கோவை, வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டேன். வருடா வருடம் அங்கு செல்வது வழக்கம். இந்தமுறை இயற்கை சூழ்ந்த அந்த மலையடிவாரத்தில் அத்தனை வாகனங்கள் போக்குவரத்தாலும், கூட்டத்தினாலும், சத்தங்களினாலும் என்ன நிகழும் என்ற பார்வையோடு கலந்து கொள்ளுங்கள் என்றார் அண்ணாச்சி (வடகரை வேலன்). அது பற்றித் தனியே.. அப்புறமாய்..
ஈஷா முற்றிலும் வியாபாரமயமாகிவிட்டது. அத்தனை கூட்டத்தை சமாளிக்க பல வழிகள் செய்யப்பட்டிருந்தாலும் நிறைய குறைபாடுகள். எனக்கு நடந்த இரண்டு சம்பவங்கள் மட்டும்..
ஆறுமணிக்குத் துவங்கும் நிகழ்ச்சிக்கு மூன்று மணிக்கே சென்று சேர்ந்தோம். நானும் நண்பர் ஒருவரும் நின்று பழரசம் அருந்திக் கொண்டிருந்த போது, பத்தடிக்கு ஒன்றாக வைக்கப்பட்டிருந்த நீலநிற ட்ரம் ஒன்றில் ஒருவர் A4 சைஸிலான பாதாம்பால் விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டிருந்தார். அந்த ஸ்டிக்கரின் ஒட்டும் பகுதியில் இருக்கும் பேப்பரைக் கிழித்துக் கீழே போட்டுவிட்டு, ட்ரம்மில் அதை ஒட்டுவார். இப்படியே நாலைந்து ட்ரம்களில் அவ்ர் ஒட்டியபோது அவர் அருகில் சென்று அந்த ட்ரம்மைப் பார்த்தேன். குப்பை போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ட்ரம்!
“சார்... குப்பை போட வெச்சிருக்கறத உங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்றீங்க.. தப்பில்ல. ஆனா அது எதுக்கு வெச்சிருக்கோ, அதுக்கு யூஸ் பண்ண மாட்டீங்கறீங்களே? அந்த ஸ்டிக்கரைப் பிரிக்கற பேப்பரை கீழ குப்பையா போடறீங்களே? அதையாவது இதுக்குள்ளயே போடலாம்ல?”
உடனே உணர்ந்து ‘ஸாரிங்க’ என்று முன்னே ஒட்டிய ட்ரம்களுக்கு அருகில் கிடந்ததையும் எடுத்து உள்ளே போட்டார். சொல்வதை உணர்ந்து இப்படி ஏற்றுக் கொள்ளும் ஆட்கள் இருக்கும் வரை நம்பிக்கை காய்ந்துவிடாமல் இருக்கிறது.
****************
இன்னொன்று....
அங்கே புத்தக ஸ்டால்களில் புத்தகம் வாங்கியபோது ‘640 ரூபாய்’ என்றார்கள். பில் கேட்டேன். பில் கொடுக்க மாட்டோம். அது எங்களுக்கு வேண்டும் என்றார்கள். ‘அப்போ நான் வேற யாருக்காவது வாங்கிட்டு போறேன்னா அவங்களுக்கு விலை எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். (பல புத்தகங்களில் என்ன விலை என்பது அச்சடிக்கப்பட்டு இருக்காது!) அப்படி உங்களை நம்பாதவங்களுக்காக நீங்க ஏன் வாங்கீட்டுப் போறீங்க?’ என்று கேட்டார் அந்தப் பெண். கேட்டதோடு மட்டுமில்லாமல் ‘புக்ஸை திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார் கடையில் விற்பனையில் இருந்தவரிடம். இவர் அங்கே வாலண்டியராம். ‘நீங்க ஈஷா க்ளாஸ் முடிச்சு வாலண்டியரா இருக்கறது வேஸ்ட்டுங்க. இப்படி ஒரு பதிலை உங்ககிட்டேர்ந்து எதிர்பார்க்கல. நீங்க வியாபாரம்னு ஆரம்பிச்சு கடை விரிச்சுட்டீங்க. நான் உங்களுக்கு டிவோட்டீயோ, ஃபாலோயரோ இல்ல. வெறும் கஸ்டமர்தான். என்னைத் திருப்திப் படுத்தறது உங்க கடமை’ என்று திட்டிவிட்டு நகர்ந்தேன். ச்சே!
*******************
இங்கே நான் இருக்கும் பகுதிகளில் இந்து மக்கள் கட்சியின் ஒரு சின்ன போஸ்டர் அங்கங்கே தென்படுகிறது. ராஜபக்ஷேவின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ஏழரை லட்சம் ரூபாயாம். தீர்வு என்னவென்பதை தீர யோசிக்காமல் இந்த மாதிரி கோமாளித்தனமான வேலைகளை இந்த மாதிரி ஒருசிலர் செய்வதைக் கண்டால் எரிச்சல்தான் வருகிறது. இதேபோல தர்மபுரியில் ‘ஒகேனக்கல் 2025’ என்ற அமைப்பை நடத்தும் சிலர் தர்மபுரியை வல்லரசு மாவட்டமாக 2025க்குள் மாற்ற சில நடவடிக்கைகள் எடுக்கப் போகிறார்களாம். முதல்கட்டமாக நயன்தாரா நடிக்கும் தியேட்டர்களிலெல்லாம் நல்ல பாம்புகளை விடப் போகிறார்களாம். அவர் கவர்ச்சியாக நடிக்கிறார், கலாச்சாரத்தைக் கெடுக்கிறார் என்பதால் இப்படியாம். அடுத்தகட்டமாக நமீதா, அசின், ப்ரியாமணி, தமனா என்று லிஸ்ட் இருக்கிறதாம். இவர்களுடன் ஜோடி சேர்ந்து ஆடும் விஜய், அஜீத் உட்பட எல்லாருக்கும் இதே எச்சரிக்கைதானாம். அப்படியும் அடங்கவில்லை என்றால் அவர்கள் வீடுகளில் நல்லபாம்பை விடுவார்களாம்.
வடிவேலு சொல்வதுதான் ஞாபகத்துக்கு வருகிறது..
“போங்கடா.. போய்ப் புள்ளகுட்டியப் படிக்க வைங்கடா.. கப்பித்தனமாப் பேசிகிட்டு....”
**********************
வர வர தொலைக்காட்சியைத் திறந்தால் திகட்டுகிற அளவுக்கு சேனல்கள். ஒவ்வொரு சேனலும் ஒரே மாதிரி, செய்திகள், காமெடி, படங்கள் என்று தங்களுக்குள் பல சேனல்களைக் காட்டி வெறுக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வடிவேலுவுக்கு தான் நடித்த காட்சி ஒவ்வொருமுறை ஒளிபரப்பப்படும்போதும் ஏதாவது தொகை சென்று சேருமானால் அவர் இந்நேரம் உலக நெம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இருப்பார். அவ்வப்போது மனதைத் தளர்த்திக் கொள்ள பார்த்த வடிவேலுவின் நகைச்சுவைகளைப் பார்த்தாலே திகட்டுகிற அளவுக்கு ஒளிபரப்பி வருகிறார்கள். அவருக்கும், சினிமாவிற்கும் இது நிச்சயமாக நல்லதல்ல. எல்லாரும் ஒருவித வெறுப்புதட்டிய மனோநிலையில் இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே சேனல்கள்தான் தமிழில் இருக்கும் என்று சொல்லும் கட்சிக்குத்தான் என் ஓட்டு.
***********************
பிப்ரவரி 15ம்தேதி மகளை ஹிந்தித் தேர்வு ஒன்றில் விட்டுவிட்டு வரும்போது ஒருபக்கம் நல்ல கூட்டம். ‘எப்படீங்க இப்படிப் பண்ணலாம்? அதுவும் ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கே இப்படிப் பண்ணலாமா?’ என்றெல்லாம் பேச்சுகள்!
விசாரித்ததில் அருகிலிருக்கும் டாஸ்மாக் சரக்கில்லாததால் மூடியிருந்ததற்குத்தான் அந்த ரகளையாம்.
ங்கொய்யால!
***********************
பாக்கிசில்லறைக்குப் பதில்
சாக்லெட் கொடுக்கிறான்
சர்க்கரை நோயாளிக்கு
இந்தக் கவிதைக்ககானப் பாராட்டுக்களை பின்னூட்டத்திலும் திட்டுக்களை தனியே மெயிலிலும் சொல்லுங்கப்பா. (மெய்ல் பாக்ஸ் இன்னைக்கு ஃபுல் ஆகப்போகுது!)
மனசாட்சி: இந்தக் கவிதைக்காக திட்டு வாங்க மாட்ட.. இதை கவிதைன்னியே அதுக்குத்தாண்டா ஒனக்கு திட்டுவிழப்போகுது!)
*