Friday, February 7, 2014

நேர்மைடா!

வன் அந்தக் கடையை விட்டு வந்தபோது வெளியே நின்றிருந்தார் ஒருவர். பழுப்பேறிய மேற்சட்டை. கிழிந்த பேண்ட்.

இவனைப் பார்த்ததும் அருகே வந்தார்.

“ப்ரதர்..”

நல்ல தெளிவான உச்சரிப்பு.

“ப்ரதர்... அந்தக் கடையில சாப்பிடறதுக்கு எதாவது வாங்கித் தர முடியுமா?”

அவர் கைகாட்டிய திசையில் ஒரு கையேந்திபவன்.

இவன் சில கணம் யோசித்தான்.

“காசு வேணாம் ப்ரதர். பசிக்குது. சாப்பிட ஏதும் வாங்கித் தாங்க”

அவர் கை, தானாக அவரது வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தது.

இவன் யோசித்து ஓர் இருவது ரூவாய்த் தாளை எடுத்தான்.

“இந்தாங்க... ஆனா.. இங்க பாருங்க.. சிகரெட், ட்ரிங்க்ஸுன்னு வாங்கக் கூடாது ஆமா..” - சொன்னான்.

“நோ ப்ரதர்... நீங்களே வாங்கிக் குடுங்க”

இவன் தலையாட்டினான்.

“இல்லல்ல... வாங்கிக்கோங்க. ஆனா இந்தக் காசுல..”

”சிகரெட்.. ட்ரிங்ஸ் வாங்க மாட்டேன் ப்ரதர். ப்ராமிஸ்” என்றார்.

இவன் அவர் கையில் காசைக் கொடுத்து விட்டு சற்றே தூரத்தில் நின்றிருந்த இருசக்கர வாகனம் நோக்கிப் போனான். போகும்போது திரும்பித் திரும்பி அவரைப் பார்த்தபடியே இருந்தான்.

அந்தக் கையேந்தி பவன் கைவண்டியில் எதுவோ அவர் ஆர்டர் செய்வதும், அவர்கள் பார்சல் பேப்பர் எடுப்பதும் தெரிந்தது.

இவனது வாகனத்தில் அருகில் சென்று, சாவியைக் கொடுத்து வாகனத்தை திருப்பிக் கொண்டிருக்கும்போது அவர் கையில் சிறு பார்சலோடு திரும்புவதைப் பார்த்தான்.

இவன் வாகனத்தில் ஏறி, ஸ்டார்ட் செய்ய எத்தனிக்கும்போது, அவர், பூட்டப்பட்டிருந்த - சற்றே இருட்டிய கடை ஒன்றின் முன் அமர்வதைக் கண்டான்.

இவன் வாகனத்தை ஸ்டார்ட் செய்து நான்கைந்து அடி தாண்டி, ஒரு முறை திரும்பிய போது - கவனித்தான்.

அவர், தன் சட்டையை உயர்த்தி, இடுப்பிலிருந்து ஒரு மது பாட்டிலை எடுத்து மூடியைக் கழட்டிக் கொண்டிருந்தார்.

சற்றே ரௌத்ரம் தலைக்கேற, வண்டியை அவர் அமர்ந்திருந்த கடை முன் செலுத்தி, அவர் அருகே நின்றான்.

அவர் -பாட்டிலை உயர்த்திக் காண்பித்து,  கொஞ்சம் உரத்த குரலில்  சொன்னார்:

“ப்ரதர்... டோண்ட் வர்ரி.. இது உங்க காசுல வாங்கினதில்லை...”

.