Showing posts with label கிருஷ்ணகதா. Show all posts
Showing posts with label கிருஷ்ணகதா. Show all posts

Tuesday, October 6, 2009

கிருஷ்ணகதா 06.10.09

“அன்புள்ள பரிசல்.... வலைப்பூ ஆரம்பிப்பது எப்படி என்று அறிந்து கொண்டேன். ஆனால் எழுத்து என்பது வரவே இல்லை. என்ன எழுதினாலும் அது நீங்களெல்லாம் எழுதுவது போல வருவதில்லை” – இந்தக் கருத்துடன் மாதத்திற்கு ஒரு ஆறரை பேரின் (கவனியுங்கள்... லட்சமெல்லாம் இல்லை) மின்னஞ்சல்கள் வந்துவிழுகின்றன.

‘என்னைப்போல எழுதவரவில்லையென்றால் அதற்கு சந்தோஷம்தானே படவேண்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், எழுத யோசனை கேட்டு வரும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் கதையொன்றுண்டு.





சாமுராய்களின் ஆயுதம் கத்தி. கத்திச்சண்டை வீரனென்று சொல்லிக் கொள்வதில் மிகப் பெருமை கொள்பவர்கள் அவர்கள். சாமுராய் பிரிவைச் சார்ந்த ஒரு பெரிய கத்திச்சண்டை வீரன் இருந்தான். நிக்கிச்சி அவன் பெயர். அவனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் நிக்கிச்சி. இந்த நிக்கிச்சி-2 ஒரு உதவாக்கரையாக இருந்தான். அவனுக்கு கத்திசண்டையோ, வேறு கலைகளோ வரவே இல்லை. நிக்கிச்சி மிக வெறுப்பாகி, “நீ என் மகனே இல்லை. போடா” என்று வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

நிக்கிச்சி-2 மிகவும் வருத்தத்துடன், மலையொன்றின் மீதிருந்த பான்சி என்ற வீரரைத் தேடிப்போனான். இந்தச் சண்டை வீரர்கள் ஜென் குருமார்களும் கூட. நிக்கிச்சி-2, பான்சியிடன் சென்று தன் கதையைச் சொன்னதும், அவர் இவனை மூன்றடி நடக்கச் சொன்னார்.

அவன் நடந்ததைப் பார்த்த பான்சி, “மன்னித்து விடு. நீயெல்லாம் வீரனாக வாய்ப்பே இல்லை. புறப்படு இங்கிருந்து” என்றுவிட்டார். நிக்கிச்சி-2 அழமாட்டாத குறையாக அவரது காலில் விழுந்து கெஞ்சினான்.

“உனக்குக் கற்றுத்தர உன் முழு ஆயுளும் தேவைப்படும்” என்றார் பான்சி. ‘அதற்குள் என் தந்தை இறந்து விடுவார். கத்திச்சண்டையில் நான் வீரனாகி அவருக்குக் காட்டவேண்டும்’ என்றான் இவன்.


பான்சி யோசித்து, “சரி.. பத்து வருடங்களில் சொல்லித்தருகிறேன். உன்னை நான் வீரனாக்கும் வரை நான் என்ன சொன்னாலும், செய்தாலும் என்னோடே இருக்க வேண்டும். என் முதல் நிபந்தனை என்ன தெரியுமா?” என்றார். அவனும் ஒப்புக்கொண்டு முதல் நிபந்தனையைக் கேட்டான்.

“இன்றிலிருந்து நீ கத்தியைப் பற்றிப் பேசவே கூடாது. சமையல் வேலை செயது, பாத்திரம் கழுவி பராமரித்துக் கொண்டு இங்கேயே இரு” என்றார். அவனும் ஒப்புக் கொண்டான்.

ஒரு வருடம்.
இரண்டு வருடம்.
மூன்று வருடம்.

கத்தி என்ற பேச்சே இல்லை. ஆனால் நிக்கிச்சி-2 தன் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்தான். ஏன் எதற்கு என்றே கேட்கவில்லை. என்றேனும் ஒரு நாள் குரு தனக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார் என்று நம்பினான்.


பயிற்சிக்காலம் நான்கு வருடங்களைத் தொட்டது.

நிக்கிச்சி-2 பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான். பயிற்சிக்கு பயன்படுத்தும் மரத்தாலான வாளோடு வந்த பான்சி, நிக்கிச்சி-2வின் பின்னால் வந்து ஓங்கி அடித்தார். துள்ளி விழுந்தானவன். அவனுக்குள் எதிர்ப்புத்தன்மை உருவானது. ஆனாலும் எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. தாவிக் குதித்து மறுபுறம் போனான். மறுபடி அவனைத் தாக்கினார் பான்சி. அப்படியும் இப்படியும் குதித்து, ஓடி கடுமையான காயங்களுடன் தப்பித்தான் நிக்கிச்சி-2.

பிறகு சில நாட்கள் எப்போதும்போலக் கடந்தது. ஒரு நாள் திடீரென்று அதேபோல தன் தாக்குதலை ஆரம்பித்தார் பான்சி. இவ்வாறு அவ்வப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தாக்கத் தொடங்கினார்.

இதனால் எப்போதும் ஒருவித விழிப்புணர்வு நிலையிலேயே இருக்க ஆரம்பித்தான் நிக்கிச்சி-2. ஆறாவது வருடத்தில், திருப்பித் தாக்காவிட்டாலும் பான்சி தாக்குதல் நட்த்துகையில் லாவகமாக விலகிப் போக ஆரம்பித்தான் அவன். ஏழாவது வருடத்தில் கத்திச்சண்டை வீரன் என்னென்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான் அவன். ஊருக்கு வந்து தன் தந்தையிடம் கத்திச் சண்டையில் தன் நிபுணத்துவத்தை நிரூபித்தான்.


ஆக பயிற்சி என்பது ஆளாளுக்கு மாறுபடும். எப்போதுமே விழிப்புணர்வோடு இருக்கும் சாமுராய் போல உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து வந்தீர்களானால் தினமும் ஒரு கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ கிடைக்கும். ஒன்றுமில்லாவிட்டால் இன்றைக்கு கவனித்ததையெல்லாம் எழுதி, எதிலுமே எனக்கு எழுத எதுவுமே (எத்தனை எ?) கிடைக்கவில்லையே எனக்கூட எழுதலாம்!

கடைசியாக....

என் நண்பன் ஒருவன் சேலத்தில் இருக்கிறான். சி. கண்ணன். (இதோ இந்தக் கடிதம் பற்றிய பதிவில் அவனைக் குறிப்பிட்டிருக்கிறேன்) அந்தக் கண்ணனை போன மாதம் ஒருநாள் வேறொரு நண்பர் மூலமாக கண்டுபிடித்துவிட்டேன்.

‘நீயெல்லாம் வலைப்பூ எழுத ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்டா’ என்றேன். எப்படி ஆரம்பிக்க என்று கேட்டான்.

“உன் மெய்ல் ஐ.டி. குடு. அதுக்கு விவரமா அனுப்பறேன்”

அவன் கேட்டான்:

“மெய்லா.. அப்டீன்னா? ஸ்பீட் போஸ்ட் மாதிரி ஏதாவதா?”

இவனுக்குத் தேவை வேறுவிதமான பயிற்சி.

.

Saturday, July 18, 2009

கிருஷ்ணகதா 18.07.09


ண்ணா.. வணக்கங்ண்ணா..

க்கா.. வணக்கங்க்கா..

ரொம்ப நாளாச்சு. எப்பயாச்சும் எழுதறதால ஒரு வணக்கம் போட்டுக்கலாமேன்னு...

சரி! இன்னைக்கு சின்னதா ஒரு கிருஷ்ணகதா!

ஏன் இவ்ளோ நாளா எழுதறதில்லைன்னா.. வேலைப்பளுதான் காரணம். வேலை கம்மியா இருக்கறப்போ எழுத சுதந்திரம் குடுத்திருக்கற முதலாளிக்கு வேலை அதிகமா இருக்கறப்போ வேலை செஞ்சு நன்றியைக் காட்ட வேணாமா?

அதுவுமில்லாம வீட்டுல சிஸ்டம் வைரஸாண்டவர் பிரச்சினையாலயும், ராம் பிராப்ளத்துலயும் மாட்டிருந்தது. நேத்துதான் ரெடியாச்சு. இனிமே அப்பப்போ வந்து பின்னி பெடலெடுத்துடுவோம்.

நிறைய பிரச்சினைகளைப் பார்த்தாச்சு இந்த கொஞ்ச நாள்ல. சும்மா இருக்கான் பாரு இவன்னு ரொம்ப பேருக்கு கேள்வி. சும்மா இருக்கறதவிட பெரிய எதிர்ப்பு இல்லைங்ண்ணா. உங்களைப் புரிஞ்சுகிட்டவர் உங்க மேல சொல்ற விமர்சனத்துக்காக நீங்க வருத்தப்படலாம். உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்களை விமர்சனம் பண்ணினா, நீங்க என்ன சொன்னாலும் – உங்களைப் புரிஞ்சுக்காதவன் உங்க விளக்கத்தையும் புரிஞ்சுக்கப் போறதில்லை. அப்பாலிக்கா என்னாத்துக்கு கூவிகிட்டு? இதுதான் நான் எல்லாருக்கும் சொல்றது!

யார் வேணும்னா என்ன வேணும்னா பண்ணலாமா.. நாம கேள்விக் கேட்கக் கூடாதுங்கறீங்களா பரிசல்?

அப்படியில்ல. அப்படி அவங்க செஞ்சதுக்கு அவங்கதான் கடமைப்பட்டவங்க. அதுல நம்ம பங்கு ஒண்ணுமே இல்லை. எதிர்ப்பு காமிச்சு நாம ஒரு காலைத் தூக்கீட்டோம்னா...

இருங்க... இந்த காலைத் தூக்கறதுன்னு ஏன் சொல்றேன்னா...


முகமது நபிகள்கிட்ட அவரோட சீடர் அலின்னு ஒருத்தர் கேட்டார்:

“மனிதன் தான் விரும்பியபடி செயல்படக்கூடியவன்தானா.. அல்லது விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் எல்லாமே செய்து கொண்டிருக்கிறானா? எல்லாமே முன் கூட்டி தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்றால் எந்தத் தவறுக்கும் மனிதன் பொறுப்பில்லையே.. தான் விரும்பியதையெல்லாம் மனிதன் செய்ய முடியாதென்றால் அப்படிப் பட்ட மனிதப் படைப்பை படைக்காமலே போயிருக்கலாமே” – இப்படி ஆரம்பிச்சு கேள்வியா கேட்டுக் கிட்டிருந்தார்.


முகமது நபிகளோட ஸ்பெஷாலிட்டி என்னான்னா எதையுமே கேள்வி கேட்டவருக்கு ஸ்ட்ரெய்ட்டா புரியறா மாதிரி போட்டுத் தாக்குவாரு.

இப்படிக் கேட்ட அலியைப் பார்த்து நபிகளார் சொன்னார்:


“ஒன்னோட ஒரு காலைத் தூக்கு”

அலி உடனே இடது காலைத் தூக்கி ஒரு கால்ல நின்னாரு.

“சரி... இப்போ உன் வலதுகாலைத் தூக்கு”

அதெப்படித் தூக்கமுடியும்? அலிக்கு கோவம் வந்துடுச்சு.

அவர் முகம் மாறுவதைக் கண்ட நபிகள் சொன்னார்...

“இன்னாச்சுபா? இதான் மேட்டர்! உன் வலதுகாலை முதல்ல நீ தூக்கியிருக்கலாம். ஆனா நீ இடதுகாலைத் தூக்கின. அது உன் இஷ்டம். ஒரு கால்ல நில்லுன்னா நீ விரும்பின எந்தக் காலையும் தூக்க உனக்கு சுதந்திரம் இருக்கு. ஆனா முதல் கால் தூக்கப்பட்ட உடனே அடுத்தகால் பூமிக்கு கட்டுப்படுது. இல்ல நான் என்ன வேணா பண்ணுவேன்னு அந்தக் காலையும் தூக்கினா கீழதான் விழணும்”

ஒரு கால் எந்தக் கால்-ங்கறது நம்ம சுதந்திரம்ங்கற மாதிரி, முக்கியமான நேரங்கள்ல என்ன செய்யணும்கறது நம்ம சுதந்திரம். தப்பானத செஞ்சுட்டோம்னா அப்பறம் வேற வழியில்லாம அதுக்கு நாம கட்டுப்பட்டு விடுகிறோம்.

அதேபோல தேவையற்றதில் நாம் சம்பந்தப்பட்டால் உடனே சிக்கலில் மாட்டிக் கொண்டு தேவையானதை செய்ய முடியாமல் போய்விடுகிறது!

எது தேவையானது எது தேவையில்லாததுன்னு எப்படித் தெரிஞ்சுக்கறது?

அதுதான் சூட்சுமம்! வாழ்ந்துதான் பார்க்கணும்!


.

Saturday, May 2, 2009

கிருஷ்ணகதா-2 (சாதிகள் இல்லையடி பாப்பா)

ஜாதி, மதம்ன்னு அலையற ஒரு கும்பல் இப்பவும் இருக்கு. ஒவ்வொரு தேர்தல் சமயத்துலயும் ஜாதி ஓட்டு, ஜாதிக்குன்னு தனியா கட்சி, இந்த ஜாதிக்காரரைத்தான் இந்தத் தொகுதில நிறுத்தணும்னு ரொம்ப சீரியஸா ஜாதிக்கா செய்திகளைப் படிக்கறப்போ கவலையா இருக்கு.

அதே மாதிரி ‘இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக்கற கிராமங்கள் இருக்குடா’ன்னு என் ஃப்ரெண்ட் சொல்லி, ‘வர்றியா காமிக்கறேன்’ங்கறான். இருக்காதுன்னு சொல்ல பயமா இருக்கு. ஏன்னா ஒரு சில மாசத்துக்கு முன்னாடிதான் எங்க உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல ஒரு கிராமத்துல இந்தப் ப்ரச்னை வெட்டுகுத்து வரைக்கும் போனதா பேப்பர்ல படிச்சேன். கேவலமா இருந்தது.

பாண்டவர்-கௌரவர் ஃபைட்டெல்லாம் முடிஞ்சு துவாரகைக்கு போய்ட்டிருந்தார் கிருஷ்ணர். அப்போ உதங்கர் அப்படீங்கற துறவியை சந்தித்தார். அவருக்கு உலக நடப்பு எதுவும் தெரியல.

“என்ன கிருஷ்ணா.. கௌரவர்-பாண்டவர்களின் சகோதர அன்பு எப்படிப் போய்ட்டிருக்கு?”ன்னு கேட்டார். கிருஷ்ணர் ஒரு நிமிஷம் திகைச்சுப் போய், “ஐயா.. நான் எவ்வளவோ சமாதானம் செஞ்சும் முடியாம ரெண்டு பேருக்கும் போரே நடந்துச்சு. உங்களுக்குத் தெரியாதா?”ன்னு கேட்டார்.

உதங்கருக்கு பயங்கர டென்ஷனாய்டுச்சு. “நீ இருந்தும் சமாதானம் பண்ணி வைக்கலியா? நீதான் ஏதாவது கபடவேஷம் போட்டு தூண்டி விட்டிருப்ப. இரு நான் உனக்கு சாபம் தர்றேன்”ன்னு கமண்டலத்தைத் தூக்கப் போனார்.

“கூல்.. கூல்..”ன்னு சொன்ன கிருஷ்ணர் தன்னோட விஸ்வரூபத்தைக் காட்டி உதங்கருக்கு கிருஷ்ணாவதாரத்தைப் பத்திச் சொல்ல உதங்கர் கூலானார்.

“சரி உதங்கரே.. உங்களுக்கு ஒரு வரம் தர நினைக்கிறேன். கேளும்”ன்னார். ‘உன் விசுவரூபத்தைப் பார்த்த்தே போதும்’னு முதல்ல மறுத்த உதங்கர் கிருஷ்ணர் வற்புறுத்தவே ஒரு வரம் கேட்டார்.

“நான் எப்போ எங்க தாகத்துல வேண்டினா தண்ணீர் கிடைக்க வரம் குடுங்க” ன்னு கேட்டார். (திருப்பூர்க்காரரா இருப்பாரு போல!)

”இவ்ளோதானா.. டேக் இட்”ன்னு வரம் குடுத்தார் கிருஷ்ணர்.

கொஞ்ச நாள் கழிச்சு, உதங்கர் காட்டுல அங்க இங்க அலைஞ்சு, தாகத்தோட சுத்திகிட்டிருக்கறப்போ கிருஷ்ணரை நினைச்சார். உடனே அங்க ஒரு மாட்டிடையன் அங்க வந்தார். அழுக்குத் துணியும், கூட அஞ்சாறு வேட்டை நாய்களும், தோள்ல ஒரு பைல குடிதண்ணீரும் வெச்சிருந்தார்.

வந்தவர் நேரா உதங்கரைப் பார்த்து ”தாகத்துல தவிக்கறீங்க போல.. இந்தாங்க தண்ணீர்”ன்னு குடுத்தாராம்.

உதங்கர் மாட்டிடையரை அருவருப்பாப் பார்த்து “வேண்டாம்.. வேண்டாம்”ன்னு மறுத்துட்டார்.

அடுத்த நொடி மாட்டிடையன் எஸ்-ஸாய்ட்டாராம்.

“உடனே மறைஞ்சுட்டானே.. இது யாரு?”ன்னு உதங்கர் கன்ஃப்யூஸ் ஆகிட்டார்.

கொஞ்ச நேரம் கழிச்சு கிருஷ்ணர் அவர் முன்னால் வந்து “வாட்டீஸ் திஸ்?”ன்னு கேட்டப்போ..

“இடையன்கிட்ட குடுத்தனுப்பறியே கிருஷ்ணா.. நான் எப்படி வாங்கிக் குடிக்க?”ன்னு கேட்டாராம்.

“அட உதங்கரே... உங்களுக்காக தேவ அமிர்தத்தைக் குடுக்க இந்திரன்கிட்ட பேசி, அவன் ‘மனுஷங்களுக்கு சாகாமருந்தெல்லாம் குடுக்கறதா’ன்னு என்கிட்ட ஆர்க்யூமெண்ட் பண்ணி, கடைசில ‘குடுக்கறேன்.. ஆனா அதை வேற வேஷம் போட்டு ஜலமா கொண்டு போய்த்தான் குடுப்பேன்’ன்னான். நானும் நீங்க ஞானியாச்சே.. ஜாதியெல்லாம் பார்த்து வெறுக்கற கீழ்த்தரம் உங்ககிட்ட இருக்காதுன்னு நெனைச்சு ஒத்துகிட்டேன். இப்ப நான் இந்திரன்கிட்ட தோத்துட்டேனே”ன்னு புலம்பினாராம் கிருஷ்ணர்.

தன் ஜாதிப்பித்தால் அமிர்தத்தை இழந்த உதங்கரும் வெட்கித் தலைகுனிந்தாராம்.

கடவுள், முனிவர்கள்ன்னு யாருமே இந்த ஜாதியைப் பிடிச்சுட்டுத் தொங்கச் சொல்லல. அப்பறமும் ஏன்.......

Friday, April 17, 2009

கிருஷ்ணகதா – நேரம் காலம்...

மகாபாரதக் கதைகள் மிகுந்த சுவாரஸ்யமிக்கவை. ராமாயணக்கதைகளும்தான்.

அவ்வப்போது மகாபாரதம் அல்லது ராமாயணத்திலிருந்து சில சுவையான கதைகளை பகிர்ந்து கொள்ள சித்தமாய் இருக்கிறேன். (நல்லாத்தாண்டா போய்ட்டிருந்தது???)

அவ்வப்போது பைபிள், குரானிலிருந்தும் வரலாம். எதுவாயிருப்பினும் கிருஷ்ணகதா-தான் தலைப்பு. அந்தக் கதையை நான் உங்களுக்கு சொல்வதால். (நாட்ல இந்த நடிகனுங்க தொல்ல தாங்கலடா.. அவனவன் பொறந்த நாளுக்கு அவனவனே போஸ்டர் அடிச்சுக்கறான் பாரு-ங்கறாமாதிரிதான் இது. பொறுத்தருள்க.)

******************************

அடிக்கடி நாம் உபயோகப்படுத்தும் வாக்கியத்திலொன்று ‘நேரம் ரொம்ப முக்கியம்’ என்பது.

வடிவங்கள் வேறுவேறாயிருப்பினும் அடிக்கடி வெவ்வேறு வகைகளில் இந்த வாக்கியம் வந்துவிழுகிறது.

‘டைம் பார்த்துக்கப்பா.. லேட் பண்ணிடாத’

‘இன்னைக்கு விட்டா அவ்ளோதான்’

‘லாஸ்ட் மினிட்ல ஏண்டா அவசர அவசரமா ஓடறீங்க.. மொதல்லயே ப்ளான் பண்றதில்லையா’

‘அரைமணி நேரம் முன்னாடி வந்திருந்தா காப்பாத்திருக்கலாம்’

இன்னும் எத்தனை எத்தனை வடிவங்களில் நேரம் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்.

எங்கள் அலுவலகத்தில் எப்போது மீட்டிங் என்றாலும் வெவ்வேறு ஃபேக்டரிகளிலிருந்து வந்து சேர்கிறவர்களால் தாமதமாகும். கஷடப்பட்டு, வேண்டுமென்றே முன்கூட்டிச் சொல்லி நாம் நினைத்த நேரத்துக்கு எல்லாரும் வந்துவிட்டால் எம்.டி. அன்று தாமதப்படுத்துவார். குறித்த கணத்தில் ஆரம்பித்த மீட்டிங் 10%கூட இருக்காது. அதேபோலத்தான் குறித்த நேரத்தில் முடிப்பதும். (பெரும்பாலும் மீட்டிங்கின் முடிவு நேரம் குறிப்பிடுவதில்லை. பலசமயம் மீட்டிங்கில் கலந்து கொள்பவர்களின் வேலை முடிவுதான் மீட்டிங்கில் தீர்மானிக்கப்படுகிறது!!)

அமெரிக்க ஜனாதிபதி நேர மேலாண்மைக்காக இரண்டு வழிகளைக் கடைபிடிக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

யாரையாவது சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்தால் சந்திக்க வருகிறவர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட அறையில்தான் இருக்க வேண்டும். குறிப்பிட்ட 10 நிமிடமோ, 15 நிமிடமோ அந்த அறைக்கு ஜனாதிபதியே வந்து பேசிவிட்டு எழுந்து சென்று விடுவார். சந்திக்க வருகிறவர்கள் அதன்பின் குறிப்பிட்ட நேரம் வரை இருப்பதென்றால் இருக்கலாம், போவதென்றால் போகலாம். தமது அறைக்கு அழைத்து, ’டைமாச்சு போங்க’ என்று சொல்லவேண்டிய வேலை இல்லை.

அதேபோல அவரது அறையின் நாற்காலியின் அமரும்பகுதி சற்றே முன்பக்க சாய்மானத்தில் அமைக்கப்பட்டிருக்குமாம். (ஸ்லோப்-பாக) அதாவது உட்கார்ந்தால் முன்னோக்கி லேசாக வழுக்கும் அமைப்பில். கொஞ்ச நேரம் உட்கார்ந்தாலே எழுந்து போகலாம் என்று தோன்றுமாம்.

தமிழகத்தின் தொழிலதிபர் ஒருவரது அறையில் ‘எனக்கு இன்றைக்கு முடிக்க வேண்டிய நிறைய வேலைகள் காத்திருக்கிறது. உங்களுக்கு?’ என்றொரு அறிவிப்பை மேஜையிலேயே வைத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

சரி.. இப்போது அந்த மகாபாரதக் கதை...(ஓஷோ சொல்லும் கதைகளில் ஒன்று இது!)



திண்ணையில் அமர்ந்திருந்த தருமரிடம் பிச்சை கேட்கிறான் ஒருவன். ஏதோ வேலையாய் இருந்த அவர் ‘நாளைக்கு வாப்பா’ என்கிறார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த பீமன் உடனே முரசை எடுத்துக் கொண்டுபோய் கிராமத்தின் நடுவில் நின்று கொண்டு முரசடிக்கிறான்.


“தம்பி... என்னப்பா செய்கிறாய்? எதற்கு இப்போது முரசடித்து ஊரைக்கூட்டுகிறாய்?” என்று கேட்கிறார் தர்மர்.


“எங்கள் அண்ணன் காலத்தை வென்று விட்டான்’ என்று இந்த ஊருக்கு அறிவிக்கப்போகிறேன் அண்ணா..”

தருமருக்கு ஒன்றும் விளங்கவில்லை. “காலத்தை வென்றேனா.. நானா..?” குழப்பத்தோடே கேட்கிறார்.

“ஆமாம் அண்ணா. பிச்சைக்காரரை நாளைக்கு வரச் சொன்னீர்களே? நீங்கள் நாளைக்கு இருப்பீர்களா? அவன் நாளைக்கு இருப்பானா? நீங்கள் இருந்தால் பிச்சையிடும் மனோபாவம் உங்களுக்கு இருக்குமா? அவன் இருந்தால் நாளைக்கும் அவன் பிச்சைக்காரனாகவே இருப்பானா? நாளைக்கு உங்கள் இருவரின் சந்திப்பு நடைபெறுமா? அப்படியே நடைபெற்றாலும் பிச்சை போடுவீர்களா? எவ்வளவு நிச்சயமாய் இத்தனை கேள்விகளின் சாத்தியங்களை உணர்ந்து நாளை அவனை வரச் சொன்னீர்கள்? அப்படியானால் நீங்கள் காலத்தை வென்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்? என்னை விடுங்கள். இப்போதோ இதை ஊராருக்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னைப் பொறுத்தவரை இந்த கணத்தை நான் தவறவிட்டால் அடுத்த கணம் நிச்சயமாய் என் வசமில்லை. அதனால்தான் இப்போதே அறிவிக்கிறேன் என்று அவசரப்படுகிறேன்” என்றான் பீமன்.

“பொறு தம்பி. தவறுதான். அவனை அழை. இப்போதே உதவுகிறேன். நாளை என்ன அடுத்த நிமிஷமே நிஜமில்லைதான்” என்று சொல்கிறார் தருமர்.


ஆக.. நல்லதை அன்றே அப்போதே செய்துவிடுங்கள். இந்த நிமிஷம் மட்டுமே நிஜம்!