Wednesday, November 12, 2008

அவியல் 12.11.2008 (NO SEX!)

சமீபத்தில் ஒரு ‘காரியமா’க சுடுகாட்டுக்குப் போயிருந்தேன். அங்கே இருந்த வெட்டியானோடு பேசிக் கொண்டிருந்தபோது ஒரு விஷயம் சொன்னார். உண்மையா என்று தெரியவில்லை.

அதாவது திருமணமாகாத இளம்பெண்ணின் உடல் மார்புப் பகுதியில் எரிவதற்கு நேரமாகுமாம். ‘ஏகப்பட்ட ஆசைகளை நெஞ்சில் புதைத்து வைத்திருப்பார்கள், அதனால்’ என்றார்.

‘இதேமாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பகுதி இருக்கா?’ என்று கேட்டேன்.

“அப்படி அதிகமா கவனிச்சுப் பார்த்ததில்லைங்க. ஆனா கால் பகுதி சரியா வேகலைன்னா அது போலீஸ்காரங்க ஒடம்புன்னு அடிச்சு சொல்லலாம்” என்றார். (அதை அடிச்சு வேற சொல்லணுமா?) “ஏன்னா அவங்க நிறையபேரைக் காலாலயே ஒதைப்பாங்க சாரே. அதுனாலதான்” என்று விளக்கம் வேறு சொன்னார். நமக்கென்ன தெரியும்?

************************

சொந்தக்காரர் ஒருத்தர் வாரிசு சான்றிதழ்க்காக அரசு அலுவலகம் போயிருக்காரு. அங்க இருக்கற ஒரு லேடி க்ளார்க் சீல் வெச்சு சர்டிஃபிகேட் குடுக்கறதுக்கு முன்னாடி ‘ஒண்ணும் இல்லையா சார்’ன்னு கேட்டிருக்காங்க. இவரும் நூறு ரூபாய் குடுத்து வாங்கீட்டு வந்துட்டார்.

வீட்ல வந்து பார்த்தா தன்னோட பேரை இனிஷியல விட்டுட்டு எழுதியிருந்தாங்க. அடுத்த நாள் போய் திருத்தித் தரச் சொல்லி கேட்டப்ப ‘இன்னும் ஐம்பது ரூபா குடுங்க’ன்னு கேட்டாங்களாம்.

“என்னங்க.. நேத்துதானே நூறு ரூபாய் குடுத்தேன்”

“அது பேருக்கு. இது இனிஷியலுக்கு!”

நல்லவேளை.. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியா வசூல் பண்ணலன்னு நெனைச்சுட்டு, வேலையை முடிச்சுட்டு வந்துட்டாரு இவரு!

***********************

இந்தவார கேரளா நியூஸ்:-

கேரளாவின் ஓணம் பண்டிகையின் நான்கு நாட்களிலும் சேர்ந்து விற்பனையான பால், தயிரின் மொத்தத் தொகை: முப்பத்து ஐந்து லட்சம். ஆனால், அதே நான்கு நாட்களில் விற்பனையான சரக்கின் தொகை: ஆறு கோடி! (என்ட குருவாயூரப்பா...!)

கடந்த ஆண்டைவிட இது 75 லட்சம் அதிகமாம்!

இன்னோரு இண்ட்ரஸ்டிங் மேட்டர்: ஆறு கோடிக்கு சரக்கு விற்பனையான அந்த நான்கு நாட்கள்ல சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டினதா கைதானவங்க வெறும் நாலே பேர்தான்!

என்ன வெளையாடறீங்களா?

*********************

தங்க நகைக்கடைகள்ல தங்க நாணயம் வாங்கறப்ப அதுல அவங்கவங்க கடையோட முத்திரை, பேரை பெரிசா அடிச்சுதான் தர்றாங்க. வெறும் ப்ளெய்ன் காயினா தர்றதில்ல. அப்படி அவங்க கடை விளம்பரம் அடிச்சு தர்ற காய்ன் விலை குறைச்சா என்ன? நாம ஏன் காசு குடுத்து அவங்க கடைக்கு விளமபரம் பண்ணணும்?

யாரும் கேட்க மாட்டீங்களாப்பா?

*******************

சமீபத்துல என் ஃப்ரெண்டை ஃபோன்ல கூப்ட்டேன். அவரோட தம்பிதான் எடுத்தான்.

“ஏன்ப்பா... அண்ணன் இல்லையா? OUT OF STATIONஆ?” ன்னு கேட்டேன்.

“OUT OF STATION இல்ல. அண்ணன் INSIDE STATION” ன்னான்.


கேட்டதுக்கு ஏதோ குடும்பத் தகராறுல ஸ்டேஷன் கூப்ட்டு போனாங்களாம்.

அவ்ளோ சோகத்துலயும், தம்பிக்கு வார்த்தை விளையாட்டு!

*******************

‘கண்ணு எரியுது’ன்னு டாகடர்கிட்ட போய்ட்டு வந்தார் என் கூட வேலை செய்யற நண்பர்.

“இப்ப எப்படி இருக்கு?” ன்னு கேட்டேன்.

“வயிறு எரியுது... சாதாரண க்ளினிக் வெச்சிருந்தார் அந்த கண் டாக்டர். பெரிய ஹாஸ்பிடலே கட்டீட்டாரு”

கண்ணு வெக்காதீங்க சார்!

*************************

உங்களுக்கு ஏன் வாலியை ரொம்பப் புடிக்கும்ன்னு கேக்கறாங்க. என்னமோ தெரியல. தலைமுறைகளைத் தாண்டிய அவரோட அனுபவம், சந்தத்துக்கு தகுந்த மாதிரி வார்த்தைகளை உட்கார வைக்கற லாவகம்.

ரெண்டு சம்பவம் சொல்றேன். ரெண்டுமே ஷங்கர் சம்பந்தப்பட்டது.

ஜெண்டில்மேன் படத்துக்கு பாடல்கள் எல்லாமே ‘வாலி’ன்னு முடிவாய்டுச்சு. படத்தோட ஆரம்ப விளம்பரங்கள்ல வாலி பேர் மட்டும்தான் இருக்கும். ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ பாடல் எழுதிக் குடுக்கறாரு. ஷங்கருக்கு அந்த வரிகள் பிடிக்கல.

“என்ன சார்.. சிக்கு புக்கு சிக்கு புக்கு-ன்னு ஒரு பல்லவி? என்னமோ மாதிரி இருக்கு..” - தயக்கமா சொல்றாரு ஷங்கர். முதல் படம் அல்லவா. பயம்.

“யோவ்.. நான் சொல்றேன். போடுய்யா. நிச்சயமா ஹிட் ஆகும்’-ங்கறாரு வாலி. ஷங்கர் ஒத்துக்கல. வேற பல்லவி கேட்கறாரு. உடனே கடகடன்னு எழுதிக் குடுக்கற திறமை இருந்தாலும், ஏனோ ‘சரி.. காலைல 10 மணிக்குத்தானே ரெக்கார்டிங்? எழுதிட்டு நேரா ரெக்கார்டிங் தியேட்டர் வர்றேன்’ன்னு சொல்லீட்டுப் போயிடறாரு.

அடுத்தநாள் ரெக்கார்டிங் தியேட்டர் போனாரு. உள்ள ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பல்லவியைப் பாடி ரிகர்சல் நடந்துகிட்டிருந்தது. ஷங்கர்கிட்ட கேட்கறாரு.

“ஏ.ஆர்.ரகுமான்-லேர்ந்து எல்லாருமே இந்த வரி ரொம்ப கேட்சியா இருக்குன்னு ஃபீல் பண்றாங்க. அதுனால இதையே வெச்சுக்கலாம்ன்னு முடிவாய்டுச்சு”ங்கறாரு ஷங்கர். வாலி கோபம் வந்து பாக்கெட்ல இருந்த வேற பல்லவிகளை எடுத்துக் கிழிச்சுப் போட்டு, “நான் சொன்னப்ப ஒனக்கு இது தெரியலையா? வேற பாட்டுகளுக்கு என்கிட்ட வராதே’ன்னு போய்ட்டாராம்.

‘சிக்கு புக்கு ரயிலே’ பாட்டுதான் விசிட்டிங் கார்டா இருந்து படத்தைக் கொண்டு போய்ச் சேர்த்துச்சு!


ங்கர் ஒரு நாட்டுக்கு ஷூட்டிங்க்குப் போறாரு. வெளிநாடு. ஏர்ப்போர்ட்ல பலத்த செக்கிங். இவரை பல கேள்விகள் கேட்கறாங்க. ‘டைரக்டர்’ன்னு சொல்றாரு. அப்ப ‘காதலன்’ வந்த சமயம். ஆனா அவங்களைப் புரிய வைக்க முடியல. எதேச்சையா ஒரு தமிழ் அதிகாரி இவரை அடையாளம் கண்டுகிட்டு அந்த அதிகாரிக்கு விளக்கம் குடுக்கறாரு. ‘முக்காலா முக்காப்லா”ன்னு பாடிக் காட்டறாரு.

“ஓ! தட் ஃபிலிம் டைரக்டர்? ஓக்கே..ஓக்கே..’ன்னு சகஜமா பேசி கைகுடுத்து அனுப்பினாராம்.

முக்காலா முக்காப்லா – காதலன்ல வாலி எழுதின ஒரே பாட்டு.
எங்க எந்த வார்த்தையை வைக்கணும்ன்னு தெரிஞ்சவர் அவர்.

‘மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்’ என்று காதலுக்கு கவிதையாகவும் எழுதுவார்.

‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ ‘ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும்’ என்று கசிந்துருகுவார்.

‘தோஸ்த்து படா தோஸ்த்து.. தோஸ்த்துக்கில்லை வாஸ்த்து” என்று நட்புக்காகக் கலக்குவார்.

அந்த VERSATILITYதான் வாலி!

*****************

உனக்கு சொரணை
இருக்கிறதா
என்று கேட்டுவிட்டான்.
இருக்கிறது என்று
சொல்ல முடியவில்லை.
எல்லாவற்றையும் பார்த்து
கவிதை மட்டுமே
எழுதிக் கொண்டிருப்பதால்.
-ந.முத்து
-'இருக்கு' தொகுப்பிலிருந்து.

(முத்துக்குமார் அல்ல)

41 comments:

கோவி.கண்ணன் said...

மீ த பர்ஸ்ட் !

வாலி மேசேஜ் சூப்பர்

VIKNESHWARAN ADAKKALAM said...

மீ த செக்கண்ட்

எனக்கும் வாலி மெசேஜ் பிடிச்சிருக்கு...

VIKNESHWARAN ADAKKALAM said...

//நான் சொன்னப்ப ஒனக்கு இது தெரியலையா? //

ஹா ஹா ஹா... இப்படி தான் பலர் சொன்னா கெட்குறதில்லை.. வேறு சிலரின் கருத்தைக் கேட்டவுடன் ஆம் அது சரி என ஒப்புக் கொள்கிறோம்...

இது வாலியும் இந்த நூற்றாண்டும் புத்தகத்தில் உள்ள தகவலா?

Kumky said...

:))

Busy said...

//‘கண்ணு எரியுது’ன்னு டாகடர்கிட்ட போய்ட்டு வந்தார் என் கூட வேலை செய்யற நண்பர்.

“இப்ப எப்படி இருக்கு?” ன்னு கேட்டேன்.

“வயிறு எரியுது... சாதாரண க்ளினிக் வெச்சிருந்தார் அந்த கண் டாக்டர். பெரிய ஹாஸ்பிடலே கட்டீட்டாரு”

கண்ணு வெக்காதீங்க சார்!//

ethu pala thadava ketta jokela erukku !!!!

:)

Mahesh said...

அவியல் கலக்கல்....

வெட்டியான் சொன்னதெல்லாம் டூப்பு. வேகறது வேகாதது எல்லாம் எலும்புல இருக்கற கால்சியம் அடர்த்தியப் பொறுத்தது. இதுல சொந்த சரக்கா போலீஸுக்கு கால் வேகாதுன்னு வேற உங்க கிட்ட அளந்துருக்காரு.

வாலி ஒரு multi-facted versatile ஆளு. வாலிக்கு முன்னால மத்தவங்க காலி.

டிச்சிக்கி: நம்ம ஃப்ரெண்டு ஒருத்தர் வைரமுத்து விசிறி... வாலியை "பக்கெட்"னுதான் விளிப்பார்.

முரளிகண்ணன் said...

parisal superoo super. real aviyal.

Cable சங்கர் said...

//ஆனா கால் பகுதி சரியா வேகலைன்னா அது போலீஸ்காரங்க ஒடம்புன்னு அடிச்சு சொல்லலாம்” என்றார்//

சூப்பர்.. இது சம்மந்தமா ஓரு பதிவெழுதி உங்களையெல்லாம் தொடர அழைச்சிருக்கேன்..பரிசல்..

நாதஸ் said...

//ஆறு கோடிக்கு சரக்கு விற்பனையான அந்த நான்கு நாட்கள்ல சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டினதா கைதானவங்க வெறும் நாலே பேர்தான்//

appa maamaakkalum mabbula irunthu irupaanga :D

Anonymous said...

//இன்னோரு இண்ட்ரஸ்டிங் மேட்டர்: ஆறு கோடிக்கு சரக்கு விற்பனையான அந்த நான்கு நாட்கள்ல சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டினதா கைதானவங்க வெறும் நாலே பேர்தான்//

ஒருவேளை எல்லா போலீஸும் அன்னைக்கு சரக்கடிச்சுட்டு வேலைக்கு வராம போயிருப்பாங்களோ!

தமிழன்-கறுப்பி... said...

காதலன் படத்தின் டைட்டில் பார்த்தால் பாடல்களில் -
வாலியின் பெயருக்கு பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் முக்காலா முக்காபலா என்று போட்டிருப்பார்கள்

சமீபத்தில் அவரை மிகவும் ரசித்தது முன்பே வா அன்பே வா... பாடல்தான்...

குசும்பன் said...

//நாம ஏன் காசு குடுத்து அவங்க கடைக்கு விளமபரம் பண்ணணும்?

யாரும் கேட்க மாட்டீங்களாப்பா?//

அதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்யும் உங்களை போன்ற தொழிலதிபர்கள் கேட்டுப்பாங்க:)
எங்களுக்கு எதுக்கு அதெல்லாம்!!!

Indian said...

//கேரளாவின் ஓணம் பண்டிகையின் நான்கு நாட்களிலும் சேர்ந்து விற்பனையான பால், தயிரின் மொத்தத் தொகை: முப்பத்து ஐந்து லட்சம். ஆனால், அதே நான்கு நாட்களில் விற்பனையான சரக்கின் தொகை: ஆறு கோடி! (என்ட குருவாயூரப்பா...!)//

நேத்து வொயாஜஸ் சேனல் பாத்திட்டு இருந்தப்போ கேரளாவைக் காட்டினாங்க. அங்கே ஒரு கள்ளுக் கடையில் நம்ம தொகுப்பாளினி காட்டினப்போ நாலஞ்சு பெருசுங்க கல்ப்பா அடிச்சுட்டு இருந்தாங்க. ஒரு ஆளு கூட இருந்த ஒரு 3 வயசுப் பாப்பாவுக்கும் கள்ள அப்படியே ஊட்டி/ஊத்தி விட்டாரு. இது எப்படி இருக்கு? அப்படியே தொகுப்பாளினி கள்ள டேஸ்ட் பாத்திட்டு புளிப்பா இருக்குன்ணிட்டு கமெண்ட் குடுத்தாங்க.

narsim said...

ஆஜர் சார்..

அவியல் நல்ல சுவை..அந்த நகைச்சுவையும் சூப்பர்!

நர்சிம்

கார்க்கிபவா said...

கோச்சுக்காதீங்க சகா.. அவியல்னு நீங்க எழுதற எல்லாமே நல்லா இருக்கு.. நடுவுல் பேரு மாத்தி கொஞ்சம் கடுப்பேத்திட்டிங்க.. இனிமேல் வாராவாரம் வெள்ளிக்க்ழமை அவியல் தவறாமல் வரணும்.. (இல்லைனா எதோ ஒரு கிழமை).. ஏற்பாடு செய்யுங்க..

அது எப்படி பேர மாத்தினா உள்ள‌ இருக்கிற மேட்ட்ர் கூட மாறுமானு லாஜிக் எல்லாம் கேட்காதீங்க. வேற பேர்ல எழுதியவை எனக்கு பிடிக்கவில்லை.

கார்க்கிபவா said...

//
அதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்யும் உங்களை போன்ற தொழிலதிபர்கள் கேட்டுப்பாங்க:)
எங்களுக்கு எதுக்கு அதெல்லாம்!!!//

அது சரி.. உங்க முதுகலயும் அந்த மாதிரி முத்திரை இருக்கா தல?

Athisha said...

பின்னூட்ட கடமைத்தனம்

எட்வின் said...

கவிஞர் வாலி பற்றிய தகவல் அருமை.
கேரளத்திலே குடும்பமாக உக்காந்து தான் கூத்தே நடக்கும்...அவங்களுக்கு இது சாதாரணம்.

வால்பையன் said...

உங்கள் ப்ளாக் ஒப்பன் ஆக நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது.

வால்பையன் said...

கோல்டு காயின்

பொதுவாக எந்த ஆபரணமாக இருந்தாலும் அதன் தரத்தில் கடைக்கு கடை மாறுபடுகிறது. 22 காரட் என்று அழைக்கப்படுவது 91.6 பியூரிட்டி தங்கம் இருக்க வேண்டும். ஆனால் நிறைய கடைகள் பேருக்கு தான் 22 காரட் என்று சொல்லி விற்க்கிறது. ஆனால் தரத்தில் 88 அல்லது 85 பியூரிட்டி இருக்கும்.

ஒரு கடையில் வாங்கிய ஆபரணத்தை வேறு கடையில் மாற்றவோ விற்க்கவோ செல்லும் பொழுது அதன் மதிப்பை குறைத்து தான் வாங்குவார்கள். ஆனால் அதே கடையில் கொடுத்தால் அப்படி செய்யமுடியாது. அதற்க்காக தான் அந்த சீல்.

Indian said...

//தங்க நகைக்கடைகள்ல தங்க நாணயம் வாங்கறப்ப அதுல அவங்கவங்க கடையோட முத்திரை, பேரை பெரிசா அடிச்சுதான் தர்றாங்க. வெறும் ப்ளெய்ன் காயினா தர்றதில்ல. அப்படி அவங்க கடை விளம்பரம் அடிச்சு தர்ற காய்ன் விலை குறைச்சா என்ன? நாம ஏன் காசு குடுத்து அவங்க கடைக்கு விளமபரம் பண்ணணும்?

யாரும் கேட்க மாட்டீங்களாப்பா? //

Look at this...

Pure 24 carat gold (.9999 purity) coins like Canadian Maple leaf or American Eagle can be sold at the day's price anywhere in the world. They guarantee 1 ounce of pure gold in the coin. These are minted by their national treasury. Hence there is the sense of trust in it. Similarly Indian-govt/RBI may think of issuing minted gold coins.

Bee'morgan said...

இந்த அவியலும் கலக்கல் பரிசல்.. :)

பல பேர் சொல்லிட்டுப்போயிட்டாங்க.. என் வகைக்கு நானும் ஒரு தடவை.. எனக்கும் அந்த வாலி துணுக்கு மிகவும் பிடித்தது.

நேரமிருந்தா இந்த பதிவைப்பார்க்கவும்..
http://beemorgan.blogspot.com/2007/02/blog-post_15.html

Bee'morgan said...

அந்த கடைசி கவிதையும் அருமை..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உடனே கடகடன்னு எழுதிக் குடுக்கற திறமை இருந்தாலும், ஏனோ ‘சரி.. காலைல 10 மணிக்குத்தானே ரெக்கார்டிங்?/////////////


mgr என்ன சொன்னாலும் அதை பாட்ட மாத்தி குடுப்பாராமே........

SUREஷ்(பழனியிலிருந்து) said...

‘ஏகப்பட்ட ஆசைகளை நெஞ்சில் புதைத்து வைத்திருப்பார்கள், அதனால்’ என்றார்/////////



???????????

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வெட்டியானோடு பேசிக் கொண்டிருந்தபோது ////////////



நிறெயாஆஆஆ யோசிக்கறார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அப்படி அவங்க கடை விளம்பரம் அடிச்சு தர்ற காய்ன் விலை குறைச்சா என்ன/////////



பில் புக்ல கூட அவங்க பேர அடிக்கராங்க...... அதுக்கும் விலைய குறைக்கச் சொல்லனும்

Ramesh said...

parisalkaaran.blogspot.com opens fast that the own house!

the post is சூப்பர்... (where is my comment that was put at 8 AM?)

விலெகா said...

வாலி பற்றிய தகவல்கள் அருமை !

anujanya said...

கே.கே.

அவியல் - டெண்டுல்கர் நூறு போல, எதிர்பார்ப்புடன் பார்ப்பவர்களை ஏமாற்றாத சுவாரஸ்யம்.

//கண்ணு வெக்காதீங்க சார்!// மற்றும்
//(முத்துக்குமார் அல்ல)// அக் மார்க் பரிசல்.

ம்ம். நடக்கட்டும்.

அனுஜன்யா

புருனோ Bruno said...

//இன்னோரு இண்ட்ரஸ்டிங் மேட்டர்: ஆறு கோடிக்கு சரக்கு விற்பனையான அந்த நான்கு நாட்கள்ல சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டினதா கைதானவங்க வெறும் நாலே பேர்தான்!

என்ன வெளையாடறீங்களா?//

ஒரு வேளை அனைவரும் வீட்டில் இருந்தே மது அருந்தியிருக்கலாமல்லவா

விபத்துகள் அதிகரித்தால் தான் கவலைப்பட வேண்டும்.

கேரளாவில் வீட்டில் இருந்து மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்

பரிசல்காரன் said...

கருத்து சொல்ல வந்தமைக்கு நன்றி!
அப்பப்ப வந்துட்டு போங்க!//

ரிப்பீட்டேய்!

(வேலைப் பளு காரணமாக பகல் நேரங்களில் ப்ணையம் பக்கமே வர முடிவதில்லை. இரவு பின்னூட்டங்களைப் பார்த்து, பிறகு பதிவெழுதப் போகிறேன். அதனால் விரிவாக எல்லோர்ர்கும் பின்னூட்டமாறு செய்ய முடிவதில்லை!)

கோவிஜி, விக்கித்தம்பி, கும்க்கி, பிஸி, மகேஷ், முரளிகண்ணன், கேபிள் சங்கர், நாதாஸ், சின்ன அம்மணி, தமிழன், குசும்பன், இந்தியன், நர்சிம், கார்க்கி, அதிஷா, அர்னால்ட் எட்வின், வால்பைஅன், பீமோர்கன், சுரேஷ், ரமேஷ், விலெகா, அனுஜன்யாண்ணா மற்றும் மருத்துவர் புரூனோ ஆகியோர்க்கு என் நன்றிகளும், அன்பும்!

அருண் said...

//அதாவது திருமணமாகாத இளம்பெண்ணின் உடல் மார்புப் பகுதியில் எரிவதற்கு நேரமாகுமாம். ‘ஏகப்பட்ட ஆசைகளை நெஞ்சில் புதைத்து வைத்திருப்பார்கள், அதனால்’ என்றார்.//

பரிசக்கார அண்ணே, இது மின்சார சுடுகாட்டுக்கும் பொருந்துமா?

Anonymous said...

வெட்டியான் சும்மா உங்க கிட்ட நூல் விட்டுப் பார்த்திருக்கான். ஏதோ, திருமணமான பெண்களுக்கு எல்லா ஆசையும் தீர்ந்துடறமாதிரி.

//ஆறு கோடிக்கு சரக்கு விற்பனையான அந்த நான்கு நாட்கள்ல சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டினதா கைதானவங்க வெறும் நாலே பேர்தான//

கிருஷ்ணா, மதுவிலக்கு அமலில் இருக்கும் போது நம்மாளுக கேரளாவுக்குப் போய் குடித்துவிட்டு வருவார்கள். கோவையிலிருப்பவர்கள் வாளையாருக்கும், பொள்ளாச்சியிலிருப்பவர்கள் மீனாட்சிபுரத்திற்கும்.

மலையாளிகள் ஒரு மொடாக் கள்ளையும் குடித்துவிட்டு கடப்பாரைஅ முழுங்கியவன் போல் அமைதியாக இருப்பார்கள், நம்மவர் ஒரு மக்கு குடித்துவிட்டு இல்லாத அலமபல் பண்ணுவார்கள். அங்கு குடிப்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்பதால் திருட்டுத்தனமாக, ஏதோ காஞ்ச மாடு கம்பில் விழுந்த கதையாகக் குடிப்பதெல்லாம் இல்லை.

நம்மாளு போதை பாதி நடிப்பு பாதின்னு ஷோ காட்டியே அழியுறான்.

வாலி ஒரு சுவையான கலவை. பட்டிமன்றங்களில் பாட்டுக்குப் பொருளுரைப்பார், திரைத்துறையில் பொருளுக்குப் பாட்டுரைப்பார்.

அருண் said...

//சமீபத்தில் ஒரு ‘காரியமா’க சுடுகாட்டுக்குப் போயிருந்தேன்.//

எந்த சுடுகாடு? பாலத்துகிட்ட இருக்குற சுடுகாடு மின்மயானம் அல்லவா?

பரிசல்காரன் said...

@ வேலண்ணாச்சி

சரியாச் சொன்னீங்கண்ணா.

@ அருண்

இல்லைங்க. ஊர்ல. (உங்களுக்குத் திருப்பூர் ரொம்பப் பரிச்சயமோ - இல்ல - நீங்க திருப்பூரா? ப்ரொஃபைல்ல லொகேஷனே காணோமே..

SurveySan said...

:) சிக்கு புக்கு ரயிலே பாடிதான், சுரேஷ் பீட்டரு ரொம்ப அலம்பு பண்ணாராம். தான் பாடியதால்தான் பாட்டு ஹிட்டாச்சுன்னு.

வாயால் கெட்ட தவளை ஆயிட்டாரு.

Thamira said...

வழக்கம் போல கலக்கல்.!

மங்களூர் சிவா said...

/
அதாவது திருமணமாகாத இளம்பெண்ணின் உடல் மார்புப் பகுதியில் எரிவதற்கு நேரமாகுமாம். ‘ஏகப்பட்ட ஆசைகளை நெஞ்சில் புதைத்து வைத்திருப்பார்கள், அதனால்’ என்றார்.
/

வேண்டாம் நான் எதும் சொல்லலை
:)))))

மங்களூர் சிவா said...

வாலி பற்றிய தகவல் அருமை.

அத்திரி said...

எல்லாமே நல்லா கலந்த அமிர்த அவியல்