நேற்றென்னை அழைத்த நண்பர் கேட்டார்: “என்ன கிருஷ்ணா.. கொஞ்ச நாளா பதிவுல தீவிரமா ஒண்ணும் எழுதல? ரைட்டர்ஸ் ப்ளாக் வந்துடுச்சா உங்களுக்கு?”
‘அது ரைட்டர்ஸுக்குத்தானே வரணும்... எனக்கேன்’ என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டேன்.
வேலைப்பளுவும், என்ன எழுத என்ற யோசனையும்தான் காரணமின்றி வேறொன்றுமில்லை.
இரண்டு வாரம் முன்பு ஓட்டுக் கேட்க வந்தார் ஒருவர். நானும் என் நண்பனும் வீட்டிலமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வந்தவரிடம் நட்பு முறையில் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கள் வீட்டுக்கு எதிரில் காலிமனைகளில் குவிந்திருந்த குப்பைகளைக் காட்டி “எலக்ஷனுக்குள்ள இந்த குப்பைகளை எந்த கட்சிக்காரங்க க்ளீன் பண்றாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு!” என்றபோது அந்த வேட்பாளர் முகமலர்ந்து “அடடே.. தம்பி சொல்றது நல்ல யோசனையா இருக்கே” என்றபடி கூட இருந்த தொண்டரடிப்பொடிகள் சிலரிடம் ‘நம்ம பசங்ககிட்ட சொல்லி ரெண்டொரு நாள்ல இதக் க்ளீன் பண்ணீடுங்கப்பா’ என்றார்.
நான் புல்லரித்துப் புளகாங்கிதமெல்லாம் அடைந்து “இல்லைங்க.. ஜெயிச்சப்பறம் அதப் பண்றேன்.. இதப் பண்றேன்னு சொல்றது வேற. இப்பவே இதப் பண்ணினீங்கன்னா அட்லீஸ்ட் ஓட்டுப் போடற அந்த நிமிஷம் எனக்கு ஒரு திருப்தியா இருக்கும் இல்லையா?” என்றெல்லாம் விளக்கம் கொடுத்து..
இதோ இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு மாற்றமுமில்லை. வெட்கக்கேடான விஷயம், அந்த வேட்பாளருக்கு சப்போர்டாக உடன்வந்த, எங்கள் அபார்ட்மெண்டிலேயே குடியிருக்கும் ஒருவர் இதற்குப் பிறகு தன் வீட்டுக் குப்பைகளையும் அங்கேயே கொட்டுவதைப் பார்க்கிறேன்.
என்னால் இந்தப் பதிவு எழுதுவதைத் தவிர வேறொன்றையும் **** முடியவில்லை.
கோவை சென்றிருந்தபோது என் உறவினர் வீட்டில் கிடந்த நோட்டீஸில் ஒரு கட்சிக்காரர் ‘பாரதத் தாயின்மீது ஆணையிட்டு உறுதியளிக்கிறேன்’ என்று பல வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறார். வெற்றிபெற்றால் இதையெல்லாம் செய்வேன் என்று. அதில் ஒரு வாக்குறுதி கோவை தொகுதியிலுள்ள டாஸ்மாக் வருமானத்தை வைத்தே தொகுதி வளர்ச்சிப் பணியை மேற்கொள்வதாகச் சொல்லியிருக்கிறார். அடுத்த உறுதிமொழி மதுவிலக்கை அமல்படுத்தக் குரல் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். முரண்!
‘என்னாங்கடா இது?’ என்று வீறுகொண்டு எழுந்து பைக்கை அந்த வேட்பாளர் வீட்டுச் சுவற்றில் மோதி உடைத்துக் கொண்டு அவர் முன் நிறுத்தி அந்த நோட்டீஸை அவர் முகத்தில் விட்டெறிந்து ‘டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...’ என்று ஆரம்பித்து நீள்வசனம் பேச என்னால் முடியாதென்பதால்...
அதில் குறிப்பிட்டிருந்த அவரது அலைபேசிக்கு அழைத்து ‘என்னங்க.. இதெப்படி சாத்தியம்?’ என்று கேட்க அவர் சொல்கிறார்.
“நான் ரெண்டு சாய்ஸ் குடுத்திருக்கேன் சார். இது இல்லைன்னா அது..” என்கிறார்.
“சாய்ஸ் குடுக்க இதென்ன கொஸ்டின் பேப்பரா? உறுதிமொழிங்க.. அதுவும் யார் மேல குடுத்திருக்கீங்க? ‘பாரதத்தாய் மீது ஆணையிட்டு’ன்னிருக்கீங்க. எல்லாமே விளையாட்டாப் போச்சா உங்களுக்கு?” என்று கேட்டுவிட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டேன்.
அடுத்தநாள் நாளிதழெல்லாம் வாங்கிப் பார்க்கிறேன். பகிரங்க மன்னிப்புக் கோரி அவர் ஏதாவது பேட்டி கீட்டி குடுத்திருந்தால் என் சித்தப்பா வீட்டின் இரண்டு ஓட்டுகளை அவருக்குப் போடச் சொல்லி சிபாரிசு செய்யலாம் என்று.. ம்ஹூம்.
‘டேய் ஒரு சி டி இருக்கு. பார்க்கறியா?’ நண்பர் கேட்டான்.
பார்த்தேன். நான்கு நாட்களாக ஒரு வேலையிலும் மனசு ஒட்டவில்லை. ‘இதை ஏண்டா இப்படி பயந்து பயந்து பார்க்கணும்? இதுல என்ன இருக்கு? எங்கயோ நடக்குற கொடுமையை பார்த்து வருத்தப்படக்கூட பயமா?’ என்று கேட்டால்.. அது தடை செய்யப்பட்ட சி டி யாம். தடை செய்ய அதில் என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. நிர்வாணங்களும், அசிங்கங்களும் பார்க்க எந்த வெட்கமோ, வேதனையோ தேவையில்லை. அதைப் பார்க்கவும், பார்த்ததை ரசித்து எழுதவும் தயார். ஆனால் இந்தக் கண்ணீரையும், ரத்ததையும் பார்த்து அழ நமக்கு உரிமையில்லை. பயம். பயம்.
அதிகபட்சமாக ‘வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே’ என்று காலர்ட்யூனை மாற்ற மட்டுமே முடிகிறது நம்மால். ச்சே!
நான் சொன்ன மூன்று நிகழ்வுகளிலும் என்ன செய்ய முடிந்திருக்கிறது என்னால் என்று யோசித்தால் வெட்கம் மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த லட்சணத்தில்... என்ன எழுத?