Friday, March 8, 2013

முதல்கதை எழுதிய கதை

1993-1994 இருக்கும். கதை, கட்டுரைகளை சுவாசம் போல வாசித்துக் கொண்டிருந்த காலகட்டம். சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கமெல்லாம் படித்து - பிடித்த வரிகளையெல்லாம் அடிக்கோடிட்டு, ஒரு கட்டத்தில் ரூல்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட புத்தகம் போல ஆகிவிட்டது அது. டைரியில் அவ்வப்போது சிலபலவற்றைக் கிறுக்கி வைத்திருக்க, அதைப் பார்த்த நண்பர்கள், ‘உன் நடையே நல்லாத்தான் இருக்கு. நீயும் எழுதலாமே’ என்று ஊக்குவித்தார்கள். அவர்கள் சொன்னது எழுத்து நடையை.

எதற்கு கதை எழுதிப்போடுவது என்று குழப்பம். அப்போது திருப்பூரில் கரும்பு என்றொரு கையெழுத்துப் பத்திரிகை வந்துகொண்டிருந்தது. நூலகங்களில் கிடக்கும். (கிடைக்கும் அல்ல. கிடக்கும்தான்) நான் பார்த்ததுண்டு. யாரைத் தொடர்பு கொண்டேன், எப்படி எழுதி அனுப்பினேன் என்றெல்லாம் நினைவுச்சங்கிலியில் இல்லை. என் சொந்தக் கையெழுத்தில், அந்தப் பத்திரிகையில் முதன்முதலாக ஒரு கதை வந்தது. அதாவது, சேர்க்கப்பட்டது.

அடுத்தநாள் நூலகம் போனபோது அதை அறிந்து கொண்டேன். கடைசியாகக் கோர்க்கப்பட்டிருந்தது எனது கதை. பெரியவர் என்று தலைப்பு. அந்தக் கதைக்குப் பிறகு இரண்டு வெற்றுத்தாள்கள், வாசகர் கருத்துகளுக்காக விடப்பட்டிருந்த்து.


நான், அதை எடுத்துப் படித்தேன். நாலைந்து முறை படித்திருப்பேன். பின்னணியில் இளையராஜாவின் வயலின் இசையோடு படித்தேன். அப்படி ஒரு போதை. பிறகு அதை புத்தகங்கள் கிடந்த டேபிளிலேயே போட்டுவிட்டேன். 

புழுக்கமாக இருந்ததால் ஒரு ஜன்னலோரத்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்த டேபிள் பார்வைக்குப் படுமாறு அமர்ந்து கொண்டேன்.  கையெழுத்துப் பிரதியை யாராவது எடுக்கிறார்களா / படிக்கிறார்களா என்று ஆவலோடு. இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த நூலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அந்தக் கதையைப் படித்து, குறிப்புகளுக்கான பக்கத்தில் அதைப் பாராட்டி, யாரிந்த கே.பி. கிருஷ்ணகுமார் என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு.....

ம்ஹும். ஒன்றுமே நடக்கவில்லை. கையில் ஒரு நாளிதழையும் மறைத்துக் கொண்டு –அதையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். யாரும் சீண்டியபாடில்லை.

என்ன குறை என்று போய்ப் பார்த்தேன்.

பெரிய டேபிள். சுற்றிலும் நாற்காலிகள் முழுக்க ஆட்கள். படிக்க விரும்பும் புத்தகங்களைத் தேடித்தேடி அங்கங்கே கலைந்த புத்தகங்கள். அதில் பலராலும் விலக்கி வைக்கப்பட்ட சில புத்தகங்கள் ஓர் ஓரமாய்ச் சேர்ந்திருந்தன. நல்ல புத்தகங்கள்தான். ஆனாலும் அவற்றைத் தேடுபவர்கள் குறைவு. அதில் - ராமகிருஷ்ண விஜயம், சைவ சிந்தாந்தப் புத்தகங்களுக்குப் பக்கமாக அது கிடந்தது. மார்க்கெட்டிங் சரியில்லை என்று நினைத்து, அந்தக் கையெழுத்துப் பத்திரிகையைக் கையில் எடுத்தேன். நைஸாக வேறு எதையோ தேடுவது போல - அப்போது கிடந்த விகடன், குமுதம் வகையறாக்கள் இருந்த சைடில் – அதைப் போட்டேன். பிறகு மீண்டும் வந்து தூரமாக அமர்ந்து கொண்டேன்.

ஐந்து நிமிடம்.

பத்து நிமிடம்.

பதினைந்து நிமிடம்.

இருபது நிமிடம்.

ம்ஹும். யாரும் அதை எடுத்துப் படிக்கவில்லை. நான் ரொம்ப நேரமாக அங்கேயே இருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி வேறு உந்த, போகலாமா என்று எழுந்தேன். அப்போதுதான் – ஒருவர் அவசர அவசரமாக வேறொரு நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அந்த கையெழுத்துப் பத்திரிகையை எடுத்தார். தொடர்ந்து படிக்கும் வாசகர் என்று நினைத்துக் கொண்டேன். காரணம், பெயரையெல்லாம் பார்க்கவில்லை. அதை எடுக்க என்றே வந்ததைப் போல, அவசரமாக எடுத்துச் சென்று தூரமாக ஒரு நாற்காலியில் அமரச் சென்றார்.

இந்த நேரத்தில், ஓரிருவர் என்னைக் கடந்து சென்றனர். அந்தப் பிரதியை எடுத்த நபர் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டார். பெரிய அறை. அப்போதெல்லாம் நூலகங்களில் நல்ல கூட்டம் வேறு இருக்கும். ஆஹா.. அந்த வாசகரை விட்டுவிட்டுமோ என்று மனம் பதற – அவரைத் தேடினேன். ஒவ்வொரு நாற்காலியாக அமர்ந்திருந்தவர்களை உற்று நோக்க ஆரம்பித்தேன். ஆள் அடையாளம் தெரியாது. கையில் அந்தப் பத்திரிகை இருக்கும். முழுக்க முழுக்க வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட, நோஞ்சானாய்த் தெரியும் கையெழுத்துப் பத்திரிகை. அதை வைத்துத்தான் பார்க்க வேண்டும்.


சில நொடிகளுக்குப் பிறகு, எனக்கு நேரே ஒரு நாற்காலி கண்ணை மறைக்க –அதையும் தாண்டி, அவர் கை மட்டும் என் கண்ணில்பட்டது. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையோடு தெரிந்த கை. ஆர்வமாக, எழுந்து பார்த்தேன்.

கண்கள் சொருக, அதை வைத்து விசிறிக்கொண்டிருந்தார் அவர்.
.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...

எதற்கோ உதவினால் சரி... (மனதை தேதிக்க வேண்டியாது தான்...)

செங்குட்டை முருகேஷ் சுப்பிரமணியம் said...

அப்ப உங்கள் கதைக்கு கிடச்ச முதல் விசிறின்னு சொல்லுங்க....

Thamira said...

இதுவே ஒரு கதை போல இருக்கிறது. சுவாரசியம்!

Madhavan Srinivasagopalan said...

ஏ.ஸி நூலகத்தில் ஒரு முறை முயற்சி செய்யலாமே

Justin Vijay said...

/////அப்போதெல்லாம் நூலகங்களில் நல்ல கூட்டம் வேறு இருக்கும்/////

nice... i liked it...Parisal punch...

Unknown said...

ஹா ஹா ஹா நல்ல காமெடி சார்

இரசிகை said...

:)

பூமகள் said...

கதை எழுதிய கதையே அற்புதம். பரிசல் அப்பவே அப்படியா??!! :)

பிரதீபா said...

இந்த சுவாரஸ்யம் தான் உங்க signature நடை !!