Saturday, September 27, 2014

கற்காததினால் ஆய பயன்...

ப்போது மேகாவுக்கு ஒன்றரை வயது. நான் பணிபுரிந்த பழைய கம்பெனி க்வாட்டர்ஸில் வெளியிலமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். திருப்பூர் அருள்புரத்தில் இருக்கிறது அந்த வீடு. நாங்கள் வெளியில் நாற்காலியில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வெளியில் தவழ்ந்து கொண்டிருந்த மேகா, சுவற்றை ஒட்டிய பகுதியில் சென்றதும் டக்கென்று தவழ்வதை நிறுத்தி டக்கென்று அமர்ந்து உடம்பு முழுவதையும் ஒரு மாதிரி சிலிர்த்தாள். பார்த்துக் கொண்டிருந்த நான் ஓடிச் சென்றேன். கூடவே உமாவும், பக்கத்து வீட்டு நண்பரும் அவர் மனைவியும் ஓடி வந்தனர்.

போய்ப் பார்ததும், கண்ட காட்சி இன்னும் என் கண்ணிலேயே இருக்கிறது. அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு ஆறேழு அடிகள் தள்ளி சுவரோரமாக ஒரு பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.

உடம்பெல்லாம் நடுங்க, அவளை அள்ளிக் கொண்டு நகர்ந்தேன். அந்தப் பாம்பு, திரும்பித்தான் போய்க் கொண்டிருந்தது. வீட்டிற்குப் பின்னால், கொஞ்ச தூரம் சென்றால் PAP பாசன வாய்க்கால் வழித்தடம். அதில் சென்று மறைந்தது என்றார் பக்கத்துவீட்டு நண்பர்.

அடுத்தநாள், எங்கள் பாஸிடம் இதைச் சொல்லிப் புலம்பினேன்.

“கிருஷ்ணா, வீட்டுக்கு சாப்டப் போறீங்க. வீடு இடிஞ்சு, உங்களுக்கு சாப்பிட ஒண்ணுமில்லைன்னா எங்க போவீங்க?”

“வெளில, ஹோட்டலுக்குத்தான்”

“அதே தான். இந்த இடமெல்லாம் அதுக சுதந்திரமா திரிஞ்சுட்டிருந்த இடம்தான். இங்க பில்டிங் கட்டீட்டு, அதோட இடத்துல நாம சுத்தீட்டு அதை வரவேண்டாம்னா தப்புதானே?”

“என்ன சார்… பொண்ணு ஆபத்துல இருந்தாங்கறேன். இப்டி பேசறீங்களே?” என்று கோபமாய் அவர் அறைவிட்டு வெளியே வந்தது இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் அவர் சொன்னதன் நியாயத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.

அப்படிச் சொன்னாலும், அடுத்தநாளே அவரது தோட்டத்தில் வளர்க்கும் சில பல செடிகளை வீட்டைச் சுற்றி நடச் செய்தார். வான்கோழி இரண்டைக் கொண்டு வந்து விட்டார். வேறுபல டிப்ஸ்களையும் தந்தார்.

*

டெல்லி உயிரியல் புலி-இளைஞன் விஷயத்தில் என் கோபமெல்லாம் அங்கிருந்த அசட்டை மனப்பான்மையோடிருந்த, ஊழியர்கள் மீதுதான். போலவே நம் மக்களை, வெறும் மதிப்பெண்கள் பின்னால் ஓடச்செய்து இவ்வளவு மழுங்கடித்து வைத்திருக்கும் கல்விமுறை மீதும்.

நேஷனல் ஜியாக்ரஃபிக் சேனலில், DO or DIE என்றொரு நிகழ்ச்சி வருகிறது. நடிகர்கள், அவார்ட் வாங்காத போதோ, சூப்பர் சிங்கரில் குழந்தைகள் பாடாதபோதோ, கோபியின் தங்கைகள் செட்டிலான பிறகோ, ராணியின் கஷ்டங்கள் தீர்ந்தபிறகோ, ரெய்னா சிக்ஸும் ஃபோருமாக விளாசாதபோதோ - நேரம் கிடைத்தால் பாருங்கள்.

காரில் போகும்போது, திடீரென்று பிரேக் பிடிக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள், மாடுபிடி பந்தயம் நடக்கும்போது மாடு உங்களை நோக்கி ஓடிவந்தால் என்ன செய்வீர்கள், கட்டடம் முழுதும் தீப்பிடித்துக் கொண்டிருக்க ஐந்தாவது மாடி ஜன்னலில் நின்று கொண்டிருக்கும் நீங்கள் என்ன செய்வீர்கள், அலுவலகத்தில் பணியில் இருக்கையில் திடீரென்று நிலநடுக்கம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று லைவ் காட்சிகளில் சிலபல க்ராஃபிக்ஸ் சேர்த்து விளக்குகிறார்கள். மூன்று ஆப்ஷன் கொடுத்து, மூன்றில் நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்று கேட்கிறார்கள். பிறகு ஒவ்வொன்றின் சாதக பாதகங்களை அலசுகிறார்கள்.

அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். தன் ட்ரக்கில், பெரிய டின் ஒன்றை வைத்து, அதில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருக்கிறார் ஒருத்தர். திடீரென்று தீப்பற்றிக் கொள்கிறது. ஓடிச் சென்று மண்ணில் உருளுகிறார் அவர். டக்கென்று அங்கே வேறொரு வாகனத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்தவர் தன் ‘கோட்’டைக் கழட்டியபடி அவரை நோக்கி ஓடுகிறார். போலவே, வேறொருவரும் அவரது சட்டையை கழட்டியபடி ஓடுகிறார். அவரைக் காப்பாற்ற ஓடிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல ஏறக்குறைய ஒரே செயலைத்தான் செய்தார்கள். 90% அவர்கள் செய்தது சரிதான் என்பதாய்த்தான் அந்த எபிசோடில் காண்பித்தார்கள்.

காரணம் ஆபத்து சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பொதுஇடம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிவர்களாய் இருக்கலாம். இருந்தாலும் அனைவருக்கும் ஆபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அடிப்படையிலேயே கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

நேற்றைக்கு, பள்ளி விடும் நேரத்தில், பார்த்தேன். மாணவர்கள் அடித்துப் பிடித்து வெளியில் வந்து கொண்டிருக்க அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார்கள் டீச்சர்கள் சிலரும்.

கற்றதினால் ஆன பயனென் கொல்?

4 comments:

Vetri said...

excellent

ரோகிணிசிவா said...

O my God,you too?

Unknown said...

Very nice excellent

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! வாழ்வியலுக்கு பொருந்தாத கல்வி வேஸ்ட்தான்! சிறப்பான பகிர்வு! நன்றி!