Wednesday, January 28, 2015

அவன்களால்தான் நிறைந்த உலகு

2005

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.

“என்னாச்சுங்க?”

“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.

“அப்ப அரை கிலோமீட்ட முன்னாலதான பெட்ரோல் பங்க்? எதுக்கு தள்ளீட்டே போறீங்க? இனிமே போனா அஞ்சாறு கிலோமீட்டராகும் பெட்ரோல் பங்க் வர..”

“அது வந்து..” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, வார்த்தைகளை மென்று விழுங்கினர்.


“ஏங்க.. என்னாச்சு?”

“பெட்ரோலுக்கு காசில்லைங்க. அதான் அப்டியே தள்ளீட்டு போய்டறோம். மூணு, நாலு கிலோமீட்டர்ல எங்க கம்பெனி வந்துடும்”

அவன் யோசித்தான். “என்னோட பைக்கும் ரிசர்வ்தான் பாஸ். வேண்ணா ஒண்ணு பண்லாம்” தன் பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். “முப்பது ரூவா இருக்கு. அப்டியே பின்னால போய், அந்த பங்க்லயே அடிச்சுட்டுப் போங்க. வேகாத வெயில்ல எவ்ளோதூரம் தள்ளுவீங்க!”

“ரொம்ம்ம்ப தேங்க்ஸ் பாஸ்!!”

-------------------------

2010

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் இருவரைப் பார்த்தான். இருவருமே தங்கள் பைக்கைத் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும்போது, பைக் டயர்களை கவனித்தான். பஞ்சர் ஏதுமில்லை. தன் பைக்கின் வேகத்தைக் குறைத்தான்.

“என்னாச்சுங்க?”

“பெட்ரோல் இல்லாம நின்னுடுச்சுங்க” - இருவரில் ஒருவர்.

இவன் பைக்கை நிறுத்தினான். சாலையோரம் ஏதும் தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று தேடினான்.

“பெட்ரோல் பங்க் ரொம்ப தூரம்க. நான் கொஞ்சம் பெட்ரோல் தர்றேன். போயிருங்க. வெயில் வேற ஜாஸ்தியாருக்கு. பாட்டில் ஏதும் கெடைக்குதான்னு பாருங்க”

அவர்கள் இருவரும் இவன் அருகில் வந்து தேடினர். 

சாலை நீளமாய், ஒன்றிரண்டு வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருந்தது. நான்கைந்து நிமிடங்களில் ஒருவரும் இருக்கவில்லை சாலையில்.

இவன் பாட்டிலைத் தேட, இவன் இருபுறமும் நின்றிருந்த இருவரில் ஒருவன், இவன் தோளில் கைபோட்டான். இன்னொரு கையில் ச்சின்ன கத்தி முளைத்திருந்தது.

“பாஸ்.. ஃபோன், காசு, வாட்ச் எதிருந்தாலும் எடுத்து அவண்ட்ட குடுத்துடு பாஸு. எதும் வித்தியாசமா ட்ரை பண்ணி வெட்டு வாங்கிக்காத”

இவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. டக்கென்று இடதுகையை பாக்கெட்டில் விட்டு, மோதிரத்தை நைஸாக விரலாலேயே கழட்டி பேண்ட் பாக்கெட்டில் போட்டான்.

டக்கென்று பின்பாக்கெட்டில் கைவிட்டு காசை எடுத்தான். வாட்ச்சைக் கழட்டினான்.

“முன்னூறு ரூவாதான் இருக்கு. வாட்ச் இந்தாங்க. ப்ளீஸ் ஃபோனை விட்டுடுங்க. ஆஃபீஸ் ஃபோன். காண்டாக்ஸ்லாம் இருக்கு. நான் மெர்ச்செண்டைஸரா வேலை செய்யறேன். கால் வந்துட்டே இருக்கும். ப்ளீஸ் கெஞ்சிக் கேட்டுக்கறேன். உங்களை நம்பி பட்டப்பகல்ல பைக்கை நிறுத்தினேன். இப்டி பண்ணீட்டீங்களே..”

“அட்வைஸ்லாம் வேணாம் பாஸ். ஓகே. ஃபோனை வெச்சுக்கங்க” என்ற ஒருவன், இரண்டாமவனிடம் “போலாண்டா. வேற காசில்லை இவண்ட்ட” என்றபடி தங்கள் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினர். 


அவன் மிகுந்த வேதனையோடு தன் பைக்கை எடுத்து அந்த இடத்தைக் கடக்கையில், வெறும் இருநூறு அடி தொலைவில் இருந்த போலீஸ் செக்போஸ்ட்டை வாழ்நாளுக்கான வெறுப்புடன் பார்த்தபடி கடந்தான்.

-------------------

2015

வன் பைக்கை செலுத்திக் கொண்டிருக்கையில் தூரத்தில் ஒருவரைப் பார்த்தான். தன் பைக், நின்று கொண்டிருக்க - இவனை நோக்கி கை காட்டியபடி நின்று கொண்டிருந்தார். 

அருகில் சென்றவன் ஏதோ யோசனை வந்தவனாய், பைக் வேகத்தை அதிகப்படுத்தியபடி சென்றுவிட்டான்.

--------------------------

குறிப்பு: அவனும் அவனும் அவனும் வேறு வேறு ஆட்கள். ஆனால் அவன் செய்தது, அவனுக்கும்-அவனுக்கும், அவனுக்கு நிகழ்ந்தது அவனுக்கும்-அவனுக்கும் தெரியும். அவன் செய்ததன் காரணமாக, அவன் செய்ய நினைத்து மாட்டிக் கொண்டதால் அவன் அதைச் செய்யவில்லை. அவ்வளவுதான். 


**


Monday, January 26, 2015

அவியல் 26 ஜனவரி 2015

ந்தக் குடியரசு தினம் வந்தாலும், போய் நெட்டில் இரண்டு விஷயங்களைத் தேடுவோம்.

1. இது எத்தனையாவது குடியரசு தினம்?
2. சுதந்திர தினத்துக்கும் குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

இதை இரண்டையும் தெரிந்து கொண்டு கொஞ்சம் மானே தேனே போட்டு குடியரசு தினத்தைக் கொண்டாடிவிட்டு வந்தாச்சு.


 ‘டேஏஏஏஏஏஏஏஏய்.... ஒரு இந்தியன் இப்டி எப்டிச் சொல்லப் போச்சு?’ என்று குத்தவராதீர்கள். இந்தியன் என்றால் உண்மையைச் சொல்லலாம் இல்லையா?

____________________

தொட்டால் தொடரும்
............................................

ண்பர் கேபிள் சங்கர் டைரக்‌ஷன், வசனம், இன்னொரு நண்பன் கார்க்கி இயக்கம் - வசனத்தில் உதவி என்று வந்திருக்கும் படம்.

நல்ல கதை. நல்ல வசனம், மோசமான திரைக்கதை, படு கடுப்பேற்றும் பின்னணி இசை. ஹீரோயின், வேறொரு ஃபோட்டோவை எடுத்து தன் ஃபோட்டோவை வைக்கும் இடத்தில் படம் ஆரம்பித்திருக்க வேண்டும். அந்த விறுவிறுப்பை கொண்டு போனபடியே மற்றவற்றை ஃப்ளேஷ்பேக்கில் காட்டியிருக்கலாம். பாலாஜியின் நடிப்பும் வசனங்களும் நன்று. தமன் / அருந்ததி நடிப்பும் நிறைவு. 

பழம் தின்று கொட்டை போட்ட சிலர் எடுக்கும் படங்களெல்லாம் இரண்டாவது மூன்றாவது சீனிலேயே கொட்டாவி வர வைக்கிற சமயத்தில் முதல் படமாக இது பரவாயில்லை. அடுத்த படத்துல பார்த்துக்கலாம் கேபிள்!

-------------------------------


டனடி கருத்து சொல்கிற வியாதி ஒன்று படுமோசமாக பரவி வருகிறது. எல்லாவற்றிற்கும் உடனடி கருத்து. செய்திகளை முந்தித் தருவதாய் எண்ணி கே.பாலச்சந்தர் இறப்பதற்கு முன்னரே RIP போட ஆரம்பித்துவிட்டார்கள் வாட்ஸப்பில். ரஜினிகாந்துக்கு இவர்களே பத்மபூஷன் குடுத்துவிட்டார்கள். இப்படி நிறைய. 

ஒரு 99 நாள் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் க்ரூப்பையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டேன்.

அதுவரை இங்கே மட்டும் எழுதுவதாய் உத்தேசம். பார்க்கலாம்.

.  

Friday, January 23, 2015

ரிப்போர்ட்

"ஏப்பா ரிப்போர்ட் கேட்டு ரெண்டு நாளாச்சு. இன்னைக்கு தர்றேன்ன.. ஞாபகமிருக்கில்ல?”

“இருக்கு சார்” என்றான் கணேஷ்.

“இருக்கா? ஞாபகமிருக்குங்கறியா... இல்லை ரிப்போர்ட் ரெடியா இருக்கா?”

“ஞாபகமிருக்கு சார். ரிப்போர்ட் இன்னும் ஒன் ஹவர்ல ரெடியாகிடும்”

“சரி.. கேபினுக்கு கொண்டு வா” என்று நகர்ந்தார் மேனேஜர்.

*

“இன்னிக்கு நீயா?” என்றாள் மானஸா.

“ஆமாப்பா” என்றான் கணேஷ்.

“என்ன ரிப்போர்ட் குடுத்தாலும் எதாச்சும் ஒரு நொள்ளை சொல்லுவார். நாம எவ்ளோ கரெக்டா, எல்லா டேட்டாஸ் எடுத்தாலும் இல்லாத ஒண்ணைத்தான் கேட்பாரு” - புலம்பினாள் மானஸா.

”இப்படித்தான் போனவாரம்  நான்  ஒரு ரிப்போர்ட் குடுத்தனா..” என்று ஆரம்பித்தான் அடுத்த டெஸ்க் சுந்தர். அதன்பின் நான்கைந்து இப்படித்தான்கள் வந்தன.

“ப்ளீஸ்.. இன்னும் அரைமணி நேரத்துல ரெடி பண்ணிக் கொண்டு போகணும். எல்லாரும் சைலன்ஸ் ப்ளீஸ்” என்றான் கணேஷ்.

சிஸ்டத்தில் ஃபோல்டரைத் தேடினான். எக்ஸெல்லை திறந்தான். ஒவ்வொன்றாக காபி பேஸ்டினான். மூன்று மாத ரிப்போர்ட்டைத் தொகுத்தான். ஒவ்வொரு ஷீட்டிலும் ஒவ்வொரு விதமாக அதை பதிவாக்கினான். எல்லாவற்றிற்கும் Chart க்ரியேட் செய்தான். ஒவ்வொன்றையும் தனித்தனியாக காண்பிக்க எழுத்து / எண்களுக்கெல்லாம் வேறு வேறு கலர் கொடுத்தான்.   மொத்தம் 12 பக்கம் வந்தது.

45 நிமிடங்களானது முடிக்க.

ப்ரிண்ட் எடுத்தான். ஃபைல் ஃபோல்டர் ஒன்றை தேடி எடுத்து அதில் வரிசையாக சொருகினான்.

55  நிமிடங்கள்.

எழுந்தான். சுற்றியுள்ளவர்களையெல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு நடந்தான்.


 மேனேஜர் கேபினை - எக்ஸ்யூஸச் சொல்லிவிட்டுத் - திறந்தான்.

“3 மாச ரிப்போர்ட் சார்” என்றான்.

வாங்கியவர் இரண்டே நிமிடங்கள் மேய்ந்து விட்டுக் கேட்டார்:

“ப்ரிண்டர் டோனர் மாத்தலியா? பேப்பர்ல கோடு விழுது பாரு. போனதடவை சுந்தர்கிட்டயே சொன்னேன்.  மேனேஜர்ட்ட  ஒரு ஃபைல் குடுக்கறதுன்னா இப்படித்தான் குடுப்பீங்களா? சீ மிஸ்டர் கணேஷ்...” என்று ஆரம்பித்தார் மேனேஜர்.
.




Thursday, January 22, 2015

தொட்டால் தொடரும்!



உள்ளதை உள்ளபடி ஒரு சிலரிடம் மட்டுமே பேச முடியும். எனக்கு அப்படி ஒரு நண்பர் கேபிள் சங்கர்.

பேசாவிட்டாலும் இவனுக்கு என்னையும் எனக்கு இவனையும் தெரியும். அவன் - கார்க்கி.


வலையுலகம் தொட்டு ஆரம்பித்த நட்பு - தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

நன்றாக நினைவிருக்கிறது... கேபிளுக்கு இந்தப் படம் இயக்க வாய்ப்பு வந்ததும், உடனே நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு, “கார்க்கி.. நீயும் என்கூட வொர்க் பண்ற” என்றார்.

உதவி இயக்கம், வசனம் உட்பட பாடல் ஒன்றையும் எழுதியிருக்கிறான் கார்க்கி. அவன் பெயரை போஸ்டரில் பார்த்தபோதே மகிழ்வாக இருந்தது. நாளை திரையில் பார்க்கப் போகிறேன்.

சூப்பர் சிங்கர் ஜூனியரில், குழந்தைகளுக்காக ஓட்டு கேட்கும் பெற்றோர்களை நேற்றுதான் கிண்டலடித்துக் கொண்டிருந்தேன்.

“நல்லா இருந்தா ஓட்டுப் போடுங்கன்னு கேட்காம, ‘உங்க வீட்டுக் கொழந்தை, ரொம்ப ப்ராக்டீஸ் பண்ணினா, அவளுக்கு இசைதான் உயிரு’ இப்டியெல்லாமா சொல்லி ஓட்டுக் கேட்பாங்க?” என்று.

அதன்படி, படத்தை உண்மையாக விமர்சியுங்கள். விமர்சிக்க என்ன செய்ய வேண்டும்?

ஆங்! தியேட்டரில் போய்ப் பார்க்க வேண்டும்!

கேபிள் சங்கர் & கார்க்கி...

உங்கள் பெயர் திரையில் வருகையில் ஓங்கி ஒலிக்கும் ஒவ்வொரு கைதட்டலும் என்னுடையதாக எண்ணிக் கொள்ளுங்கள்!

இந்த வெற்றிப் பயணம்....  தொடரட்டும்!

.

இதை எதுல எழுதுவீங்க?

“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க?” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.

ஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா? அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ..  ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.

கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

நான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.


“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல?”

உட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“இல்ல... ஏன் கேக்கறீங்க? நீங்க யாரு?”

“என்னைத் தெரியாதா? டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்கதானே வழி விடறீங்க?”

“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.

அவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.

“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க?”

“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?”

இந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.

“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல? அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.

புன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.

உடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.

 “தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப  ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”

“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க?”

“நீங்க நிருபரா?”

“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”

“கரெக்டா சொன்னனுங்களா? அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா?”

“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”

“புரியலையே தம்பி...”

“ஃபேஸ்புக் தெரியும்களா? நெட்ல எல்லாம் எழுதுவாங்க..”

“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”

“ஐயா உங்க பேர் கேட்டேனே...”

“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க?”

“சரி..  உதவின்னா காசு வாங்குவீங்களா?”

அப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது?’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.

“சில்லறை இல்லீங்களா?”

“இல்லீங்களே”

இவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.

“உள் பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.

“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.

வாங்கியவர்,  அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.

 “ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.

 “கறாரா வாங்கீடுவீங்க போல?”

“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி.  ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”

அவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.

“ஒருநாளைக்கு எவ்ளோ வரும்?”

“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.

“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”

“டீ சாப்டப்போறேன்.. வர்றீங்களா?”

“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க!”

“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.

“சரிங்க” என்றேன்.

“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி?”

“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதுங்களே..”

“நெட்ல எழுதுவேன்னு வெச்சுக்குங்க”

“இணையத்துலயா? சரிங்க. எழுதினா காமிங்க”

“சரிங்கய்யா”

“அப்ப நான் வரட்டுமா? என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.

“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”

நான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.

“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.

 “அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.

“நீங்க?”

“நான் இங்கதான் இருக்கேன்”

“எங்க?”

“இதே ஊர்ல..”

“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”

“சும்மாதான் இருக்கேன்” என்றான்.

>>>

Tuesday, January 20, 2015

வெல்டன் மதன் கார்க்கி!


mile emotic(1)

ஐ!

மிகுந்த எதிர்பார்ப்போடு போய்ப் பார்த்தபடம். படம் பார்த்தபிறகு, ஷங்கர் ஒரு விளம்பர ஏஜன்ஸி ஆரம்பித்திருந்தால் நம்பர் ஒன் ஆக வந்திருப்பார் என்று தோன்ற வைத்தது அவர் காட்சிப்படுத்தியிருந்த சில பல ஐடியாக்கள்.

அதிலும், ஐல ஐல ஐ பாடலில் நான்கு  ப்ராடக்டுகளுக்கான விளம்பரத்தைக் கண்பித்திருப்பார்கள். அந்தப் பாடலின் மூலமேதான், விளம்பர உலகில் எமியும், விக்ரமும் ஜோடி சேர்ந்து கலக்குவார்கள் என்பதும் / அவர்களிருவரும் காதலிக்கத் துவங்கி - காதலில் திளைப்பதும் காண்பிக்கப்பட்டிருக்கும். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கான்செப்ட்கள் அட்டகாசம். யார் குடுத்திருந்தாலும் சபாஷ்! 

இதில் விசேஷம் என்னவென்றால், மதன் கார்க்கியின் அசத்தலான வரிகள். தனியாகக் கேட்டால், இருவரும் பாடும் காதல் பாடல் போலவும், படத்தில், காண்பிக்கப்படும் ப்ராடக்ட் விளம்பரங்களுக்கான வரிகள் போலவும் இருக்கும்.

மதன் கார்க்கி.... You Rock Man!!!

இப்போது வரிகளையும் அது எதற்காக காண்பிக்கப் படுகிறது என்பதையும் பாருங்கள்:

**********************************************************
உன் பிடியிலே என் உயிரும் இருக்க,
ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ
எனில் முட்கள் கொய்தாய்!
காலை உந்தன் முத்தத்தில் விடியும்,
நாளும் உனில் தப்பாது முடியும்! - நீ
எனை மென்மை செய்தாய்!
எனது ரோமனே
சிறிது கீறவா?
விழியின் கூரிலே
மனதை கூறவா?
முகத்தின் மூடியை
திருடிப் போகவா?
நீங்கா.......தே!
என் ரோமனே....வா!

<ஷேவிங் ரேஸர்>
************************
(2)
கொஞ்ச கொஞ்ச கொஞ்சமாய் எனை பிதுக்கி
ஐலா ஐலா எடுப்பாயா?
தூரிகையிலே எனை கிடத்தி விண்
மீன்கள் வெள்ளை அடிப்பாயா?
துப்புத் துலக்க வருவாயா?
முத்துச் சிதறல் oh yeah!
பூ இல்லாமல் ஐலா,
வாசம் oh yeah!
நீ இங்கு சிரித்துவிட்டாய் அதனாலா?
மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட
பூமி எங்கிலும் ஒளி - இனி
மின்சாரப் பஞ்சம்
தீர்ப்போம் சிரி துளி!
<டூத் பேஸ்ட்>
***********************
(3)
உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச
எட்டிப் பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே hey yeah!
இளஞ்சிவப்பை oh yeah!
ரோஜா பூவில் ஐலா!
வண்ணத்தை oh yeah!
நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக!
சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது
தேவதைகளின் திரள் - உன்
கீழே பூக்கும் வெண் பூக்கள்
பூக்கள் இல்லை, நிழல்!

<ஃபேர்னஸ் க்ரீம்>

******************************
(4)
சக்கையென வானத்தைப் பிழிந்து
ஐந்து கடலின் ஆழத்தைக் கடைந்து
நான் என் கண்கள் கொண்டேன்
ஐலா விழி நீலத்தை எடுக்க
ஆடை என உன் மார்பில் உடுத்த
பேய் வெறி உன்னில் கண்டேன்
இதழின் வரியிலே
நூல்கள் பறிக்கவா?
காதல் தறியிலே
நாணம் உரிக்கவா?
பருத்தித் திரியிலே
பொறிகள் தெறிக்கவா?
ஓடா.......தே!
என் ஜீன் மானே....வா!
<ஜீன்ஸ்>

****************************

எப்பூடி!!! 

Monday, January 19, 2015

இந்த நாடும்...

“போய்யா.. ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்.. அங்க போய் நில்லு”

முகத்திலறைந்தாற்போல ஒரு பதில் எனக்குச் சொல்லப்பட்டது.

நேற்று மாலை திருப்பூர் பேருந்து நிலையத்தில், உடுமலைக்கான பேருந்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். மகள்களை அனுப்பச் சென்றிருந்த நான், இவ்வளவு கூட்டம் எதனால் என்றறியாமல் ஏதும் பேருந்துகள் கேன்சலா என்னவோ என்றறியாமல் அங்கே போக்குவரத்துக் கழகம் சார்பில் இருந்த ஒரு அறையில் சென்று, ‘உடுமலைக்குப் பஸ் அரை மணி நேரமா இல்லையே சார்.. என்னாச்சு?’ என்று கேட்டதற்குத்தான் இந்த பதில்.

இத்தனைக்கும், தனியாகச் சென்றால் ஒரு பய மதிக்க மாட்டான் என்று மகளோடு சென்றுதான் கேட்டேன்.

இத்தனை அலட்சியமான பதில் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“வழக்கமா நாலைஞ்சு நிக்கும்லப்பா?” என்றாள் என் மகள்.

“பொங்கல்னால டிரைவர்ஸ் இன்னும் வர்லங்க. அதான் கம்மி” என்று அவர் பாந்தமாகச் சொல்லியிருந்தால் ‘சரிங்க சார்’ என்று திரும்பியிருப்பினேயன்றி அவர் சட்டையைப் பிடித்து கேள்வியெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை.

வெளியே வந்தபின்னரும் முறைத்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மகளுக்கு வாட்டர் பாட்டில் வாங்க, அவர் கூண்டைக் கடந்தபோதும் அதே முறைப்பு தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ‘பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது என்ன மடத்தனம்? கொஞ்சமாவது சிரிக்கக் கற்றுக் கொண்டு இதையெல்லாம் சொல்லலாம் இவர்கள்.

எனக்கெப்போதுமே இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் - அரசு அலுவலகங்களில் - வாய்க்கிறார்கள்.

எது அவரை, அப்படி அலட்சியமாய் பதில் சொல்ல வைத்தது என்று நேற்று முழுவதும் சிந்தனை செய்தபடி இருந்தேன். கண்டது இதுதான்:

1. நான் அரசாங்க ஊழியன். இவன் சாதாரண பொதுஜனம். இவனெப்படி என்னை வந்து கேள்வி கேட்கப் போச்சு?

2. வக்கற்றவர்கள்தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். இவன் ஒரு வக்கற்றவன். நான் ஒரு அதிகாரி. இவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?

3. வெளியே 100-200 பேர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன புரட்சியாளன்?

4. &$%&க் கொழுப்பு.

இவர்கள் மாற என்ன செய்யலாம் / செய்ய வேண்டும்?

ஒன்றுமில்லை. எனக்கு ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது அரசாங்க அதிகாரிகளின் பழகுமுறைதான். அறிந்தவனாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும், பொதுஜனமாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும் லட்சம் வித்தியாசங்கள்.

என்றைக்கு ஒன்றுமறியாமல், தன் தேவைக்காக தம்மை வந்து அணுகும் பொது ஜனத்தை மரியாதையாக, அவர்கள் திருப்தியுறும் விதமாக அலுவலர்கள் நடத்துகிறார்களோ.. அன்றைக்குதான் நாடு உருப்படும்.

ஆமென்.