Showing posts with label Writer S.Ramakrishnan. Show all posts
Showing posts with label Writer S.Ramakrishnan. Show all posts

Friday, September 23, 2011

எழுத்தாளர் எஸ்.ரா-வுடன் ஒரு மாலை

எழுத்தாளர் எஸ்.ரா-வுடனான சந்திப்பிற்கு திருப்பூர் வலைப்பதிவர் குழுமமான சேர்தளம் ஏற்பாடு செய்திருக்கிறது. நண்பர்கள் வருகை தருமாறு சேர்தளம் சார்பில் வரவேற்கிறோம்.

இதைப் பற்றிய கட்டுரை நண்பர் முரளிகுமார் பத்மநாபன் பதிவிலிருந்து...

----

எஸ்.ராமகிருஷ்ணன், விருது நகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு என்ற கிராமத்தை சேர்ந்தவர். வெகுஜன பத்திரிக்கையான ஆனந்தவிகடனில் வெளியான இவரது கட்டுரைகளில் மூலம் பரவாலாக அறியப்பட்டவர் என்றாலும் தன்னுடைய பிரத்யேக எழுத்து நடையின் மூலம் தற்கால தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்தவர். சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள், புத்தக அறிமுகங்கள், உலக சினிமாக்களின் அறிமுகங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என தொடர்ந்து எழுத்துலகில் இயங்கிவரும் முழு நேர எழுத்தாளர்.

டால்ஸ்டாயின் எழுத்து பாசமிக்க தாத்தாவின் கரங்களைப்போல நெருக்கமும் வலிமையும் கொண்டது. அந்தக் கரங்கள் மண்ணோடு நேரடியாகத்தொடர்பு கொண்டது. உலகின்மீது அதீத நம்பிக்கை கொண்டவை. அவரைக் கட்டிக்கொள்ளவும் அவரது அனுப்வங்களைக் கற்றுக்கொள்ளவும் முடியும் ஆனால் அவர் தோளில் கைபோடும் நண்பனாக என்னால் ஒருபோதும் கொள்ளமுடியாது. இதற்கு நேர்மாறாக தாஸ்தாயெவ்ஸ்கியிருந்தார். அவரது கதைகளைப் படிக்கத்துவங்கியதும், அவர் உரிமையுடன் தோள்களில் கைபோட்டுக்கொண்டு அக்கறையோடும் ஆதங்கத்தோடும் தனது இயலாமையை, புறக்கணிப்பை அதன் ஊடாகவும் தான் வாழ்வில் கண்டு மகிழ்ந்த சின்னஞ்சிறு சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வார். கனவுகளைப் பற்றி பேசுவார், வலிகளை ஏற்றுக்கொள்ளச் சொல்வார். உலகம் அழகான பெண்களின் காதலுக்காக மட்டுமே இயங்குகிறது என்று உற்சாகம் கொள்ளச் சொல்வார்.

இது டால்ஸ்டாய் மற்றும் தாஸ்தாயெவ்ஸ்கி பற்றி தன்னுடைய ஒரு கட்டுரையில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது. எஸ்.ரா, இவர்களைப் படித்த அளவிற்கு நான் எஸ்.ராவைப் வாசித்திராத பொழுதும் இவரைப்பற்றி சொல்லவும் பேசவும் நிறைய இருக்கிறது என்னிடம்.

முதலில் ஆனந்த விகடனில் வெளிவந்த இவரது துணையெழுத்தில்தான் எஸ்.ராவை வாசிக்கத்தொடங்கினேன். தொடர்ந்து கதாவிலாசம், தேசாந்திரி போன்ற கட்டுரைகள் இவரது எழுத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் சுற்றியலைந்த அனுபவத்தை தேசாந்திரியில் அப்படியே தன் எழுத்துக்களில் பகிர்ந்திருப்பார். முன் அறிமுகம் இல்லாத மனிதர்களோடான ஸ்னேகம் என்பது எவ்வலவு அலாதியானது என்பதை இவரது எழுத்தில் உணரலாம். இருட்டில் விளக்கோடு உதவிய ஆட்டோகாரர், பாம்புக்கடிக்கு மருந்திட்டு காப்பாற்றிய ஏழை விவசாயி, அடுத்தவேளை சோற்றிற்கின்றி அலைந்த நேரங்களில் சந்தித்த மனிதர்கள் என இவரது கட்டுரையில் வருகிற மனிதர்கள், மனிதம் நிரம்பியவர்களாய் இருக்கின்றனர். அவர்களின் உறவுகளோ, சக மனிதர்களோடான பரஸ்பர அன்பையும் நம்பிக்கையையும் மனதில் விதைக்கும் படியாக இருக்கிறது.

குறிப்பாக கதாவிலாசத்தில் வரும் கட்டுரைகள், அந்த எழுத்தாளர்களைப்பற்றிய வெறும் தகவல்களாகவோ, புள்ளிவிபரங்களாகவோ, அவர்களின் உயர்த்திச் சொல்லவேண்டிய எந்த கட்டாயங்களையோ சுமந்து நிற்பதில்லை. மாறாக, அவர்களின் வாழ்வை, எழுத்தின் மீதான அவர்களின் ஆளுமையை, அவர்களின் வாயிலாகவே சொல்லவைக்கிறது. வண்ணநிலவனையும், பஷீரையும், கு.அழகிரிசாமியையும் தேடித்தேடிப் படிக்கச் செய்கிறது. இன்னும், வாசிப்பு உலகில் அடியெடுத்து வைக்கும் எவருக்கும் அறிமுகமாய் என்னுடைய விரல்கள் இவரது கதாவிலாசத்தை நோக்கியே நீண்டிருக்கும். ஒரு எழுத்தாளனாய் தன் சமகால, முன்னோடி எழுத்தாளர்களை, அவர்களின் எழுத்துக்களின் மீதான தனது காதலை எந்தவித பிணக்குமின்றி எழுதுவது இவரது தனித்தன்மை.

இவரது எழுத்துக்களில் இன்னும் வசீகரமானது, இதுவரை அறியப்படாத பல விஷயங்களை, கவிதைகளை, கதைகளை அதன் வரிகளை, மேற்கோள்களாக காட்டுவதுதான். இவருடைய ஏதோவொரு கட்டுரையில் வரும் ஜென் கவிதையொன்றில் “மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆறு சலனமற்று இருக்கிறது” இந்தவரிகளை எத்தனை முறை வாசித்திருப்பேனென்று தெரியாது. இதுபோன்ற வரிகள் அடுத்தடுத்ததாக புதிய புத்தகத்தின் மீதான தேடலை ஆரம்பித்து வைக்கிறது. இந்த தேடலை இவரது எழுத்துக்கள் இயல்பாக செய்துபோகிறது.

இவரது சமீபத்திய புத்தகமான வாசகபர்வத்தின் முன்னுரையில் “ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு, மெளனமும் பதற்றமும் நிரம்பியவை. அந்த வாசகனே ஒரு படைப்பாளியாகவும் இருக்கும்போது அந்த உறவு மனோரீதியாக எண்ணற்ற அலைகளை உருவாக்குகிறது” என்று ஒரு வரி வரும். அதை என்னாலும் உணரமுடிகிறது என்பது ஒரு பெருமிதம் கலந்த மகிழ்ச்சியே.

எஸ்.ராவின் எழுத்துக்களைத் தொடர்ச்சியாய் ஏழு வருடங்களுக்கும் மேலாக வாசித்து வருகிறேன். அவரை மட்டுமல்ல, எப்படி வாசிக்க வேண்டும், எவரையெல்லாம் வாசிக்கவேண்டும் என்று அவர் சொல்லிக்கொடுத்தபடியே ஜி.நாகராஜனை, புதுமைப்பித்தனை, சம்பத்தை, பஷீரை, வண்ணதாசனை, எம்.எஸ்ஸை, நகுலனை, வண்ணநிலவனை, போர்ஹேவை, செகாவை இன்னும் பலரை. பாரதியார் கதைகள் கூட எழுதுவார் என்றோ வண்ணதாசன் என்று ஒரு ஆளுமை இருக்கின்றார் என்பதோ தெரியாத நான் இவர்களைப் வாசித்திருக்கிறேன் என்றால், இத்தனைக்கும் காரணமான ஒரு மனிதரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்குமல்லவா?

என் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் சில நண்பர்கள் என்னிடம் “முரளி, உன்னுடைய தொடர்ச்சியான வாசிப்பனுபவம் உன் உன் எழுத்துக்களில் தெரிகிறது, அது உன் எழுத்துக்களில் சின்னச்சின்ன மாறுதல்களைப் பிரதிபலிக்கிறது” என்று சொல்கின்றனர். இதற்கு என்னுடைய பதில் ஏற்கனவே என்னுடைய ஒரு பதிவில் எழுதியது போல “என்னுடைய ஒவ்வொரு பதிவையும் எஸ்.ராவை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாய் உணர்கிறேன். மெல்லமெல்ல முன்னேறும் நதி என்றேனும் ஒருநாள் கடல் சேர்ந்துதான் ஆக வேண்டும், அதுதான் விதி”. இப்பொழுது சந்தோஷமான அந்தத் தருணம் நெருங்கி விட்டது. என் ஆதர்ச எழுத்தாளரை சந்திக்கவிருக்கிறேன், சொல்லப்போனால் கையைப்பிடித்து அழுத்தமாக ஒரு நன்றி சொல்லப் போகிறேன்.

இதற்கு முன்பாக இரண்டு முறை நேரில் சந்தித்திருந்தாலும் அதிகம் அவருடன் உரையாட முடியவில்லை. அதிலும் கடந்தமுறை மதுரையில் நடந்த விழாவில் செகாவ் பற்றியும் கிரேக்கத்து முயல் பற்றியும் அவர் பேசியதிலிருந்து, கூடுமான வரை விரைவில் அவரை சந்தித்து உரையாட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன். சமீபத்தில் நெடுங்குருதி குறித்த ஒரு கட்டுரையை அவருக்கு அனுப்பியிருந்தேன், அது குறித்த தொடர் உரையாடலில் சேர்தளம் – திருப்பூர் வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக அவரை திருப்பூருக்கு அழைத்திருந்தோம். அவரும் வரச் சம்மதித்திருக்கிறார். வருகிற ஞாயிறு மாலை, அரோமா ஹாலில் ஒரு கலந்துரையாடல் போல நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.




எங்களைப் போல அவரை சந்திக்க, கலந்துரையாட விருப்பமிருக்கும் நண்பர்கள் தங்களது வருகையை பதிவுசெய்துகொள்ளுங்கள். முன்னேற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும்.

இந்தியா முழுவதும் நடந்து திரிந்த ஒரு தேசாந்திரியான இவருடன் இலக்கற்ற பயணம் மற்றும் அவரது எழுத்துக்கள் குறித்தான ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். நண்பர்கள் இதையே அழைப்பிதழாக ஏற்று வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

-முரளிகுமார் பத்மநாபன்


...