Monday, May 26, 2008

நாட்குறிப்பில் இல்லாத பக்கங்கள்

என் கஸின் பிரதர் வீடு கட்டியிருந்தான். கிரகப்பிரவேசத்திற்காக, சனிக்கிழமை இரவு திருப்பூரிலிருந்து உடுமலை சென்றேன். பஸ்சை விட்டிறங்கி, நண்பனின் பைக் வாங்கிக் கொண்டு, அவர்கள் சொன்ன முகவரியைத் தேடி போய்க்கொண்டிருந்தபோது, சொன்ன இடத்திற்கு அருகிலேயே-ஒரு கல்யாண மண்டபம் அலங்காரங்களுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அந்த மண்டபம் முன்னாடி நின்றிருந்த ஒருவரிடம்..

"இங்க கிரகப்பிரவேசம் நடக்கற.." கேட்டுமுடியுமுன் அவர் சொன்னார்..

"இந்த மண்டபத்துலதான்"

நான் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே நடந்தேன். உள்ளே போகுமுன், என் தம்பியின் ஃபோன் வந்தது..
"எங்க இருக்க?"
நான் சொன்னேன்.
"லூஸா நீ? கிரகப் பிரவேசம் எவனாவது மண்டபத்துல வெப்பானா?"
அட.. ஆமாம்ல.. இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் "இல்ல.. வித்தியாசமா பண்ணுவ-ன்னு நெனச்சேன்"

திட்டிவிட்டு வீட்டின் அடையாளம் சொல்லி வரச்சொன்னான்.
நான் மண்டபத்து வாசலில், எனக்கு பதில் சொன்ன பெரிய மனுஷனை தேடினேன். நாலைந்துபேருடன் அமர்ந்து கர்னாடகாவில் பா.ஜ.க ஜெயிக்குமா என்று யாரோ கேட்டதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். (இதே வேலையா இருப்பாரு போல..)
இவனை விடக்கூடாதுடா என்று நினைத்தவாறே போய்க்கேட்டேன்..
"ஏங்க, நான் கிரகப்பிரவேசம் எங்க-ன்னுதானே கேட்டேன்"
"ஆமாம், இந்த மண்டபம் கட்டி, இன்னைக்குதான் கிரகப்பிரவேசம் நடத்துறாங்க. அதத்தான் கேக்குறீங்க-ன்னு நெனச்சு சொன்னேன்"

இதுல இப்படி ஒண்ணு இருக்கா.. என்று கிளம்பி, அட்ரஸ் கண்டிபிடித்த கதையை சொன்னபோது மற்றொரு கஸின் சுப்பிரமணி கேட்டான் "வீடு கட்டி பிரவேசம் பண்ணினாதானே ’கிரக’ப்பிரவேசம், அது ’மண்டப’ப் பிரவேசமல்லவா?" என்று. சரிதான்!

---------------------------------------------------------------------------

இந்தவார ‘துக்ளக்’கில் ( 28-05-2008) நம்பியாரைப் பற்றி படித்த ஒரு செய்தி ஆச்சரியமாக இருந்தது. ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் நரசிம்ம பாரதி என்பவர் நாயகனாக நடித்து 1950-ல் வெளியான ‘திகம்பரசாமியார்’ படத்தில் நம்பியார் பதினோரு வேடங்களில் நடித்துள்ளாராம்!
கிரேட்! யாருக்காவது இது குறித்த மேல்விபரங்கள் தெரியுமானால் பகிர்ந்துகொள்ளலாமே!

----------------------------------------------------------------------------

இன்று காலை கலைஞர் டி.வி.யில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது ஊருக்கு (உடுமலை) அருகேயுள்ள திருமூர்த்திமலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பதினைந்துபேர் அடித்துச் செல்லப்பட்ட நியூஸைப் போடுவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். (நான் பைக் வாங்கிச் சென்றிருந்த என் நண்பன் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்படுமுன் அங்கேதான் இருந்தான், எனக்காகத்தான் சீக்கிரம் வந்திருக்கிறான்! காணாமல் போனவர்களில், இறந்தவர்களில்-நமக்குத்தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்களோ என்ற பதைபதைப்பும் சேர்ந்துகொள்ள..அந்த நியூஸைப் பார்ப்பதில் ஆர்வமிருந்தது) அதற்கு முன் ஐ.பி.எல். போட்டிகளின் நேற்றைய ஆட்டங்கள் பற்றி செய்தி சொன்னார்கள். எரிச்சலாக இருந்தது எனக்கு. ‘இப்போ இது முக்கியமா’ என்று. இடைவெளிக்குப்பிறகுதான் திருமூர்த்திமலை நியூஸைப்போட்டார்கள்.
எத்தனையோமுறை, மேட்ச் பார்க்காமல் இரவு தூங்கி, அடுத்த நாள் காலை முதல் வேலையாக cnn-ibn, ndtv 24x7 என்று மாற்றி மாற்றி போட்டு நேற்றைய மேட்ச் என்னாச்சோ-என்று பதறியிருக்கிறேன். இப்போது அதுவே எரிச்சலாக நினைக்கிறேன்! ‘பக்கத்துவீட்டில் எரியும் தீ நம் சட்டையைப் பிடிக்கும்வரை நாம் கண்டுகொள்வதில்லை’ என்பது நிஜம்தானில்லையா?

3 comments:

ambi said...

//பக்கத்துவீட்டில் எரியும் தீ நம் சட்டையைப் பிடிக்கும்வரை நாம் கண்டுகொள்வதில்லை’ என்பது நிஜம்தானில்லையா? //

Veryyy true..

பரிசல்காரன் said...

நன்றி அம்பி.. இதை நாம் அறிவோம் என்றாலும்- நமக்கு நடக்கையில் உணர்கையில் வலிக்கிறது!

rapp said...

correct krishna. naan college tourukku monkey falls,thirumoorthy fallsnu aattam pottathu nyaabagam varudhu. enakku news padichcha odaney oru maadiri aagiduchi