Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Monday, January 1, 2018

இனிய இரண்டாயிரத்துப் பதினெட்டு!

நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே யாருக்காவது அட்வைஸிக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது அல்லது ‘அட்வைஸ்லாம் இல்ல’ என்று எதையாவது உளறிக்கொண்டிருக்கிறோம். நேற்றைக்கு #வாசகசாலை க் கூட்டத்தில் இறுதி உரை - அதாவது அந்த நிகழ்வின் இறுதி உரை - வழங்கச் சொல்லி, மைக் கொடுக்கப்பட்டபோது அப்படித்தான் ஒரு அறிவுரையை அள்ளிவழங்கினேன். காந்திஜி சிறுவனுக்கு ‘அதிகம் சர்க்கரை திங்காதே’ என்று அறிவுறுத்திய கதை போல, அது கிட்டத்தட்ட சென்ற வருடம் நான் கடைபிடித்தது என்பதால் கொஞ்சம் உறுதியாகவே அந்த விஷயத்தைச் சொன்னேன். 2018ல் இதை எல்லாரும் கடைபிடிக்கவேண்டுமாய் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன்.
நம் நியூரான்களில் பரபரவென்று ஓடும் கருத்தோஃபோபியாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கச் சொன்னதுதான் அது. நாட்டில் என்ன நடந்தாலும் உடனடியாக அதைப்பற்றி நாலு வரிகளோ, நாற்பது வரிகளோ எழுதிக் கொட்டாவிட்டால் மனசு அடங்காமல் திரிகிறது.
நிஜத்தில் நம் கருத்துக்காக யாரும் காத்திருக்கவில்லை என்பதே நிஜம். அப்படியும் கருத்துச் சொல்லும் Urge இருந்ததென்றால் தோன்றுவதை எழுதி டிராஃப்டில் போட்டு வையுங்கள். பிறகு அதைப் பற்றி யார் யார் என்னென்ன சொல்கிறார்கள், பேசுகிறார்கள் என்று குறைந்தது 24 மணிநேரங்கள் கவனியுங்கள். ‘அட... இதத்தானே நான் நெனைச்சேன். மொதல்லயே போட்டிருந்தா எனக்கு இந்த 500 லைக்ஸ் கிடைச்சிருக்குமே’ என்று தோன்றும். அப்படிக் கவலைப்படத் தேவையே இல்லை. உங்கள் ஒவ்வொரு லைக்ஸிலும் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்று அப்துல் கலாமே சொல்லியிருக்கிறார். அது நீங்கள் எப்போது எழுதினாலும் கிடைக்கும். முதலில்எழுதி, ஆகப்போவது ஒன்றுமில்லை.
அதேசமயம், ஒருவிஷயத்தில் உங்களுக்கு தீவிரமான, தெளிவான கருத்து இருந்து அதில் நீங்கள் உறுதியாகவும் இருப்பீர்களென்றால் எழுதலாம். இல்லாதபட்சம், அதைப் பற்றிய அறிவும், தெளிவும் உள்ளவர்கள் எழுதியதைப் படியுங்கள். விவாதங்களைக் கேளுங்கள். இணையப் பரிச்சயம் இல்லாத சக நண்பர்களிடம் அதுபற்றி உரையாடுங்கள். 24 மணிநேரம் கழித்து அதைப் பற்றி எழுதும்போது இன்னும் தெளிவும் தீவிரமும் கிடைக்கும்.
இந்த ஒரு சுய ஒழுங்கை மட்டும் கடைபிடித்தால்.. அட்லீஸ்ட் என்னுடைய டைம்லைனாவது நியூஸ் பொல்யூஷனால் பாதிக்காமல் இருக்கும் என்ற சின்ன ஆசைதான் காரணம்.
மற்றபடி, இந்த 2018-ல் இண்டர்நெட் ஹேண்ட்லிங் சார்ஜஸ் இல்லாமல் சினிமா டிக்கெட் புக் செய்யவும், அவரசமாக ஆஃபீஸ் போகும்போது சிக்னலில் சிவப்பு விழாமலிருக்கவும், லேட்டாக வீட்டுக்குப் போகும்போது சிரித்தபடி மனைவி கதவு திறக்கவும், கேட்டதுக்கு டபுள் மடங்காக கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் கிஃப்ட் தரவும், பர்ஸை கையில் கொடுக்கும் பாய் ஃப்ரெண்ட்ஸ் அமையவும், நீங்கள் நிற்கும் க்யூ வேகமாக நகரவும், இன்னபிற இனிமைகள் நடக்கவும் வாழ்த்துகள்!

Thursday, January 22, 2015

இதை எதுல எழுதுவீங்க?

“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க?” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.

ஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா? அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ..  ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.

கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

நான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.


“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல?”

உட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“இல்ல... ஏன் கேக்கறீங்க? நீங்க யாரு?”

“என்னைத் தெரியாதா? டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்கதானே வழி விடறீங்க?”

“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.

அவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.

“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க?”

“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?”

இந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.

“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல? அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.

புன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.

உடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.

 “தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப  ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”

“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க?”

“நீங்க நிருபரா?”

“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”

“கரெக்டா சொன்னனுங்களா? அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா?”

“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”

“புரியலையே தம்பி...”

“ஃபேஸ்புக் தெரியும்களா? நெட்ல எல்லாம் எழுதுவாங்க..”

“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”

“ஐயா உங்க பேர் கேட்டேனே...”

“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க?”

“சரி..  உதவின்னா காசு வாங்குவீங்களா?”

அப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது?’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.

“சில்லறை இல்லீங்களா?”

“இல்லீங்களே”

இவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.

“உள் பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.

“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.

வாங்கியவர்,  அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.

 “ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.

 “கறாரா வாங்கீடுவீங்க போல?”

“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி.  ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”

அவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.

“ஒருநாளைக்கு எவ்ளோ வரும்?”

“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.

“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”

“டீ சாப்டப்போறேன்.. வர்றீங்களா?”

“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க!”

“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.

“சரிங்க” என்றேன்.

“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி?”

“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதுங்களே..”

“நெட்ல எழுதுவேன்னு வெச்சுக்குங்க”

“இணையத்துலயா? சரிங்க. எழுதினா காமிங்க”

“சரிங்கய்யா”

“அப்ப நான் வரட்டுமா? என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.

“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”

நான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.

“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.

 “அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.

“நீங்க?”

“நான் இங்கதான் இருக்கேன்”

“எங்க?”

“இதே ஊர்ல..”

“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”

“சும்மாதான் இருக்கேன்” என்றான்.

>>>

Monday, January 19, 2015

இந்த நாடும்...

“போய்யா.. ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்.. அங்க போய் நில்லு”

முகத்திலறைந்தாற்போல ஒரு பதில் எனக்குச் சொல்லப்பட்டது.

நேற்று மாலை திருப்பூர் பேருந்து நிலையத்தில், உடுமலைக்கான பேருந்துக்காக நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். மகள்களை அனுப்பச் சென்றிருந்த நான், இவ்வளவு கூட்டம் எதனால் என்றறியாமல் ஏதும் பேருந்துகள் கேன்சலா என்னவோ என்றறியாமல் அங்கே போக்குவரத்துக் கழகம் சார்பில் இருந்த ஒரு அறையில் சென்று, ‘உடுமலைக்குப் பஸ் அரை மணி நேரமா இல்லையே சார்.. என்னாச்சு?’ என்று கேட்டதற்குத்தான் இந்த பதில்.

இத்தனைக்கும், தனியாகச் சென்றால் ஒரு பய மதிக்க மாட்டான் என்று மகளோடு சென்றுதான் கேட்டேன்.

இத்தனை அலட்சியமான பதில் வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“வழக்கமா நாலைஞ்சு நிக்கும்லப்பா?” என்றாள் என் மகள்.

“பொங்கல்னால டிரைவர்ஸ் இன்னும் வர்லங்க. அதான் கம்மி” என்று அவர் பாந்தமாகச் சொல்லியிருந்தால் ‘சரிங்க சார்’ என்று திரும்பியிருப்பினேயன்றி அவர் சட்டையைப் பிடித்து கேள்வியெல்லாம் கேட்டிருக்கப் போவதில்லை.

வெளியே வந்தபின்னரும் முறைத்துக் கொண்டே இருந்தார். அதன்பிறகு மகளுக்கு வாட்டர் பாட்டில் வாங்க, அவர் கூண்டைக் கடந்தபோதும் அதே முறைப்பு தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ‘பொதுமக்கள் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வது என்ன மடத்தனம்? கொஞ்சமாவது சிரிக்கக் கற்றுக் கொண்டு இதையெல்லாம் சொல்லலாம் இவர்கள்.

எனக்கெப்போதுமே இப்படிப்பட்ட ஆசாமிகள்தான் - அரசு அலுவலகங்களில் - வாய்க்கிறார்கள்.

எது அவரை, அப்படி அலட்சியமாய் பதில் சொல்ல வைத்தது என்று நேற்று முழுவதும் சிந்தனை செய்தபடி இருந்தேன். கண்டது இதுதான்:

1. நான் அரசாங்க ஊழியன். இவன் சாதாரண பொதுஜனம். இவனெப்படி என்னை வந்து கேள்வி கேட்கப் போச்சு?

2. வக்கற்றவர்கள்தான் பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். இவன் ஒரு வக்கற்றவன். நான் ஒரு அதிகாரி. இவனுக்கு நான் என்ன பதில் சொல்வது?

3. வெளியே 100-200 பேர் பேருந்துக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் மட்டும் என்ன புரட்சியாளன்?

4. &$%&க் கொழுப்பு.

இவர்கள் மாற என்ன செய்யலாம் / செய்ய வேண்டும்?

ஒன்றுமில்லை. எனக்கு ஒட்டுமொத்தமாய் நம்பிக்கையிழக்க வைத்துவிட்டது அரசாங்க அதிகாரிகளின் பழகுமுறைதான். அறிந்தவனாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும், பொதுஜனமாய்ச் சென்றால் அவர்களது பழகுமுறைக்கும் லட்சம் வித்தியாசங்கள்.

என்றைக்கு ஒன்றுமறியாமல், தன் தேவைக்காக தம்மை வந்து அணுகும் பொது ஜனத்தை மரியாதையாக, அவர்கள் திருப்தியுறும் விதமாக அலுவலர்கள் நடத்துகிறார்களோ.. அன்றைக்குதான் நாடு உருப்படும்.

ஆமென். 

Saturday, September 27, 2014

கற்காததினால் ஆய பயன்...

ப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.

போய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.

உடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.

அடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.

“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க?”

“வெளில, ஹோட்டலுக்குத்தான்”

“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே?”

“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே?” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.

அப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.

*

டெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.

நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.

காரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.

அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.

காரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

நேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்த்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.

கற்றதினால் ஆன பயனென் கொல்?

Friday, March 8, 2013

முதல்கதை எழுதிய கதை

1993-1994 இருக்கும். கதை, கட்டுரைகளை சுவாசம் போல வாசித்துக் கொண்டிருந்த காலகட்டம். சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கமெல்லாம் படித்து - பிடித்த வரிகளையெல்லாம் அடிக்கோடிட்டு, ஒரு கட்டத்தில் ரூல்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட புத்தகம் போல ஆகிவிட்டது அது. டைரியில் அவ்வப்போது சிலபலவற்றைக் கிறுக்கி வைத்திருக்க, அதைப் பார்த்த நண்பர்கள், ‘உன் நடையே நல்லாத்தான் இருக்கு. நீயும் எழுதலாமே’ என்று ஊக்குவித்தார்கள். அவர்கள் சொன்னது எழுத்து நடையை.

எதற்கு கதை எழுதிப்போடுவது என்று குழப்பம். அப்போது திருப்பூரில் கரும்பு என்றொரு கையெழுத்துப் பத்திரிகை வந்துகொண்டிருந்தது. நூலகங்களில் கிடக்கும். (கிடைக்கும் அல்ல. கிடக்கும்தான்) நான் பார்த்ததுண்டு. யாரைத் தொடர்பு கொண்டேன், எப்படி எழுதி அனுப்பினேன் என்றெல்லாம் நினைவுச்சங்கிலியில் இல்லை. என் சொந்தக் கையெழுத்தில், அந்தப் பத்திரிகையில் முதன்முதலாக ஒரு கதை வந்தது. அதாவது, சேர்க்கப்பட்டது.

அடுத்தநாள் நூலகம் போனபோது அதை அறிந்து கொண்டேன். கடைசியாகக் கோர்க்கப்பட்டிருந்தது எனது கதை. பெரியவர் என்று தலைப்பு. அந்தக் கதைக்குப் பிறகு இரண்டு வெற்றுத்தாள்கள், வாசகர் கருத்துகளுக்காக விடப்பட்டிருந்த்து.


நான், அதை எடுத்துப் படித்தேன். நாலைந்து முறை படித்திருப்பேன். பின்னணியில் இளையராஜாவின் வயலின் இசையோடு படித்தேன். அப்படி ஒரு போதை. பிறகு அதை புத்தகங்கள் கிடந்த டேபிளிலேயே போட்டுவிட்டேன். 

புழுக்கமாக இருந்ததால் ஒரு ஜன்னலோரத்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்த டேபிள் பார்வைக்குப் படுமாறு அமர்ந்து கொண்டேன்.  கையெழுத்துப் பிரதியை யாராவது எடுக்கிறார்களா / படிக்கிறார்களா என்று ஆவலோடு. இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த நூலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அந்தக் கதையைப் படித்து, குறிப்புகளுக்கான பக்கத்தில் அதைப் பாராட்டி, யாரிந்த கே.பி. கிருஷ்ணகுமார் என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு.....

ம்ஹும். ஒன்றுமே நடக்கவில்லை. கையில் ஒரு நாளிதழையும் மறைத்துக் கொண்டு –அதையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். யாரும் சீண்டியபாடில்லை.

என்ன குறை என்று போய்ப் பார்த்தேன்.

பெரிய டேபிள். சுற்றிலும் நாற்காலிகள் முழுக்க ஆட்கள். படிக்க விரும்பும் புத்தகங்களைத் தேடித்தேடி அங்கங்கே கலைந்த புத்தகங்கள். அதில் பலராலும் விலக்கி வைக்கப்பட்ட சில புத்தகங்கள் ஓர் ஓரமாய்ச் சேர்ந்திருந்தன. நல்ல புத்தகங்கள்தான். ஆனாலும் அவற்றைத் தேடுபவர்கள் குறைவு. அதில் - ராமகிருஷ்ண விஜயம், சைவ சிந்தாந்தப் புத்தகங்களுக்குப் பக்கமாக அது கிடந்தது. மார்க்கெட்டிங் சரியில்லை என்று நினைத்து, அந்தக் கையெழுத்துப் பத்திரிகையைக் கையில் எடுத்தேன். நைஸாக வேறு எதையோ தேடுவது போல - அப்போது கிடந்த விகடன், குமுதம் வகையறாக்கள் இருந்த சைடில் – அதைப் போட்டேன். பிறகு மீண்டும் வந்து தூரமாக அமர்ந்து கொண்டேன்.

ஐந்து நிமிடம்.

பத்து நிமிடம்.

பதினைந்து நிமிடம்.

இருபது நிமிடம்.

ம்ஹும். யாரும் அதை எடுத்துப் படிக்கவில்லை. நான் ரொம்ப நேரமாக அங்கேயே இருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி வேறு உந்த, போகலாமா என்று எழுந்தேன். அப்போதுதான் – ஒருவர் அவசர அவசரமாக வேறொரு நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அந்த கையெழுத்துப் பத்திரிகையை எடுத்தார். தொடர்ந்து படிக்கும் வாசகர் என்று நினைத்துக் கொண்டேன். காரணம், பெயரையெல்லாம் பார்க்கவில்லை. அதை எடுக்க என்றே வந்ததைப் போல, அவசரமாக எடுத்துச் சென்று தூரமாக ஒரு நாற்காலியில் அமரச் சென்றார்.

இந்த நேரத்தில், ஓரிருவர் என்னைக் கடந்து சென்றனர். அந்தப் பிரதியை எடுத்த நபர் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டார். பெரிய அறை. அப்போதெல்லாம் நூலகங்களில் நல்ல கூட்டம் வேறு இருக்கும். ஆஹா.. அந்த வாசகரை விட்டுவிட்டுமோ என்று மனம் பதற – அவரைத் தேடினேன். ஒவ்வொரு நாற்காலியாக அமர்ந்திருந்தவர்களை உற்று நோக்க ஆரம்பித்தேன். ஆள் அடையாளம் தெரியாது. கையில் அந்தப் பத்திரிகை இருக்கும். முழுக்க முழுக்க வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட, நோஞ்சானாய்த் தெரியும் கையெழுத்துப் பத்திரிகை. அதை வைத்துத்தான் பார்க்க வேண்டும்.


சில நொடிகளுக்குப் பிறகு, எனக்கு நேரே ஒரு நாற்காலி கண்ணை மறைக்க –அதையும் தாண்டி, அவர் கை மட்டும் என் கண்ணில்பட்டது. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையோடு தெரிந்த கை. ஆர்வமாக, எழுந்து பார்த்தேன்.

கண்கள் சொருக, அதை வைத்து விசிறிக்கொண்டிருந்தார் அவர்.
.

Tuesday, August 23, 2011

எம கிங்கிரர்கள்

ரு நாளைக்கு 24 மணி நேரம்னா அந்த 24 மணிநேரத்துல நான் பைக் ஓட்டறது வெறும் ஒண்ணரை மணி நேரம். சில நாள் அங்க இங்க போகன்னு வேலை அதிகமானாக் கூட, அதிக பட்சம் நாலு மணி நேரத்தைத் தாண்டாது. ஆனா அந்த கொஞ்ச நேரம் நான் படற டென்ஷன் இருக்கே.. அப்ப்பப்பா! இந்த ஆளுகளாலயே டென்ஷன் ஆகி ஒரு வழி ஆகிடுவோம் நாம. அதுல சில ஆளுகளைப் பத்தி இங்கே:

டர்னிங் டார்ச்சர்மேன்: வலது பக்கம் திரும்பறானா, இடது பக்கம் திரும்பறானான்னு தெரியாது. ஒரு சைஸா உடம்பை வளைப்பானுக. அத வெச்சு ‘ஓஹோ.. சார் திரும்பப் போறார்’னு நாம தெரிஞ்சுக்கணும். ஏண்டா.. இண்டிகேட்டர் போட்டா அப்படி கரண்ட் செலவாகுமாடா உங்களுக்கு?

பில்லியன் பிசாசு: வண்டி ஒருத்தன் ஓட்டுவான். பின்னாடி உட்கார்ந்திருக்கறவன் கை காட்ட ஆரம்பிப்பான். இவன் கை காமிக்கறதுக்கு அரை கிலோ மீட்டர் தள்ளிதான் திரும்ப வேண்டிய இடம் இருக்கும். உட்கார்ந்திருக்கறவன் வலது பக்கம் கை காமிச்சான்-ன்னா,ஓட்டறவன் திரும்பாம லெஃப்ட்ல வண்டிய நிறுத்துவான். அதுக்கு பின்னாடி நீங்க இருந்தீங்கன்னா கொஞ்ச நேரத்துக்கு சீஸோபெர்னியா ஸ்டேஜ்ல இருக்க வேண்டிருக்கும். இதுல க்ராஸ் பண்ணலாமான்னு யோசிச்சு நாம ஸ்லோ பண்ணினா ‘போடா போடா’ன்னு அலட்சியமா நமக்கு கை காட்டுவானுக பாருங்க.. ச்சப்-ன்னு அப்பத் தோணும்.

மெமரிலாஸ் கஜினி: ரைட் இண்டிகேட்டர் போட்டிருப்பான். ‘சார் திரும்பப்போறார்’னு பின்னாடி வர்ற நாம ஸ்லோ பண்ணுவோம். அவன் திரும்பாம நேரா போவான். ‘அட’ன்னு நாம லெஃப்ட்ல ஓவர் டேக் பண்ணி போலாம்னு போனா, சள்ள்ள்-ன்னு அவன் வண்டி லெஃப்ட் ஒதுங்கும்.. சரின்னு ரைட் வந்தா, அவனுதும் ரைட். ஒரு அரை கிலோ மீட்டர்க்கு இந்த விளையாட்டு ஆடி முடிச்சப்பறம் அவனை முந்தும்போது ‘யோவ்.. இண்டிகேட்டர்’ன்னு சொன்னா.. ‘ஓ...!’ன்னு ஆஃப் பண்ணுவான்!

ச்சீப் சின்ஸாமி: வண்டி ஓட்டீட்டே இருப்பீங்க. முன்னாடி போற பைக்ல இருக்கறவன் சடார்னு எச்சில் உமிழ குமிவான். பின்னாடி வண்டி வருதா.. ஆள் இருக்கா எதைப் பத்தியும் அவனுக்கு கவலையில்லை. என்னைக் கேட்டா எமதர்மன்கிட்ட சொல்லி, இந்தச் செயலுக்கு மட்டும் கன்னாபின்னான்னு பனிஷ்மெண்ட் கேட்டகிரியை இன்னும் அதிகப்படுத்தச் சொல்லுவேன். படுபாவிக. எழுதறதுக்கே கேவலமான விஷயமாயிருக்கு இது!


திடீர் ராமசாமி: இது இந்த டவுன் பஸ் & மினி பஸ்காரனுக பண்ற கொடுமை. போய்ட்டே இருப்பானுக. ரோட்டோரம்லாம் இல்லாம திடீர்னு நடு ரோட்ல நிறுத்துவானுக. பின்னாடி அனுமார் வாலா ட்ராஃபிக் நீண்டாலும் கவலைப்படறதில்லை. பொறுமையா நிறுத்தி ஏத்தி அப்பறம்தான் போவானுக. (இந்த கேப்-ல நம்ம பின்னாடி நிக்கற பிரகஸ்பதிகள் ஹார்ன் அடிச்சே சாவடிக்கறது வேற நடக்கும்)


வழிவிடு முருகா: ஃப்ரீ லெஃப்ட்-ன்னு போர்ட் இருக்கும். அதப் பத்தி அவனுகளுக்கென்ன? சிக்னல் போட்டிருக்கும். நேரா நிக்கறவனையெல்லாம் தாண்டி முன்னாடி நிக்கறேன் பேர்வழின்னு இடது பக்கம் போறவனை, போக விடாதபடிக்கு நின்னுக்குவான்.


முந்திரிக்கொட்டை: சிக்னல்ல நின்னுட்டிருப்பீங்க. பச்சை விளக்கு வர்றதுக்கு நாலஞ்சு செகண்ட் முன்னாலயே பின்னாடி நின்னுட்டு கதற ஆரம்பிப்பாங்க. அட இன்னும் ஒண்ணு ரெண்டு செகண்ட்தானே-ன்னு நாம அவனைப் பார்த்தா - அவன் ஏதோ பூரா ட்ரஸ் போட்டிருக்கறமாதிரியும் நாமதான் நிர்வாணமா இருக்கற மாதிரியும் நம்மளை ஒரு பார்வை பார்ப்பானுக பாருங்க.... ம்ஹும்!


சவுண்ட் பார்ட்டி: உச்சபட்ச எரிச்சல் இதான். முன்னாடி போறவனும் போய்ட்டுதான் இருப்பான். நாமளும் போய்ட்டுதான் இருப்போம். திடீர்னு பின்னாடிலிருந்து ஹார்ன் சத்தம் விடாம கேட்கும். என்னமோ எல்லாரும் நடுரோட்ல நின்னு செஸ் ஆடீட்டிருக்கற மாதிரியும், இவரு மட்டும் வண்டி ஓட்டற மாதிரியும்.
வெளிநாடுகள்ல ஒருத்தன் அதிகபட்சமா – ரோட்ல யாராவது விதி மீறலா நடந்துட்டு - கோவம் வந்தா திட்டறதுக்குதான் ஹார்ன் யூஸ் பண்ணுவாங்களாம். இவனுக எதுக்கெடுத்தாலும் ஹார்ன்தான். ஸ்டியரிங்/ஹேண்டில்லேர்ர்ந்து கை எடுத்தாலும் எடுப்பானுக. ஹார்ன்லேர்ந்து கை எடுக்க மாட்டானுக. இவனுகளை ஒரு சவுண்ட் ப்ரூஃப் ரூமுக்குள்ள அடைச்சு வெச்சு, சுத்திலும் வித விதமான ஹார்ன் சவுண்ட் ஒலிக்க விட்டு ஒரு நாள் முழுக்க கேட்க வைக்கணும். லூசுங்க…


இதெல்லாம் போக பக்கத்துல வந்து முந்தறது, இடதுபக்கமா முந்தறது, கண்ணை உறுத்தற மாதிரி லைட் போட்டுட்டு டிம் பண்ணாம எதிர்ல வர்றது, அடுத்தவன் வந்து எப்படி நிறுத்துவான்னு யோசிக்காம வண்டியை பார்க் பண்ணீட்டு போறதுன்னு நிறைய இருக்குங்க.. எல்லாம் எழுதினா ப்ளாக்கர் தாங்காது!


.




Monday, March 21, 2011

அவியல் 21 மார்ச் 2011

சென்ற மாதத்தில் ஒருநாள் திருவண்ணாமலை அருகே ஓர் ஊரில் பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள்.

தாய்மார்களா? டாஸ்மாக் வேண்டும் என்றா? – ஆமாம்.

காரணம் – கடைசியில்!

-----------------------------

வீடு கட்ட லோன் அப்ளிகேஷனில் விவரங்கள் எழுதும்போது தெரிஞ்சவங்க நம்பர் குடுங்க என்றார்கள். அப்போது அந்த அதிகாரி ஒரு விஷயம் சொன்னார். ஒரு வாடிக்கையாளர் தனக்குத் தெரிந்தவர் என்று ஒரு நண்பரின் பெயரைக் கொடுத்தாராம். வங்கி நபர் அந்தக் குறிப்பிட்ட நம்பருக்கு தொடர்பு கொண்டபோது ‘செல்வராஜையும் தெரியாது.. ஒரு மங்கா மடையனையும் தெரியாது’ என்று அவர் கட் செய்து விட்டாராம். வங்கி நபர், உடனே விண்ணப்பதாரரைத் தொடர்பு கொண்டு ‘அவரு தெரியாதுங்கறாரே’ என்று கேட்டதும் ’ஒரு நிமிஷம் இருங்க’ என்று வங்கி நபரையும் லைனில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நண்பருக்கு அலைபேசி டக்கென்று கான்ஃப்ரென்ஸ் கால் போட்டிருக்கிறார். அழைப்பு போனதும் அந்த நண்பர் பேசியது:

‘ஏய்.. செல்வராஜு... சொல்லுடா மாப்ள.. என்ன திடீர்னு..’

‘இல்ல மாம்ஸ்... ஹவுசிங் லோன் போட்டிருக்கேன்.. உன் நம்பர் குடுத்திருக்கேன். பேங்க்லேர்ந்து கூப்பிடுவாங்க..’

‘அதுதான் நேத்தே சொன்னியே மாப்ள... கூப்டா பேசிடறேன் சரியா.. வேற எதுனா இருக்கா?’

இல்லை என்ற விண்ணப்பதாரர் லைனைக் (நண்பரையும்?) கட் செய்துவிட்டு, வங்கி அப்ளிகேஷனில் வேறு நண்பர் பெயரை எழுதிக் கொடுத்தாராம்.

-----------------------

சின்ன மகளின் வகுப்பில் ஒரு சுவாரஸ்யமான நம்பிக்கை. அவளது தோழி ஒருத்தி மார்க் கம்மியாகிவிட்டதாம். பஸ்ஸில் வரும்போது அதுபற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஏன் கம்மியாச்சு என்று கேட்டதற்கு ‘நான் எக்ஸாமுக்கு முந்தி ஒருவாட்டி சுவாதியை உதைச்சேன்ல.. அதுனாலதான்’ என்றாளாம். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறாள் பெரியவள். நாம் யாரையாவது உதைத்தால் அவர்கள் புத்தி நமக்கு வரும்.. நம்ம அறிவு அவங்களுக்குப் போகுமாம்’ என்றிருக்கிறாள். இதை அவர்கள் விளையாட்டாகச் சொல்ல நான் கேட்க நினைத்தேன்: ‘அப்படீன்னா ஃபைனல் எக்ஸாமுக்கு முந்தி போய் ப்ரின்சிபலைப் போய் உதைங்களேன்?’

ஆனால் கேட்கவில்லை. சிறுவர்களின் உலகம் அழகானது. நம்முடைய அழுக்கை அதில் சேர்க்க வேண்டாம்..

------------------

லகக்கோப்பை க்ரிக்கெட் காலிறுதிக்கு வந்துவிட்டது. என்னமோ ஏதோ என்று விளையாடுகிறார்கள் என்று இந்திய அணியை விமர்சிக்கிறார்கள் சிலர். இருக்கலாம். ஆனாலும் விளையாடும் எல்லாப் போட்டிகளிலும் இவர்கள் முன்னூறுக்கு மேலெடுத்து, எதிரணியை சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்வார்களென்பதும் கற்பனை சுகம் மட்டும்தான்.

அஸ்வினை சரிவரப் பயன்படுத்தாமை, மிடில் ஆர்டர் சொதப்பல்கள் என்று தோனி கவனிக்க வேண்டியவற்றை கவனித்து அணியைச் செலுத்தினால் ஆஸியை ஜெயிக்கலாம். ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்த உற்சாகம் வழிந்து, ஜெயிச்சா ஜெயிக்கட்டும்.. இல்லைன்னா விடுங்க என்றே பார்ப்பதாய்ப் படுகிறது. உலகக் கோப்பையை விட ஐபிஎல் அதிக சுவாரஸ்யம் தரும் விஷயமாகிவிட்டது!

இந்த உலகக் கோப்பையில் உண்மையாகவே கவனிக்கப்பட வேண்டிய அணி - அயர்லார்ந்து! இங்கிலாந்தின் இமாலய ஸ்கோரை போகிற போக்கில் எடுத்து ஜெயித்ததும், கடைசி லீக் மேட்சில் நெதர்லாந்தின் 306ஐ துரத்தி எடுத்ததும் சாதாரண விஷயமில்லை. 2015ல் பத்து அணிகள்தான் என்பதால் அயர்லாந்து வருமா வராதா என்கிற ஐயமிருக்கிறது. வரவேண்டும்!

-------------------------


ரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கலைஞர் க்ரைண்டர் அல்லது மிக்ஸி என்றால் ஜெயலலிதா என்ன தருவார் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர் மக்கள். தொடர்ந்து தடையில்லா மின்சாரம் போன்ற சில காமெடி அறிவிப்புகள் இருந்தாலும், தேர்தல் அறிக்கையை மிகக் கவர்ச்சியாக அறிவிப்பதில் திமுக கவனமாகவே இருக்கிறது.

என்னுடைய ஏமாற்றம் குஷ்பூவுக்கு சீட் கொடுக்காதது. இதைத் தட்டிக் கேட்க ஒருவர் கூடவா இல்லை? என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்! ச்சே..

வைகோவுக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டியதில்லை. ஜெயிக்கிற குதிரைக்குத்தான் பணம் என்பதுபோல தேமுதிகவை அழைத்துப் பேசிய அம்ம்ம்ம்ம்மா, கூடவே ஐந்து வருடம் இருந்த வைகோவை நடத்திய விதம் கண்டிக்க வேண்டியது. நானெல்லாம் கண்டித்து ஒரு மண்ணாங்கட்டியும் நடக்கப் போவதில்லை என்பது வேறுவிஷயம்! நண்பர் ஒருவர் கூறியதைப் போல ஜெ கூட்டணியில் வைகோ / நாஞ்சில் சம்பத் போன்ற மேடைப் பேச்சாளர்கள் யாருமே இல்லை என்பதே நிஜம்.

----------

முதல் பாராவில் கேட்டதற்கான பதில்: அவர்கள் ஊரில் டாஸ்மாக் இல்லாததால் ரொம்ப தூரம் போகிறார்களாம் கணவன்மார்கள். திரும்பி வருகையில் விபத்து நேர்கிறதாம். தொடர்ந்து பலரையும் இழந்திருக்கிறார்கள். ‘குடிக்கறத நிறுத்துங்கன்னா கேட்கப்போறதில்ல.. ஊருக்குள்ளாறயே ஒரு டாஸ்மாக் இருந்தா இங்கனயே குடிச்சுட்டு இங்கனயே கெடப்பாங்கள்ல’ என்று ஒரு தாய்க்குலம் மீடியா நீட்டிய மைக்கில் உச்சஸ்தாயியில் சொல்ல - வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன் நான். லேடரல் திங்கிங்!


-----------------

Monday, April 20, 2009

அவியல் 20.04.2009

எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் வட இந்திய நண்பர் ஒருவர் தமிழ் கற்று வருகிறார்.

ஒரு நாள் வேகமாக வந்தவர் ‘என்ன means what ?’ என்றார். நானும் ‘என்ன means what’ என்றேன். இரண்டு முறை இதையே சொன்னதும் சிரித்தவர், ‘ஓ என்ன மீன்ஸ் க்யாவா’ என்றபடி சென்றுவிட்டார்.

மற்றொரு நாள், நீர் மாசுபடுவதால் எற்படும் பாதிப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆண்டுதோறும் 1 மில்லியன் குழந்தைகள் அசுத்த நீரால் இறப்பதாக ஒரு அறிக்கை சொல்கிறது என்றேன். ‘Who said this?’ என்றார். நானும் ‘Who said this’ என்றேன். இந்த முறை அவருக்கு புரியவே இல்லை.

WHO என்றால் World Health Organization.

*************************

நண்பர்களுடன் உணவகத்தில் சென்றிருந்தபோது நடந்தது இது. சிக்கனை வெட்டிய நண்பன், மீன் வேண்டாமென்றான். அவனுக்கு sea food பிடிக்காதாம். அடுத்தவனை, சீ ஃபுட் சாப்பிடுவியா எனக் கேட்டா போது “sea food மட்டுமல்ல், see food எல்லாத்தையும் சாப்பிடுவேன்” என்றான். வடிவேலு நினைவுக்கு வந்தார்.

இது கடலெண்ணய்தானே???????

*******************************************************

ஐ.பி.எல். அதிரடியாய் தொடங்கிட்டது என்றுதான் முதலில் டைப் செய்ய நினைத்தேன். முதல்நாள் ஆட்ட்டங்களில் அதிரடி இல்லை. தென்னாப்ரிக்கா மைதானங்கள் அப்படி. ஆனால் நான் சொல்ல வந்தது, களமிறங்கும் முன் உத்தப்பா செய்ததை கவனித்தீர்களா? காலால் தரையில் சிலுவை போட்டு கும்பிட்டுவிட்டு வந்தார். நம்ம ஸ்ரீகாந்த் சூரியனை பார்த்து கும்பிடுவார். யாரோ ஒரு நடிகர் கூட தன் அலுவலகத்தில் தாம்ஸ் ஆல்வா எடிசனின் படத்தை மாட்டி வைத்திருப்பதாக படித்த ஞாபகம்.

நான் தினமும் கும்பிடுவது சார்லஸ் பாபேஜ்.

இது நல்லெண்ணய்தானே??????

*****************************************************

கிரிக்கெட் போட்டிகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் உண்டு.1987ல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தது கபிலின் தலைமையிலான இந்திய அணி. இரண்டாம் டெஸ்ட்டில் ஸ்ரீகாந்திற்கு பதிலாய் சப்ஸ்டியூட் ஒருவர் ஃபீல்டிங் செய்தார். சில ஓவர்களில் ஸ்ரீகாந்த் வந்துவிட இவர் வெளியே செல்ல மறந்துவிட்டார். 12 பேருடன் சில ஓவர்களும் வீசப்பட்டன. நடுவர் கண்டறிந்து சொல்ல, இருவரும் வெளியேறினார்கள்.

வெறும் 10 பேருடன் ஒரு பந்து வீசப்பட்டது.

இது வெளக்கெண்ணய்தானே??????

*************************************

அன்புமணி இனி மந்திரி ஆகவே முடியாது என்பது சினிமாக்காரர்களுக்கு தெரிந்து விட்டது. இனி நானும் திரையில் சிகரெட் பிடிப்பது போல நடிக்க மாட்டேன் என்ற ’அசல்’ ஹீரோ அஜித் சுருட்டுடன் ஒளிர்கிறார் அசல் ஸ்டில்களில். பூஜைக்கு வந்த சூப்பர்ஸ்டாரும் அந்தப் படங்களை பார்த்துவிட்டு அசல் ஹீரோ அஜித் என்றாராம்.

நல்லவேளை வில்லன் பூஜைக்கு சூப்பர்ஸ்டார் வரவில்லை.

இது தேங்காயெண்ணய்தானே????? (தலைக்கு தடவுவதால்)

*******************************************

கவிதை வேண்டாமென்றுதான் நினைத்தேன். பசுவய்யாவின் இந்தக்
கவிதை..ம்ம்ம்

வருத்தம்

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்

நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல்
ஆயுளின் கடைசித் தேசல் இப்போது
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என் முதுமை
பின்னும் உயிர்வாழும் கானல்


இது என்ன எண்ணெய்?

**********

Monday, April 13, 2009

அவியல் 13.04.2009

அமெரிக்காவின் சுதந்திரம் சுத்த முட்டாள்தனமானது என்று சொன்னார் ஒரு நண்பர். எப்படி என்று கேட்டேன். மிகவும் சுலபமாக துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கிடைத்துவிடுகிறது. தடை செய்யப்பட்ட இடத்தில் சிகரெட் பிடித்தால் உடனடியாக ஆஜராகிற போலீஸ், யாராவது துப்பாக்கி வைத்திருந்தால் அதிகமாக ஆராயாமல் விட்டுவிடும் என்றார். ‘அதுதான் சட்டம் இருக்கிறதே’ என்றால் ‘அது சில சமயம் முட்டாள்தனமாக செயல்படுகிறது’ என்று சொல்லி ஒரு உதாரணம் சொன்னார்.

ஒரு பெண்மணி மெக். டொனால்டில் ஒரு காஃபி வாங்குகிறார். வாங்கி காலுக்கிடையில் வைத்துக்கொண்டு காரை ஓட்டிக் கொண்டுபோகிறார். சூடான காஃபி காலுக்கிடையில் கொட்டுகிறது. அவர் அடுத்த நாள் கோர்ட்டில் கேஸ் போடுகிறார். “கண்ட இடத்தில் கொட்டிய காஃபியால் அன்று இரவு தாம்பத்தியத்தில் சரிவர ஈடுபட முடியவில்லை. காஃபி அவ்வளவு சூடு. ‘கவனமாகக் கையாளவேண்டும்’ என்ற எந்த எச்சரிக்கை வாசகமும் காஃபி கப்பில் எழுதவில்லை” என்று வழக்குப் போட்டு நீதிபதியும் ‘ஆமாமாம்’ என்று மெக்டொனால்டிற்கு நஷ்டஈடு விதித்தாராம். என்ன கொடுமை சார் இது? கேட்டால் நுகர்வோருக்கு அவ்வளவு மரியாதை என்றார்கள்.

எனக்கு நேற்றைக்கு தியேட்டரில் நடந்தது ஞாபகம் வந்தது.

***********************
அயன் படத்திற்குப் போயிருந்தேன். சிலர் சொல்வது போல ‘ஆஹா.. ஓஹோ’வெல்லாம் இல்லை. கே.வி. ஆனந்த்-தின் கனாகண்டேன் என்னைக் கவர்ந்ததில் முக்கால் பாகம்கூட அயன் கவரவில்லை. ஓகே.. தியேட்டரில் இடைவேளையில் கொறிக்க முட்டை போண்டா வாங்கினேன். 7 ரூபாய் என்பது முட்டை போண்டாவிற்கு டபுள் ரேட். சரி போகட்டும். நன்றாக இருந்ததால் மீண்டும் போய் ஒன்று வாங்கினேன். அப்போது 8 ரூபாய் என்று பாக்கி 2 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்கள். (போன முறையும் ஒரு ரூபாய் பாக்கிக்கு சாக்லேட்தான்!)

‘என்னங்க... அப்பவே 7 ரூபாய்னு சொன்னீங்க? இப்போ 8 ரூபாய் ஆய்டுச்சா? ஒருவேளை கால்மணிநேரத்துல விலைவாசி ஏறிடுச்சா?’ என்றேன்.

அவர் என்னை ஒருமாதிரிப் பார்த்தபடி ஒரு ரூபாய்க்கு இன்னொரு சின்ன சாக்லெட் கொடுத்தார்.

எனக்கு கோபம் அதிகமானது.

‘கத்தி ஏதாவது வெச்சிருக்கீங்களா?’

‘எதுக்கு’ என்பதுபோல தலையுயர்த்தினார் கேண்டீன்காரர்.

‘இல்ல.. கத்தி இருந்ததுன்னா கழுத்துல வெச்சு சில்லறைய புடுங்கிக்க வேண்டியதுதானே? அதவிடக் கொடுமை பண்றீங்க’ என்று சொல்லி விட்டு வந்தேன்.

ஏதோ... என்னால் முடிந்தது அவ்வளவுதான்.

*********************************
ஒரு சிலர் பின்னூட்டம் போடும்போது கிழே பெயர் எழுதுவது எதற்கென்று புரியாமலே இருந்தேன். நர்சிம்மைக் கூட ஒருமுறை ‘அதுதான் மேல நர்சிம்னு வருதுல்ல. எதுக்கு எல்லாத்துக்கும் கீழ பேரு போட்டுக்கறீங்க’ என்று கேட்டேன்.

நவயுவக் கவிஞர் அனுஜன்யாவிடம் இதுபற்றிக் கேட்டபோது ‘இல்லப்பா. சில பதிவுகளைத் திறந்தா பின்னூட்டம் போட்டவங்க பேரு ‘)))))’ இப்படித் தெரியும்லியா. அதுக்காகத்தான்’ என்றார். ‘ச்சே.. இது தெரியாமப் போச்சே நமக்கு’ என்று நினைத்துக் கொண்டேன். நாமாக எதையும் முடிவு செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது....

சில வருடங்களுக்கு முன் என் வழக்கறிஞ நண்பரின் வாட்ச் கடை ஒன்றுக்கு நீதிபதி ஒருவர் வந்தார். ஒரு திருமணத்திற்கு பரிசளிக்க வாட்ச் ஒன்றை வாங்கினார். கிஃப்ட் பேக் செய்யுமுன் விலையை அழிக்க முயன்றபோது ‘வேண்டாம்.. வேண்டாம்’ என்றார். கேட்டபோது சொன்னார்..

“இல்லப்பா. இவரு ஜட்ஜ்., இவரு குடுத்த வாட்ச் இவ்ளோ இருக்கும். அவ்ளோ இருக்கும்னு அவங்களா பெரிசா நெனைச்சுக்கக் கூடாதுல்ல. என்னால இவ்ளோதான் முடியும்’னு தெரியட்டுமே.. என்ன தப்பு” என்றார்.

வித்தியாசமான கோணமாக இருந்தது.

**********************************
எழுத்தாளார் அகதாகிறிஸ்டியின் கணவர் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். உங்க கணவரைப்பத்தி.. ‘ என்று நிருபர்கள் கேட்டபோது சொன்னாராம்.. “வழக்கமா கணவர்களுக்கு நாளாக நாளாக மனைவியின்மீது ப்ரியம் கம்மியாகும். ஆனா இவரு தொல்பொருள் ப்ரியர் அல்லவா. அதுனால நான் பழசானா இன்னும் ப்ரியம் அதிகமாகுமே” என்றாராம்!

*****************************

தீப்பெட்டி திறந்தால்
பிஞ்சு விரல்கள்
-ஸ்ரீகுமாரன்

வண்ணத்துப் பூச்சி
மழையில் நனைகிறது
ஐயோ வர்ணங்கள்
-நா.விச்வநாதன்

மழை போல் மனசு
கடல் போல்
துயரம்
-விக்ரமாதித்யன்

(கணையாழி – ஏப்ரல் ’91)

Tuesday, March 10, 2009

ஸ்பெஷல் அவியல் - 10 மார்ச் 2009

நேற்றைய கிசுகிசுவை ஏறக்குறைய எல்லாரும் கண்டுபிடித்தாலும் ஒன்றரண்டை மிஸ் பண்ணியிருந்தார்கள்.

இதோ...

பெயரை மாற்ற விரும்பும் பதிவர் – நம்ம தாமிரா! ஆமாங்க.. அதே பேர்ல ஒரு எழுத்தாளர் இருக்கறதால பல குழப்பங்களும், இவருக்கு கிடைக்கற திட்டு அவருக்கு கிடைக்கறதாவும் தகவல். அதுனால இந்த முடிவு. உங்களுக்கு நல்ல ஐடியா தோணினாலும் என் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி சைடில்.

2. கார்க்கி – பரிசல்

3. நர்சிம்-பரிசல் (வழக்கமா ஆயிரம் மெய்ல் வந்தது... நூற்றுக்கணக்கான ஃபோன் வந்ததுன்னு பீலா விடுவேன். நெஜமாவே நேத்து நர்சிம்மை ‘ஸ்டிக்கர் பதிவர்’ன்னு ஏன் சொன்னீங்கன்னு நிறைய ஃபோன் கால்! ஸ்டிக்கருக்கான காரணம்... பதிவின் கடைசியில் காண்க!)

4. வால்பையன் – பிறந்தநாள் தோழர் அதிஷா – நன்றி சொல்ல மறந்த பதிவர் ஈரவெங்காயம். (இதுக்கு கார்க்கி, வெண்பூன்னு சொல்லியிருந்தாங்க... ஆமா... வெண்பூக்கு கார்க்கி ப்ளாக்லேபிள் ஃபுல் வாங்கிக்குடுத்தாரா என்ன? சொல்லவேல்ல?!?)

5. அதிஷா 6. கேபிள் சங்கர் 7. யெஸ். பாலபாரதி –முரளிகண்ணன்

கடைசில சொன்ன அடுத்தவார தமிழ்மண நட்சத்திரம்....? வெய்ட் அண்ட் சீ!

*************************

புதிய பார்வை ஆசிரியராக பாவை சந்திரன் இருந்தபோது நம்ம ரமேஷ் வைத்யா இசை பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி.. டிசம்பர் சீசனில் எழுத வாய்ப்பு கேட்டிருக்கிறார். ‘மாலை அஞ்சு மணிக்கு வர்றீங்களா?’ என்றிருக்கிறார் பாவை சந்திரன்.

மாலை ஐந்து மணிக்கு இவர்கள் போனபோது..

“யார் நீங்க?” என்றிருக்கிறார். நண்பர் ஹரிகுமாரோடு போன இவர் மறுபடி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு ‘இசைக் கட்டுரை சம்பந்தமா...”

“ஓ! இன்னும் படிக்கல. காலைல பத்து மணிக்கு வர்றீங்களா?”

காலை பத்து மணிக்கும் அதே யார் நீங்க கேள்வி... இவர்கள் அறிமுகப்படலம் எல்லாமே அரங்கேறியிருக்கிறது. எல்லாம் முடிந்து மறுபடி அடுத்த நாள் காலை பத்து மணிக்கு கெடு கொடுக்கப்பட்டிருக்கிறது.

மறுபடி யார் நீங்க... மறுபடி அறிமுகங்கள்..

இதே தொடர்ந்து நாலைந்து நாளாக நடக்க... ஆறாவது நாள் பாவை சந்திரன் 'யார் நீங்க’ எனக் கேட்டதும் ரமேஷ் வைத்யாவின் நண்பர் ஹரிகுமார் சொன்னாராம்..

“புதிய பார்வைங்கற பத்திரிகைக்கு நீங்க ஆசிரியரா இருக்கறது ரொம்பப் பொருத்தம் சார். ஒவ்வொரு முறையும் ‘புதிய பார்வை' பார்த்து யாரு.. யாருன்னு கேட்கறீங்க”

பின் குறிப்பு: ‘இதை அவியல்ல போடறேண்ணா’ என்று ரமேஷ் வைத்யா அண்ணனிடம் கேட்டபோது அவர் சொன்னார்.. “ஏன்... அறிஞர்கள் வாழ்வில் அன்றாட நிகழ்ச்சிகள்’னு எழுதிப் போட மாட்டியா?”


ஆச..தோச..அப்பளம்..வடை!

********************

உஷா பத்திரிகை அலுவலகத்துக்கு டி.ராஜேந்தர் வரும்போதெல்லாம் (அந்த பத்திரிகை இருந்தப்போ!) ஒரு டயலாக் சொல்வாராம்...

“சர்க்குலேஷனை மேல ஏத்தணும்யா... இப்ப இருக்கற ட்ரெண்டை மாத்தணும்யா”

– இதைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பாராம்.

ஒரு நாள் அங்கே இருக்கும் டேபிள், சேரையெல்லாம் எடுத்து வந்து கொண்டிருந்தார்களாம்.

“என்ன நடக்குது” என்று நண்பர் ஒருவர் கேட்க.. சொன்னார்களாம்..

“அதான் சர்க்குலேஷனை மேல ஏத்தணும், மேல ஏத்தணும்னு சொன்னாருல்ல... அதான் சர்க்குலேஷன் டிபார்ட்மெண்டை மேல-மூணாவது ஃப்ளோருக்கு ஷிப்ட் பண்றாங்க”

*******************************

அகர்வால் கண் மருத்துவமனையில் வாசல் கதவு ஒரு கண்ணின் அமைப்பில் இருக்கும். அதாவது கண் பாவையினூடே பார்வையாளார்கள் நுழைவது போல..

மருத்துவமனையைத் திறந்து வைத்தவர் அப்பல்லோ மருத்துவமனையிலன் கைனகாலஜிஸ்ட். திறந்து வைத்துப் பேசும்போது அந்த நுழைவாயிலைப் பாராட்டி இப்படிச் சொன்னாராம்...

“நல்லவேளை.. அகர்வால் என் துறையில் இல்லை!”

*****************************

சென்றவாரம் தமிழ்மண நட்சத்திரமாக இருந்த வால்பையனிடம் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். “ஸ்டாரா இருந்தீங்களே.. நல்ல முன்னேற்றம் இருக்கும்ல?”

”இல்ல பரிசல்... அதே நம்ம வழக்கமான ஆட்கள்தான் பின்னூட்டியிருந்தாங்க”

“ஓஹோ... பின்னூட்டத்த விடுங்க... ஆனா ஹிட்ஸ் ஏறியிருக்குமே..”

“ஹும்.. BUDS இருந்தாக்கூட காது கொடயலாம். HITSஐ வெச்சுட்டு என்ன பண்ண?”

*****************************
யாவரும் நலம் இந்தியில் 13B என்ற பெயரில் வந்திருக்கிறது. மாதவன் 13 Bயாவது ஃப்ளாட்டில் குடியிருப்பதாய்க் காட்டியிருக்கிறார்கள். B கூட எழுதும்போது 13ன் வடிவத்தில் வருவதால்தான் என்கிறார்கள். 13 ராசியில்லாத நம்பரா என்று பேசிக்கொண்டிருந்தாபோது நம்ம தமிழ்நாட்ல வாக்குப்பதிவு மே 13தானே’ என்று நண்பர்கள் சொன்னார்கள்.

நல்லா நடக்கணும் தேர்தல் என்று வேண்டிக் கொள்கிறேன். ஏதாவது கலவரம், அசம்பாவிதம் நடந்து மே13 கருப்பு நாளாக ஆகிவிடக்கூடாதே என்ற வருத்தம்தான்.

‘யாருக்குமில்லாத அக்கறை உனக்கேன்’னு கேட்கறீங்களா...

என் பொறந்த நாள்ங்க அது!

********************************
அவியலுக்கு மேட்டர் சேகரிப்பது ஒவ்வொரு முறை கஷ்டமாக இருக்கும். ‘சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என் மின்னஞ்சலில் - kbkk007@gmail.com”என்று விளம்பரம் கொடுக்கலாமா என்றெல்லாம் யோசித்ததுண்டு. ரமேஷ் வைத்யா போன்ற சகலகலா வல்லவர்கள் நட்பிருப்பதால் தப்பித்து வருகிறேன். முடிந்தவரை பிரபலமானவர்கள் வாழ்வென்று இல்லாமல்.. நம்மோடே இருக்கும் நண்பர்கள் சந்திக்கும் சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்வதில் ஒரு சந்தோஷம் இருக்கத்தான் செய்கிறது!

இந்த வாரம் கொஞ்சம் ஈஸியாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

***********************

நர்சிம்மை ஸ்டிக்கர் பதிவர் என்றதன் அர்த்தம்:-

ஸ்டிக் = கம்பு

ஸ்டிக்கர் = ?

கம்பர்!

அதுவுமில்லாம அவர் யார்கூட பழகினாலும் டக்னு ஒட்டிக்குவார்ங்க! அதான்!

அடி விழறதுக்குள்ள ஓடிடறேன்!

************************

Wednesday, March 4, 2009

அவியல் 04.03.09 – 200ம் 250ம்...!




(பேட், ஹெல்மெட்டுக்கு பதிலா கீபோர்ட், மௌஸை வெச்சுட்டு ரெண்டுமூணு ஸ்டில்ஸ் எடுத்துப் பார்த்தேன். எனக்கே சகிக்கல. அதனால நம்ம சச்சின்!)


நேற்றைக்கு என் வலைப்பூவை பின்தொடரும் ஃபாலோயர் லிஸ்ட் 200ஐத் தாண்டியது. மிகவும் கௌரவமாகவும் நெகிழ்வாகவும் உணர்கிறேன். நேற்றைய பின்னூட்டத்தில் வாழ்த்திய சிலர் 250 பதிவுகள் என்று வாழ்த்தியபோதுதான் கவனித்தேன்.. இந்தப் பதிவு 250வது பதிவு. எனது 250வது பதிவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டி இருக்கவேண்டும் என்று நினைத்தேன். எந்திரன் ஷூட்டிங்கில் பிஸியாம். ‘ப்ளீஸ் கிருஷ்ணா.. நான் உங்க க்ளோஸ் ஃப்ரெண்டுங்கறது வெளீல தெரிய வேண்டாமே” என்று வேறு சொல்கிறார். ம்ம்ம்.. என்ன செய்ய.. போனாப் போகுதுன்னு அவியலே போட்டுடலாம்னு முடிவு பண்ணி.. இதோ...!

200க்கும் 250க்கும் பார்ட்டி எப்போ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பிய நண்பர்கள் எல்லாரும்... எங்கிருந்தாலும், பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொள்ளவும். வாட்டர் தெரபி ஈஸ் பெஸ்ட்.. யு நோ?

**********************

மகள்களின் ஸ்கூலில் ஆண்டுவிழா. முடித்து வெளியே பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தபோது எனக்கு முன்னால் ஒரு தாய், அவரது மகளை அடித்ததற்கு கணவன், ‘ஏய்.. எதுக்கு புள்ளயப் போட்டு அடிக்கற?’ என்று கேட்டார்.

“சும்மா இருங்க. உங்களுக்கென்ன தெரியும்? அந்தக் கார் எவ்ளோ வேகமா போச்சு.. இவ பாட்டுக்கு ஓடறா?”

“அதுக்கு அடிச்சா சரியாப் போச்சா?”

இந்த இடத்தில் இடைமறித்தார், கணவன் வாகனத்தை எடுத்து வர காத்திருந்த இன்னொரு பெண்.. அவர்கள் குடும்ப நண்பியாய் இருக்க வேண்டும்.

“சும்மா இருங்க. உங்களுக்கெல்லாம் நாங்க அடிக்கறதுதான் தெரியும். எதுக்கு அடிக்கறோம்னு தெரியாது. அடிச்சா அதுல எவ்ளோ பாசம் இருக்குன்னு எங்களுக்குத்தான் தெரியும்”

“அப்போ அடிச்சா பாசம் ஜாஸ்தின்னு சொல்றீங்களா?”

“நிச்சயமா”

உடனே தனது மனைவியை நோக்கி.. “பார்த்துட்டியா என்ன சொல்றாங்கன்னு. அடிச்சா பாசம் ஜாஸ்தியாம்” என்று சிரித்தபடி சொல்ல..

அவரது மனைவி சொன்னார்...

“ம்ம்.. வீட்டுக்கு வாங்க. யாருக்கு பாசம் ஜாஸ்தின்னு காட்டறேன்”

அவியலுக்கு ஒரு மேட்டர் கிடைத்த சந்தோஷத்தோடு நான் எஸ்கேப்பானேன்!

******************************

ஏர்டெல்லின் புதிய விளம்பரம் பற்றி எழுதலாம் என்றால் ஏற்கனவே இந்த வார காக்டெயிலில் கார்க்கி எழுதிவிட்டார். கலக்கலான விளம்பரம் அது. ‘இந்தக் குழந்தைய விட்டுட்டு அவங்கப்பனுக்கு டெல்லி போகாட்டிதான் என்ன?’ என்று கேட்கவைத்தது.

இன்னொரு அசத்தல் விளம்பரம்... மிரிண்டா. தன்னை, பெண் பார்க்க வந்த பையனின் அப்பா பாடத் தெரியுமா என்று கேட்க.. வீணை எடுத்து வந்து.. அழகாக சுருதி பிடித்து... டமீலென்று ‘யம்மாடி.. ஆத்தாடி..ஒன்ன எனக்குத் தரியாடி’ என்று டப்பாங்குத்து குத்துகிறார். அசினின் நடிப்பு பிரமாதம். அதைவிட, அதை மாப்பிள்ளை ரசிப்பதாக காட்டிய க்ரியேட்டிவிட்டி அதைவிட பிரமாதம். (அவரு முகத்தைப் பாருங்க... அவ்ளோ ரசிப்பார்)

அதோடு நிற்காமல்.. ‘அடுத்து ஆடத் தெரியுமான்னுதானே கேப்பீங்க’ என்றுவிட்டு எழுந்து போடுகிறார் பாருங்கள் ஒரு ஆட்டம்....

அலப்பறை!

*******************

செல்ஃபோனில் SMS அடிக்க நான் எப்போதுமே T9 டிக்‌ஷனரியைத்தான் பயன்படுத்துவேன். மிகவும் வேகமாகவும், சுலபமாகவும் அடிப்பேன். ஒரு வார்த்தையை அடிக்க, அந்தந்த எழுத்துகள் இருக்கும் எண்களை ஒருமுறை அழுத்தினாலே.. வார்த்தைகளைக் கோர்க்கும். ஒரே எழுத்துக் கோர்வையில் பல வாசகங்கள் இருந்தால்.. ஸ்டாரை அழுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

இதில் KISS என்பதை அடித்தால் முதலில் வருவது வேறு வார்த்தை. ஆனால் சம்பந்தம் இருக்கிற வார்த்தை! என்ன ஒரு ஒற்றுமை என நான் நினைப்பதுண்டு!

ஒரு க்ர்யேடிவிட்டிக்காகத்தான் குறிப்பிட்டேன். யாரும் திட்டித் தீர்த்துடாதீங்கப்பூ.. நான் பச்சப்புள்ள...

***************************

அண்ணே - எம்.எம்.அப்துல்லா அனுப்பிய சாதத் ஹசன் மண்ட்டோவின் படைப்புகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகம். ராமானுஜம் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த பல விஷயங்களை பதிவு செய்த இப்பேர்ப்பட்ட புத்தகம் என்ன விலை இருக்கும் (நம்ம புத்தி!) என்று பார்த்தால் ‘த.மு.எ.ச. 11வது மாநில மாநாட்டிற்காக எம்.எம். அப்துல்லாவும் அவரது தோழர் பிரகதீஸ்வரனும் இலவசமாக வழங்கியது.. விற்பனைக்கல்ல’ என்றிருந்தது!

அதில் இருந்து ஒரே ஒரு சொற்சித்திரம்....

பிரிவினையின்போது ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்க ஒரு கூட்டம் செல்ல.. அந்தக் கூட்டத்திலிருந்த ஒல்லியான மனிதன் ‘இந்த வீட்டில் நிறைய செல்வங்கள் இருக்கின்றன. பொறுமையாக நாம் கொள்ளையடிதுப் பிரித்துக் கொள்வோம்” என்கிறான். கூட்டம் ஆர்ப்பரித்து அவனைப் பின்பற்றுகிறது. இது இங்கே இருக்கிறது.. இதன் விலை இவ்வளவு என்றெல்லாம் கூறியவாறே அவன் அந்தக் கூட்டத்தை வழிநடத்துகிறான். எல்லாம் முடிந்து அவனை ‘ஆமா.. நீ யார்?’ என்று கேட்க அவன் சொல்கிறான்.

“இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன்”

*************************

பதிவுலகுக்கு வந்து நான் எழுதாமல் தள்ளித் தள்ளிப் போவது இளையராஜாவுடனான எனது நெருக்கத்தைத்தான். (நேரிலல்ல.. பாடல்கள் மூலம்) ரகுமான் ஆஸ்கார் வாங்கியபோது அவருக்கு (ராசாவுக்கு) ஒரு கடிதம் மாதிரி ஒன்று எழுதி... முடிக்காமல் வைத்திருந்தேன். ‘நம்ம தமிழன் ஒரு அவார்ட் வாங்கிருக்கான்யா.. நீங்க கூப்ட்டு பாராட்டினா நல்லா இருக்கும்ல? எங்களுக்கிருக்கற சந்தோஷம் உங்களுக்கில்லையா ஐயா?” இப்படியெல்லாம் போகும் அந்தக் கடிதம். ஏனோ.. பதிவிடவில்லை. நேற்று சர்வேசனின் இந்தப் பதிவைப் படித்ததும் மிக மகிழ்ச்சியுற்றேன்!

கற்றாரைக் கற்றாரே காமுறுவர்!

******************

குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் பாடல்களில் யுவன் பாடிய ‘கடலோரம் ஒரு ஊரு' ஹிட். ஆனால் எனக்கு அதைவிட வேல்முருகன் என்பவர் பாடிய ‘என் ராசாத்தி கிளியே..' பாடல் அத்தனை அத்தனை பிடித்தது. என்ன ஒரு சோகமான பாடலுக்கு, என்னா ஒரு டப்பாங்குத்து அடி. YUVAN IS BACK என்று சொல்லத் தோன்றியது.

பலரைக் கூப்பிட்டு இந்தப் பாடலைப் பகிர்ந்துகொண்டபோது பலருக்கும் இந்தப் பாடல் இருப்பதே தெரியவில்லை. எல்லாரும் 'நெட்ல இல்லியே' என்கிறார்கள். அப்புறம்தான் பார்த்தேன் நெட்டில் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட உரலில் மட்டும்தான் கிடைக்கிறது என்றார் நண்பர் கார்க்கி.

ஒரிஜினல் கேஸட் வாங்குங்கப்பூ.. சூப்பர் பாட்டு மிஸ் பண்ணாதீங்க!

**********************
சங்கமம்ல ஏதோ போட்டியாம். பூந்து விளையாடணும்னு தோணுது. நானும் களத்துல இறங்கறேன். தலைப்பு கல்லூரியாம். கதை, கவிதை, கட்டுரை, அனுபவம், புகைப்படம், குறும்படம் எல்லாம் அனுப்பலாமாம். இதோ லிங்க்.

ஸ்டார்ட் மீஜிக்....

Wednesday, February 25, 2009

அவியல் – 25.02.2009

கோவை, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டேன். வருடா வருடம் அங்கு செல்வது வழக்கம். இந்தமுறை இயற்கை சூழ்ந்த அந்த மலையடிவாரத்தில் அத்தனை வாகனங்கள் போக்குவரத்தாலும், கூட்டத்தினாலும், சத்தங்களினாலும் என்ன நிகழும் என்ற பார்வையோடு கலந்து கொள்ளுங்கள் என்றார் அண்ணாச்சி (வடகரை வேலன்). அது பற்றித் தனியே.. அப்புறமாய்..

ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது. அத்தனை கூட்டத்தை சமாளிக்க பல வழிகள் செய்யப்பட்டிருந்தாலும் நிறைய குறைபாடுகள். எனக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் மட்டும்..

ஆறுமணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிக்கு மூன்று மணிக்கே சென்று சேர்ந்தோம். நானும் நண்பர் ஒருவரும் நின்று பழரசம் அருந்திக் கொண்டிருந்த போது, பத்தடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டிருந்த நீலநிற ட்ரம் ஒன்றில் ஒருவர் A4 சைஸிலான பாதாம்பால் விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டிருந்தார். அந்த ஸ்டிக்கரின் ஒட்டும் பகுதியில் இருக்கும் பேப்பரைக் கிழித்துக் கீழே போட்டுவிட்டு, ட்ரம்மில் அதை ஒட்டுவார். இப்படியே நாலைந்து ட்ரம்களில் அவ்ர் ஒட்டியபோது அவர் அருகில் சென்று அந்த ட்ரம்மைப் பார்த்தேன். குப்பை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ட்ரம்!

“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்றீங்க.. தப்பில்ல. ஆனா அது எதுக்கு வெச்சிருக்கோ, அதுக்கு யூஸ் பண்ண மாட்டீங்கறீங்களே? அந்த ஸ்டிக்கரைப் பிரிக்கற பேப்பரை கீழ குப்பையா போடறீங்களே? அதையாவது இதுக்குள்ளயே போடலாம்ல?”

உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம்களுக்கு அருகில் கிடந்ததையும் எடுத்து உள்ளே போட்டார். சொல்வதை உணர்ந்து இப்படி ஏற்றுக் கொள்ளும் ஆட்கள் இருக்கும் வரை நம்பிக்கை காய்ந்துவிடாமல் இருக்கிறது.

****************

இன்னொன்று....

அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். அது எங்களுக்கு வேண்டும் என்றார்கள். ‘அப்போ நான் வேற யாருக்காவது வாங்கிட்டு போறேன்னா அவங்களுக்கு விலை எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். (பல புத்தகங்களில் என்ன விலை என்பது அச்சடிக்கப்பட்டு இருக்காது!) அப்படி உங்களை நம்பாதவங்களுக்காக நீங்க ஏன் வாங்கீட்டுப் போறீங்க?’ என்று கேட்டார் அந்தப் பெண். கேட்டதோடு மட்டுமில்லாமல் ‘புக்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார் கடையில் விற்பனையில் இருந்தவரிடம். இவர் அங்கே வாலண்டியராம். ‘நீங்க ஈஷா க்ளாஸ் முடிச்சு வாலண்டியரா இருக்கறது வேஸ்ட்டுங்க. இப்படி ஒரு பதிலை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கல. நீங்க வியாபாரம்னு ஆரம்பிச்சு கடை விரிச்சுட்டீங்க. நான் உங்களுக்கு டிவோட்டீயோ, ஃபாலோயரோ இல்ல. வெறும் கஸ்டமர்தான். என்னைத் திருப்திப் படுத்தறது உங்க கடமை’ என்று திட்டிவிட்டு நகர்ந்தேன். ச்சே!

*******************

இங்கே நான் இருக்கும் பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் ஒரு சின்ன போஸ்டர் அங்கங்கே தென்படுகிறது. ராஜபக்‌ஷேவின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாயாம். தீர்வு என்னவென்பதை தீர யோசிக்காமல் இந்த மாதிரி கோமாளித்தனமான வேலைகளை இந்த மாதிரி ஒருசிலர் செய்வதைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. இதேபோல தர்மபுரியில் ‘ஒகேனக்கல் 2025’ என்ற அமைப்பை நடத்தும் சிலர் தர்மபுரியை வல்லரசு மாவட்டமாக 2025க்குள் மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார்களாம். முதல்கட்டமாக நயன்தாரா நடிக்கும் தியேட்டர்களிலெல்லாம் நல்ல பாம்புகளை விடப் போகிறார்களாம். அவர் கவர்ச்சியாக நடிக்கிறார், கலாச்சாரத்தைக் கெடுக்கிறார் என்பதால் இப்படியாம். அடுத்தகட்டமாக நமீதா, அசின், ப்ரியாமணி, தமனா என்று லிஸ்ட் இருக்கிறதாம். இவர்களுடன் ஜோடி சேர்ந்து ஆடும் விஜய், அஜீத் உட்பட எல்லாருக்கும் இதே எச்சரிக்கைதானாம். அப்படியும் அடங்கவில்லை என்றால் அவர்கள் வீடுகளில் நல்லபாம்பை விடுவார்களாம்.

வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது..

“போங்கடா.. போய்ப் புள்ளகுட்டியப் படிக்க வைங்கடா.. கப்பித்தனமாப் பேசிகிட்டு....”
**********************

வர வர தொலைக்காட்சியைத் திறந்தால் திகட்டுகிற அளவுக்கு சேனல்கள். ஒவ்வொரு சேனலும் ஒரே மாதிரி, செய்திகள், காமெடி, படங்கள் என்று தங்களுக்குள் பல சேனல்களைக் காட்டி வெறுக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடிவேலுவுக்கு தான் நடித்த காட்சி ஒவ்வொருமுறை ஒளிபரப்பப்படும்போதும் ஏதாவது தொகை சென்று சேருமானால் அவர் இந்நேரம் உலக நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இருப்பார். அவ்வப்போது மனதைத் தளர்த்திக் கொள்ள பார்த்த வடிவேலுவின் நகைச்சுவைகளைப் பார்த்தாலே திகட்டுகிற அளவுக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். அவருக்கும், சினிமாவிற்கும் இது நிச்சயமாக நல்லதல்ல. எல்லாரும் ஒருவித வெறுப்புதட்டிய மனோநிலையில் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.

***********************

பிப்ரவரி 15ம்தேதி மகளை ஹிந்தித் தேர்வு ஒன்றில் விட்டுவிட்டு வரும்போது ஒருபக்கம் நல்ல கூட்டம். ‘எப்படீங்க இப்படிப் பண்ணலாம்? அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கே இப்படிப் பண்ணலாமா?’ என்றெல்லாம் பேச்சுகள்!

விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.

ங்கொய்யால!

***********************

பாக்கிசில்லறைக்குப் பதில்
சாக்லெட் கொடுக்கிறான்
சர்க்கரை நோயாளிக்கு

இந்தக் கவிதைக்ககானப் பாராட்டுக்களை பின்னூட்டத்திலும் திட்டுக்களை தனியே மெயிலிலும் சொல்லுங்கப்பா. (மெய்ல் பாக்ஸ் இன்னைக்கு ஃபுல் ஆகப்போகுது!)

மனசாட்சி: இந்தக் கவிதைக்காக திட்டு வாங்க மாட்ட.. இதை கவிதைன்னியே அதுக்குத்தாண்டா ஒனக்கு திட்டுவிழப்போகுது!)

*

Friday, February 13, 2009

அவியல் – 13.02.2009

மொக்கைச்சாமி, மொக்கைச்சாமின்னு ஒருத்தன். கடவுளை நோக்கி ரொம்ப நாளா தவம் இருந்தானாம். என்னடா வரம் வேணும்னு கடவுள் கேட்டாராம். இவன் சொன்னானாம்..

“கடவுளே.. எனக்கு சாவே வரக்கூடாது”

“அப்படியே ஆகுக”ன்னு சொல்லிட்டு சிரிச்சுட்டே போய்ட்டாராம் கடவுள்.

ரொம்ப நாள் காட்டுல தவம் இருந்தவன் வரம் பெற்ற இறுமாப்புல நெஞ்சை நிமித்தி நடந்து வந்துட்டிருக்கறப்ப.. ஒரு சாமியார் எதிர்ல வந்து
“யாரப்பா.. நீ?”ன்னு கேட்டாராம்..

இவன் சொன்னானாம்... “மொக்கைமாமி”

பாவம்.. அவனுக்கு ‘சா’வே வரல!
************************
கரண்டைக் கட் பண்றது யாருன்னு நமக்கெல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். கரண்டைக் கண்டுபிடிச்சது யாரு?

தாமஸ் ஆல்வா எடிசன்?

இல்ல! கரண்டைக் கண்டுபிடிச்சது பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். அவரு மழை பெய்யும்போது பட்டம் விட்டிருக்காரு. மழை நின்னிருக்கு. அப்போ மழை பெய்யறப்போ மாஞ்சாக்கயிறிலேர்ந்து ஒரு வைப்ரேஷன் மாதிரி வந்ததை உணர்ந்து, அப்படிக் கண்டுபிடிச்சதுதான் மின்சாரம். ஆனா அதைப் பயன்படுத்தற விதமா பயன்படுத்தணும்டா-ன்னு பல்பைக் கண்டுபிடிச்சதால தாமஸ் ஆல்வா எடிசன் அதிகமா பேசப்படறாரு!

****************************
பாரிஸில் ஒரு பிரபல ஓவியரின் ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ஆதாம் ஏவாள் குறித்த ஒரு நிர்வாண ஓவியம். அந்த ஓவியம் முன் நான்கைந்து குழந்தைகள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கண்காட்சிக் கூடத்தின் நிர்வாகி ஒருவர் ‘இதேதடா.. வில்லங்கமான படம் முன் குழந்தைகள் இருக்கிறார்களே’ என்று அருகே போக, ஒரு சிறுமி அருகிலிருந்த சிறுவனைப் பார்த்துக் கேட்ட்து காதில் விழுந்தது.

“டே.. இதுல எது ஆம்பள.. எது பொம்பள?”

அட்டா.. வில்லங்கமான கேள்வி கேட்டுவிட்டாளே’ என்று இவர் இன்னும் அருகே சென்றபோது அவன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்...

“எப்படித் தெரியும்? அவங்கதான் ட்ரெஸ்ஸே போடலியே!”

குழந்தைகள்!

ஹூம்! நாம் தான் ‘பெரியவர்கள்’ ஆகிவிட்டோம்!!

*********************

உமா கேட்ட ஒரு கேள்வி அர்த்தமுள்ளதாக இருந்தது..

“இந்த சன் டி.விக்காரங்க சினிமா கே.டி-வில போடுவாங்க... பாட்டு சன் மியூசிக்ல போடுவாங்க. நியூஸ் சன் நியூஸ்ல போடுவாங்க. குழந்தைகள் ப்ரோக்ராம் சுட்டில போடுவாங்க. இப்போ காமெடிக்குன்னு ஆதித்யா-ன்னு ஆரம்பிச்சுட்டாங்க”

“சரி.. அதுல உனக்கென்ன பிரச்னை?”

“அப்போ சன் டி.வில என்னதாங்க போடுவாங்க? வெறும் சீரியலேவா?”

இது சீரியல் கொஸ்டின் இல்ல.. சீரியஸ் கொஸ்டின்தான்!

************************

நண்பர் ஒருவருக்கு வாட்ச் வாங்கினோம். பில்லுக்கு பின்னாடி Do’s & Don’ts”ன்னு போட்டிருப்பாங்களே.. அதுல ‘Don’t change the day/date between 10 pm and 2 am in your day/date watch’ன்னு போட்டிருந்தது. ஏன் இப்படி-ன்னு யோசிக்க கொஞ்சம் மண்டையைப் போட்டு குழம்பிக் கண்டுபிடிச்சேன்.. என்னான்னு சொல்லுங்க பார்ப்போம்!

****************
திருவனந்தபுரம் ஹைகோர்ட்டில் ஒரு பெரிய ஓவியம் வைத்திருக்கிறார்களாம். இரண்டு பேர் கையில் சட்டியுடன் நிற்கும் படமாம். ஒருத்தரிடம் மட்டும் கூடுதலாக பேப்பர் கட்டு ஒன்று இருக்குமாம்.

அனுசரித்துப் போங்கள். வழக்கு நடத்த ஆரம்பித்தால் சட்டிதான் மிஞ்சும் என்பதே அதன் பொருளாம். அப்போ அந்த பேப்பர் கட்டு?

ஜெயிச்சவனுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவா அந்த தீர்ப்பு நகல் இருக்குமாம். சபாஷ்!

********************
முரளிகண்ணன்( வரவேற்பறை), செல்வேந்திரன் (கவிதைகள்) என்று விகடனில் கலக்க, கார்க்கி, கேபிள் சங்கர், தாமிரா யூத் ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இடம்பெற என்று எல்லாருக்கும் வாழ்த்துகள் சொல்வதை விட முக்கியமாய் விகடனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இப்படி எங்களை ஊக்குவிப்பதற்கு. (ஏற்கனவே யூத்து, யூத்து-ம்பாரு சங்கர். இனி கேட்கவே வேண்டாம்!)

********************
கல்யாண்ஜியின் ‘எல்லோர்க்கும் அன்புடன்’ என்ற கடிதத்தொகுப்பை சோர்வுறும்போதெல்லாம் எடுத்துப் படிப்பது வழக்கம். இதை நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போது “அவரு அவர் நண்பர்களுக்கு எழுதின கடிதத்தைப் படிச்சா உங்களுக்கு எப்படி ரி-ஃப்ரெஷ் ஆகும்?”ன்னு கேட்டார்.

அவருக்கு பதிலாய் இதோ அந்தப் புத்தகத்தில் அங்கங்கே நான் அடிக்கோடிட்டவையில் சில..

* வேலைக்குப் போக ஆரம்பித்தபிறகு வேலைதான் எப்போதுமே வாழ்க்கையாகிவிடுகிறது

* வாழ்க்கை எப்போதுமே ஆதாரமற்றுப் போய்விடுவதில்லை.

* தனிமை நிரம்பிய ஆண்களின் பிற்பகுதி வாழ்க்கையில் நண்பர்கள் தருகிற வெளிச்சத்தை வேறு யாராலும் தரமுடிவதில்லை.

* எதையாவது தொடர்ந்தும், எதனாலோ தொடரப்பட்டும் கடைசிவரை செய்வினை, செயப்பாட்டுவினை ஆகிவிட்டது வாழ்க்கை.

* மூக்குத்தி இல்லாமலும் அழகாக இருக்கிற மூக்கு உலகத்தில் எவ்வளவு இருக்கிறது.

* தேவையற்ற இலைகள் உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாக பறவைகளும் இருக்கையில்., தேவையெற்றதெல்லாம் உதிரும்படியாகவே வாழ்வும் இருக்கும்.

*****************

Thursday, February 5, 2009

அவியல் 05.02.09

திருப்பூரில் புத்தகக் கண்காட்சி என்றால் என் மனைவிக்கு அவ்வளவு பயம். ஏற்கனவே ஈரோடு புத்தகக் கண்காட்சிக்கு பலமுறை பர்ஸை சோதனை செய்துவிட்டு அனுப்பியும், க்ரெடிட் கார்டு மூலம் செலவழித்துவிட்டு வந்ததில் அவருக்கு ஏமாற்றம். படிக்க வேண்டிய புத்தகங்கள் நிறைய இருப்பதால் நானும் வாங்கும் மனநிலையில் இல்லை.

நண்பர் செல்வேந்திரனுடன் ஞாயிறன்று திரு.ஞானசம்பந்தனின் உரை கேட்கச் சென்றிருந்தோம். ஏதோ கட்சி மீட்டிங்கிற்குப் போனது போல எல்லாருமே அரசியல்வாதிகளாக இருந்தார்கள். ‘முடிஞ்சா ஒக்கார்ந்து கேளுடா’ என்பது போல பேசினார்கள். செல்வேந்திரன் ‘இதுபோன்ற இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பேச வேண்டிய விஷயங்களை எழுதிக் கொடுக்கும் பணியை ஆரம்பிக்கலாம் போல இருக்கிறதே’ என்று சொன்னார். வந்தவர்கள் எல்லாம் அழைப்பிதழை வைத்துக்கொண்டு ‘................ அவர்களே, .................... அவர்களே’ என்றது மகா அறுவை. ரொம்பக் கீழே போய், திருவள்ளுவர் அவர்களே, பாரதியார் அவர்களே என்று சொல்லாமல் விட்டது தேவலை.

எட்டாம் தேதிவரை நடைபெற இருக்கிறது இந்தப் புத்தகக் கண்காட்சி. கண்காட்சியின் பொருட்டு திருப்பூருக்கு வர விழையும் வலைப்பதிவு நண்பர்கள் ஒரு மெயிலில் தெரிவித்தால் நண்பர்கள் சார்பில் இரவு டிஃபனும், என் சார்பில் ஒரு ஆட்டோகிராஃபும் கிடைக்கும் என உறுதி அளிக்கிறேன்.


*****************************************

கல்கத்தாவின் தெருவோரத்தில் கிடக்கிறார் அந்தப் பெரியவர். உடம்பில் அங்கங்கே புண்களுடம் ரத்தம் வழிய கிடந்தவரை நாள்முழுக்கக் கடந்துசென்ற எவரும் கண்டுகொள்ளாதபோது, அந்தக் கார் நின்றது. காரிலிருந்து இறங்கிய அந்த மூதாட்டி, பெரியவரைக் கைத்தாங்கலாக காரில் ஏற்றி தான் சார்ந்த மருத்துவமனையில் சேர்க்கிறார். ஓரிரு நாளில் குணமாகிக் கண்விழிக்கிறார் பெரியவர். சிலுவை அணிந்த அந்த மூதாட்டி அன்னை தெரசா என்பதில் சஸ்பென்ஸ் தேவையில்லை. பெரியவரைப் பார்த்து அன்னை தெரசா யாரென்று கேட்க, பெரியவர் சொல்கிறார். “நான் காளிகோயில் பூசாரி அம்மா. இத்தனை வருடங்களாகப் பூஜை செய்கிறேன். காளி உங்கள் வடிவில் காட்சி தந்துவிட்டாளம்மா” என்கிறார்.

‘மதமெனும் பேய் பிடியாதிருக்க..’ என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சியில் செவ்வாயன்று திரு. நாஞ்சில் சம்பத் பேசும்போது இதுபோன்ற நிறைய சம்பவங்களைச் சொல்லி, முடிவில் “கறுப்புத் துண்டணிந்து மேடையில் நாத்திகம் பேசி முழங்க நான் புறப்படும்போது ‘மகனே.. பத்திரமாய்ப் போய்வா’ என்று என் அன்னை என் நெற்றி நிறைய திருநீறை அள்ளிப் பூசும்போது மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறேனே.. அங்கேதான் மதத்தை மனிதம் வெல்கிறது” என்றார். இலக்கியக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதிகளுக்கிடையில் இவர் ஒரு விதிவிலக்கு. கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக கூட்டத்தைக் கட்டிப் போட்டார். பேசிமுடித்து மேடையிலிருந்து இறங்கி காருக்குச் செல்லும் வரை அவரோடு பேசியது ஒரு நல்ல அனுபவம்.

*******************************************
இலங்கையில் நாம் வெல்வது உறுதியாகிவிட்டது. என்னதான் இங்கே பயிற்சியளிக்கப் பட்டாலும், அவர்களது பருப்பு நம்மிடம் வேகவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் நமது வெற்றியை உறுதி செய்வார்கள்.. அன்றைக்குக் கொண்டாடுவோம்.


தோனியின் வீரர்கள் இப்படிப் பாடுபட்டு வெற்றிபெற, ‘மகேந்திரசிங் தோனியா, மச்சக்கார தோனியா’ என்றும், LADY LUCK IS WITH DHONI என்றும் அவரது உழைப்பை அதிர்ஷ்டத்தோடு சம்பந்தப்படுத்துவதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை.

*********************************************

மகள்கள் ஏதோ எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருக்கும்போது என்னையும் செய்யச்சொல்ல, சும்மா ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்தேன். திடீரென்று இருவரும் ‘அப்படி இல்லப்பா.. இப்படி’ என்று என்னை அமுக்க, முதுகில் பயங்கரமான சுளுக்கு. நேற்று முழுவதும் வலி. சும்மாவே படுத்துக் கிடந்து, நேற்று மாலை பொறுக்க முடியாமல் டாக்டரிடம் போக அவர் ஏதோ சால்டரிங் கம்பிபோல ஒன்றால் ஷாக் குடுத்து, மாத்திரை தைலம் கொடுத்தார். ம்ஹூம். உமாவின் நண்பி ஒருவரது அப்பா சுளுக்கெடுப்பார் என்று கேள்விப்பட்டுப் போனோம். ‘எங்கே வலி’ என்று கேட்டார். வலது முதுகு என்று சட்டையைக் கழட்டப் போக, ‘அதெல்லாம் வேண்டாம்’ என்று இடது கையைப் பிடித்து, முழங்கைக்கு அருகில் எண்ணையைப் போட்டு சுளுக்கெடுத்தார். ‘முதுகுல பிடிப்பு. இங்க வழிக்கிறாரே’ என்று கேட்டபோது, ‘மாறுகால் மாறுகைலதான் சுளுக்கெடுக்கணும். நிஜமா சுளுக்கா இருந்தா இதுல சரியாய்டும். இல்லீன்னா எக்ஸ்-ரே எடுத்துத்தான் பார்க்கணும்’ என்றார். பிரமிப்பாய் இருந்தது. ஓரளவு சரியாகி, இதோ உட்கார்ந்து டைப் அடிக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டேன்.
*******************************************

சமீபத்தில் அசத்திய வாசகம்: கும்க்கி தனது ஆர்க்குட் ப்ரொஃபைலில் போட்டிருந்தது:

“நான் பக்தன். மற்ற எல்லோரும் கடவுள்”

**************************************
"ஒருவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதற்கு அவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல் போனால், அவன் எப்படி இருக்கக் கூடாதோ அப்படி ,ஆன பிறகு அவனைத் திட்ட நேரிடும்"

-நான் சொன்னது!

*

Thursday, January 29, 2009

அவியல் - ஜனவரி 29 2009

தனிப்பாடல் திரட்டு என்றொரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அம்பிகாபதி, அருணாச்சலக் கவிராயர், கம்பர், அவ்வையார், காளமேகம் உட்பட 31 புலவர்களில் சில பாடல்கள் அடங்கிய புத்தகம். பல பாடல்கள் வியப்பாய் இருக்கின்றன. அழகிய சொக்கநாதக் கவிராயர் என்ற கவிஞர் ஒரு பெண்ணைக் காதல் கொண்ட தலைவன், அந்தப் பெண் பேசாமடந்தையாய் இருக்கும்போது பாடுவதாக எழுதிய ஒரு பாடலில் வரிகளில்…

வெள்ளரிக் காயா? விரும்பும்அவ ரைக்காயா?
உள்ளமிள காயா? ஒருபேச் சுரைக்காயா?

என்று காய்களையும் சேர்த்து கவி படைத்திருக்கிறார்!

வெள்ளரிக்காயா: வெள்ளரி = வெண்மை நிறமுடைய அரி (திருமால்) நரசிங்கமாய்த் தோன்றியபோது அவரது தாய் அவர் தோன்றிய தூண்தானே? அந்தக் காதலி தூணைப் போல நின்றுகொண்டிருந்தாளாம்!

விரும்புமவரைக் காயா: விரும்புவோரை இயல்பாகக் கோபம் கொள்ளுபவளா நீ? (காயா – கோபமா?)

இப்படி அர்த்தத்தோடு சேர்த்திப் படிக்கும்போது நன்றாகத் தான் இருக்கிறது.

இதே தொகுப்பில் ‘தாயோடு அறுசுவைபோம்’ என்ற பாடலில் பொற்றாலியோடு எவையும்போம் = பொன்தாலி அணிந்த மனைவி போனால் எல்லா நலனும் நீங்கிவிடும் என்றெழுதிய அவ்வையாரே... யார் யாரை எங்கெங்கே புகழ வேண்டும் என்றெழுதிய ‘நேசனைக்கா ணாவிடத்தில் நெஞ்சார வேதுதித்தல்’ என்ற பாடலில் ‘மனையாளைப் பஞ்சணையில்’ என்றெழுதியது ஏனென்று புரியவில்லை. மனைவியைப் பஞ்சணை மெத்தையில் புகழவேண்டும் என்பதில் எனக்குடன்பாடில்லை.

மனைவிகளுக்கு அவர்கள் அழகைப் புகழ்வதில் மகிழ்ச்சியுண்டு எனினும், அது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தும். மனைவிமார்களுக்கு அவர்கள் சமையலைப் புகழ்கையில் அதே அளவு மகிழ்விருப்பதைக் கண்டிருக்கிறேன்/கேட்டிருக்கிறேன்.

************************

இதேபோல பாடல்களில் புரியாத வரி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது... ‘சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைத்தேனே’ பாடலில் வரும் ‘இவள் கன்னி என்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது’ எனும் வரி. இதற்கு நல்லதொரு அர்த்தம் இருக்கும் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளாக இதன் அர்த்தம் அறிய ஆவல். மழைத்துளி கன்னிமையை எப்படிக் கண்டறியும்? ஏதோ ஒரு குறும்பான அர்த்தத்தில்தான் கவிஞர் இதை எழுதியிருப்பார். அதை அறிய ஆசையாய் இருக்கிறது! வைரமுத்துவை நேரில் கண்டால் கேட்க விரும்பும் கேள்விகளில் இது ஒன்று. தெரிந்தால் பதில் சொல்லுங்களேன்!

***************************

ஊட்டி சுற்றுலா போகுமுன் கோவை ஹோட்டல் ஒன்றில் காலை டிஃபனுக்காகப் போனோம். மசால்தோசை ஆர்டர் செய்த அண்ணாச்சி (வடகரை வேலன்) சர்வரிடம் சொன்னார்:

“வேகமா கொண்டுவாங்க. கால் மாத்திடாதீங்க”

எனக்குக் குழப்பமாக இருந்தது. கால் மாத்திடாதீங்கன்னா? அண்ணாச்சியிடமே கேட்டேன்...

“வேகமா-ல கால் மாத்திப் போட்டுப் பாருங்க”

வேகாம.

ஹோட்டல் என்பதால் அவர் காலில் விழ முடியவில்லை!

***************************
நண்பர் எம்.எம்.அப்துல்லா எல்லாரையும் ‘அண்ணே’ என்றழைப்பது நாடறிந்த விஷயம். நான் ரமேஷ் வைத்யா அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் அப்துல்லாவுக்கு கான்ஃபரன்ஸ் கால் போடச் சொன்னார். போட்டபோது, இவர் கேட்டார்:

“அப்துல்லா.. உங்களுக்குக் கூப்பிட்டபோது உங்க அண்ணன்னு யாரோ பேசினாங்க நேத்து. ஆனா அது உங்க குரல் மாதிரிதான் இருந்தது. யார் அது?”

நான் இடைமறித்துச் சொன்னேன்...

“இவராத்தான் இருக்கும். பழக்கதோஷத்துல தன்னையே அண்ணன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு!”

எல்லாரும் கைதட்டீங்களா? வெரிகுட்!!

********************

திருப்பூரில் ஒரு வீட்டிற்கு திருடன் வந்திருந்து, திருட முயன்றிருக்கிறான். பலமணிநேரத் தேடலில் ஒன்றும் சிக்கவில்லை. கடுப்பாகிப் போன அவன் வீடு முழுவதும் மலஜலம் கழித்து, பான்பராக் கறைகளாலும் அசிங்கப் படுத்திவிட்டுப் போய்விட்டானாம்.

இதைத் தினசரியில் போட்டிருந்தார்கள். சரி. முடிக்கும்போது ஒரு வரி...

“வீட்டுக்காரரின் சமயோசிதத்தால் 40000 ரூபாய் தப்பியது. அவர் குப்பைக் கூடைக்குள்ளும், அரிசிப் பானையிலும் பணத்தை ஒளித்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது”

தேவையா இது?

***************************

காதலில் விழுந்தேன் படம் பற்றி ஆஃபீஸில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“படமாங்க அது. ச்சே. செத்துப்போன காதலியோட பாடியை வெச்சுட்டு சுத்தறானாம் ஹீரோ” என்றொருவர் சொல்ல நான் கேட்டேன்.

“ச்சீ! பாடியை வெச்சுட்டா? அசிங்கம். அசிங்கம்” ன்னேன்.

ஒரு நிமிஷம் யாருக்கும் ஒண்ணும் புரியல. புரியறதுக்குள்ள நான் அங்கிருந்து சிரிச்சுட்டே வெளிய வந்துட்டேன்!

*********************

போன வார ஜீ.வி-யில் பார்த்திபனின் டைமிங்கூ நல்லா இருந்தது.

‘எது நடந்ததோ
அது ஏழாயிரமாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது ‘சத்திய’மாகவே நடக்கிறது
எது நடக்குமோ
அது ஜாமீனாகவே நடக்கும்!'


'இடையிடையே
தேர்தல் போதும்
தமிழக கிராமங்கள்
தன்னிறைவடைய...'

இப்படி நாலைந்து.

எனக்குப் பிடித்த காசி ஆனந்தனின் ஒரு நறுக்கு

ஏடுகளில் முன்பக்கம்
அட்டையில்
வீடுகளில் பின்பக்கம்
அடுக்களையில்

தலைப்பு: பெண்கள்.


.

Monday, January 19, 2009

அவியல் – ஜனவரி 19 ‘2009

பொங்கல் விடுமுறையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மீட் பண்ணிவிட்டு வரலாம் என்று திடீர் முடிவாகி, போய்விட்டு வந்தோம். நல்ல கூட்டம். நல்ல தரிசனம். அங்கிருந்து சமயபுரம் மாரியம்மனையும் தரிசித்து வந்தோம். கோயிலைப்பற்றியும் பயண அனுபவம் பற்றியும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன். இப்போதைக்கு, இரண்டே இரண்டு சம்பவங்கள்..

கோயிலின் க்யூவில் நிற்கும்போது மூன்று அல்லது நான்கு வயதுள்ள ஒரு குழந்தையிடம் அப்பா கேட்டார்.

“நீ என்ன பாப்பா வேண்டிக்கப்போற?”

அவள் கன்னத்தில் கைவைத்து யோசித்தவாறே, “என்ன வேண்டிக்கறது?” என்று திருப்பிக் கேட்டாள்.

“அப்பா கொஞ்சம் ஒல்லியாகணும். நீ கொஞ்சம் குண்டாகணும்ன்னு வேண்டிக்க” என்றார் அவர்.

இவள் சரி என்று கம்பிமேல் ஏறி விளையாடி விட்டு, ஐந்து நிமிட இடைவெளியில் கேட்டாள்..

“அப்படி ஆய்ட்டோம்னா அடுத்த தடவை வரும்போது அப்படியே மாத்தி வேண்டிக்கணுமா?”

சுற்றி இருந்தவர்களெல்லாம் பிரமித்துப் போக, அவள் அப்பாவின் கண்களில் பெருமிதம்!

**************

கோயிலை ஒட்டிய பெட்டிக் கடை ஒன்றில் அறிவிப்பு.

எச்சரிக்கை 1: இன்று துக்ளக் வரவில்லை.

எச்சரிக்கை 2: நாளை வரலாம்.




துக்ளக் பாணியிலேயான இந்த அறிவிப்பை வியந்து பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு எழுதிய கடைக்காரருக்கு கைகொடுத்துப் பாராட்டியபோது ‘ஒவ்வொரு தடவையும் இப்படித்தாங்க எழுதுவேன்” என்றார் அவர்.

பின்ன? சுஜாதா ஊர்ல இருந்துகிட்டு இந்தக் க்ரியேடிவிட்டிகூட இல்லைன்னா எப்படி!

**************

யானைகளுக்கு காசும், தேங்காயும் கொடுத்தால் பாகனிடம் கொடுத்துவிடுகிறது. பழம் கொடுத்தால் 'லபக்’கென்று வாயில் போட்டுக் கொள்கிறது. எப்படிப் பழக்கியிருக்கிறார்கள் என்று வியந்து கொண்டிருக்கும்போதே பாகன் அடுத்து நின்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்..

“ரெண்டு ரூபா, அஞ்சு ரூபா காயினாக் குடுங்க. ஒரு ரூபா காயினைப் பாத்தா கோவப்படும்”

அடுத்த நிமிடம் ஐந்தாறு பேர் கொத்தாக எஸ்கேப்பானார்கள்.

நல்லாக் கெளப்புறாய்ங்கய்யா பீதிய!

**************

குமுதம் டாப் டென் ப்ளாக்கரில் ஆறாவதாக அடியேனை தேர்வு செய்திருந்தார்கள். நன்றி குமுதத்துக்கும் உங்களுக்கும். கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. கம்பனை எழுதினாலும், காளை பிடி பற்றி எழுதினாலும் மிரட்டும் நர்சிம், எப்போதாவது புனைவு எழுதினாலும் அபார நடையில் தரமாக எழுதும் முரளிகண்ணன் என்று சிலரின் எழுத்துக்கள் ‘டேய்... ஜாக்கிரதை’ என்று பயமுறுத்துகின்றது. தாமிரா, கார்க்கி போன்றவர்களுக்கு இன்னும் கிடைக்க வேண்டிய பல பாராட்டுகள் முழுமையாகச் சென்று சேரவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

இந்த நேரத்தில் நான் எனக்குக் கிடைத்திருக்கும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் நன்றி சொல்லிக் கொள்கிறேன். நல்லாயிருப்பதை நல்லாயிருக்கு என்றும், ‘புகழ்தலின் வைதலே நன்று’ என்று நாலடியார் சொன்னது போல, கேவலமாக இருப்பதை ‘இதுக்கு நீங்க இன்னைக்கு லீவு விட்டிருக்கலாம்’ என்றும் இடித்துரைக்கும் அவர்கள் இல்லாவிட்டால் நான் சீரழிந்திருப்பேன்.

*************

திருமங்கலம் இடைத்தேர்தலில் பணம் விளையாடியதாகப் பரவலான பேச்சு இருக்கிறது. இங்கே எங்கள் அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவர் ‘சார்.. அஞ்சாயிரம் தர்றேங்கறாரு சார். எங்க வீட்டு ஓனர். எங்க வீட்ல நானும் என் வொய்ஃபும் போனா பத்தாயிரம் சார்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார். ‘லீவு தரமாட்டாங்களே’ என்று கேட்டதற்கு ‘சார்.. ரெண்டு மாச சம்பளம் ஒரே நாள்ல கெடைக்குது சார். லாஸ் ஆஃப் பே-ன்னாலும் பரவால்ல.. போகணும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்குள் இருந்த இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிச கிருஷ்ணகுமார், அவர் வீட்டு ஓனரைப் பார்த்து இதெல்லாம் நிஜம்தானா என்று விளக்கமாய்க் கேட்கச் சொல்லிக் கொண்டே இருந்தான். சரி என்று அவரிடம் பேசியதற்கு அடுத்த நாள் அவரது வீட்டுக்குப் போனேன்.

பயில்வான் ரங்கநாதனுக்கு அண்ணன் போல பெரிய மீசையோடு ஒருத்தர் கதவு திறந்து தடித்த குரலில் ‘என்ன வேணும்’ என்று கேட்க ‘இது பதினஞ்சாம் நம்பர் வீடுதானே’ என்று கேட்டு ஓடி வந்துவிட்டேன்!

****************

இளையராஜாவின் இசையில் ‘நான் கடவுள்’ பாடல்கள்தான் இப்போதைய என் ஃபேவரைட். (இன்னும் நந்தலாலா கேட்கவில்லை) மாதா உன் கோயிலில் பாட்டை, மெட்டெல்லாம் மாற்றாமல் அழகாக ரீ-மிக்ஸில் தந்திருக்கிறார். அது எப்படி இவர் இசையில் ஒலிக்கும் தபேலா மட்டும் அப்படிப் பேசுகிறதோ! அந்தப் பாடலின் புதிய வெர்ஷனான 'அம்மா உன் பிள்ளை நான்' பாட்டில் எந்த இடத்தில் ராஜா BEATஐ ஆரம்பிக்கிறார் என்பதை முதல்முறையிலேயே ஊகிக்க முடிந்தால் நீங்கள் க்ரேட்!


பிட்சைப் பாத்திரம் ஏந்திவந்தேன் பாடல் ஏற்கனவே ராஜாவின் ரமண மாலை-யில் இளையராஜாவின் குரலிலேயே கேட்ட பாடல். அற்புதமான பாடல். ராஜாவின் அருமையான வரிகள். இதில் கே.ஜே.யேசுதாஸ்... ச்சே... மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் எனக்கு இரண்டு கேள்விகள்...

ரமணமாலையில் தான் பாடும்போது பிட்ஷைப் (BITSHAI) பாத்திரம் என்று பாடியவர் மது பாலகிருஷ்ணனை பிச்சைப் (PICCHAI) பாத்திரம் என்று பாடவிட்டது ஏன்?

சரணத்தில்

அம்மையும் அப்பனும் தந்ததால் – இல்லை
ஆதியின் வல்வினை சூழ்ந்ததால்
இம்மையை நான் அறியாததால்
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட


என்பதில் ஒவ்வொரு வரிகளின் முடியும் ‘ல்’ மது பாலகிருஷ்ணன் பாடும்போது சரியாகக் கேட்கவே இல்லை. அதுவும் ஆதியின் வல்வினை சூழ்ந்ததால் என்பது சூழ்ந்ததா என்றுதான் முடிக்கிறார். ராஜா பாடும்போது அழுத்தமாக அந்த ‘ல்’ல்லை பாடியிருப்பார்.

இதிலென்ன பெரிய தவறு என்று தோன்றுகிறதா? இம்மையை நான் அறியாததால் என்பதில் அடக்கமும், இம்மையை நான் அறியாததா என்பதில் இறுமாப்பும் தெரிகிறதே!!!

நிச்சயமாக ராஜா இதைக் கண்டுக்காமல் விட்டிருக்க மாட்டார். முதலாவது பிட்ஷை, பிச்சையானது எல்லோருக்கும் புரியட்டும் என்பதால் இருக்கலாம். இரண்டாவது... என் சிற்றறிவிற்கு எட்டவில்லை!

ஆனால் திரும்பத்திரும்ப கேட்க வைக்கிற பாடல்.

Wednesday, December 31, 2008

ஸ்பெஷல் அவியல் – 31 DEC 2008

அந்தப் பிரபலம் தனது நண்பரை பிரபல இயக்குனர்கள், எழுத்தாளர்களெல்லாம் கலந்து கொள்ளும் ஒரு விழாவுக்கு அழைக்கிறார். நண்பருக்கு வர முடியாத சூழல். மறுக்கிறார். பிரபலம் வற்புறுத்துகிறார்.

நண்பர் தயக்கமாய் “வாழ்க்கைல இந்த சான்ஸ் கிடைக்காதுதான்..” என்றதும் சட்டெனச் சொல்கிறார் பிரபலம்
“இந்த சான்ஸ்னால வாழ்க்கையே கிடைக்கலாம் இல்லியா?”

யார் அந்தப் பிரபலம்? அது என்ன விழா?

----------------------
பென்சனர் கணனி, பன்மலர், ஜெயமாலா, கவிதா மண்டலம், இன்றைய கல்வி, செய்திமடல், தமிழாலயம், கவிதை உறவு, உதவிக்கரம், ஆட்டோக்காரர், தில்லை சுடர், குடிமக்கள் முரசு, வானமே எல்லை, தொழில் நுட்பத் தோட்டக்கலை, தமிழ்ப்பணி, இமயகீதம், தமிழ் மூவேந்தர் முரசு, கண்ணியம், இலக்கியப்பீடம், கனிமொழி, தமிழ்நானூறு, வளரும் தமிழ் உலகம், அமுதம், ஆளுமைச் சிற்பி, இளந்தமிழன், முகம்


இதெல்லாம் என்ன?

ஆனந்தவிகடன், குமுதம் மாதிரியான வார, மாத, மாதமிருமுறை இதழ்கள்!

எந்த நூலகத்திற்குப் போனாலும் இவற்றைப் பார்க்கலாம். இதற்குமுன் கேள்விப்பட்டதுண்டா இவற்றை? (வேலன் அண்ணாச்சி – இந்தக் கேள்வி உங்களுக்கு இல்லை!)படித்தால் பிரபல பத்திரிகைகளை விட நல்முத்துக்கள் இதில் சிக்குவதுண்டு!

******************************
விகடன் அலுவலகத்தில் வலைப்பூ படிக்கிறார்கள் என்பது எல்லாரும் அறிந்ததே. வால்பையன் அதை உறுதிப்படுத்தி இருந்தார். மானாட மயிலாட டீமிலும் BLOG படிக்கிறார்களோ? ஏன் கேக்கறேன்னா... நான் ஒருமுறை அவியலில் இவ்வளவு சூப்பராக செட் போடும் கலைஞர்களை அறிமுகப்படுத்தினால் என்ன என்று எழுதியிருந்தேன். அது MM 1, அல்லது MM 2 என்று நினைக்கிறேன். ஞாயிறு ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் செட்டில் படம் வரைந்திருந்த ஓவியக் கலைஞர் சின்னத்தம்பியை அறிமுகப்படுத்தினார்கள்!

ரொம்ப ஓவரா சிந்திக்கறேனோ?

**************************

பெண்கள் ரோஜாப்பூவை தலையில் வைக்கும்போது தலைகீழாக வைத்திருந்தால் எனக்குப் பார்க்கப் பிடிக்கவில்லை. என்னமோ, ‘உன் தலைல வந்து ஒக்கார வேண்டியதாப் போச்சே’ என்று அந்தப் பூ தலைகுனிந்திருப்பதாய் எனக்குத் தோன்றும். ஒரு சிலரே பூவை மேல் நோக்கிய வண்ணம் வைக்கிறார்கள். ஏன் இப்படி?

***************************

சிம்பு ஒரு நல்ல திறமைசாலிதான். ஆனால் டான்ஸ் ஆடச் சொன்னால் ஜிம்னாஸ்டிக் செய்வதுதான் ஏனென்று தெரியவில்லை. போதாத குறைக்கு அவரது அப்பாவின் காமெடி பேட்டிகளும் சேர்த்து அவரை காணாமல் போக்கிவிடுமோ என்று தோன்றுகிறது. எப்போ பார்த்தாலும் ‘இன்னிக்கும் நான் ஹீரோவா நடிச்சா கைதட்டி ரசிக்க கூட்டம் கூட்டமா வருவானுக சார்’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு பேட்டி தருகிறார். போதாக் குறைக்கு ‘ரஜினி, கமலை எல்லாம் ஏத்துக்கறீங்க? நான் அவங்களை விட வயசுல சின்னவன் சார்’ என்கிறார்.

இடித்துரைக்கும் ஒரு நட்பு கூடவா இவருக்கில்லை? கொடுமைடா சாமி!

********************************************
ஒருத்தன் ஆஃபீஸுக்கு லீவு லெட்டர் எழுதினானாம்.. ‘நாளை நான் விஷம் குடித்து சாக இருப்பதால் நாளை ஒருநாள் மட்டும் எனக்கு விடுமுறை அளிக்குமாறு....’

ஒங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா?

இன்னொரு ஜோக்..

மருந்துக் கடைக்கு அவசர அவசரமாய் வந்த ஒருவர் கேட்கிறார்: “விக்கலுக்கு ஏதாவது மாத்திரை குடுங்க”

அதிர்ச்சி வைத்தியம்தான் சரிப்படும் என்றெண்ணிய கடைக்காரர் பளார் என்று அறைகிறார்.

அடுத்த நொடி வந்தவர் திருப்பி விட்ட அறையில் கடைக்காரருக்கு பொறி பறக்கிறது.

”யோவ்.... விக்கல் எனக்கில்ல.. எம் பொண்டாட்டிக்கு!”

**********************************

முதல் பத்தியில் சொன்ன அந்தப் பிரபலம் நர்சிம். (இதையே எம்ஜியார், கவிஞர் வாலின்னு எதுனா போடலாம்!) அந்த விழா சாரு நிவேதிதாவின் புத்தக(ங்கள்) வெளியீட்டு விழா. மதன், இயக்குனர்கள் அமீர், சசிகுமார் என்று பலர் கலந்து கொள்ளும் அந்த விழா முடிந்து ‘தேநீர் விருந்து' நடக்குதாம்... நம்ம நர்சிம்மின் ஏற்பாட்டில்!!மேலதிக விபரங்களுக்கு சாருவின் இந்தப் பதிவைப் பாருங்கள்.

நர்சிம்.... எனக்கு ஒரு செட்டு பார்சல்! (புக்ஸ்ங்க!)

**************************************

ஏற்கனவே என்னுடைய ஃபாலோயர் லிஸ்டில் ஸ்வாமி ஓம்கார் என்றொரு பதிவர் இருக்கிறார். போய்ப் பார்த்தால் வயது 108, இருப்பிடம் ‘ஈஸ்வரனின் மனதில் புருவ மத்தியில்’ என்று அவரது ப்ரொஃபைலில் போடப்பட்டிருந்தது. அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். (பதிவுகள் நல்ல தரம்!) இரண்டு நாட்களுக்கு முன் ஒரு ஃபாலோயர்.. பார்த்தால் சாணியடி சித்தராம். வயது 84. மூலிகைப்பண்ணை வைத்து நடத்தி வருகிறாராம். இருப்பது தென்பொதிகையாம்.

ம்ம்..நடத்துங்க..நடத்துங்க...

--------------------------

2008 எனக்கு ஒரு முக்கியமான வருடம். வலைப்பூ ஆரம்பித்தது, பல சொல்லிக் கொள்ளும்படியான நண்பர்களைப் பெற்றது என்று மறக்க முடியாத வருடம். என்னை உயிப்பாய் வைத்திருக்கும் எழுத்துக்கும், என் இனிய உங்களுக்கும் என்றென்றும் நன்றியும், புத்தாண்டு வாழ்த்துக்களும்!

(இந்தப் புத்தாண்டில் எந்தச் சபதமும் ஏற்க மாட்டோம் என்ற சபதம் ஏற்போம்! ஓக்கே?)

---------------------------------------------------

தானாய் முளைத்த
செடி என்கிறார்கள்
யாரோ வீசிய
விதையிலிருந்து தானே
-கல்யாண்ஜி

அடிக்கடி பார்க்க முடிகிறது
யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண்புழுவைப் பார்த்து
-கல்யாண்ஜி

எத்தனையோ எழுதிவிட்டேன்
ஒரு முறையும் எழுத முடியவில்லை
உன் பெயரை.

எழுதப்போவது
உன் பெயரையென்று தெரிந்ததும்
தலை நிமிர்ந்து கொள்கிறது
என் பேனா..
எப்படி எழுத?

(கடைசி கவிதையை எழுதினது தபூ சங்கர் அல்ல.. பேரைச் சொன்னா திட்டுவீங்களோன்னு பயமா இருக்கு.... ஹி..ஹி..!)

Monday, December 29, 2008

சரியா... தப்பா?

அந்தச் சிறுவனுக்கு பதினோரு வயது. ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். கூட்டுக் குடும்பத்தில் இருந்த அவனது மாமா, பெரியப்பா, அவரது மகன்கள் எனப் பலரும் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார்கள். இவனுக்கு அவர்களோடு அதிகாலை எழுவதும், குளிர்ந்த தண்ணீரில் குளித்து பெரியப்பா ஐயப்பன் கதைகளைச் சொல்லியபடி நடந்தே ஐயப்பன் கோவிலுக்குப் போவதும் மிகப் பிடித்துப் போக, அவர்கள் விரதமிருந்த நாற்பத்தெட்டு நாளும் இவனும் விரதமிருந்தான். விரதம் என்றால் எந்த வித்தியாசமும் இவனுக்கிருக்கவில்லை. ஆறுமணிக்கு பதில் ஐந்து மணிக்கு எழுந்ததும், அவர்களோடு சரணகோஷம் போட்டதும்தான் வித்தியாசம். வாரம் ஒரு முறை வீட்டில் நடைபெறும் பஜனையில் கஞ்சிராவை இசைத்தபடி இவன் பாடல்கள் பாட ‘அட’ என்று எல்லாரும் பார்ப்பார்கள். மற்றபடி மாதத்திற்கொரு முறை அவன் ஊரில் பிரபலமாயிருந்த நேரு கபே ஹோட்டலில் குடும்பத்தோடு சாப்பிடுவது அந்த மாதத்திற்கு மட்டும் கட்! (விரதம் என்றால் வெளியே சாப்பிடமாட்டார்கள்!)

இருமுடி கட்டும் விழா நடந்தது. பெரியவர்களுக்கு இணையாக இவன் சாமியே ஐயப்பா என்று கோஷம் போட்டதை எல்லாரும் வியப்பாய் பார்த்தனர். ராகத்தோடும், பாவத்தோடும் இவன் பஜனைப் பாடல்கள் பாடியதற்கும் பலரது பாராட்டுகள் கிடைத்தது. ஆயிற்று. எல்லாரும் காரில் ஏறப்போகும் சமயம் ‘நாம் போகப் போவதில்லை’ என்ற உண்மை இவனுக்கு உறைக்க அந்த அம்பாசிடர் காருக்கு முன் விழுந்து கதறி அழுதான். யார் சமாதானப்படுத்தியும் அது அடங்கவில்லை. அண்ணா ஒருத்தர் ‘அடுத்த வருஷம் உன்னை நிச்சயமா கூட்டிகிட்டுப் போறேன்’ என்று சொல்லியும் அழுகை நிற்கவில்லையெனினும் இவனை கட்டுப்படுத்தி காரை அனுப்பி வைத்தார்கள்.

அடுத்த வருஷம் மலைக்குப் போக யார் யார் என்ற லிஸ்ட் போடப்பட்டபோது முதலில் இவன் பெயர் எழுதப்பட்டது. ‘நாங்க போறப்ப ஐயப்பனை நெனைச்சதை விட இவனை நினைச்சதுதான் அதிகம்’ என்றார்கள் போய் வந்த குடும்பத்தார் எல்லாரும். அந்த வருஷம் அவன் எட்டாவது படித்துக் கொண்டிருந்தான். பக்தி சிரத்தையாய் கோவிலுக்குப் போவது, பூஜைகள் செய்வது எல்லாவற்றையும் செய்தான். (அவனுக்கு அப்போதும் பிடிக்காத ஒரு விஷயம் அவனை விட பெரியவர்கள் ‘சாமி’ என்று சொல்லி இவன் காலில் விழ வருவது. அதை மட்டும் அவனால் ஏற்கவே முடியவில்லை.) மிகுந்த உள்ளத்தூய்மையோடும், சந்தோஷத்தோடும் அவன் சபரிமலை சென்று வந்தான்.

அடுத்த வருடம். அவன் ஒம்பதாவது படித்துக் கொண்டிருந்தான். வழக்கம்போலவே குடும்ப உறுப்பினர்கள் மாலை போடும்போது இவனும் போட்டுக் கொண்டான். ஆனால் முதல் நாள் சரணகோஷத்தின் போது, இவன் மனம் ஒன்றவில்லை. இவனுக்குள் என்னமோ மாற்றம். ஒட்டாமல் இருந்தான். ‘பல கேள்விகள். நான் ஏன் இப்படி இருக்கிறேன். போன வருஷத்தின் அமைதி இந்த வருஷம் என் மனதில் இல்லையே அது ஏன்’ எதற்கும் விடை கிடைக்கவில்லை. ஏதோ ஒப்புக்கு மாலை போட்டுக் கொண்டது போல ஆயிற்றே என்று வருந்திக் கொண்டிருந்தான். ஆனால்...

அவன் பெரியப்பா – குருசாமியாக எல்லாரையும் வழிநடத்தியவர் – காலமானார். இவன் மாலையைக் கழற்ற வேண்டியதாயிற்று. ‘மனம் ஒட்டாமல் இருந்த என்னை வரவேண்டாம் என்றான் ஐயப்பன்’ என்று மனதில் எண்ணிக் கொண்டான். அதற்குப் பிறகு இன்றுவரை அவன் சபரிமலைக்கு மாலை போட்டுக் கொள்ளும் வாய்ப்பே வரவில்லை.

அந்தச் சிறுவன்தான் இன்றைக்குப் பிரபலமாய் இருக்கும்..... சரி.. கோபப்படாதீங்க... நான்தான்!

அதற்குப் பிறகு இன்றுவரை பலமுறை சில ஐயப்ப சாமிகளின் பக்திப் பரவசத்தைப் பார்க்கும்போது, இவர்கள் வீட்டில் இழவு விழுந்து மாலையைக் கழட்ட மாட்டார்களா என்று நினைத்ததுண்டு. மன்னிக்கணும். கொஞ்சம் ஜாஸ்திதான் அப்படி நினைக்கறது. ஆனா அப்படி நினைச்சேன்-ங்கற உண்மையை உங்ககிட்ட மறைக்க விரும்பல.

ஒரு பெட்டிக் கடைல சிகரெட் வாங்கறாரு ஒரு சாமி. தீப்பெட்டி கேட்கறாரு. கடைக்காரர் ‘அங்க கயிறுல நெருப்பு இருக்கு சாமி’ங்கறாரு. அந்த சாமி கடைக்காரரை ஒரு முறைப்பு முறைச்சுட்டு (சாமி குத்தமாம்!) ‘மத்தவங்க பிடிச்சதுல பிடிக்கச் சொல்றியே சாமி. மாலை போட்டிருக்கேன்ல. தனியா தீப்பெட்டி குடு’ங்கறாரு.

அந்தப் பெட்டிக் கடைக்காரர்கிட்ட பேசிகிட்டிருந்தேன். டாஸ்மாக்ல இவங்களுக்கு தனி டம்ளராம். தண்ணி அடிக்கும்போது, போட்டிருக்கற மாலைல இருக்கற ஐயப்பன் டாலரை தூக்கி கைல பிடிச்சுட்டு சரக்கு அடிப்பாங்களாம். ஐயப்பன் டாலர் நெஞ்சோட ஒட்டி இருக்கும்போது சரக்கடிக்கடிக்கக் கூடாதுன்னு குருசாமி சொல்லியிருக்காம்.

என்னாங்கடா நெனைச்சுட்டிருக்கீங்க?

நான் பெரும்பாலும் கோவிலுக்குப் போவது அங்கிருந்து கிடைக்கும் அமைதியை வேண்டித்தான். ஆனால் செயற்கையாக கோவிலில் டமடம என்று அடிக்கிற ஒரு மெஷினின் மூலம் இயற்கையான உடுக்கை சத்தத்தையோ, பெரிய மணியின் நாதத்தையோ கொடுக்க முடியவில்லை. ஐயப்ப பக்தர்களின் அன்னதான விழா என்று சிலர் நடத்தும் ஒரு வார ஆர்ப்பாட்டத்திலும், மைக்செட் போட்டு ஊரையே தூங்க விடாமல் குழந்தைகளைப் படிக்க விடாமல் இவர்கள் செய்யும் வீண் அலப்பறையை பக்தி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. என் நண்பன் சௌந்தர் ‘உங்களுக்காவது பரவால்ல. அவ்ளோ தூரம். என் வீட்டு வாசல்ல மைக்கை கட்டிருக்காங்க. நான் என் குழந்தைகள், மனைவிகிட்டகூட பேச முடியறதில்லை.’ என்று புலம்புகிறார். அவ்வளவு சத்தம். அதுவும் பாட்டு என்றால் ஏசுதாஸ், வீரமணி பாட்டில்லை. ‘முக்காலா முக்காப்பலா’- வை ஐயப்பனுக்காக ‘ஐயப்பா... ஐயா அப்பா வா வா.. நீ வா வா’ என்று மாற்றி.. ச்சே! (இது அந்த மைக் செட் கோபத்தால் எழுதிய பதிவல்ல. ஒரு மாதம் முன்பே எழுத ஆரம்பித்தது. நாளாக நாளாக கோபம் குறையாமல் அதிகரிக்கும் வண்ணமே சம்பவங்கள் நடக்கிறது!)

இன்னொரு பக்கம் குருசாமி என்ற பெயரில் நடக்கும் பிஸினஸ். ஒரு குருசாமிக்கும் இன்னொரு குருசாமிக்கும் ரேட் வித்தியாசம் ஏனென்றால் அவர் இருமுடி கட்டும்போது டிராக்டர் வண்டி வைத்து ஐயப்பன் படத்தை ஊர்வலமாக கொண்டுவந்து ஊரையே கலக்கு கலக்குவாராம். எந்த சாமி இதைக் கேட்டது?

இப்போதும் உண்மையான பக்தியுடனும் உள்ளத்தூய்மையுடனும் மாலை போட்டுக் கொண்டு, பக்திப் புராணங்களைப் படித்துக் கொண்டு மலைக்குப் போகும் பக்தர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தப் பலர் குறைந்து சிலராகாமலும், நான் குறிப்பிட்ட சிலர் அதிகரித்து பலராகாமலும் இருக்க எல்லாம் வல்ல இறைவன், கண்கண்ட தெய்வம், வில்லாளி வீரன், வீரமணிகண்டன், அரிகரசுதன், ஆனந்த சித்தன், ஐயன் ஐயப்ப ஸ்வாமிதான் அருள்புரியவேண்டும்!

Monday, December 15, 2008

அவியல் - 15.12.08

மக்கள் தொலைக்காட்சியின் ‘புதிய கோணங்கிகள்’ நிகழ்ச்சி தவறாமல் நான் பார்க்க நினைக்கும் ஒரு நிகழ்ச்சி. நாட்டு நடப்பை, வெகு ஜாலியான இரு நண்பர்களின் பேச்சில் எள்ளலும், எகத்தாளமுமாக பேசி ‘சரிதான்ல இவங்க சொல்றது’ என்று நினைக்க வைப்பதில் இந்நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வார நிகழ்ச்சியில் பத்திரிகைகள் குறித்தும், பத்திரிகை தர்மம் குறித்தும் பேசினார்கள். அதில் கேட்ட இரண்டு நகைச்சுவைகள்..

பக்கிரிசாமி என்பவர் மரணமடைந்து விட்டார். ஒரு பத்திரிகையில் தவறாக குருசாமி காலமானார் என்று எழுதிவிட்டார்கள். குருசாமி கடுங்கோபத்தோடு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று நியாயம் கேட்கிறார். ‘மன்னிச்சுக்கோங்க.. நாளைக்கே மறுப்பு போட்டுடறோம். தப்பாப் போட்டதுக்கு வருத்தம் தெரிவிச்சுக்கறோம்’ என்கிறார்கள்.

அடுத்த நாள் மறுப்பு வெளிவருகிறது.. இப்படி..

“காலமானவர் பக்கிரிசாமி. குருசாமி என்று தவறாக அச்சாகி விட்டது. குருசாமி உயிருடன்தான் உள்ளார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்”

இன்னொன்று..

ஒரு பத்திரிகையை இரு ஆசாமிகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கவுண்டமணி, செந்தில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்..

கவுண்டமணி:

‘சேலத்தில் நகைக்கடை உடைத்து துணிகர கொள்ளை.. மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு’

பேப்பரைத் திருப்பி, “கோவையில் ஒடும் ரயிலில் லேப்டாப் திருடிய மர்ம ஆசாமியின் அடையாளங்கள் சிக்கின”

அடுத்த பக்கத்தைத் திருப்பி.. “மும்பையில் கைவரியை காட்டிய மர்ம ஆசாமியைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்தது”

செந்தில் குறுக்கிட்டு கேட்கறாரு.. “அது எப்படிண்ணே.. மர்ம ஆசாமிங்கற ஒரு ஆளு, ஒரே நாள்ல கோவை, மும்பை, சேலம்ன்னு போய் கைவரிசையைக் காட்டறான்?”

**********************
மலேசிய மந்திரி ஒருத்தரது பேட்டியை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் தான் தனது கனவுத் திட்டம் என்று சொல்லியிருந்தார். மலேசியா அரசுத் துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்கி வருகிறார்களாம்.

'இங்கயும் இப்படி மாறினா நல்லாயிருக்கும்ல?; என்று இதுகுறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

"கஷ்டம். ஏன்னா லஞ்சம் நோட்டாத்தானே குடுக்க முடியும். அது பேப்பர்தானே? அப்புறம் எப்படி பேப்பர்லெஸ் கவர்ன்மெண்ட் சத்தியமாகும்?" என்று கேட்டார் ஒருவர்.

யோசிக்க வேண்டிய விஷயம்தான்! (நம்ம இல்ல, லஞ்சம் குடுக்க/வாங்கறவங்க!)

*********************************

சமீபத்தில் ஆக்ஸிடெண்டலாக ஒரு இன்சிடெண்டைப் பார்க்கநேர்ந்தது. அந்த இன்சிடெண்ட் ஒரு ஆக்ஸிடெண்ட்! சிறிய விபத்துதான். ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் தனது பைக்கால், மொபட்டில் வந்துகொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்கவர் மீது மோதிவிட்டார். இருவருமே சிதறி விழுந்துவிட்டனர். உடனேயே கூடிய கூட்டத்தில் அந்த இளைஞனுக்கு ஆதரவாய் சிலர் அந்தப் பெரியவரை அடிக்காத குறையாக திட்ட ஆரம்பிக்க, அந்தப் பெரியவருக்கு ஆதரவாய்ப் பேசிய சிலரோ, இளைஞனை அடித்தே விட்டனர்!

என் கேள்வி இதுதான். அந்த இளைஞன் மீது தவறில்லை என்று நினைத்தவர்கள் அந்த இளைஞனை உடனே தூக்கி முதலுதவி செய்ய, அந்தப் பெரியவருக்கு
ஆதரவாய் வந்த சிலர் அவரை எழுப்பி தேவையான உதவிகள் செய்ய என்று இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!


மனிதம் குறைந்துவிட்டதற்கு இது போன்ற சம்பவங்கள்தான் சாட்சியாய் நிற்கின்றன!

********************

நட்பில் ஆண்-ஆண் நட்பு, ஆண்-பெண் நட்பு, பெண்-பெண் நட்பு இந்த மூன்றில் எது மிக ஆழமானது? எப்படியும் இதில் ஆண்-பெண் நட்பு அடிபட்டுப் போகிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பல ஆண்-பெண் நட்பு பிரிந்து போய்விடுகிறது. ஆணும் ஆணும் நட்பு சர்வசாதாரணமானதுதான். அடிக்கடி பேசிக் கொண்டேயிருப்போம்! ஆனால், நீங்கள் மணமானவராயிருந்தால் உங்கள் மனைவி அவரது நண்பிக்குப் பேசும்போது கவனித்துப் பாருங்கள், எப்போதாவது பேசினாலும் அளவுகடந்த அன்னியோன்னியம் அதில் ஆண்- ஆண் நட்பைவிட அதிகமாக இருக்கும்.

என் ஓட்டு பெண்-பெண் நட்புக்குத்தான்!

வேண்டுமென்றால் ஏ.சி.நீல்சனை வைத்து சர்வே எடுப்போமா? எந்த சர்வே எடுத்தாலும் ரொம்பவும் கூலாக முடித்துவிட்டுப் போய் விடுகிறார்கள். அவர்கள்தான் 'ஏ.சி' நீல்சன் ஆச்சே!


*********************

நான் சிறுகதை எழுதுவது எப்படி என்றொரு போஸ்ட் போட்டிருந்தேன். அதிலுள்ள சம்பவத்தை வைத்து, மிகச் சிறிய, அதே சமயம் சுவாரஸ்யமான முடிவில் கதை எழுதிய இவருக்கு என நன்றிகள்! ரொம்பப் பிடிச்சிருக்கு சாரே! நிச்சயம் சுஜாதா உங்களை.... பாராட்டியிருப்பாரு!

*********************

எனது மாமன் மகன் கிரேசிகிரியைப் பற்றி அடிக்கடி வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறேன். எந்தச் சூழலிலும் ஒரு சின்ன வார்த்தைப் பொறியில் கலகலக்க வைத்துவிடுவான்.

கடந்த வாரம் அவனது தந்தையார் காலமாகிவிட்டார். நல்ல மனிதர். நிறைந்த வயதில் மரணம். நேற்று பார்த்தபோது, கிரியின் அண்ணா தனது சில பூஜைச் சடங்குகளைச் செய்து கொண்டிருக்க, “அப்பாவுக்கு காரியங்களை நல்ல சிரத்தையாகச் செய்கிறாய்” என்று ஒரு பெரியவர் பாராட்டினார். உடனே சொன்னான் கிரி.. “பார்க்கறதுக்கு அப்பாதான் இல்ல”

எல்லாரும் சட்டென்று சிரிக்க, கிரியும் சிரித்துக் கொண்டிருந்தான்.. கண்ணில் நீருடன்.

***

Thursday, December 11, 2008

மூன்று அனுபவங்கள்

நான் செல்லும் கடைகளில் ஏதாவது குறையிருப்பின் முடிந்தவரை பண்பாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஷோ-வாக இருக்கும் கடைகளில் அப்படி இல்லை. சின்ன கடை, பேக்கரிகளில் குறையிருப்பின் கொஞ்சம் பாலிஷாக சொல்ல நினைப்பேன்.

சமீபத்தில் (1970கள் அல்ல. போன வாரம்) உடுமலைப் பேட்டை போயிருந்தேன், தம்பியோடு போய்க்கொண்டிருந்தபோது, ஒரு தெருவின் ஓரத்தில் பெஞ்சில் வைத்து மசால் பொரி போட்டுக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அதைப் பார்த்ததும் உடுமலையைச் சுற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களோடு தினமும் செல்லும் (லைப்ரரிக்கு எதிரிலிருக்கும்) செட்டியார் பொரிக்கடை ஞாபகம் வரவே அங்கே காரைச் செலுத்தினேன். அசத்தலான டேஸ்டில் இருக்கும் அங்கே மசால்பொரி.

கடை பூட்டியிருக்கவே... மசால் பொரி ஆசை உந்தவே, மீண்டும் அந்தப் பெரியவரிடம் வந்து பொரி ஆர்டர் செய்து சாப்பிட்டோம். மசாலே இல்லை. வெறும் எண்ணையாக இருந்தது. இதற்குத்தான் முன்னபின்ன வராத கடைக்கு போகக்கூடாது என்று தம்பியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

சாப்பிட்டு முடித்ததும் “என்னங்க பெரியவரே.. நல்லாவே இல்லையே” என்று சொன்னேன். அவர் முகம் ஒரு மாதிரி ஆகி “என்னது?” என்று செய்திருந்த வேலையை நிறுத்திவிட்டுக் கேட்டார்.

எனக்கு பாவமாக இருக்கவே.. “இல்லீங்கண்ணா.. உங்க டேஸ்டுக்காகத்தான் எப்ப வந்தாலும் தேடி வர்றேன். உங்க வழக்கமான டேஸ்ட் இல்லைண்ணா” என்றேன்.

அவர் சிரித்தபடி “இப்போதான் மசால் கலக்கினேன். லெமன் இன்னும் மிக்ஸ் ஆகல. ஒரு பத்து நிமிஷம் கழிச்சா நல்லா மிக்ஸ் ஆகி காரமா வரும். அதுதான் தம்பி வேறொண்ணுமில்ல. நான் உங்ககிட்ட பத்துநிமிஷமாகும் சொல்லிருக்கலாம், என் தப்புதான்” என்றார்.

“ஐயையோ பரவால்லீங்க” என்று இவ்வளவு பொறுமையா விளக்கம் சொல்றீங்களே.. அது போதும்” என்றதற்கு அவர் சொன்னார்...

“‘உங்க வழக்கமான டேஸ்ட்டுக்கு வந்தேன்’னு நீங்க சொன்ன விதம் பிடிச்சிருந்தது அதுதான் சொன்னேன். உண்மையா நான் இந்த ஊருக்கு வந்தது போனவாரம். கடைங்கற பேர்ல ரெண்டு ஸ்டூலையும், பெஞ்சையும் போட்டு பொரி யாவாரம் ஆரம்பிச்சது இன்னைக்குத்தான்” என்றார்.

சாப்பிட்ட பொரியிலிருந்த எண்ணையெல்லாம் என் முகத்தில் அசடாய் வழிந்தது!

**********************************

வெகுநாட்களுக்குப் பிறகு உறவினர் ஒருவரது வீட்டிற்கு துக்க நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றேன். ஊரில் இருக்கும்போதெல்லாம் தினமும் போய்க் கொண்டிருக்கும் வீடென்பதால் அக்கம் பக்கத்தவரையெல்லாம் பழக்கம்.

ஒவ்வொருவராய் வந்து போய்க் கொண்டிருக்க, இவர்கள் முன்பிருந்த ஒரு வீட்டு ஓனரின் மனைவி வந்தார். அந்த அம்மாவைப் பார்த்ததும், நாலைந்து மாதங்களுக்கு முன் அவரது கணவன் இறந்தது நினைவுக்கு வந்தது. அதற்கு நான் போகவில்லை.

என்னைப் பார்த்ததும்... “எப்படி இருக்க கிருஷ்ணா”என்றவாறு வந்தார்.

நான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு “சொல்லுங்கக்கா. அண்ணன்தான் இப்படிப் போய்ட்டாரு பாருங்க” என்றேன்.

“அதையேன் கேக்கற? இங்க வரச் சொன்னேன்.. சொன்னாக் கேட்டாத்தானே.. டவுனுக்குப் போய்ட்டு சாயந்திரமா வரேன்னு அடம்பிடிச்சு போய்ட்டார்” என்றார்.

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரேடியா டிக்கெட் வாங்கீட்டுப் போனவரை, இங்கே எப்படி வரச்சொன்னாங்க இவங்க என்று நினைத்துக் கொண்டேன்.

அவரே உடனே.. “ஆமா.. உனக்கெப்படி அண்ணன் டவுனுக்குப் போனது தெரியும்?”

முகத்தில் ஈயாடாமல் நின்றிருந்த என்னிடம் என் தம்பி ஆங்கிலத்தில் “வீட்டுக்காரம்மாவோட தங்கச்சிண்ணா இவங்க. நீ அக்கான்னு நெனைச்சுப் பேசற” என்று சொன்னபோதுதான் தெளிந்தது.

சுதாரித்துக் கொண்டு.. “நான்தான் அண்ணன்கிட்ட ஃபோன்ல பேசினேனே..” என்றேன்.

“அவர்கிட்டதான் ஃபோனே இல்லையே..”

இது என்னடா கொடுமை, விடாது போலிருக்கே- என்று நினைத்த நான்” என்கிட்ட ஃபோன் இருக்கே” என்று சொல்லிவிட்டு அதை எடுத்து காதில் வைத்தபடி எஸ்கேப்பானேன்!

***************************

ஆஃபீஸ் விட்டு நேரா, என்கூட வேலை செய்யற நண்பரோட வீட்டுக்கு ஒரு வேலையா போயிருந்தேன். அவரோட மகன் அன்னைக்கு வந்த பரீட்சைப் பேப்பர்களை அப்பாகிட்ட காட்டிகிட்டிருந்தான். நண்பர் அவனுக்கு பயங்கர அட்வைஸ் பண்ணிகிட்டிருந்தாரு.

“ஃபர்ஸ்ட் இல்லீனா செகண்ட் ரேங்க்-ன்ன, இப்போ ஃபோர்த் ரேங்க்ல வந்து நிக்கற. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா ஃபர்ஸ்ட் ரேங்க்கே வாங்கியிருக்கலாம்ல” என்று கொஞ்சம் கண்டிப்பான குரலில் சொல்லிகிட்டிருந்தாரு. என் மகளும் அவர் மகனும் ஒரே ஸ்கூல், ஒரே க்ளாஸ்தான். இந்த ரேங்க் சமாச்சாரங்களுக்கு நான் அவ்வளவாய் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இருந்தாலும் வேறெதாவது பேசி அவர் மூக்கை ஏன் உடைப்பானேன் என்று பேசாமலிருந்தேன்.

என்னைப் பார்த்ததும் “வா கிருஷ்ணா” என்றுவிட்டு தொடர்ந்து மகனை கொஞ்சம் அட்வைஸ் பண்ணிவிட்டு, என்னுடன் பேச ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவர் எதற்கோ வீட்டுக்குள் சென்றுவிட, பக்கத்தில் அமர்ந்திருந்த அவர் மகனிடம் “ஏம்ப்பா.. ரேங்க் வர்லீன்னு அப்பா ரொம்பத் திட்டறாரா..” என்று கேட்க “ஆமா அங்கிள்” என்று பாவமாய்ச் சொன்னான். நான் சும்மா இருக்காமல் “என் பொண்ணையெல்லாம் நான் இப்படித் திட்டனதில்லை. வரட்டும் உங்கப்பா” என்றேன்.

“ஐயையோ.. வேணாம் அங்கிள். எதுவும் கேட்காதீங்க. உங்க பொண்ணைவிட ரெண்டு மார்க்காவது அதிகமா எடுத்திருக்கணும்ல’ன்னுதான் திட்டே விழுந்திட்டிருக்கு” என்றான்.

‘ஙே’ என்று முழித்தேன் நான்.

*********************