Monday, January 19, 2015

இந்த நாடும்...

“போய்யா.. ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்.. அங்க போய் நில்லு”

முகத்திலறைந்தாற்போல ஒரு பதில் எனக்குச் சொல்லப்பட்டது.

நேற்று மாலை திருப்பூர் பேருந்து நிலையத்தில், உடுமலைக்கான பேருந்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். மகள்களை அனுப்பச் சென்றிருந்த நான், இவ்வளவு கூட்டம் எதனால் என்றறியாமல் ஏதும் பேருந்துகள் கேன்சலா என்னவோ என்றறியாமல் அங்கே போக்குவரத்துக் கழகம் சார்பில் இருந்த ஒரு அறையில் சென்று, ‘உடுமலைக்குப் பஸ் அரை மணி நேரமா இல்லையே சார்.. என்னாச்சு?’ என்று கேட்டதற்குத்தான் இந்த பதில்.

இத்தனைக்கும், தனியாகச் சென்றால் ஒரு பய மதிக்க மாட்டான் என்று மகளோடு சென்றுதான் கேட்டேன்.

இத்தனை அலட்சியமான பதில் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“வழக்கமா நாலைஞ்சு நிக்கும்லப்பா?” என்றாள் என் மகள்.

“பொங்கல்னால டிரைவர்ஸ் இன்னும் வர்லங்க. அதான் கம்மி” என்று அவர் பாந்தமாகச் சொல்லியிருந்தால் ‘சரிங்க சார்’ என்று திரும்பியிருப்பினேயன்றி அவர் சட்டையைப் பிடித்து கேள்வியெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை.

வெளியே வந்தபின்னரும் முறைத்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மகளுக்கு வாட்டர் பாட்டில் வாங்க, அவர் கூண்டைக் கடந்தபோதும் அதே முறைப்பு தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ‘பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது என்ன மடத்தனம்? கொஞ்சமாவது சிரிக்கக் கற்றுக் கொண்டு இதையெல்லாம் சொல்லலாம் இவர்கள்.

எனக்கெப்போதுமே இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் - அரசு அலுவலகங்களில் - வாய்க்கிறார்கள்.

எது அவரை, அப்படி அலட்சியமாய் பதில் சொல்ல வைத்தது என்று நேற்று முழுவதும் சிந்தனை செய்தபடி இருந்தேன். கண்டது இதுதான்:

1. நான் அரசாங்க ஊழியன். இவன் சாதாரண பொதுஜனம். இவனெப்படி என்னை வந்து கேள்வி கேட்கப் போச்சு?

2. வக்கற்றவர்கள்தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். இவன் ஒரு வக்கற்றவன். நான் ஒரு அதிகாரி. இவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?

3. வெளியே 100-200 பேர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன புரட்சியாளன்?

4. &$%&க் கொழுப்பு.

இவர்கள் மாற என்ன செய்யலாம் / செய்ய வேண்டும்?

ஒன்றுமில்லை. எனக்கு ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது அரசாங்க அதிகாரிகளின் பழகுமுறைதான். அறிந்தவனாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும், பொதுஜனமாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும் லட்சம் வித்தியாசங்கள்.

என்றைக்கு ஒன்றுமறியாமல், தன் தேவைக்காக தம்மை வந்து அணுகும் பொது ஜனத்தை மரியாதையாக, அவர்கள் திருப்தியுறும் விதமாக அலுவலர்கள் நடத்துகிறார்களோ.. அன்றைக்குதான் நாடு உருப்படும்.

ஆமென். 

No comments: