பாருங்க... மொதல்லயே சொல்லீடறேன்... இது ஒரு மீள் பதிவு. ஒரு வருஷத்துக்கு முன்னாடி எழுதினது. பி.பி.சி. நிருபர் நேத்து என்னை பேட்டி எடுக்கறப்போ, ‘புதிதாக சேர்ந்திருக்கிற உங்கள் ஃபாலோயர்ஸுகளுக்காக என்ன செய்யப் போகிறீர்கள்?’ன்னு ஒரு கேள்வியைக் கேட்டாரு. ‘நாம ஒண்ணுஞ்செய்யாம இருக்கறதே அவங்களுக்கு செய்யற பெரிய சேவையல்லவா’ன்னு மனசுக்குள்ள நெனைச்சாலும், அதை வெளில சொல்லாம, ‘என் பழைய பதிவுகள்ல சிறந்ததுன்னு நானே நினைக்கறத (வேற யார் நெனைப்பாங்க?) அப்பப்போ எடுத்துப் போடலாம்னு இருக்கேன்’னு சொன்னேன். ‘வேலை பிஸி, அது இதுன்னு எழுதாம இருக்கறது அதையாவது உருப்படியா செய்யு. வாரத்துக்கு மூணு புது பதிவும் மாசத்துக்கு ரெண்டு மீள் பதிவும் போட்டு ஒப்பேத்து’ன்னு அந்த நிருபர் அட்வைஸ் பண்ணினார்.
அதன்படி.. இன்று இது:-
******************************************************************
நான் சந்திக்கற சில பிரச்சினைகள் உங்களுக்கும் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசை...
அதே மாதிரி, சில விஷயங்களை நான் சந்திக்க நேரும்போது என் மனதில் உருவாகும் எண்ணங்கள் (ச்சே.. ரொம்ப ஃபார்மலா இருக்குப்பா வார்த்தைகள்) வித்தியாசமானதா தோணும். உமா சொல்லுவாங்க... ‘நீங்க மட்டும்தான் இப்படியெல்லாம் நெனைக்க முடியும்’ன்னு. இல்லீன்னா.., ‘உங்களுக்கு மட்டும்தான் இப்படித் தோணும்’ன்னு சொல்வாங்க.
சரி.. நம்ம மக்களைக் கேட்டுப் பார்க்கலாமேன்னுதான் இந்தப் பதிவு....
----------------
a) தமிழ்மணத்துல பதிவை இணைக்க, நம்ம பதிவு தலைப்புல தெரியற தமிழ்மண விட்ஜெட்ல இருக்கற ‘அனுப்பு’வை ப்ரஸ் பண்ணினா தமிழ்மண விண்டோ ஓப்பன் ஆகி ‘ங்கொய்யால.. சேர்த்தாச்சுல்லடா? பின்ன எதுக்கு ச்சும்மா நொய் நொய்னு அமுக்கீட்டிருக்க? அஞ்சு நிமிஷம் பொறு.. ஒம்பதிவு தெரியும்’ங்குது. சரின்னு அடுத்தநாள் வேற பதிவு எழுதி, அதை நம்ம ப்ளாக் வழியா அனுப்பாம, தமிழ்மண முகப்புல இருக்கற ‘உங்கள் இடுகைகளைப் புதுப்பிக்க’வுல நம்ம யூ.ஆர்.எல்லை டைப்பி குடுத்தா ‘புதுசா என்னத்தை எழுதிக்கிழிச்ச? நீ கிழிச்சதையெல்லாம் இங்கன போட்டுட்டோம்ல’ன்னு மெரட்டுது.
மொத மாதிரி வகைப்படுத்தற ஆப்ஷனெல்லாம் இல்லியோ? உங்களுக்கும் இப்படித்தானா...?
b) எங்கியாவது சின்ன லெவல்ல சண்டை, சச்சரவுன்னா பைக்ல போயிட்டிருக்கறப்ப நின்னு வேடிக்கை பாக்கறவங்க மேல கோவம் வருது. ‘உன்னால அதைத் தடுக்கவோ, இல்ல போய் சமரசம் பேசவோ முடியும்னா நில்லு. ச்சும்மா நின்னு வேடிக்கை பார்த்து ஏன்யா கூட்டத்தைக் கூட்டறீங்க’ன்னு கேட்கத் தோணும். ஆனா அதை கேட்கமுடியாம கையாலாகாதவனா போய்ட்டே இருக்க மட்டுமே முடியுது.
c) இது உண்மையா வர்ற சிந்தனை. 'இது தப்பு, இப்படி நெனைக்கறியே ச்சீ’ன்னெல்லாம் திட்டக்கூடாது.
சில சமயங்கள்ல ‘கல்யாணமாகாம இருந்திருந்தா தேவலை’ன்னு தோணும். உதாரணத்துக்கு போன பாரா-ல சொன்ன மாதிரி சூழ்நிலைகள்ல நின்னு சண்டையை சமரசம் பண்ணி அது வேற எக்ஸ்டண்டுக்குப் போகுமோங்கற திங்கிங்-ல பேசாம போய்டுவேன். அதே பாச்சிலரா இருந்து கமிட்மெண்ட்ஸ் இல்லைன்னா எறங்கிப் பார்த்துடலாம்டா’ன்னு தோணும்.
கல்யாணமான எல்லாருக்குமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல இந்த எண்ணம் வருமா..? (சண்டையைத் தீர்க்கற மனோபாவத்தைச் சொல்லல. கல்யாணமாகாம இருந்திருக்கலாமே-ங்கற எண்ணம்.)
d) ஒரு நல்ல ஃபிகரைப் பார்த்து பேசறப்போ கண்ணைப் பார்த்து பேசறது பெண்களுக்குப் பிடிக்கும்’ன்னு (யாரு சொன்னா இதை?) கேள்விப்பட்டதால கண்ணைப் பார்த்து பேசிட்டிருப்பேன். ஆனா அப்படி கண்ணைப் பார்த்துப் பேசறது ரொம்ப செயற்கையா உணர்வேன். உங்களுக்கும் அப்படியா?
(c-ஐயும், d-ஐயும் மிக்ஸ் பண்ணி குழப்பிக்காதீங்க..)
e) நல்ல ஒரு மேட்டர் ரெடி பண்ணி அது பத்தி பதிவெழுத ரொம்ப நாளா ட்ரை பண்ணிகிட்டிருப்பேன். ஆனா அதுக்கான வரிகள் செட்டாகாது. சரி எப்படியாவது எழுதலாம்னு சிஸ்டம் முன்னாடி உக்கார்ந்தா திடீர்னு வேற எதுனா மொக்கையா சிந்தனை ஓடி, அது விஷயமா வார்த்தைகள் கடகடன்னு கொட்டி உடனடி பதிவாகி, உங்க கெட்ட நேரத்துக்கு அந்தப் பதிவு ஹிட் வேற ஆகிடும். உங்களுக்கும் இப்படி நடந்திருக்கா?
f) யாராவது புத்தகத்தை படிச்சிட்டிருக்கறப்போ பக்கங்களைத் திருப்ப, கீழ் வலது மூலையை விரல்களால் மடக்கி - அந்தப் பக்கத்துல திருப்பினத்துக்குண்டான அடையாளம் விழற அளவு அழுத்தி - திருப்பறப்போ நமக்கு வலிக்குது. படிக்கற பக்கத்தின் வலது மேல் மூலையை ஒரு விரலாலே... அழகா திருப்பலாமே-ன்னு சொல்லத்தோணும். நம்ம புக்கை வாங்கிப் படிக்கறவர்கிட்ட சொல்லலாம். அவன் காசு போட்டு வாங்கின புக்கை ‘இப்படிப் பண்ணாதே.. அப்படிப் பண்ணாதே’ன்னு சொல்லி ஏன் அடிவாங்குவானேன்.
நீங்க இப்படி நெனைச்சதுண்டா?
g) சீரியல் பாக்கறது என்னமோ தெய்வகுத்தம்ன்னு பெண்களை விமர்சனம் பண்ணிகிட்டிருக்கேன். ஆனா சேனல் மாத்தும்போது, சீரியல்களின் சில சீன்களும் பின்னணில அவனுக கொடுக்கற ப்பப்பரப்பாஆஆஆஆஆஆங்.. ட்டொய்ங்.... ம்யூசிக்கும் என்னதான் சொல்றானுக இவனுக’ன்னு ஒரு அஞ்சு நிமிஷம் பார்க்க வைக்குது.
உங்களுக்கும் இப்படித்தானா?
h) பதிவுகள்லயோ, பத்திரிகைகளிலோ சினிமா விமர்சனங்களைப் படித்தபிறகு அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் குறைந்துவிடுகிறது. அதே சமயம், சினிமா பார்த்துவிட்டு வந்தபிறகு அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தேடிப் படிக்கிறேன். (பலதடவை இதற்காக ‘ரெண்டு வார முந்தைய விகடன் எங்க’ என்ற ரீதியில் வீட்டைக் கலைத்துப் போட்டுத் தேடியிருக்கிறேன்)
சேம் ப்ளட்?
i) வாழ்க்கையில் பல விஷயங்களில் சமரசப்பட்டு போய்விடுகிறேன். அல்லது மாறிவிடுகிறேன். பிறகு அதற்கு சப்பையாக ஒரு காரணத்தைச் சொல்லி எஸ்கேப்பிஸத்தை கேவலமாக நியாயப்படுத்துகிறேன்.
உதாரணத்திற்கு, குப்பையை பொதுவில் போடக்கூடாது, திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கக்கூடாது, வெளியில் உமிழக்கூடாது, சாலைவிதிகளை மீறக் கூடாது என்பது போன்ற குறைந்த பட்சம் என்னால் முடிந்த சில நியதிகளை கடைபிடித்து வருகிறேன். இந்த லிஸ்டில் திருட்டு டி.வி.டி வாங்கக் கூடாது என்ற ஒன்றும் இருந்தது. ஆனால், அதை பலமுறை மீறுகிறேன்.
அதிலும் ஒரு விதி வைத்திருக்கிறேன்.. தியேட்டரில் பார்த்த படத்திற்குதான் டி.வி.டி வாங்குவேனே தவிர, நேரடியாக டி.வி.டியிலேயே படம் பார்க்கும் வழக்கம் இல்லை.
இந்த தி.டி.வி.டி வாங்குவதை விவாதங்களின்போது நான் நியாயப்படுத்துவது விருமாண்டி படத்துக்குப் போன சம்பவத்தைச் சொல்லி...
40 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை 75 ரூபாய்க்கு கொடுத்தார்கள். வந்த ரௌத்ரத்தை அடக்கி, சரி என்று பொத்திக் கொண்டு போய் கொடுத்தபோது டிக்கெட் கிழிப்பவன் என் இரு மகள்களில் ஒருத்திக்கு நிச்சயமாய் டிக்கெட் வேண்டும் என்று சொல்லிவிடவே, மறுபடி டிக்கெட் வாங்கப் போனேன். அதே 40 ரூபாய் டிக்கெட் இப்போது 60 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருந்தான். கவுண்டரில் இரண்டு, மூன்று பேர்தான் இருந்தனர். என் முறை வரும்போது, 60 ரூபாயா என்று நான் உரக்கக் கேட்டதும் ‘சரி.. கடைசி டிக்கெட்.. 50 ரூபா கொடுங்க போதும்’ என்றான்.
என்ன அநியாயம் இது என்று மேலாளர் வரை சென்று வம்பிழுத்து எந்த நியாயமும் கிடைக்காமல் அவமானப்பட்டு வந்து உட்கார்ந்தபோது பசுபதியின் மாட்டை கமல் அடக்கிமுடித்திருந்தார்.
அதே தியேட்டரில் கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபோது, வெறும் சப்பையாக இருக்கவே சில விசாரணை மேற்கொண்ட போது, அவர்களே டூப்ளிகேட்டாக தயாரிப்பதாய் சொன்னார்கள்.
இதையெல்லாம் சொல்லி, இப்படி இருந்தா திருட்டு டி.வி.டி-ல படம் பார்க்காம என்ன பண்றதாம் என்று கேட்பேன். ஆனால் தியேட்டர் எஃபெக்ட் கிடைப்பதில்லை என்பதால் முதல் முறை தியேட்டர்தான்.
நீங்களும் இப்ப்டி எதிலாவது உங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டதுண்டா?
j) சினிமா பார்க்கும்போது முதல் எழுத்து போடுவதிலிருந்து பார்த்தால்தான் நிம்மதி. இல்லையென்றால் திருப்தியாக மாட்டேனென்கிறது மனது. அதேபோல கடைசியில் டைட்டில் போடும்போது தியேட்டர் ஆபரேட்டர் க்ளோஸ் பண்ணிவிட்டால், அவனை, அந்தத் தியேட்டர் ஓனரை, மேனேஜரை கெட்ட கெட்ட வார்த்தையால் (மனசுக்குள்ளதான்..) திட்டிவிட்டுத்தான் வெளியேறுகிறேன். அதேபோல படம் முடியும் முன்னே எழுந்திருக்கும் முந்திரிக்கொட்டைகளைக் கண்டாலும் கோபம் கோபமாய் வருகிறது.
நீங்க?
k) பயணங்களின் போது, வீட்டில் இருக்கும் படிக்காத சில புத்தகங்களை எடுத்துப் போகிறேன். ஆனால் அவற்றைப் படிக்காமல், போன இடத்தில் வேறு சில புத்தகங்களை வாங்கி வந்துவிடுகிறேன்.
நீங்களும் இப்படியா?
l) ஏதாவது ஆளில்லாத கடைக்குப் போகும்போது, நான் போன பின்னால் நாலைந்து வாடிக்கையாளர்கள் வருவதைக் கண்டிருக்கிறேன். ரோட்டோர இளநிக்கடையில் பைக்கை நிறுத்தினால்கூட எனக்கடுத்ததாய் நாலைந்து பேர் வந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வந்தா அந்தக் கடைக்கு கூட்டம் வருதுடோய்’ என்று கேனத்தனமாக நினைத்திருக்கிறேன்.
எனக்குத்தான் இப்படியா.. உங்களுக்குமா?
.