Tuesday, May 21, 2013

கொடைக்கானல் - ஒரு பார்வை

மூன்று நாள் பயணமாக கொடைக்கானல் குடும்பத்துடன் சென்று வந்தேன். சில பகிர்வுகள்:


நண்பர்கள் லெனின், (http://www.facebook.com/lenin.mirni)  யுவராஜ் (http://www.facebook.com/Onely1Yuvaraj) – இருவரும் இல்லையேல் இந்த சுற்றுலா சாத்தியமில்லை. கடும் பொருளாதாரச் சிக்கல்களுக்கிடையேயும், ஹாஸ்டலிலிருந்து வந்திருக்கும் மகள்களுக்காக இப்படி ஒரு திட்டம் உருவானபோது இருவரும் உதவினர். ஒருத்தர் மகிழ்ந்து, மகிழுந்து அளித்தவர். இன்னொருவர் ஸ்டெர்லிங் ரிசார்டில் தமக்கிருந்த அறையை, எனக்கு ஒதுக்கித் தந்தவர். நான் முதல்வரானால் கார் தந்தவரை போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அறை ஒதுக்கியவரை சுற்றுலாத்துறை அமைச்சராகவும் ஆக்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறேன்.

  • மே மாதம், இரண்டாவது வாரம், இதுபோன்ற மலைவாசஸ்தலங்களுக்குச் செல்ல உகந்த காலம். ‘வெயில் கொடுமையா? அரை கிலோ கிடைக்குமா?’ என்று வினவுகிறது வெதர்.
  • எந்தக் கடையிலும் ப்ளாஸ்டிக் கவர்கள் இல்லை. எத்தனை பெரிய பொருள் வாங்கினாலும் அந்தந்த சைஸுக்கேற்ற பேப்பர் கவர்கள்தான். அங்கிருக்கும் பாலிதீன் பைகளெல்லாம் சுற்றுலா வந்தவர்கள் கைங்கர்யத்தினால் கிடப்பவைதான்

  • அதுவும் ஓரிடத்தில் வனத்துறையினர் நின்று ஒவ்வொரு வாகனமாக, ‘ப்ளாஸ்டிக் கவர், வாட்டர் பாட்டில் இருந்தா இங்கயே போடுங்க’ என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள். மலைபோல குவிந்து கிடக்கிறது அங்கேயும். ஆனாலும் – அதைத்தாண்டிப் போனாலும் குப்பைகளை வெளியில் வீசியபடிதான் செல்கின்றனர் மாக்கள். (எழுத்துப் பிழை அல்ல) 

  • போக்குவரத்துக்கு காவல்துறைக்கு இங்கிருந்தவாறே சல்யூட்டிக் கொள்கிறேன். அருமையான பணி. நெரிசல் மிகுந்த இடங்களிலெல்லாம் பைக்கில் சென்றபடியும், மைக்கில் பேசியபடியும் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். நாங்கள் ஏரியை சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஜீப்பில் வந்த ஒரு பெரியஅதிகாரி நின்றிருந்த போலீஸிடம், ‘அந்தக் காரை ஏன் அங்க பார்க் பண்ண விட்டீங்க?’ என்று வினவ, ‘இப்ப எடுத்துடுவாங்க’ என்று பதிலளித்துக் கொண்டிருந்தார் அவர்.

  • சுற்றுலா முழுவதும் என் மகள்களின் அட்டகாச கமெண்ட்களை ரசித்தபடியே வந்தேன். ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்ற போர்டைப் பார்த்து மீரா, ‘அப்ப குண்டு பட்டா?’ எனக் கேட்க மேகா டக்கென, ‘குண்டு பட்டால் உண்டு சாவு’ என்றாள். போலவே, ‘மேல் நோக்கி வரும் வாகனங்களுக்கு வழிவிடவும்’ என்றிருந்ததைப் பார்த்து, ‘அப்ப ஃபீமேல் நோக்கி வந்தா வழிவிடக்கூடாதா? மேல மோத விடணுமா?” என்றதும் நான் அங்கிருந்தே குதிக்கலாமா என்று யோசனையை 1782 மீட்டர் என்ற போர்டைப் பார்த்து கைவிட்டேன்.

  • பொது இடங்களில் அவரவர் தாய்மொழிகளில் உரையாடிக் கொண்டிருக்கும் பலரும், வேறொரு குடும்பத்தினர் அருகில் வரவும், ‘ஹேய் சச்சு…. டோண்ட் ரன் ஐ ஸே..’ என்று பீட்டருக்குத்தாவுகிறார்கள். தமாஷாக இருக்கும் இந்த ‘மொழி விளையாட்டை’ நான் பல இடங்களில் ரசிக்க ஆரம்பித்தேன்.

  • பசுமைப் பள்ளத்தாக்கில் (சூசைட் பாய்ண்ட்) போகும் வழியிலிருந்த கடையொன்றில் அழகான 3 ஜோடி கம்மல், மற்றும் நான்கு கண்ணாடி கங்காரு பொம்மைகள் வாங்கினோம். மேலே சென்று ஃபோட்டோ எடுக்க வேண்டி, அந்தப் பாக்கெட்டை, ஓரிடத்தில் வைக்க, கண் இமைக்கும் நேரத்தில் ஆஞ்சநேயர் வந்து அள்ளிக் கொண்டு போனார். கம்பித்தடுக்கு வழியே, அந்தப் பாக்கெட் பிரித்து ஒவ்வொன்றாய் அது தூக்கிப் போடுவதைத்தான் காணமுடிந்தது. வந்து அந்தக் கடைக்காரரிடம் சொல்லி, ‘அதே போல இன்னொரு செட் குடுங்க’ என்று கேட்க, அவர் மனசு கேட்காமல் வேறொரு வழியாகச் சென்று, குரங்கார் பிய்த்துப் போட்டிருந்ததை ஆராய்ந்து கம்மல்களையும், ஒரே ஒரு கங்காருக் குட்டிபொம்மையையும் எடுத்துத் தந்தார். மற்ற இரண்டும் உடைந்திருந்த்து. ஒன்று காணவில்லை. இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், எத வாங்கறதா இருந்தாலும், சுற்றிப்பார்த்துவிட்டு, காருக்குப் போகும்போது வாங்கிச்செல்லல் நலம் பயக்கும்!

  • மற்ற கடைகளைவிடவும், தோடு, கம்மல், செய்ன் போன்றவை விற்கும் கடைகளுக்கு நல்ல மவுசு. அதற்கேற்ப நல்ல டிசைன்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. என் சகதர்மிணி, அழகான டிசைனில் கம்மல் சில வாங்கி (வெறும் 10 – 20 ரூபாய் மட்டுமே) தொடர்ச்சியாக மூன்று நாட்களும் ஹாட்ரிக் அடித்து, மூன்று கம்மல்களைத் தொலைத்து – அதுவும் குறிப்பாக வலது கம்மல் மட்டும் - லிம்கா புக் ஆஃப் ரெகார்டில் இடம்பிடித்தார்.

  • வழி சொல்பவர்கள், மிகப்பொறுமையாக சரியாகச் சொல்கின்றனர். அதுவும் ஒரு காவல்துறை நண்பர் சொன்னது சூப்பர். ‘சார்.. இப்படியே போனா என்ன வரும்?’ என்றதற்கு ‘உங்க வீடு வரும்’ என்றார். பிறகு சிரித்தபடி ஒவ்வொரு இடமாகச் சொன்னார். ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், காரில் எட்டிப்பார்த்து எத்தனை பேர் என்ன வயதினர் இருக்கின்றனர் என்பதைக் கணித்து, அந்த வழியாப் போனா கார் ஏர்றது கஷ்டம்சார். ரொம்ப மேடு. இப்படிச் சுத்திப் போங்க’ என்பதுகூட சொல்கின்றனர். செட்டியார் பார்க் போகும் இடத்தில், அவர்கள் சொன்னது கேட்காமல் போய்ப் பார்ப்போமே என்று போய், மேடேற முடியாமல் ரிவர்ஸில் வந்து மீண்டும் செலுத்தவேண்டியதாய்ப் போயிற்று.

  • ‘செட்டியார் பார்க்’ – அங்கிருக்கும் ஒரு செட்டியார் அரசுக்கு இனாமாகக் கொடுத்த இடத்தில் அமைந்துள்ள பார்க். அங்கே பணிபுரியும் நான்கைந்து பேரிடம் விசாரித்ததில், ‘பேர் தெரியலைங்க. செட்டியார்னுதான் சொல்வாங்க’ என்றார்கள். ‘ஓ.. தமிழகமே…. பேரை விடுத்து சாதியை அடையாளமாகச் சொல்கிறார்களே’ என்று நான், லைட்டாக பொங்க ஆரம்பித்த சமயம் அங்கே பணிபுரியும் மற்றொரு பெண்மணி வந்து, ‘முத்தையாங்க அவர் பேர்’ என்றார். எனக்கு கவியரசர் ஞாபகத்துக்கு வந்தார்.

இறுதியாக ஒரு வேண்டுகோள்:

  • இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குச் செல்வதில்லை. அதுபோல, இயற்கை மீது நம்பிக்கை இல்லையேல் இதுபோன்ற இடங்களுக்கு வராதீர்கள். இங்கு வந்து ப்ளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்களை எறிவதற்கு வருவீர்களானால், அதற்குப் பதிலாக உங்கள் வீட்டிலேயே விடுமுறையை, டிவியில் சுறா, ஆழ்வார் பார்த்தபடி கழிக்கவும்.

நன்றி!

Tuesday, May 14, 2013

மெகா ட்வீட் அப் 2013 - கோவை

வரலாறு முக்கியம் என்பதால் இதை வலையில் பதிகிறேன்.

· #TNMegaTweepUp என்னும் தமிழ் ட்விட்டர்களின் வருடாந்திரச் சந்திப்பு நிகழ்வொன்று @ExpertSathya என்னும் சக ட்விட்டரால் ஆரம்பிக்கப்பட்டு, சென்ற வருடம் முதல் - நிகழ்ந்து வருகிறது.

· 2012 -மே 13ல் சென்னையில் நிகழ்ந்தது. அப்போதே, அடுத்த வருடம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சொன்னது போலவே மே 12 2013ல் கோவையில், பேருந்து நிலையம் பின்புறம் உள்ள மங்களா இண்டர்நேஷனலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

. கிட்டத்தட்ட ஒரு கல்யாணநிகழ்வைப் போலவே, பல ஊர்களிலிர்ந்து நண்பர்கள் முதல் தினமே வந்து திருப்பூர் / கோவையில் அறையெடுத்துத் தங்கிக் கலந்து கொண்டதும், வர இயலாதவர்கள் ட்விட்டர் மூலம் இந்தச் சந்திப்பு குறித்து பரவலாகப் பேசிக் கொண்டிருந்ததும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஊக்குவித்தது.

· மாலை 3 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட ட்வீட்-அப் மிகச்சரியாக 3 மணிக்கே ஆரம்பமானது. பெரும்பாலனாவர்கள் இரண்டு மணியிலிருந்தே வரத்தொடங்க, சிலர் ஆறு மணி வரை வந்து விழாவைச் சிறப்பித்தனர்.

· லாஸ் ஏஞ்சலீஸ்-லிருந்து பெங்களூர் வந்திருந்த லாஸேஞ்சலீஸ்ராம் (ட்விட்டரில் - கலக்கல் கபாலி) சக ட்விட்டர் சண்முகம் அவர்களோடு வந்து சிறப்பித்தார்.

· மாணவர் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய கோவை ஜெகதீஷ் (கிறுக்கன் ஜெகு)-ம், 70 வயதைத் தொடும், ராதா இல்லீன்னா சாதாவும் (ட்விட்டர் பேருங்க அது) வந்தது நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

· சென்னை, திண்டுக்கல், மதுரை, சேலம், திருச்சி, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை உட்பட பல ஊர்களிலிருந்தும் லாரி லாரியாக வந்திருந்த ட்வீட்டர்களால் ஹோட்டல் அரங்கமும் நிர்வாகமும் கிடுகிடுத்தது. எப்படி இவ்வளவு கூட்டம் என்று எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 84 பேர் இருந்தார்கள்.


· ‘ஒவ்வொரு ட்வீட் அப்லயும் எதாச்சும் நல்லதைப் பகிர்ந்துக்கணும் பாஸ்’  என்ற எக்ஸ்பர்ட் சத்யாவின் கொள்கைப்படி, இந்த வருடமும் வாழை, யுரேகா ஆகிய இரண்டு NGOக்களின் சேவைகளும், அதற்கு எப்படி பிறர் / ட்விட்டர்கள் உதவ முடியும் என்பதும் பகிரப்பட்டது.  வாழை சார்பாக தீபக்,  முருகானந்தம் ஆகியோரும், யுரேகா சார்பாக AID செல்வாவும் கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.

· இவர்கள், தங்களது குறிக்கோள், செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கொண்டிருக்க, பலரும் அது குறித்து கேள்விகளும், ஆலோசனைகளுமாய் தங்கள் பேச்சுகள் மூலம் பங்கெடுத்தது மனநிறைவாய் இருந்தது.

· லாஸ் ஏஞ்சலீஸ் ராம், தனது சினிமா அனுபவம் , வாத்தியார் சுஜாதாவுடனான தனது நட்பு, மற்றும் சுஜாதாவின் புகழ் பற்றியெல்லாம் உரையாடியது சிறப்பாக அமைந்தது. ‘சுஜாதா ட்விட்டர் உலகில் இல்லாதது எனக்குப் பெரும் வருத்தம்’ என்று அவர் குறிப்பிட்டபோது, 84 பேர்களும் ஆமாம் என்று 168 கைகளை உயர்த்தி ஆமோதித்தார்கள்.

· வாழை அமைப்பினர் கொண்டு வந்த 20 டி-ஷர்ட்கள் ஒன்று 200 ரூ. என்றும், அதில் வரும் பணம், அந்த அமைப்பின் நிதிக்கு உபயோகமாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. எல்லாம் விற்றுத் தீர்ந்ததாக அறிகிறேன்.

· எக்ஸ்பர்ட் சத்யாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ட்விட்கள் அடங்கிய ‘ட்விட்குறள்’  புத்தகம் லாஸ் ஏஞ்சலிஸ் ராம் அவர்களால் வெளியிடப்பட, கிறுக்கன் ஜெகு அவர்கள் பெற்றுக்கொண்டார். கார்க்கி, ராஜன், தோட்டா ஆகியோரின் மதிப்புரையோடு வெளியாகியிருக்கும் அந்தப் புத்தகத்தின் மூலம் வரும் இலாபம் முழுவதும் வாழை அமைப்பினர்க்கு வழங்கப்படுவதாய் சத்யா அறிவித்தார்.

· ரூ. 60 மதிப்புள்ள அந்தப் புத்தகம் 100 ரூ, 200 ரூ என்று கொடுத்து வாங்கினர் சிலர். 500 ரூவாய்க்குக் கூட அந்தப் புத்தகம் வாங்கப்பட்டதாய் அறிகிறேன். நன்றியும் அன்பும். 

- அந்தப் புத்தகம் தேவைப்படுவோர் எக்ஸ்பர்ட் சத்யா – அல்லது கௌதம் (பிரபலம்) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம். (@expertsathya மற்றும் @pirabalam)

· சிறந்த கீச்சுகள் சில ஃப்ரீயாவிடு டேவிட் மூலம் தொகுக்கப்பட்டு, கார்க்கி குரலில் – அவரது கமெண்டுடன் திரையிடப்பட்டது. அரட்டை கேர்ள் சௌம்யா, சிஎஸ்கே ஆகியோரது எழுத்துகள் சிறப்பு கவனத்தைப் பெற்றது.

· சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் ட்விட்டர் ‘பட்டாசு’,  ‘ஃபாத்திமா ஃபாத்திமா’ என்ற போன வருடம் பாடிய அதே பாடலைப் பாடினார். அடுத்தவருடமும் இதே பாடலை, இன்னும் சரியாகப் பாடச்சொல்லும்படி வந்திருந்த ட்விட்டர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

· பிளிறல் பாலா, ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ என்ற பாடலை வாசலைப் பார்த்துக் கொண்டே பாடினார். ஆனால் கடைசி வரை அரட்டை கேர்ளோ, சௌமியோ வரவே இல்லை.

· பிரபலம் என்றால் என்ன, பிரபலங்களிடம் ஏதும் கேள்வி வேண்டுமென்றால் கேளுங்கள் என்று அறிவிக்கப்பட்டபோது, பலரும் பல மாதிரிக் கேள்விகளைக் கேட்டு நிகழ்ச்சியைக் கலகலப்பூட்டினர்.

· குறிப்பாக ராஜனிடம் அவரது சிறை அனுபவங்கள், அப்போதைய அவரது மனநிலை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. மிகவும் தேர்ந்த முறையில், சர்ச்சைக்கிடமின்றி, நண்பர்களுக்கு அதற்கான பதிலைக் கூறினார் ராஜன்.

· போலவே, ட்விட்டரிலிருந்து சினிமாவுக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் கார்க்கி, தன் அடுத்த முயற்சிகள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். கேபிள் சங்கர் இயக்கும் ‘தொட்டால் தொடரும்’ என்று பெயரிடப்பட்ட படத்தில், அவருடன் பணிபுரிவதாகவும், ரைட்டர் பாரா கதையில் வரும் சீரியல் ஒன்றிற்கு வசன வாய்ப்பு வந்திருப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டபோது, அவரவர் வீட்டில் ஒருத்தன் உயர்வது போல ஆர்ப்பரித்து வாழ்த்தினர் வந்திருந்த நண்பர்கள். கூடவே, ட்விட்டர் – ஃபேஸ்புக் போன்றவற்றில் வரும் பல க்ரியேட்டிவிட்டிகள் பல பிரபலங்களால் கவனிக்கப்படுவதையும் கார்க்கி குறிப்பிட்டார்.


· தங்களைக் கவர்ந்த சிறந்த கீச்சுகள் மூலம், நிகழ்ச்சிக்கு வராத பலரையும் அவர்களது கீச்சுகள் மூலம் வருகை புரிய வைத்தனர் வந்திருந்தவர்கள். அதில் அரட்டைகேர்ளின், ‘சரிங்க’, புரட்சிக்கனலின் ‘LogOff’ மற்றும் தேங்காவின் ‘நல்லிரவு’ ஆகியவை பரவலானப் பாராட்டைப் பெற்றன.

· எய்ட் செல்வா, கோவை ஷேக் ஆகியோர் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்காக பலத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

·  சென்றவருடம் ‘தல’ செந்தில்நாதனின் களப்பணி போலவே, இவ்வருட நிகழ்ச்சிக்காக சத்யாவுடன் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புகளை ‘பிரபலம்’ கௌதம் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களின் பதிவு மற்றும் புத்தக விற்பனை ஆகியவற்றை ‘வேதாளம்’  அர்ஜூன்  ஆகியோர் சிறப்பாக செய்தனர். அவர்களுக்கு சத்யா சார்பில் நன்றி நவிலப்பட்டது. 

· இந்நிகழ்ச்சிக்கான முழுச் செலவையும் ஒரு ட்விட்டர் ஏற்றுக் கொண்டார். அவரது ஒரே வேண்டுகோள் அவரது பெயர், ஹேண்டிலைச் சொல்ல வேண்டாம் என்பதே. இது அறிவித்து அவருக்கு நன்றி சொல்லப்பட்டபோது, சில நிமிடங்கள் தொடர்ந்த கைதட்டல். அன்பருக்கு இங்கேயும் எம் நன்றி.

· அடுத்தவருடம் மே மாதம், மதுரையில் ட்வீட் அப் என்று அறிவிக்கப்பட்டபோது, சைல்ட் சின்னா டைமிங்காக, ‘இந்த வருடம் தேங்கா நகரம். அடுத்த வருடம் தூங்கா நகரம்’ என்றார்.

· வந்திருந்த அனைவர்க்கும், டின்னரோடு நிகழ்வு முடிந்தது.

.