Tuesday, July 15, 2008

****க் கதைகள் – 1

அனுசுயா தனது பங்களாவின் கேட்முன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் செல்வி எங்கே என்று தேடியது. செல்வி, அனுசுயாவின் வீட்டிற்கு முன் எங்கோதான் குடியிருக்கிறாள். கொஞ்ச நேரத்தில், தூரத்தில் செல்வி வர அவளுக்கு உற்சாகமானது. கிழிந்த உடையும், எண்ணையற்ற தலையுமாய் அழுக்காய் இருந்தாள் செல்வி.


“ஏய்.. செல்வி.. எங்கடி போன?” உரிமையோடு கோபித்துக் கொண்டாள் அனுசுயா.


“இல்ல அனு. அப்பாவைக் காணோம்ன்னு அம்மா அளுதுச்சா.. அதான் தேடப் போனோம்”


அனுசுயாவுக்கு அது ஒன்றும் புரியவில்லை.


“ஏய்.. எங்க வீட்டுக்கு வர்றியா? உனக்கு நான் ஒண்ணு காட்டறேன்” என்று செல்வியை அழைத்தாள் அவள்.


”இல்ல. வாட்ச்மேன் விடமாட்டாரு. அப்படியே விட்டாலும் உள்ள உங்கம்மா பாத்தா திட்டும்”


அதைக் கேட்டதும் அனுசுயாவிற்கு முகம் சின்னதாகிப் போனது.


“சரி.. இப்படி உக்காரு” என்று கேட்டருகே உட்கார்ந்தார்கள் இருவரும்.


”அப்பா நேத்து நிறைய ஸ்டார்ஸ் வாங்கீட்டு வந்தாரு”


“ஐ! நட்சத்திரமா?” ஆச்சர்யமாகக் கேட்டாள் செல்வி.


“ஆமா! என் பெட்ரூம்ல மேல எல்லாத்தையும் ஒட்டி வெச்சிருக்காங்க. நைட் லைட்டையெல்லாம் ஆஃப் பண்ணினா எல்லாம் எப்படி மின்னுது தெரியுமா?”


“எப்படி அனு?”


”இதோ” – வாட்ச்மேன் பார்க்கிறானா என்று கவனித்தபடி தன் கையிலிருந்த நட்சத்திர ஸ்டிக்கர் ஒன்றை செல்வியிடம் கொடுத்தாள் அனு.


“நீயும் இதை ஒட்டிப் பாரு. லைட் அணைஞ்சதுக்கப்புறம் சூப்பரா இருக்கும் தெரியுமா?”


செல்வி அதை உற்சாகமாக வாங்கி கையில் மறைத்துக் கொண்டாள்.


”வாட்ச்மேன்.. அனு அங்க இருக்காளா” – வீட்டு போர்ட்டிகோவிலிருந்து அம்மாவின் குரல் கேட்க எழுந்தாள் அனு.


“அம்மா.. வந்துட்டேம்மா”


“அங்க என்ன பண்ற இந்நேரத்துல. மணி எட்டரையாகப் போகுது. சாப்பிட்டுட்டு தூங்கு..வா”


”செல்வி. நான் போய்ட்டு வர்றேன்” என்றுவிட்டு ஓடினாள் அனுசுயா.


அவள் போனதும் நேராக நடந்து தனது அம்மாவைப் பார்க்கப் போனாள் செல்வி.








குடித்துவிட்டு எங்கோ விழுந்துகிடந்த அப்பாவை ரிக்‌ஷாவில் கூட்டிவந்து, ரிக்‌ஷாக்காரனை அனுப்பிக் கொண்டிருந்தாள் அம்மா.


“அம்மா.. இங்க பாரேன்.. நட்சத்திரம். அனு குடுத்தா. ஒட்டி வெச்சுப் பார்த்தா லைட் ஆஃப் பண்ணினப்பறம் மின்னுமாம்”


“சும்மாயிருக்கியா கொஞ்சம். ஒட்டி வெச்சுப் பாக்கறாளாம்.. எங்க ஒட்டுவ?” எரிச்சலாய் கத்தினாள் அம்மா.


“இருந்த காசும் ரிக்‌ஷாவுக்குப் போச்சு. இன்னிக்கு வெறும் வயித்தோட படுக்க வேண்டியதுதான். பேசாம படு.” என்று எரிந்து விழுந்தவளாய், சுய நினைவற்ற தன் கணவனைப் படுக்கவைத்து சற்று தள்ளி அவளும் படுத்துக் கொண்டாள்.


‘மகளென்ன செய்வாள், பாவம்’ என்று தோன்ற “வா செல்வி. வந்து படு” என்றாள் அம்மா.


செல்வி அமைதியாக வந்து படுத்துக் கொண்டாள்.


பிளாட்பாரத்தில் இருந்த கொசுக்கடிக்காக, அம்மா, இருந்த ஒரே கிழிந்த போர்வையால் செல்வியை போர்த்தினாள்.


செல்வி கையில் நட்சத்திரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, மேலே பார்த்தாள்.


நிஜமான நட்சத்திரம் மின்னியது.

44 comments:

கோவி.கண்ணன் said...

//செல்வி கையில் நட்சத்திரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, மேலே பார்த்தாள்.


நிஜமான நட்சத்திரம் மின்னியது.//

இல்லாதவர்களை இயற்கையே ஆசிர்வதிக்கிறது என்பதாக புரிந்து கொள்ள முடிகிறது.

நல்ல கதை.

பரிசல்காரன் said...

முதல் வருகைக்கும்,

பாராட்டுக்கும்

நன்றி கண்ணன்!

(ச்சாட்ல கெஞ்சிக் கூப்பிட்டத யார்கிட்டயும் சொல்லீடாதீங்க!)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நிஜம்மாவே நட்சத்திரம் மின்னுதுங்க.. :) நட்சத்திரக்கதை..

Subbiah Veerappan said...

ஏழ்மைக் கதைகள் என்ற தலைப்பில் எழுதுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்
வாழ்த்துக்கள்!
வாசகர்களை உள்ளே இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருக்குடா சாமீய்ய்....!

கோவி.கண்ணன் said...

//SP.VR. SUBBIAH said...
ஏழ்மைக் கதைகள் என்ற தலைப்பில் எழுதுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்
வாழ்த்துக்கள்!
வாசகர்களை உள்ளே இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருக்குடா சாமீய்ய்....!
//

வாத்தியாரே, நீங்களே.. நமீதா பிரமாண்டம் என்றெல்லாம் பற்றி பேசும் போது...அவர் இப்பொழுதுதான் பதிவாற்றில் பரிசலை செலுத்தி இருக்கிறார் கரையைக் கடக்க வேண்டுமா ?
:)

மோகன் கந்தசாமி said...

////நிஜம்மாவே நட்சத்திரம் மின்னுதுங்க.. :) நட்சத்திரக்கதை..///

ரிப்பீட்டே!!! + ஒரே டச்சிங் பா!

பரிசல்காரன் said...

கயல்விழி முத்துலெட்சுமி said...
நிஜம்மாவே நட்சத்திரம் மின்னுதுங்க..:)

நட்சத்திரக்கதை..

நன்றிங்கக்கா!!!

பரிசல்காரன் said...

//SP.VR. SUBBIAH said...
ஏழ்மைக் கதைகள் என்ற தலைப்பில் எழுதுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்
வாழ்த்துக்கள்!..!//

ஐயா.. ஏழ்மைக்கதைகள்-ன்னு இல்ல. ”நட்சத்திரக்கதைகள்” ங்கற தலைப்பு! நான் யோசிச்சுவெச்சிருக்கற வேற ரெண்டு கதைல ஏழ்மை இருக்கான்னு தெரியல.. ம்ம்ம்ம்ம்... இருக்குன்னுதான் நெனைக்கறேன்!


//வாசகர்களை உள்ளே இழுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியதிருக்குடா சாமீய்ய்..//

அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்கய்யா? எப்பப் பாத்தாலும் இதே நெனப்பாத்தான் இருக்கு!

ஜி said...

கலக்கலான கதை கேகே...

பரிசல்காரன் said...

நன்றி.. மோகன் கந்தசாமி!! (எப்பவாவது அத்தி பூத்தாப்புல வரவேண்டியது!)

பரிசல்காரன் said...

@ ஜி

மிக்க நன்றி!

ஜெகதீசன் said...

நல்ல கதை.

Anonymous said...

பரிசல்,

நட்சத்திர எழுத்தாளாராகீட்டிங்க.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

***

Unknown said...
This comment has been removed by the author.
பரிசல்காரன் said...

@ ஜெகதீசன்

நன்றி!

@ வடகரை வேலன்

அதுக்குத்தானே இத்தனை பாடுகளும்!

@ ambi

எதுக்குங்க இப்படி திட்டறிங்க?

Syam said...

சூப்பர் * கதை...அருமை..

VIKNESHWARAN ADAKKALAM said...

ஜெயகாந்தன் பொம்மை எனும் தலைப்பில் இம்மாதிரியான கதை ஒன்றை கொடுத்திருப்பார்.. அருமையாக இருக்கும்... உங்கள் கதை அதை நினைவு கூர்ந்தது... கதை அருமை... வாழ்த்துக்கள்....
பிஞ்சு உள்ளங்களுக்கு பிரிவினை தெரியாது.. பெரியவர்கள் தான் பிரிவினையை ஏற்படுத்தும் காரணியாக இருக்கிறார்கள்.... அந்த பணக்கார சிறுமியும் ஏழைச் சிறுமியும் நட்புக் கொள்வதை விரும்பாத பொற்றோரின் நிலை அதை சரியாக எடுத்துக் கூறுகிறது.....

Sanjai Gandhi said...

கதை இன்னும் படிக்கல.. படிச்சிட்டு பின்னூட்டம் போடறேன் :P

rapp said...

ரொம்ப ரொம்ப நல்ல கதை. ரொம்ப நாட்கள் கழித்து ஒரு மிக அழகான, வாழ்வின் வினோத நிதர்சனங்களை, நெஞ்சை கனக்கச் செய்யும் வண்ணம் வார்த்திருக்கும் நல்ல சிறுகதையை படித்த உணர்வு. உங்களின் இத்தகைய உண்மையான, வெளிப்பூச்சில்லாத கதைகள் தொடர வாழ்த்துக்கள் :):):)

குசும்பன் said...

கதை மிகவும் அருமை, போர்வையும் ஓட்டை என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள்...

PPattian said...

இதில எனக்கு தெரிஞ்ச பெரிய கருத்து

அனுசுயாவுக்கு அவங்க அப்பா நட்சத்திரம் வாங்கிட்டி வாராரு.

செல்வி அப்பா மகளோட வயத்தை பத்தி கவலைப்படாம குடிச்சி அழிச்சிட்டு வாராரு

குடி.. குடிதாங்க ஏழை மக்களின் மிகப்பெரும் சாபம்.

Thamira said...

நல்ல சிறுகதை பரிசல், வாழ்த்துக்கள்! (யாராவது பரிசலுக்கு சிறுகதை தொடர்பாக ஒரு நல்ல பட்டத்தை யோசித்து வழங்கவும், நான் வழிமொழிகிறேன். யோசித்து யோசித்துப் பார்க்கிறேன், தோண மாட்டேங்குது). அப்புறம் குசும்பா, கண்ணாடியை துடைத்துக்கொள்ளவும், பரிசல் கிழிந்த போர்வை என்றுதான் எழுதியிருக்கிறார்.

Thamira said...

அப்புறம் பரிசல், ஒழுங்கா மருவாதையா பதிலுக்கு என் தளத்திற்கும் வந்து ஒரு பின்னூட்டம் போட்டுவிடவும்.

anujanya said...

கே.கே., செயற்கை திருப்பங்கள் இல்லாத, நல்ல கதை. ஸ்டார் எழுத்தாளர் என்ற பட்டமும் வரக்கடவது !

அனுஜன்யா

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

டச்சிங் ஆக நன்றாக இருந்தது !

வெண்பூ said...

நட்சத்திர‌ கதையும் அருமை... அதே போல் கறுப்பு வெள்ளையில் சிரிக்கும் நட்சத்திரமும் அருமை.. இன்னும் இதே போல் நிறைய எதிர்பார்க்கிறோம்(நான் கதையைச் சொன்னேன்)

Anonymous said...

// உங்களின் இத்தகைய உண்மையான, வெளிப்பூச்சில்லாத கதைகள் தொடர வாழ்த்துக்கள்!! //

அதே என் எண்ணமும்......

ம்.... இந்தக் கதையின் மூலம் மூத்த பதிவராயிட்டீங்க ;)

சின்னப் பையன் said...

அருமை... டச்சிங் டச்சிங்..

பரிசல்காரன் said...

நன்றி ஸ்யாம், விக்கி!

சஞ்சய்.. மெதுவா வாங்க...! அவசரமேயில்லை!

ஒரு காசு said...

பரிசல்காரரே, கதை மிகவும் நன்றாக உள்ளது.
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

@ ராப்

//ரொம்ப ரொம்ப நல்ல கதை. ரொம்ப நாட்கள் கழித்து ஒரு மிக அழகான, வாழ்வின் வினோத நிதர்சனங்களை, நெஞ்சை கனக்கச் செய்யும் வண்ணம் வார்த்திருக்கும் நல்ல சிறுகதையை படித்த உணர்வு. உங்களின் இத்தகைய உண்மையான, வெளிப்பூச்சில்லாத கதைகள் தொடர வாழ்த்துக்கள்//

ஏங்க இவ்ளோ சீரியஸா எழுதி பயப்படுத்தறீங்க?

பரிசல்காரன் said...

@ குசும்பன்

நீங்களும் அருமையாக எழுதியிருக்கீங்க! வந்து படிச்சு கனத்துப்போச்சு மனசு!

//புபட்டியன்//

//இதில எனக்கு தெரிஞ்ச பெரிய கருத்து..//

கருத்தெல்லாம் தெரியுதா? பரவால்லியே! இதுதான் எனக்கு மகிழ்ச்சியான ஒரு பாராட்டு! நன்றீ நண்பரே!

பரிசல்காரன் said...

@ தாமிரா

உங்கபக்கம் வந்து கும்மி போட்டுட்டேன்! சந்தோஷமா?

@ அனுஜன்யா

/ஸ்டார் எழுத்தாளர் என்ற பட்டமும் வரக்கடவது //

அப்படியே ஆகுக! (நானே சொல்லிக்கறதா?? வெட்கம்! வேதனை!!)

நன்றி aruvai baskar!

@ வெண்பூ

ரசித்தேன்!

@ வெயிலான்

//இந்தக் கதையின் மூலம் மூத்த பதிவராயிட்டீங்க ;)//

நாளைக்கே முத்தம் பற்றி எதுனா எழுதி முத்தபதிவராய்டவேண்டியதுதான்!

@ ச்சின்னப்பையன்

அதையும் இப்படி துப்பாக்கி காட்டித்தான் சொல்லணுமா?

கயல்விழி said...

நல்ல கதை பரிசல். இந்த ஸ்டார்களுக்கு என்ன அர்த்தம்?

இந்த சப்ஜெக்டில் முன்பு ஒரு கதை ஜெயகாந்தன் எழுதினார் என்று நினைக்கிறேன்.

பரிசல்காரன் said...

@ ஒரு காசு

/பரிசல்காரரே, கதை மிகவும் நன்றாக உள்ளது.
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி! (உங்க பேருக்கு என்ன அர்த்தம்? ஐ மீன், என்ன அர்த்தத்துக்காக அந்தப் பேர் வெச்சிருக்கீங்க?)

@ கயல்விழி

//நல்ல கதை பரிசல். இந்த ஸ்டார்களுக்கு என்ன அர்த்தம்?//

நட்சத்திரக் கதைகள்

//இந்த சப்ஜெக்டில் முன்பு ஒரு கதை ஜெயகாந்தன் எழுதினார் என்று நினைக்கிறேன்.//

மகிழ்ச்சி! அவ்வளவு பெரிய ஜாம்பவான் பெயரும் என் பின்னூட்டத்தில் வருகிறதே!

அகரம் அமுதா said...

வணக்கம் திரு பரிசல் அவர்களே! இம் மடல் பின்னூட்டத்திற்காக அல்ல. தங்களை ஈற்றடிக்கு வெண்பா எழுத வருமாறு அழைப்பதற்கே இம்மடல். வாரம் ஒரு முறை திங்கட்கிழமைகளில் புதுப்புது ஈற்றடிகளை வழங்கி வருகிறேன்.ஆதலால் திங்கள் செவ்வாய்க் கிழமைகளில் வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு வந்து ஈற்றடிக்கு வெண்பா எழுதுமாறு வேண்டுகிறேன். தங்களுக்குத் தெரிந்த வெண்பா எழுதத்தெரிந்த நண்பர்கள் இருப்பார்களேயானால் அவர்களையும் அழைத்து வருமாறு வேண்டுகிறேன். நன்றி

பரிசல்காரன் said...

வணக்கம் அமுதா.

கண்டிப்பக வந்து முயல்கிறேன்.

எனக்கு வெண்பா எழுத வேண்டுமென்ற அதீத ஆர்வமிருப்பினும், ”உனக்குத் தெரியாதேடா” என்கிற பயம் அந்த ஆர்வத்தை எப்போதும் முந்தி வென்று விடுகிறது!

இங்கே வந்து கமெண்டில் என்னை
அங்கே வாவென அழைத்தார்-அமுதா
பாடினார் வெண்பா பாங்குடன் பலரையும்
நாடினார் அவர்தாம் எழுத.

இது வெண்பாவா?

அகரம் அமுதா said...

ஆம். வெண்பா தான். இரண்டு இடங்களில் தளை தட்டுகிறது. ஈற்றடியின் ஈற்று சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைக் கொண்டு இறவெண்டும்.

Ramya Ramani said...

அருமை அருமை அருமை..வேறு பாராட்ட வார்த்தைகள் இருந்தால் போட்டுகுங்க பரிசல் :))

பரிசல்காரன் said...

//ஆம். வெண்பா தான். இரண்டு இடங்களில் தளை தட்டுகிறது. ஈற்றடியின் ஈற்று சீர் நாள் மலர் காசு பிறப்பு இவற்றிலொன்றைக் கொண்டு இறவெண்டும்//

ஒண்ணுமே புரியலயே கடவுளே!!

@ ramya ramani

மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி!

Divya said...

மிக மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் பரிசல்காரன்:)

நல்ல கதை, பாராட்டுக்கள்!!

பரிசல்காரன் said...

மிக்க மகிழ்ச்சி திவ்யா!

Anonymous said...

VERY NICE STORY..
SIMPLE WORDS...
AT THE END U BECOME A STAR...