Thursday, March 26, 2020

இந்த நாள் இப்படி விடிந்தது

26 ஜுலை 2016

’அந்த புத்தகத்தை எப்ப வாங்கிக்கலாம்?’ - சுரேகா நேற்றிரவு அழைத்தபோது எப்படிக் குடுக்கலாம் என்று பேசி இன்று காலை மெரினாவில் வந்து வாங்கிக் கொள்வதாக முடிவெடுத்தோம். காலை அவனே அழைத்தான். நான் மேன்ஷனை விட்டு இறங்கினேன். கையில் அவருக்குக் கொடுக்க வேண்டிய புத்தகமும், சி.ஏ.பாலனின் தூக்குமர நிழலில் - ம் இருந்தது.

வெளியே வானம் மெதுவாக தன் தூறலைத் துவங்கியிருந்தது. புத்தகத்தை மறைத்துக் கொண்டே நடந்தேன். மேன்ஷனிலிருந்து இறங்கி வலது புறம் திரும்பி, இடது வலதாய் திரும்பினால் சேப்பாக்கம் ஸ்டேடியம் சாலை வந்தது. இப்போது தூறல் இன்னும் வலுவாக ஆரம்பிக்கவே ‘நீ ஸ்டேடியம் முன்னாடி வந்துடு’ என்றேன் சுரேகாவிடம்.

நான் நடக்கவும் அவன் வரவும்.. இருவருமாய் அவன் பைக்கில் ரத்னா கஃபே வந்தோம்.

காஃபி. அரட்டை. பகிர்தல்.

‘இங்கதான் பிரபஞ்சன் அடிக்கடி வருவாராம். காலச்சுவடுல தேவிபாரதி ஒரு கதை எழுதிருப்பார்.. கழைக்கூத்தாடியின் இசை-ன்னு. அதுல படிச்சேன்’ என்றேன்.

காஃபியை முடித்துவிட்டு வெளியே வந்து நின்றும் அரட்டை தொடர்ந்தது. இந்த நாடகங்களிலெல்லாம் வருமே.. ‘அதோ.. அவரே வந்துட்டாரே’ என்று. அதுபோல இருந்தது கொஞ்ச நேரத்தில் தோளில் தொங்கும் பையுடன் பிரபஞ்சன் வந்தபோது.

’அடேய்! இப்பத்தாண்டா சொன்ன?’ என்றான் சுரேகா.

பிரபஞ்சன் நேராக உள்ளே சென்றார்.

‘இன்னொரு காஃபி அவர்கூட குடிப்போமா?’

உற்சாகமாக உள்ளே போனோம்.

‘சார்.. நான் பரிசல்.. இவர் சுரேகா’

அறிமுகமும் அதைத் தொடர்ந்து பல பகிர்தல்களும் நடந்தன. பெயர்களைப் பற்றிய பேச்சு வந்தது.

‘இது வானம்பாடிகள்ல எனக்கு வெச்ச பேரு. பாலசுப்ரமணியத்துக்கு சிற்பி. இன்னொருத்தருக்கு புவியரசு. எனக்கு பிரபஞ்சன்’

தற்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருப்பதாகவும், அதற்காகவே பீட்டர்ஸ் காலனி வீட்டில் இருந்து வந்து லாட்ஜ் ஒன்றில் தங்கியிருப்பதாகவும் சொன்னார்.

‘மித்தலாஜிக்கல் நாவல்தான்.  ஒரு ராஜா திடீர்னு பெண்ணா மாறிடறான். அங்க அவனுக்கு - அதாவது - அவளுக்கு ஒரு காதலன் செட் ஆகறான்.. அவனே மறுபடி ஆணா ஆகறப்ப அரண்மனைல ராணிகூட இருக்கான். இப்டி ஒரு மாசம்.. அப்டி ஒரு மாசம்.. அப்டி போகுது கதை. ப்ளாட்ஃபார்ம்ல 50 காசு புக்ல ஒருவரிய படிச்சப்ப தோணின கரு’

வெளியே வந்தோம்.

’எழுத்தாளனா இருக்கறதுல இப்ப பொருளாதாரம் ரொம்ப முக்கியத்துவம் வகிக்குது. என் வீட்ல என்னைக் கேள்வி கேட்காம இருக்கறதால போய்ட்டிருக்கு.. ‘

‘ஆமா சார்.. நாமெல்லாம் செல்லம்மாக்களால்தான் வாழறோம்’

’உண்மைதான்.. நான் வேலைக்குன்னு போகல. இப்டியே படிப்பு, எழுத்துன்னு இருந்துட்டேன். குமுதம், விகடன்ல எல்லாம் கொஞ்சநாள் வேலை பார்த்தேன். ஆனா அது எனக்கு ஒத்துவரலை’

‘விகடன்ல வேலை பார்த்தீங்களா?’

‘ஆமாமா.. பாலசுப்ரமணியம் எனக்கு பழக்கம். அவர் 7.30க்க்கு வந்தார்னா.. நான் 7.45க்கு உள்ள இருப்பேன். நாந்தான் மொதலா போவேன். கதைகளைப் படிச்சு அதைப் பத்தி பேசிப்போம். அதான் எனக்கு முக்கியமான வேலை. அவர் மொதல்லயே சொன்னார்.. ‘பிரபஞ்சன்.. நீங்க வெளில இருந்தே வேலை பார்க்கலாமே.. உள்ள இருந்தா உங்களுக்கு சில சங்கடங்கள் வரக்கூடும். உங்களுக்கும் - இன்னொருத்தர் பேர் சொல்லி - அவருக்கும் பிரச்னை வரும்.. அப்டி வந்தா நான் அவங்க பக்கம்தான் நிப்பேன். ஏன்னா அவங்க என்னை நம்பி இருக்காங்க’ன்னார்.”

நாங்கள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம். ‘யார் அவர்’ என்கிற கேள்விக்கு விடைகிடைக்காமல் எங்களால் அவர் சொல்கிற அடுத்த எந்த விஷயத்துக்கும் மனம் கொடுத்துக் கேட்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

மெதுவாக சிரித்தவர் அந்த ‘அவர்’ பெயர் சொன்னார்: ‘......... ஆனா கடைசில பாலு சொன்ன மாதிரிதான் ஆச்சு’

‘சினிமா பார்த்தா டிக்கெட் குடுத்து காசு வாங்கிக்கணும். ஒரு சினிமா பார்த்துட்டு டிக்கெட்டை தொலைச்சுட்டேன். நானும் விட்டுட்டேன். வீயெஸ்வி எனக்கு சிறந்த நண்பர். அவர் டெஸ்க்ல இருந்து சத்தமா டிக்கெட் கேட்டார். நான் தொலைச்சுட்டதா சொல்லி.., விடுங்கன்னுட்டேன். வீயெஸ்வி எனக்கு நல்லது பண்ண, ’அவர்’கிட்ட போய் ‘டிக்கெட்டை தொலைச்சுட்டார்.. பணம் குடுத்துடலாமான்னு கேட்டிருக்கார். உடனே ’அவர்’ அதெல்லாம் முடியாதுன்னு, அவர் கேபின்லேர்ந்து என் டெஸ்குக்கு வந்து அதெப்படி தொலைக்கலாம்னு ஆரம்பிச்சு..’

‘நீங்கதான் கேட்கவேல்லியே..’

‘ஆமா.. ஆனா அவங்க அப்டித்தானே ஆரம்பிப்பாங்க. அது எங்கங்கயோ போய்.. ப்ச். விடுங்க’
அப்போது அங்கு கவின்மலர் வந்தார்.

அவருடன் மீண்டும் ஒரு காஃபிக்கு பிரபஞ்சன் உள்ளே போக, ‘நாங்க ஏற்கனவே ரெண்டு ஆச்சு சார். கிளம்பறோம்’ என்று நின்றுகொண்டிருந்தோம்.

பேசிக்கொண்டிருக்கையில், ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள் வந்தார். பைக்கை கடைக்கு நேராக நிறுத்தி இறங்கினார். முன்னே வந்த ஒரு மினிடோர் லோடு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தச்சொன்னார்.

அந்த வண்டி, இடதுபுறம் திரும்பி ஜாம்பஜார் ரோட்டில் நின்றது. இவர் பின்னாடியே போனார்.

’சரி.. போலாம்’ என்று சுரேகா சொல்லி, நடக்க.. நான் தொடர்ந்தேன். டிராஃபிக் கான்ஸ்டபிள் பைக்கை ஒட்டி நடந்தபோது கீழே என்னமோ கிடந்ததைப் பார்த்தேன்.

நூறு ரூபாய்.

அதன் மடிப்பே அது டிராஃபிக் கான்ஸ்டபிளின் பாக்கெட்டில் இருந்ததைச் சொன்னது. சரியாக இல்லாமல், வாங்கியதும் உள்ளங்கைக்குள் மடக்கிச் சுருட்டி யாரோ நீட்ட, வாங்கி அவசரத்தில் உள்ளே வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அவரிடம் இருக்கப் பிடிக்காமல் அது வெளியே வந்து விழுந்திருக்கிறது.

‘இன்னைக்கு இது உனக்குக் கெடைக்கணும்னு இருந்திருக்கு’ என்றான் சுரேகா.

அதை எடுத்து.. கொஞ்ச நேரம் கையில் வைத்துக்கொண்டிருந்த நான் கடைக்குள்ளே பார்த்தேன்.
ஹோட்டலின் யூனிஃபார்முடன் இருந்த ஒரு சிறுமி கடையில் போர்டை வைத்து ‘இன்றைய ஸ்பெஷல்’ என்று முத்துமுத்தாக எழுதிக்கொண்டிருந்தார்.

நேரே போய் அவரிடம் கொடுத்தேன். ‘என்னுதெல்லாம் இல்லைம்மா. கீழ கெடந்தது. நீ வெச்சுக்கோ’

வெளியே வந்தபோது சுரேகா என்னைக் கட்டிப்பிடித்து ‘நல்ல காரியம் பண்ணடா’ என்றான்.

கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்க ‘என்ன யோசனை’ என்றான்.

‘இல்லடா... அந்த நோட்டோட டிராவலை நெனைச்சேன்’

வெளியே வந்து பிரபஞ்சனும், கவின்மலரும் ‘இன்னும் போலயா’ என்றார்கள். அவர்களின் இந்தச் சம்பவத்தைச் சொன்னதும் ‘அந்தப் பணத்துக்கே கான்ஸ்டபிள்கிட்ட இருக்கறது பிடிக்கலை. அந்தக் கோணத்துல எழுதுங்க’ என்றார்.

எழுதணும் என்று நினைத்தேன். சொன்னேன். எழுதுவேனா என்று தெரியவில்லை :-)