Wednesday, September 16, 2009

நான் என் வரலாறு கூறுதல்

நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் யாரு என் வரலாறு கூறுவது என்ற தலைப்பில் வலைப்பதிவுக்கு தான் வந்த கதையை எழுதி தொடர என்னை அழைத்திருக்கிறார். ஏற்கனவே என் நூறாவது பதிவாக அதை எழுதிவிட்டதால் அதையே சிகப்பில் கீழே கொடுத்திருக்கிறேன். அதற்கும் கீழேயிருப்பது தற்போதைய எண்ணங்கள்...

(ஏற்கனவே படித்தவர்கள் ‘ஜம்ப்’பிப் போகவே இந்தக் குறிப்பு!)

************************

நான் முதன்முதலில் எழுதிய படைப்பே எதிர்க்குத்துப் படைப்புதான். 1991ல் வாரமலரில் ஒரு பெண், `எங்களை குத்துவிளக்கென்று வர்ணிக்காதீர்கள்.. கொளுத்துகிறார்கள்’ என்று ஆரம்பித்து பெரிய கவிதையொன்று எழுதியிருந்தார். உடனே `என்னடா இது ஆண்குலத்திற்கு வந்த சோதனை’ என்று பொங்கி எழுந்து “உங்களை குத்துவிளக்கென்று வர்ணிப்பது கொளுத்துவதற்கல்ல. உங்களால் உலகிற்கு வெளிச்சம் கிட்டுவதை வெளிப்படுத்தத்தான்..” என்று ஆரம்பித்து பதில் கவிதை எழுதி அனுப்பினேன். எல்லோரது கெட்ட நேரத்துக்கு அந்தக் கவிதை 21.04.1991ல் பிரசுரமாகிவிட்டது! (அதை இங்கே எழுதினால் `நீ எழுதறத நிறுத்துடா’ என்று கொலை மிரட்டல்கள் விழுமென்பதால் விட்டு விடுகிறேன்!) பிரசுரமான உடனேயே நான் வாசகர் கடிதம், கேள்விகள் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகளுக்கு என்னென்ன எழுதமுடியுமோ எல்லாமே எழுதிப் போட ஆரம்பித்து விட்டேன்!

எல்லா பத்திரிகைகளும் வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பேன். அப்போது எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் இணைந்து `உங்கள் ஜூனியர்’ என்று பல்சுவை மாத இதழ் நடத்திவந்தார்கள். அப்படியே எனக்கிருக்கும் நகைச்சுவை உணர்வோடு ஒத்திருந்தது. ஒவ்வொரு மாதமும் அதற்கு பல படைப்புகள் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஒரு முறை நான் மிக மதிக்கும் பட்டுக்கோட்டை பிராபகரிடமிருந்து ஒரு கடிதம் `நீங்க கதைகள் எழுத முயற்சி செய்யுங்க. உங்க எழுத்து நடை அபாரம்’ என்று. அவ்வளவுதான்! இதே போல படுஸ்பீடில் கதைகளெழுத ஆரம்பித்து, சில பிரசுரமாகி பல திரும்பி வந்து....

அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!

பிறகு ஒரு அங்கிள் (நிஜமாலுமேங்க.. அவரு பேரும் எங்கப்பா பேர்தான் - பாலசுப்பிரமணியன்!) சொன்ன அறிவுரையைக் கேட்டு கொஞ்சம் குறைத்துக் கொண்டு வேலை தேட ஆரம்பித்தேன். (அப்ப வேலைக்கே போகாமத்தான் இந்த கருமாந்திரத்தையெல்லாம் பண்ணீட்டிருந்தியா நீ?) பிறகு வேலை, காதல், கல்யாணம், குழந்தை என ஆஸ்யூஷுவல் சர்க்கிளுக்குள் நானும் மாட்டிக் கொண்டேன்!

1992லேயே என் சொந்த ஊரான உடுமலைப்பேட்டையிலிருந்து திருப்பூர் வந்து வேலை செய்து திரும்ப உடுமலைக்கே போய் விட்டேன். எல்லாப் பக்கமுமே எவன் சொன்னதுன்னே தெரியாத `கிழ’மொழி இருக்குமே அதுபோல திருப்பூர்லயும் ஒரு கிழமொழி சொல்லுவார்கள். `திருப்பூர்ல பொழைக்க முடியாதவன் எங்க போயும் பொழைக்க முடியாது’ என்று. அதற்கேற்ப பல வேலைகளுக்குப் பிறகு மீண்டும் திருப்பூர் வந்தேன். இப்போதிருக்கும் நிறுவனத்தில் மிகச் சிறிய பணியொன்றில் சேர்ந்தேன். கதையெழுதுவது, சினிமா பார்ப்பது என்று எல்லாவற்றையும் துறந்து, வேலை வேலை என்று பாடுபட்டு, இப்போது ஒரு நல்ல அதிகாரமுள்ள போஸ்ட்டில் இருக்கிறேன்.

இந்த நிலையில் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களும், சொந்தங்களும் “உன் க்ரியேட்டிவிட்டியையும், ஹ்யூமர் சென்சையும் வேலை வேலைன்னு அழிச்சுக்கற. இப்போதான் நல்ல நிலைமைல இருக்கியில்ல. அப்பப்ப எழுதேன்” என்று இடைவிடாது சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இத்தனை வருட இடைவெளியில் என் கையெழுத்து படு கேவலமாக ஆகிவிட்டிருந்தது. சரி என்று ஒரு கணினி வாங்கிப் போட்டேன்.

போனவருஷம் ஒரு நாள். என் அலுவலக நண்பர் முருககணேஷ் என்னை அழைத்து இணையத்தில் ஒரு வலைப்பூவைக் காண்பித்து ”ப்ளாக்கர்ஸ்ன்னு இப்போ வலையில எழுதறதுதான் ஃபேமஸ் கிருஷ்ணா. நீங்களும் எழுதுங்களேன்” என்றார். அப்போது படுபயங்கர பிஸியாக இருந்தது. அதுவுமில்லாமல் தமிழில் டைப்படிப்பது எப்படி என்றும் தெரியவில்லை. இந்த வயசில் டைப்ரைட்டிங் க்ளாசுக்குப் போய், ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி, கற்பகவல்லி என்ற ஃபிகரை சைட்டடித்ததையெல்லாம் நினைத்துத் தொலைக்கவேண்டி வருமே என்றுவேறு பயம். விட்டுவிட்டேன்.

இந்த வருடம் மே மாதம் என் எம்.டி. ஒரு மாத பயணமாக US சென்றார்கள். அப்போது கிடைத்த சில ஓய்வு நேரங்களில் ப்ளாக் பற்றி ஆராய்ச்சி நடத்தினேன். நான் முதன்முதலில் படித்தது லக்கிலுக்கின் ஒரு பதிவு. அடுத்தது அவர் சுட்டி கொடுத்து வைத்திருந்த (யெஸ்.பா.வின் இணையம்) தல யெஸ்.பாலபாரதியின் விடுபட்டவை. உடனேயே ஒரு சுபயோக சுப தினத்தில் வேர்ட்ப்ரஸ்ஸில் kbkk007 என்று ஆரம்பித்து தமிங்கிலீஷில் KURUVI VIMARSANAM, DHASAAVADHARAM PAADALKAL என்று பதிவு போட்டேன். படிக்கச் சகிக்கவில்லை.

பிறகு லக்கிலுக்கின் வலையில் போய் ப்ளாக்கரில் SIGN IN ஆப்ஷனில் உள்ளே புகுந்து... பரிசல்காரன் என்று ஆரம்பித்து 15 மே 2008லிருந்து உங்களையெல்லாம் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்! நாளை சரியாக மூன்று மாதங்கள் நிறைவடைகிறது!

நாங்கள் ஏழு நண்பர்கள் (கனலி, செந்தில்வேல், கிரி, சௌந்தர், மகேஷ், வேடசந்தூர் ரவி, அடியேன்) அவ்வப்போது கூடி விடிய விடிய ஏதேனும் விவாதங்கள் நடத்துவோம். மாதம் ஒரு முறை கூடும் எங்கள் கூட்டம் ஒரு இலக்கில்லாமல் இருக்கிறது என்பதால் எங்களால் இயன்ற உதவியை இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களும் செய்யும் பொருட்டு ஏதேனும் பெயரில் குழு போல ஆரம்பிக்கலாம் என்று முடிவாகி பல பெயர்களுக்குப் பிறகு தேர்வான பெயர்தான் `பரிசல்’. அதாவது கஷ்டப்படறவங்களை கொஞ்சமாவது கரையேத்துவோம் என்ற அர்த்தத்தில்.

அதிலிருந்தது வந்ததுதான் இந்தப் `பரிசல்காரன்’ என்ற பெயர்!

ஆரம்பித்த புதிதில் லக்கிலுக், யெஸ்.பாலபாரதி ரெண்டு பேர்தான் ப்ளாக்கர்ஸ் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது.. இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்!

புதிதாய்ப் படத்துக்கு முதல் நாளே போனாலும் குடும்பத்தை அழைத்துக் கொண்டே போகிறவன் நான். என் எழுத்துக்களிலும் என் மனைவி உமா, குழந்தைகள் மீரா, மேகாவையும் என்னோடே அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறேன். அவ்வப்போது அவர்களுக்கும் என், உங்கள் என எல்லாரின் பக்கங்களையும் படித்துக் காட்டுகிறேன். அவர்களையும் ஒரு அங்கமாக ஆக்கிவிட்டதால் `இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல் நியூஸ் ப்ளாக்ல?’ என்று அவர்களே கேட்குமளவு ஆகிவிட்டது. இதை உன்னிப்பாக அவதானித்து ஒரு பின்னூட்டத்தில் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார். ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான்!

எந்த நேரத்தில் நான் எழுதுகிறேன், எப்போதெல்லாம் படிக்கிறேன் என்பது தனிப்பதிவாய் போடவேண்டிய விஷயம். என்னை அழைத்த என் நண்பர்களுக்கு இதுபற்றி நான் விளக்கினேன்!

என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!

*********************************

யோசித்துப் பார்த்தால் சென்ற ஆகஸ்ட் 14ல் வெளியான இந்தப் பதிவுக்கும் இன்றைக்குமான கால இடைவெளியான பதின்மூன்று மாதங்களில் என் எழுத்தில் ஏதேனும் முன்னேற்றமிருக்கிறதாவென்றால் இல்லை. இதைச் சுட்டிக் காட்டி என்னை மேலெடுத்துச் செல்ல முயலும் தோழமை உள்ளங்களுக்கு என் அன்பு.

இனி.. இதைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்:


பைத்தியக்காரன்
ஜ்யோவ்ராம் சுந்தர்

(உங்களின் வலையுலக அனுபவங்கள் அறிய ஆவலாயிருப்பதால் அழைக்கிறேன்..)

முரளிகுமார் பத்மநாபன்
ராஜராஜன்




.

31 comments:

கார்க்கிபவா said...

நல்ல ஆளா பார்த்துதான் கூப்பிட்டு இருக்கிங்க.. ரை ரை

எம்.எம்.அப்துல்லா said...

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//வெண்பூ said...
தொடர்ந்து எழுதுங்கள். அதேநேரம் புத்தகங்களுக்கும் அனுப்புங்கள். கண்டிப்பாக பிரசுரமாகும், "விகடன்ல இந்த வாரம் ஒரு கதை வந்ததே, அதை எழுதுனவரு என் ஃப்ரண்டுதான்" என்று சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது..
//


எல்லாப் பத்திரிக்கையிலேயும் வாராவாரம் பரிசல்காரன்ன்னு ஓரு பெரிய எழுத்தாளரோட கதை வருதுல்ல?அவரு என் பங்காளிதான் சொல்லிக்கொள்ள எனக்கும் ஆசையாய் இருக்கிறது...

(எனக்கு வெண்பூ மாதிரி விகடன்ல மட்டும் வரனும்னு ச்சின்ன ச்சின்ன ஆசையெல்லாம் கிடையாது)

//




மேலே உள்ளது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று உங்கள் பதிவில் நான் போட்ட பின்னூட்டம்.அதுவே இந்த பதிவிற்கும் பொருந்துவதால் அப்படியே எடுத்து போட்டுவிட்டேன்.


யோசித்துப் பார்த்தால் சென்ற ஆகஸ்ட் 14ல் வெளியான இந்தப் பின்னூட்டத்திற்கும் இன்றைக்குமான கால இடைவெளியான பதின்மூன்று மாதங்களில் என் பின்னூட்டங்களில் ஏதேனும் முன்னேற்றமிருக்கிறதாவென்றால் இல்லை. இதைச் சுட்டிக் காட்டி என்னை மேலெடுத்துச் செல்ல முயலும் தோழமை பரிசலுக்கு என் அன்பு.

நர்சிம் said...

அப்துல்லா ஆப்புதுல்லாவா ஆரம்பமாகி இருக்காரு பரிசல்..

மீள்பதிவுன்னாலும் தூள் பதிவு.

manjoorraja said...

முதலில் படிக்கலெ. இப்பதான் படித்தேன். 56 கிலோவா ஏறிட்டிங்களா! ரொம்ப சந்தோசம்.
60க்குள் கட்டாக இருக்கவும். அதுக்கு மேலே வேண்டாம்.

சுவையான பதிவு

பரிசல்காரன் said...

@ அப்துல்லா

யோவ்... சிரிச்சுகிட்டே இருக்கேன். சூப்பர்! பாராட்டாம இருக்க முடியல!

Mahesh said...

சிங்கப்பூர்ல இருந்த ஒண்ணு ரெண்டு கொசுக்களும் செத்துப் போச்சு :)))

Romeoboy said...

உங்களை பற்றி சிறிதாக , அருமையாக சொன்னது நன்றாக இருந்தது ..

தராசு said...

கொசுவர்த்தியிலும் மீள்பதிவா?????

அதுக்கு மீள் பின்னூட்டம் வேற!!!!!

GHOST said...

முதலில் படிக்கலெ. இப்பதான் படித்தேன்.

மீள்பதிவுன்னாலும்நல்லா இருக்கு

Romeoboy said...

தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றி ..

Unknown said...

//என் எடை எப்போதுமே 50ஐத் தாண்டியதில்லை! திருப்பூரின் பணிச்சுமை, மன உளைச்சல் இதற்கொரு முக்கியக் காரணம். ஆனால் இப்போது என் எடை 56 கிலோ! எப்போதுமே உமாவை யாராவது ‘ஏன் உம் புருஷனுக்கு சரியா சாப்பாடு போடறதில்லையா?’ என்று கிண்டலடிக்கும் போது கோவப்படும் அவர், `இப்பதான் சரியா சாப்பிடறீங்க, டென்ஷனில்லாம இருக்கிங்க. அதான் வெய்ட் ஏறுது!’ என்று சந்தோஷப்படுகிறார். என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!//

touching one

Unknown said...

:))))))))

Radhakrishnan said...

பரிசல்காரன் பற்றிய விளக்கமும், உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை விடாமல் பற்றிக்கொண்ட விதமும் அறிந்து மிகவும் மகிழ்ச்சி.

இதே பதிவு எப்போதும் உடனிருக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. வலையுலகத்தை உண்மையாக நேசித்து அதன்மூலம் தாங்கள் பெற்றுக்கொண்ட சந்தோசம் பாராட்டுக்குரியது.

பாராட்டுகள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

என் சுயத்தை மீட்டுக் கொடுத்தது இந்த வலையுலகம்தான்!//

:))) good one

மேவி... said...

ஏற்கனவே இந்த பதிவை நான் படித்து இருக்கிறேன் ...... அதனால் இப்பொழுது என்ன பின்னோட்டம் போடுவது என்று தெரியவில்லை ......


இந்த பதிவுலகம் உங்கள் சுயத்தை மீட்டு கொடுத்து ; பலருக்கு பயத்தை கொடுத்து இருக்கிறது .....

அப்படியே பதிவு எழுத இரவு தூங்காமல் கூகிள் ல மேட்டர் தேடி கொண்டு இருப்பிங்களே .... அதையும் சொல்லி இருக்கலாம் ......

மேவி... said...

"கார்க்கி said...
நல்ல ஆளா பார்த்துதான் கூப்பிட்டு இருக்கிங்க.. ரை ரை"


ஒருவரை கூப்பிட அவரை பார்க்கணும் என்று அவசியம் இல்லை .....he he he he he

நாஞ்சில் நாதம் said...

:))

கோவி.கண்ணன் said...

வரலாறு நன்று நன்று !

//அப்படியே கதை எழுதி, சினிமாவுக்கு வசனம் எழுதி, டைரக்டராகி தமிழக மக்களை சும்மா விடக்கூடாதுடா என்று முடிவெடுத்து களமிறங்கினேன்!//

:))

அன்பேசிவம் said...

சகா என்னயும் சேர்த்துதானே சொன்னிங்க?

அன்பேசிவம் said...

தல நன்றி என்னையும் ஆட்டத்துக்கு சேர்த்துகிட்டதுக்கு. ஒரு நாள்ல 97 பேர் பார்வையிட்டு போயிருக்காங்க... ம்ம் அதுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி

snkm said...

நன்று!

M.G.ரவிக்குமார்™..., said...

\\யோசித்துப் பார்த்தால் சென்ற ஆகஸ்ட் 14ல் வெளியான இந்தப் பதிவுக்கும் இன்றைக்குமான கால இடைவெளியான பதின்மூன்று மாதங்களில் என் எழுத்தில் ஏதேனும் முன்னேற்றமிருக்கிறதாவென்றால் இல்லை.// சபை நாகரீகம் கருதியோ இல்லை அடக்கத்திற்காகவோ சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.நிச்சயம் உங்கள் எழுத்து வளர்பிறையாகத் தானிருக்கிறது. உங்கள் பதிவைத் தொடர்ந்து வாசித்து வருபவன் எனும் முறையில் சொல்கிறேன்!உங்கள் பெயரைக் கப்பல்காரன் என மாற்றிக் கொண்டால் கூட தப்பேயில்லை.!வாழ்த்துக்கள்!

Thamira said...

அப்படியே விடுறதுக்கு மீள்பதிவு ஓகேதான்.. ஹிஹி.!

முரளி ://ஒரு நாள்ல 97 பேர் பார்வையிட்டு போயிருக்காங்// நானெல்லாம் இணைப்பு குடுத்தா என்னாகும் தெரியும்ல..

(ஆமா என்ன நிஜமாவே கவுன்ட் கம்மியா இருக்குறா மாதிரி இருக்குது. நல்லா செக் ப‌ண்ணுங்க முரளி)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

நல்ல வரலாறு.

செந்தில் நாதன் Senthil Nathan said...

//இது ஒரு கடல்! பெரிய பெரிய கப்பலெல்லாம் இருக்கும் இதில் என் பரிசல் அடித்துச் செல்லப்படும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் ஒவ்வொருமுறை சுழலிலோ, புயலிலோ சிக்கும்போதும் என்னை தங்கள் கப்பலில் எடுத்துப் போட்டுக் கொண்டு பத்திரமாய் மறுபடி இறக்கிவிட்டிருக்கிறார்கள். கலங்கரை விளக்கமாய் `டேய்.. பாத்துப்போடா’ என்று மிரட்டி, வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஒவ்வொருமுறை இணையத்தை திறக்கும்போதும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்//

ரசித்தேன்!!! நீங்களும் இப்போ ஒரு கலங்கரை விளக்கம் தான்!!

JACK and JILLU said...

கொஞ்சம் எங்களையும் கரையேத்தி விடுங்க பாஸ்!

-- said...

ம்ம்ம்..
என்னைக்கி இந்த மாதிரி
நானும் ஒரு பதிவு போட்டு.
.
என் வரலாறு கூறி..!!??
.
.
நல்ல வரலாறு...!
வாழ்த்துக்கள்....

-- said...

தன் வரலாறு கூறுவது பற்றி
வைரமுத்து அவர்கள் ஒரு புத்தகம்
வெளியிட்டு உள்ளார்.

முடிந்தால் படியுங்கள்.

தன் வரலாறை, வரலாறு என்று சொல்லாமல்
மிக எதார்த்தமாக கூறியிருப்பார்.
அந்த எழுத்து நடை என்னை மிகவும் ஈர்த்தது.

-- said...

அது "இதுவரை நான்’ என்ற புத்தகம்
என நினைக்கிறேன்.

-- said...

அது "இதுவரை நான்’ என்ற புத்தகம்
என நினைக்கிறேன்.

-- said...

அது "இதுவரை நான்’
என்ற புத்தகம்
என நினைக்கிறேன்.