‘என்னைப்போல எழுதவரவில்லையென்றால் அதற்கு சந்தோஷம்தானே படவேண்டும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும், எழுத யோசனை கேட்டு வரும் நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்பும் கதையொன்றுண்டு.

சாமுராய்களின் ஆயுதம் கத்தி. கத்திச்சண்டை வீரனென்று சொல்லிக் கொள்வதில் மிகப் பெருமை கொள்பவர்கள் அவர்கள். சாமுராய் பிரிவைச் சார்ந்த ஒரு பெரிய கத்திச்சண்டை வீரன் இருந்தான். நிக்கிச்சி அவன் பெயர். அவனுக்கு ஒரு மகன். அவன் பெயரும் நிக்கிச்சி. இந்த நிக்கிச்சி-2 ஒரு உதவாக்கரையாக இருந்தான். அவனுக்கு கத்திசண்டையோ, வேறு கலைகளோ வரவே இல்லை. நிக்கிச்சி மிக வெறுப்பாகி, “நீ என் மகனே இல்லை. போடா” என்று வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.
நிக்கிச்சி-2 மிகவும் வருத்தத்துடன், மலையொன்றின் மீதிருந்த பான்சி என்ற வீரரைத் தேடிப்போனான். இந்தச் சண்டை வீரர்கள் ஜென் குருமார்களும் கூட. நிக்கிச்சி-2, பான்சியிடன் சென்று தன் கதையைச் சொன்னதும், அவர் இவனை மூன்றடி நடக்கச் சொன்னார்.
அவன் நடந்ததைப் பார்த்த பான்சி, “மன்னித்து விடு. நீயெல்லாம் வீரனாக வாய்ப்பே இல்லை. புறப்படு இங்கிருந்து” என்றுவிட்டார். நிக்கிச்சி-2 அழமாட்டாத குறையாக அவரது காலில் விழுந்து கெஞ்சினான்.
“உனக்குக் கற்றுத்தர உன் முழு ஆயுளும் தேவைப்படும்” என்றார் பான்சி. ‘அதற்குள் என் தந்தை இறந்து விடுவார். கத்திச்சண்டையில் நான் வீரனாகி அவருக்குக் காட்டவேண்டும்’ என்றான் இவன்.
பான்சி யோசித்து, “சரி.. பத்து வருடங்களில் சொல்லித்தருகிறேன். உன்னை நான் வீரனாக்கும் வரை நான் என்ன சொன்னாலும், செய்தாலும் என்னோடே இருக்க வேண்டும். என் முதல் நிபந்தனை என்ன தெரியுமா?” என்றார். அவனும் ஒப்புக்கொண்டு முதல் நிபந்தனையைக் கேட்டான்.
“இன்றிலிருந்து நீ கத்தியைப் பற்றிப் பேசவே கூடாது. சமையல் வேலை செயது, பாத்திரம் கழுவி பராமரித்துக் கொண்டு இங்கேயே இரு” என்றார். அவனும் ஒப்புக் கொண்டான்.
ஒரு வருடம்.
இரண்டு வருடம்.
மூன்று வருடம்.
கத்தி என்ற பேச்சே இல்லை. ஆனால் நிக்கிச்சி-2 தன் வேலையை முழு ஈடுபாட்டோடு செய்தான். ஏன் எதற்கு என்றே கேட்கவில்லை. என்றேனும் ஒரு நாள் குரு தனக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார் என்று நம்பினான்.
பயிற்சிக்காலம் நான்கு வருடங்களைத் தொட்டது.
நிக்கிச்சி-2 பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தான். பயிற்சிக்கு பயன்படுத்தும் மரத்தாலான வாளோடு வந்த பான்சி, நிக்கிச்சி-2வின் பின்னால் வந்து ஓங்கி அடித்தார். துள்ளி விழுந்தானவன். அவனுக்குள் எதிர்ப்புத்தன்மை உருவானது. ஆனாலும் எதிர்த்து ஏதும் செய்ய முடியவில்லை. தாவிக் குதித்து மறுபுறம் போனான். மறுபடி அவனைத் தாக்கினார் பான்சி. அப்படியும் இப்படியும் குதித்து, ஓடி கடுமையான காயங்களுடன் தப்பித்தான் நிக்கிச்சி-2.
பிறகு சில நாட்கள் எப்போதும்போலக் கடந்தது. ஒரு நாள் திடீரென்று அதேபோல தன் தாக்குதலை ஆரம்பித்தார் பான்சி. இவ்வாறு அவ்வப்போது எவ்வித முன்னறிவிப்புமின்றி தாக்கத் தொடங்கினார்.
இதனால் எப்போதும் ஒருவித விழிப்புணர்வு நிலையிலேயே இருக்க ஆரம்பித்தான் நிக்கிச்சி-2. ஆறாவது வருடத்தில், திருப்பித் தாக்காவிட்டாலும் பான்சி தாக்குதல் நட்த்துகையில் லாவகமாக விலகிப் போக ஆரம்பித்தான் அவன். ஏழாவது வருடத்தில் கத்திச்சண்டை வீரன் என்னென்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்தான் அவன். ஊருக்கு வந்து தன் தந்தையிடம் கத்திச் சண்டையில் தன் நிபுணத்துவத்தை நிரூபித்தான்.
ஆக பயிற்சி என்பது ஆளாளுக்கு மாறுபடும். எப்போதுமே விழிப்புணர்வோடு இருக்கும் சாமுராய் போல உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்து வந்தீர்களானால் தினமும் ஒரு கதையோ, கவிதையோ அல்லது கட்டுரையோ கிடைக்கும். ஒன்றுமில்லாவிட்டால் இன்றைக்கு கவனித்ததையெல்லாம் எழுதி, எதிலுமே எனக்கு எழுத எதுவுமே (எத்தனை எ?) கிடைக்கவில்லையே எனக்கூட எழுதலாம்!
கடைசியாக....
என் நண்பன் ஒருவன் சேலத்தில் இருக்கிறான். சி. கண்ணன். (இதோ இந்தக் கடிதம் பற்றிய பதிவில் அவனைக் குறிப்பிட்டிருக்கிறேன்) அந்தக் கண்ணனை போன மாதம் ஒருநாள் வேறொரு நண்பர் மூலமாக கண்டுபிடித்துவிட்டேன்.
‘நீயெல்லாம் வலைப்பூ எழுத ஆரம்பிச்சா ரொம்ப நல்லா இருக்கும்டா’ என்றேன். எப்படி ஆரம்பிக்க என்று கேட்டான்.
“உன் மெய்ல் ஐ.டி. குடு. அதுக்கு விவரமா அனுப்பறேன்”
அவன் கேட்டான்:
“மெய்லா.. அப்டீன்னா? ஸ்பீட் போஸ்ட் மாதிரி ஏதாவதா?”
இவனுக்குத் தேவை வேறுவிதமான பயிற்சி.
.
