
எழுத்தாளர் ச.நா. கண்ணன் (கிழக்கு பதிப்பகம்) திருமணத்திற்குச் சென்றிருந்தபோது நடந்த சம்பவம் இது.
நான், நண்பர்கள் வெயிலான், ஈரவெங்காயம் ஆகியோருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் எழுதிக் கொண்டிருந்த ஒருத்தர் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். எங்கேயோ பார்த்தது போல இருந்தது. ‘இவர்தானே எழுத்தாளர் ..............., கிழக்கு பதிப்பகத்துல அந்த புத்தகம் கூட எழுதினாரே என்று நான் கேட்க வெயிலான் மையமாகத் தலையசைத்தார். அவரோ இன்னொருவரோடு பேசிக் கொண்டே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சினிடையே ‘கிழக்கு.. கிழக்கு’ என்ற வார்த்தை பலமுறை கேட்டது.
அவர் என்னைப் பார்த்து ‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என்று சைகையாகக் கேட்க..
‘பரிசல்காரன்’ என்றேன்.
‘ஓ!’ என்று சிரித்தார்.
சாப்பிட்டு முடிந்து கைகழுவிய பிறகு அவரைத் தேடிப் போய்.. ‘நீங்க..’ என்று இழுத்தோம்..
‘நந்தகுமார்’ என்றார்.
‘என்ன புத்தகம் எழுதிருக்கீங்க..’
‘புத்தகமா? நானா’ என்றார். நாங்கள் ஒருமாதிரி டரியலாகி ‘நீங்க எழுத்தாளரில்லையா’ என்றோம்.
‘இல்லையே..’
‘அப்ப கிழக்கு.. கிழக்குன்னு எதுவோ பேசிட்டிருந்தீங்களே..’
‘என்கூட இருக்கறவர் அவர் வீட்டு முகவரி சொல்லிட்டிருந்தார். கிழக்காலயா.. மேக்காலயான்னு பேசிகிட்டிருந்தோம்’
‘அப்ப கிழக்கு பதிப்பகம் பத்தி பேசலியா?’
இதற்கு அவர் கேட்ட கேள்விதான் மண்டபத்திலிருந்து தலைதெறிக்க எங்களை ஓடவைத்தது.
‘பதிப்பகமா.. அப்படீன்னா..?’
*********************************
வட இந்திய முதலாளி என்பதால் இந்தி ஓரளவு கற்றுக் கொண்டாயிற்று. அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை.. ‘பக்கா’
‘பக்காவா பண்ணி முடிச்சுடு’
‘அஞ்சு மணிக்குதானே... பக்காவா வந்துடறேன்’ என்று சர்வசாதாரணமாக அதைப் பயன்படுத்துகிறோம்.
இன்றைக்குத்தான் அகராதியைப் புரட்டும்போது பார்த்தேன். பக்கா ஒரு பக்கா ஆங்கிலச் சொல்!
Pucka – முதல்தரமான, உறுதியான, நிரந்தரமான (First Class, Permanent,
என்றிருக்கிறது.
இல்லை.. அது இந்திதானா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்...
**************************
சில வருடங்களுக்கு முன் நடந்தது இது. கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.
‘ஓகே.. டீல்!’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.
அடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
கோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்
திருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்
ஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே!
இதேதான் மூன்றாவது நாளும்.
நான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது?’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.
ஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்!
**********************************
ஆதிமூலகிருஷ்ணன் பத்தின மேட்டர் இல்லாம அவியலா?
நம்ம ஆதிக்கு அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் வேற ஊர்லேர்ந்து கூப்பிடறாரு.
‘ஆதி... எங்க இருக்க?’
‘பெருங்குடில’
‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி!
******************************
ஃபாலோயர்கள் பற்றி.... (ஆரம்பிச்சுட்டாண்டா...) 250 ஃபாலோயர் வந்துட்டாங்க பரிசல்’ என்று நண்பர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அப்போதுதான் பார்த்தேன். 251 எட்டியிருந்தது.
நேற்றைக்கு நான் ஒன்றுமே எழுதவில்லை. 247லிருந்து 4 பேர் புதிதாக சேர்ந்து 251 ஆகிவிட்டிருக்கிறது! நான் எழுதும் நாட்களில் ஒன்றிரண்டு பேர் சேர்கிறார்கள். எழுதாத நாட்களில் கொத்துக் கொத்தாக 4,5 என்று சேர்கிறார்கள். இதனால் அறியப்படும் நீதி யாதெனில்...
வேண்டாம். விடுங்க.
அதேபோல எனக்குப் புரியாத ஒன்று இந்த ட்விட்டர். அதை என் தளத்திலிருந்தே எடுத்து விட்டேன். அதில் நான் ஆக்டீவாகவும் இல்லை. ஆனாலும் வாரத்துக்கு 4 பேர் என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்வதாக மின்னஞ்சல்கள் வருகிறது.
விசித்திரம்தான்!
*******************************
தேவதச்சனின் கடைசி டினோசர் (கவிதைத் தொகுப்பு) படித்துக் கொண்டிருக்கிறேன். (உயிர்மை – ரூ.85)
சாம்பிளுக்கு ஒன்று.
எனக்கு
எனக்கு
ஏழுகழுதை வயசாகியும்
கண்ணாடியை நான்
பார்த்ததில்லை. ஒவ்வொரு
முறையும்
எதிரில் நிற்கையில்
என் முகரக்கட்டைதான் தெரிகிறது.
கண்ணாடியைக் காணோம்.
உடைத்தும் பார்த்தேன்
உடைந்த ஒவ்வொரு
துண்டிலும் ஒரு
உடையாத கண்ணாடி.
லேசான வெட்கம் எனக்கு.
பார்க்க முடியாத
கண்ணாடியைத்தான்
பார்க்க முடிகிறது.
கவிதையைப் படித்து விட்டீர்களா..
இப்போது சொல்லுங்கள்.. எப்போதாவது கண்ணாடியைப் பார்க்கும்போது உங்களைத் தவிர்த்து கண்ணாடியைப் பார்த்திருக்கிறீர்களா?
.