்னமும் தர்ல. ‘அந்த நன்றிக்கடனை எப்படியாவது அடைக்கறேண்டா’ன்னு சொல்லீட்டே இருப்பான். அத இந்த காரியம் மூலமா செஞ்சும் காமிச்சுட்டான்!




ச்ச்சின் கொச்சின் (என்னா ரைமிங்கு) வர்றதுக்கு ரெண்டு வாரம் முன்னாடியே எனக்கு தகவல் சொல்லீட்டான். “டேய் நண்பா... ரொம்ப ரகசியமான மேட்டர். நீ மட்டும் வந்துடு. யார்கிட்டயும் சொல்லிடாத”ன்னு. அதே மாதிரி ‘ரொம்ப எதிர்பார்த்துட்டும் இருக்காத. ஒருவேளை டூப் வெச்சு எடுக்கறா மாதிரி இருந்தா அவர் வர்றது கேன்சலாகறதுக்கும் சான்ஸ் இருக்கு’ன்னான்.

நமக்கென்ன, போலாம் முடிஞ்சா பார்க்கலாம்.. இல்லையா கேரளால பார்க்கறதுக்கு ஃபிகரா இல்ல? ரசிச்சுட்டு ரிட்டர்ன் அடிக்கலாம்னு முடிவு பண்ணி போனேன். ஹோட்டல்ல தங்கியிருந்தேன். அந்த நாளும் வந்தது. என் நண்பன் சொன்னான்: ‘சச்சின் வர்றது ஆல்மோஸ்ட் கன்ஃபர்ம் ஆயிடுச்சு. ஏழரைக்கு ஃப்ளைட்”ன்னு. டைமே ஏழரையா? அதுசரின்னு நெனைச்சுட்டேன். ஏழரை, எட்டு, எட்டரை, ஒம்பது.. ம்ஹூம். என் ஃபெரெண்டுகிட்டேர்ந்து ஒரு ஃபோனும் வர்ல. ரெண்டு மூணு வாட்டி ஃபோன் பண்ணினேன். ரிங் போகுது எடுக்கல. திடீர்னு சுவிட்ச் ஆஃப். ஆஹா’ன்னு கமுந்தடிச்சு படுக்கப் போனா, ஹோட்டல் ரூமுக்கு ஃபோன். எடுத்தா அவன்தான். ‘சீக்கிரம் கீழ வாடா. ரிசப்ஷன்லதான் இருக்கேன்’ன்னு.

அவசர அவசரமா ஓடினா அவன் என்னை இழுத்துட்டு வெளில நின்னுட்டிருந்த காரைப் பார்த்து ஓடி, கார்க்கதவைத் திறந்து என்னை தள்ளி, அவன் முன்னாடி ஏறிட்டான். “எங்கடா இப்படி அவசரமா கூட்டீட்டு போற? சச்சின் வந்தாச்சா வர்லியா”ன்னு கேட்டேன். “உஷ்ஷ்ஷ்ஷ்”ன்னு கத்தினவன் பின்சீட்ல என் பக்கத்துல இருந்தவர்கிட்ட “ஸாரி ஸார்”ன்னு சொல்லும்போதுதான் அவரைப் பார்த்தேன்.

சச்சின்!


ஏர்போர்ட்டுக்கு அவருக்கு அனுப்பின கார் ப்ரேக் டவுன் ஆகவும், இவனை கார்ல் அனுப்பிருக்காங்க. போற வழிலதான் என் ஃப்ரெண்ட் தங்கீருக்கற ஹோட்டல் இருக்கு’ன்னுருக்கான். அதுக்கு சச்சின் ‘வரட்டும் நோ ப்ராப்ளம்”னுருக்காரு, அதுமட்டுமில்லாம “டோண்ட் டெல் நவ். வி வில் பிக் அப் ஹிம் அண்ட் லெட்டஸ் கிவ் ஹிம் எ சர்ப்ரைஸ்”ன்னிருக்காரு.



என்ன ஒரு மனுஷன். அந்த இருவது நிமிட கார் பயணமும் விடிய விடிய ஷூட்டிங்கில் அவரோடு இருந்த அனுபவமும். அவர்கிட்ட வாங்கின ஆட்டோக்ராஃபும்.... மறக்கமுடிகிற விஷயமா என்ன!

***********************************

ப்ரகாஷ்ராஜ் எனும் அற்புதக் கலைஞன் சந்திப்பு


ஈஷா யோக மையம் சார்பாக திருப்பூரில் 25000 மரக்கன்றுகள் நடும்விழா. சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் எங்கள் முதலாளியின் கெஸ்ட் ஹவுசில் தங்குவதாக ஏற்பாடு. சத்குரு அவர்கள் இங்கே தங்கியிருக்கும் விஷயமறிந்த பிரகாஷ்ராஜ் அதிகாலை அந்த கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். உடன் வந்தவரிடம் நான்தான் முகவரி சொல்கிறேன். வாசலுக்கு வந்து வரவேற்கிறேன். ‘ஹாய் செல்லம்’ என்றபடி இறங்குகிறான் அந்த மகா கலைஞன். உடன் ஸ்ரேயா. அந்த வாரம்தான் கந்தசாமி வந்த வாரம்.




’யார் வீடு இது.. இவ்வளவு அழகாய்.. நேர்த்தியாய் என்று கேட்கிறார். நான் ஆங்கிலத்தில் பேச் ஆரம்பிக்கிறேன். “உங்களுக்கு தமிழ் தெரியும்னா அதுலயே பேசலாம். எனக்கு அதுதான் பிடிக்கும்” என்கிறார். சந்தோஷமாய் பேசுகிறேன்.



இரண்டு மணிநேரம் அந்த விழாவுக்குப் போய் வந்ததுபோக, மற்ற நேரம் முழுவதும் எங்களோடு கழித்தார்கள். பழகுவதற்கு இனியவராய் இருந்த அந்தக் கலைஞன் தேசியவிருதுகளுக்கு அப்பாற்பட்ட கலைஞன் என்பதை மட்டும் அறிந்தேன்.

*******************

இளையராஜாவுடன் ஒரு அலைபேசிப் பாடல்


இது நெஜமா நடந்ததான்னு இப்பவரைக்கும் என்னால நம்பவே முடியல. மூணு நாலு மாசத்துக்கு முந்தி ஒரு நாள். என் சென்னை நண்பர் கூப்டாரு. “கிருஷ்ணா.. அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ இந்தப் பாட்டை பாடமுடியுமா?” ன்னு கேட்டாரு. உடனே நாலைஞ்சு வரி பாடினேன்.

உடனே அவரு ‘இப்ப இல்லை. கரெக்டா காலைல ஏழரைக்கு. (இங்கயுமா ஏழரை?) சார் ஏழு மணிக்கு ஸ்டுடியோ வருவாரு. அரைமணி நேரம் கழிச்சு பாடிக்காமி. ஃபோன்ல”ன்னார். “யாருக்கு பாடிக்காட்டணும்? அவரென்ன இளையராஜாவா பாடிக்காட்ட?’ன்னு கிண்டலா கேட்டேன். அவர் “ஆமா ராஜா சாருக்குத்தான்”ன்னாரு பாருங்க. தூக்கி வாரிப்போட்டுது எனக்கு! ரெண்டு மாசம் கழிச்சு துபாய்ல ஏதோ ஷோ இருக்காம். அதுக்கு இந்தப் பாட்டை மட்டும் பாட ஒரு புது வாய்ஸ் கேட்கணும்னாரு”ன்னார். சும்மா சொல்றாரு போலன்னு நெனைச்சேன்.

ஆனா கரெக்டா அடுத்த நாள் கூப்டுட்டார் அந்த நண்பர். ரொம்ப மரியாதையா – மெல்லிசா - பேசினாரு. “இரு சார்கிட்ட தர்றேன்னான்” எனக்கு ஒரு மண்ணும் புரியல. பேசாம இருந்தேன். திடீர்னு அவரோட கரகர மேஜிக் வாய்ஸ்..“பாடு தம்பி”ன்னுது. அவ்ளோதான்.. தொண்டைலேர்ந்து வெறும் காத்துதான் எனக்கு வந்தது. சமாளிச்சுட்டு ‘அமுதே தமிழே’ன்னு ஆரம்பிச்சேன். ரெண்டே வரிதான். ‘சரணம் பாடு’ன்னாரு. ‘தேனூறும் தேவாரம் இசைப்பாட்டின் ஆதாரம்...’ன்னு ஆரம்பிச்சேன். ‘போதும் போதும்ப்பா’ன்னுட்டு இந்தான்னு என் ஃப்ரெண்டுகிட்ட ஃபோனைக் குடுத்துட்டாரு.

ரெண்டு மணிநேரம் கழிச்சு என் ஃப்ரெண்டு ஃபோன் பண்ணி “ஸாரிப்பா. ராஜா சாருக்கு திருப்திப்படல”னாரு. போய்த் தொலையுது. எப்பேர்ப்பட்ட கலைஞன்கிட்ட பேசினேன் நான்-ங்கற சந்தோஷம் போதாதா எனக்கு!


2010ல?

ஒரே ஒரு ஆசைதான்.

இப்படி நாலுல மூணு புருடாங்கற நிலை மாறி, எல்லாமே சொல்லிக்கறா மாதிரி நடக்கணும். அவ்ளோதாங்க!


.

Wednesday, December 30, 2009

3 IDIOTS – A Genius Movie!


ருட இறுதியில் பார்க்கும் ஒரு படம் மனதுக்கு நிறைவாய் அமைவது எவ்வளவு சந்தோஷமான விஷயம்! இந்த சந்தோஷத்தைத் தருகிறது 3 இடியட்ஸ்.

***********************

விமானம் எடுக்கப்பட்டு விட்டது. சீட் பெல்ட் போட்டுக் கொண்டிருக்கும் மாதவனுக்கு ஒரு அழைப்பு வருகிறது. பணிப்பெண் செல்ஃபோனை ஆஃப் பண்ணச் சொல்லித் திட்டத்திட்ட எக்ஸ்யூஸ் கேட்டபடி பேசுகிறார். பேசி முடித்ததும் வியர்க்க விறுக்க எழுந்து, நிற்க முடியாமல் தடுமாறி விழுந்து மயக்கமாகிவிட, அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்படுகிறது.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வைத்து, மாதவனை படு ஸ்பீடில் விமானநிலைய வாசல் நோக்கி மருத்துவக்குழு கொண்டு செல்ல நைஸாக கண்விழிக்கும் மாதவன் - எழுந்து - இரண்டு மூன்று சிம்பிள் எக்ஸர்சைஸ் செய்து காட்டி “ஐம் ஓகே.. நீங்க போகலாம்” என்றுவிட்டு ஓடிவிடுகிறார்.

இந்த ஆரம்பக்காட்சியிலேயே கட்டிப்போட்டு விடுகிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அங்கிருந்து கிளம்பும் மாதவன், தன் இன்னொரு நண்பன் ஷர்மானையும் அழைத்துக் கொண்டு அமீர்கானைத் தேடி புறப்படுகிறார்கள்.

படம் முழுவதுமே இந்தத் தேடல்தான். க்ளைமாக்ஸில்தான் அமீர்கானைக் காண்கிறார்கள். அதுவரை இவர்களின் கல்லூரி நினைவுகளின் ஃப்ளாஷ்பேக்தான்.

ஒரு நண்பன் விமானத்திலிருந்து இறங்கியும், இன்னொரு நண்பன் மனைவியை விட்டுவிட்டும் இப்படி ஒரு நண்பனைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்களா? இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்று ஒரு இடத்தில்கூட தோன்றவில்லை. அமீர்கானைப் போன்ற நண்பன் கிடைத்தால் இதற்கு மேலும் செய்யலாம்!

ராகிங் நடக்கும்போது வானத்திலிருந்து குதித்து ஹீரோயிஸமெல்லாம் காட்டவில்லை. ஆனால் அறிவார்த்தமாக ஹீரோவாகிறார். இப்படித்தான் படம் நெடுக. இறுதிக்காட்சியில் ‘நான் ஜெயிச்சுட்டேன்ல’ என்று அந்த படிப்பாளி நண்பன் சதூர் சொல்லும்போது அமீர்கான் தான் யார் என்பதை வெளிக்காட்டும் காட்சி வரை இந்த சஸ்பென்ஸ் ஒவ்வொரு காட்சியிலும் வருகிறது.

அதுவும் இடைவேளைக்கு முன் அமீர்கானைக் கிட்டத்தட்ட நெருங்கிய மாதவனும், ஷர்மானும் போய்ப் பார்க்கும்போது அங்கே ஜாவேத் ஜஃப்ரி அமர்ந்து கொண்டு ‘சொல்லுங்க நான் தான் ரஞ்சோர்தாஸ்’ என்று சொல்ல அதிர்ச்சியடையும் இவர்கள் சுவரில் பார்க்கும்போது இவர்கள் கல்லூரியில் எடுத்த புகைப்படத்தில் அமீர்கானுக்குப் பதில் ஜாவேத் ஜஃப்ரி இருக்கிறார். அப்படியென்றால் அமீர்கான்?

இடவேளைக்குப் பிறகு சூடுபிடிக்கும் படத்தில் பாருங்கள்!



இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கு சல்யூட்! சேட்டன் பகத்தின் FIVE POINT SOMEONE நாவலைத் தழுவி எடுக்கப்பட்டாலும், முழுக்க முழுக்க தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குனர். முன்னாபாய் எம்பிபிஎஸ், லஹே ரஹோ படங்களைப் போலவே இதிலும் வசனங்கள் (ஹிரானி + அபிஜத் ஜோஷி) படுஷார்ப். நல்ல சிரிப்பையும், சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கும் வசனங்கள். அதுவும் இந்திய கல்வித் திட்டத்தை படம் முழுக்க கேள்விகளால் கிழித்துத் தொங்க விட்டிருக்கும் அவரை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.

கேமரா - முரளிதரன். சிம்லாவை இவ்வளவு அழகாய் நான் பார்த்ததில்லை. (பார்த்ததேயில்லைங்கறது வேற விஷயம்!) லே லடாக் சாலையில் அந்த கார் செல்வதை இப்படியெல்லாம் காட்ட முடியுமா! வெல்டன்!

ஷர்மான், பேமன் ஈரானி, கரீனா, கரீனாவின் சகோதரி என எல்லா கேரக்டரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். சின்னச் சின்ன (அல்லது நாம் அப்படி நினைக்கும்) கேரக்டருக்கும் இயக்குனர் மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அந்த ஹாஸ்டல் சிறுவன், கரீனாவின் நிச்சயிக்கப்பட்ட மணமகன் (Price Tag!), பேமான் ஈரானிக்கு முகச்சவரம் செய்யும் நபர் என்று எல்லாருமே கச்சிதம் என்றாலும் அந்த ஹாஸ்டல் சிறுவன் கவர்கிறான்!

தன் ஈகோவை விட்டு, பேமன் ஈரானி மழைநாளில் அமீரிடம் சரணடையும் காட்சியில் அவர் நடிப்பு அபாரம். அதேபோல, அந்த ALL IS WELL எல்லா இடங்களிலும் சொல்லப்பட்டாலும், பிறந்த குழந்தை அழாமலிருக்கும்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சி... க்ளாஸ்!


மொத்தத்தில் -

3 IDIOTS - A GENIUS MOVIE!

(முன்னாபாய் வசூல்ராஜா ஆனதுபோல, இது தமிழில் வருமா என ஏங்க வைக்கிறது. வந்தால் சூர்யா மிகவும் ஆப்டாக இருப்பார்.)


.

Tuesday, December 29, 2009

ச்சும்மா....

அங்கங்கே பலர் உதிர்த்த சில முத்துக்கள்........


மீபத்தில் ஈரோட்டு சங்கமத்தின் போது பிரபலங்கள் சிலர் வலைப்பூ எழுதாமல் அடிக்கடி ட்விட்டரில் தென்படுகிறார்களே என்பது பற்றிய பேச்சு வந்தது.

“ட்விட்டர்ல 146 கேரக்டர் இருக்கு” என்று அப்துல்லா ஆரம்பித்தார்... நான் கேட்டேன்.. “அதுனால போய்ட்டீங்களா.. இல்ல ப்ளாக்கர்ல வால்பையன் மாதிரி கேரக்டரெல்லாம் இருக்கேன்னு பயந்து போய்ட்டீங்களா?”

********************

சென்னையில் இரண்டாம் தளத்தில் உள்ள அப்துல்லா அறைக்குச் செல்ல கீழே லிஃப்டிற்காகக் காத்திருக்கிறோம். ‘என்னா.. யூத் மாதிரி இருந்துகிட்டு, லிஃப்டுக்கு வெய்ட் பண்றீங்க? படியேற முடியாதா’ என்று கேட்கிறார் ஒரு நண்பர். உடனே சட்டென்று சொல்கிறான் சகா கார்க்கி..

“லேட்டஸ்ட் டெக்னாலஜியைப் பயன்படுத்தறவன்தான் யூத். படியேறிப் போய் எனர்ஜியை வேஸ்ட் பண்றதெல்லாம் ஓல்டு!”

************************

ஈரோடு நிகழ்ச்சில அனானி கமெண்ட்ஸ் பத்தி பேச்சு வந்தது. அனுமதிக்கலாமா, அனுமதிக்கக் கூடாதா.. சரியா தவறான்னு போட்டு கிழிச்சுட்டிருந்தாங்க.

திடீர்னு ஒரு பாவமான குரல் ஒலிச்சது..

“அனானி கமெண்ட் சரியா தப்பா, வேணுமா வேணாமான்னெல்லாம் பேசிகிட்டே இருக்கீங்களே... ஒரு கமெண்டும் வராம அனானியாவது கமெண்ட் போடமாட்டானான்னு காத்திட்டிருக்கற எங்களை மாதிரி ஆளுகளைப் பத்தி யோசிச்சீங்களா?”

திரும்பிப் பார்த்தா - தண்டோரா!

அவருக்கு ஒரு முப்பது கமெண்ட் பார்சேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏல்ல்ல்ல்..

**********************

விவேக், வடிவேலு பற்றிப் பேச்சு வந்தது.

“என்ன இருந்தாலும் விவேக் இண்டலெக்ச்சுவல்தானே?”

“மக்களோட மனசைப் படிக்கணும்டா. இல்லாம சும்மா அறிவுரையே சொல்லிகிட்டிருந்தா அது மெண்டலெக்ச்சுவல்!”

***************************

நாங்கள் போன ஆட்டோக்காரன், பஸ்ஸுக்கும், காருக்கும் இடையில் புகமுடியாத ஒரு இடைவெளியில் தன் ஆட்டோவைச் செலுத்தியபோது..

“அமிதாப்பச்சன் சென்னைல இருந்தா அவன் காலுக்கடில கூட ஓட்டீட்டுப் போவானுக”

***************************

ரமேஷ் வைத்யா ஒரு ஹோட்டலுக்குப் போய் பில் போடும் இடத்தில் ஒரு செட் இட்லி ஆர்டர் செய்திருக்கிறார்.

பில் போடுபவர்:- ‘சாப்பிடவா.. பார்சலா?’

ரமேஷ்:- “சாப்பிடத்தான். பார்சல்!”


முக்கியக்குறிப்பு: இந்த மொக்கையை நானும் பலதடவை சொல்லியிருக்கிறேன். ‘ஏங்க.. பார்சல்னாலும் சாப்பிடத்தானே’ என்றோ ‘பார்சல்ன்னா சாப்பிடக்கூடாதா?’ என்றோ கேட்பேன். இவர் அவன் கேட்டதையே திருப்பிச் சொல்வதுபோல் இரண்டே வார்த்தையில் நச்சென்று சொல்லியதில்தான் சூட்சுமம் இருக்கிறது. சிறுகதை எழுத இந்தச் சொற்பிரயோகம் மிகமுக்கியம்!

***************************

அறையில் அப்துல்லா தனது கணீர்க்குரலில் ஒரு பாடல் பாடுகிறார். தண்ணிலையிலும் எல்லோரும் தன்னிலை மறந்து கைதட்ட, சிலர் அவரைப் பாராட்டிப் பேச.. ஒருத்தர் ‘உன் காலைக் கொண்டா.. விழணும் அதுல’ என்று இடையிடையே சொல்கிறார். அவரது குரல் எங்கள் பாராட்டுக்கிடையே சரியாகக் கேட்கப்படவில்லை. இப்போது அவர் உரத்தகுரலில்.. ‘உன் காலைக் கேட்கறேன்.. காமிக்க மாட்டீங்கற?’ என்கிறார்.

உடனே அங்கிருந்த நண்பர்-குறும்பட இயக்குனர்- சாரதாகுமார் சொல்கிறார்..

“அவரே நாங்க பாராட்டற பாராட்டுல ‘தலைகால்’ புரியாம இருக்காரு..”

**************************

ராசி பட இயக்குனர் முரளிஅப்பாஸ் வந்தார். பெயர்க்காரணம் கேட்டோம். அதன் அப்பா பெயரான அப்பாசாமி-யின் சுருக்கம்தான் அப்பாஸ் என்றார். ‘நான் ரம்பாவின் ரசிகன். நீங்க ரம்பாவை வெச்சுப் படம் எடுத்திருக்கீங்க’ என்று கைகொடுத்தேன். கொஞ்ச நேரப் பேச்சின்போது ஒரு கவிதைக்கு தொடைதட்டி ரசிக்க நண்பர் சந்தோஷ் சொன்னார்..

“ரம்பா ரசிகருல்ல, அதான் தொடைல தட்டறீங்க”

(ஆனா நான் என் தொடைலதானே தட்டினேன்....)

***************************

ஒரு நண்பரிடம் கேட்கப்படுகிறது..

“நீங்க பொறந்து வளர்ந்தது எங்க?”

அவர்: “வேலூர்”

உடனே கார்க்கி: “எந்த செல்லுல?”

******************

கார்க்கியை ‘டா’ போட்டு ஒரு நண்பர் அழைத்தபோது, இன்னொருவர் சொன்னார்.

“எனக்கும் கார்க்கியை அப்படிக் கூப்பிடணும்ன்னு தோணுது. ஆனா அவர் தப்பா நெனைப்பாரோன்னு யோசனையா இருக்கு”

“ஒரு ரவுண்டு முடியட்டும். நீங்க எப்படிக் கூப்பிடப் போறீங்கன்னு பாருங்க”

இந்த நேரத்தில் குறும்பட இயக்குனர் (அடடா.. இத எத்தனை தடவைடா சொல்லுவ..) சாரதாகுமார் ஒரு விஷயம் சொன்னார்..

“மதுரைல ஒரு தியேட்டர் இருந்துச்சு. அந்தக்காலத்துல படம் பார்க்க வர்றவங்களை டிக்கெட்டோட மதிப்பை வெச்சுத்தான் கூப்பிடுவாங்க.

‘ஒண்ணாரூவாயெல்லாம் வாங்கடா.. ரெண்டாரூவாயெல்லாம் வாங்கய்யா.. அஞ்சு ரூவாயெல்லாம் வாங்கசார்’ இப்படித்தான் கூப்பிடுவாங்க..”

**************************

ஒரு நண்பர் தவறாக ‘இளநி, பீர்ன்னெல்லாம் சொன்னா உதடு ஒட்டாது. ப்ராண்டி, ரம்-னு சொல்லிப்பாருங்க. உதடு ஒட்டும்’ என்று சொன்னார்.

“அதெப்படி பீர்-ன்னு சொன்னா உதடு ஒட்டாதுன்னு சொல்றீங்க?”

நர்சிம்: “குடிச்சுட்டுப் பேசினா வாய் குழறி ஒட்டாமச் சொல்வாங்களே.. அதைச் சொல்றாரு போல..”

இந்த இடத்தில் ஒருத்தர் மேடைப் பேச்சின்போது அ.தி.மு.க-வுக்காக பேசும்போது பேசியதைக் குறிப்பிட்டார்...

“கலைஞர், கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், தயாளு, ராஜாத்தி என்ன சொன்னாலும் உதடு ஒட்டாது. ஆனா எம்.ஜி.ஆர், ராமச்சந்திரன், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல் இப்படி என்ன சொன்னாலும் உதடு ஒட்டும்”

உடனே யாரோ கேட்டார்கள்..

“இதச் சொன்னதுக்கு கைதட்டினாங்களா.. கையால தட்டினாங்களா...”


.

Monday, December 28, 2009

அவியல் 28.12.2009

கோவையில் எனக்குத் தெரிந்த ஒரு ட்ராஃபிக் கான்ஸ்டபிளிடம் பேசிக் கொண்டிருந்தேன். ‘தாறுமாறா ரூல்ஸைப் பத்தி கவலைப்படாம ஒரு வண்டி வந்துச்சுன்னா கண்ணை மூடிட்டுச் சொல்லுவேன்.. அது திருப்பூர் ரெஜிஸ்ட்ரேஷனாத்தான் இருக்கும்னு. ஏன்யா உங்க ஊர்க்காரனுக இப்படி இருக்கீங்க? எவ்ளோ கோவம் வரும் தெரியுமா’ என்று பொரிந்தார்.

“கரெக்ட்தான் சார். டக்னு பிடிச்சு ஃபைன் போட்டு கோர்ட்டுக்கு அலையவிடுங்க. திருந்துவானுக” என்றேன்.

“எங்க? உங்க ஊர்க்காரனுக நிறுத்தினா உடனே யோசிக்காம நூறோ, ஐநூறோ கேள்வியே கேட்காம கண்ணுல காமிச்சுடறானுக.. அதுனால பேசாம இருக்கேன்”

மாமூல் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம்தான்!

***************************

திருப்பூரில் வெளிநாட்டு நிறுவனங்களுக்காக வேலை செய்யும் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் ஒருவர், எனக்குத் தெரிந்தவர். கிறிஸ்துமஸ் தினங்களில்கூட ஆய்வுக்கு செல்ல வேண்டியிருக்கும். அந்த மாதிரி நாட்களில் ஆய்வு முடிந்து சமர்ப்பிக்க வேண்டிய பேப்பர்களில் கையெழுத்துப் போடும்போது கையெழுத்துக்குக் கீழே தேதியைப் போட்டுவிட்டு "Happy X-mas!' என்றும் எழுதுவார்.

நான் கேட்டேன்: “அதெதுக்கு சார் இந்த மாதிரி ஸ்பெஷல் நாட்கள்ல இன்ஸ்பெக்‌ஷன் வந்தீங்கன்னா ரிப்போர்ட் ஷீட்ல இப்படி எழுதறீங்க”

“இந்த ரிப்போர்ட் மெயில்ல போகும்போது பார்ப்பானில்ல? பார்க்கும்போது ‘நமக்கு லீவு, ஆனா அன்னைக்கு இவன் வேலை செஞ்சிருக்கான் பாரு’-ன்னு அவங்களுக்குத் தெரியணுன்னுதான்”

அட!

*****************************

பதிவரும் நண்பருமான ஒருவரிம் பேசும்போது சொன்னார்: “எங்க முதலாளி பயங்கரமா கணக்குப் பார்க்கற பேர்வழிங்க. எல்லாத்துக்கும் காசுதான் அங்க. யாராவது ஆஃபீஸ் முன்னாடி நின்னு பார்த்துட்டு இருந்தாகூட ‘அவன் நம்ம ஆஃபீஸைப் பார்க்கறான். இருபது ரூவா வாங்கீட்டு விடு அவனை’ம்பாரு”

அந்த அளவுக்கு இருப்பார்களா எனத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒருத்தர் இருந்தார்........... வேணாம் விடுங்க....

***************************

தமிழில் போர் என்பதற்கு ஆங்கிலத்தில் WAR என்று வருகிறதல்லவா.. ஆங்கிலத்தில் POUR என்பதற்கு தமிழில்? வார்! (நீரை ‘வார்’த்தான், வயிற்றில் பாலை ‘வார்’த்தான்...) ஊற்று என்ற அர்த்தம்!

இதைப் பகிர்ந்து கொண்ட பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி! இன்றைய அவியலின் கடைசியில் அவர் கேட்ட ஒரு கேள்வியும் இருக்கிறது...

*************************

னிக்கிழமை காலை பதிவர் சுரேகா அழைத்து திருப்பூரில்தான் இருப்பதாகச் சொன்னதும் மாலை சந்திக்க ஏற்பாடானது. சில நண்பர்களைப் பார்த்ததுமே ‘ஏய்.. வாடா மச்சான்’ என்று தோளில் கைபோட்டு அழைத்துச் செல்லத் தோன்றுமே அப்படித்தான் தோன்றியது சுரேகாவைப் பார்த்ததும். தனது நண்பர் சத்யாவுடன் வந்திருந்தார். (வெயிலானின் பார்வைக்கு: சத்யாவும் பதிவர். அன்றைக்குத்தான் வலைப்பூ ஆரம்பித்திருக்கிறார்!)

சென்னைப் பண்பலையில் பணி. அது போக சினிமாத்துறையில் உதவி இயக்குனராய் இருக்கிறார். கதாநாயகனுக்குரிய தோற்றம். மிக மிகப் பண்பாளராய்ப் பழகுகிறார். நான்கு மணிக்கு ‘அரை மணி நேர அவசர’ சந்திப்பாய் ஆரம்பித்தது ஆறுமணி வரை பேசியும் அரைமணி நேரம்போலப் போனது! பிரிய மனமில்லாமல்தான் பிரிந்து போனோம்.

புறப்படும் சமயம் இவர் ஆர்கெஸ்ட்ராக்களில் பாடியதுண்டு என்று சொன்னதுமே, நானும் அவருமாய் ஒன்றிரண்டு இளையராஜா பாடல்களைப் பாட ஒன்றிரண்டு பேர் நின்று பார்த்துச் சென்றார்கள். இந்த நேரத்துலேயான்னு அவர்கள் நினைத்திருக்கக்கூடும்! ஆனால் ஒருவர் ‘ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்பா? எங்க ஃபங்ஷன்?’ என்று கேட்டதுதான் உச்சம்! பாடிய நிகழ்வை நண்பர் பேரரசன் தனது பதிவில் புத்தாண்டு சிறப்புக் காணொளியாய் இட இருக்கிறார்!

இப்போதைக்கு சுரேகா சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்கள்:-






சிவா, பரிசல்காரன், சுரேகா, முரளி & செந்தில்நாதன் (பேரரசன்)

பதிவராய் சந்தித்து நெருங்கிய நண்பர்களான இருவர்!


இதில் மேலே இருப்பது சாமிநாதன் (ஈரவெங்காயம்).


அலுவல் காரணமாக சென்னை சென்றுவிட்டதால் வெயிலான் அன்று மிஸ்ஸிங். ஆனால் இதுபோன்ற சந்திப்புகள் என்றால் எல்லாரையும் அழைத்து, ஒருங்கிணைத்து செல்வதில் வெயிலான் எவ்வளவு எக்ஸ்பர்ட் என்றுணர்ந்தேன். அன்றைக்கு இந்தச் சந்திப்பு குறித்து மின்னஞ்சலிட்ட நான் சுரேகாவுக்கு CC போடாமல் விட்டுவிட்டேன்! அதேபோல அருகிலேயே இருக்கும், அழைத்தால் உடனே ஓடிவரும் நண்பரான ராமனையும் அழைக்க மறந்துவிட்டேன். வெயிலான் ஏற்பாடென்றால் இதெல்லாம் நடந்திருக்காது. மனதாரச் சொல்கிறேன்.... அன்றைக்கு வி மிஸ் யூ தலைவரே!

********************************

கடைசியாக (ஒடனே நாளைலேர்ந்து எழுத மாட்டீங்களா ஜாலி-ன்னு குதிக்கக் கூடாது. இன்றைய பதிவோட கடைசியான்னு அர்த்தம்!) ஒரு கேள்வி:


ஒரு ஊரில் ஒரே ஒரு முடிதிருத்துபவர்தான் இருந்தாராம். (ஏன் ஒரே ஒருத்தர்னு லாஜிக்கெல்லாம் கேட்கக்கூடாது) அவர், யார் தனக்குத் தானே முகச் சவரம் செய்துகொள்ளாதவரோ அவருக்கு மட்டுமே முகச் சவரம் செய்வாராம்.

அந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோரையும் இருகுழுவாக -

அதாவது

1. தனக்குத் தானே முகச் சவரம் செய்து கொள்பவர்கள்,
மற்றும்
2. அந்த முடிதிருத்துபவரிடம் முகச் சவரம் செய்து கொள்பவர்கள் என்று பிரிக்கலாம் அல்லவா...

கேள்வி என்னவென்றால் அப்படிப் பிரிக்கும் பட்சத்தில் அந்த முடி திருத்துபவர் எந்தக் குழுவில் அங்கம் வகிப்பார் ?



.

Saturday, December 26, 2009

வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி!


ற்ற நண்பர்கள்
இந்த நிலையை அடைந்தபோது
ஏக்கப் பெருமூச்சு விட்டு
எனக்கொரு நாள் இப்படி வராதா
என ஏங்கிய எனக்கு

அந்த நாள் வந்ததென
அறிந்து
வாழ்த்திய
வாழ்த்திக் கொண்டிருக்கும்
அனைத்து நல்லுள்ளங்களுக்கும்

நன்றி! நன்றி!! நன்றி!!

.

photo courtesy: firstchoicedriversed.com

.

Friday, December 25, 2009

இந்தியன் என்று சொல்லடா!

ருச்சிகா.

வளர்ந்து கொண்டிருந்த டென்னிஸ் வீராங்கனை. 1990ல் 14 வயதிருக்கையில் ரத்தோர் என்ற போலீஸ் அதிகாரியினால் பாலியல் கொடுமைக்கு ஆளாகிறாள். (ரத்தோரின் மகளும், ருச்சிகாவும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள்!) ருச்சிகாவின் தந்தை கிர்ஹோத்ரா நீதியின் கதவுகளைத் தட்டுகிறார். பதவியில் இருக்கும் ரத்தோர் வெவ்வேறு வழிகளில் கிர்ஹோத்ராவையும் அவரது குடும்பத்தாரையும் பழி வாங்குகிறான். ருச்சிகாவின் சகோதரரை பொய் வழக்குப் போட்டுத் தாக்கினார்கள். குடும்பமே சொந்த வீட்டை விட்டு அகதிகளாய் வீடு மாறித் திரிந்தார்கள். தனக்காத்தான்-தன்னால்தான் என்ற கவலை மேலோங்க சில வருடங்களுக்கு முன் ருச்சிகா தற்கொலை செய்து கொண்டாள்.




கடந்த வாரம் நீதி தேவதை கண்ணைத் திறந்துவிட்டாள். 19 வருடம் கழித்து! பாலியல் பலாத்காரம், ருச்சிகாவின் குடும்பத்தினருக்கு கொடுத்த தொல்லைகள் என்று ரத்தோர் செய்த அட்டூழியங்களுக்கு “மிகப்பெரிய” தண்டனையை நீதிபதிகள் அளித்தார்கள் ரத்தோர் எனும் வெறிநாய்க்கு.

ஆறு மாத சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம்!

தீர்ப்பு குறித்து கோர்ட்டுக்கு வெளியில் நிற்கும் பத்திரிகையாளர் அறியுமுன்னே பெயிலில் சிரித்தபடி வருகிறான் ரத்தோர்.

“என்னவோ உள்ளே தங்கமெடல் வாங்கிக் கொண்டு வந்ததுபோல சிரித்தபடி அவன் வரும்போது என்னால் இந்த நாட்டை, நீதியை, ஜனநாயகத்தை எண்ணி அழாமலிருக்க முடியவில்லை” என்று கதறுகிறார் ருச்சிகாவின் தந்தை.

பத்திரிகையாளர்கள் ரத்தோரை இடைமறித்துக் கேட்ட கேள்விகளுக்கு “அது பழைய விவகாரம். எதற்கு கிளறுகிறீர்கள்?” என்ற திமிரான பதிலுடன் போய்விட்டான்.

ஒரு கட்டத்தில் எல்லாமிழந்து தளர்ந்து போயிருந்த கிர்ஹோத்ராவை சமாதானப்படுத்தி, இந்த வழக்கை வேறொரு நண்பர் முன்னின்று நடத்துகிறார். தன் தோழிக்கு நடந்த அவலத்தின் போது உடனிருந்த ஆராதனா குப்தா இந்த வழக்கின் தீர்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து வந்து, இந்தத் தீர்ப்பைக் கேட்டு கண்ணீர் விடுகிறார். ‘என் தோழியை என்னால் இறப்பிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இந்தத் தீர்ப்புக்காகவா 19 வருடங்கள் என்று அவள் ஆன்மா கேட்குமே.. என்ன சொல்வேன்’ என்று அவர் புலம்புவது கண்ணோடு சேர்த்து காதையும் கட்டியிருக்கும் நீதி தேவதைக்கு எங்கே கேட்கப்போகிறது?

இப்போது எல்லா மீடியாக்களும் இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கின்றன.

ஒரு சேனல் 1993ல் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு, ரத்தோரின் முன்னிலையில் நிர்வாணமாகவும் இன்னபிற வகையிலும் துன்புறத்தப்பட்ட ருச்சிகாவின் சகோதரன் ஆஷூ, நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அஃபிடவிட்டின் நகலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது.

அதில் அவர் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானால் குலைநடுங்க வைக்கிறது.

ரத்தோர் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளை தன்கைக்குள் போட்டுக் கொண்டு காய் நகர்த்தி விட்டார் என்று அரியானாவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் பேட்டி கொடுக்கிறார். இந்த வழக்கை விசாரித்த ரத்தோரின் மேலதிகாரி ‘ரத்தோர் இந்த வழக்கை விசாரிக்கும் என்னையே அடிக்கடி மிரட்டி இருக்கிறார்’ என்கிறார்.

இன்னொரு சேனல் ருச்சிகாவின் தந்தையை பேட்டி எடுக்கிறது. அழுது கொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும் அந்த மனிதன் நாட்டையும், நீதியையும் நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை.

இருந்தாலும் சொல்லப்படுவதில்லை.

ஜெய்ஹிந்த்.


.

புதிர்களின் விடைகள்

1) நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?


1 ரூபாய் x 4 = 4
2 ரூபாய் x 3 = 6
20 ரூபாய் x 2 = 40
50 ரூபாய் x 1 = 50

இன்னொரு முறை:

1 ரூபாய் x 1 = 1
2 ரூபாய் x 2 = 4
5 ரூபாய் x 3 = 15
20 ரூபாய் x 4 = 80

இன்னொரு முறை:

1 ரூபாய் x 1 = 1
2 ரூபாய் x 2 = 4
5 ரூபாய் x 5 = 25
20 ரூபாய் x 1 = 20
50 ரூபாய் x 1 = 50


(இந்த மூணாவது முறை தாரணிபிரியா சொன்னப்பதான் எனக்கும் தெரிஞ்சது. நன்றி தாரணி!)

இதோட உபகேள்வியான டினாமினேஷனுக்கு வந்த தமிழ்ப்பதங்கள்:-

அலகுவரிசை
பெயர்த்தொகுதி
நாணயவாரி


(எதுதாங்க கரெக்ட்?)

2) 2) ஒரு மொதலாளி தப்பு பண்ணின தன்னோட தொழிலாளிகள் மூணு பேருக்கு, அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி ஒரு வித்தியாசமான தண்டனை விதிச்சாரு. அவரோட கல்லாவுல எவ்ளோ பணமிருக்கோ, அதை விட மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு. கட்டிட்டு, ஒரு ரூவா அவன் திருப்பி எடுத்துக்கலாம்னு சொல்லீட்டார். அதன்படி முதல் ஆள் கல்லாவுல எவ்ளோ இருக்குன்னு பார்த்து, அதவிட மூணு மடங்கு வெச்சுட்டு, ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். அடுத்தவன் வந்து இருக்கறத எண்ணிப் பார்த்துட்டு, மூணு மடங்கு கட்டிட்டு ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணாமவனும் அஃதே செய்தான்.

கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?


19 ரூபாய்.
(இருக்கறதைவிட மூணு மடங்கு-ன்னுதான் கேள்வில இருக்கு. இருக்கற பணம் + மூணு மடங்குன்னு இல்லை)


3)ஒரு அரபுக்காரர் தன்னோட இரு மகன்களுமிடையே சொத்தைப் பிரிக்கறதுக்காக ஒரு போட்டி வைக்கிறார். ‘உங்க ஒட்டகங்களுக்கிடையே ஒரு போட்டி வைங்க. யாரோட ஒட்டகம் மிக மெதுவாய்ப் போகுதோ அவங்களுக்கு அதிக பங்கு’ –ன்னு சொல்லிடறாரு. இரண்டு மகன்களும் அவங்கவங்க ஒட்டகங்கள்ல ஏறி மெ-து-மெ-து-வாப் போறாங்க.

இது ரொம்ப நாளா நடந்துட்டே இருக்கறதால, வெறுத்துப் போயி அவங்க வழில ஒரு பெரியவரைப் பார்த்து ஐடியா கேட்கறாங்க. அவர் ஒரு ஐடியா சொல்றாரு. அடுத்த நிமிடம், இவங்களை ஏத்திகிட்ட ஒட்டகங்கள் வெகு ஸ்பீடா ஓடத் தொடங்குது.

அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?

ஒட்டகத்தை மாத்திக்கச் சொன்னார். (இதுக்கு ரம்யாக்கா ஒரு அருமையான பதிலைச் சொல்லிருக்காங்க! பின்னூட்டத்துல போய்ப் பாருங்க!)

4) உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.

ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.

இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?

ஏதோ ஒரு ரோபோகிட்ட போய், ‘நான் தப்பிக்க வழியைக் கேட்டா, அந்த ரோபோ எந்தக் கதவைக் காட்டும்?’ன்னு கேட்டுட்டு அதுக்கு எதிர்க் கதவுல போகணும்.

5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?

அவர் மகன் ஃபோட்டோ.
(இதுக்கும் அவசரப்பட்டு ‘ராஜரத்தினம் ஃபோட்டோ’ன்னு சிலர் சொல்லிடறாங்க. அதுதான் இந்தக் கேள்வியோட கூக்ளியே.. டக்னு கண்டுபிடிச்சாலும் சரியா சொல்லணும்!)

6) ஒரு ஜெனரல் நாலேட்சு கொஸ்டீனு! நெறைய கடைகள்ல 99 ரூவா, 199 ரூவான்னு ஐட்டங்களுக்கு விலை போட்டிருக்காங்க. நூறு, இருநூறுன்னு போடாம இப்படிப் போடறது கஸ்டமர்களுக்கு விலை கம்மியாத் தெரியணும்னு சொல்லப்படுது. ஆனா உண்மையா இந்த மாதிரி விலை போட என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...

இதுக்கு ஈரோடு கோடீஸ் ஸ்ரீராம் ரெண்டு பேர்தான் சரியா சொல்லிருந்தாங்க.

200 ரூ, 100 ரூ-ன்னு விலை வச்சா காஷியர் பணத்தை திருட வாய்ப்புண்டு ஆனால் 1 ரூ திருப்பிக் கொடுக்க cash register ஐ திறக்க வேண்டும், அப்படி திறந்தால் விற்பனை ரெஜிஸ்டர் ஆகி விடும், அதனால்தான் அப்படி.


7) பச்சை-சிகப்பு-நீலம்-மஞ்சள்-நீலம்-கறுப்பு-சிகப்பு-நீலம்-பச்சை-கறுப்பு-சிகப்பு-மஞ்சள்-பச்சை-நீலம்-கறுப்பு-நீலம்-சிகப்பு-பச்சை

கரெக்டா?


.

Thursday, December 24, 2009

புதிர்கள் இங்கே… விடைகள் எங்கே?


சரியான போர் – ங்க. தமிழ் ‘போர்’ இல்ல. இங்க்லீஷ் Bore. இந்த மாதிரி போரடிக்கும்போதெல்லாம் மூளையைக் கசக்கினா கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகும்ல?

அதுனால இன்னைக்கே – சில புதிர்கள். கண்டுபிடிங்க பார்க்கலாம்.

1) நூறு ரூவாய்க்கு சில்லறை மாத்தீட்டு வந்தான் ஒருத்தன். சில்லறை மாத்தினப்பறம் மொத்தம் பத்து நோட்டு இருந்தது அவன்கிட்ட. ஆனா அதுல பத்து ரூவா நோட்டே இல்லை! அப்ப அவன்கிட்ட இருந்த நோட்டுகளோட டினாமினேஷன் என்ன?

(அப்படியே ஓர் உப கேள்வி: டினாமினேஷனுக்கு தமிழ் என்ன?)

2) ஒரு மொதலாளி தப்பு பண்ணின தன்னோட தொழிலாளிகள் மூணு பேருக்கு, அவங்க தப்புக்கு தகுந்த மாதிரி ஒரு வித்தியாசமான தண்டனை விதிச்சாரு. அவரோட கல்லாவுல எவ்ளோ பணமிருக்கோ, அதை விட மூணு மடங்கு பணத்தை அவங்க கல்லாவுல கட்டணும்னு. கட்டிட்டு, ஒரு ரூவா அவன் திருப்பி எடுத்துக்கலாம்னு சொல்லீட்டார். அதன்படி முதல் ஆள் கல்லாவுல எவ்ளோ இருக்குன்னு பார்த்து, அதவிட மூணு மடங்கு வெச்சுட்டு, ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். அடுத்தவன் வந்து இருக்கறத எண்ணிப் பார்த்துட்டு, மூணு மடங்கு கட்டிட்டு ஒரு ரூவா எடுத்துட்டுப் போனான். மூணாமவனும் அஃதே செய்தான்.

கடைசியா முதலாளி எண்ணிப் பார்க்கறப்போ சரியா 500 ரூவா இருந்துச்சு. அப்போ, கல்லாவுல முதல்ல இருந்த காசு எவ்ளோ?

3) ஒரு அரபுக்காரர் தன்னோட இரு மகன்களுமிடையே சொத்தைப் பிரிக்கறதுக்காக ஒரு போட்டி வைக்கிறார். ‘உங்க ஒட்டகங்களுக்கிடையே ஒரு போட்டி வைங்க. யாரோட ஒட்டகம் மிக மெதுவாய்ப் போகுதோ அவங்களுக்கு அதிக பங்கு’ –ன்னு சொல்லிடறாரு. இரண்டு மகன்களும் அவங்கவங்க ஒட்டகங்கள்ல ஏறி மெ-து-மெ-து-வாப் போறாங்க.

இது ரொம்ப நாளா நடந்துட்டே இருக்கறதால, வெறுத்துப் போயி அவங்க வழில ஒரு பெரியவரைப் பார்த்து ஐடியா கேட்கறாங்க. அவர் ஒரு ஐடியா சொல்றாரு. அடுத்த நிமிடம், இவங்களை ஏத்திகிட்ட ஒட்டகங்கள் வெகு ஸ்பீடா ஓடத் தொடங்குது.

அந்தப் பெரியவர் சொன்ன ஐடியா என்ன?

4) உங்களை வில்லன் ஒரு ரூம்ல அடைச்சு வெச்சிருக்கான். அந்த ரூமுக்கு ரெண்டு கதவு. ஒரு கதவைத் திறந்தா நீங்க முடிஞ்சிங்கீங்க. இன்னொண்ணு வழியா தப்பிக்கலாம். எது, எந்தக் கதவுன்னு உங்களுக்குத் தெரியாது.

ஆனா உங்களுக்கு உதவ உள்ள ரெண்டு ரோபோ இருக்கு. அதுல ஒரு ரோபோ உண்மையை மட்டும் பேசும். இன்னொண்ணு பொய் மட்டும் பேசும். எந்த ரோபோ, எந்த வகைன்னும் உங்களுக்குத் தெரியாது.

இப்ப, ஏதோ ஒரு ரோபோகிட்ட ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நீங்க தப்பிக்கணும். என்ன கேட்பீங்க? எப்படித் தப்பிப்பீங்க?

5) ராஜரத்தினம் ஒரு ஃபோட்டோவை வெச்சுட்டு பார்த்துட்டு இருந்தாரு. பக்கத்துல வந்த ஒருத்தரு, “யார் ஃபோட்டோவை இப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?”ன்னு கேட்டார். ராஜரத்தினம் சொன்னாரு: “எனக்கு அண்ணனோ, தம்பியோ கிடையாது. ஆனா இந்த ஃபோட்டோல இருக்கறவனோட அப்பா, என் அப்பாவோட மகன்தான்”ன்னு சொல்றாரு. அப்ப அந்த ஃபோட்டோல இருக்கறது யாரு?

6) ஒரு ஜெனரல் நாலேட்சு கொஸ்டீனு! நெறைய கடைகள்ல 99 ரூவா, 199 ரூவான்னு ஐட்டங்களுக்கு விலை போட்டிருக்காங்க. நூறு, இருநூறுன்னு போடாம இப்படிப் போடறது கஸ்டமர்களுக்கு விலை கம்மியாத் தெரியணும்னு சொல்லப்படுது. ஆனா உண்மையா இந்த மாதிரி விலை போட என்ன அடிப்படைக் காரணமா ஆரம்பத்துல சொல்லப்பட்டுச்சுன்னு யூகிச்சு சொல்லுங்க பார்ப்போம்...

7) இது புதிரில்லை. ச்சும்மா...

கீழ உள்ளதுல என்ன கலர்ல எழுதிருக்குங்கறத விடுங்க.. எழுத்தை மட்டும் படிங்க... ஸ்பீடா...



வெரிகுட். இப்போ.. என்ன எழுதிருக்குங்கறத விடுங்க. என்ன கலர்ல எழுதிருக்குன்னு ஸ்பீடா சொல்லுங்க பார்ப்போம்...

***

கடைசியா வடகரை வேலன் அண்ணாச்சி எனக்கு அனுப்பின ஒரு எஸ்ஸெம்மெஸ்:-

I really appreciate your brain which is divided in 2 parts: Right & Left. In Right nothing is Left and in Left nothing is Right.


.

Wednesday, December 23, 2009

சேட்டைக்காரன்

நான் ஆசையாய் மறுபடி ஒருமுறை கண்ணாடியில் என் மீசையைப் பார்த்துவிட்டு - மழிக்கத் துவங்கினேன்.

இத்தனை அழகான மீசையை எதற்கு எடுக்கிறாய் என்று கேட்கிறீர்கள் தானே?

அந்த விபரம் கூறுமுன் - என்னைப் பற்றிக் கொஞ்சம்...

சார்லி. சிறுவயதில் முதல் மகனாய் என்னைப் பெற்ற உடன் இறந்துவிட்ட அம்மா, நான் கல்லூரியில் படிக்கும்போதே கிராமத்தில் இறந்த அப்பா... இதெல்லாம் உங்களுக்கு போரடிக்கும்.

நான் கல்லூரிப்படிப்பு முடிந்து எத்தனையோ இண்டர்வ்யூக்களுக்குப் போயும் வேலை கிடைக்கவில்லை என்றுதான் தொழிலதிபர் கார்வண்ணனைச் சந்திக்க முடிவெடுத்தேன். வெளியே அவர் அந்தத் தொழில் செய்கிறார், இந்தத் தொழில் செய்கிறார் என்று பெயர் கொஞ்சம் ரிப்பேரானவர்தான் என்றாலும் அவரிடம் சென்று என் நிலையை எடுத்துக் கூறினால் அவருக்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் ஏதாவதொரு வேலை தருவாரென்ற நம்பிக்கையில் நேற்று அவர் பங்களாவிற்குப் போனேன்.

வாட்ச்மேன், தோட்டக்காரனுடன் சமையல்காரியைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருக்க டபாய்த்துவிட்டு உட்புகுந்தேன்.

வேலை கேட்பது போல பவ்யமாய்ப் போனால் மதிப்பிருக்காதென்பதால், நான்கைந்து பேர் அமர்ந்திருக்கும் பெரிய போர்டிகோவில் நின்று கொண்டிருந்த வீட்டு வேலைக்காரன் ஒருவனிடம் ‘சார் இருக்காரா?’ என்று கேட்டேன்.

யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாகவும், அவர் வெளியே வந்தபிறகு பார்க்கலாமென்று அவன் சொல்லவே, சும்மா அந்தக் கட்டத்தில் உலாவினேன்.

அப்போதுதான் - ஒரு அறையின் கொஞ்சமாய்த் திறந்த ஜன்னலூடே அந்த சம்பாஷணை கேட்டது.

“மிஸ்டர் கார்வண்ணன்.. இது எட்டு லட்ச ரூபாய் விவகாரம். நாளைக்கு கோல்டன் ஹார்வெஸ்டுக்கு யாரை அனுப்பறீங்க?”

“நீங்க கவலையே படாதீங்க பெரிய நாயகம். நான் காலைல எட்டு மணிக்கு மணிமாறனை அனுப்பறேன். கழுத்துல நங்கூரம் டிசைன் செஞ்ச தங்க செய்ன் போட்டிருப்பான். மீசை இருக்காது. அதுவுமில்லாம நாந்தான் சொன்னேனே... ஆள் வந்த உடனே ‘வெல்கம்’ ன்னு நீங்க சொல்லுங்க. அவன் உடனே வேறெதுவும் சொல்லாம ‘யெஸ் வி கேன்’ன்னு சொல்லுவான். அதான் நமக்குள்ள கோடிங். வழக்கம்போல ரூம் நம்பர் நூத்தி ஒண்ணுதானே.. பணத்தை குடுங்க. சரக்கு அடுத்த நாளே வந்து சேரும்”

-அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை நான். நங்கூர டாலருடன் செய்ன் ரெடி பண்ண வேண்டுமே!

புரிந்ததல்லவா என் திட்டம்? வேலையத் தேடி வேட்டைக்காரனாக இருப்பதை விட, ஒரே நாள் சேட்டைக்காரனாகி எட்டு லட்சத்தை கைப்படுத்த முடிவெடுத்தேன். இரவோடிரவாக செய்ன் ரெடி செய்துவிட்டேன். இதோ காலை ஏழு மணி. மீசையையும் எடுத்தாயிற்று. அவன் எட்டு மணிக்குத்தானே போவான்.. கொஞ்சம் முந்திச் சென்று எட்டு லட்சத்தை லபக்கி வரலாமென்று புறப்பட்டேன்.

***

ஹோட்டல் கோல்டன் ஹார்வெஸ்ட் பணக்காரத் திமிருடன் இருந்தது. ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருந்த நூற்றி ஒன்றைத் தேடிப் போய்த் தட்டினேன்.

கதவு திறந்து ‘வெல்கம்’ என்றார் அந்த யாரோ.

உடனே ஞாபகமாய் ‘யெஸ் வி கேன்’ என்றேன்.

“நீதான் மணிமாறனா? கார்வண்ணனோட ரைட் ஹாண்ட்?”

“யெஸ்” பந்தாவாய் சொல்லியபடி நங்கூர டிசைன் செய்னை காஷுவாலாக எடுத்து டீ ஷர்டின் வெளியே விட்டேன். ‘இந்தா எட்டு லட்சம்’ என்று பெட்டியைத் தருவாரென எதிர்பார்த்தேன்.

ஆனால் அவரோ-




“யுவார் அண்டர் அரெஸ்ட்” என்றார் சினிமா க்ளைமாக்ஸ் போல.

திடுக்கிடலோடு ஓட நினைத்துத் திரும்பினேன்.

போட்டிருந்த காக்கி உடைக்கு விசுவாசமாய் கறுப்பு ராட்சஷனை கையிலேந்தி இருவர் நின்றிருந்தனர்.

***

“சொல்லுடா.. எங்களுக்குத் தெரிஞ்சு இதுவரைக்கும் நீ ஏழு கொலை பண்ணிருக்க... அது போக கார்வண்ணனோட சேர்ந்து வேற என்னென்ன சமூக விரோதம்லாம் செஞ்சிருக்க?”

என்னைப் பிடித்த அதிகாரி பின்மண்டையில் தட்டியவாறே கேட்டுக் கொண்டிருக்க, எதிரிலிருந்த மற்றொரு போலீஸ் அதிகாரி விளக்கம் கொடுத்தார்... “நேத்து எங்களுக்குக் கிடைச்ச நியூஸ்படி நாங்க அவசரமா நைட்டே கார்வண்ணனை வீட்டுல வெச்சு விசாரிக்கற விதத்துல விசாரிச்சுட்டோம். ஏழு கொலையையும் உன் மூலமா அவர் செஞ்சதை இன்னைக்கு அதிகாலைலதான் ஒப்புகிட்டார். கடைசியா அவர் சொன்னது நீ இன்னைக்கு இந்த ஹோட்டலுக்கு வர்ற விஷயம் பத்தித்தான். அதுனாலதானே உன்னைப் பிடிக்க முடிஞ்சது?”

நான் ஈனமான குரலில் கதறினேன்..

“நான் கார்வண்ணனைப் பார்க்கணும். இல்லைன்னா நீங்களே அவர்கிட்ட என்னைக் கூட்டீட்டுப் போங்க. ‘இவன்தான் மணிமாறனா?’ன்னு கேளுங்க” என் குரல் உடைந்திருந்தது.

“ஏண்டா.. அவர்தான் ஜீப்லேர்ந்து குதிச்சு லாரில அடிபட்டு இறந்துட்டாரே.. டாரே என்ன இறந்துட்டானே.. அவன என்ன கூப்டறது? நீ சொல்டா நாயே..”

அவர் அடித்த அடியில் என் டீ ஷர்ட் சிவப்பானது.

ஸார்.. நீங்களாவது சொல்லுங்க சார் நான் மணிமாறனில்லை, சார்லீன்னு....


.

(நான் எத்தனையோ வருடங்களுக்கு முன்னெழுதி பத்திரிகையொன்றில் வந்த கதை. கொஞ்சம் பட்டி-டிங்கரிங் பார்த்து டாபிகல் தலைப்போடு.. இங்கு.
)

.

Tuesday, December 22, 2009

சபாஷ் ஈரோடு!

திர் ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த போதும், சென்று சேரும் வரையிலும் இப்படி ஓர் அதிர்ச்சி காத்திருக்கும் என்று நினைக்கவே இல்லை. போய்ச் சேர்ந்தது முதல் முடியும் வரை அடி மேல் அடி என்பது போல அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஈரோட்டார்கள்.

திருப்பூரிலிருந்து பத்து பேர் கொண்ட குழு மூன்று காரில் சென்று இறங்கும்போது நின்று கொண்டிருந்த பத்து பதினைந்து லக்ஸுரி கார்களைப் பார்த்ததும் ‘ஙே’ என விழித்துவிட்டு சத்தமில்லாமல் அப்துல்லாவின் இன்னோவாவுக்குப் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் நிறுத்தி வைத்துவிட்டு (இதுல ஏதோ கட்சி மாநாட்டுக்குப் போறா மாதிரி திருப்பூர் வலைப்பதிவர் பேரவைன்னு ஸ்டிக்கர் வேற... ஹூம்!) நிகழ்ச்சி நடக்கும் அரங்கு நோக்கி நடந்தோம்.

அரங்கிற்கு முன் இருபதுக்கும் மேற்பட்ட டூ வீலர்கள். ‘பதிவர் சந்திப்புதானா.. இல்லை ஏதாவது ஏதாவது கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு ஃபோட்டோ எடுக்கற இடத்துக்கு வந்துட்டமா’ன்னு குழப்பமாவே இருந்துச்சு.



ஆனா, ஈரோட்டுக்காரங்கதான் ஃப்ளக்ஸ்ல பேனரெல்லாம் கட்டி, ஃபுல் மப்புல இருக்கற வாலுகளுக்கும் தெரியறா மாதிரி நேர்த்தியா அமைச்சிருந்தாங்களே. அதுனால சரியாத்தான் போனோம்.

போனதுமே ‘வாங்க வாங்க’ன்னு வரவேற்றார் அகநாழிகை. உள்ளே போனோம். குளீரூட்டப்பட்ட உள்ளரங்கு. நான் போகும்போது (நாம எப்ப நேரத்துக்கு போயிருக்கோம்?) ஐம்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்திருக்க, மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்க, உபசரிப்பு குழு (இதுலயே பத்து பேருக்கு மேல இருந்தாங்க!) உள்ளேயும் எங்களை வரவேற்றது.

மேடையில் வசந்தகுமார் பேசிக் கொண்டிருக்க, கீழிருந்து வால்பையன் அவரை கேள்விகளால் டரியலாக்கிக் கொண்டிருந்தார். ஆரூரான் இது மாதிரியான சந்தேகங்களை இறுதியில் நடக்கும் கலந்துரையாடலின் போது கேட்டுக் கொள்ளலாம்’ என்று சொன்னார். இதையே திரும்பத் திரும்பச் சொல்லி, கலந்துரையாடலின் போதும் யாரோ ஏதோ கேட்க ‘எந்த விஷயமாக இருந்தாலும் கலந்துரையாடலின்போது கேட்கலாமே’ என்பாரோ என்று நினைத்தேன். நல்லவேளை அப்படியெல்லாம் ஆகவில்லை!

வசந்தகுமாருக்கு முன்பே ஆரூரன் பேசியதாகவும், சுவையான ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டாரென்றும் நண்பர்கள் சொன்னார்கள்.

சுமஜ்லா தொழில்நுட்பம் குறித்து நுட்பமாகப் பேசினார். உலகத் திரைப்படங்கள் குறித்து பட்டர்ஃப்ளை சூர்யா பேசும்போது 18ம்தேதி ஒரு புயல் அபாயம் கரை கடந்ததாய்க் குறிப்பிட்டார். (வேட்ட வேட்ட வேட்ட வேட்ட வேட்டைக்காரண்டோய்ய்!) கணினிப் பட்டறை குறித்துப் பேசிய செந்தில் விக்கிபீடியாவில் தமிழர்கள் தகவல்களை ஆவணமாக்குவதில் எவ்வளவு சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டார். சமூகத்தில் நம் பங்கு பற்றி ரம்யா பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கை கீழிருந்து செவ்வனே செய்து கொண்டிருந்தார் வால்பையன். இறுதியாக அகநாழிகை வாசுதேவன் வந்து பேசினார். பேச ஆரம்பிக்கும்போது ‘என்ன தலைப்பு?’ என்று கேட்டார். யாரோ சொன்னார்கள்.. ‘நீங்க பாட்டுக்கு பேசுங்க.. முடியும்போது நாங்க தலைப்பு வெச்சுக்கறோம்’ என்று.

பேச்சில் என்னைக் கவர்ந்தவர்கள் இருவர்: ‘நச்’சென்று பேசிய பழமைபேசி. அவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது. மிகமிக உயரத்திற்குப் போவாரென்பதை அவரது நடவடிக்கைகள் காட்டின. (செல்ஃபோன் டவருக்கா-ன்னு கேட்கப்படாது!). அதேபோல வால்பையனின் அட்டாக்குகளுக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்து க்ளாப்ஸ் வாங்கிய வலைச்சரம் சீனா ஐயா.

அது முடிந்ததும் ‘ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்’ என்ற அமைப்பை சில பிரபலங்கள் துவங்கி வைத்தார்கள்.



இறுதியாக முனைவர் இராசுவும், தமிழ்மணம் காசி ஐயாவும் சில நல்ல தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அதன்பிறகு அரை மணி நேரம் கலந்துரையாடல் – களை கட்டியது. அனானி கமெண்டுகள் குறித்து இருபத்தி எட்டு நிமிடமும், பிற விஷயங்கள் குறித்து இரண்டு நிமிடமும் கலந்துரையாடினோம். பொதுவாக மேடையில் மைக் கிடைத்தால் விடமாட்டார்கள் என்பார்கள். ஆனால் மைக்கை எல்லாரிடமும் கொடுத்து கருத்து கேட்ட லதானந்தின் பண்பை பாராட்டியே ஆகவேண்டும். (நோட் பண்ணுங்கப்பா! நோட் பண்ணுங்கப்பா!!)

விழாவின்போது வாசகர் பகுதியிலிருந்து ஒருவர் எழுந்து வலைப்பதிவுகள் எல்லோராலும் வெகுவாகக் கவனிக்கப்படுவதாகக் கூறி ஒரு உதாரணம் சொன்னார். அவரது வேலையே வலைப்பதிவுகளைப் படிப்பதுதானாம். வலைப்பதிவுகளைப் படித்து, எதாவது ப்ராடக்ட்ஸைப் பற்றி பதிவர்கள் எழுதியிருந்தால் அது நெகடீவாக எழுதப்பட்டிருக்கிறதா, பாஸிடிவாகவா.., அதற்கு வரும் பின்னூட்டங்கள் அந்த ப்ராடக்டைப் பற்றி என்ன கருத்து சொல்கின்றன என்றெல்லாம் கவனித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அக்கருத்துகளைத் தெரிவிப்பதுதான் அவரின் வேலையே என்றும் சொல்லி கைதட்டலை அள்ளிக் கொண்டார்.

இதைப் பற்றிப் பேசும்போது அப்துல்லாவும் அரசின் முக்கியத் துறைகளில் இருக்கும் பலராலும் வலைப்பதிவுகள் விரும்பிப் படிக்கப்படுவதாய்க் குறிப்பிட்டார்.

வலைப்பதிவுகளில் யாரையேனும் அவதூறாக எழுதினால், சம்பந்தப்பட்டவர் வழக்குத் தொடுக்கும் பட்சத்தில் பதிவர் கம்பி எண்ணும் அபாயம் இருப்பது பற்றியும் பேசினார்கள். ஒரு பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கும், பின்னூட்டம் போட்டவரை விட பதிவர்தான் பொறுப்பு என்றும் விளக்கினார்கள். (என்ன கொடுமை சரவணன் இது!) இதுபற்றிச் சொல்லும்போது இடைமறித்த பழமைபேசி, “அதற்காக பயந்து கொண்டு உங்கள் கருத்துகளை பதிவாக்காமல் இருக்காதீர்கள். ‘அவதூறாக எழுதவேண்டாம்.. ஆனால் ஆணித்தரமாக எழுதுங்கள்’” என்றது இங்கே குறிப்பிட வேண்டிய வாக்கியம்!

விழாவில் என்னைக் கவர்ந்தவர்கள் இரண்டு பேர்:

நந்து & வால்பையன்!

நந்து அவ்வளவு சீனியர் பதிவராக இருந்தும் அது குறித்து எந்த பந்தாவும் இல்லாமல் ‘நான் ஈரோட்டுக்காரன். எனக்கென்ன மரியாதை செய்தீர்கள்’ என்றெல்லாம் கர்வமில்லாமல் ஓடி ஓடி உழைத்துக் கொண்டும், எல்லாரையும் கவனித்துக் கொண்டும், ‘இந்தாள்கிட்டேர்ந்து நெறைய கத்துக்கணும்யா’ என்று வெட்கப்பட வைத்தார். (இவருக்கு ‘பக்கா’பலமாய் இருந்து கமெண்டுகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்த சஞ்சயையும் பாராட்ட வேண்டும்!) நந்துவிடம் நான் வியந்த மற்றோர் விஷயம் - எங்கள் தலைவர் வெயிலான் போல - எந்தப் பதிவு, பதிவர் சம்பந்தப்பட்ட விஷயமென்றாலும் விரல் நுனியில் வைத்திருக்கிறார் மனுஷன்! க்ரேட்!!

அடுத்தது வால்பையன். நானெல்லாம் சமூகம், கலாச்சாரம், பண்பாடு, வெங்காயம் என்று நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டு, மீட்டிங் முடிந்ததும் கட்டிங் போட்டுக் கொண்டு நண்பர்களோடு பாட்டுப் பாடி டான்ஸ் ஆடிவிட்டு வந்தேன். ஆனால் வால்பையன் சந்திப்பின் ஆரம்பத்திலே இருந்து அவர் எப்படி இருப்பாரோ அப்படித்தான் இருந்தார். அவர் அப்படி நடந்து கொண்டதுதான் வருத்தமாக இருந்தது என்றெல்லாம் ஒவ்வொருத்தர் சொன்னார்கள்தான். சரி, அவர் அப்படித்தான் என்பதை ஏற்று அவரை ரசிக்க முடிந்தவர்களுக்கு (உதாரணம்: சீனு ஐயா) அவர் விருந்து கொடுத்தாரென்றே சொல்ல வேண்டும்! வால் மட்டும் இல்லாவிட்டால் ரொம்பவும் இறுக்கமாக – ஃபார்மலாக – அந்தச் சந்திப்பு இருந்திருக்கும்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஈரோடு குறித்த வரலாற்று புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தார்கள். (வரலாறு முக்கியம் அமைச்சரே!) நான் அகநாழிகையிடமிருந்து நர்சிம்மின் புத்தகத்தை வாங்கினேன். (10% டிஸ்கவுண்ட்!)

சந்திப்பு முடிந்ததும் சைவ – அசைவ விருந்தும் நடைபெற்றது. விருந்தின் போது வலைப்பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு – ஸாரி.. அடுத்த கட்டடத்திற்கு - நகர்த்திக் கொண்டிருந்தார்கள் சிலர். அங்கேயும் ஒரு விருந்து நடந்து கொண்டிருந்தது. விருந்து முடிந்தது புறப்படும் சமயம் சாமிநாதனின் காரிலிருந்து இளையராஜாவின் ஃபாஸ்ட் பீட் பாடல் ஒன்று வரவே, அப்துல்லாவும் நானும் கூட சேர்ந்து பாட, கேபிள் சங்கரும் தண்டோராவும் ஆட – அடுத்தடுத்த பாடல்களால் அந்த அரைமணி நேரம் மறக்க முடியாத நேரமாக அமைந்தது.

மொத்தத்தில் இந்தப் பதிவர் சந்திப்பு மூலம் வலைப்பதிவர்கள் தங்களை மேல் நகர்த்திச் செல்ல கோடு போட்டுக் காட்டியிருக்கிறார்கள் ஈரோட்டார்கள்.

சபாஷ்!


.

Monday, December 21, 2009

உளவாளி


சென்ற வார விகடனின் இணைப்பு: உளவாளி. அந்த இணைப்பைப் படித்ததும் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது.

1991 டிசம்பரின் போது சென்னை சென்றுவிட்டு, உடுமலைப்பேட்டைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். சென்னையிலிருந்து திருச்சி வரைதான் பஸ் கிடைத்தது. திருச்சியில் இறங்கி சாப்பிட ஒரு நல்ல ஹோட்டல் (பஸ் ஸ்டாண்டிற்குள்ளேயே) தேடிக் கொண்டிருந்தேன். தோளில் ஒரு கருப்பு Bag, கையில் ஒரு Bag என்று சுமை வேறு. இரவு நேரம். சுற்றி சுற்றி ஏதோ ஒரு ஹோட்டலுக்குப் போவோமென்று போய் சாப்பிட்டு விட்டு வந்தேன். வெளியே வந்தபிறகு ஏதாவது பர்ச்சேஸ் பண்ணலாமென்று மறுபடி சில கடைகள் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் கவனித்தேன் – என்னையே ஒரு ஆள் பார்த்துக் கொண்டும், தொடர்ந்து கொண்டும் இருந்தார். ‘அவனா நீ’ என்பதெல்லாம் அப்போதெனக்கு தெரியாதையாகையால் ஒரு வேளை வழிப்பறி கேஸாக இருக்குமோவென சந்தேகப்பட்டேன். அப்படியே இருந்தாலும் நான்கைந்து ஜட்டி, பேண்ட், சட்டைகளையும், புத்தகங்களையும் வைத்துக் கொண்டு அவனென்ன செய்யப் போகிறானென்று அவனை நினைத்து பரிதாபப்பட்டேன். தொடர்ந்து நடந்தேன்.
அரை மணி நேரம் கழித்து, அந்த ஆள் இன்னொரு ஆஃபீஸர் ரேஞ்ச் ஆளுடன் சேர்த்து என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தான்!

இதென்னடா, நெஜமாவே என்னைப் ஃபாலோ செய்கிறார்களா, இல்லை எனக்கு அப்படித் தோன்றுகிறதா என்று ஐயமாகவே இருந்தது. சிறிது நேரத்திலேயே அந்த ஐயம் தெளிவானது.

அந்த ஆஃபீஸர் என்னருகில் வந்து ‘தம்பி.. கொஞ்சம் எங்க கூட வாங்க’ என்று மரியாதையாக – அதே சமயம் – கண்டிப்புடன் அழைத்தார்.

ஒருமாதிரி பயந்தவாறே அவர்களுடன் சென்றேன்.

பஸ் ஸ்டாண்டிலேயே இருந்த சிறிய அறை ஒன்றிற்கு அழைத்துப் போய், அமர வைத்தார்கள். அவர்கள் யாரென்று கேட்டதற்கு ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் குழு’ என்று ஏதோ ஒரு கார்டைக் காட்டினார்கள். என்னுடைய பைகள் இரண்டையும் முழுமையாக சோதனை செய்தார்கள். அவ்வளவு நேரம் பஸ் ஸ்டாண்டில் எதையோ தேடிச் சுற்றிக் கொண்டிருந்தது அவர்களுக்கு சந்தேகத்தை வரவழைத்திருக்கிறது.

அப்போது நான் யாரென்று நிரூபிக்கும் எந்த அடையாள அட்டையும் என் வசமில்லை. ஒரு பத்திரிகை, ஒரு மாதத்திற்கு அந்தப் பத்திரிகைக்காக நான் தகவல்கள் சேகரிக்க எனக்கொரு அனுமதிக் கடிதம் கொடுத்திருந்தார்கள். அதைக் காண்பித்தபிறகு, ஃபார்மலாக சில கேள்விகள் கேட்டு விட்டு விட்டார்கள்!

அப்போதுதான் சொன்னார்கள். எல்லா பஸ் ஸ்டாண்டிலேயும் சில ஆட்களை நியமித்திருக்கிறார்களாம். அவர்கள் டீக்கடையில் டீ போட்டுக் கொண்டோ, பழங்கள் விற்றுக் கொண்டோ, பொரி கடலை விற்றுக் கொண்டோ இருப்பவராகக் கூட இருக்கலாம். அவர்கள்தான் இவர்களின் உளவாளிகளாம்! (அப்பாடா.. தலைப்பு வந்துடுச்சுல்ல!)


ன்னொரு சம்பவம் – ஏழெட்டு வருஷங்களுக்கு முன். நான் திருப்பூரில் பணிபுரியும் நிறுவனத்திற்கு அருகிலிருக்கும் டீக்கடை ஒன்றிற்கு தேநீர் இடைவேளையின்போது போவோம். அப்போதெல்லாம் அங்கே ஒரு ஆள் அழுக்கு உடையும், துணி மூட்டையுமாய் அமர்ந்திருப்பான். இரவு நேரம் அவ்வளவாக தென்பட மாட்டான். ஒவ்வொரு நாள் இருப்பான், ஒவ்வொரு நாள் காணாமல் போவான். நாங்கள் அமர்ந்து தேநீர் குடிக்கும்வரை இருப்பான். பன், பிஸ்கெட் எதையாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வான், அவனாகக் கேட்க மாட்டான். ஒரு பேச்சு பேசி யாரும் கேட்டதில்லை. ‘அவன் ஒரு மெண்டல் கேசு தம்பி’ என்பார் கடைக்காரர்.

கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்களாக இருந்தவன், கொஞ்ச நாட்களாக கண்ணில் தட்டுப்படவில்லை. அந்த டீக்கடைக்காரரிடம் விசாரித்தபோது தான் சொன்னார்:

“அதையேன் கேட்கறீங்க.. நாலுநாள் முந்தி ஒரு ஆள் நம்ம கடைக்கு டீ குடிக்க வந்தான். டீ சொல்லீட்டு உட்கார்ந்திருந்தான். ஒரு அஞ்சு நிமிஷம் இருக்கும். கடைக்கு முன்னாடி ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்னுச்சு. நாம மெண்டல் கேசும்போம்ல, அந்த ஆள் திடீர்னு எந்திருச்சு, டீ குடிக்க வந்தவன் கையைப்பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு போனான். நாங்க கிறுக்குப் பிடிச்சு பண்றான்போலன்னு போய்த் தடுத்தோம், எங்களை முறைச்சு கத்தினான் பாருங்க.. நடுங்கீட்டோம். அதுக்குள்ள அம்பாசிடர் கார்லேர்ந்து ரெண்டு பேர் வந்து அந்த டீ குடிக்க வந்தவனை அள்ளிப் போட்டாங்க. இந்த மெண்டல் கேசும் கார்ல முன்னாடி உட்கார்ந்துட்டு போச்சு”

“கார்லயா?”

“ஆமாம்ப்பா. அது மெண்டல் கேசுல்ல. போலீஸ்ல ஏதோ வேலையாம். மூணு நாலு கொலை பண்ணிட்டு தலைமறைவா திரிஞ்ச ஒருத்தனை தேடிகிட்டு இருந்திருக்காங்க. அவன் சின்னவீடு இந்தப்பக்கம்தான் இருக்குன்னு அவங்களுக்கு தகவலாம். அதுக்காக ஒருமாசமா இப்படி அப்பப்ப வந்து உட்கார்ந்து, எல்லாம் விசாரிச்சு, அவன் வந்தப்ப கையும் களவுமா பிடிச்சுட்டாங்க” என்றார்.

கொஞ்சநாளைக்கு அந்தப் பகுதிகளில் 'மெண்டல் கேசு'களுக்கு நல்ல மரியாதை இருந்தது தனிக்கதை!


.

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - பார்டரில் பாஸ்!



ஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது! தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்!

வேட்டைக்காரன். வெகுநாள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம். எதிர்பார்ப்பை எந்த அளவு பூர்த்தி செய்திருக்கிறது...?


வழக்கமான விஜய் படம். போலீஸ் ஆகும் ஆசையில், சென்னைக்கு படிக்க வரும் விஜய் தோழி ஒருத்திக்கு நேரும் கொடுமை கண்டு பொங்குகிறார். அதனால் வில்லன் & கோ-வால் பழிவாங்கப்படுகிறார். படிப்பு, பிழைப்பு எல்லாம் போய்விட தான் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டிருக்கும் போலீஸ் அதிகாரி தேவராஜுடன் சேர்ந்து இவரும் தாதா ரேஞ்சுக்கு மாறி... ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

முன்பாதி காமெடி, பின்பாதி ஸ்பீடு என்று நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு முன் பாதியின் காமெடி ஸ்பீடாகவும், பின்பாதியின் ஸ்பீடு, காமெடியாகவும் தெரிந்தது.

விஜய் ஒரே பாணி கதையில் நடிப்பது என்று முடிவு கட்டி விட்டார். அவருக்கும் வேறு வழியில்லை, நமக்கும்.



அனுஷ்கா இந்த மாதிரியான படத்தில் ஹீரோயின் என்ன செய்வாரோ அதைச் செய்கிறார். நல்ல அழகி. நடிப்பும் வருகிறதுதான். ஆனாலும் என்னமோ ஒண்ணு மிஸ்ஸிங்!

முதல் பாதியில் சத்யன் காதலியின் கல்யாணத்தை நிறுத்தும் ஐடியா அருமை. அதேபோல, விஜய்யைக் காப்பாற்ற போலிஸ் அதிகாரி தேவராஜைத் தேடி அனுஷ்கா போகும்போது அங்கே நடக்கும் திருப்பமும் நம்மை எதிர்ப்பார்ப்பிற்குள்ளாக்குகிறது.

படத்தில் என்னைக் கவர்ந்தவர் அந்த வில்லன் வேதநாயகம். வெற்றிவிழாவின் ஜிந்தா! குரலே கலக்கலாய் இருக்கிறது. ‘சிவனும் நானும் வேறில்லை’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கிறார். சொல்லிக் கொண்டே இறக்கிறார். விஜயின் கல்லூரி நண்பராக வரும் (பேரு மறந்து போச்சு!) நடிகரும் கவர்கிறார். நன்றாகவே காமெடி வருகிறது அவருக்கு!

விஜய்?

ஒரு பெரிய கருங்கல்லை கையாலேயே உடைக்கிறார். பட்டு வேட்டியில் சட்டை, லுங்கியில் பேண்ட். காஸ்ட்யூம்ஸ் சொதப்பல். வழக்கமான விஜய் ஸ்பெஷலான டான்ஸ் ஸ்டெப்ஸ், இதில் மிஸ்ஸிங். ஏதோ புது முக நாயகனுக்கு போட்டிருப்பது போல அமைத்திருக்கிறார்கள். இருந்தாலும்....

சீனுக்கு சீன் கவர்கிறார் விஜய். இந்தப் படத்தில் விஜயின் டயலாக் டெலிவரி - க்ளாஸ்! அனுஷ்காவின் பாட்டியிடம் ஒருமாதிரி, அனுஷ்காவிடம் ஒரு மாதிரி, வில்லனிடம் ஒரு மாதிரி என்று மாடுலேஷனில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். அனுஷ்காவோடு லிப்-டு-லிப் கிஸ் வேறு இருக்கிறது!

வசனங்கள் - பல இடங்களில் நன்றாகவே இருக்கிறது.

இசை: பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு ஹிட்டாகிவிட்டது. (ஆனாலும் சின்னத்தாமரை பாடலில் விஜய்க்கு மேக்கப் போட்டவரை கையெடுத்துக் கும்பிடலாம்! தாங்கல!) பின்னணி இசையைப் பொறுத்த வரை ஆக்‌ஷன் சீன்களில் பெப் ஏற்றும் விஜய் ஆண்டனி, வசன காட்சிகளின் பின்னணியின் டிஜிட்டல் எஸ்.ஏ.ராஜ்குமாராக மிரட்டுகிறார். இரைச்சலும் அதனால் காதுவலியும்தான் மிச்சம்.

இடைவேளைக்குப் பின் கொஞ்சம் செதுக்கியிருந்தால் எல்லார் மனதையும் வேட்டையாடியிருக்கலாம். இந்த வேட்டைக்காரன் - விஜய் ரசிகர்களை மட்டுமே வேட்டையாட எடுக்கப்பட்டிருக்கிறான். ஆனாலும் சலிக்காமல் போவதால் ஓரளவு ஓடுமென்றே சொல்லலாம்!


வேட்டைக்காரன் - 42%



.

Thursday, December 3, 2009

சேம் ப்ளட்?

பாருங்க... மொதல்லயே சொல்லீடறேன்... இது ஒரு மீள் பதிவு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எழுதினது. பி.பி.சி. நிருபர் நேத்து என்னை பேட்டி எடுக்கறப்போ, ‘புதிதாக சேர்ந்திருக்கிற உங்கள் ஃபாலோயர்ஸுகளுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?’ன்னு ஒரு கேள்வியைக் கேட்டாரு. ‘நாம ஒண்ணுஞ்செய்யாம இருக்கறதே அவங்களுக்கு செய்யற பெரிய சேவையல்லவா’ன்னு மனசுக்குள்ள நெனைச்சாலும், அதை வெளில சொல்லாம, ‘என் பழைய பதிவுகள்ல சிறந்ததுன்னு நானே நினைக்கறத (வேற யார் நெனைப்பாங்க?) அப்பப்போ எடுத்துப் போடலாம்னு இருக்கேன்’னு சொன்னேன். ‘வேலை பிஸி, அது இதுன்னு எழுதாம இருக்கறது அதையாவது உருப்படியா செய்யு. வாரத்துக்கு மூணு புது பதிவும் மாசத்துக்கு ரெண்டு மீள் பதிவும் போட்டு ஒப்பேத்து’ன்னு அந்த நிருபர் அட்வைஸ் பண்ணினார்.

அதன்படி.. இன்று இது:-

******************************************************************

நான் சந்திக்கற சில பிரச்சினைகள் உங்களுக்கும் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசை...

அதே மாதிரி, சில விஷயங்களை நான் சந்திக்க நேரும்போது என் மனதில் உருவாகும் எண்ணங்கள் (ச்சே.. ரொம்ப ஃபார்மலா இருக்குப்பா வார்த்தைகள்) வித்தியாசமானதா தோணும். உமா சொல்லுவாங்க... ‘நீங்க மட்டும்தான் இப்படியெல்லாம் நெனைக்க முடியும்’ன்னு. இல்லீன்னா.., ‘உங்களுக்கு மட்டும்தான் இப்படித் தோணும்’ன்னு சொல்வாங்க.

சரி.. நம்ம மக்களைக் கேட்டுப் பார்க்கலாமேன்னுதான் இந்தப் பதிவு....

----------------

a) மிழ்மணத்துல பதிவை இணைக்க, நம்ம பதிவு தலைப்புல தெரியற தமிழ்மண விட்ஜெட்ல இருக்கற ‘அனுப்பு’வை ப்ரஸ் பண்ணினா தமிழ்மண விண்டோ ஓப்பன் ஆகி ‘ங்கொய்யால.. சேர்த்தாச்சுல்லடா? பின்ன எதுக்கு ச்சும்மா நொய் நொய்னு அமுக்கீட்டிருக்க? அஞ்சு நிமிஷம் பொறு.. ஒம்பதிவு தெரியும்’ங்குது. சரின்னு அடுத்தநாள் வேற பதிவு எழுதி, அதை நம்ம ப்ளாக் வழியா அனுப்பாம, தமிழ்மண முகப்புல இருக்கற ‘உங்கள் இடுகைகளைப் புதுப்பிக்க’வுல நம்ம யூ.ஆர்.எல்லை டைப்பி குடுத்தா ‘புதுசா என்னத்தை எழுதிக்கிழிச்ச? நீ கிழிச்சதையெல்லாம் இங்கன போட்டுட்டோம்ல’ன்னு மெரட்டுது.

மொத மாதிரி வகைப்படுத்தற ஆப்ஷனெல்லாம் இல்லியோ? உங்களுக்கும் இப்படித்தானா...?

b) ங்கியாவது சின்ன லெவல்ல சண்டை, சச்சரவுன்னா பைக்ல போயிட்டிருக்கறப்ப நின்னு வேடிக்கை பாக்கறவங்க மேல கோவம் வருது. ‘உன்னால அதைத் தடுக்கவோ, இல்ல போய் சமரசம் பேசவோ முடியும்னா நில்லு. ச்சும்மா நின்னு வேடிக்கை பார்த்து ஏன்யா கூட்டத்தைக் கூட்டறீங்க’ன்னு கேட்கத் தோணும். ஆனா அதை கேட்கமுடியாம கையாலாகாதவனா போய்ட்டே இருக்க மட்டுமே முடியுது.

c) து உண்மையா வர்ற சிந்தனை. 'இது தப்பு, இப்படி நெனைக்கறியே ச்சீ’ன்னெல்லாம் திட்டக்கூடாது.

சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். உதாரணத்துக்கு போன பாரா-ல சொன்ன மாதிரி சூழ்நிலைகள்ல நின்னு சண்டையை சமரசம் பண்ணி அது வேற எக்ஸ்டண்டுக்குப் போகுமோங்கற திங்கிங்-ல பேசாம போய்டுவேன். அதே பாச்சிலரா இருந்து கமிட்மெண்ட்ஸ் இல்லைன்னா எறங்கிப் பார்த்துடலாம்டா’ன்னு தோணும்.

கல்யாணமான எல்லாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த எண்ணம் வருமா..? (சண்டையைத் தீர்க்கற மனோபாவத்தைச் சொல்லல. கல்யாணமாகாம இருந்திருக்கலாமே-ங்கற எண்ணம்.)

d) ரு நல்ல ஃபிகரைப் பார்த்து பேசறப்போ கண்ணைப் பார்த்து பேசறது பெண்களுக்குப் பிடிக்கும்’ன்னு (யாரு சொன்னா இதை?) கேள்விப்பட்டதால கண்ணைப் பார்த்து பேசிட்டிருப்பேன். ஆனா அப்படி கண்ணைப் பார்த்துப் பேசறது ரொம்ப செயற்கையா உணர்வேன். உங்களுக்கும் அப்படியா?

(c-ஐயும், d-ஐயும் மிக்ஸ் பண்ணி குழப்பிக்காதீங்க..)

e) ல்ல ஒரு மேட்டர் ரெடி பண்ணி அது பத்தி பதிவெழுத ரொம்ப நாளா ட்ரை பண்ணிகிட்டிருப்பேன். ஆனா அதுக்கான வரிகள் செட்டாகாது. சரி எப்படியாவது எழுதலாம்னு சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்தா திடீர்னு வேற எதுனா மொக்கையா சிந்தனை ஓடி, அது விஷயமா வார்த்தைகள் கடகடன்னு கொட்டி உடனடி பதிவாகி, உங்க கெட்ட நேரத்துக்கு அந்தப் பதிவு ஹிட் வேற ஆகிடும். உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா?

f) யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும். நம்ம புக்கை வாங்கிப் படிக்கறவர்கிட்ட சொல்லலாம். அவன் காசு போட்டு வாங்கின புக்கை ‘இப்படிப் பண்ணாதே.. அப்படிப் பண்ணாதே’ன்னு சொல்லி ஏன் அடிவாங்குவானேன்.

நீங்க இப்படி நெனைச்சதுண்டா?

g) சீரியல் பாக்கறது என்னமோ தெய்வகுத்தம்ன்னு பெண்களை விமர்சனம் பண்ணிகிட்டிருக்கேன். ஆனா சேனல் மாத்தும்போது, சீரியல்களின் சில சீன்களும் பின்னணில அவனுக கொடுக்கற ப்பப்பரப்பாஆஆஆஆஆஆங்.. ட்டொய்ங்.... ம்யூசிக்கும் என்னதான் சொல்றானுக இவனுக’ன்னு ஒரு அஞ்சு நிமிஷம் பார்க்க வைக்குது.

உங்களுக்கும் இப்படித்தானா?

h) திவுகள்லயோ, பத்திரிகைகளிலோ சினிமா விமர்சனங்களைப் படித்தபிறகு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் குறைந்துவிடுகிறது. அதே சமயம், சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன். (பலதடவை இதற்காக ‘ரெண்டு வார முந்தைய விகடன் எங்க’ என்ற ரீதியில் வீட்டைக் கலைத்துப் போட்டுத் தேடியிருக்கிறேன்)

சேம் ப்ளட்?

i) வாழ்க்கையில் பல விஷயங்களில் சமரசப்பட்டு போய்விடுகிறேன். அல்லது மாறிவிடுகிறேன். பிறகு அதற்கு சப்பையாக ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப்பிஸத்தை கேவலமாக நியாயப்படுத்துகிறேன்.

உதாரணத்திற்கு, குப்பையை பொதுவில் போடக்கூடாது, திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கக்கூடாது, வெளியில் உமிழக்கூடாது, சாலைவிதிகளை மீறக் கூடாது என்பது போன்ற குறைந்த பட்சம் என்னால் முடிந்த சில நியதிகளை கடைபிடித்து வருகிறேன். இந்த லிஸ்டில் திருட்டு டி.வி.டி வாங்கக் கூடாது என்ற ஒன்றும் இருந்தது. ஆனால், அதை பலமுறை மீறுகிறேன்.

அதிலும் ஒரு விதி வைத்திருக்கிறேன்.. தியேட்டரில் பார்த்த படத்திற்குதான் டி.வி.டி வாங்குவேனே தவிர, நேரடியாக டி.வி.டியிலேயே படம் பார்க்கும் வழக்கம் இல்லை.

இந்த தி.டி.வி.டி வாங்குவதை விவாதங்களின்போது நான் நியாயப்படுத்துவது விருமாண்டி படத்துக்குப் போன சம்பவத்தைச் சொல்லி...

40 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுத்தார்கள். வந்த ரௌத்ரத்தை அடக்கி, சரி என்று பொத்திக் கொண்டு போய் கொடுத்தபோது டிக்கெட் கிழிப்பவன் என் இரு மகள்களில் ஒருத்திக்கு நிச்சயமாய் டிக்கெட் வேண்டும் என்று சொல்லிவிடவே, மறுபடி டிக்கெட் வாங்கப் போனேன். அதே 40 ரூபாய் டிக்கெட் இப்போது 60 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருந்தான். கவுண்டரில் இரண்டு, மூன்று பேர்தான் இருந்தனர். என் முறை வரும்போது, 60 ரூபாயா என்று நான் உரக்கக் கேட்டதும் ‘சரி.. கடைசி டிக்கெட்.. 50 ரூபா கொடுங்க போதும்’ என்றான்.

என்ன அநியாயம் இது என்று மேலாளர் வரை சென்று வம்பிழுத்து எந்த நியாயமும் கிடைக்காமல் அவமானப்பட்டு வந்து உட்கார்ந்தபோது பசுபதியின் மாட்டை கமல் அடக்கிமுடித்திருந்தார்.

அதே தியேட்டரில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபோது, வெறும் சப்பையாக இருக்கவே சில விசாரணை மேற்கொண்ட போது, அவர்களே டூப்ளிகேட்டாக தயாரிப்பதாய் சொன்னார்கள்.

இதையெல்லாம் சொல்லி, இப்படி இருந்தா திருட்டு டி.வி.டி-ல படம் பார்க்காம என்ன பண்றதாம் என்று கேட்பேன். ஆனால் தியேட்டர் எஃபெக்ட் கிடைப்பதில்லை என்பதால் முதல் முறை தியேட்டர்தான்.

நீங்களும் இப்ப்டி எதிலாவது உங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதுண்டா?

j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலிருந்து பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் திருப்தியாக மாட்டேனென்கிறது மனது. அதேபோல கடைசியில் டைட்டில் போடும்போது தியேட்டர் ஆபரேட்டர் க்ளோஸ் பண்ணிவிட்டால், அவனை, அந்தத் தியேட்டர் ஓனரை, மேனேஜரை கெட்ட கெட்ட வார்த்தையால் (மனசுக்குள்ளதான்..) திட்டிவிட்டுத்தான் வெளியேறுகிறேன். அதேபோல படம் முடியும் முன்னே எழுந்திருக்கும் முந்திரிக்கொட்டைகளைக் கண்டாலும் கோபம் கோபமாய் வருகிறது.

நீங்க?

k) யணங்களின் போது, வீட்டில் இருக்கும் படிக்காத சில புத்தகங்களை எடுத்துப் போகிறேன். ஆனால் அவற்றைப் படிக்காமல், போன இடத்தில் வேறு சில புத்தகங்களை வாங்கி வந்துவிடுகிறேன்.

நீங்களும் இப்படியா?

l)தாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். ரோட்டோர இளநிக்கடையில் பைக்கை நிறுத்தினால்கூட எனக்கடுத்ததாய் நாலைந்து பேர் வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ என்று கேனத்தனமாக நினைத்திருக்கிறேன்.

எனக்குத்தான் இப்படியா.. உங்களுக்குமா?


.

Tuesday, December 1, 2009

சிந்தை இரங்காரடீ



ந்த நண்பர் திருப்பூரில் 12 வீடுகள் கொண்ட ஒரு காம்பவுண்டில் வசித்து வருகிறார். மகன், மகளது படிப்பு மீது அவருக்கு மிகுந்த அக்கறை. தினமும் எட்டு, எட்டரைக்குத்தான் பணியை விட்டு வருவாரென்றாலும் வாரிசுகளின் பள்ளி டைரியை பார்வையிட்டு, கையெழுத்துப் போட்டு, வீட்டுப் பாடத்தை பரிசீலித்து எதிலாவது அவர்களுக்கு சந்தேகமென்றால் விளக்கி, அதன்பின்னரே சாப்பிடவே அமர்வார். இந்த வேலைகள் முடியும் வரை வேறெதிலும் கவனம் கொள்ளமாட்டார். கண்டிப்புடன் இருக்கும் அதே சமயம் க்ரியேட்டிவாக மகன்/மகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுக்கவும் தவறமாட்டார்.

மின்சார கணக்கெடுக்க மூன்று வீடுகளுக்கு ஒரு மீட்டர் என்றமைக்கப்பட்டிருந்த்து அந்தக் குடியிருப்பில். சென்ற நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி – வியாழன் - இவர் அலுவலகம் கிளம்பும்போது கரண்ட் இல்லை. சரி, இரவுக்குள் வந்துவிடும் என்று இருந்தவருக்கு, இரவு வீட்டுக்குப் போகும்போதும் இல்லாதிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. இவரது வீடு உட்பட மூன்று வீடுகளுக்கு மட்டும் கரண்ட் இல்லை. தன் அலைபேசியில் இருந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைத்திருக்கிறார். ஐந்தாறு முறை அழைத்தும் எடுக்காததால், காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்.

அடுத்தநாள் – வெள்ளி.

அலுவலகம் கிளம்பும்போது அந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைக்கிறார். இரண்டாவது முறை எடுத்து விட்டார். விஷயத்தை சொல்லி, விலாசம் சொல்கிறார். ‘சரிங்க.. மதியத்துக்கு மேல வந்து பார்க்கறேன்’ என்கிறார். மாலை மனைவியை அழைத்துக் கேட்கும்போது யாரும் வந்து பார்க்கவில்லை என்றறிகிறார். இவரும் அந்த லைன்மேனின் எண்ணுக்கு அழைக்கிறார். ‘The number you’re trying to reach is currently switch off’ என்ற பதில்தான் வருகிறது. வீட்டுக்கு வந்து, திங்கள் 2nd Midterm தேர்வுகள் என்பதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே பாடங்கள் சொல்லித் தருகிறார். இன்றைக்கு மனநிலை சோர்வாக உணர்கிறார்.

சனிக்கிழமை:
அதேபோல லைன்மேனின் எண்ணுக்குத் தொடர்பு கொள்கிறார். பத்துமணிக்கு லைனில் வருகிறார் லைன்மேன். நேற்று வராதது பற்றிக் கேட்க, ‘சொன்னீங்களா? எப்ப?” என்பது போல கேள்வி வருகிறது. ஒருவாறு கெஞ்சி, ‘இன்றைக்காவது பார்த்துவிடுங்கள்’ என்கிறார்.

ஆனால் அன்றைக்கும் இவர் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. மற்ற இரண்டு வீடுகளில், ஒன்றில் ஒரு பேச்சிலர். இரவு ஏதாவதொரு நேரத்திற்கு வந்து உறங்கி, காலை போய் விடுவார். இந்த மின்சாரமின்மை அவரை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. மற்றொரு வீட்டில் இருப்பவர் இந்த நண்பர் ஏதோ முயற்சியெடுத்து செய்து கொண்டிருக்கிறார் என்று அமைதியாகவே இருக்கிறார். எதுவும் முயலக் காணோம்.

ஞாயிற்றுக் கிழமை முழுவதும் இவரால் அந்த லைன்மேனைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இவரது எண்ணிலிருந்து அழைப்பு போனால் எடுக்காமல் இருந்து, பிறகு லைன் போகும்போதே அழைப்பைத் துண்டிப்பது என்று உதாசீனப்படுத்தப்படுகிறார். வேறு எண்ணிலிருந்து அழைத்தாலும், நோ ரெஸ்பான்ஸ். சைக்கிள் எடுத்துக் கொண்டு பார்பர் ஷாப், டீக்கடை, டாஸ்மாக் என்று அவரைத் தேடி இவர் அலைந்ததும் வீணாயிற்று. நண்பர்கள் ‘நாளைக்கு பவர்ஹவுசுல போய் ஒரு ரிஜிஸ்டர் இருக்கும். அதுல எழுதிட்டு வாங்க’ என்கிறார்கள்.

திங்கள்கிழமை, காலை அலுவலகத்துக்குப் போய் ஒரு மணிநேரம் அனுமதி வாங்கிக் கொண்டு, பவர் ஹவுசுக்கு செல்கிறார். அங்கே இரண்டு பேர் இருக்கிறார்கள். ‘கம்ப்ளெய்ண்ட் ரிஜிஸ்டரா? அதெல்லாம் இப்ப யார் எழுதறாங்க? உங்க வீட்டு லைன்மேனுக்கு அடிக்க வேண்டியதுதானே?’ என்கிறார்கள். இவர் கடந்த ஐந்து நாட்களாக பட்ட அவதியைச் சொல்கிறார். ‘ஐய... அந்த லைன்மேனுக்கு ப்ரமோஷன் கன்ஃபர்ம் ஆயிடுச்சுங்க.. ஆனா இன்னும் போஸ்டிங் போடல. அதுனால லைன்ல சரியா வேலை செய்யறதில்லை. அடிக்கடி நம்பரை மாத்தீடுவான். இந்த மாசத்துல மட்டும் மூணுவாட்டி மாத்தீட்டான்’ என்றார்கள். ‘சரி.. அந்த ரிஜிஸ்டரைக் குடுங்க. அட்ரஸ் எழுதி குடுத்துட்டு போறேன். வந்து பார்க்கச் சொல்லுங்க’ என்கிறார் இவர்.

கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தேடியும் அந்த ரிஜிஸ்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களோடு சேர்ந்து இவரும் தேடுகிறார். ம்ஹூம். பயனில்லை. ‘விடுங்க.. நாளைக்கு வந்து ஏ.ஈ-ஐப் பாருங்க. அவரு கூப்ட்டு ரெண்டு வாங்கு வாங்கினாருன்னா டப்பியைக் கட்டீட்டு வந்துடுவான்’ என்கிறார்கள் அவர்கள். அப்படியானால் இன்றைக்கும் சரியாகாதா என்று மிகுந்த மனவேதனையோடு திரும்புகிறார்.

செவ்வாய்க்கிழமை.
பவர்ஹவுஸ் சென்று, ஒருமணிநேரம் காத்திருந்து ஏ.ஈ தரிசனம் பெற்று ஆறு நாட்களாக வீட்டில் மின்சாரமில்லை என்பதையும், வாரிசுகள் தேர்வுக்குப் படிக்க இயலாத நிலையையும் சொல்கிறார். ‘இன்னைக்கே அவனை வந்து பார்க்கச் சொல்றேன்’ என்கிறார். வேறு லைன்மேன்கள் இல்லையா என்று இவர் கேட்டதற்கு ‘இன்னைக்குதானே என்கிட்ட வந்திருக்கீங்க? நைட்டுக்குள்ள சரியாய்டும் போங்க.. என்னாத்துக்கு வேறலைன்மேன்களை தொந்தரவு பண்ணிகிட்டு’ என்றிருக்கிறார்.

இரவுக்குள் ஒரு மாற்றமுமில்லை. புதன் காலை, கவுன்சிலரை சந்தித்து அழமாட்டாத குறையாக புகார் தெரிவிக்க, அவர் மனது வைத்து முயன்று, அன்று மாலை லைன்மேன் ஒருவன் வந்து ‘என்னா தருவ?’ என்ற டிமாண்டோடு சரிசெய்துவிட்டுப் போயிருக்கிறான்.

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் –ஆறு நாட்கள். ஒரு தனிமனிதன் எந்தச் சாதனையையும் செய்ய முடியாது என்பதற்கு சாட்சியாய் கடந்திருக்கிறது.

நேற்று என்னைச் சந்திக்க அவர் வந்திருந்தபோது, என் நேற்றைய காமன்மேன் பதிவை படித்துக் கொண்டிருந்தோம். ‘ஒரு சாமான்யனால எதுவுமே செய்ய முடியாது கிருஷ்ணா’ என்று நீர் தளும்பும் கண்களோடு இதை அவர் விவரித்தபோது என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

உலகத்தைப் புரட்டும் நெம்புகோல், ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமென்று நம்புகிறவன்தான் நான். ஆனால், அந்த நெம்புகோலால், என் சக மனிதன் என்னைக் குத்துகிறானே என்கிற அவரது வருத்தம், விடையில்லா கேள்வியாய் நிற்கிறது. ‘எல்லாரையும் விடுங்க. அந்த லைன்மேன் என்னை மாதிரி ஒரு சாமான்யன் தானே.. அவனுக்கு கூட இரக்கம்கறது இருக்காதா? இதே ஒரு பணக்கார வீட்டுலயோ, பெரிய நிறுவனத்திலயோ நடந்திருந்தா இப்படி அலட்சியமா இருப்பானா? என் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர, நைட் கொசுக்கடியில்லாம என் குடும்பம் தூங்க நான் பட்ட கஷ்டத்த விட இந்த சம்பவங்கள் என் மனசுல தந்திருக்கற வலி அதிகம் கிருஷ்ணா. இந்த மாதிரி கரண்ட் போனா என்ன பண்ணனும்.. நான் பண்றது சரியா? என் முயற்சிகள் தப்பானதாலதான் பலனில்லாம போச்சா.. முதல் நாளே பவர் ஹவுசுக்கு போகணுமா.. ஓரளவு உலகம் தெரிஞ்ச எனக்கு இப்படீன்னா என்னை விட அசட்டுத் தனமா இருக்கற மனுஷன் இந்த உலகத்துல வாழவே தகுதியில்லாதவனா..’ என்று துவங்கி அவர் கேட்ட கேள்வி ஒவ்வொன்றும் என்னை இரவு என் உறக்கத்தைக் கலைத்தன.

என்ன செய்ய வேண்டும் நாம்?


சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடீ – கிளியே
செம்மை மறந்தா ரடீ
-பாரதியார்

.

Monday, November 30, 2009

காமன்மேன் – 25





ந்தக் காமன்மேனுக்கும், கமலஹாசனின் காமன்மேனுக்கும் சம்பந்தமில்லை. இவர் சம்பளத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாமான்யன். ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஹீரோவாக ஆகிவிடுவார். அரசியல், சினிமா, விளையாட்டு, வாணிகம் என்று எந்த டாபிக் எடுத்தாலும், தெரிந்ததையோ தெரியாததையோ தைரியமாகப் பேசி எதிராளியை சமாளிப்பதில் வல்லவர்.

இந்த வாரம் இவரைப் பற்றிய 25 விஷயங்கள்...

************************

ந்த ஒரு அவசர வேலையாகப் போய்க் கொண்டிருந்தாலும் சரி, ஐந்துபேரைக் கொண்ட - ‘கூட்டம்’ மாதிரியாக - ஏதாவது சாலையில் தென்பட்டால் நின்று வேடிக்கை பார்த்துப் போவது இவரின் தலையாய பழக்கம். என்னவென்று தெரிந்துகொண்டு ஒரு ***ம் **ங்கப் போவதில்லையென்றாலும், வேடிக்கைப் பார்ப்பதில் இவருக்கிருக்கும் சுதந்திரத்தை என்றுமே விட்டுத் தரமாட்டார்.

ல்லா நாளுமே, அடுத்தநாள் பள்ளிக்கு/கல்லூரிக்கு/ஆஃபீஸுக்கு நேரமாகக் கிளம்பி, ரிலாக்ஸாகப் போகவேண்டுமென்று நினைப்பார். ஆனாலும் அந்த அடுத்தநாளும் அப்படியேதான் தொடரும் இவருக்கு.

ணமான ஆண்களுக்கு மனைவியைக் குறை சொல்லிப் பேசுவதில் ஒரு சிற்றின்பம். என்னதான் தன் திருமணவாழ்க்கை வெற்றிகரமாய்ப் போய்க் கொண்டிருந்தாலும், திருமணம் செய்துகொள்வதாய் சொல்பவர்களிடம் ‘மாட்டிக்கிட்டியா?’ என்று பயமுறுத்துவதில் ஆண் பெண் இருவருமே சரிசமம்தான்.

நாடு, அரசியல் தலைவர்கள், தன் குடும்ப மூதாதையர் பற்றித் தெரிந்து கொள்வதை விட, தனக்குப் பிடித்த நடிகரின் படங்கள், சாதனைகள்., பிடித்த விளையாட்டு வீரரின் ரெகார்டுகளை மனனம் செய்து வைத்திருப்பதில் இவருக்கு நிகர் இவர்தான்.

கிரிக்கெட்டில் தன் நாடு தோற்றால் கேவலமான ஒரு கமெண்ட்டும், ஜெயித்தால் அவர்களைக் கடவுளாக்கி ஒரு கமெண்ட்டும் கொடுக்கத் தவறமாட்டார். இது மாறி மாறி நடந்து கொண்டிருந்தாலும், இவர் மாறுவதில்லை.

ன் பிரச்சினைக்கு யாரும் வரவில்லையென்ற ஏக்கம் இவருக்கு எப்போதுமே இருக்கும். ஆனால் பிறருக்கொரு பிரச்சினையென்றால் 'நமக்கெதுக்கு வம்பு' என்று ஒதுங்குவதை நியாயம் கற்பிப்பார்.

ந்தக் கெட்ட பழக்கமுமில்லாமல் எந்தத் தவறும் செய்யாமல் நேர்மையாக, ஒழுங்காக வரி கட்டிக் கொண்டு உதாரணமனிதனாய் வாழ்ந்து வருபவர்கூட, காக்கிச் சட்டையைக் கண்டால் எட்ட ஒதுங்கிவிடும் பயந்தாங்கொள்ளி ஆகிவிடுவார். இந்த காமன்மேனுக்கு மட்டும், காவல்துறை என்றாலே ஆகாது.

ருடாவருடம் காலண்டர் வாங்கினால் விடுமுறை தினங்கள் எந்தக் கிழமையில் வருகிறதென்பதைப் பார்ப்பது இவரது தவறாத பழக்கம்.

‘எதற்காகவும் கவலைப்படமாட்டேன் நான்’ என்பவர் இவர். ஆனால் தன்னைப் பற்றிய கவலை உள்ளூர இருந்து கொண்டேயிருக்கும் இவருக்கு.

ந்தக் கணினி யுகத்தில் டைரி எழுதும் பழக்கத்தை விட்டவர். இருந்தாலும் ஓசி டைரி வராதா என வருடத் துவக்கத்தில் எதிர்ப்பார்க்கும் வழக்கத்தை இன்னும் கைவிடவில்லை.

ண்ணீர் பாட்டிலை குடித்துவிட்டு க்ரஷ் செய்ய வேண்டுமென்பதுதான் முறையென்றாலும், இதுவரை என்றுமே அப்படிச் செய்யாமல் மறக்காமல் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்.


துணிக்கடைகளில் பிக்‌ஷாப்பர் பைகளுக்கு சண்டை போடுவார். கொடுக்காத கடைகளுக்கு அடுத்த வருடம் போகவும் மாட்டாத ரோஷக்காரர் இவர்.

டம் பார்த்துவிட்டு, மீண்டும் பார்க்க வந்து முன்பின் இருக்கைகளுக்கு கேட்கும் வண்ணம் கதை சொல்லி கழுத்தறுப்பது இவரது பொழுதுபோக்குகளில் ஒன்று.



செல்ஃபோன் வைத்திருப்பது இவருக்கு பெருமையான ஒன்று. அதை அடுத்தவருக்குத் தெரியும்வண்ணம் வைத்திருப்பதும், உரக்கப் பேசுவதும் இவரது உடன்பிறந்த பழக்கம்.

ட்ராஃபிக் சென்ஸ் என்பது இவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது. அடுத்தவரைப் பற்றிய கவலையின்றி வாகனத்தைப் பார்க் செய்வதில் தொடங்கி, போக்குவரத்தின் போது இவர் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இருப்பதில்லை. வைத்திருப்பது பைக், கார், சைக்கிள் என்று எதுவாகவிருப்பினும் இதில் மாற்றமில்லை.

பொதுக் கழிவறைகளைச் சுற்றி சிறுநீர் கழிப்பது, குப்பைத் தொட்டிகளின் வெளியே குப்பைகளைக் கொட்டுவது என்று துவங்கி, செய்யாதே என்றறிவிக்கப்பட்டவற்றை செய்து பார்ப்பதில் இவருக்கு த்ரில் அதிகம்.

முன்னே செல்லும் பெண்ணை, பின்னாலிலிருந்து பார்த்தபிறகு அவரை முந்திச் சென்று முகம்பார்ப்பதில் இவருக்கிருக்கும் ஆர்வம் ஆண்டாண்டு காலமாய் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுவே பெண்களுக்கோ ஆணைப் பார்த்துவிட்டாலும், பார்க்காதமாதிரி போவதில் ஒரு இன்பம்.

ஞ்சம் என்பதை ஏறக்குறைய அங்கீகரித்துவிட்டார் இந்தக் காமன்மேன்.

தான்போகும் பேருந்து மெதுவாகச் செல்வதாய்க் குறை பட்டுக் கொள்வார். அதுவே, ஏதாவது பேருந்து வேகமான தாண்டிச் சென்றால், ‘ஓவர்ஸ்பீடுப்பா’ என்று சபிப்பார்.

சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவது இவரது நெடுநாளைய பலவீனம்.

க்தி என்பது இவருக்கு சீஸனுக்கு மட்டும்தான் வரும். அப்போதெல்லாம் தன் தேவைக்குத் தகுந்த மாதிரி, ஆன்மிக விதிகளைத் தளர்த்திக் கொள்வார் இவர்.

வரது சமீபத்திய பழக்கம், ‘ஓட்டுப் போட எவ்வளவு கிடைக்கும்?’ என்று எதிர்ப்பார்ப்பது. ஆனால், வாங்கிய காசுக்கு சொன்னமாதிரி ஓட்டுப் போட்டு, தன் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்து கொள்வதால் அரசியல் கட்சியினரிடையே இவருக்கு டிமாண்ட் அதிகம்.

வாரிசுகள் பிறந்த உடனே ‘தன் மகன்/மகள் இப்படி ஆகவேண்டும்’ என்று ஏதாவதொரு கனவையும் கூடவே வளர்த்துக் கொள்வார். அதற்கு மாறாக நடந்துவிட்டாலும், ‘அவர்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்று விட்டுக் கொடுப்பதில் இவருக்கு எப்போதுமே நற்பெயர்.

றிவுரை சொல்வதும் இவருக்குப் பிடித்தமாதிரி பொழுதுபோக்குகளில் ஒன்று. ‘அதுபோல நீ நடந்து கொள்கிறாயா’ என்று கேட்டால் மட்டும் இவருக்குப் பிடிக்காது.

சொந்தக்காரர்கள், நண்பர்கள் என்று நெருங்கியவர்களாலும், அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் என்று தனக்குப் பிடித்தமானவர்களாலும் ஏமாற்றப்படும்போது மிகவும் உடைந்துபோய்விடுவார். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டுமென்று எண்ணுவார். ஆனாலும், அவர்களை மன்னித்து மீண்டும் அவர்கள் பக்கம் நிற்பார்...உதவி செய்வார். இந்த விஷயத்தில் மனிதத்தை வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த ‘சோ கால்ட்’ காமன்மேன்தான்.


.

Friday, November 27, 2009

இது அவியலா???

ஏன் இத்தனை நாள் இடைவெளி என்பதை, எப்படியெப்படியெல்லாமோ கேட்ட நண்பர்களுக்கு, தனியஞ்சலில் பதிலனுப்பியாயிற்று. நான் எழுதாமல் இருந்த இந்தக் காலகட்டத்தில் வலையுலகில் என்னென்ன நடந்தது என்று க்ளிக்கிப் பார்க்காமல் நேரடியாக எழுத உட்கார்ந்து விட்டேன்.

எதுவும் நிகழாமலும், ஏதாவது நிகழ்ந்து கொண்டும் அதனதன் போக்கில் அதது...

********************************

வாரிசுகள் வளர்ந்து விட்டார்கள். அவர்களின் கமெண்டுகளை ரசிப்பது, ரசனையான ஒன்றாக இருக்கிறது.

குடும்பத்தோடு சாப்பிடப் போனபோது, மீராவிடம் என்ன சாப்பிடுகிறாயெனக் கேட்டபோது ‘நான் மீன் சாப்பிடுகிறேன். அதுதானே அம்மாவிற்கு நல்லது’ என்றாள். ‘மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அம்மாவுக்கு நல்லதா?’ என்று கேட்டேன்... மீரா சொன்னாள்: ‘அம்மாதாம்ப்பா என் கண்ணு...”

அதேபோல,

'Which is the Longest Wall' என்று மீரா படித்துக் கொண்டிருக்கும் போது, மேகா சொன்னாள் ‘ஒனக்கிருக்கறதுதான் லாங்கஸ்ட் வாலு...’

*************

சமீபத்தில், கேட்டுக் கொண்டேயிருக்கும் பாடல் ‘பையா’வில் ‘என் காதல் சொல்ல நேரமில்லை’. டிபிகல் யுவன் சாங். அவரே பாடியிருக்கிறார். இதுபோன்ற பாடலில், அவர் உயிர்ப்போடு அடிவயிற்றிலிருந்து பாடும்போது நமக்கு கிடைக்கும் உணர்வு, ப்பா...!

***************

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு போயிருந்தபோது, நண்பனொருவன் கேட்டான்.. ‘ரயிலில் எக்ஸ் சர்வீஸ் மேன், ஆர்மிக்காரர்கள் ஆகியோர்கள் வீட்டு ஜன்னல்களைத் தூக்கிப் போக எதற்காக சலுகை அறிவிக்கிறார்கள்?’ என்றொரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டான். ஒன்றுமே புரியாமல் மரியாதையாக முழித்துக் கொண்டிருந்தபோது (திரு திரு ன்னு) அருகிலிருந்த போர்டைக் காட்டினான்..

"Concessions Details" என்ற தலைப்பில் பயணக் கட்டணத்தில் யார் யாருக்கு என்னென்ன சலுகைகள் என்றறிவிக்கப்பட்டிருந்த போர்டில் 'Windows of Ex-Serviceman' 'Windows of Policeman' என்று Widowவுக்கு பதில் எல்லா இடங்களிலும் windows இருந்தது.

கொடுமைடா சாமி!

*****************************

திருப்பூர் வலைப்பதிவர் சங்கத் தலைவர் வெயிலான், பொருளாளர் சாமிநாதனுடன் லவ்டேல் மேடியின் திருமணத்திற்கு சென்று வந்தேன். காரில் சென்று கொண்டிருக்கும்போது சங்கத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பித்து நிறையபேரின் விண்ணப்பங்கள் நிலுவையிலிருப்பதாகச் சொன்னார். சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக, ஏஞ்சல் ஹோட்டலில் ஞாயிறன்று கூட்டம் நடத்தவிருப்பதாகவும் சொன்னார்.

அதுபோக, எஸ்.ராவை சங்கத்தின் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதாகவும் ஜனவரியில் அவர் கலந்து கொள்ளச் சம்மதித்திருப்பதாகவும் சொன்னார்.

வெயிலான் போல செயல்திறமிக்க தலைவரைப் பெற, திருப்பூர் வலைப்பதிவர் பேரவை என்ன தவம் செய்ததோ....

.........................

Thursday, November 12, 2009

இளைஞர்களின் இதயக்கனி



இன்று பிறந்த நாள் காணும் “இளைஞர்களின் இதயக்கனிக்கு” வாழ்த்துகள். தன் பேரை வெளியே சொல்லும் எந்த கொண்டாட்டங்களும் வேண்டாமென்று கேட்டுக் கொண்டதால் பெயர் போடவில்லை. யாரென்று தெரிந்தவர்கள் வாழ்த்திக்கோங்கப்பா.

பசங்களுக்கு ஆண்ட்டிகள் மட்டுமல்ல, அங்கிள் மேலயும் பாசம் ஆதிகம்தான்

Monday, November 9, 2009

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

















மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் வார்த்தைகள் வரவில்லை. ஆகவே வார்தைகளற்ற இந்தப் பதிவு. (ம்க்கும்!)

நாளை சந்திக்கிறேன்! (நாளைக்காஆஆஆஆ?)


.

Thursday, November 5, 2009

டாப் டென் மறதிகள்



ரொம்ப நாள் கழிச்சு பத்து...

மறதி விஷயத்துல நம்மளை அடிச்சுக்க யாரும் கிடையாது. நம்மளைன்னு சொன்னா உங்களையும் சேர்த்துதான். நாம வழக்கமா மறக்கற பல விஷயங்களை பட்டியல் போட்டா டாப்ல வர்ற பத்து மறதிகள்...

1) ஏதாவது இடங்களுக்குப் போனா செல்ஃபோனை கைல வெச்சுகிட்டு, வர்றப்ப எங்க வெச்சோம்னு பத்து நிமிஷம் தேடிட்டு இருப்போம். கடைசில கையிலயும் இல்லாம, பையிலயும் இல்லாம, கடையிலயும் இல்லாம, காருக்குள்ளயே இருக்கும்.

2) வீட்டுக்குப் போறப்ப வழில இருக்கற கடைல இறங்கி ஏதாவது பொருள் வாங்க வேண்டியிருக்கும். அந்தக் கடையைத் தாண்டிப் போனப்பறமோ, வீட்டு காலிங்பெல்லை அடிக்கறப்பவோதான் அது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கும்.

3) விகடனோ, உயிர்மையோ, மணல்வீடோ படிச்சுட்டு இருப்போம். நல்ல கட்டுரையா இருக்கும். ‘இத இப்படிப் படிக்க்க் கூடாது. சண்டே பால்கனில உட்கார்ந்து பொறுமையா படிக்கணும்’ன்னு அத ஜம்ப் பண்ணீட்டுப் போவோம். அவ்ளோதான். அடுத்த இஷ்யூ வரும்போதுதான் ‘அட.. போன இஷ்யூல அதப் படிக்கலியே’ன்னு ஞாபகம் வரும். வீட்டைப் புரட்டிப் போட்டு, மனைவிகிட்ட திட்டு வாங்கி... ச்சே...

4) அலுவலக வேலையா யார்கூடயாவது எம்.டி.முன்னாடி உட்கார்ந்து ஃபோன்ல பேசிகிட்டிருப்போம். அப்போ கால்வெய்ட்டிங்ல இன்னொரு ஃப்ரெண்டு வருவார். எம்.டி.முன்னாடி எடுக்கவும் முடியாதா.. சரி அப்புறமா கூப்பிட்டுக்கலாம்னு விட்டுடுவோம். அது அவ்ளோதான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கூப்பிட்டு திட்டும்போதுதான் ஞாபகமே வரும். இல்லையேன்னு சமாளிக்கவும் முடியாது...

5) தெரிஞ்சவங்களோட பிறந்தநாள், திருமணநாள்னு குறிச்சு வெச்சிருப்போம். ‘அடுத்த வாரம் வருதா.. ம்ம்.. கூப்பிட்டு வாழ்த்தணும்’னு நெனைப்போம். கரெக்டா அதுக்கு அடுத்த வாரம்தான் ஞாபகத்துக்கு வரும்.

6) ஃப்ரெண்டுகிட்ட ஏதாவது கடன் வாங்கியிருப்போம். பட்ஜெட் போடும்போது அதுமட்டும் எப்படியோ....

7) ‘நாளைக்குக் குளிக்கறப்போ, காலை நல்லா தேய்ச்சுக் குளிக்கணும்’னு நெனைச்சுப்போம். ஆஃபீஸ்ல எப்பவாவது நம்ம காலை நாம பாக்கறப்பதான் அட மறந்துட்டோமேன்னு தோணும்.

8) ஏதாவது குறிப்புகளுக்காக ஆஃபீஸ்ல இணையத்துல உட்கார்ந்து தேடிப் பிடிச்சு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுட்டு, குறிப்பிட்ட மீட்டிங்குக்கு எல்லாத்தையும் வெச்சு கரெக்டா நோட்ஸ் எடுத்து வெச்சுட்டுப் போய் அசத்தணும்னு நெனைச்சுட்டே இருப்போம். கரெக்டா அந்த மீட்டிங்குக்கு போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் அந்தப் பேப்பர்ஸெல்லாம் எங்க வெச்சோம்னு மறந்து போய்த் தேடிட்டே... இருப்போம்.. அதுக்குள்ள...

9) இந்த மாதிரி பதிவுகள் எழுத பத்து பாய்ண்ட்ஸை குறிப்பெழுதி கிறுக்கி வெச்சிருப்போம். கரெக்டா இத எழுதலாம்னு தோணித் தேடும்போது அது கிடைக்காம, ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு ஒம்பது பாய்ண்ட்ஸை எழுதி ஒப்பேத்தீடுவோம். அந்த பத்தாவது பாய்ண்ட் மட்டும்.....



.

Wednesday, November 4, 2009

அவியல் 04.11.09




இந்தப் படத்தில் இருப்பவர்களெல்லாம் யார்?

1) ஆதவனுக்கு டிக்கெட் கிடைக்காமல் வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள்

2) குருவி படம் பார்த்துவிட்டு, டிக்கெட் காசைத் திருப்பிக் கேட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தவர்கள்

3) நமீதாவைப் பார்க்க சென்னை சென்று, பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு நின்று கொண்டிருப்பவர்கள்

விடை கடைசி பாராவில்.

**********************************

ண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.

“எங்கய்யா இருக்க? இன்னும் ஆஃபீஸுக்கு வர்லியா?”

“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”

“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.

இதிலென்ன இருக்கு?

பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!

*********************

ன் தோழி ஒருத்தி தனக்குப் பிறந்த மகளுக்காக ஒரு பெயர் வேண்டுமென்று ரொம்ப நாளாக செலக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு சீரியலில் வந்த (செல்வி?) கேரக்டர் ஒன்றின் மஹிமா என்ற பெயர் குடும்பத்தில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. அதையே தேர்வு செய்திருக்கிறார்கள். பெயர் வைப்பதற்கு சில நாட்களுக்கு முன், அந்த சீரியலில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் காட்டியிருக்கிறார்கள். உடனேயே எல்லாரும் கெட்ட சகுனமாக நினைத்து பேரை மாற்றிவிட்டார்களாம்! சீரியல்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.

****************************************

நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். எப்போதாவது நானும் எடுப்பேன். அரைமணிநேரம் பேசுவோம். கடைசியில் சொல்லுவார்.. “சரி..சரி.. பிஸியா இருக்கீங்க போல... நீங்க எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்பச் சொல்லுங்க.. கொஞ்சம் பேசணும்”

‘கொஞ்சம்’ பேசணுமா? அப்ப அரை மணிநேரம்கறது ‘கொஞ்சம்’கூட அல்லவா உங்களுக்கு?’ என்று நினைத்துக் கொள்வேன்!

*****************************
சில நாட்களுக்கு முன் நண்பர் செல்வேந்திரன் ஒரு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார்.

I'm happy to inform that my bike is crossing 10000 kilometers today. I take this opportunity to convey my sincere thanks to Honda company, Ministry of Transport, Road contractors, Indian Oil Corporation, Hindustan Oil Corporation and Mechanic Murugesan.

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா...


***************************

கீழே சில கவிதைகள். எழுதியது நானல்ல.. என் வலையில் போட்டுக் கொள்ள பிரபலம் ஒருவர் எழுதியது. யாரென்று கண்டுபிடியுங்களேன்...


ஏறுவரிசை - இறங்குவரிசை

அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!

----------------------

கருணை

எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!

--------------------------

போதனை

நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!

--------------------------

அதிகப்பிரசங்கம்

இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!

----------------------------

முரண் முக்தி

இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.

-----------------------
அவதார புருஷன்

கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!

------------------------

வேதாந்த விவாதம் 2009

அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரதில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.

----------------------------

ஐங்கரன்


பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?

----------------------------

மேலே படங்களில் நீங்கள் கண்டதெல்லாம் நான் சொன்ன ஆப்ஷன்களில் ஏதுமில்லை. அவர்களால் ஆதவனையோ, குருவியையோ, நமீதாவையோ பார்க்க முடியாது. அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே...

மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைப் படியுங்கள்.

(இந்தத் தகவலை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பர் குமார் சுப்ரமணியனுக்கு நன்றி!)


.