Friday, May 16, 2008

வாழ்க ஜனநாயகம்!

எனது நண்பர் தங்கியிருந்த காம்பவுண்டில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்போது எழுதுகிறேன்...

சின்ன சின்ன பத்து வீடுகள் கொண்ட காம்பவுண்ட். இவர் மனைவி, குழந்தைகளுடன் வசிக்கிறார். ஒரு நாள் சனிக்கிழமை... இரவு ஒரு மணிக்கு இவரது வீட்டிற்கு எதிர் வரிசை வீடொன்றிலிருந்து சத்தம் வரவே வெளியே வந்து பார்த்திருக்கிறார். வடநாட்டிலிருந்து வந்து இங்கே பணிபுரியும் சில இளைஞர்களிருந்த அறையிலிருந்துதான் சத்தம். ‘தண்ணியப் போட்டுட்டு இவனுங்களுக்கு இதே வேலையாப்போச்சு’ என்று புலம்பியபடி வீட்டிற்குள் சென்றவர், கொஞ்ச நேரத்தில் ‘அலப்பறை’ அதிகமாகவே வெளியே வந்து
அவர்களின் அறையை எட்டிப் பார்த்திருக்கிறார். ஒருத்தன் மேல் இருவர் அமர்ந்து தாக்கிக் கொண்டிருந்ததை பார்த்த நம் நண்பருக்கு அதிர்ச்சி!

"பாதகம் செய்பவரைக் கண்டால்.." பாரதியார் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.. உடனே வீறுகொண்டு.. ‘ஏய்.. ஃபேமிலியெல்லாம் குடியிருக்கற காம்பவுண்ட்ல சும்மா இருக்க முடியாதா?’ அவ்வளவுதான்.. "அவனை அடிங்கடா.." என்று இவரை நோக்கி வருகிறார்கள்.. கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சத்தம் அதிகமாகவே-பக்கத்து தெருவில் இருக்கும் தனக்கு தெரிந்த வார்டு உறுப்பினர் ஒருத்தருக்கு அலைபேசி அழைத்து வரச்சொன்னார்.

உடனே வந்த அவரிடமும் “ஏய்.. வந்துட்டாருடா நாட்டாமை” என்று தண்ணி பார்ட்டி இளைஞர்கள் வம்பு பேசிவிட, உடனே அவர் ரோந்து வந்து கொண்டிருந்த போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். போலீஸ் வந்ததும்... கொஞ்ச நேர விசாரணைக்குப் பிறகு ‘தண்ணி’யடித்திருந்த இளைஞர்களை ஜீப்பில்
ஏற்றிவிட்டு...


"யாருப்பா கம்ப்ளைய்ண்ட் பண்ணினது?"

உடனே சுதாரித்த வார்டு உறுப்பினர் நமது நண்பரை அழைத்து..

"சொல்லுப்பா.. என்ன நடந்தது?"

நம்ம ஆளு பாரதியார் வெறியன் வேறயா... ‘ஆஹா.. சமூகத்துக்கு ஒரு நல்லது செய்யறோம்’ என்று தன் மனதில் இருந்ததெல்லாம் கொட்டுகிறார்.

"வாரா வாரம் இதே கூத்துதான் சார். வாரா வாரம் சனி, ஞாயிறுல தண்ணி போட்டுட்டு ரகளை பண்றது, கேமரா செல்ல வெச்சுட்டு வெளில உட்கார்ந்து போற வர்றவங்களை படம் புடிக்கறது வேற..-ன்னு இவங்க பண்ற அட்டூழியம் கொஞ்ச நஞ்சமில்ல சார்.."

"சரி தம்பி, நீ என்ன பண்ற.. ஹவுஸ் ஓனரையும் கூட்டிட்டு ஸ்டேஷனுக்கு வா"


மணி இரவு இரண்டு! அந்த நேரத்தில் ஹவுஸ் ஓனரை எழுப்பி, அவரிடம் திட்டு வாங்கிக்கொண்டு ஸ்டேஷனுக்கு போகிறார்.

விடிகாலை நான்கு மணிவரை நடந்த பஞ்சாயத்து.. ஆயிரம் ரூபாயில் முடிந்திருக்கிறது. (அதாவது நம்ம ஹவுஸ் ஓனரிடம் ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள்!)

உடனே நமது நண்பர்..

"நாங்க கம்ப்ளைன்ட் பண்ண வந்தோம், நாங்க ஏன் பணம் குடுக்கணும்?"

"ஆங்? என்னப்பா தம்பி என்னமோ கேக்குறாரு?" என்று போலிஸ் கேட்டதும் பதறுகிறார் ஹவுஸ் ஓனர்..

"சும்மா இருப்பா.. நான் அந்த ஏரியால நிம்மதியா இருக்க வேண்டாமா? சும்மா தூங்கிட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்து மாட்டிவிட்டுட்டு, கேள்வி வேற கேட்குற..." என்று நம் நண்பரை அதட்டி விட்டு.. போலீசிடம்..

"அவ்வளவு பணமில்ல சார் இப்போ.."

"பரவாயில்ல.. நம்ம தம்பி இருக்காரில்ல.. இவர்ட்ட நாளைக்கு குடுத்து விடுங்க.." (நம்மாளுதான்!)

வெளியே வந்த போது தான் நம்ம நண்பருக்கு தெரிந்திருக்கிறது.. யார் மீது கம்ப்ளைய்ண்ட் பண்ணினாரோ அந்த இளைஞர்கள் ஏற்கனவே பேரம் படிந்து அறைக்கு போய்விட்டார்கள்!

"என்ன கொடுமை சார் இது?" என்று ஹவுஸ் ஓனரைப் பார்த்து கேட்டவருக்கு அடுத்த கொடுமை காத்திருக்கிறது..

"இந்தா ஐநூறு ரூபா.. நாளைக்கு வந்து குடுத்துடு"-என்கிறார் ஹவுஸ் ஓனர்.

"ஏன் சார்.. பணம் வெச்சிருக்கீங்கள்ல? குடுத்திருக்க வேண்டியதுதானே?"

"மூடிட்டு வா. உனக்கு அதெல்லாம் தெரியாது.."

அடுத்த நாள்.. ஞாயிறு..

காலை ஆறு மணிக்குதான் படுத்தாலும், வேறு வழியில்லாமல் ஒன்பது மணிக்கெல்லாம் எழுந்து (அந்த ‘அலப்பறை’ இளைஞர்கள் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்க..) ஸ்டேஷன் போய்.. பல குற்றவாளிகளுக்கு நடுவே.. சங்கடப்பட்டவாறே நின்று.. பேரம் பேசி காசைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்!

திரும்பி ரூமுக்கு வந்த போது.. அந்த இளைஞர்கள் சண்டே ஸ்பெஷல் மதிய உணவுக்காக.. சுதி ஏற்றிக்கொண்டிருந்தார்களாம்!

வாழ்க ஜனநாயகம்!


3 comments:

வால்பையன் said...

இந்த பதிவுக்கு ஏன் யாரும் பின்னுட்டம் போடலை!

மோனி said...

இதோ .. நான் போட்டுட்டேன்.
..//பின்னூட்டம்//..

மோனி said...

இதோ .. நான் போட்டுட்டேன்.
..//பின்னூட்டம்//..