Friday, December 30, 2011

காலையில் வாங்கிய ப்ரகாசமான பல்ப்

காலையில் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மகள் வந்தாள்.

“டாடா ஸ்கை ஷோ கேஸ்ல ரா-ஒன் போட்டிருக்காங்க. ஆர்டர் பண்ணீட்டு போங்க. நாங்க பார்க்கணும்”

தெரியாதவர்களுக்கு: டாடா ஸ்கை டிஷ் இணைப்பில், ஷோ கேஸ் என்று புதிய படங்கள் காண்பிப்பார்கள். ஒரு படம் 50ரூ, 75 ரூ என்று நம் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்வார்கள். நாம் பதிவு செய்திருக்கும் அலைபேசியிலிருந்து, அந்த ஷோ கேஸ் திரையில் காண்பிக்கப்படும் குறியீட்டு எண்ணை, அவர்களுக்கு எஸ்ஸெம்மெஸ் அனுப்பினால், அது சேர்ந்த அடுத்த நொடி, நம் தொலைக்காட்சித் திரையில் அந்தப் படம் ஒளிபரப்பாகும். ஒரு நாளைக்கும் மட்டும் தொடர்ந்து ஒளிபரப்பாகும். நமக்கு வசதிப்பட்ட நேரம் பார்த்துக் கொள்ளலாம். என் இணைப்பிற்கு வருடத்திற்கு 12 படங்கள் இலவசம். பெரும்பாலும் இந்திப் படங்கள்தான்.

நான் டாடா ஸ்கையில் அந்த சேனலை ஆன் செய்து, அதில் குறிப்பிட்டிருந்த குறியீட்டு எண்ணை, டாடா ஸ்கைக்கு எஸ்ஸெம்மெஸினேன். அப்படி அனுப்பும்போதே, கொஞ்சம் பெருமையாக “பாரு.. இந்த மெசேஜ் டெலிவரி ஆச்சுங்கறதுக்கு அடையாளமா என் மொபைல்ல டொய்ங் சவுண்ட் வர்றதுக்கு முந்தி, சேனல்ல படம் வரும்பாரு” என்றேன்.

ம்ஹும். என்னமோ வரவில்லை.

வழக்கமாக அடுத்த நொடியே வரும்.. இதென்ன இப்படின்னு ஐந்து, பத்து நிமிடங்களுக்கு காத்திருந்தேன். அலுவலகத்திற்கு வேறு நேரமாகிக் கொண்டிருந்தது.

என் மகள் என்னை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள். ‘என்னமோ சொன்னீங்க?’ என்றது அவள் கண்.

அவ்வளவுதான். நாமதான் ஏற்கனவே இந்த கஸ்டமர் கேர் ஆளுகன்னாலே ஆய் ஊய்னு திட்டுவோமே… இதென்ன இப்படிப் பண்றாங்க’ன்னு எனக்கு கோவம் வேற வந்துச்சு.

அடிச்சேன் டாடா ஸ்கை கஸ்டமர் கேர்-க்கு.

“ஹலோ.. குட் மார்னிங்” – அந்தப்புற அழகி குரல்.

“வாட் குட்மார்னிங்? ஐ’ம் டோட்டலி டிஸ் அப்பாய்ண்ட் வித் யுவர் சர்வீஸ்” – நான். கோவமா இருக்கேனாம்.

“ஸாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ் சார்” அப்படி ஒரு குழைவு குரல்ல. பாவமாத்தான் இருந்துச்சு. என்னன்னே சொல்லாம இப்படி எகிறுனா என்னதான் பண்ணுவாங்க பாவம்.. அதுக்காக சும்மா விடமுடியுமா? கஸ்டமர்!!!

சொன்னேன்: “ஷோ கேஸ்ல ஒரு படம் ஆர்டர் பண்ணினேன். வழக்கமா எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்ச அடுத்த நொடி சேனல்ல படம் வந்துடும். இப்ப ஆர்டர் பண்ணி கால் மணி நேரமாச்சு. இதுவரைக்கும் வர்ல”

மறுபடியும் அந்தப் பொண்ணு மன்னிக்கச் சொன்னாங்க. சில விபரங்கள் வேணும்னாங்க. “யெஸ் டெல் மீ”ன்னேன் கடுமையான குரல்ல. கோவமா இருக்கோம்ல!

“ஆம் ஐ ஸ்பீக்கிங் டு கிருஷ்ணகுமார்?”

“ஆமா”

“யுவர் டாடா ஸ்கை ஐடி ஈஸ் 104142……….?”

“ஆமா”

“யு ஆர் காலிங் ஃப்ரம் யுவர் ரெஜிஸ்டர்ட் மொபைல் நம்பர். ஆம் ஐ ரைட்?”
‘ஆமாம்மா ஆமாம்’னு கத்தினேன். கீழ வந்து பார்த்த ஹவுஸ் ஓவர் “எப்ப வீட்டைக் காலி பண்ணப் போறீங்க’ன்னு கண்லயே கேட்டுட்டுப் போனார்.

அந்தப் பொண்ணு, இந்த விபரமெல்லாம் சொன்னதுக்கு நன்றி சொன்னாங்க. ‘ம்ம்.. சரி சரி.. எனக்கு என்ன நீதி வழங்கப் போறீங்க?’ங்கற பாணில ‘இட்ஸ் ஓகே..”ன்னு முறுக்கீட்டு “மொதல்ல சாதாரண டாடா ஸ்கை வெச்சிருந்தப்ப உடனே படம் வந்துடும். இப்ப டாடா ஸ்கை ப்ளஸ். ஹும்! ஆக்சுவலி இது டாடா ஸ்கை மைனஸ்’ன்னுதான் சொல்லணும்’ன்னேன்.

கலாய்ச்சுட்டேனாம். சொன்னது அந்தப் பொண்ணுக்கு சுருக்னிருக்கும். மறுபடியும் இடைஞ்சலுக்கு வருத்தப்பட்டாங்க. .

சிஸ்டம்ல டீடெய்ல்ஸ் பார்த்திட்டிருந்தாங்கபோல. பார்த்துட்டு கேட்டுச்சு.

“நீங்க ரா-ஒன் படம் ஆர்டர் பண்ணீருக்கீங்க. கரெக்ட்?”

“ஆமாம்”

“உங்க ரெஜிஸ்டர்ட் மொபைல்லேர்ந்து எஸ்ஸெம்மெஸ் அனுப்ச்சிருக்கீங்க.. கரெக்ட்?”

‘உஸ்ஸ்…. முடியலடா’ன்னு நினைச்சுட்டே ஆமாம்னேன்.

“டிவி ஆன்ல இருக்கா சார்?”

“ஆமாம். ஆன்லதான் இருக்கு..”

“ஷோ டைம் என்ன போட்டிருக்கு சார் அந்த ஷோ கேஸ் சேனல்ல”

“எத்தனை கேள்விதான் கேட்பீங்க? இண்டர்வ்யூ பண்றீங்களா? இட்ஸ் டூ மச்’ன்னு கடுமையா சொன்னேன். நாம யாரு! கஸ்டமர். இப்படித்தான் நம்ம உரிமைக்காக போராடணும்.

“சாரி சார். கேன் யூ டெல் மி த ஷோ டைம் விச் ஈஸ் ஷோயிங் இன் யுவர் சேனல்?”ன்னாங்க.

மறுபடி கோவமா சொன்னேன்” “9 மணின்னு போட்டிருக்கு”

“நாவ் வாட் ஈஸ் த டைம்சார்?”

“எட்டேகாலாச்சு. அதுக்கென்ன?”ன்னேன்.

“தட்ஸிட் சார். அவர் ஷோ ஸ்டார்ட்ஸ் அட் 9 ஏ.எம் சார். இன்னும் முக்கால் மணி நேரத்துல படம் வரும் சார்”னு சொல்லீட்டே ‘எனிதிங் கேன் ஐ ஹெல்ப் யூ சார்”ன்னுச்சு.




எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. வழிஞ்சு ஸாரி சொல்லீட்டு ஃபோனை கட் பண்ணீட்டேன்.

அங்க, அந்த கஸ்டமர் கேர் பொண்ணு பக்கத்து சீட்ல இருக்கற ஃப்ரெண்டுகிட்ட சொல்லீட்டிருப்பாங்க:

‘அவ்ளோ தெளிவா சேனல்ல ஷோ ஸ்டார்ட் டைம் 9 மணின்னு போட்டிருக்கோம். அப்றமும் கூப்ட்டு கேட்கறான் கேனைப்பய. இந்த லட்சணத்துல ப்ளஸ், மைனஸுன்னு கலாய்க்க வேற செஞ்சான். இவனுகளையெல்லாம்….”

புறப்படறப்ப பைக் ரிவர்வ்யூ மிர்ரர்ல என்னைப் பார்த்து நானே கேட்டுகிட்டேன்:

‘இந்த அவமானம் உனக்குத் தேவையா?’


.


Wednesday, December 28, 2011

அவியல் 28.12.2011

லகம் அழியாமல் எப்படி சுழல்கிறது? நாட்டில் - பெரும்பாலும் -குறித்த நேரத்தில் மழை பொழிந்து நாடும் நாட்டு மக்களும் எப்படி சுபிட்சமாக இருக்கிறார்கள்? என்னதான் ஒருபுறம் இயற்கை சீற்றங்களைக் காட்டிக் கொண்டிருந்தாலும், பேராபத்துகளேதுமின்றி அதது அதனதன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டுதானே இருக்கிறது.. இதெல்லாம் எப்படி என்பதற்கு நேற்றெனக்கு விடை கிடைத்தது.

அது என்ன என்பதைக் கடைசி பத்தி படித்து அறிந்து, கொல்லவும். (எ.பி.அல்ல)

-----------------

மூணு, நண்பன், ராஜபாட்டை, கழுகுன்னு போனவாரம் பூரா இசை வேட்டைதான். ஆங்.. வேட்டை வேற.. அத விட்டுட்டேன் பாருங்க..இந்த அஞ்சுல மூணு யுவன்.

என்னது…. மூணு அனிருத்-தா? ஹலோ.. அஞ்சு படங்கள்ல மூணு படம் யுவன் இசைன்னு சொல்றேன்.

அதுல ராஜபாட்டை ‘பொடிப்பையன் போலவே’, ‘பனியே பனிப்பூவே’-வை விடவும் ‘வில்லாதி வில்லன்கள்’ செம ரெட்ரோ சாங். அதோட ட்ரம்ஸுக்காக அத கேட்டுட்டே இருந்தேன்.

வேட்டைல ‘வெச்சுக்கவா உன்னை மட்டும்’ ம்யூசிக்ல தொடங்கி, ’ஆறு’ படத்துல வர்ற ‘சோடா பாட்டில் கைல’ பாட்டோட மெட்டுல வர்ற ‘பப்பபப்பா பப்பபா” நல்லாருக்கு. இன்னொரு சுவாரஸ்யம்: இந்தப் படத்துல வர்ற பாட்டோட ஆரம்பமெல்லாமே கவனிச்சீங்களா? தம் தம் தம் / டம்ம டம்ம டம்மா / பப்ப பப்ப பப்ப்பா / தையத் தக்கா தக்கா - ன்னு ஒரே மாதிரி இல்ல?

யுவன் ம்யூசிக்ல வந்த இந்த மூணு படத்துலயும் கழுகுதான் பெஸ்ட். எல்லாமே நல்லா இருக்கு. (அல்லது நல்லா இருக்கற மாதிரி இருக்கு) யுவன் குரல்ல ‘பாதகத்தி கண்ணுபட்டு’ டிபிகல் யுவன் சாங்! ‘ஆத்தாடி மனசுதான்’, இளையராஜா பாடல் மாதிரியான மெலடி. (கார்த்திக் ராஜா குரல்)

3. அனிருத் கொலவெறியோட காணாமப் போற ஆளில்லைன்னு நினைக்கறேன். எல்லா பாட்டுமே நல்லாத்தான் இருக்கு. கம் ஆன் கேர்ள்ஸ், இதழின் ஓரம் எல்லாமே. கொலவெறி நான் கேட்கவே இல்லை. சலிச்சுட்டுது. மோஹித் சௌகான் & அனிருத் சேர்ந்து (யுவன் ஸ்டைல்ல) பாடின போ நீ போ – வாவ் ரகம். நிச்சயமா கேளுங்க.

நண்பன்: ஹாரிஸ் –சங்கர் கூட்டணி எப்பவும் போலவே ஏமாத்தல. அதுவும் அஸ்க லஸ்கா – அஸ்கா! விஜய் ப்ரகாஷ் - சின்மயி!

சின்மயியை விட, விஜய் ப்ரகாஷ் பாடறப்ப அந்த ‘சிந்தா சிந்தா / ப்யாரோ ப்யாரோ-வுல ஒரு துள்ளல் தெறிக்குது பாருங்க.. சூப்பர்!

இந்தப் பாட்டோட வரிகள்... இந்த மாதிரி எழுதறப்பதான் ஒரு கவிஞர் தன்னோட இடத்தை கெட்டியா பிடிச்சுக்கறார். வரிகளை கவனிச்சு, ரசிக்கற என்னை மாதிரி ஆனவங்களுக்கு மதன் கார்க்கியோட வரவு – வரம். சும்மா இல்லாம, பல மொழிகள்ல காதல்ங்கற வார்த்தையை கோர்த்து எழுதிருக்கற இந்தப் பாட்டுல

“முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே..
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்” - அபார கற்பனை! (இப்படிச் சொல்லிக் குடுத்திருந்தா ஜ்யாமெண்ட்ரில ஆஹா ஓஹோன்னு மார்க் வாங்கீருப்பேனே..)

அதே பாட்ல ரெண்டாவது சரணத்துல வர்ற

‘புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி - உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லைப் போலே’ -

வாவ்!

பதினாறு பதினாறா பல அடிகள் தாண்டப்போகுது இந்தக் குட்டி!

----

போன வாரம் ஒரு பிரபலத்தை அழைத்தேன்.

“பிஸிங்களா.. பேசலாமா? ஜி.நாகராஜன் படிச்சிட்டிருக்கேன். உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு”

“இல்ல.. சொல்லு பரிசல். விகடனுக்காக நட்சத்திர எழுத்தாளர் சிறுகதை கேட்டிருக்காங்க. எழுதிட்டிருந்தேன்’ என்றார்.

“ஓ! சூப்பர்ங்க” என்றுவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது இப்படிக் கேட்டார்: “சரி பரிசல்.. நீ எப்ப நட்சத்திர எழுத்தாளரா மாறப்போற”

அன்னா ஹசாரே, ஆஸ்திரேலியா டெஸ்ட், இளையராஜா இசைவிழா என்று அவர் கவனத்தை திசை திருப்பிப் பேசிவிட்டு வைத்துவிட்டேன்.

கிறிஸ்துமஸ் டைம். ஒரு நல்ல நட்சத்திரமாக வாங்கி வீட்டு முன் மாட்டி நட்சத்திர எழுத்தாளராகியே தீருவது என்று முடிவெடுத்திருக்கிறேன்.

--

விஜய் டிவி- நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி- நிகழ்ச்சிக்காக சூர்யா கேட்கும் கேள்விகள் அடடா.. அபாரம். இதுபற்றி ட்விட்டரில் போட்டுக் கிழிக்கப்பட்டது. இப்படிக் கூட கேட்பார்கள் என்று. அவற்றில் நானெழுதிய சில கேள்விகள்:

சமீபத்தில் ஒன்-டேவில் இரட்டை சதம் அடித்த வீரர்
1) விஸ்வநாதன் ஆன்ந்த் 2) மைக் டைசன் 3) சேவக் 4) பிடிஉஷா

ஜனகனமண என்பது நம்
1) தேசியப் பறவை 2) தேசியக்கொடி 3) தேசிய விலங்கு 4) தேசிய கீதம்

சமீபத்தில் குழந்தை பெற்றுக் கொண்ட உலக அழகி
1) கொல்லங்குடி கருப்பாயி 2) ஐஸ்வர்யா ராய் 3) சௌகார் ஜானகி 4) பரவை முனியம்மா


சூப்பர் ஸ்டார் ரஜினியின் இயற்பெயர்
1) சாந்தி 2) பூந்தி 3) காந்தி 4) சிவாஜிராவ் கெய்க்வாட்

இரட்டை ஆஸ்கார் வாங்கிய தமிழன் / இசையமைப்பாளர் யார்?
1) கே.ஆர்.விஜயா 2) ஏ.ஆர்.ரஹ்மான் 3)எம்.ஆர்.ராதா 4) ஜி.ஆர்.தங்கமாளிகை

தமிழக ஆட்சி மாற்றத்தில் தன்னை அணில் என்று விளித்துக் கொண்ட நடிகர்
1) என்னத்தே கண்ணையா 2) டாம்க்ரூஸ் 3) ஜாக்கிஜான் 4) விஜய்

ஜெயலலிதாவால் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழி பெயர்
1) சசி 2) பசி 3) குஷி 4) மஷி

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த படம்
1) பாட்ஷா 2) முத்து 3) படையப்பா 4) தசாவதாரம்

--------------------


நேற்று மதியம் ஒருவர் அழைத்தார்.

“பரிசல்.. ஏன் இப்பல்லாம் எழுதறதே இல்லை?”

வழக்கம் போல நான் அசடு வழிந்ததை, அந்த அழைப்பு வீடியோ காலிங் அல்லாததால் அவரால் பார்க்க முடியவில்லை.

“இது ரொம்ப தப்பு பரிசல். நீங்கள்லாம் எழுதாம இருக்கறது ரொம்பவே தப்பு. ஒரு கட்டத்துக்கு மேல நிறுத்திடறீங்க. நானும் உங்க பழைய போஸ்ட் ஒவ்வொண்ணா எத்தனை நாள்தான் படிக்கறது?” என்று கேட்டார். பாவமாகத்தான் இருந்தது. என்னாலேயே அதில் பலவற்றைப் படிக்க முடிவதில்லை.

“இல்லைங்க.. வேலை..” என்று ஆரம்பிக்கப் போனவனை ஒரு அதட்டலாக இடைமறித்தார். “அதெல்லாம் சோம்பேறிக சொல்றது பரிசல்” (அப்பறம் நான் யாரு? ரொம்பச் சுறுசுறுப்பானவனா? அதுசரி!) “எஸ்.ரா, ஜெ.மோ இவங்களையெல்லாம் எடுத்துக்கோங்க. அவங்களுக்கு இல்லாத வேலைப்பளுவா உங்களுக்கு இருந்துடப் போகுது? அவங்கள்லாம் எவ்ளோ படிக்கறாங்க.. எவ்ளோ உலகப்படங்கள் பார்க்கறாங்க.. அவங்க எழுதறதில்லையா?”

“அவங்க கூட என்னை ஒப்பிடறதா..” என்று கேட்கவும் மறுபடி பொங்கினார்.

“அப்படி ஒரு நெனைப்பு வேறயா? அவ்ளோ பிஸி ஷெட்யூல்ஸ் இருக்கறவங்களே எழுதறப்ப உங்களுக்கென்ன கேடுன்னு சொல்ல வந்தேன்” என்றவர் “கண்டிப்பா வாரம் ரெண்டு மூணாவது எழுதுங்க பரிசல்.. ஆமா சொல்லீட்டேன்” என்று என் பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்தார்.

நான் எழுதணும்னு ஒரு ஜீவன் இப்படிக் கிடந்து துடிக்கும்போது, உலகம் சுழலாம என்ன பண்ணும்!


---

Tuesday, December 20, 2011

சவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா

ரு வாரம் முன்பு அழைத்தார் ஒரு நண்பர்:

“பரிசல்.. உங்க ப்ளாக் ஐடி என்ன?”

“parisalkaaran.com” என்றேன்.

“அது வெறும் சவால் போட்டிக்குன்னு தாரை வார்த்துட்டீங்கன்னு நெனைக்கறேன். எந்த வெப்ல எழுதறீங்க இப்ப”

என் வலைப்பக்கத்தைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. ஒரே சவால் போட்டி அறிவிப்பு, விளக்கம், முடிவுகள் என்று.. அந்த வகையில் இன்றைக்கும் அதேதான். :)

18.12.2011 ஞாயிறு அன்று சென்னை டிஸ்கவரி புக் பேலசில் சவால் சிறுகதைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா யுடான்ஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்ற வருடம் போலவே கூரியரில் அனுப்ப உத்தேசித்திருந்த வேளையில் யுடான்ஸ் அதிபர்கள் கேபிள் சங்கரும், ஜோசப் பால்ராஜும் இதை ஒரு விழா போல ஏற்பாடு செய்து அளிக்கலாம் என்று முன்வந்தனர். அதன்படி சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் எளிதே நடத்த திட்டமிட்டிருந்தோம்.

விழாவுக்கு இயக்குனர்கள் நவீன், பத்ரி ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து அசத்தினார் கேபிள். அறுபதுக்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தனர்.

இயக்குனர் பத்ரி பதிவர்களின் விமர்சனங்கள் – கதைகள் திரைத்துறையால் கவனிக்கப்படுவதாகச் சொன்னார். இயக்குனர் நவீன், தான் நிகழ்ச்சி நடந்த டிஸ்கவரி புக் பேலஸை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை தன் பேச்சில் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, அவர் அடுத்த படத்தில் பதிவுலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆறு பெண் கவிதாயினிகளுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைத் தருவதாய் சொன்னபோது அரங்கம் கைதட்டல்களால் நிறைந்தது.

இரண்டு வருடங்களிலும் சவால் சிறுகதைப் போட்டிக்கு நடுவராய் இருந்த அப்துல்லா, போட்டி மற்றும் சிறுகதைகளைப் பற்றி சிற்றுரை ஆற்றினார்.

விழாவில் என்னால் மறக்க முடியாத இரண்டு அம்சங்கள். நான் மிகவும் மதிக்கும் ரமேஷ் வைத்யா, ராஜசுந்தர்ராஜன் இருவரின் வருகையும் வாழ்த்துகளும்.

ரமேஷ் வைத்யா நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒருமணி நேரம் முன்பே வந்திருந்து, இறுதிவரை அமர்ந்து சிறப்பித்தார். பதிவர்கள் திடீரென ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர்கள் / எழுத்தாளர்களை எல்லாம் திரும்பிப் பார்க்க வைத்ததை ஆதாரத்தோடு சொன்னார். முடிவில் ‘இந்தப் போட்டியை நடத்திய என் தம்பிகளுக்கு ஆசிகள்’ என்றது நெகிழ்ச்சி.

அடுத்தவர் எழுத்தாளர் ராஜசுந்தர்ராஜன். நான் தற்போது படித்துக்கொண்டிருக்கும் நாடோடித்தடம் (தமிழினி வெளியீடு) புத்தகத்தின் ஆசிரியர். படிக்க ஆரம்பித்த்தில் இருந்து பலபேரிடம் அந்தப் புத்தக்கத்தில் அவர் பயன்படுத்தியுள்ள தமிழ் குறித்துப் பேசிவருகிறேன். அத்தனை தமிழ் வார்த்தைகள். சென்னையில் அவரை சந்திக்க முடியுமா என்றெல்லாம் கேட்டிருந்தேன். அவர் நிகழ்ச்சிக்கு வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் நிகழ்ச்சியை வாழ்த்தியும், எழுதுவது குறித்தும் ஓரிரு வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியபோது ‘நான் எழுதிய எல்லா வார்த்தைகளும் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன’ என்றார். இருந்தாலும் அவற்றைப் பொருந்தப் பல இடங்களில் பயன்படுத்தியதொரு புத்தகத்தைப் படித்த மகிழ்வில் அவருக்கு நன்றி சொன்னேன்.

டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன் அவர்களுக்கு ஸ்பெஷலாக நன்றிகளைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இடம் தந்ததோடு, வெற்றியாளர்களுக்கு ரூ.1220 மதிப்பிலான புத்தகங்களை அவர் சார்பில் பரிசாக அளித்தார். (அந்த சுக்குகாபி அருமை நண்பரே!)

இறுதியில் நானும் ஆதியும் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுபெற்றது.


ரூ.3000 மதிப்பிலான புத்தகங்கள் என்று ஆரம்பித்து நடுவரான அனுஜன்யா, அப்துல்லா ஆகிய பலரின் பங்களிப்பின் காரணமாக ரூ.7000 மதிப்பிலான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் பெற்றுக் கொண்டவர்களுக்கு போக, மீதிப் பேருக்கு கூரியரில் அனுப்பப்பட்டது. விழாவும், போட்டியும் சிறப்புற நடைபெற நடுவர்கள், யுடான்ஸ், டிஸ்கவரி, இயக்குனர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்.


விழா குறித்த பதிவு, படங்களுடன் ஆதியில் வலையில் பதிவேற்றப்படும். காத்திருங்கள்.

.

Tuesday, December 13, 2011

சவால் சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு விழா

ர் ஆர்வத்தில் ஆரம்பித்த சவால் சிறுகதைப் போட்டி, இரண்டாம் வருடமாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சென்ற வருடம் போலவே பார்சலில் அவரவர் முகவரிக்கு அனுப்பலாம் என்று உத்தேசித்திருந்த போது, யுடான்ஸ் -லிருந்து கேபிள் சங்கர் அழைத்து ஒரு விழாவாக ஏற்பாடு செய்து அதில் பரிசளிக்கலாம் என்று சொன்னார்.

அதன்படி, வருகிற டிசம்பர் 18ம்தேதி (ஞாயிறு) மாலை ஆறுமணிக்கு சென்னை டிஸ்கவரி புக் பேலசில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள வேண்டுமாய் சிறுகதைப் போட்டி குழுவினர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.


இந்த அழைப்பை விடுக்கும் நேரத்தில், நடுவர்களாகப் பங்காற்றிய ஸ்ரீதர் நாராயணன் - அனுஜன்யா - எம்.எம்.அப்துல்லா மூன்று பேருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருப்பது சாதாரண விஷயமல்ல. இவர்கள் முடிவைச் சொல்வதற்கு நான்கு நாட்கள் முன்னிருந்து எடுத்துக் கொண்ட சிரத்தையான விஷயங்கள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் எல்லாமே எனக்கு ஒரு பாடமாக இருந்தன. முடிவைப் பொறுத்தவரை நானோ - ஆதியோ தலையிடவில்லை. ஆனால் ஒரு பார்வையாளர்களாக இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வை வியந்து கொண்டே இருந்தோம். மீண்டும் ஒரு ஸ்பெஷல் நன்றியை அவர்களுக்கு பார்சல் செய்து கொள்கிறேன்!


சவால் சிறுகதைப் போட்டி 2011 - பரிசளிப்பு விழா
நாள்: 18.12.2011
நேரம்: மாலை 6 மணி. (ஆனா அஞ்சரைக்கெல்லாம் வந்துடுங்கப்பா)
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்


விழாவில் கலந்து கொண்டு ஊக்குவிக்க பதிவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு:

ஆதி: 97890 66498
கேபிள் சங்கர்:98403 32666


.

Tuesday, November 15, 2011

சவால் சிறுகதைப் போட்டி 2011 - முடிவுகள்

பரிசல்+ஆதி, மற்றும் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கிய ‘சவால் சிறுகதைப்போட்டி –2011’க்கான முடிவுகள்.

அன்பான போட்டியாளர்கள் மற்றும் இணைய நண்பர்களே,

“இப்பதான் விஷ்ணு கிட்ட இருந்து போன் வந்தது, ஆனால் பேசினது எஸ்.பி.கோகுல். நான் என்னோட ரிவால்வர பேன்ட் பாக்கெட்ல செருகினேன். 'டிஎஸ்பி அனுஜன்யா சாருக்கு' என்று எழுதிய பார்சல் இப்போதுதான் என் டேபிளுக்கு வந்தது. இன்னும் அரை மணி நேரத்துக்குள் முழுத் தகவலும் வரும். தூக்கிக்கொண்டு நேரே ஆப்பிரிக்காவில் போய் செட்டிலாகிவிட வேண்டியதுதான். அத்தனை வில்லன்களையும் பிடித்து புழல் சிறையில் அடைத்துவிட்டு நிம்மதியாக சேரில் அமர்ந்தேன். ’இன்ஸ்பெக்டர் அப்துல்லா இலங்கை போயிருக்கிறார், வருவதற்குள் நாமே கொலையாளியைப் பிடித்துவிடமுடியுமா?’ என்று கேட்டார் சிறப்புப்படை கமாண்டோ ஸ்ரீதர் நாராயணன். யோசனையோடு கைக்குட்டையில் நெற்றி வியர்வையை ஒற்றி எடுத்து, அலை பேசியையும் ஒற்றினேன்”

சமீபத்தில் ஒருநாள் அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்எம். அப்துல்லா ஆகியோருடன் நாங்கள் போட்டி முடிவுகள் குறித்த ஒரு கான்ஃபரன்ஸில் இருந்த போது அவர்கள் மூவரும் இப்படி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறிக்கொண்டிருந்ததுதான் மேலே நீங்கள் காண்பது. இதிலிருந்தே தெரிந்துகொண்டிருக்கலாம்.. ஆம்! இவர்கள்தான் நமது கிரைம் கதைகளில் மூழ்கி இந்த நிலைக்குப் போன, நம்முடைய இந்த ஆண்டு சவால் சிறுகதைப் போட்டியில் வெற்றிக்கதைகளை தேர்ந்தெடுக்கும் பணியேற்று நம்மைப் பெருமை செய்த நடுவர்கள் என்று.

அனுஜன்யாவிடம் விபரம் சொல்லி பொறுப்பேற்கச் சொன்னதுமே, பின்னணியிலிருக்கும் பெண்டு நிமிர்க்கும் வேலையை எப்படி கண்டுகொண்டாரோ தெரியவில்லை, ‘நா ரொம்ப பிஸி’ என்று தப்பியோட முயன்றார். பின்னர் நம் ‘பதிவர்களால், பதிவர்களுக்காக..’ ஸ்லோகத்தை லைட்டாக உல்டா செய்து, ’இளைஞர்களால், இளைஞர்களுக்காக நடத்தப்படும் போட்டியில் ஓர் இளைஞர் நடுவர் என்றால்தானே சிறப்பு’ என்று கூறி அவரை அரைமயக்கத்தில் ஆழ்த்தி சம்மதிக்க வைத்தோம்.

சென்ற ஆண்டு சவால் போட்டியில் கலந்துகொண்டு கலக்கல் கதை எழுதி, முதல் பரிசை வென்றவர்களுள் ஒருவரான ஸ்ரீதர் நாராயணனைக் கேட்டபோது டக்கென ஒப்புக்கொண்டார். பாவம் அவருக்கு அவ்வளவு விவரம் பத்தவில்லை அப்போது. பின்னாடி அவர் புலம்பியதை ஒரு தனி தொடராகவே எழுதலாம். சென்ற ஆண்டின் நடுவர்களில் ஒருவராக இருந்தும், மீண்டும் களம் காணும் துணிச்சல் ஒருவருக்கு இருக்குமானால் அது அப்துல்லாவிற்கு மட்டும்தான் இருக்கும் என்று சொல்லிவிடலாம்.

நடுவர்களின் திறனையும், கதைகள் மீதான அவர்களின் ஆர்வத்தையும் நாங்கள் சொல்வதெற்கெல்லாம் அவசியமில்லை என்பதை நண்பர்கள் நீங்கள் அறிவீர்கள். சவால் மற்றும் விதிமுறைகளோடு கூடிய போட்டி குறித்த முதல் அறிவிப்பை இங்கே காணலாம். துவக்கத்தில் ஒன்றிரண்டு என மெதுவாக வர ஆரம்பித்த கதைகள் பிற்பகுதியில் வந்து குவியத்தொடங்கின.

ஆம், சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஏராளமானோர் (78 பேர்) போட்டியில் கலந்துகொண்டு எங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த போட்டியாளர்களின் அன்புக்கும், இதன் பின் நின்ற நண்பர்களுக்கும், போட்டியை ஸ்பான்ஸர் செய்து நடத்தித்தந்த ’யுடான்ஸ்’ திரட்டிக்கும், இணைய வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

கீழே நடுவர்களின் மடல்..

-அன்புடன்

ஆதிமூலகிருஷ்ணன், பரிசல் கிருஷ்ணா மற்றும் யுடான்ஸ் குழு.

*

அன்பு நண்பர்களே,

பல்வேறு காரணிகளை புனைந்துகொண்டு அதன் கீழ், சற்று சிரமத்துடனே கதைகளைத் தேர்வுசெய்திருக்கிறோம். போட்டி குறித்தும், தேர்வு செய்தமை பற்றியும், வெற்றிபெற்ற கதைகள் பற்றியும், அவற்றின் ’விதிமுறைகளுடன் 100% பொருந்தாத தன்மை’ பற்றியும், அடைந்த குழப்பங்கள் பற்றியும் நிறைய எழுதலாம் என்று தோன்றுகிறது. இனியும் பில்டப் செய்துகொண்டிருக்காமல் நேரடியாக ரிஸல்டுக்குப் போய்விடுவது நல்லது என்பதையும் உணர்கிறோம். பரிசுகளுக்கான இடங்களுக்கு பலத்த போட்டியுடன் ஏறத்தாழ ஒரே மதிப்பெண்களுடன் சில கதைகள் இருந்தமையால் முதல் மூன்று இடங்களை இரண்டிரண்டு கதைகள் பகிர்ந்துகொள்கின்றன.

முதல் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சிலை ஆட்டம் -ஆர்விஎஸ்
http://www.rvsm.in/2011/10/2011.html


விண்டேஜ் -பினாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com/2011/10/vintage-2011.html

இரண்டாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சட்டென நனைந்தது ரத்தம் -ஜேகே
http://orupadalayinkathai.blogspot.com/2011/10/2011.html


கனவில் எழுதப்படும் கதை -நந்தாகுமாரன்
http://nundhaa.blogspot.com/2011/10/2011.html


மூன்றாம் இடத்தைப் பெறும் 2 கதைகள் :

சவால் சிறுகதை -இளா
http://vivasaayi.blogspot.com/2011/10/2011.html


கோவை ப்ரீத்தியின் கொலைவழக்கு -சி.பி.செந்தில்குமார்
http://adrasaka.blogspot.com/2011/10/kovai-preethi-murder-case.html


--- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ---- --- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ---- ---- ----- ---- ---- ---- ---- ---- ----

றுதிச் சுற்றுக்கு வந்த 15 கதைகளில் மற்ற 9 கதைகள் : இவையும் அறிவிக்கப்படாத ஆறுதல் பரிசுகளைப் பெற இருக்கின்றன.

நகல் -கோமாளி செல்வா
http://koomaali.blogspot.com/2011/10/2011.html


போர்க்களத்தில் சாய்ந்தால் கூட -சன்
http://writersun.blogspot.com/2011/10/2011.html


கீழே உள்ள குறிப்புகளையும் படிக்கவும் -சரவணவடிவேல்.வே
http://saravanaidea.blogspot.com/2011/10/2011.html


உதயசூரியன் -கார்த்திக் பாலா
http://kanakkadalan.blogspot.com/2011/10/2011.html


அர்த்தமுள்ள குறியீடு -ஸ்ரீ மாதவன்
http://madhavan73.blogspot.com/2011/10/2011_27.html


ரங்கு குரங்கு ஆன கதை -வெண்புரவி
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html


பீமனின் பராக்ரமம் -இராஜராஜேஸ்வரி
http://jaghamani.blogspot.com/2011/10/2011.html


குறிப்பறிதல் -நவநீதன்
http://navaneethankavithaigal.blogspot.com/2011/10/2011.html


மின்சார பம்ப் தொழில்நுட்பமும், செயல்பாடும் -சன்
http://writersun.blogspot.com/2011/10/2011_31.html


இவை தவிரவும் போட்டியில் கலந்து கொண்ட பலரும் மிகுந்த ஆர்வத்துடன் புதுமையாகவும், சுவாரசியமாகவும், நிறைவாகவும் கதை சொல்லியிருந்தார்கள். வேறு பல காரணிகளில் சிறப்பாக விளங்கிய கதைகளும் அனேகம் இருந்தன. அவற்றில் மனோ எழுதிய ’நீதானே என் பொன்வசந்தம்..’, அபிமன்யு எழுதிய ’அலைபேசி’, கணேஷின் ‘அறியா உலகம்’, பார்வையாளன் எழுதிய ‘பாப்பா போட்ட தாப்பா’ போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். இவை நூலிழையில் பரிசுகளைத் தவறவிடுகின்றன.

வெற்றிபெற்றோருக்கும், கலந்துகொண்டோருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துவதற்கு வெற்றியை விடவும் பங்கேற்பு என்பதே சிறந்த காரணி என்பதை அறிவீர்கள். இப்படியொரு நல்வாய்ப்பினை நல்கிய ஆதி, பரிசல் ஆகியோருக்கு நன்றிகளையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன் -

அனுஜன்யா, ஸ்ரீதர் நாராயணன், எம்.எம்.அப்துல்லா.

*

போட்டிக்களத்திலிருந்த மொத்தக் கதைகளின் வரிசையையும் இந்த இணைப்புகளில் நீங்கள் காணலாம். இணைப்பு 1, இணைப்பு 2. களத்திலிருந்தவை மொத்தம் 78 கதைகளாகும்.

இன்று சுடுவது நிச்சயம் –என்றொரு கதையை வேங்கட ஸ்ரீநிவாசன் என்பவர் எழுதியிருக்கிறார். போட்டிக்கான இறுதிநாளைக் கடந்து அனுப்பப்பட்டதால் இதை போட்டிக்கு ஏற்கமுடியவில்லை. போட்டிக்கல்ல என்று குறிப்பிட்டே ஒரு கதையும் தாமதமாக எழுதப்பட்டிருந்தது. நீச்சல்காரன் என்பவர் எழுதிய கஞ்சத்தின் தலைவா! என்பதே அது. ஆகவே அதுவும் போட்டியில் இல்லை. முடிவுகள் வெளியாகுமுன்பே ஒரு ஆர்வத்தில் வெளியான விமர்சனங்களை கொண்டு கணிக்கப்பட்ட ஒரு பதிவு பார்வையாளனால் எழுதப்பட்டிருந்தது மற்றொரு சுவாரசியம்.

போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டு சிறப்பித்த அத்தனை பேருக்கும், பின்னணியில் இருந்த நண்பர்களுக்கும், கடினப் பணியை மேற்கொண்ட நடுவர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். பரிசு விபரங்களை விரைவில் இன்னொரு பதிவில் காணலாம். பரிசு பெற்றவர்களுக்கு புத்தகங்கள் இல்லம் தேடி வரும். அவர்கள் தயவுசெய்து தங்கள் இந்திய முகவரிகளை thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

-பரிசல்காரன், ஆதிமூலகிருஷ்ணன்.


.

சவால் போட்டிக் கதைகள் விமர்சனம்: பகுதி: 2

இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட விமர்சனங்களுக்கு..

கீழே உள்ள தளத்திற்குச் செல்லவும்.

http://www.thaamiraa.com/2011/11/2.html


போட்டி முடிவுகள் அறிவித்தபடி இன்று இரவுக்குள் வெளியாகும்.

அட்வான்ஸ் வாழ்த்துகள்!


.

Sunday, November 13, 2011

சவால் போட்டிக் கதைகள் - விமர்சனம்: பகுதி-1

ன்பு தோழமைகளுக்கு...

சவால் சிறுகதைப் போட்டிக் கதைகளின் முடிவை அறிவிக்க வேண்டிய தேதி நெருங்கி விட்டது. அதன் முதற்கட்டமாக சென்ற வருடம் போலவே, விமர்சனங்களின் முதல் பகுதியை கீழே உள்ள இணைப்பைப் க்ளிக்கிப் படியுங்கள்.



இவை இந்தக் குறிப்பிட்ட படைப்பின் விமர்சனமே அன்றி, உங்கள் ஒட்டுமொத்த திறமைக்கான விமர்சனம் அல்ல. ஆரோக்யமான முறையில் இவற்றை அணுகி, தொடர்ந்து பயணிக்க சிறுகதைப் போட்டிக் குழு வாழ்த்துகிறது.


நன்றி.


.

Tuesday, November 1, 2011

சவால் சிறுகதைப் போட்டி - மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்..!

'என்னப்பா.. எவ்ளோ சிக்கலான கான்செப்ட் இது? இந்த கான்செப்டுக்கு 10 கதைகள் வந்தாலே உங்கள் முயற்சி வெற்றின்னு நினைச்சுக்கோங்க..’

- சவால் சிறுகதைப் போட்டி அறிவித்த உடனே எனக்கும் ஆதிக்கும் அடுத்தடுத்து வந்த அலைபேசி அழைப்புகள் இந்தச் செய்தியைத்தான் தந்தன.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நல்ல இலக்கியத்தரமான சிறுகதைகளை கொண்டுவரவேண்டும், தமிழுக்கு இயன்ற தொண்டாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல. அதுபோன்ற விஷயங்களை முன்னெடுத்துச்செல்ல வேண்டிய பொறுபபை எங்களை விட மூத்தவர்களுக்கும், இணைய, அச்சு இதழ்களுக்கும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். தற்சமயம் ‘வம்சி’ நடத்தும் சிறுகதைப்போட்டி அப்படியொரு அழகிய உதாரணமாகும். (அந்த சிறுகதைப்போட்டிக்கான இறுதிநாள் 02.11.11, ஆர்வமிருப்பவர்கள் விரைந்து கதைகளை அனுப்புங்கள். விபரங்கள் இங்கே).

எங்களைப் பொறுத்தவரை அதைப்போன்ற சீரிய விஷயங்களில் நாங்கள் இன்னும் மாணவர்களே என்று கருதுகிறோம். ஆகவே நாங்கள் அது போன்ற ஆசையில் இந்த சிறுகதைப்போட்டியினை நடத்தவில்லை.

இதை ஒரு சுவாரசியமான விளையாட்டு என்ற வகையில் கொள்ளவேண்டும். மேலும் சவால்களுக்கு உட்பட்டு வித்தியாசமான கதைகளைத் தரவேண்டியதிருப்பதும், புதியவர்களை எழுத ஊக்குவிக்கும் ஒரு காரணிதான் அல்லவா? புதிய வலைப்பூக்களைத் துவக்கிக்கொண்டு சென்ற முறை பல இணைய வாசகர்கள் கதையெழுத முன்வந்தனர். இந்த முறையும் அதே நல்ல விஷயத்தை நாம் காண்கிறோம். எப்படி எழுதத் துவங்குவது என்ற தயக்கத்தில் இருப்பவர்களுக்கு இது எளிமையாக இருக்கலாம். அவ்வளவே!

இருப்பினும் மேற்சொன்ன தொலைபேசி அழைப்புகள் எங்களைப் பயமுறுத்திக்கொண்டிருந்தன. ஆனால், எங்களை ஏமாற்றவில்லை நீங்கள்..

78 கதைகள் போட்டிக்கு வந்து குவிந்துள்ளன!

நடுவர்களும் ‘அட! சிக்கலான சவால் என்பதால் குறைந்த அளவே கதைகள் வரும்.. எங்களுக்கும் வேலை மிச்சம் என்றிருந்தோம். இத்தனைக் கதைகளா?’ என்று சந்தோஷப் பட்டனர். ஆம் சென்ற ஆண்டை விட சிக்கலான சவால் எனினும் சென்ற ஆண்டைவிட அதிக ஆதரவையே இப்போதும் தந்திருக்கிறீர்கள்.

ஆகவே நண்பர்களே... நடுவர்குழு கதைகளை அலசிக் கொண்டிருக்கிறது. முடிவுகள் இம்மாதம் 15 அன்று வெளியாகும்.

கலந்து கொண்டு சிறப்பித்த, ஆதரவு தந்த, பின்னின்ற ஒவ்வொருவருக்கும் மற்றும் போட்டியை ஸ்பான்ஸர் செய்த யுடான்ஸ் திரட்டிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

கதைகள் அனைத்தும் யுடான்ஸ் திரட்டியில் ஒருக்கமைக்கப்பட்டுள்ளன. அவை இங்கே காணக்கிடைக்கும். அனைவரும் சென்று கதைகளை வாசித்து எழுதியவர்களை பின்னூட்டங்களில் ஊக்குவிக்குமாறும், பிடித்த கதைகளுக்கு யுடான்ஸ் திரட்டியில் வாக்களிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் வாக்குகளும் வெற்றிக்கான 10 சதவீத மதிப்பை வழங்க இருக்கின்றன என்பதை மறவாதீர்கள். நவ.12ம் தேதி வரை பெறப்படும் வாக்குகள் கணக்கில் கொள்ளப்படும்.

78 கதைகளின் தொகுப்பையும் ஆதியின் தளத்திலிருந்தும் வாசிக்கலாம்.

குறிப்பு: உங்களுடைய கதை விடுபட்டிருந்தால் எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். kbkk007@gmail.com & thaamiraa@gmail.com

மகிழ்ச்சியோடு வாழ்த்துகளும்.... நெகிழ்ச்சியோடு நன்றிகளும்!

.

Friday, October 28, 2011

சவால் சிறுகதை - நீங்க எழுதிட்டீங்களா?

வால் சிறுகதைப் போட்டி - 2011 கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் திங்கள் (அக்.31) இரவு 12 மணி.

கடினமான சவால், குறைந்த நாட்கள் என இருப்பினும் ஆர்வத்தோடு கலந்து கொண்டவர்களின் 40க்கும் மேற்பட்ட கதைகள் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


போட்டி குறித்த பதிவுகள்:



சவாலில் கலந்து கொண்ட கதைகளின் தொகுப்புக்கு:



நீங்களும் கலந்து கொள்ளுங்கள். சவாலில் வெல்லுங்கள்!

.

Monday, October 10, 2011

சவால் சிறுகதைப் போட்டி - ஒரு விளக்கம்

ன்புக்குரிய இணைய நண்பர்களே..

சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ‘சவால் சிறுகதைப்போட்டிக்கான சிறுகதைகள் வரத்துவங்கியுள்ளன. யுடான்ஸ் திரட்டியின் இந்தப் பக்கத்தில் கோர்க்கப்பட்டுள்ள கதைகளை ஒரே இடத்தில் வாசகர்கள் காணலாம். மகிழ்வாக உணரும் இந்தத் தருணத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

மெயிலில் சில நண்பர்கள் போட்டிக்கான சவால் குறித்த சில சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். போட்டிக்கான சவாலாக கீழ்க்கண்ட படம் தரப்பட்டுள்ளதை அறிவீர்கள்.


போட்டிக்கான அறிவிப்புகள் அனைத்திலும்,



"இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.” - என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மெயிலில் வரும் நண்பர்கள், அதில் உள்ள துண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகள் மட்டும் கதையில் வந்தால் போதுமா என்று கேட்கிறார்கள். இதையே போட்டிக்கு வந்த சில கதைகளிலும் பார்க்கமுடிகிறது.

ஃபோட்டோவில் உள்ள நிகழ்வு - ஒரு செல்போனையும், மேஜையில் கிடக்கும் இரண்டு குறிப்புகள் பிரிண்ட் செய்யப்பட்ட துண்டுத்தாள்களையும் ஒரு நபர் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர் அவற்றைக் கவனிக்கும் வேளையில் அவரது ஃபோனில் விஷ்ணு - இன்ஃபார்மர் என்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது. இந்த நிகழ்வு கதையில் வரவேண்டும் என்பதே சவால். இதை எந்த அளவுக்கு கதையோடு மிகச்சரியாக பொருத்தமுடியும் என்பது உங்களின் திறமை.



துண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் பயன்படுத்தி எழுதப்பட்ட கதைகள் போட்டியிலிருந்து நீக்கப்படமாட்டாது. சவாலின் பொருத்தம், புதுமை, கதை நடை, மொழி, சுவாரசியம் என்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் நடுவர்கள் கதைகளை மதிப்பிட இருக்கிறார்கள். ஆகவே ’சவாலின் பொருத்தம்’ என்ற ஒரு வகையில் உங்கள் கதைகளுக்குத் தரப்படும் மதிப்பு வித்தியாசப்படலாம். அவ்வளவே.!

ஆயினும் இந்தப் புகைப்படத்துக்கு துளியளவும் சம்பந்தம் இல்லாத கதைகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.

சென்ற ஆண்டு போட்டியில் தரப்பட்ட முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் தரப்பட்ட சவால் குறிப்புகளை, துவக்கத்தில் ‘மிகக் கடினமானவை’ என்று எண்ணினோம். ஆனால் அதைப் பயன்படுத்தி எத்தனை விதமான கதைக்களன்களில் நண்பர்கள் கலக்கினார்கள் என்பது ஆச்சரியம். போட்டிக்கு வந்த கதைகளின் எண்ணிக்கை 84. அதனால் ஏற்பட்ட உந்துதலே இந்த வித்தியாசமான சவாலைத் தரக் காரணமாக அமைந்தது. நண்பர் ஒருவருடன் பேசிவிட்டு ‘இப்படியான சந்தேகங்கள் எழுகின்றன, சவால் குறித்து என்ன எண்ணுகிறீர்கள்’ என்று கேட்டபோது சிரித்துவிட்டு, ‘மேலோட்டமாக பார்த்தால் சவால் கடினமானதாகவும், ஒரே மாதிரியான தளத்தில் எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தையும் தருவது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல..’ என்று எழுத வாய்ப்பிருக்கக்கூடிய 5-6 தளங்களை அந்த நிமிடத்திலேயே அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது. அதில் ஒரு நகைச்சுவைத் தளமும் இருந்தது இன்னும் சுவாரசியம். பேசும்போது டக்கென அவர் ‘அந்த ஃபோனை வெச்சுட்டிருக்கறது விஷ்ணு. அவர் யாருக்கோ அனுப்ப ரெண்டு துண்டுச் சீட்டுகளை ரெடி செய்து கொண்டிருக்கும்போது அவருக்கே, அவரோட தொலைஞ்சு போன ஃபோன்ல இருந்து கால் வருது’ன்னு கற்பனை பண்ணினா அதுகூட ஒரு புதுத் தளம்தான்’ என்றார்.

ஆக.. கற்பனையும் க்ரியேட்டிவிட்டியும் இருக்கும் வரை சவால் என்று வந்துவிட்டால் எதுவும் சுலபம்தான்.

உங்களிடமிருந்து ஆச்சர்யங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மீண்டும் வாழ்த்துகள்!

நட்புடன்
பரிசல்காரன் & ஆதி

.

Thursday, September 29, 2011

சவால் சிறுகதைப் போட்டி –2011

சென்ற வருடம் யாருக்கோ நான் அலைபேசியபோது எதிர்முனை சொன்ன ‘மை நேம் ஈஸ் யாமினி’ ஒரு பொறியாக மனதில் விழ, மிஸ்.யாமினி என்ற தொடர் ஒன்றை எழுதினேன். அதற்கு கொஞ்ச நாள் முன் ஆதியும், ஒரு மினி தொடர் எழுதியிருந்தார்.

இதுபற்றி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது - மனதில் சிறு பொறியாகத் தோன்றி, பின்பு பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு.. மாற்றுக்கருத்துகளைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு நடத்தித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் சென்ற செப்டம்பரில் ‘சவால்சிறுகதைப்போட்டி’யை அறிவித்தோம். அதன் பின் நிகழ்ந்தது அந்த ஆச்சரியமும், பரபரப்பும், சுவாரசியங்களும் நிறைந்த நிகழ்வு.

அந்த முதல் அறிவிப்பு : இதோ இங்கே.

பொதுவான சிறுகதைப் போட்டியாக இல்லாமல், சிறுகதையில் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் விடுத்த 'சவால்’ நண்பர்களை ஆர்வத்தில் தள்ளியிருக்கவேண்டும். அதன் பின்னர், எதிர்பாராத வகையில் சரியாக 84 சிறுகதைகள் போட்டிக்கு வந்தன. சக பதிவர்கள் வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ் ஆகியோர் நடுவராக இருந்து வெற்றிபெற்ற கதைகளை தேர்ந்தெடுத்தனர். 84 கதைகளிலிருந்து முதல் கட்டமாக 15 கதைகளும் அதிலிருந்து 5 கதைகள் பரிசுக்குரியதாகவும் தேர்வுசெய்யப்பட்டன. முதல் பரிசுகளை சத்யா, பார்வையாளன், ஸ்ரீதர் நாராயணன் ஆகியோரும், ஆறுதல் பரிசுகளை வித்யா, RVS ஆகியோரும் தட்டிச்சென்றனர். சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வெற்றியாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. போட்டி குறித்த எங்கள் அனுபவங்கள் சுருக்கமாக இங்கே.

போட்டியின் முடிவுகள் இங்கே இருக்கின்றன.

வலையுலகில் ஒரு சிறிய சலசலப்பை உண்டுபண்ணிய நிகழ்வென்றே இதுகுறித்து சில மூத்த பதிவர்கள் எண்ணம் பகிர்ந்தார்கள்.

விதிமுறைகள் கடுமையாக இருந்தது, அடுத்த முறை இவை எளிமையாக்கப்படவேண்டும் எனவும், இவ்வளவு சீரியஸாக இந்தப்போட்டி நடத்தப்படும் என்று நாங்கள் எதிர்பர்க்கவில்லை எனவும் பாராட்டியும், குட்டியும் ஏராளமான கருத்துகளை எதிர்கொண்டோம். தொடர்ந்து வேறு போட்டிகள் நடத்தப்படுமா என்று ஆவலோடு நண்பர்கள் அவ்வப்போது கேட்டவண்ணமும் இருந்தனர். எங்களுக்கும் உள்ளூர ஆவல் இருந்தாலும் எடுத்துக்கொண்ட சிரமம் பயமுறுத்த ’வருடம் ஒருமுறை’ (சற்றேறக்குறைய செப்டம்பரில்) என முடிவு செய்தோம்.

அதன்படி இதோ.. 2011 ன் ‘சவால் சிறுகதைப்போட்டி’க்கான அறிவிப்பு.

முன்னதாக இன்னுமொரு முக்கியமான கூடுதல் தகவல். சமீபத்தில் ‘பதிவர்களால் பதிவர்களுக்காக..’ எனும் கேப்ஷனுடன் சிறப்பாக அறிமுகமாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘யுடான்ஸ்’ (www.udanz.com) எனும் புதிய தமிழ் வலைப்பூ திரட்டியை அறிவீர்கள். அதன் நடத்துனர்கள், நம் நண்பர்கள் கேபிள் சங்கர் மற்றும் ஜோஸப் பால்ராஜ் ஆகியோர் தன்முனைப்போடு இந்த சிறுகதைப்போட்டியை ’யுடான்ஸு’டன் இணைந்து வழங்கும்படி கேட்டுக்கொண்டார்கள். மகிழ்வோடு ஒப்புக்கொண்டோம். போட்டிக்கான பரிசுத்தொகையை ‘யுடான்ஸ்’ ஏற்றுக் கொண்டது. அதன்படி ‘யுடான்ஸ்’ இணையதளத்தோடு நாங்கள் கரம் கோர்த்து இந்த ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம். யுடான்ஸ் திரட்டியில் போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகளும், அறிவிப்பும் காணக்கிடைக்கும்.

இனி களம் உங்களுடையது. மூத்த, இளைய பதிவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்திக்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்-

பரிசல்காரன்
ஆதிமூலகிருஷ்ணன்.



*

சிறுகதைக்கான சவால் :



இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.



*

பரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்..

சவால் சிறுகதைப்போட்டி -2011

விதிமுறைகள் :

1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.

2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.

3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொள்ளமுடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்படவேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக்கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.

4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.

5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.

6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும் kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.

7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.

8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.

9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.

10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.

11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.

12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com

13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.

வாழ்த்துகள்!

.

Friday, September 23, 2011

எழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை

எழுத்தாளர் எஸ்.ரா-வுடனான சந்திப்பிற்கு திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான சேர்தளம் ஏற்பாடு செய்திருக்கிறது. நண்பர்கள் வருகை தருமாறு சேர்தளம் சார்பில் வரவேற்கிறோம்.

இதைப் பற்றிய கட்டுரை நண்பர் முரளிகுமார் பத்மநாபன் பதிவிலிருந்து...

----

எஸ்.ராமகிருஷ்ணன், விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்தவர். வெகுஜன பத்திரிக்கையான ஆனந்தவிகடனில் வெளியான இவரது கட்டுரைகளில் மூலம் பரவாலாக அறியப்பட்டவர் என்றாலும் தன்னுடைய பிரத்யேக எழுத்து நடையின் மூலம் தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்தவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், புத்தக அறிமுகங்கள், உலக சினிமாக்களின் அறிமுகங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிவரும் முழு நேர எழுத்தாளர்.

டால்ஸ்டாயின் எழுத்து பாசமிக்க தாத்தாவின் கரங்களைப்போல நெருக்கமும் வலிமையும் கொண்டது. அந்தக் கரங்கள் மண்ணோடு நேரடியாகத்தொடர்பு கொண்டது. உலகின்மீது அதீத நம்பிக்கை கொண்டவை. அவரைக் கட்டிக்கொள்ளவும் அவரது அனுப்வங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர் தோளில் கைபோடும் நண்பனாக என்னால் ஒருபோதும் கொள்ளமுடியாது. இதற்கு நேர்மாறாக தாஸ்தாயெவ்ஸ்கியிருந்தார். அவரது கதைகளைப் படிக்கத்துவங்கியதும், அவர் உரிமையுடன் தோள்களில் கைபோட்டுக்கொண்டு அக்கறையோடும் ஆதங்கத்தோடும் தனது இயலாமையை, புறக்கணிப்பை அதன் ஊடாகவும் தான் வாழ்வில் கண்டு மகிழ்ந்த சின்னஞ்சிறு சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வார். கனவுகளைப் பற்றி பேசுவார், வலிகளை ஏற்றுக்கொள்ளச் சொல்வார். உலகம் அழகான பெண்களின் காதலுக்காக மட்டுமே இயங்குகிறது என்று உற்சாகம் கொள்ளச் சொல்வார்.

இது டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாயெவ்ஸ்கி பற்றி தன்னுடைய ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. எஸ்.ரா, இவர்களைப் படித்த அளவிற்கு நான் எஸ்.ராவைப் வாசித்திராத பொழுதும் இவரைப்பற்றி சொல்லவும் பேசவும் நிறைய இருக்கிறது என்னிடம்.

முதலில் ஆனந்த விகடனில் வெளிவந்த இவரது துணையெழுத்தில்தான் எஸ்.ராவை வாசிக்கத்தொடங்கினேன். தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி போன்ற கட்டுரைகள் இவரது எழுத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் சுற்றியலைந்த அனுபவத்தை தேசாந்திரியில் அப்படியே தன் எழுத்துக்களில் பகிர்ந்திருப்பார். முன் அறிமுகம் இல்லாத மனிதர்களோடான ஸ்னேகம் என்பது எவ்வலவு அலாதியானது என்பதை இவரது எழுத்தில் உணரலாம். இருட்டில் விளக்கோடு உதவிய ஆட்டோகாரர், பாம்புக்கடிக்கு மருந்திட்டு காப்பாற்றிய ஏழை விவசாயி, அடுத்தவேளை சோற்றிற்கின்றி அலைந்த நேரங்களில் சந்தித்த மனிதர்கள் என இவரது கட்டுரையில் வருகிற மனிதர்கள், மனிதம் நிரம்பியவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ, சக மனிதர்களோடான பரஸ்பர அன்பையும் நம்பிக்கையையும் மனதில் விதைக்கும் படியாக இருக்கிறது.

குறிப்பாக கதாவிலாசத்தில் வரும் கட்டுரைகள், அந்த எழுத்தாளர்களைப்பற்றிய வெறும் தகவல்களாகவோ, புள்ளிவிபரங்களாகவோ, அவர்களின் உயர்த்திச் சொல்லவேண்டிய எந்த கட்டாயங்களையோ சுமந்து நிற்பதில்லை. மாறாக, அவர்களின் வாழ்வை, எழுத்தின் மீதான அவர்களின் ஆளுமையை, அவர்களின் வாயிலாகவே சொல்லவைக்கிறது. வண்ணநிலவனையும், பஷீரையும், கு.அழகிரிசாமியையும் தேடித்தேடிப் படிக்கச் செய்கிறது. இன்னும், வாசிப்பு உலகில் அடியெடுத்து வைக்கும் எவருக்கும் அறிமுகமாய் என்னுடைய விரல்கள் இவரது கதாவிலாசத்தை நோக்கியே நீண்டிருக்கும். ஒரு எழுத்தாளனாய் தன் சமகால, முன்னோடி எழுத்தாளர்களை, அவர்களின் எழுத்துக்களின் மீதான தனது காதலை எந்தவித பிணக்குமின்றி எழுதுவது இவரது தனித்தன்மை.

இவரது எழுத்துக்களில் இன்னும் வசீகரமானது, இதுவரை அறியப்படாத பல விஷயங்களை, கவிதைகளை, கதைகளை அதன் வரிகளை, மேற்கோள்களாக காட்டுவதுதான். இவருடைய ஏதோவொரு கட்டுரையில் வரும் ஜென் கவிதையொன்றில் “மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது” இந்தவரிகளை எத்தனை முறை வாசித்திருப்பேனென்று தெரியாது. இதுபோன்ற வரிகள் அடுத்தடுத்ததாக புதிய புத்தகத்தின் மீதான தேடலை ஆரம்பித்து வைக்கிறது. இந்த தேடலை இவரது எழுத்துக்கள் இயல்பாக செய்துபோகிறது.

இவரது சமீபத்திய புத்தகமான வாசகபர்வத்தின் முன்னுரையில் “ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு, மெளனமும் பதற்றமும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாக எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது” என்று ஒரு வரி வரும். அதை என்னாலும் உணரமுடிகிறது என்பது ஒரு பெருமிதம் கலந்த மகிழ்ச்சியே.

எஸ்.ராவின் எழுத்துக்களைத் தொடர்ச்சியாய் ஏழு வருடங்களுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். அவரை மட்டுமல்ல, எப்படி வாசிக்க வேண்டும், எவரையெல்லாம் வாசிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தபடியே ஜி.நாகராஜனை, புதுமைப்பித்தனை, சம்பத்தை, பஷீரை, வண்ணதாசனை, எம்.எஸ்ஸை, நகுலனை, வண்ணநிலவனை, போர்ஹேவை, செகாவை இன்னும் பலரை. பாரதியார் கதைகள் கூட எழுதுவார் என்றோ வண்ணதாசன் என்று ஒரு ஆளுமை இருக்கின்றார் என்பதோ தெரியாத நான் இவர்களைப் வாசித்திருக்கிறேன் என்றால், இத்தனைக்கும் காரணமான ஒரு மனிதரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்குமல்லவா?

என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் சில நண்பர்கள் என்னிடம் “முரளி, உன்னுடைய தொடர்ச்சியான வாசிப்பனுபவம் உன் உன் எழுத்துக்களில் தெரிகிறது, அது உன் எழுத்துக்களில் சின்னச்சின்ன மாறுதல்களைப் பிரதிபலிக்கிறது” என்று சொல்கின்றனர். இதற்கு என்னுடைய பதில் ஏற்கனவே என்னுடைய ஒரு பதிவில் எழுதியது போல “என்னுடைய ஒவ்வொரு பதிவையும் எஸ்.ராவை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாய் உணர்கிறேன். மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும், அதுதான் விதி”. இப்பொழுது சந்தோஷமான அந்தத் தருணம் நெருங்கி விட்டது. என் ஆதர்ச எழுத்தாளரை சந்திக்கவிருக்கிறேன், சொல்லப்போனால் கையைப்பிடித்து அழுத்தமாக ஒரு நன்றி சொல்லப் போகிறேன்.

இதற்கு முன்பாக இரண்டு முறை நேரில் சந்தித்திருந்தாலும் அதிகம் அவருடன் உரையாட முடியவில்லை. அதிலும் கடந்தமுறை மதுரையில் நடந்த விழாவில் செகாவ் பற்றியும் கிரேக்கத்து முயல் பற்றியும் அவர் பேசியதிலிருந்து, கூடுமான வரை விரைவில் அவரை சந்தித்து உரையாட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன். சமீபத்தில் நெடுங்குருதி குறித்த ஒரு கட்டுரையை அவருக்கு அனுப்பியிருந்தேன், அது குறித்த தொடர் உரையாடலில் சேர்தளம் – திருப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக அவரை திருப்பூருக்கு அழைத்திருந்தோம். அவரும் வரச் சம்மதித்திருக்கிறார். வருகிற ஞாயிறு மாலை, அரோமா ஹாலில் ஒரு கலந்துரையாடல் போல நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.




எங்களைப் போல அவரை சந்திக்க, கலந்துரையாட விருப்பமிருக்கும் நண்பர்கள் தங்களது வருகையை பதிவுசெய்துகொள்ளுங்கள். முன்னேற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும்.

இந்தியா முழுவதும் நடந்து திரிந்த ஒரு தேசாந்திரியான இவருடன் இலக்கற்ற பயணம் மற்றும் அவரது எழுத்துக்கள் குறித்தான ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் இதையே அழைப்பிதழாக ஏற்று வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

-முரளிகுமார் பத்மநாபன்


...

Thursday, September 22, 2011

ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை

போனவாரத்தில் ஒரு நாள். நிறுவனத்தின் வாசல் அருகே “சரி.. கிளம்பறேன்” என்று நான் ஆயத்தமானபோதுதான் அவன் வந்தான்.

“சார்.. சார்.. எங்க போறீங்க?”

“திருப்பூர் வரைக்கும் ஒரு வேலையா போறேன்.. நாலு மணிக்குள்ள போகணும். போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன்”

“சார்... அப்டியே XXXX பேங்ல இந்தப் பணத்தைப் போட்டுடுங்க சார்.. ஊர்ல மாமா எடுத்துக்குவார்”

“லேட்டாகுமா?”

“ச்சே.. இல்ல சார்.. அந்த பேங்ல கூட்டமே இருக்காது. போனா அஞ்சு நிமிஷத்து வேலை”

** ** **

சொன்னது போலவே கூட்டம் இருக்கவில்லை. இரண்டே பேர் தான் அமர்ந்திருந்தனர்.

இடது வலது புறங்களில் இருந்த நாற்காலிகளை வயசான சிலர் ஆக்ரமித்திருக்க, ஓரிருவரே இளம் வயதினராக இருந்தனர். இரண்டு கவுண்டர்கள் இருக்க நான் எதில் பணம் கட்ட என்று தெரியாமல் அருகே சென்றேன். அமர்ந்திருந்த ஒருவர் தடுத்தார்.

“ஹலோ... உட்கார்ந்திருக்கோம்ல”

‘இப்ப என்ன நின்னுட்டிருக்கன்னா சொன்னோம்?’ என்று நினைத்தவாறே, “அதான் கவுண்டர்ல யாரும் இல்லீங்களே” என்று கேட்டேன்.

“அவர்தான் வெய்ட் பண்ணச் சொன்னார்” என்றார் கவுண்டர் ஆசாமியைக் காட்டி.

நான் அமர்ந்தேன். கொஞ்ச நேரம் கழித்து என்னைத் தடுத்த அந்த வாடிக்கையாளர் “எவ்ளோ பணம் எடுக்கறீங்க?” என்று கேட்டார்.

“பணம் எடுக்கலைங்க.. டெபாஸிட் பண்ண வந்தேன்”

“ஓ.. ஸாரி.. ஸாரி.. அப்ப அந்த செகண்ட் கவுண்டர் போங்க” என்று வழிந்தார்.

இரண்டாவது கவுண்டர் அருகே சென்றேன். கெச்சலாக ஒடிந்த உருவத்தில் ஒரு வயசானவர் அமர்ந்திருந்தார். குனிந்து கீபோர்டில் எழுத்துகளைத் தேடித் தேடி ஒற்றைவிரலால் தட்டிக் கொண்டிருந்த அவரின் தலை மேலிருந்த விளக்கு வெளிச்சத்தில் பளீரிட்டது.

சிறிது விநாடிகள் நின்ற நான், அவர் தலை உயராததால் “எக்ஸ்யூஸ்மீ” என்றேன்.

-மெ
-து
-வா
-க

நிமிர்ந்தார். ‘என்ன?’ என்றார் கண்களால்.

நான் நிரப்பப்பட்ட செலானை நீட்டினேன். இரண்டாயிரத்து முப்பது ரூபாய். நான்கு ஐநூறு ரூபாயும், மூன்று பத்து ரூபாயும் இருந்தன.

வாங்கியவர், கண்ணாடியை மேலே ஏற்றிக் கொண்டு ஒவ்வொரு ரூபாயாக எண்ணினார்.

“ரெண்டாயிரத்து முப்பதா?”

“ஆமா சார்”

மறுபடி இரண்டு முறை ஒவ்வொரு நோட்டையும் எண்ணினார். அதில் ஐநூறு ரூபாய் நோட்டுகளை மட்டும் தனியே எடுத்தார். ஒவ்வொரு நோட்டையும் தலைக்கு மேல் தூக்கிப் பார்த்தார். தடவிப் பார்த்தார். பக்கத்தில் இருந்த ஒரு மெஷினில் வைத்து சோதித்தார். பத்து ரூபாய் நோட்டுகளை கையாலேயே தடவிக் கொடுத்தார். மீண்டும் எல்லாவற்றையும் சேர்த்து வைத்து எண்ணினார்.

“ரெண்டாயிரத்து முப்பது. இல்லையா?”

நான்: “ஆமா சார்”

நான் கொடுத்த செலானை எடுத்தார். டேபிளில் எதையோ தேடினார். பேனா. எல்லாவற்றையும் எடுத்து தேடினார். ட்ராவைத் திறந்து பார்த்தார். கீபோர்டை நகர்த்திப் பார்த்தார். ம்ஹூம். கையைலிருந்த பணத்தை டேபிளில் வைத்து ஒரு பேபப்ர் வெய்ட்டை அதன் மீது வைத்துவிட்டு, நாற்காலியைக் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி, கீழே தேடினார். விழுந்திருந்தது போலும். ஒரு பெருமூச்சை உதிர்த்தவாறே குனிந்தார். அவர் கைகளுக்கு அந்தப் பேனா எட்டவில்லை.

நாற்காலியை விட்டு எழுந்தார். குனிந்து அந்தப் பேனாவை எடுத்தார். அதை டேபிளின் மேல் வைத்துவிட்டு, நின்றவாறே பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்தார். முன் நெற்றியை அழுந்தத் துடைத்துக் கொண்டார். கைக்குட்டையை இருந்த மடிப்பு கலையாமல் அதே மாதிரி மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். கம்பிகளைத் தாண்டி, கவுண்டருக்கு வெளியே யார் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று நோட்டம் விட்டார். அவர் பார்வைக்கு மறைக்காமல் இருக்க நான் கொஞ்சம் நகர்ந்தேன். முழுவதும் நோட்டமிட்டுவிட்டு அமர்ந்தார்.

பேப்பர் வெய்ட்டை நகர்த்தி, மறுபடி ஒருமுறை அந்த ஏழு நோட்டுகளையும் எண்ணினார். செலானை எடுத்து, அதில் இருந்த டினாமினேஷனை சரிபார்த்து டிக் அடித்தார்.

கண்ணாடியை கொஞ்சம் இறக்கி விட்டு கணினித் திரையைப் பார்த்தார். கணினியில் எதையோ டைப்பினார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார். மறுபடி எதையோ டைப்பியவர், செலானில் இருந்த வங்கிக் கணக்கு எண்ணை, ஒவ்வொரு இலக்கமாய் மிகப் பொறுமையாய் சரிபார்த்து சரிபார்த்து அடித்தார். பிறகு மீண்டும் செலானைப் பார்த்தார்.

செலானையும், கணினித் திரையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ஒண்ணு.. ஒண்ணு. மூணு.. ஆறு..” என்று கணக்கு எண் ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டே சரிபார்த்தார். செலானிலும், கணினியிலும் தெரியும் பெயரை சரிபார்த்தார்.

மீண்டும் செலானைப் பார்த்தவர் கேட்டார்: “ரெண்டாயிரத்து முப்பது?”

நான்: “ஆமா சார்”


இப்போது தொகையை கணினியில் அடிக்கும் முறை. ஒவ்வொரு எண்ணையும் பொறுமையாக அடித்தார். கண்ணாடியை இறக்கிக் கொண்டார். செலானையும் கணினித் திரையையும் மாறி மாறிப் பார்த்தவாறே ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லிக் கொண்டார்.

கண்ணாடியை சரிசெய்தவாறே என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘ரெண்டாயிரத்து முப்பது’ என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்து ‘ஆமா சார்’ என்று பதில் சொல்ல தயாராய் இருந்தேன். ம்ஹூம்.

மீண்டும் செலானின் இடது வலப் புறங்களில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தவாறே தேதி, கணக்கு எண், பெயர், தொகை, கையொப்பம் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து டிக் அடித்தார். வலப்புறம் இருந்த சீல் ஒன்றை எடுத்து டமார் டமார் என்று டேபிள் அதிர சீல் வைத்தார். சீல் மேல் கையொப்பமிட்டார்.

செலானின் மறுபாதியைக் கிழித்தார். என்னிடம் கொடுக்க நீட்டியவர், மீண்டும் கையை இழுத்துக் கொண்டார். கையில் மறுபாதியைப் பிடித்தவாறே கணினித் திரையில் எதையோ சரிபார்த்தார். ஓரிரு விநாடிகளுக்குப் பிறகு என்னிடம் நீட்டினார்.

வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன்.

** ** **

நேற்றைக்கு அலுவல் வேலையாக வெளியே போக பைக்கை எடுத்தேன். அவன் ஓடிவந்தான். ‘சார்.. ஒரு அஞ்சு நிமிஷத்து வேலை’ என்றான்.

“நான் எங்கயும் போகலைப்பா. வண்டில காத்து இருக்கான்னு பார்க்க எடுத்தேன்” என்றபடி மறுபடியும் பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தினேன்.

** ** **

Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும்


து நேற்று திருப்பூரில் நடந்தது.

காதல் தம்பதிகள். ஆறு வயதுப் பெண்குழந்தை. திருப்பூரில் தொழில் நிலைமை சரியில்லாததால் ஆறுமாதம் அங்கும் இங்கும் கடன் வாங்கியிருக்கிறார் கணவர். கடன் தொல்லை. அதனால் குடும்பச் சண்டை. சமாதானம் பேச சென்னையிலிருந்து வந்த உறவினர்கள் அவர்களை சென்னைக்கே வந்து குடியிருக்கச் சொல்கிறார்கள். பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கு எதிரில்தான் பெண்ணின் தாய்வீடு. ஓடிச் சென்று ஓர் அறையில் புகுந்து தாளிட்டுக் கொள்கிறார். சிறிது நேரம் கழித்து இவர்கள் சென்று பார்க்க, சேலையை மாட்டி தற்கொலைக்கு முயன்றது தெரிகிறது.

ஆபத்தான கட்டத்தில் இருக்கும் அவரை உடனே ஓர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு செல்கிறார்கள். கணவர் பின்னாலேயே இன்னொரு ஆட்டோவில் வருகிறார். வழியில் ஆம்புலன்ஸ் வர, ஆட்டோவை நிறுத்தி, உயிருக்குப் போராடும் அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றுகிறார்கள். பின்னால் மற்றொரு ஆட்டோவில் வந்த அவரின் கணவர், தான் வந்த ஆட்டோவை நிறுத்தி, ஆம்புலன்ஸை நோக்கி ஓடுகிறார். பதட்டம். கவனமின்மை. எதிரில் வரும் ஒரு லாரி அந்தக் கணவர் மீது மோதுகிறது.

இருவரையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றிச் செல்கின்றனர். இருவரும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழக்கிறார்கள்.




அந்த ஆறு வயதுக் குழந்தையின் கதி????

விபத்து என்பது எங்கே-எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. எங்கேயும் நடக்கலாம். எப்போதும் நடக்கலாம்.

--- --

வி
பத்து நடக்கும்போது, அதைக் கேட்கும்போதோ நமக்கு ஏற்படும் பதட்டமும், விளைவுகளும் எழுத முடியாது. எழுதினாலும் உணரமுடியாது. எங்கேயும் எப்போதும் நம்மை உணர வைக்கிறது. விபத்து நடக்கும் பேருந்தினுள்ளே நாமும் இருப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. துவக்க காட்சியிலேயே அந்த விபத்தைக் காட்டி விடுகிறார்கள். எனினும், இடைவேளைக்குப் பின் அதைக் காட்டும்போது, தியேட்டரில் பலரும் பார்க்க இயலாமல் தலைகுனிந்து கொள்வதைக் கவனிக்க முடிந்தது. அவ்வளவு நேர்த்தியாக, அவ்வளவு ஆழமாக படமாக்கிய வேல்ராஜுக்கு சபாஷ்! அதே போல அதற்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸில் உழைத்தவர்களுக்கும் சல்யூட்! இன்னும் நடுங்குகிறது!

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்கும், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கும் விபத்து நடக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது. ஒரு பேருந்தில் அனன்யாவும், மற்றொரு பேருந்தில் ஜெய், அஞ்சலி, சர்வா-வும் பயணிக்கிறார்கள். அங்கிருந்து 4 மணி நேரம் முன்பு, அதிலிருந்து ஆறுமாதம் முன்பு என்று சர்வா-அனன்யா சம்பந்தப்பட்ட காட்சிகளையும், ஜெய்-அஞ்சலி சம்பந்தப்பட்ட காட்சிகளையும் காட்டுகிறார் இயக்குனர். அந்த திரைக்கதை உத்தி ரசிக்க வைக்கிறது. விபத்தில் யாருக்கு என்ன நடக்கிறது என்பதே க்ளைமாக்ஸ்.





சர்வா-அனன்யா காட்சிகளில் அனன்யாவின் சந்தேகப்பேர்வழியான பாத்திரப்படைப்பை இயக்குனர் காட்சிப்படுத்திய விதம் அபாரம். ஒரு காட்சியில், பேருந்துக்காக நிற்கும் அனன்யா, ஓரடி பின் சென்று அங்கிருக்கும் பலகையில் அவர்களுக்கான பேருந்து எண் இருக்கிறதா என்று சரிபார்க்கிறார். மூன்று நான்கு செகண்ட் வரும் அந்தக் காட்சியில் அவரது சந்தேக புத்தியைப் பதிவு செய்த விதம் நன்று. அதே அனன்யா, விபத்தில் மருத்துமனையில் இருக்க, அங்கு வரும் அனன்யாவின் சித்தி சர்வா-வைப் பார்த்து ‘இவர் இருக்காரு.. அமுதாவுக்கு ஒண்ணும் ஆகிருக்காது’ என்று சொல்கிற வசனம் மூலம் எல்லாவற்றையும் புரிய வைத்து விடுகிறார்கள்.







ஜெய்-அஞ்சலி. ஒரு காதலியை இப்படி யாரும் சித்தரித்து நான் பார்த்ததில்லை. அஞ்சலியின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் இந்தப் படத்தின் மகாப் பெரிய ப்ளஸ். தன்னை உருகிக் காதலிக்கும் ஜெய்-யிடம் அவர் ஐ லவ் யூ சொல்லும் தொனி… இதுவரைக்கும் யாரும் இப்படிச் சொல்லிருக்க மாட்டார்கள். ஜெய்யின் நடிப்பும் கச்சிதம். படம் முழுவதும் அஞ்சலியை வாங்க போங்க என்றே அழைக்கிறார். ‘கட்டிக்கோ’ என்று அஞ்சலி சொல்ல, ‘கல்யாணத்துக்கு அப்பறம்க’ என்று ஜெய் சொன்னதும், அஞ்சலி ‘நீ கல்யாணத்துக்கு அப்பறம் கட்டிக்கோ.. நான் இப்ப கட்டிக்கறேன்’ என்று அணைத்துக் கொள்ளுமிடம் கவிதை. அந்தக் காட்சி மற்றும் பாடல் காட்சியில் மாண்டேஜ்கள் தவிர வேறெந்த இடத்திலும் அஞ்சலி, ஜெய்-யை காதல் பார்வையே பார்ப்பதில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்து தன் அன்பை இறுதிக் காட்சி நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அவ்வளவு ஸ்ட்ரிக்டாக தான் இருப்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளகூடியதாய் இருக்கிறது. அத்தனை யதார்த்தமான வசனங்கள்தான் காரணம்.

பாடல்கள் ஏற்கனவே ஹிட். நா.முத்துக்குமாரின் வரிகள் ஈர்க்கின்றன. மாசமா பாடலைத் தவிர பிற எல்லாமே மாண்டேஜ். கோவிந்தா, சொட்டச் சொட்ட நனைய வைத்தாய் பாடல்களின் காட்சிகள் ரசனையோ ரசனை. அதுவும் சொட்டச் சொட்ட பாடலில் அஞ்சலி தன் தோழிகளுடன் ஜெய் அறைக்குச் செல்லும் காட்சி கொள்ளை ரசனை.

படத்தில் பேருந்து சாலைகளில் செல்லும் வேகத்தைப் படமாக்கிய விதமும், அதற்கான பின்னணி இசைக் கோர்ப்பும் அபாரம். ஒரு காட்சியில் இரண்டு பெரிய வாகனங்களை ஆம்னி பஸ் இடது புறமாக சாலையில் இறங்கி முந்திச் செல்லும் காட்சியில் தியேட்டரில் பலர் ஐயோ அம்மா என்று கத்துகிறார்கள். இந்தப் படத்தை விஐபி-க்களுக்கெல்லாம் இல்லாமல் தனியார், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு ஒரு ஸ்பெஷல் காட்சி போட்டுக் காட்டலாம். இது என் வேண்டுகோள்.

நேற்று வெளியான இன்னொரு படம் வந்தான் வென்றான். அது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் இது வந்தது. வென்றது.


.

Friday, September 9, 2011

கண்ணம்மா

“தம்பி இதுல கண்ணம்மான்னு ஒரு பேரிருக்கும். எடுத்துக்குடு” - அந்தப் பெரியவர் தன் சீட்டிலிருந்து என்னிடம் அவரது நோகியாவை நீட்டினார். நோகியா 1100. பலரது ஆல்டைம் ஃபேவரைட் மொபைல்.

பேருந்தில் ஏறும் வாசலை ஒட்டிய, இடதுபுற இரட்டை சீட்டில் நானும் உமாவும் அமர்ந்திருந்தோம். வலது புறம் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார்.

நான் கண்ணம்மாவைத் தேடினேன். மொபைலில். ம்ஹும். ‘K' வரிசையில் அப்படி ஒரு பெயரே இருக்கவில்லை.

“ஐயா.. அந்தப் பேரே இல்லீங்களே..”

“அடென்ன தம்பி.. உன்ரகூட ரோதனையாருக்கு. நமக்கு அதெல்லாம் பார்க்கத் தெரியாததாலதானே கேட்கறேன்.. ரெண்டு நாள் பேசலைன்னா நம்பர் அவிஞ்சு போயிருமா.... இல்லீன்ற?” என்றார் கொஞ்சம், கோபமும் கொஞ்சம் எரிச்சலும் கலந்த தொனியில்.

“இல்லைங்கய்யா.. கே-ல கண்ணம்மாங்கற பேர் இல்லைங்க...”

“அதெ எவன்கண்டான் கேயாவது ஏயாவது... நல்லாப் பார்த்து எடுத்துக்குடு.. வூட்டுல சமைக்கச் சொல்லோணும்” என்றார்.

மணி இரவு ஒன்பதரை. கோவையிலிருந்து திருப்பூர் சென்று கொண்டிருந்தது பேருந்து.

நான் மறுபடி தேடிவிட்டு “இல்லைங்க...” என்றேன்.

அவர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, உமாவை நோக்கி “நீ பாத்துக்குடும்மணி.. என்ர மருமவப்புள்ள மாதிரி நீயும் வெவரமாத்தான் இருப்ப” என்றார்.

நான் இந்த நேரத்துக்குள் அவரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன். உமா சிரித்துக் கொண்டே ‘அந்தப் பேர் இல்லீங்கய்யா.. அவர் பார்க்கறப்ப நானும் பார்த்தேன்’ என்றார்.

“ம்ம்ம்... அப்டீன்னா பாலு இருக்கான்னு பாரேன்” என்றார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்த்தேன். Balu K, Bala, Balasubbu என்றொரு நான்கைந்து பாலுக்கள் இருந்தனர்.

அவரிடம் சொல்லி, கேட்டேன்.

“எந்த பாலுங்க?”

“என்ர மவன்தான்”

உமா சிரித்துவிட்டார். அவர் பார்க்கவே, ஜன்னலோரம் முகம் திருப்பிக் கொண்டார்.

“அதெல்லாம் இதுல இல்லீங்கய்யா.. என்ன பேர்ல பாலுவை நீங்க இதுல பதிவு செஞ்சிருக்கீங்கன்னு தெரியணும்” என்றேன்.

“என்ர மவனை மொதல்ல ஒதைக்கணும். இந்தக் கெரகம் வேணாம்னா கேட்டாத்தானே..” என்று கொஞ்சம் உரக்கவே - சொல்லிவிட்டு “கொஞ்ச நேரம் முந்திகூட கூப்டான் கண்ணு...” என்றார்.

“அப்டீன்னா இருங்கய்யா..” என்று சொல்லிவிட்டு ரிசீவ்ட் காலை சோதித்தேன். பாலு.கே என்றிருந்தது.

அதை டயல் செய்து ‘பேசுங்க..’ என்று அவரிடம் நீட்டினேன்.

என்னை ஆழமாக முறைத்து.. ‘இப்ப மட்டும் எப்படிக் கெடச்சுதாம்?’ என்று கேட்டுவிட்டு ‘அடே பாலு.. வூட்லயா இருக்கியா தோட்டத்துலயா?...’ என்று உரத்த குரலில் பேசத் தொடங்கியவர் ‘ பாலு... பாலு.... இதென்ன அவன் பேசமாட்டீங்கறான்..?’ என்று என்னைப் பார்த்துக் கேட்டார்.

நான் ஃபோனை வாங்கிப் பார்க்க ரிங்டோன் போய்க் கொண்டிருந்தது. ‘இன்னும் அவர் எடுக்கலைங்க’ என்று சொல்லச் சொல்ல எடுத்தார் யாரோ. அந்தப் பெரியவரிடம் நீட்டினேன்.

அவர் மகன்தான். இரவே திரும்பிவிடுவதாகவும், அதனால் மருமகளை சமைத்து வைக்கச் சொல்லியும் கூறினார்.

அதற்குள் நான் என் ஃபோனில் Angry Birds விளையாட ஆரம்பித்திருந்தேன். அவர் ஃபோனை வைத்துவிட்ட கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது.

எடுத்தவர் பேசத் தொடங்கினார். இப்போது அழைத்தது அவர் மருமகள். பேசியவர் முடிவில்.. “அவன் தோட்டத்துல இருப்பான். உன்ரகிட்டயே சொல்லிடலாமுன்னு பார்த்தா, இங்க ஒரு தம்பி இதுல உன்ர பேரே இல்லைன்னுடுச்சு” என்று என்னைப் பற்றி புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.

ஃபோனை வைத்துவிட்டு ‘இப்ப பேசிட்டேன்ல? படிச்சவனாட்டம் இருக்க.. இத்தாத்தண்டில போனை வெச்சு நோண்டிகிட்டிருக்க.. பேரில்லைன்ற” என்று அவர் சொல்லவும், ‘இங்க குடுங்கய்யா’ என்று அவர் ஃபோனை வாங்கி ரிசீவ்ட் காலைப் பார்க்க ‘Gannama” என்று இருந்தது.

“ஐயா.. கண்ணம்மாக்கு கே தாங்க வரும்.. இதுல ஜி போட்டிருக்கு. அதான் தெரியல..” என்றேன்.

“அந்தக் கெரகெமெல்லாம் எனக்குத் தெரியுமா.. படிச்சவனுக. உங்களுக்குதான் தெரியணும்.. “ என்றவர் “சரி விடு... என்ர மருமவன்கிட்ட பேசணும்... சுப்புன்னு இருக்கும்பாரு... எடுத்துக் கொடு” என்றார்.

நான் 'A' விலிருந்து தேட ஆரம்பித்தேன்.


.

Tuesday, September 6, 2011

ஒரே தகவல்

டந்த மூன்று மாதங்களாக பெரிசாக எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. இது பற்றி இப்போதுதான் முதல்முதலாகச் சொல்கிறேன். முதலிலேயே சொல்லியிருந்தால் மொத்தியிருப்பீர்கள் என்று தெரியும். எழுதாமல் இருப்பது எப்படி என்று எழுதுவதற்காக, எழுதாமல் இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்வதற்காக எழுதாமல் இருந்து அதிலேயே மூழ்கி விட்டேன். எழுதாமல் இருப்பது என்பது நம்பிக்கை சார்ந்தது அல்ல. அது ஒரு வெட்டித்தனம். ஒன்றை எழுதுகிறீர்கள். அதை வெளியிட்டுவிட்டால் எல்லாரும் உங்களை மண்டையிலேயே போடுவார்கள். “இதை நான் நம்ப மாட்டேன்” என்று யாராவது சொன்னால் அது மடமை. எழுதுவது படிப்பவரை சோதித்துப் பார்க்கும் செயல். அது ஒரு விஞ்ஞான உண்மை. அதே போன்றதுதான் எழுதாமல் இருப்பதும். என்னுடைய எழுத்து ஒருவருக்கு இலக்கிய ரீதியாக இன்பம் தருகிறதோ இல்லையோ, அதில் உள்ள ஒரு சில வார்த்தைகளின் சூட்சுமங்கள் அதை வாசிப்பவரின் வாழ்வில் மிகப் பெரிய எரிச்சலை உண்டு பண்ணும். அதில் முக்கியமானவை உங்கள் கையையே கடித்துக் கொள்வது, மண்டையைப் பிய்த்துக் கொள்வது. இதை நான் வெறுமனே பரபரப்புக்காக சொல்லவில்லை. என் எழுத்தைப் படித்து, அதில் நான் சொல்லியிருக்கும் ஒரு விஷத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 48 நாட்கள் மங்காத்தா பார்க்க வேண்டும் என்பது போன்ற நடைமுறை சாத்தியமில்லாத எதுவும் நான் சொல்வதில் இருக்காது. ட்விட்டர், பஸ்ஸ், ப்ளாக், ஃபேஸ்புக் ஆகியவற்றை விலக்க வேண்டும் என்பது போன்ற மனித விரோத பத்தியங்களும் இல்லை. “அப்படிப்பட்ட விஷயத்தை நீயே முயற்சி செய்து மெண்டல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகலாமே?” என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். எனக்கும் மெண்டல் பட்டம் வேண்டும்தான். ஆனால் அது என்னை எழுதியவர்களை ஆக்கி, அதை ரசிப்பதன் மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

.

Friday, September 2, 2011

கடுகு


# ஃபேஸ்புக்ல என்னை க்ரூப்ல இணைச்சவங்க, ஒரு மெய்லுக்கு ஒரு ரூவா கொடுத்தாலே ஒரே வருஷத்துல கோடீஸ்வரன் ஆகிடுவேன் போலிருக்கே.. #முடியல


# 'கருப்புப் பேரழகா கண்ணுக்குள்ள நிக்கறியே ஜோரா..' பாடல் டான்ஸுடன்.. விநாயகர் சிலையருகே.. சதுர்த்தி விழாவாம்! பொருத்தமாத்தான் போடறாங்க!


# பின்னால ஒருத்தன்: 'இனிமேதான் படமே' #டேய்.. இன்னும் அரை மணிநேரத்துல முடியப்போகுதுடா...


# மங்காத்தாவை 'மங்காத்தாடா'-ன்னு இப்பதான் சொல்றாங்க. விஜய்யோட நண்பனை, 'நண்பேன்டா'ன்னு தமிழ்நாடே எப்பவோ சொல்ல ஆரம்பிச்சாச்சு!


# ஸ்ரீகாந்த்தேவா, தேனிசைத் தென்றல் தேவா-வின் இரட்டைக் குழந்தையா?

# பிடிச்சவங்களுக்குக் கூப்ட்டு, எடுக்கலைன்னா, திருப்பி கால் வர்ற வரைக்கும் நொடிக்கொருக்கா ஸ்க்ரீனைப் பார்க்கற வியாதி உங்களுக்கும் இருக்கா?

# இமேஜைப் பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் புகைப்படக் கலைஞர்கள் மட்டுமே.

# ஃபோன்ல பேசச்சொன்னா, முன்னாடி ஆயிரம் பேர் உட்கார்ந்துட்டிருக்கறப்ப மைக்ல பேசறா மாதிரியே பேசறான்.. #ஹலோஓஓஓஓஓஓஓஓ

# 'உயர்தர சைவ உணவகம்' - இத ஹோட்டல் பேருக்குப் பின்னால டிஃபால்ட்டா வெச்சுக்கறாங்க. அதுக்கு அர்த்தம் தெரியுமான்னே தெரியல!

# 'பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணும்' என்பதுதான் வாழ்வில் பலரது சோகத்துக்கு காரணமாக இருக்கிறது.

# அன்னா-வுடன் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற நடிகர் விஜயை சந்திக்க விரும்பும் டெல்லி ரசிகர்கள் 2 to 3 மதிய உணவு இடைவேளையில் சந்திக்கலாம்.

# என் வயதை, நான் பிறந்த நாளை வைத்துக் கணிக்கிறேன். நான் வாழ்ந்ததை, உன்னைப் பார்த்த நாளை வைத்துக் கணிக்கிறேன். #Feelings

# நீயின்றி அமையாது வாழ்வு. #Feelings

# மழை வருவது போலிருந்தால் எல்லாரும் குடை தேடுகிறார்கள். நான் உன்னைத் தேடுகிறேன். #Feelings

# '3 நீங்க எடுத்துட்டு, 1 மட்டும் ஆளுக்குப் பாதியா? தேவையில்ல.. அதையும் நீங்களே வெச்சுக்கங்க' என்ற இந்திய அணியின் ஆண்மையைப் பாராட்டுகிறேன். -Test

# திருமணநாளுக்கு நேரில் சென்று வாழ்த்துவது, அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சியினரை சிறையில் சென்று சந்திக்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது.

# ஒருத்தன் நல்லா பாடினா 1ஸ் மோர் கேட்கற மாதிரி.. நல்லா விளையாடறாங்கன்னு தொடர்ந்து விளையாடச் சொல்லி ரசிக்கறாங்களோ?-Followon

# 'தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை' - ஜெ. #வெவரம்மா நீங்க! பட்டியல்தான் இல்லைன்னிருக்கீங்க!

# இந்த வாஷிங்பவுடர், ஷாம்பூ விளம்பரங்கள்ல காமிக்கற ஆராய்ச்சிக் கூடங்கள நிஜமாவே அவங்க வெச்சிருப்பாங்களா?

# பாட்டுப் போட்டின்னா பாட மட்டும் சொல்லுங்கடா.. மேக்கப் பண்ணிகிட்டு ஆடறது, ஓடறதுன்னு மகா கொடுமை பண்றாங்க...

# பில்லியனில் இளம்பெண் வைத்து வண்டி ஓட்டுபவர்களை நாம் முந்தினால், அதன் பின் அவர் நம்மை அவ்வளவு சீக்கிரம் முந்துவதில்லை #அவதானிப்பு

# 'The word Krishna means the person who is attractive to everyone' - இப்ப படிச்சிட்டிருக்கற கட்டுரைல இருந்து. கரெக்டாதான் சொல்லிருக்காங்க.

# சரக்கடிக்கும்போது நண்பர்களுக்குள் பின்பற்ற வேண்டுமென்று சொல்லிக்கொள்கிற விதிமுறைகளனைத்தும் அதிகபட்சம் 2வது ரவுண்ட் வரையே நீடிக்கிறது.

# வாக்-கிங் என்பதையே பேராக வைத்திருக்கிறார்கள் சிலர்! #நட-ராஜா

# அழைக்கும் நபர் எதிர்முனையில் என்ன மாதிரியான முகபாவனை காட்டிவிட்டு உங்கள் ஃபோனை எடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளாதவரை நீங்கள் பாக்யசாலி!

# இந்த பாஸ்'களுக்கு இருக்கற கெட்ட பழக்கங்கள்லயே No1 ஃபோன் பண்றப்ப, 'எங்கிருக்க?'ன்னு கேட்கறது. எங்க இருந்தா என்ன, வேலையச் சொல்லுங்க எசமான்!

# மதியம் சாப்பாட்டுக்கு ஆர்டர் சொல்லிவிட்டேன். இதோ அலைபேசியைத் திறந்து அன்னா ஹசாரேவை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் ஆதரிக்கப் போகிறேன்.


# நள்ளிரவில் பெற்றோம். நள்ளிரவிற்குப் பின் வாழ்த்தினால் ஒரு SMS-க்கு ஒரு ரூபாயென்பதால் அதற்கு முன்னரே வாழ்த்திக் கொண்டோம். ஜெய்ஹிந்த்!


# படு கேவலமான விளம்பர ஸ்கிரிப்டில் நடிப்பதில் வடக்கே ஷாரூக்குக்கும், தெற்கே சூர்யாவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

# சிநேகா, திவ்யா, அனுஷ்கா, தீபிகா, கோபிகா என்றொருவன் கலந்துகட்டி ரசிக்கத் தொடங்கும்போது தேசிய ஒற்றுமை உருவாகிறது.

# முதல் இன்னிங்ஸை விட 20 ரன்கள் கூடுதலாக எடுத்த இந்திய அணியை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

# ஹோட்டலில் ஒருகுழந்தையை அவள் அம்மா உரக்க அழைத்ததில் மொத்த ஹோட்டலும் அந்தக் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் பெயர்தான் காரணம். #காஞ்சனாஆஆ

# 'எல்'லுக்கு பதிலாக 'எஃப்' இடுவது அதிர்ஷ்டத்துக்கு நல்லதல்ல.

# ஒரு நண்பரிடமிருந்து வந்த மெய்ல் இப்படி ஆரம்பிக்கிறது: “Dear my 5278 readers..” - அவ்வ்வ்வ்...........


** ** **

(ஆஃபீஸில் ட்விட்டர்/ஃபேஸ்புக் தடை என்று சொன்ன நண்பர்களுக்காக....)



.

Tuesday, August 23, 2011

எம கிங்கிரர்கள்

ரு நாளைக்கு 24 மணி நேரம்னா அந்த 24 மணிநேரத்துல நான் பைக் ஓட்டறது வெறும் ஒண்ணரை மணி நேரம். சில நாள் அங்க இங்க போகன்னு வேலை அதிகமானாக் கூட, அதிக பட்சம் நாலு மணி நேரத்தைத் தாண்டாது. ஆனா அந்த கொஞ்ச நேரம் நான் படற டென்ஷன் இருக்கே.. அப்ப்பப்பா! இந்த ஆளுகளாலயே டென்ஷன் ஆகி ஒரு வழி ஆகிடுவோம் நாம. அதுல சில ஆளுகளைப் பத்தி இங்கே:

டர்னிங் டார்ச்சர்மேன்: வலது பக்கம் திரும்பறானா, இடது பக்கம் திரும்பறானான்னு தெரியாது. ஒரு சைஸா உடம்பை வளைப்பானுக. அத வெச்சு ‘ஓஹோ.. சார் திரும்பப் போறார்’னு நாம தெரிஞ்சுக்கணும். ஏண்டா.. இண்டிகேட்டர் போட்டா அப்படி கரண்ட் செலவாகுமாடா உங்களுக்கு?

பில்லியன் பிசாசு: வண்டி ஒருத்தன் ஓட்டுவான். பின்னாடி உட்கார்ந்திருக்கறவன் கை காட்ட ஆரம்பிப்பான். இவன் கை காமிக்கறதுக்கு அரை கிலோ மீட்டர் தள்ளிதான் திரும்ப வேண்டிய இடம் இருக்கும். உட்கார்ந்திருக்கறவன் வலது பக்கம் கை காமிச்சான்-ன்னா,ஓட்டறவன் திரும்பாம லெஃப்ட்ல வண்டிய நிறுத்துவான். அதுக்கு பின்னாடி நீங்க இருந்தீங்கன்னா கொஞ்ச நேரத்துக்கு சீஸோபெர்னியா ஸ்டேஜ்ல இருக்க வேண்டிருக்கும். இதுல க்ராஸ் பண்ணலாமான்னு யோசிச்சு நாம ஸ்லோ பண்ணினா ‘போடா போடா’ன்னு அலட்சியமா நமக்கு கை காட்டுவானுக பாருங்க.. ச்சப்-ன்னு அப்பத் தோணும்.

மெமரிலாஸ் கஜினி: ரைட் இண்டிகேட்டர் போட்டிருப்பான். ‘சார் திரும்பப்போறார்’னு பின்னாடி வர்ற நாம ஸ்லோ பண்ணுவோம். அவன் திரும்பாம நேரா போவான். ‘அட’ன்னு நாம லெஃப்ட்ல ஓவர் டேக் பண்ணி போலாம்னு போனா, சள்ள்ள்-ன்னு அவன் வண்டி லெஃப்ட் ஒதுங்கும்.. சரின்னு ரைட் வந்தா, அவனுதும் ரைட். ஒரு அரை கிலோ மீட்டர்க்கு இந்த விளையாட்டு ஆடி முடிச்சப்பறம் அவனை முந்தும்போது ‘யோவ்.. இண்டிகேட்டர்’ன்னு சொன்னா.. ‘ஓ...!’ன்னு ஆஃப் பண்ணுவான்!

ச்சீப் சின்ஸாமி: வண்டி ஓட்டீட்டே இருப்பீங்க. முன்னாடி போற பைக்ல இருக்கறவன் சடார்னு எச்சில் உமிழ குமிவான். பின்னாடி வண்டி வருதா.. ஆள் இருக்கா எதைப் பத்தியும் அவனுக்கு கவலையில்லை. என்னைக் கேட்டா எமதர்மன்கிட்ட சொல்லி, இந்தச் செயலுக்கு மட்டும் கன்னாபின்னான்னு பனிஷ்மெண்ட் கேட்டகிரியை இன்னும் அதிகப்படுத்தச் சொல்லுவேன். படுபாவிக. எழுதறதுக்கே கேவலமான விஷயமாயிருக்கு இது!


திடீர் ராமசாமி: இது இந்த டவுன் பஸ் & மினி பஸ்காரனுக பண்ற கொடுமை. போய்ட்டே இருப்பானுக. ரோட்டோரம்லாம் இல்லாம திடீர்னு நடு ரோட்ல நிறுத்துவானுக. பின்னாடி அனுமார் வாலா ட்ராஃபிக் நீண்டாலும் கவலைப்படறதில்லை. பொறுமையா நிறுத்தி ஏத்தி அப்பறம்தான் போவானுக. (இந்த கேப்-ல நம்ம பின்னாடி நிக்கற பிரகஸ்பதிகள் ஹார்ன் அடிச்சே சாவடிக்கறது வேற நடக்கும்)


வழிவிடு முருகா: ஃப்ரீ லெஃப்ட்-ன்னு போர்ட் இருக்கும். அதப் பத்தி அவனுகளுக்கென்ன? சிக்னல் போட்டிருக்கும். நேரா நிக்கறவனையெல்லாம் தாண்டி முன்னாடி நிக்கறேன் பேர்வழின்னு இடது பக்கம் போறவனை, போக விடாதபடிக்கு நின்னுக்குவான்.


முந்திரிக்கொட்டை: சிக்னல்ல நின்னுட்டிருப்பீங்க. பச்சை விளக்கு வர்றதுக்கு நாலஞ்சு செகண்ட் முன்னாலயே பின்னாடி நின்னுட்டு கதற ஆரம்பிப்பாங்க. அட இன்னும் ஒண்ணு ரெண்டு செகண்ட்தானே-ன்னு நாம அவனைப் பார்த்தா - அவன் ஏதோ பூரா ட்ரஸ் போட்டிருக்கறமாதிரியும் நாமதான் நிர்வாணமா இருக்கற மாதிரியும் நம்மளை ஒரு பார்வை பார்ப்பானுக பாருங்க.... ம்ஹும்!


சவுண்ட் பார்ட்டி: உச்சபட்ச எரிச்சல் இதான். முன்னாடி போறவனும் போய்ட்டுதான் இருப்பான். நாமளும் போய்ட்டுதான் இருப்போம். திடீர்னு பின்னாடிலிருந்து ஹார்ன் சத்தம் விடாம கேட்கும். என்னமோ எல்லாரும் நடுரோட்ல நின்னு செஸ் ஆடீட்டிருக்கற மாதிரியும், இவரு மட்டும் வண்டி ஓட்டற மாதிரியும்.
வெளிநாடுகள்ல ஒருத்தன் அதிகபட்சமா – ரோட்ல யாராவது விதி மீறலா நடந்துட்டு - கோவம் வந்தா திட்டறதுக்குதான் ஹார்ன் யூஸ் பண்ணுவாங்களாம். இவனுக எதுக்கெடுத்தாலும் ஹார்ன்தான். ஸ்டியரிங்/ஹேண்டில்லேர்ர்ந்து கை எடுத்தாலும் எடுப்பானுக. ஹார்ன்லேர்ந்து கை எடுக்க மாட்டானுக. இவனுகளை ஒரு சவுண்ட் ப்ரூஃப் ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு, சுத்திலும் வித விதமான ஹார்ன் சவுண்ட் ஒலிக்க விட்டு ஒரு நாள் முழுக்க கேட்க வைக்கணும். லூசுங்க…


இதெல்லாம் போக பக்கத்துல வந்து முந்தறது, இடதுபக்கமா முந்தறது, கண்ணை உறுத்தற மாதிரி லைட் போட்டுட்டு டிம் பண்ணாம எதிர்ல வர்றது, அடுத்தவன் வந்து எப்படி நிறுத்துவான்னு யோசிக்காம வண்டியை பார்க் பண்ணீட்டு போறதுன்னு நிறைய இருக்குங்க.. எல்லாம் எழுதினா ப்ளாக்கர் தாங்காது!


.




Wednesday, August 3, 2011

மனுஷனாப் பொறந்தா..


“ஹலோ XXXX பேங்க்-லேர்ந்து பேசறோம்... கேன் ஐ டாக் டு..................?”

“யெஸ்.. ஸ்பீக்கிங். சொல்லுங்க”
“ஹவுசிங் லோன் அப்ளை பண்ணீருந்திங்கல்லியா? அதுவிஷயமா என்கொயரி பண்ணக் கூப்ட்டோம். நான் கேட்கற விஷயங்களை சொல்லுங்க”

“ஆனா மேடம்.. ஏற்கனவே இந்த டீடெய்ல்ஸ் எல்லாம் கேட்டு, வெரிஃபிகேஷனும் வந்துட்டுப் போய்ட்டாங்க..”

“பரவால்ல சொல்லுங்க... உங்க பேரு..”

“......”

”கல்யாணமாய்டுச்சா?”

“ஆமாங்க”

“உங்க மனைவி பேரு?”

“........”

“உங்க சம்பளம்?”

“.........”

“உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு?”

“.....”

“ஓகே.. உங்க மனைவி வேலைக்குப் போறாங்களா.. அவங்க ஏர்னிங் எவ்வளவு?”

“மேடம் கோச்சுக்காதீங்க.. நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். தவிரவும் இதே கேள்விகளை ஏற்கனவே பலதடவை கேட்டுட்டாங்க. ஒவ்வொருக்காவும் லோன் டூ வீக்ஸ்ல வந்துடும்கறாங்க. சைட்டையும்கூட டெக்னிகல் விசிட் வந்து பார்த்துட்டு போய்ட்டாங்க.”

“ஹலோ.. என்னங்க மரியாதை இல்லாம எரிஞ்சு விழறீங்க? லோன் அப்ளை பண்ணீருக்கதானே.. அப்ப எத்தனை தடவை கேட்டாலும் சொல்லித்தான் ஆகணும்!”

“மேடம் நான் எங்க எரிஞ்சு விழுந்தேன்?”

“இதோ இப்ப கோவமா பேசறீங்கதானே?”

“என்னங்க பிரச்னை உங்களுக்கு? நாலைஞ்சு வாட்டி இந்த டீடெய்ல்ஸ் கேட்டுட்டாங்க. தவிரவும் வீட்டுக்கும் ஆஃபீஸுக்கும் ரெண்டு வாட்டி வெரிஃபிகேஷனும் வந்துட்டாங்க. அதுனால எப்ப சாங்க்‌ஷன் பண்ணுவீங்கன்னு கேட்கறேன். அவ்வளவுதான்”

“சரிங்க நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம். போதுமா?”

“என்னதுக்கு மேடம் இப்ப கோச்சுக்கறீங்க?”

“ஹலோ.. லோன் வேணும்னா கேட்கறதுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும். எத்தனை தடவை கேட்டாலும் சொல்லணும்”

“என்னங்க மேடம் இது! லோன் அப்ளை பண்ணீருக்கேன்தான். அதுக்காக ஒருத்தனுக்கு ஃபோன் பண்ணி பேசலாமான்னு கூட கேட்காம நீங்கபாட்டுக்கு குற்றவாளி மாதிரி கேள்வி கேட்பீங்களா? லோன் அப்ளை பண்ணினா அவன் மனுஷன் கிடையாதா?”

“சரி.. நீங்க ஒண்ணும் சொல்லவேணாம்...”

“ஹலோ.. ஹலோ..”

“சார்.. என்ன சார்.. டென்ஷனாகறீங்க?”

“பேசப் பேச ஃபோனை வெச்சுட்டா. லோன் வாங்கினா நான் மனுஷன் இல்லையா? மனுஷன்னா ரோஷம் வரணும் சார். நான் மனுஷன். ரொம்ப ச்சீப்பா பேசறா.. அதான் ரோஷம் வந்துச்சு. கத்தினேன்...”

** **

“லோன் என்னாச்சுங்க? பேங்க் போனீங்களா?”

“ம்ம்... வந்துடும். ஏதோ பேப்பர் கேட்டாங்கன்னு இஞ்சினியர் சொன்னாரு.. வர்ற மண்டே குடுத்துடுவாராம். எப்படியும் அடுத்த வாரம் லோன் ஓகே ஆகிடும்”

“இப்படியேதான் ரெண்டு மூணு வாரமா சொல்றீங்க..”

“அடுத்தவாரம் கண்டிப்பா ஆகிடும்..”

“ம்க்கும்!”

“என்ன என்னடி பண்ணச் சொல்ற? பேங்க்காரன் வந்து வாங்கிக்கன்னு சொல்லி நான் போகாத மாதிரி. நீயும் எரிஞ்சு விழு..”

“ம்ம். என்கிட்ட காமிங்க உங்க ரோஷத்தையும் கோவத்தையும்... பேங்க்காரன்கிட்டயும், ப்ரமோட்டர்ஸ்கிட்டயும் காமிச்சு வேலைய முடிக்கற வழியக் காணோம். நான் கேட்டா மட்டும் கோவம் மூக்கு மேல வரும்”

“இதுக்குதான் நான் சாப்பிட உட்கார்றதே இல்லை. சாப்பிட உட்காந்தாத்தான் இந்தக் கதையெல்லாம் பேசுவ”

“என்னத்தக் கேட்டுட்டேன்னு இப்ப சாப்பாட்டு மேல கோவத்தை காட்டறீங்க? எனக்கென்ன? ரெண்டு தோசை போதும்னா நான் சுடறத நிறுத்தீட்டுப் போறேன். யாருக்கென்ன வந்தது..”

“ஆமா.. போதும் நீ ஒண்ணும் சுட வேண்டாம்..”

** **

“சார்.. நான் ..................... என் ஹவுசிங் லோன் விஷயமா பேசணும்னு வந்தேன்..”

“உங்க லோன் நம்பர்?”

“...........”

“ஓ.. நீங்கதானா அது? ஏன் சார்... பேங்க்ல கூப்ட்டு டீட்டெய்ல்ஸ் கேட்டா குடுக்கமுடியாதுன்னு சொல்லுவீங்களா?”

“ஐயோ சார்.. அப்படியெல்லாம் சொல்லல சார். நாலைஞ்சு தடவைக்கு மேல டீட்டெய்ல் டீட்டெய்ல்னு அதையேதான் கேட்கறாங்க..”

“ஹலோ நான் பேசீட்டிருக்கேன்.. ஏன் குறுக்க பேசறீங்க?”

“இல்ல சார்.. நீங்க கேட்டீங்கன்னு பதில் சொல்ல வந்..”

“ப்ச்.. மறுபடியும் நடுவுல பேசறீங்க.. லோன் அப்ளை பண்ணினா ஒண்ணுக்கு நூறுதடவை விசாரிக்கத்தான் செய்வாங்க. அதுக்கு கன்னாபின்னான்னு பேசறதா?”

“சார்.. கன்னாபின்னானெல்லாம் பேசலை சார்.. அந்தப் பொண்ணு ரொம்ப கோவமா ஹலோ ஹலோன்னு ஹார்ஷா கேட்கவும்”

“ஓ.. லோன் வாங்கறதுக்கு முன்னாடியே எங்க ஸ்டாஃபை கம்ப்ளெய்ண்ட் பண்றீங்களா நீங்க?”

“சார்.. என்ன சார்... எதச் சொன்னாலும் கோவமாவே பேசறீங்க? வீட்லயும் ப்ரச்னை சார். இன்ஜினியரும் வேலையை கிட்டத்தட்ட நிறுத்திட்டார். நீங்களும் இப்படி கோவமா பிஹேவ் பண்ணினா..”

”“ஹலோ மிஸ்டர்.. எங்க பேங்க்லேர்ந்து கூப்ட்டு கேட்ட்துக்கு நீங்க சரியா டீட்டெய்ல்ஸ் குடுக்கலை.. அதக் கேட்டா என் பிஹேவியரையே குறை சொல்வீங்களா?”

“ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை சார்..”

“ம்ஹும்.. நீங்க சரியில்லை. என் சீனியர்கிட்ட உங்களை கம்ப்ளெய்ண்ட் பண்றேன். இங்கயே இருங்க. இப்படி உட்காருங்க..”

“இல்ல பரவால்ல சார். நான் நின்னுட்டே இருக்கேன்.. சார்.. ப்ளீஸ் நான் கோவமா எதுவுமே பேசலை சார்.. புரிஞ்சுக்கோங்க”

“நோ நோ.. .வெய்ட்.. பேங்க்காரங்கன்னா உங்களுக்கு அப்படி ஆய்டுச்சு”

“சார் ப்ளீஸ் அப்ப்டிலாம் இல்லை சார்..”

“இங்க முன்னாடி நிக்காதீங்க. அங்க வெய்ட்டர்ஸ் சேர்ல உட்காருங்க. நான் கூப்பிடறப்போ வாங்க”

** ** **

“ஹலோ மிஸ்டர்............... என்ன இங்க?”

“இல்ல சார்.. ஹவுசிங் லோன் விஷயமா வந்தேன் சார். பேங்க்ல கூப்ட்டு என்கொய்ரி பண்ணாங்க. அப்ப மன்த்லி மீட்டிங்ல இருந்தேன்.. சரியா பேசலைன்னு கம்ப்ளெய்ண்ட் போல.மேனேஜரைப் பார்க்கணும்கறாங்க..”

“இவனுக இப்படித்தான் பண்ணுவானுக சார்.. இந்த மேனேஜரை போன மாசம் ஒரு செக் திருப்பி விட்டான்னு வாங்கு வாங்குன்னு வாங்கீட்டேன் நான். என் கம்பெனி அக்கவுண்ட் இத்தனை வருஷமா வெச்சிருக்கேன்.. எவ்ளோ டீலிங் நடக்குது. ஒரு இன்ஃபர்மேஷன்கூட இல்லாம எப்படி செக் ரிட்டர்ன் பண்லாம்னு போட்டு தாளிச்சுட்டேன். என்னைக் கண்டாலே பயந்துக்குவார். வாங்க போய் ரெண்டுல ஒண்ணு கேட்கலாம்”

“ஐயையோ.. வேணாங்க. நான் வெய்ட் பண்றேன். சண்டை வேணாம். அவர் கூப்டாலும் சாரி கேட்டுட்டு ஆக வேண்டியதப் பார்க்கப்போறேன்”

“என்ன சார்.. இப்படி இருக்கீங்க? மனுஷனா பொறந்தா ரோஷம் வேணும் சார்”


“கரெக்ட்தான். அதவிட- மனுஷனா பொறந்தா பணம் வேணும் சார்”

* * *

Thursday, July 28, 2011

அவியல் 28.07.2011

வர் ஒரு பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். அன்றைக்கு புதிதாக ஒரு பெண், அலுவலகத்துக்கு வரவே அனைவரும் 'ஹாய் ப்ரியா… ஹாய் ப்ரியா’ என்று வரவேற்றிருக்கிறார்கள். நம்மவரும், பழைய ரிப்போர்டர் போல என்று நினைத்துக் கொண்டு ‘பிரியா நீ.. வாங்கித்தருவியா பிரியாணி’ என்று மொக்கையாகச் சொல்லிவிட்டு இவர் சொன்னதுக்கு இவரே சிரித்து ரசித்திருக்கிறார்.

அந்தப் பெண் சட்டை செய்யாமல் நேராக மேனேஜர் சீட்டுக்குப் போக அந்த மேனேஜர் பவ்யமாக எழுந்து அவர் சீட்டை ப்ரியாவுக்குக் கொடுத்திருக்கிறார்.

நம்மவர் பயந்தவாறே பக்கத்து சீட்டில் விசாரிக்க ‘அவங்கதான் ஓனர் பொண்ணு’ என்றார்களாம்.

‘நாளைக்கு வேலை இருக்கான்னு தெரியல.. என்னடா பண்றது நான்?’ என்று கேட்டார்.

”நேராப்போய் சொல்லுங்க. ‘மொத்தமா மூணு தப்பு நடந்திருக்கு. நீங்க மொதலாளி பொண்ணா பொறந்தது மொத தப்பு. உங்க பேரை ப்ரியான்னு வெச்சுகிட்டது ரெண்டாவது தப்பு. வேற பேரா இருந்திருந்தா எனக்கு அந்த ரைமிங் வந்திருக்காது. மூணாவது தப்பு நான் உங்களை அப்படிக் கலாய்ச்சது. ரெண்டு தப்ப உங்க மேல வெச்சுட்டு ஒரு தப்புக்காக என்னைத் தண்டிக்கப்போறீங்களா?’ன்னு கேளுங்கன்னேன்.

என்ன ஆச்சோ! ஒரு வாரமா ஃபோனையும் காணோம். கூப்டாலும் எடுக்கலை.

--

ப்போதோ அவியலில் ம்யூசிக் சேனல்களில் பாடலைக் குறிப்பிடுவதோடு, பாடல் எழுதியவரையும், இசையமைப்பாளரையும் குறிப்பிட்டால் என்ன என்று கேட்டதாக ஞாபகம். சில சேனல்களில் போட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இப்போது வேணாம்டா என்று சொல்லத் தோன்றுகிறது. அதுவும் சன் ம்யூசிக் செய்கிற கொடுமை தாங்கமாட்டாமல் போய்க் கொண்டிருக்கிறது.


காதலின் தீபமொன்று பாடல் வைரமுத்து எழுதியதாகக் காட்டுகிறார்கள். அது பஞ்சு அருணாசலம் எழுதியது. இதைக் கூட மன்னித்துவிடலாம். நல்ல வரிகள் – ஆகவே ஒரு பிரபல கவிஞர் ஞாபகத்துக்கு வரலாம். இன்னொன்றைப் பார்த்துதான் நான் ஆடிப்போனேன். ஒரு முறை அல்ல, ஒன்றிரண்டு முறைகளுக்கு மேல் இந்தப் பாடல் போடும்போதெல்லாம் இப்படித்தான் போடுகிறார்கள்.

அது:

பாடல்:மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
வரிகள்: நா.முத்துக்குமார்
இசை: சுந்தர் சி பாபு.

ங்கொய்யால.. கோர்ட்ல இருக்கற கேஸ்கூட கேஸா, இதுக்கும் ஒண்ணு போடலாம்னான்னு பார்க்கறேன்.

** **

ண்பன் ஒருத்தன் அவன் அப்பாவைப் பற்றி எப்போதுமே - ‘எனக்கு அவர் எந்த கஷ்டமும் வெச்சதே இல்ல' என்பதாய் - பெருமையாகச் சொல்லிக் கொண்டிருப்பான்.

“எனக்கு தேதிகளை ஞாபகம் வெச்சுக்கற சிரமம் கூட இல்லைப்பா-ன்னு எங்கப்பாகிட்ட சொல்லீட்டே இருப்பேன். அவர் பொறந்தது ஜனவரி 1, நான் பொறந்தது ஆகஸ்ட் 15. இந்த மாதிரி ஸ்பெஷல் தேதிகளா அமைஞ்சிருக்கு பாரு” என்பான்.

சில வருடங்கள் கழித்து சென்ற வாரம் கோவை வரும் வழியில் யார் யாரிடமோ விசாரித்து என் நம்பர் கண்டுபிடித்து என்னை வந்து சந்தித்துச் சென்றான்.

“அப்பா இறந்துட்டார்டா. தெரியுமா?” என்றான். “இல்லைடா.. எப்ப என்றேன்?”

“போன வருஷம் ஃபெப்ரவரி 14 அன்னைக்கு”

எனக்கு என் அப்பா இறந்த தேதி ஞாபகம் வந்தது. 07.07.07

** ** **

சிக்னலின் வாகனத்தை நிறுத்தும் போது சிக்னல் டைமர் 45 செகன்டுக்கு மேல் காண்பித்தால் பெட்ரோல் சேமிக்க, உங்கள் வாகனத்தை அணைத்துவிடுவது உசிதம். 45 செகன்டுக்கு கம்மியாக இருந்து வாகனத்தை அணைத்தால், திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது செலவாகும் பெட்ரோல், அணைத்தபோது சேமித்த பெட்ரோலைவிட அதிகமாகத்தான் இருக்கும் - என்று எப்போதோ / எதிலோ படித்த ஞாபகம்.

இதுபற்றி ஆட்டோமொபைல் துறையிலிருக்கும் நண்பனிடம் கேட்டபோது ‘அதெல்லாம் அப்ப. இப்ப அட்வான்ஸ் மாடல் இஞ்ஜின்தான். பைக் எல்லாம் 10 செகண்ட் இருந்தாலும் ஆஃப் பண்ணீடலாம். ஸ்டார்ட்டிங் அப்ப அவ்வளவா பெட்ரோல் செலவாகாது’ என்றான்.

அப்படியா?


** **


தெய்வத்திருமகள் பார்த்த ஒரு நண்பர் பேசும்போது ‘படத்துல நிலாவைப் பார்க்கறப்ப எல்லாம் மீரா ஞாபகம் வருது. ஏன்னு தெரியல’ என்றார். இன்னொரு நண்பர் மெய்ல் அனுப்பியிருந்தார் ‘நிலாவைப் பார்க்கறப்ப மேகா ஞாபகம் வந்துச்சு’ என்று.

படத்தில் நிலாவின் அப்பா பெயர் கிருஷ்ணா என்றிருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதை விடவும் ஆழந்து யோசித்தால் இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நாயகனும் - சாலை விதிகளையெல்லாம் மதித்துக் கொண்டு - என்னைப் போலவே கொஞ்சம் மெண்டலாகத்தான் இருக்கிறான்.

** ** **




.