Wednesday, May 27, 2009

"உங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு....”


"உங்களுக்கு குழந்தை பொறந்திருக்கு..”

எந்த ஒரு தகப்பனுக்கும் இது ஒரு தெய்வீக வார்த்தை. அதுவும் அது பெண் குழந்தையெனும் பட்சத்தில் அவனை விட அதிர்ஷ்டக்காரன் யாருமிருக்கமுடியாது.


ஆண் குழந்தை பத்து வயதுவரை வீட்டுக்குக் கொண்டுவரும் பஞ்சாயத்துகள் எதையும் பெண்குழந்தைகள் கொண்டுவருவதில்லை. யார் வீட்டுக்கு உங்கள் பெண் குழந்தைகளை அனுப்பினாலும் “என்ன அமைதியா இருக்கா தெரியுமா உம் புள்ள. என் வீட்டுலயும் இருக்குதே ஒரு வாலு..” என்றுதான் கமெண்ட் வருகிறது.


பையனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு என்ன விளையாட்டுப் பொருள் வேண்டுமோ அதைக் கேட்டு வாங்குவதோ, போகும் சொந்தக்காரர் வீட்டில் அது இல்லாவிட்டால் “அது இல்லையா” என்று கேட்பதோ நடக்கிறது. அதுவே பெண் குழந்தைகளுக்கு ‘இதுதான் வேண்டும்’ என்று கேட்கும் மனோபாவம் இருப்பதில்லை. என்ன இருக்கிறதோ அதை வைத்து விளையாடுவதும், ஒன்றுமில்லாவிட்டால் அமைதியாக இருக்கவோ பழகிவிடுகிறார்கள்.


ஒரு பெண்குழந்தையை பலவித உடைகள் மாட்டி அழகு பார்ப்பதைப் போல, ஆண்குழந்தையை அழகு பார்ப்பதில்லை. ஆண் குழந்தைகள்... ‘அது ஒரு ஆண்குழந்தை’ என்ற ஊறிப்போன பொதுப்புத்தி சந்தோஷத்திலேயே மற்ற சந்தோஷங்கள் எதையும் அடையாமல் இருக்கிறது.

நீங்கள் எங்காவது வெளியூர் போயிருந்தால் மகள் “எப்பப்பா வருவீங்க” என்றும் மகன் ‘என்ன வாங்கீட்டு வருவீங்க’ என்றும் கேட்பதை எதிர்கொண்டிருக்கலாம். பெண்கள் பொருட்களால் ஆளப்படுவதை விட பாசத்தால் ஆளப்படுபவர்கள்.

இங்கே திருப்பூரில் பணிபுரியும் பலரும் பெற்றோரை விட்டு பலமைல் தூரம் வந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்களாகட்டும், பெண்களாகட்டும். ஆனால் பெண்கள் அவர்களின் பெற்றோரோடு உரிய கால இடைவெளியில் பேசிக்கொண்டும், சென்று பார்த்து நலம் விசாரித்துக்கொண்டும் இருப்பதைப் போல... ஆண்கள் தங்கள் பெற்றோருடன் உறவு பாராட்டுகிறார்களா என்றால்... ஒரு பெரிய இல்லை!

திருமணமாய் தனிக்குடித்தனத்தில் இருக்கும் தம்பதிகளில் கணவன் தன் வீட்டிற்கு சென்று வருவதும், பெற்றோரைப் பார்த்து வருவதையும் விட மனைவிகள் தங்கள் பெற்றோரைத் தாங்குவது அதிகம்.

ஏதோ ஒரு பொது இடத்திலோ, திருமண மண்டபத்திலோ இருக்கிறீர்கள். உங்கள் வாரிசு ஏதோ ஒரு குறும்புத்தனம் செய்கிறது. மகன் என்றால் கூப்பிட்டு அதட்ட வேண்டியிருக்கும். மகள் என்றால் தூரத்திலிருந்து உங்கள் மிரட்டலான கண்பார்வையிலேயே அவள் சுதாரித்துக் கொள்வாள்.

உங்கள் விட்டிற்குள் நுழைந்தாலே உங்கள் குழந்தை மகனா, மகளா என்பதைச் சொல்லிவிட முடியும். மகள்கள் இருக்கும் வீடுகளின்முன் செருப்புகள் ஜோடியாகத்தான் இருக்கும். மகன்கள் இருக்கும் வீடுகளில் தாறுமாறாக அவை கழட்டிப் போடப்படும். (அப்படியும் நேராக இருந்தால் அம்மா எடுத்து வைத்திருக்கக் கூடும்!) மகள்கள் இருக்கும் வீடுகளில் கூடுமானவரை அவையவை அதனதன் இடத்தில் இருக்கும். மகன்கள் அடங்காமல் போட்டது போட்டபடி வைத்திருப்பார்கள்.

விவரம் தெரிந்தபிறகு மகள்கள் கூடுமானவரை அப்பா அம்மா சாப்பிட்டாச்சா என்று பார்த்தபிறகுதான் சாப்பிடுகிறார்கள். மகன்களை அந்தக் கவலையெல்லாம் ஆட்கொள்வதில்லை.


உங்கள் குழந்தை மகளாயிருக்க நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருக்க வேண்டும். காரணம்.. பெண்குழந்தைகள் தேவதைகள். அந்த தேவதைகள் எல்லா வீட்டிலும் வாசம் செய்வதில்லை.

ஒருநிமிடத்திற்கு ஷாரூக்கானின் சம்பளத்தைவிட, ரஜினிகாந்தின் சம்பளத்தை விட, அமிதாப்பின் சம்பளத்தை விட, முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட... ஒரு பெண்ணான இந்திரா நூயி-யின் சம்பளம் அதிகம். பெண்கள் எந்த உயரத்தையும் தொட வல்லவர்கள்.

பெண்மையைக் கொண்டாடுவோம்!

****

முக்கியக்குறிப்பு: இன்றைக்கு தோழர் லக்கிலுக் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், வடகரை வேலன், பரிசல்காரன், எம்.எம்.அப்துல்லா வரிசையில் பெண் மகவைப் பெற்ற பேறைப் பெற்ற அவரை வாழ்த்தும் விதமாக இந்தப் பதிவு எழுதப்பட்டது. இதில் இருக்கும் கருத்துகள் யாவும் அலுவலக நண்பர்கள், தோழிகளோடு கலந்துரையாடி (வேலையே செய்யமாட்டியாடா நீ?) எழுதியவையே.

ஒருதலைப்பட்சமாகவே இருப்பதாகப் பட்டால்....

விட்டுத்தள்ளுங்க பாஸு!

.

Tuesday, May 26, 2009

அவியல் 26 மே 2009

300 ஃபாலோயர்கள் ரெண்டு லட்சம் ஹிட்ஸ் என்றெல்லாம் பீத்திக் கொள்வதை நிறுத்துடா என்றது சமீபத்தில் பார்த்த ஒரு வலைப்பூ. ஏப்ரல் 2009ல் (போன மாசம்க!) போலி ஐ.பி.எல். வீரர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள (www.fakeiplplayer.blogspot.com) வலைப்பூவின் ப்ரொஃபைலைப் பார்த்தவர்கள் இதுவரை ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர்! ஃபாலோயர்கள் 7883 பேர்! ஹிட் கவுண்டரெல்லாம் போடவில்லை அவர்! ஒவ்வொரு பதிவிற்கும் 250 முதல் ஆயிரக்கணக்கில் கமெண்டுகள் வந்து குவிகிறது!


கிசுகிசுன்னாலே அவ்ளோ இஷ்டம்பா நம்மாளுகளுக்கு!


****************

கோவைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நாலைந்து ‘பசங்க’ வண்டியில் ஏறினார்கள். அவர்களோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே “‘பசங்க’ படம் பார்த்துட்டீங்களாப்பா?” என்று கேட்டதற்கு அவர்களில் ஒரு வாண்டு சொன்னது:-


“இன்னும் எங்கப்பா சி. டி. வாங்கீட்டு வரலைண்ணா”


ம்கும்! கிழிஞ்சது போ!


*********************

ஐ.பி.எல்-லில் அதிகமாக விளம்பரங்களில் தென்பட்டது கொல்கத்தா அணியினர்தான். எப்போது பார்த்தாலும் ஷாரூக் மற்றும் கொல்கத்தா அணியினரை சந்திக்க வேண்டுமா.. **** குடியுங்கள்’ என்ற விளம்பரம் வந்து கொண்டே இருந்தது. ரொம்ப அதிகம் பேர் அவர்களைச் சந்திக்க ஆவலாயிருந்தார்கள் போல. அவர்களே கிளம்பி அவசர அவசரமாக இந்தியா வந்துவிட்டார்கள்! ஓவர் வெளம்பரம் ஒடம்புக்கு ஆகாது!

ஃபைனலில் பெங்களூர் ஜெயிக்க வேண்டும் என்றும், டெக்கான் சார்ஜர்ஸ் ஜெயிக்கும் என்றும் நினைத்தேன். ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தது கேப்டன் இந்தியாக்காரர் என்ற எண்ணம்.

போன முறை ஷேன் வார்னே, இந்த முறை கில்கிறிஸ்ட் என்று ஆஸ்திரேலியா சீனியர்கள் கலக்கிக் கொண்டிருக்க.. நம்ம சீனியர்கள்...

நோ கமெண்ட்ஸ்!

**********************

கிரேசி கிரி பற்றி. அவன் சின்ன வயசில் வீட்டருகே உள்ள ஸ்டாப்பில் மினி பஸ் வந்து நின்றிருக்கிறது. விளையாட்டாய் ஏறி, இறங்கியிருக்கிறான். அடுத்த நாள் அவன் அண்ணனிடம் கம்ப்ளெய்ண்ட் போயிருக்கிறது. அண்ணன் பிரம்பை எடுத்துக் கொண்டு கோபமாக கேட்டதற்கு இவன் சொன்னானாம்.

“ஏறும் வழின்னு போட்டிருந்தது. ஏறினேன். பஸ்ஸுக்குள்ள இன்னொரு பக்கம் இறங்கும் வழின்னு போட்டிருந்தது... இறங்கீட்டேன்”

கிரி இந்த முறை சீரியஸாக இன்னொரு விஷயம் சொன்னான்.. டாஸ்மாக்கில் சரக்கு கிடைக்கவில்லை என்று புகார் போனால் பல அதிகாரிகளுக்கு திட்டுகளும், மெமோக்களும் பறக்கிறதாம். ஆனால் பல நூலகங்களில் நூல்கள் மிகக்குறைவாய் இருந்தாலும் கண்டுகொள்ளவோ மேல் நடவடிக்கை எடுக்கவோ யாரும் தயாரில்லை என்று புலம்பினான்.

ப்ச்!

****************************

தரை பம்பரங்கள்
கயிற்றில் சுற்றும்
திரைப் பம்பரங்கள்
வயிற்றில் சுற்றும்
வயிற்றுக்காகப் பிழைக்கலாம்
வயிற்றில் பிழைக்கலாமா?
-நெல்லை ஜெயந்தா

*********************
மெயிலில் வந்த ஒரு ஃபோட்டோ. ‘இந்தியாவில் கிரிக்கெட்டில் ஏன் முன்னேற்றமடைந்து வருகிறது என்றால்..’ என்ற கேப்ஷனுடன் இந்தப் புகைப்படம் வந்தது..




இன்னொரு நண்பர் மெயிலில் கேட்டார்.. “நம்ம ஃபீல்டிங் ஏன் மோசம்னு இப்பத்தான் தெரியுது. பாருங்க அடிக்கறதுக்கு முன்னாடியே ஓடறானுக...”

******

Monday, May 25, 2009

நடிகர் விஜய்க்கு....



அன்புள்ள ‘இளைய தளபதி’ விஜய்க்கு..


சமீபகாலமாக பலரையும் பிடித்து ஆட்டும் பார்ட்டி மேனியா உங்களையும் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது என பல்வேறு குறிப்புகளின் மூலம் உணர்கிறோம்.

’பார்ட்டி மேனியா’ என நான் குறிப்பிடுவது சிம்பு, த்ரிஷா, விஷால் வகையறா நடிகர்களுக்கு இருக்கும் சாட்டர்டே பார்ட்டி அல்ல. கட்சி. கட்சி ஆரம்பிக்கும் நோய்.


நான் சூப்பர்ஸ்டார் வாரிசு என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் நடுவில் ரஜினி எதற்கு என்று டைரக்டாக எம்.ஜி.ஆரின் வாரிசாக உங்களைக் காட்டிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள். வில்லு படத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற பாட்டில் டைட்டில் ஆரம்பிக்கும்போதே என்னைப் போன்ற பலருக்கும் கிலி பிடித்து ஆட்டியது. அடுத்த படத்தின் பெயரும் வேட்டைக்காரன். அதற்கடுத்து ‘உரிமைக்குரல்’ என்று உறுதிப்படுத்தாத வட்டாரங்களிலிருந்து தகவல் வருகிறது. சரி.. திடீரென்று ஏன் இந்த எம்.ஜி.ஆர் பாசம் என்றால்.. டைட்டிலில் கொடியைக் காண்பித்து கட்சி துவங்கும் ஆசையை வெளிக்காட்டி விட்டீர்கள்.


மேலும் அதை உறுதிப்படுத்துவது.. ஆனந்த விகடனில் வெளியான உங்கள் பதில். ‘நான் கட்சி துவங்க வேண்டும் என்பது என் ரசிகர்களின் விருப்பம். என் பிறந்தநாளன்று நல்ல முடிவு சொல்லுவேன்’ என்றிருக்கிறீர்கள்.

உங்களைக் கட்சி துவங்கச் சொல்லுபவன் உங்களின் உண்மையான ரசிகனாய் இருக்க முடியாது. அதை நம்பி நீங்கள் கட்சி துவங்கினால் அது எப்படி இருக்கும் என்பது கடந்த கால கட்சி துவங்கிய வரலாறுகளைப் பார்த்தாலே புரியும்.

டிகர் திலகம் சிவாஜி கணேசன் சொன்னால் தீக்குளிக்கக் கூட தயாராக இருந்த இளைஞர் கூட்டம் இருந்தது. நாம் மிகவும் மதிக்கும் இலக்கியப் பேச்சாளர் தமிழருவி மணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவாஜி கணேசனுக்காக ஒரு நண்பரை அடித்த கதை சொல்லியிருந்தார். தி.மு.க. ஆதரவாளனான சிவாஜி கணேசன் திருப்பதி சென்று வந்தது விமர்சனத்துக்குள்ளாகவே மனக்கசப்போடு இருந்து 1961ல் காமராஜர் மீதுள்ள அன்பால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க ஆரம்பித்தார். 1982ல் இந்திரா காந்தி அமைச்சரவையில் ராஜ்யசபா உறுப்பினராகவும் ஆனார். பிறகு 1988 பிப்ரவரியில் தமிழக முன்னேற்ற முன்னணி என்று சொந்தக் கட்சி ஆரம்பித்தார். 1989 தேர்தலில் போட்டியிட்டு எல்லா இடங்களிலும் தோற்றது அந்தக் கட்சி. சிவாஜி கணேசனே திருவையாறு தொகுதியில் தி.மு.க வேட்பாளரிடம் பத்தாயிரத்து சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தோல்விக்குப் பிறகு வி.பி.சிங்கின் அழைப்பின் பேரில் கட்சியை கலைப்பதாக அறிவித்து விட்டு தொண்டர்களை ஜனதா தளத்தில் சேரச் சொன்னார். அப்போது அவர் சொன்னது.

ட்சி ஆரம்பிக்கும் அவசியம் எனக்கிருக்கவில்லை. ஏனோ நிர்பந்திக்கப்பட்டேன். எனது கட்சியும் நானும் அடைந்த தோல்வி என் வாழ்வின் மிக சங்கடமான சூழ்நிலைகளில் ஒன்று. என்ன செய்ய? தவறான முடிவுகளை நாம் எடுக்கும்போது அதனால் வரும் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்?”

டுத்தது விஜய டி. ராஜேந்தர். பல காலமாக தி.மு.கவிற்காக உயிரைக் கொடுக்கும் தொண்டராக இருந்த இவர், 1991ல் தாயக மறுமலர்ச்சிக் கழகம் என்கிற கட்சியைத் துவங்கினார். துவங்கும்போது மிகுந்த பரபரப்பு ஏற்படுத்திய இவர், மீண்டும் 1996ல் தாய்க்கழகத்துடன் இணைந்து பார்க் டவுனில் போட்டியிட்டு வென்றார். அதே பார்க் டவுனில் 2001 தேர்தலில் தோற்ற இவர் 2004ல் தி.மு.கவிலிருந்து விலகி ‘அகில இந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியைத் துவங்கி தி.மு.கவிற்கு எதிரான அ.தி.மு.க கூட்டணிக்கு தனது ஆதரவை (?) அளித்தார். ‘அள்ளி அள்ளிக் குடுப்பாங்க அம்மா. கிள்ளிக்கூட குடுக்க மாட்டார் கருணாநிதி’ என்றெல்லாம் அடுக்குமொழி பேசிய இவர், 2006 தேர்தலில் அம்மா ஒரு சீட்டைக்கூட தனது கட்சிக்கு ஒதுக்காதது கண்டு ‘நான் வாழ்வதில்லை தன்மானத்தை விட்டு.. சுயமரியாதை என் சொத்து.. உதயசூரியனுக்கு ஓட்டைக் குத்து’ என்று வசனத்தையும், ஆதரவையும் ஒருசேர மாற்றினார். இன்றுவரை அனைத்துக் கட்சி கூட்டம் என்றால் மட்டுமே இவர் தலை தெரிகிறது. மற்றபடி இவர் யாரை ஆதரிக்கிறார்.. இவர் கட்சியால் மக்களுக்கு.. அட்லீஸ்ட். இவருக்கு என்ன லாபம் என்பதெல்லாம் இவரது நியூமராலஜி குருவுக்கே வெளிச்சம்.


கே. பாக்யராஜ். ‘என் வாரிசு’ என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்டவர் இவர். எம்.ஜி.ஆருக்காக உயிரையே கொடுக்கக்கூடிய அளவு அவர்மீது பற்று கொண்ட இவர் தனிக்கட்சி தொடங்கி, ஜெயலலிதாவை ஆதரித்து இப்போது தி.மு.கவை ஆதரிக்கிறார். இந்தப் பதிவை எழுதுவதற்காக எத்தனை தேடினாலும் இவரது கட்சியின் பெயர் கிடைக்கவில்லை.. நினைவிலும் இல்லை. இதிலிருந்தே இவர் கட்சியின் நிலையை அறியலாம். இவரும் இப்போது தி.மு.கவில்தான் ஐக்கியமாகி பிரச்சாரம் செய்தி கொண்டிருக்கிறார்.


இப்போது ஆரம்பித்த விஜயகாந்த், சரத்குமார் சாதித்தது என்ன? எல்லா இடங்களிலும் ஓட்டைப் பிரிக்கும் வேலையின்றி வேறு என்ன சாதிக்க முடிந்தது அவர்களால்? அதுவும் விஜயகாந்த் அந்த வேலையையாவது செய்கிறார் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். சரத்குமார் நிலை படு பரிதாபம். உங்களைப் போன்ற நடிகர்கள் அல்லாது கொங்கு முன்னேற்றப் பேரவை போல சாதிக்காரர்களும் கட்சி ஆரம்பித்து மக்களையும் நாட்டையும் குழப்புவதும், தங்கள் சுயலாபத்தைப் பெருக்குவதும்தான் நடந்துகொண்டிருக்கிறது. இவர்கள் மாதிரியானவர்கள் 2001ல் நான், 2016ல் நான், 2021ல் நான், 2025ல்நான் என்று ஆளாளுக்கு முதல்வர் பதவியை ரிசர்வ் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


இதையெல்லாம் சொல்ல நீ யார் என்று கேட்காதீர்கள். எனக்கும், என் மகள்களுக்கும், மனைவிக்கும் உங்கள் வேகம் பிடிக்கும். உங்கள் ரசிகர்கள்தான் நாங்கள். அந்த வேலையை நீங்கள் ஒழுங்காய் செய்தாலே போதும். என்னைப் போன்ற மக்களுக்கு இனி ஒரு புதிய கட்சி தேவையே இல்லை. அப்படி அரசியல் பாதைதான் வேண்டும் என்றால் ஜே.கே.ரித்தீஷ் போல பிரபலமான கட்சி ஒன்றில் இணைந்து கொள்ளுங்கள். எம்.ஜி.ஆரில் தொடங்கி பலரும் தி.மு.க/அ.தி.மு.க போன்ற ஆலமரத்தின் விழுதுகளாகத்தான் தங்கள் அரசியல் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி ஒரு கட்சியில் சேர்ந்து தொண்டனாக உழைத்து கஷடமெல்லாம் பட்டு பின்னாளில் ஏதேனும் பதவி கிடைத்தால் அதைத் தந்த மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்து...

இதெல்லாம் முடியுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்...

அதை விடுத்து தனிக்கட்சி கனவெல்லாம் காணாதீர்கள். ப்ளீஸ்.

நடிப்பு உங்கள் தொழில். நடியுங்கள். கமலஹாசனிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். திரைத்துறையிலேயே முழுமூச்சாய் இருங்கள். மனத்ருப்திகாக சேவை செய்ய கட்சியெல்லாம் அவசியமே இல்லை. ஆனானப்பட்ட ரஜினிகாந்தே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் களம் அது. அவரை ஆரம்பியுங்கள் என்று தூண்டிவிட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கட்சி ஆரம்பிக்காமல் மறைமுகமாக அவர் நல்லது செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்கள் அறிவார்கள். அறிவுள்ளவர்கள் உணர்வார்கள்.

எங்களுக்குத் தேவை கட்சியல்ல. உங்களால் முடிந்த நல்லது ஏதாவதை செய்து கொண்டே இருங்கள். அதுபோதும் எந்த பிரபல்யமுமின்றி இருக்கும் பலரும் பல சேவைகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கு எந்த கட்சி பின்புலமோ, தலைவனாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிர்பந்தமோ இல்லை.

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகரிடம் காட்டுங்கள். ஏதாவது பலனிருக்கிறதா என்று பார்ப்போம்!

அளவில்லா அன்போடு
உங்கள் குத்துப்பாட்டுக்கு ஆட்டம்போடும்
சாதாரண ரசிகன்.



.

Saturday, May 23, 2009

பிரபாகரன் மரணம் பற்றிய அதிர்ச்சி அறிக்கை வெளியாகும் - இலங்கை எம்.பி.

“பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்” என்று இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:

அமெரிக்கா, நார்வே நாடுகள் விடுத்த வேண்டுகோளை ஏற்று புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, வெள்ளைக் கொடியோடு செஞ்சிலுவைச் சங்கத்திடம் சரணடைய வந்தபோது சர்வதேச விதிமுறைகளை மீறி நடேசன் உள்ளிட்டவர்களை நயவஞ்சமாகக் கொன்றுள்ளனர். சர்வதேச சதியால் விடுதலைப் புலிகள் மோசமான பின்னடவை சந்தித்துள்ளனர்.

புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதை விடுதலைப்புலிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

பிரபாகரனது மூத்த மகன் சார்லஸ் அந்தோணி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது மனைவி, மகள், இளையமகன் ஆகியோர் குறித்து உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடல்தானா என்ற சந்தேகம் உள்ளது. உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால் ஊர் முழுக்க ஊர்வலம் எடுத்துச் சென்றிருப்பர்.

பிரபாகரனின் மூத்த சகோதரி சென்னையில் உள்ளார். அவரிடம் இருந்து மரபணுச் சோதனைக்கு மாதிரி எடுத்து, அவர்கள் காட்டிய உடலோடு ஒப்பிட்டு சோதனை செய்திருக்கலாமே!

சர்வதேச பத்திரிகையாளர்களையோ, இலங்கைப் பத்திரிகையாளர்களையோ அந்த உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. புலிகள் இயக்கத்தை யார் நடத்துவது என்பதை அந்த இயக்கத்தினர்தான் அறிவிக்க வேண்டும். பிரபாகரன் இறப்பு குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து விரைவில் ஓர் அறிக்கை வெளியாகும். அந்த அறிக்கை அதிர்ச்சி தரக்கூடியதாகவும், உலகை உலுக்கக் கூடியதாகவும் இருக்கும்.

‘இலங்கை ராணுவத்தின் தாக்குதலில் காயம்பட்டவர்களுக்கு உதவ மனிதாபிமான பணியாளர்களை அனுப்புகிறோம்; ஒரு கப்பலை அனுப்பி அப்பாவி பொதுமக்களை மீட்கிறோம்’ என்ற இரு கோரிக்கைகளை அமெரிக்க கப்பற்படைத் தளபதி, கடந்த வாரம் இந்தியாவிடம் வைத்தார். இந்த இரண்டையும் இந்தியா ஏற்கவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய, தமிழக அரசுகளின் செயல்பாடுகள் எங்களுக்கு வேதனையையும், ஏமாற்றத்தையும் தருகிறது. இலங்கையில் பெருமளவிலான படுகொலைகள் நடந்துமுடிந்த பின் ஐ.நா. செயலர் இலங்கை வந்துள்ளார். இந்த நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்கிறோம்.’

இவ்வாறு சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

- தினமலர்

குறிப்பு: மேலே உள்ளது இன்றைய தினமலரில் 11ம் பக்கம் வெளியான செய்தி. பிரபாகரனின் இறப்பைப் பற்றி இரண்டாம் ஹிட்லர் ராஜபக்‌ஷே சொன்ன செய்தியை முதல் பக்கம் போட்டிருக்கும் தினமலர், இந்தச் செய்தியை 11ம் பக்கம் வெளியிட்டிருக்கிறது. ஆகவேதான் அந்தப் பேட்டியை இப்படிப் பதிவாக வெளியிடுகிறேன்.

.

டுபாக்கூர் இன்பாக்ஸ்

திவுலக நண்பர்களின் வளர்ச்சி அவ்வளவு சந்தோஷமான விஷயமாக இருக்கிறது. லக்கிலுக் புத்தகங்கள் எழுதித் தள்ளுகிறார். கார்க்கி குறும்படத்தில் நடிக்கிறார். தாமிரா வலையுலகிற்கு வந்து நாளையோடு ஒருவருடமாகப் போகிறது. ஒருவருடத்திற்குள் அச்சு இதழில் கதை வெளிவந்த சந்தோஷத்தில் இருக்கிறார். இன்னும் பல எழுதி அனுப்பி பதிப்பாளர்களை ‘கிர்ர்ர்ர்ர்’ரடிக்க வைத்திருப்பதாகக் கேள்வி. அண்ணாச்சி வடகரை வேலன் அச்சில் கதை எழுதி, கவிதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார். நர்சிம்.. சொல்லவே வேண்டாம். கதைகள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான செயல்கள் பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

எல்லாவற்றிற்கும் மகுடம் போல அண்ணே அப்துல்லா சொல்ல சொல்ல இனிக்கும் படத்தில் பாடல் பாடியுள்ளார். செல்வேந்திரன் விஜய் டி.வி-யின் நீயா நானாவில் சிறப்பு விருந்தினராக (பங்கேற்பாளராக அல்ல.. சிறப்பு விருந்தினராக!) பங்கேற்று விரைவில் அது ஒளிபரப்பப்பட உள்ளது!

சரி.. இந்த ரேஞ்சில் போனால் இவர்களைப் பற்றி – இன்னும் சிலரைப் பற்றியும் - என்னென்ன நியூஸெல்லாம் வரும்?

ஆனந்தவிகடனின் இன்பாக்ஸ் பாணியில் எழுதப்பட்ட (அத நாங்க சொல்லணும்டா!) ஒரு கற்பனை...
-----------------

னது ராவணன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் மணிரத்னம் அடுத்த படமான அசோகவனம் படத்தின் திரைக்கதையை எழுத நேரமில்லாததால் அதற்காக பலரையும் தேடி இறுதியில் யுவகிருஷ்ணா என்பவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளாராம். லக்கிலுக் என்ற பெயரில் பிரபலமான வலைப்பதிவரான இவர், கலைஞர் வரும் தேர்தலில் எம்.எல்.ஏவாக தன்னை நிறுத்தவிருப்பதால் எழுத்துப் பணியில் கவனம் செலுத்த முடியுமா என முதலில் தயங்கினாராம். பிறகு தன் தலைவனின் பாணியில் தூக்கத்தைக் குறைத்துக் கொண்டு எழுத்தையும் அரசியலையும் ஒருசேர கலக்கப்போவதாகக் கேள்வி!

.ஆர்.ரகுமான் ஹாலிவுட் படத்திற்கு இசையமைப்பது தெரிந்ததே. அதற்காக சிறப்பான ஒரு குரலுக்காக காத்திருந்த அவர் விமானப்பயணத்தின் போது தன்னுடன் பயணித்த மகேஷ் (இவர் துக்ளக் என்ற பெயரில் வலையில் எழுதிவருபவர்) ஐபாடில் ‘காதலொரு பள்ளிக்கூடம் நண்பா’ என்ற பாடலைக் கேட்டு அந்தப் பாடகர் அப்துல்லாவை தேர்வு செய்து தன்னோடு ஹாலிவுட் அழைத்துச் செல்ல உள்ளாராம். ‘தொடர்ந்து ஆஸ்காரை அள்ளும் இந்தப் பாடல்’ என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ங்கர் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கப்போவது ஆதிமூலகிருஷ்ணன் என்ற புதிய இயக்குனராம். ‘நடிப்புப் புயல் கார்க்கி’ ஹீரோவாக நடித்தால்தான் இயக்குவேன் என்று அவர் சொன்னதால் அதற்கும் ஷங்கர் ஒப்புக்கொண்டாராம். (இவர் உடனே ஓகே சொன்னதற்குக் காரணம் கார்க்கி நடித்த ‘நீ எங்கே’ என்ற காவியம் என்பது குறிப்பிடத்தக்கது) விரைவில் வெளிவர இருக்கும் இந்தப் படத்தை பலகோடி ரூபாய்கள் செலவில் உருவாக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். ‘ஒரு டைரக்டரா, ஆதிமூலகிருஷ்ணன்-ங்கற பேர் ஓகேவா?’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆதி!

ப்போது பார்த்தாலும் ஜெனிவா, இந்தியா என்று சுற்றிக் கொண்டே இருப்பதால் தங்கள நாட்டு சுற்றுலாத்துறை சிறப்பு ஆலோசராக இருக்க முடியுமா என்று ‘துக்ளக்’ மகேஷைக் கேட்டுக் கொண்டிருக்கிறது சிங்கப்பூர் அரசு. தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் அவர்.

விஜய் டி.வி-யில் நீயா நானா நடத்தும் கோபிநாத் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பிஸியாக உள்ளதால் திறம்பட அதை நடத்த வேறு நபரை தேடிக்கொண்டிருந்ததாம் தயாரிப்புத் தரப்பு. சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வேந்திரன் கோபிநாத் போலவே அழகாகவும், அவரைப்போலவே தங்குதடையில்லாமல் பேசுபவராகவும் இருப்பதால் அவரைத் தேர்வு செய்துவிட்டது. கோபிநாத்தின் ‘கோட்’ இவருக்கு ’சூட்’டாகும் பட்சத்தில் உறுதியாக இவர்தான் அடுத்த விஜய் டி வி ஸ்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லையாளப் படவுலகில் ஷகீலா நடிப்பதைக் குறைத்துக் கொண்டபிறகு அந்த மாதிரிப் படங்கள் சரிவர ஓடுவதில்லையாம். என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கேட்டு அதிஷாவைத் தேடி மலையாளப் படவுலகமே திரண்டு வருகிறதாம். ‘என்னாங்கடா நெனைச்சுட்டீங்க என்னை?’ என்று கோபமாக அவர்கள் கண்ணில் படாமல் ஜோதி தியேட்டரில் போய் ஒளிந்து கொள்கிறாராம் இவர்!

மிழக அரசின் இயல்இசைநாடகத்துறைத் தலைவராக நர்சிம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கம்பனைப் பற்றிய இவரது பதிவுகளை கலைஞரின் கவனத்துக் கொண்டு சென்ற சிலரால்தான் இந்த பதவி கிடைத்ததாக மகிழ்வுடன் சொல்கிறார் இவர்.

கொசுறுச் செய்தி 1: கேபிள் சங்கர் இயக்கப்போகும் படத்தில் நர்சிம்தான் நாயகன்! ஷங்கர் தயாரிப்பில் இயக்க கதை சொல்ல கேபிள் சங்கர் சென்ற போது ஆதிமூலகிருஷ்ணனின் கதை ஓகே ஆகிவிட்டதை அறிந்த கேபிள், தற்போது விகடன் டாக்கீஸின் தயாரிப்பில் இயக்கும் இந்தப் படம் ஆதியின் படம் ரிலீஸாகும் அதே தேதியில் ரிலீஸாகிறதாம்!

கொசுறுச் செய்தி 2: ஆதிமூலகிருஷ்ணன் படத்தின் பாடல்களை எழுதப்போவது வடகரைவேலன் என்றறிந்ததும் கேபிள்சங்கர் தரப்பு நவயுவக்கவிஞர் அனுஜன்யாவை வளைத்துப் போட்டு பாங்காக் பறந்து பாடல்வேலைகளை ஆரம்பித்துவிட்டதாம்!

டாஸ்மாக்கில் நடக்கும் அத்துமீறல்களையும் ஊழல்களையும் தடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் அரசு, இறுதியாக ரகசிய முயற்சியில் இறங்கியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த வால்பையன் என்பவரிடம் தமிழக டாஸ்மாக்குகளில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி அலசி ரிப்போர்ட் செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளதாம்!

தேபோல அரசு மருத்துவமனைகளின் சுகாதாரமற்ற தன்மை குறித்து அரசுக்கு பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து ப்ளீச்சிங் பவுடரை சிறப்புப் பார்வையாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது. (ஒரே நேரத்தில் இருபக்கமும் ஆய்வு நடத்துவது எப்படி என்று வாப்ல்ளீபைச்யசிங்ன் குழம்பிப்போயுள்ளாராம்!)




.

Thursday, May 21, 2009

எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!


அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. என் நண்பனிடமிருந்து அலைபேசி. திருப்பூரில் இலங்கையிலிருந்து வந்து பணிபுரியும் சிலர் ஞாயிறும் வேலை என்று தங்கள் நிறுவனத்தில் இருக்கும்போது நாலைந்துபேர் திரும்ப தங்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள் என்றும் அவர்களுக்கு பிரபாகரன் பற்றிய ஏதோ தகவல் வந்திருப்பதால்தான் அப்படி கிளம்பிவிட்டார்கள் என்றும் சொன்னான்.

உடனே நான் அருகிலிருக்கும், இலங்கையிலிருந்து வந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று கேட்டபோது, “ஆமாங்க. பிரபாகரன் இறந்துட்டாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல அறிவிக்கப்போறாங்க. என் நண்பர்கள் இலங்லையிலிருந்து அழைத்துச் சொன்னார்கள்” என்றார்.

ஒன்றும் பேசமுடியாமல் வீட்டில் வந்து விழுந்தேன். சென்னை நண்பர்களிடமும் தொடர்பு கொண்டபோது ‘அதெல்லாம் இல்லவே இல்லை’ என்றார்கள்.

ஆனால் ஞாயிறு மதியத்திலிருந்து செய்தி சேனல்கள் பிரபாகரன் மகன் மரணமடைந்ததாகவும், உடனிருந்த தலைவர்கள் சிலரும் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்க ஆரம்பித்துவிட்டன.

அடுத்த நாளிலிருந்து பிரபாகரன் மரணத்தையும் - எந்த ஆதாரமோ, புலிகளின் வரலாறு குறித்த செய்திகளோ இன்றி கேள்விக்குறியோடு ஆரம்பித்து ஊர்ஜிதப்படுத்துதல் வரை - காட்டி குழப்படி வேலையை ஆரம்பித்தது அதே செய்தி சேனல்கள்.

ஐயா... நாங்கள் கையறு நிலையிலிருக்கிறோம். எங்களுக்கும், இலங்கைத்தமிழருக்குமான உறவு என்ன உறவென்றே சொல்ல இயலாத ஒன்று. அங்கே அவர்கள் உணவுக்கும், உறைவிடத்துக்கும் அல்லல்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஒரு குவளைத் தண்ணீருக்காக ஏங்கும் குழந்தையின் புகைப்படத்தை, கையில் கோக் அல்லது பெப்ஸியோடு ‘உச்’ கொட்டிப் படிப்பவர்கள்தான் நாங்கள். ஒத்துக் கொள்கிறோம்.

ஆனால் எங்கள் உணர்வுகள் வெளிப்படையானவை அல்ல. இன்றைக்கு துரோகி கருணாவை பெரிய **** மாதிரி பேட்டி எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சேனல்காரர்களுக்கு எதிராக குறைந்த பட்சம் தொலைக்காட்சியை அணைக்க மட்டுமே எங்களால் முடிகிறது.

முகவாட்டம் பார்த்து ‘என்ன ஆச்சு?’ என்று மனைவி கேட்டால் அலுவலகப் பிரச்சினை என்றும், அலுவலக நண்பர்கள் கேட்டால் ‘ஃபேமிலி ப்ராப்ளம்’ என்றும் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டு இறுகிய மனநிலையில் இருக்கிறோம் என்னைப் போன்ற பலர். எங்களைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.

புலிகளிடமிருந்து பிரிந்து அமைச்சராக மாறியிருக்கும் துரோகி கருணா என்ன தேசத் தலைவனா? அவன் வந்து சோனியா, ராகுல், கலைஞரை சந்தித்து ராஜீவ் கொலை பற்றி விளக்குவானாம். பிரபாகரனின் மகள், மகன் இவனுக்கும் மகன், மகளைப் போலத்தானாம். அதனால் அவர்கள் உடலை அடையாளம் காட்டும் மனநிலையில் அவன் இல்லையாம். அவனிடம் பேட்டி எடுக்க நேரமிருக்கும் உங்களுக்கு ஒரு அரை மணிநேரம் புலிகள் இயக்கம் எந்தச் சூழலில் ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் காண்பிக்கவியலாதா?

பிரபாகரன் மரணம் என்பது தனிமனிதன் மரணமல்ல. அவர் உயிரோடு இருப்பது பல தமிழர்களுக்கு உயிர்மூச்சாய் நம்பிக்கை தரும் ஒன்று. ஆங்கில செய்தி சேனல்களுக்குத்தான் இந்த வரலாறு பற்றி காண்பிக்க மனமில்லை என்றால் தமிழ் நாளிதழ்கள் சிலவும் எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதுபோல் அஞ்சலி ரேஞ்சுக்கு எழுதித் தள்ளுகிறார்கள்.

மகன், பேரன், மகளுக்கு கேபினெட் பதவி உறுதி ஆனபின் இதுபற்றி கவிதை எழுதப் போகும் தமிழினத் தலைவரும், மகனுக்கு பதவி கிடைக்காத மருத்துவர்களும், திடீர் பாசத்தோடு பிரச்சாரம் செய்த தலைவியும், இந்த விஷயத்திலாவது ஒற்றுமை காத்து இனி இலங்கைத் தமிழருக்காக என்ன செய்யலாம் என்று யோசித்து - எங்களைத் தந்தி அனுப்பச் சொல்லாமல் - ஒரு முடிவுக்கு வாருங்கள்.

அதுவரை மாவீரா...

நீ எங்கே இருக்கிறாயோ அங்கேயே இரு!

Friday, May 15, 2009

பரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை

வேலைப்பளு. பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியவர்களுக்கு தனித்தனியே நன்றி சொல்ல இயலாத சூழல். அதையும் தாண்டி அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை. (எப்பூடீ?)

******************************

கதை எழுதுவது பற்றி சுரேஷ் கண்ணனின் இந்தப் பதிவை மிக ரசிப்புடன் படித்தேன். கரு என்ன மொக்கையாய் இருந்தாலும் அபாரமான, சுவாரஸ்யமான நடை இருந்தால் எல்லாரை யும் கட்டிப்போடலாம் என்பதற்கு உதாரணமாக இருந்தது அந்தக் கதை.


எனக்கு உடனே நான் வலை ஆரம்பித்த (அட.. போன வருஷம் இதே நாள்!) கொஞ்ச நாளில் ஒரு கதை எழுதி பலரும் வந்து திட்டி.. உடனுக்குடனே முடிவை மாற்றிய ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது. (ஏன் வந்தது என்று கேட்பது சுலபம்.) எழுத நேரமில்லாமல் மீள்பதிவாய் எதைப் போடலாம் என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து இந்தக் கதையை மீள்பதிவாய்ப் போட நினைத்து... இப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கிறது! கண்டுக்காதீங்க பாஸூ!!

*******************************

எதிர்பாராத திருப்பம்



எனக்கு பதட்டமாக இருந்தது..

அவரை நான் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகி விட்டது.. இதுவரை இப்படி ஒரு நாளை நான் சந்தித்ததில்லை..

அப்படி என்னதான் நடந்தது..?

"நாளைக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு" என்று கூறி நேற்று நேரத்திலேயே அவர் படுக்கைக்கு சென்று விட்டார்.

நான் என் வேலைகளை முடித்துக் கொண்டு.. படுக்கைக்கு சென்றபோது.. மணி பத்தரை ஆகி விட்டிருந்தது.. அவர் உறங்கிக் கொண்டிருந்தார். படுத்த சிறிது நேரத்திலேயே அலாரம் வைக்க மறந்தது ஞாபகம் வர.. என் செல்போனைத் தேடினேன். ஹாலிலேயோ, சமையலறையிலேயோ வைத்து விட்டேன் போல. எழுந்து போக சலிப்பாய் இருக்கவே, தலை மாட்டில் அவரது போன் இருக்கிறதா என்று தேடினேன். இருந்தது. சரி.. அதிலேயே அலாரம் வைத்துக் கொள்ளலாம் என்று எடுத்தேன்..

அலாரம் வைத்ததோடு நின்றிருக்கலாம்.. ஸ்க்ரீனில் ஏதோ சிம்பல் தெரியவே அது என்னவென்று பார்த்தேன். அடுத்த நாளைக்கான ஒரு ரிமைண்டர் வைத்திருந்தார்..

"Meeting at Hotel Chalukya - Room No. 205 - To go with Sudha" என்று சொன்னது அந்த ரிமைண்டர். அதற்குப் பிறகு நான் தூங்கவேயில்லை.

யார் இந்த சுதா? அது என்ன ஹோட்டலில் மீட்டிங்?

அவர் எப்போதுமே எதிர்பாராத ஆபீஸ் பற்றியோ, சக ஊழியர்கள் பற்றியோ என்னிடம் பகிர்ந்துகொண்டதே இல்லை. அதனால் எப்படி இதைக் கேட்பது என்று தயக்கம்.. பயம்.

இன்று காலை எப்போதும் போல வழக்கமாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவர் பாட்டுக்கு கிளம்பி விட்டார்.

"ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க அபி?" என்று என்னைக் கேட்பார் என்று எதிர்பார்த்தேன்.. கேட்கவே இல்லை.

யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் செல்போனை எடுத்தேன்..

ரமணியிடம் உதவி கேட்கலாம்..

"ரமணி.. ஒரு உதவி வேணும் உன்கிட்ட

சொல்லு அபினயா


அவ்வளவுதான்.. ரமணியின் குரலைக் கேட்டதும் நான் உடைந்து விட்டேன். என்னையும் அறியாமல் குரல் கம்ம எல்லாவற்றையும் சொன்னேன்.


ஏய்.. ஸ்டுப்பிட்.. சும்மா எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக்காதே. ஆபீசுக்கு போன் போட்டு அவர்கிட்டயே கேளு.. மனசுல வெச்சுக்கறதுதான் உன்னைமாதிரி பொண்ணுகளோட பெரிய தப்பு



ரமணி சொன்னது சரியோ என்று தோன்றியது.


எதற்கு மனதில் போட்டு குழப்பிக் கொண்டு? அவரிடம் நேரடியாகவே பேசிவிடலாம்.


அவரின் செல்போனை டயலினேன்.


தொடர்ந்து ரிங் போய் கட்டானது.


என் மனக் குரங்கு மறுபடி கிளை தாவ ஆரம்பித்தது.


வேறு ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் வரும் முன்.. அவரது அலுவலகத்தில் அவருக்கென்றிருக்கும் பிரத்தியேக எண்ணுக்கு போன் செய்தேன்.


நான்காவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது.


வேறு யாரோ எடுத்தார்கள். ஆண் குரல்தான்.. யாரது..


ஹலோ.. ராகவ் சார் இல்லயா?”


சார் வாஷ் ரூம் போயிருக்காருங்க மேடம். நீங்க?”


நான் அபினயா.. அவர் மனைவி


வணக்கம் மேடம்


நீங்க?”


நான் சுதாகர் மேடம். சாரோட பி.ஏ


எ..என்ன பேர் சொன்னீங்க?”


சுதாகர்


இன்னைக்கு ஹோட்டல் சாளுக்யால மீட்டிங்.....


நான் முடிக்கும் முன்..


நானும் சாரும்தான் போறோம் மேடம்...


ச்சே.. என்ன பொண்ணு நான்.. சுதாகரை சுதா என்று அவர் ரிமைண்டரில் வைத்திருந்ததால் குழம்பி..


சரி சுதாகர்.. ஒண்ணுமில்ல சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு கேக்கத்தான் போன் பண்ணினேன். கொஞ்சம் ஷாப்பிங் போகணும்


எப்படியும் ஒம்பது பத்து மணியாயிடும் மேடம்.. வீட்டுக்கு போய்தான் சாப்பிடணும்னு சொல்லீட்டிருந்தாரு


ஒக்கே.. நான் போன் பண்ணினதா சொல்ல வேண்டாம்.. அப்புறமா அவர் மொபைல்ல பேசிக்கறேன்


சரிங்க மேடம்

போனை வைத்ததும் எனக்கு ரிலாக்ஸாக இருந்தது. இரவு வரும் அவருக்காக என்ன டிபன் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

-----------------------------------

பரிசல்காரன்: என்னடா உங்களுக்கு வேற வேலையே இல்லயா? ட்விஸ்ட்.. ட்விஸ்ட்ன்னு இந்த மாதிரி எத்தனை கதைடா எழுதுவீங்க என்று சலித்துக்கொள்கிறவர்கள் மட்டும் கீழே படிக்கவும்..

-----------------------------------------


ராகவின் அலுவலகத்தில்...


என்னப்பா.. போன் அடிச்ச சத்தம் கேட்டது? யாரு?”


உங்க மனைவிதான் போன் பண்ணியிருந்தாங்க. நீங்க கணிச்சது சரிதான் சார். நான் நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேன். என் பேருக்காகத்தானே என்னை வேலைலயே வெச்சிருகீங்க..


வெரிகுட்.. நீ போய் மார்க்கெட்டிங்ல இருக்கற சுதாராணிய என் காருக்கு வரச் சொல்லு. சாளுக்யா போகணும்

------------------------------------------------------


மீண்டும் பரிசல்காரன்: என்னடா கட்டின பொண்டாட்டிய ஒருத்தன் ஏமாத்தறதா கதய முடிச்சுட்டியே.. அவ மட்டும் என்ன இளிச்சவாச்சியா?’ ன்னு வருத்தப் படறவங்க மட்டும் கீழே படிக்கவும்..

------------------------------------------


பினயாவின் வீட்டில்:


ராகவின் அலுவலகத்திற்கு பேசிய பின் அபினயா ரமணிக்கு போன் போட்டாள்..


ரமணி.. நான் நெனச்ச மாதிரி ஒண்ணுமில்ல.. அந்த சுதா, சுதாகர். அவரோட பி.ஏ.


எனக்கு தெரியும்.. நீதான் மனசப் போட்டு குழப்பிக்கற


சரி.. அவரு வர எப்படியும் ஒம்பது மணி ஆயிடுமாம்


ஏய்.. ஏய்.. என்ன?”


ப்ளீஸ்டா.. உன்னைப் பாத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. வாடா


சரி அபி.. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்என்றான் ரமணி.

--------------------------

மீண்டும் மீண்டும் பரிசல்காரன்:- "இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தவிர்க்கவும்என்று உரிமையோடு கடிந்து கொண்ட வடகரைவேலன்.. என்னய்யா குடும்பம் இதுஎன்று ஆதங்கப்பட்ட அகரம்.அமுதா, ச்சின்னப்பையன், விக்னேஸ்வரன்.. எல்லாத்துக்கும் மேல `கேஸ் வரப் போகுதுஎன்று பயமுறுத்திய வெண்பூ ஆகியோரது பின்னூட்டங்களுக்குப் பிறகு மாற்றப்பட்ட முடிவு..

---------------------------------------


பினயாவிடம் வருவதாய் சொல்லிவிட்டு போனைத் துண்டித்த ரமணி காரில் ஏறி நேராக செலுத்தினான். காரை நிறுத்திய இடம்..


ஹோட்டல் சாளுக்யா!


நேராக ரிசப்ஷன் நோக்கி நடந்தவன் தூரத்தில் வந்த ராகவ்-வின் இன்னோவாவைப் பார்த்ததும் ஹோட்டலின் வாயிலிலேயே நின்றான்..


காரை விட்டிறங்கிய ராகவ், ரமணியைப் பார்த்ததுமே முகம் வெளிறினான்.


ர.. ரமணி.. நீ எங்க இங்க?”


ராகவ்.. நீ எல்லை மீறிப் போய்ட்டிருக்க. ஒரு நல்ல நண்பனா உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அபி உன்னைப் பத்தி விசாரிக்க எங்கிட்ட சொன்னா. உனக்கும், சுதாராணிக்கும் இருக்கற லேசான பழக்கம் தெரிஞ்சும் வேறெந்த கெட்ட பழக்கமும் இல்லாத, திறமைசாலியான உன்னை மாத்திடலாம்ன்னு நம்பி உன்கிட்டயே அதப் பத்தி கேட்டேன். நீ அப்படியெல்லாம் இல்ல. சும்மாதான் பழகறோம்ன்ன. ஆனா கல்யாணமாகி இவ்வளவு நாள் கட்டுப்பாடோட இருந்த நீ, இப்போ இப்படி..


ரமணி.. நீ நெனைக்கற மாதிரியெல்லாம் இல்ல


சும்மா இருடா. உனக்காக பொய் சொல்ற சுதாகர் ஆயிரம் ரூபா குடுத்தா உன்னைப் பத்தி என்கிட்டயும் சொல்லுவான்னு புரிஞ்சுக்கோ. இப்பவும் நீ வர லேட்டாகும், போரடிக்குதுடா.. வீட்டுக்கு வான்னு உரிமையோட அபி என்னைக் கூப்பிடறா. நீ சுதாராணிகிட்ட பழகறமாதிரி நான் அபிகிட்ட..


ரமணி... ப்ளீஸ்.. என்னை கொல்லாதே


அட.. நீங்க மட்டும் என்ன வேணா பண்ணலாம். அப்படித்தானே?”


இல்ல ரமணி. ஏதோ ஒரு நொடி பிசகினதுல இப்படி ஒரு தப்பு பண்ண இருந்தேன்.. இனி இந்த மாதிரி நினைச்சுக்கூட பாக்க மாட்டேன். உன் கார் இங்கயே இருக்கட்டும். வா ரெண்டு பேருமா இதுலயே வீட்டுக்கு போலாம்என்ற ராகவ் காரின் பின் சீட்டிலிருந்து இறங்கிய சுதாராணியைப் பார்த்து சொன்னான்..

நாளைக்கு அக்கவுண்ட்ஸ்ல போய் உன் கணக்கை செட்டில் பண்ணிக்கம்மா

****


(தலைப்பைப் பார்த்துட்டு திட்டாதீங்க. ஆனந்தவிகடன்ல என் கதை, நண்பர்கள் கதை வந்தத பார்த்து பலரும் பதிவு போட்டு வாழ்த்தினாங்க. சரி என் வலைப்பூவுல நான் எழுதினத நானே போடலாமேன்னுதான்...... ஹி..ஹி..)

Wednesday, May 13, 2009

தேர்தல் கமிஷனுக்கு நன்றி!

‘பிறந்தநாள் கொண்டாடுவது என் பழக்கத்தில் இல்லை. நாமெல்லாம் எதற்குப் பிறந்தாள் கொண்டாடிக்கொண்டு..’ இப்படியாக இல்லை நான். நான் ஒவ்வொரு பிறந்தநாளையும் என்னளவில் நினைவில் கொள்ள ஏதாவது செய்து அதைக் கொண்டாடுபவன்தான்.

ஆனால் இந்தப் பிறந்தநாளை நான் மறக்கவேமுடியாதபடிக்கு பல தரப்பினரும் பலதும் செய்து என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள். எங்கள் எம்.டி. தங்கள் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டிக்குப் பிறகு என்னையும், என் குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு காஃபி டே சென்று அங்கே சரியாக இரவு 12 மணிக்கு அவர்களும், அலுவலக நண்பர்களும் எனக்கு வாழ்த்துச் சொல்ல.. காஃபி டே ஊழியர்கள் புஸ்வாணமெல்லாம் வெடித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்கள். எங்கள் மேடத்துக்கும், நண்பர்களுக்கும், உடனே வந்து பலூன் உடைத்து, பட்டாசு பற்ற வைத்த காஃபி டே-யின் ஊழியருக்கும் என் அன்புகள் என்றும்.

பதிவுலகின் பல நண்பர்களின் அழைப்பைத் தொடங்கிவைத்தது குசும்பன்! இதுவரை வாழ்த்திய வாழ்த்திக் கொண்டிருக்கும் அனைவர்க்கும்....

பிறந்தநாள் என்றதும் ஒரு துணுக்கு ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு ஹாலிவுட் நடிகர் தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் தனது பெற்றோருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவாராம். ஒரு நிருபர் இதுபற்றிக் கேட்டபோது அவர் சொன்னாராம்: “நான் பிறந்த எனது முதல் பிறந்தநாள் அன்று யாரும் எனக்கு வாழ்த்துச் சொல்லவில்லை. என் பெற்றோருக்குத்தான் சொன்னார்கள். அதற்குப் பிந்தைய பிறந்ததினங்களின் யாரும் என் பெற்றோரை வாழ்த்துவதில்லை. என்னைத்தான் வாழ்த்துகிறார்கள். சரி நானாவது அவர்களுக்கான வாழ்த்தைத் தொடரலாமே என்றுதான்..”

சரியான காரணம்!

இந்தப் பிறந்தநாள் எனது முதல் பிறந்தநாள்.. (மயக்கம் போட்டுடாதீங்க... வலையுலகில்னு சொல்ல வந்தேன்) இதை நாற்பெரும் விழாவாகக் கொண்டாட ரசிகர்கள் சென்றவாரம் கேட்டபோது புளகாங்கிதமடைந்தேன். எப்படியும் 2 லட்சம் ஹிட்ஸை எட்டிவிடுவேன்.. மே 15 வந்தால் வலைப்பூ ஆரம்பித்து ஒருவருடம் நிறைவு பெறுகிறது.. எப்படியும் 300 ஃபாலோயரைத் தொட்டுவிடும்.. இப்படியெல்லாம் கணக்குப் போட்டு கேட்டார்கள். (அடிங்...)

கடந்த பத்து நாட்களாக சரிவர எழுதாததால் 2 லட்சம் இன்னும் தொடவில்லை. ஆகவே இது முப்பெரும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது. (ச்ச்ச்ச்சே!) இன்றைக்கு ஒரு நாள் மட்டும் யாரும் கழண்டுகொள்ளாமல் 300 ஃபாலோயர் என்றிப்பதைக் காப்பாற்றி மானம் கப்பலேறாமலிருக்க உதவுமாறு ஃபாலோயர்ஸைக் கேட்டுக் கொள்கிறேன்! (ஃபாலோயர்ஸாக சேர விரும்பும் புதிய வாசகர்கள் வலதுபுறம் ‘என்னைத் தொடரும் நண்பர்கள்’ கீழே ஃபாலோ-வைக் க்ளிக்கி ஃபாலோ செய்து பிறவிப்பயனை அடையவும்)

எல்லாவற்றையும் மீறி பெரிய தலைவர்கள் பிறந்தநாள் ரேஞ்சுக்கு என் பிறந்த நாளை ஃபீல் பண்ண வைத்த (பின்ன? டாஸ்மாக்கெல்லாம் லீவுல்ல!) தேர்தல் கமிஷனுக்கு நன்றி.

இந்தியாவின் வருங்காலப் பிரதமரைத் தீர்மானிக்கும் தேர்தலை இன்றைக்கு வைத்து எல்லாருக்கும் விடுமுறை வேறு வாங்கிக் கொடுத்து என் பிறந்தநாளை எல்லாரையும் கொண்டாட வைத்ததற்கும் நன்றி! ஒரேயொருவேண்டுகோள்... ‘ஓ’ட்டுப் போடுங்கள்!

அளவுக்கு மீறிய இந்தச் சுயவிளம்பரப் பதிவை என் பிறந்தநாளை முன்னிட்டு மன்னித்து படித்தமைக்கும்..... அதேதான் – நன்றி!

(இந்தப் பதிவை தமிழ்மணம்.. தமிழிஷ்ல் இணைக்கப் போகும் நண்பருக்கும் நன்றி!)

Tuesday, May 12, 2009

என்ன எழுதுவது...?

நேற்றென்னை அழைத்த நண்பர் கேட்டார்: “என்ன கிருஷ்ணா.. கொஞ்ச நாளா பதிவுல தீவிரமா ஒண்ணும் எழுதல? ரைட்டர்ஸ் ப்ளாக் வந்துடுச்சா உங்களுக்கு?”

‘அது ரைட்டர்ஸுக்குத்தானே வரணும்... எனக்கேன்’ என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.

வேலைப்பளுவும், என்ன எழுத என்ற யோசனையும்தான் காரணமின்றி வேறொன்றுமில்லை.

ரண்டு வாரம் முன்பு ஓட்டுக் கேட்க வந்தார் ஒருவர். நானும் என் நண்பனும் வீட்டிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வந்தவரிடம் நட்பு முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் வீட்டுக்கு எதிரில் காலிமனைகளில் குவிந்திருந்த குப்பைகளைக் காட்டி “எலக்‌ஷனுக்குள்ள இந்த குப்பைகளை எந்த கட்சிக்காரங்க க்ளீன் பண்றாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு!” என்றபோது அந்த வேட்பாளர் முகமலர்ந்து “அடடே.. தம்பி சொல்றது நல்ல யோசனையா இருக்கே” என்றபடி கூட இருந்த தொண்டரடிப்பொடிகள் சிலரிடம் ‘நம்ம பசங்ககிட்ட சொல்லி ரெண்டொரு நாள்ல இதக் க்ளீன் பண்ணீடுங்கப்பா’ என்றார்.

நான் புல்லரித்துப் புளகாங்கிதமெல்லாம் அடைந்து “இல்லைங்க.. ஜெயிச்சப்பறம் அதப் பண்றேன்.. இதப் பண்றேன்னு சொல்றது வேற. இப்பவே இதப் பண்ணினீங்கன்னா அட்லீஸ்ட் ஓட்டுப் போடற அந்த நிமிஷம் எனக்கு ஒரு திருப்தியா இருக்கும் இல்லையா?” என்றெல்லாம் விளக்கம் கொடுத்து..

இதோ இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு மாற்றமுமில்லை. வெட்கக்கேடான விஷயம், அந்த வேட்பாளருக்கு சப்போர்டாக உடன்வந்த, எங்கள் அபார்ட்மெண்டிலேயே குடியிருக்கும் ஒருவர் இதற்குப் பிறகு தன் வீட்டுக் குப்பைகளையும் அங்கேயே கொட்டுவதைப் பார்க்கிறேன்.

என்னால் இந்தப் பதிவு எழுதுவதைத் தவிர வேறொன்றையும் **** முடியவில்லை.

கோவை சென்றிருந்தபோது என் உறவினர் வீட்டில் கிடந்த நோட்டீஸில் ஒரு கட்சிக்காரர் ‘பாரதத் தாயின்மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்’ என்று பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். வெற்றிபெற்றால் இதையெல்லாம் செய்வேன் என்று. அதில் ஒரு வாக்குறுதி கோவை தொகுதியிலுள்ள டாஸ்மாக் வருமானத்தை வைத்தே தொகுதி வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த உறுதிமொழி மதுவிலக்கை அமல்படுத்தக் குரல் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். முரண்!

‘என்னாங்கடா இது?’ என்று வீறுகொண்டு எழுந்து பைக்கை அந்த வேட்பாளர் வீட்டுச் சுவற்றில் மோதி உடைத்துக் கொண்டு அவர் முன் நிறுத்தி அந்த நோட்டீஸை அவர் முகத்தில் விட்டெறிந்து ‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...’ என்று ஆரம்பித்து நீள்வசனம் பேச என்னால் முடியாதென்பதால்...

அதில் குறிப்பிட்டிருந்த அவரது அலைபேசிக்கு அழைத்து ‘என்னங்க.. இதெப்படி சாத்தியம்?’ என்று கேட்க அவர் சொல்கிறார்.

“நான் ரெண்டு சாய்ஸ் குடுத்திருக்கேன் சார். இது இல்லைன்னா அது..” என்கிறார்.

“சாய்ஸ் குடுக்க இதென்ன கொஸ்டின் பேப்பரா? உறுதிமொழிங்க.. அதுவும் யார் மேல குடுத்திருக்கீங்க? ‘பாரதத்தாய் மீது ஆணையிட்டு’ன்னிருக்கீங்க. எல்லாமே விளையாட்டாப் போச்சா உங்களுக்கு?” என்று கேட்டுவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.

அடுத்தநாள் நாளிதழெல்லாம் வாங்கிப் பார்க்கிறேன். பகிரங்க மன்னிப்புக் கோரி அவர் ஏதாவது பேட்டி கீட்டி குடுத்திருந்தால் என் சித்தப்பா வீட்டின் இரண்டு ஓட்டுகளை அவருக்குப் போடச் சொல்லி சிபாரிசு செய்யலாம் என்று.. ம்ஹூம்.


‘டேய் ஒரு சி டி இருக்கு. பார்க்கறியா?’ நண்பர் கேட்டான்.

பார்த்தேன். நான்கு நாட்களாக ஒரு வேலையிலும் மனசு ஒட்டவில்லை. ‘இதை ஏண்டா இப்படி பயந்து பயந்து பார்க்கணும்? இதுல என்ன இருக்கு? எங்கயோ நடக்குற கொடுமையை பார்த்து வருத்தப்படக்கூட பயமா?’ என்று கேட்டால்.. அது தடை செய்யப்பட்ட சி டி யாம். தடை செய்ய அதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. நிர்வாணங்களும், அசிங்கங்களும் பார்க்க எந்த வெட்கமோ, வேதனையோ தேவையில்லை. அதைப் பார்க்கவும், பார்த்ததை ரசித்து எழுதவும் தயார். ஆனால் இந்தக் கண்ணீரையும், ரத்ததையும் பார்த்து அழ நமக்கு உரிமையில்லை. பயம். பயம்.

அதிகபட்சமாக ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ என்று காலர்ட்யூனை மாற்ற மட்டுமே முடிகிறது நம்மால். ச்சே!

நான் சொன்ன மூன்று நிகழ்வுகளிலும் என்ன செய்ய முடிந்திருக்கிறது என்னால் என்று யோசித்தால் வெட்கம் மட்டுமே மிஞ்சுகிறது.

இந்த லட்சணத்தில்... என்ன எழுத?

Friday, May 8, 2009

அவியல் 08.05.2009

கஸின் ப்ரதர் திருமணத்திற்காக கேரளா சென்றிருந்தேன். திருமணத்தின்போது மண்டபத்தில் இருக்கும் குழந்தைகளைக் குஷிப்படுத்தலாமென்று நானும் தம்பியும் பலூன்கள் வாங்க ஓரிரு கடைகள் ஏறி இறங்கியபோது ‘எங்களிடம் இல்லை’ என்ற பதில் வந்ததே தவிர, எங்கே கிடைக்கும் என்றதற்கு எவருமே சரியாக பதில் சொல்லவில்லை. வந்து பலரிடமும் இதுபற்றிப் பேசியபோது கேரளா கடைகளின் கஸ்டமர் கேர் மிக மோசமானது என்று பலரும் பல உதாரணங்கள் சொன்னார்கள்.

ஒருத்தர் சர்பத் கடை ஒன்றிக்கு சென்றிருக்கிறார். சர்பத் கேட்டதற்கு கடைக்காரர் சொன்னாராம்: “டம்ளர்களைக் கழுவிவிட்டேன். இனி சர்பத் போடமாட்டேன். நாளைக்குத்தான்”

இன்னொருத்தர் சொன்னார்: அவர் ஒரு கடைக்குச் சென்றாராம். மணி 9. கடை பூட்டியிருந்தது. கடைக்கு முன் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தற்கு “கடை 9.30க்குத்தான் திறக்கும்” என்றிருக்கிறார். இவர் போய் 9.30க்கு மேல் வந்தபோது இவருக்கு பதில் சொன்ன நபர்தான் கடைக்காரர் என்றறிந்தாராம்!
**********************************

ரொம்ப நாளாச்சு கிரேசி கிரி பற்றி எழுதி. திருமணத்துக்கு முதல் நாள் வழக்கம் போல சீட்டு விளையாட அவனிடம் கேட்டேன். “கார்ட்ஸ் இருக்கா?” “இருக்கு. ஆனா ஒரு சில கார்ட்ஸ் இல்ல அந்தக் கட்டுல” என்றான்.

“அது சரியிருக்காது. ஒனக்குத் தெரியுமா? ஒரு நல்ல சீட்டு விளையாட்டுக்காரன் ரெண்டு மூணு ஆட்டத்துல கட்டுல கார்ட்ஸ் மிஸ் ஆகியிருந்தா சொல்லீடுவான்” என்றேன். அதோடு நிறுத்தியிருக்கலாம். “சில பேர் கட்டை கைல எடுத்து டிகிரி போடும்போதே (கார்ட்ஸை கலக்குவது) சொல்லீடுவாங்க” என்றேன்.

உடனே கேட்டான்” “அத விட ப்ரொஃபஷனல்ஸ் இப்போ என் சூட்கேஸ்ல இருக்கறதுல இத்தனை கார்ட்ஸ் இருக்காதுன்னு சொல்லுவாங்க.. இல்லையா?” என்றான்.

இதுக்கு மேலயும் நான் பேசுவேன்?

இதே கிரேசி கிரி கணுக்கால் வரை பேண்ட் அணிந்திருந்த ஒரு சிறுவனைப் பார்த்துக் கேட்டான்: “ஏண்டா.. பேண்ட் அளவுகுடுத்து தைக்கறதுக்குள்ள வளர்ந்துட்டியா?”

****************************

கிரேசி கிரியின் அண்ணன் மகேஷ் அவனுக்கு ஒரு படி மேல்! (அண்ணனில்லையா.. அதுதான்!)

“ஆரத்தி காட்டும்போது தட்டில் ஏன் நோட்டைப் போடாமல் சில்லறை போடுகிறார்கள்?” என்று கேட்டார். “நனையுமில்லையா.. அதுதான்” என்றேன்.

“இல்லையில்லை... CHANGE (மாற்றம்) ஒன்றுதான் CHANGE ஆகாதது.. அதனால்தான்” என்று கடித்தார். இது விஷயமில்லை.

திருமணம் முடிந்து மாலையில் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆரத்தி காட்டும்போது ஒருவர் பத்து ரூபாய் நோட்டை ஆரத்தி தட்டில் போட மாப்பிள்ளையிடம் கொடுத்தார். உடனே இவரைத் தேடிப் பிடித்து “என்னமோ சொன்னீங்க? பாருங்க நோட்டு நனைஞ்சாலும் பரவால்லன்னு நோட்டைப் போடறாங்க..” என்றேன்.

உடனே சொன்னார்: “இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுல்ல. இனிமே இவங்களுக்குள்ள எந்த CHANGEம் இருக்கக் கூடாதுன்னுதான் CHANGE போடல” என்றார்!


மேற்கண்ட ஆரத்திச் சில்லறை சந்தேமல்லாமல் மகேஷண்ணாவின் சந்தேகங்கள் என்று ஒரு புத்தகமே போடலாம் என்னுமளவிற்கு அவர் பல கேள்விகள் கேட்டார். ஞாபகம் வரவில்லை.

ஒன்றே ஒன்று மட்டும்:

க்யூ என்பது நீளமாக நிற்பது. அதற்கு I தான் சரியான குறியீடு. அல்லது L ஐக்கூட வைத்துக் கொள்ளலாம். ஏன் Q?

நான் சொன்னேன். “எங்கே நின்றிருப்பவர் ஆனாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில்தான் எல்லாருமே வரவேண்டியிருக்கிறது. அதனால் O மாதிரி போடுகிறார்கள். அப்படியும் எல்லா க்யூவிலும் யாராவது நடுவில் புகுகிறார்கள் அதனால் அந்தக் கோடு... Q!”

*********************


கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் சொன்னார்கள். ஒருத்தருக்கு ஏதோ ஒரு எண்ணிலிருந்து தொடர்ந்து அழைத்து கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்திருக்கிறான் ஒருவன். இவர் கூப்பிட்டால் எடுப்பதில்லை. வேறு பல எண்களிலிருந்து முயன்றும் அவன் எடுக்கவே இல்லை. ஆனால் இவருக்கு பல எண்களிலிருந்தும் அவன் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்திருக்கிறான்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இவர், தனது எண்ணை மாவட்ட எஸ்.பி.க்கு கால் டைவர்ட் செய்துவிட்டார். அவனும் அழைத்து பல முறை பலவாறு பேசியிருக்கிறான். (நீ போலீஸ்காரன்னு சொன்னா பயந்துடுவோமா?)

ஒன்றிரண்டு முறை அவன் அழைப்பை அட்டெண்ட் செய்து வாங்கிக் கட்டிக் கொண்ட எஸ்.பி. அதன்பிறகு எவனோ கிறுக்கன் என்று அந்த எண்ணிடமிருந்து வந்த காலை துண்டிக்க ஆரம்பித்துவிட்டார். ஒருநாள் எஸ்.பி. முக்கியமான ஏதோ மீட்டிங் முடிந்து பார்க்கையில் DOT லைனிலிருந்து பல மிஸ்டு கால்கள் பதிவாகியிருக்கிறது. என்னமோ ஏதோ என்று அழைக்க.. இவன்!

இப்போது அந்த நபர் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறானாம். கால்டைவர்ட் செய்தவர் ‘தாங்கமுடியாமத்தான் அப்படிப் பண்ணினேன்’ என்று மன்னிப்புக் கோர ‘உன் வேதனை புரியுது’ என்ற எஸ்.பி. வழக்கில் அவரை சாட்சியாக போட்டுவிட்டாராம்!

********************************

‘நான் எழுத்தாளனாக்கும்’ என்று திரியும் என்னை ஒருபக்கம் கோபிகிருஷ்ணன் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருக்க... இரண்டொருநாள் முன்பு பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் படைப்புகளை வாங்கி, ஆத்மாநாமிடமும் அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன்.


குற்றுகர முற்றுகர சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் செய்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு.

பதில் என்ற கவிதை இப்படி இருக்க....



எப்படி எழுத வேண்டும் என்று
நான் கூறவில்லை

உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை

என்று துவங்கும் எழுதுங்கள் என்ற கவிதை எனக்கு டானிக் போல இப்படி முடிகிறது..

எழுதுங்கள்
பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும்.


வெறும் 33 வருடமே வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார் ஆத்மாநாம் என்பது துரதிருஷ்டமான ஒன்று!


*ஆத்மாநாம் படைப்புகள்
*தொகுப்பாசிரியர்: பிரம்மராஜன்
*காலச்சுவடு பதிப்பகம்
*ரூ.200

Saturday, May 2, 2009

கிருஷ்ணகதா-2 (சாதிகள் இல்லையடி பாப்பா)

ஜாதி, மதம்ன்னு அலையற ஒரு கும்பல் இப்பவும் இருக்கு. ஒவ்வொரு தேர்தல் சமயத்துலயும் ஜாதி ஓட்டு, ஜாதிக்குன்னு தனியா கட்சி, இந்த ஜாதிக்காரரைத்தான் இந்தத் தொகுதில நிறுத்தணும்னு ரொம்ப சீரியஸா ஜாதிக்கா செய்திகளைப் படிக்கறப்போ கவலையா இருக்கு.

அதே மாதிரி ‘இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக்கற கிராமங்கள் இருக்குடா’ன்னு என் ஃப்ரெண்ட் சொல்லி, ‘வர்றியா காமிக்கறேன்’ங்கறான். இருக்காதுன்னு சொல்ல பயமா இருக்கு. ஏன்னா ஒரு சில மாசத்துக்கு முன்னாடிதான் எங்க உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல இந்தப் ப்ரச்னை வெட்டுகுத்து வரைக்கும் போனதா பேப்பர்ல படிச்சேன். கேவலமா இருந்தது.

பாண்டவர்-கௌரவர் ஃபைட்டெல்லாம் முடிஞ்சு துவாரகைக்கு போய்ட்டிருந்தார் கிருஷ்ணர். அப்போ உதங்கர் அப்படீங்கற துறவியை சந்தித்தார். அவருக்கு உலக நடப்பு எதுவும் தெரியல.

“என்ன கிருஷ்ணா.. கௌரவர்-பாண்டவர்களின் சகோதர அன்பு எப்படிப் போய்ட்டிருக்கு?”ன்னு கேட்டார். கிருஷ்ணர் ஒரு நிமிஷம் திகைச்சுப் போய், “ஐயா.. நான் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் முடியாம ரெண்டு பேருக்கும் போரே நடந்துச்சு. உங்களுக்குத் தெரியாதா?”ன்னு கேட்டார்.

உதங்கருக்கு பயங்கர டென்ஷனாய்டுச்சு. “நீ இருந்தும் சமாதானம் பண்ணி வைக்கலியா? நீதான் ஏதாவது கபடவேஷம் போட்டு தூண்டி விட்டிருப்ப. இரு நான் உனக்கு சாபம் தர்றேன்”ன்னு கமண்டலத்தைத் தூக்கப் போனார்.

“கூல்.. கூல்..”ன்னு சொன்ன கிருஷ்ணர் தன்னோட விஸ்வரூபத்தைக் காட்டி உதங்கருக்கு கிருஷ்ணாவதாரத்தைப் பத்திச் சொல்ல உதங்கர் கூலானார்.

“சரி உதங்கரே.. உங்களுக்கு ஒரு வரம் தர நினைக்கிறேன். கேளும்”ன்னார். ‘உன் விசுவரூபத்தைப் பார்த்த்தே போதும்’னு முதல்ல மறுத்த உதங்கர் கிருஷ்ணர் வற்புறுத்தவே ஒரு வரம் கேட்டார்.

“நான் எப்போ எங்க தாகத்துல வேண்டினா தண்ணீர் கிடைக்க வரம் குடுங்க” ன்னு கேட்டார். (திருப்பூர்க்காரரா இருப்பாரு போல!)

”இவ்ளோதானா.. டேக் இட்”ன்னு வரம் குடுத்தார் கிருஷ்ணர்.

கொஞ்ச நாள் கழிச்சு, உதங்கர் காட்டுல அங்க இங்க அலைஞ்சு, தாகத்தோட சுத்திகிட்டிருக்கறப்போ கிருஷ்ணரை நினைச்சார். உடனே அங்க ஒரு மாட்டிடையன் அங்க வந்தார். அழுக்குத் துணியும், கூட அஞ்சாறு வேட்டை நாய்களும், தோள்ல ஒரு பைல குடிதண்ணீரும் வெச்சிருந்தார்.

வந்தவர் நேரா உதங்கரைப் பார்த்து ”தாகத்துல தவிக்கறீங்க போல.. இந்தாங்க தண்ணீர்”ன்னு குடுத்தாராம்.

உதங்கர் மாட்டிடையரை அருவருப்பாப் பார்த்து “வேண்டாம்.. வேண்டாம்”ன்னு மறுத்துட்டார்.

அடுத்த நொடி மாட்டிடையன் எஸ்-ஸாய்ட்டாராம்.

“உடனே மறைஞ்சுட்டானே.. இது யாரு?”ன்னு உதங்கர் கன்ஃப்யூஸ் ஆகிட்டார்.

கொஞ்ச நேரம் கழிச்சு கிருஷ்ணர் அவர் முன்னால் வந்து “வாட்டீஸ் திஸ்?”ன்னு கேட்டப்போ..

“இடையன்கிட்ட குடுத்தனுப்பறியே கிருஷ்ணா.. நான் எப்படி வாங்கிக் குடிக்க?”ன்னு கேட்டாராம்.

“அட உதங்கரே... உங்களுக்காக தேவ அமிர்தத்தைக் குடுக்க இந்திரன்கிட்ட பேசி, அவன் ‘மனுஷங்களுக்கு சாகாமருந்தெல்லாம் குடுக்கறதா’ன்னு என்கிட்ட ஆர்க்யூமெண்ட் பண்ணி, கடைசில ‘குடுக்கறேன்.. ஆனா அதை வேற வேஷம் போட்டு ஜலமா கொண்டு போய்த்தான் குடுப்பேன்’ன்னான். நானும் நீங்க ஞானியாச்சே.. ஜாதியெல்லாம் பார்த்து வெறுக்கற கீழ்த்தரம் உங்ககிட்ட இருக்காதுன்னு நெனைச்சு ஒத்துகிட்டேன். இப்ப நான் இந்திரன்கிட்ட தோத்துட்டேனே”ன்னு புலம்பினாராம் கிருஷ்ணர்.

தன் ஜாதிப்பித்தால் அமிர்தத்தை இழந்த உதங்கரும் வெட்கித் தலைகுனிந்தாராம்.

கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......