“எஸ் ஸார்”
“அஷோக்.. ஆர் யூ இன் ரவுண்ட்ஸ் நவ்?”
“எஸ் ஸார். இப்போ குமரன் ரோட்ல இருக்கேன்”
”எ பேட் ந்யூஸ் ஃபார் யூ. பார்க்ல ஒரு டெட்பாடி. உடனே போய்ப் பாருங்க”
”எஸ் ஸார்” - சொல்லிவிட்டு சடாரென தனது ஜீப்பை வலதுபுறம் திருப்பி பார்க்கை நோக்கிச் செலுத்தினான் அஷோக்ராஜா.
இங்கே அஷோக்ராஜாவைப் பற்றி சில குறிப்புகள்:
முப்பதைத் தொடாத வயது. இளம் வயதிலேயே தனது திறமை, உழைப்பின் மூலம் சப் இன்ஸ்பெக்டரானவன். பல கேஸ்களில் மூத்த அதிகாரிகள் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும்போது கூப்பிடு அஷோக்கை’ என்று சலிப்போடு அழைக்கப்படுவான்.
சலிப்போடு?
இவன் மூக்கை நுழைத்தால் வேறு யார்பேச்சையும் கேட்க மாட்டான். சீனியர் அதிகாரி, அரசியல்வாதி என்று எத்தனை தலையீடுகள் வந்தாலும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் குற்றவாளியை நெருங்கும் வரை பாய்ச்சல்தான்.
அறிமுகம் போதும். இப்போது அஷோக்ராஜா பார்க்கை நெருங்கியிருந்தான்.
பார்க்கில் கூடியிருந்த சொற்ப கூட்டத்தை விலக்கி அந்த பிணத்தின் அருகே சென்றான்..

ஆண். வெற்றுடம்பு. பொட்டுத்துணி இருக்கவில்லை. குப்புற விழுந்த நிலையில் ஒரு கால் முற்றிலுமாக மடங்கியிருந்தது. முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது. உடம்பைச் சுற்றி அங்கங்கே ரத்தக் கோலம். ஈக்கள் தங்கள் சொந்தபந்தக்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, அவனுடம்பில் பெரிய மாநாடே நடத்திக் கொண்டிருந்தன.
சுற்று முற்றும் நோட்டமிட்டான் அஷோக்ராஜா. இவன் திரும்பியதும் கூட்டம் ஓரிரு அடிகள் பின்வாங்கியது.
உடலில் ஒவ்வொரு இன்ச்சிலும் கண்களை ஓட்டினான். ஒன்றுமே பிடிபடவில்லை. ஒரு காயமும் இருப்பதாகத் தெரியவில்லை. காதிலிருந்தும், மூக்கிலிருந்தும் ரத்தம் வந்ததாகத் தெரியவில்லை. ரத்தம் எங்கிருந்து வழிந்திருக்கிறது?
அஷோக்ராஜா பார்த்துக் கொண்டே இருந்த போதே ஜீப்பிலிருந்து ஃபாரன்ஸிக் குழுவும், மோப்பநாயும் வந்து கொண்டிருந்தது.
“என்ன மிஸ்டர் அஷோக்ராஜா? அதே சீரியல் டைப்பா?” ஃபாரன்ஸிக் எக்ஸ்பெர்ட் குணா கேட்டதற்கு மௌனமாய் தலையசைத்தபடி சொன்னான். “போங்க குணா.. போய்ப் பாருங்க. இதோட மூணாவது கொலை. சிட்டில ஒரே வாரத்துல தொடர்ந்து மூணு டெட்பாடி கிடைச்சிருக்கு, என்னத்த ****றீங்கன்னு கேள்வி வரும். நீங்க பாருங்க. ரத்தம் எங்கிருந்து வழிஞ்சிருக்குன்னே தெரியலன்னு டாக்டர் ரிப்போர்ட் தரப்போறார். நீங்க ஒரு தடயமும் சிக்கலன்னு சொல்லப்போறீங்க. முந்தின ரெண்டு கொலைலயும் அதானே சொன்னீங்க?”
கொஞ்ச நேரத்தில் உடம்பைப் புரட்டிப் போட்டுவிட்டு பிதுக்கிய உதடுகளுடன் குணா வர, தயாராய் இருந்த ஆம்புலன்ஸில் இறந்தவன் ஏற்றப்பட்டான்.
“மற்ற இரண்டு பேருக்கும், இவனுக்கும் ஒரே வித்தியாசம்தான் அஷோக். இவன் வித்தியாசமான டிசைன்ல வலது கை புஜத்துல டாட்டூ குத்திருக்கான்”
உடனே சுவாரஸ்யமான அஷோக், இறந்தவனின் உடல் கிடத்தப்பட்ட ஆம்புலன்ஸில் ஏறினான்.
கன்னாபின்னாவென ஏதோ டிசைன் டாட்டூவாக உருமாறியிருந்தது.
சற்று நேரம் அதைப் பார்வையிட்டவன், சலித்தபடி கீழிறங்கப் போன விநாடி, திடீரென ஒளிர்ந்தான்.
“குணா.. இங்க வாங்க..”
“என்ன அஷோக்?”
“அந்த டாட்டூவை இந்த கோணத்திலிருந்து பாருங்க.. ஏதாவது எழுத்துகள் தெரியுதா?”
சில விநாடிகளில் “வாவ்.. எஸ் அஷோக்”
“ஒவ்வொரு எழுத்தா சொல்லுங்க..”
குணா சொன்னார்:
Y - A - M - I - N - I
*******************************************
“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. நீங்கள் சொல்வது நம்பவே முடியாதது. இது எத்தனை சதவிகிதம் சாத்தியமானது?”
பதினைந்து விஞ்ஞானிகள் அமர்ந்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட அறையில் நடுநாயகமாய் அமர்ந்திருந்த விஞ்ஞானி வசந்த் ஆதிமூலத்தை நோக்கி சற்றே உயர்த்த குரலில் கேட்டார் ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த விஞ்ஞானி இம்மானுவேல்.
வசந்த் ஆதிமூலம் தொண்டையை செருமிக் கொண்டார். தெளிவான ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.
“என் அன்பு நண்பர்களே... மனித உடலில் மூளை என்பது மிகச் சிக்கலான ஆச்சர்யம். நமது எல்லா செயல்பாடுகளையும் தீர்மானிப்பதும், வழிநடத்துவதும் மூளைதான். ஒரு குழந்தை குழந்தையாய் இருக்கும் வரை உடலுறுப்புகள் தவிர வேறு ஆண் பெண் வேறுபாடுகள் தெரிவதில்லை. வயதுக்கு வந்த பின் ஹைப்போதாலமஸின் செயல்பாட்டால் ஆண் ஒரு மாதிரியும், பெண்கள் ஒரு மாதிரியும் நடத்தையில் வேறுபடுகிறார்கள். அவர்கள் மூளையின் வலது, இடது பாகங்களைப் பயன்படுத்துவதிலும் வித்தியாசம் உள்ளது. ஆண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த பெண்கள் ஆண்களுக்குரிய அம்சங்களோடும், பெண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த ஆண்கள் பெண்களுக்குரிய அம்சங்களோடுமிருப்பார்கள். உதாரணத்துக்கு பெண்களில் மூளையில் உள்ள ஆண்ட்ரோஜன், எக்ஸ்ரோஜன் சமாச்சாரங்கள் பெண்களிடமுள்ள மானோமைன் ஆக்ஸிடேலின் அளவைக் குறைப்பதால் அவர்கள் ஆண்களை விட அதிக பயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி பெண்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் மூளையின் மடிப்புகளில் சுரக்கும் திரவ மாறுபாடுகளே காரணம், அதே போலத்தான் ஆண்களுக்கும்..”
இடைமறித்தார் இமானுவேல்..
“ஓகே வசந்த் ஆதிமூலம். நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஆணோ பெண்ணோ நினைத்த மாத்திரத்தில் தங்களை மாற்றிக் கொள்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது?”
“முதலில் என் கண்டுபிடிப்பைக் கூறிவிடுகிறேன். நானும் இதோ என்னுடன் அமர்ந்துள்ள இளம் விஞ்ஞானிகள் குழுவும் பல வருடம் ஆராய்ந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளோம். இதில் இரண்டு வெவ்வேறு மருந்துகள் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் உட்கொண்ட ஆறு மணிநேரத்தில் ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாற்றமடையலாம். இரண்டுக்கும் வெவ்வேறு மருந்து வகைகள் உள்ளது. இந்தப் பேக்கில் உள்ளதில் ஒன்று உடல்ரீதியாக உங்களை ஆண் தன்மைக்கோ, பெண் தன்மைக்கோ மாற்றும். மற்றொன்று இன்ஜெக்ஷன். ஒரு பெண் அதைப் போட்டுக் கொண்டால் மூளை ஆண்களுக்கான ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து, அவளை ஆணாகவே மாற்றிவிடும்”
“அதிலிருந்து அவள் மீண்டுவர நினைத்தால்?”
“மாற்று மருந்தான பெண்களுக்கான மருந்தை உட்கொண்டால் போதும்”
“உடல் தன்மையில்...”
“உடல் தன்மையில் மார்பகத்தை பெரிதாக்கவோ, இல்லாமல் சுருங்கச் செய்யவோ எனது மருந்து உதவும். ஆனால் ஜன்னேந்திரியத்தை மாற்றும் சக்தி என்னிடமில்லை. இப்படி பெண், ஆணாக மாறி அல்லது ஆண் பெண்ணாக மாறி நாட்டின் பாதுகாப்புக்காக உளவு பார்ப்பது உட்பட பல வேலைகளுக்கு பயன்படுத்த எண்ணி இதை சமர்ப்பித்தேன். எங்கள் அரசு இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க உலகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான உங்களிடம் இதை நிரூபிக்கச் சொல்லிவிட்டது”
“எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்?”
“எங்கள் குழுவிலிருந்தே யாராவது ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இதைக் கொடுத்து ஒரு மாதத்திற்கு நம்மோடு இருக்கச் செய்வேன். என்னென்ன பயன் என்பதை அப்போது உங்களுக்கு உணர்த்துகிறேன்.”
“யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?”
“எங்கள் குழுவின் ஏழு பேருமே இதற்கு சம்மதித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒருவர்தான் என்பதால் உங்கள் முன்னிலையிலேயே யாராவது ஒருவரை தேர்வு செய்யப் போகிறேன்...”
சற்று இடைவெளி விட்ட வசந்த் ஆதிமூலம் தனது குழுவின் ஏழு பேரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, தீர்க்கமான குரலில் சொன்னார்:
“முடிவு செய்து விட்டேன் மிஸ்டர். இமானுவேல்”
“யார் அவர்?”
“மிஸ். யாமினி”
****************************************
வீட்டின் கதவு தட்டப்பட, கணினியில் அமர்ந்து டைப்படித்துக் கொண்டிருந்த நான் எழுந்தேன்.
“பரிசல்காரன்....” வந்தவர் ஒருவித சந்தேகத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டார்.
“நான்தான்.. உள்ள வாங்க” கதவை முழுவதுமாய்த் திறந்தேன்.
“வணக்கம். ஸாரி பரிசல். ப்ளாக்ல உங்க ஃபோட்டோஸ் பார்த்திருக்கேன். டக்னு அடையாளம் தெரியல. என் பேரு கோபிநாத். பெங்களூர்ல இருக்கேன். உங்க பதிவுகளை ரெகுலரா படிக்கறதுண்டு. ஒரு வேலை விஷயமா கோவை வந்தேன். போற வழில உங்களைப் பார்த்துட்டுப் போலாமேன்னு வந்தேன்..” சொல்லியபடியே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பேனாவைப் பரிசாய் அளித்தார்.
“இது நாலாயிரம் ரூபா பேனா பரிசல். உங்களுக்குத்தான் பேனாக்கள்னா ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்..”
பிரமித்தபடி அதைப் பார்த்த நான் “நன்றிங்க கோபி” என்றேன்.
“பரவால்லைங்க...”
“ஸாரி.. வீட்ல வேற யாரும் இல்ல. நான் சுமாரா காஃபி போடுவேன். இருங்க” என்றபடி எழப்போனவனை கையமர்த்தினார்.
“அதெல்லாம் வேணாம்” என்றவரின் பார்வை உயிர்த்திருந்த கணினித்திரைக்குப் போனது.. “ஏதோ எழுதிகிட்டிருக்கீங்க போல”
“ஆமா கோபி. ஒரு மினி தொடர் எழுதின நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் என்னை அடுத்த தொடர் எழுதச் சொல்லிருந்தார். அவருக்காக ஆரம்பிச்ச தொடர் இது..”
“ஓ.. அவர் மினி.. நீங்க யாமினியா?”
மையமாய் சிரித்தேன்.. “ஆனா இந்த யாமினி தலைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்டது..” நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்கள் கணினியை முழுவதும் ஆக்ரமிக்கத் தொடங்கியது.
நான் காபி போட்டு வரலாம் என்று உள்ளே சென்ற சில நிமிடங்களில் என் பின்னால் வந்து ‘பரிசல்.. செமயான ஆரம்பம். ப்ளீஸ்... எனக்காக அடுத்த அத்தியாத்தைச் சொல்லுங்களேன்..” என்றார்.
“மன்னிக்கணும் கோபிநாத். அது எனக்கே தெரியாது... அடுத்த அத்தியாயம் வரும்போது படிச்சுக்கோங்க”
“எப்ப வரும்?” காஃபியை ருசித்துக் கொண்டே கேட்டார்.
“நாளைக்கு அல்லது திங்கள் வரலாம்”
ஒருவித ஏமாற்றத்தோடு அவர் கிளம்பிப்போக, அடுத்த அத்தியாயத்தை யோசிக்க ஆரம்பித்தேன் நான்.
.
நான்கு அல்லது ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் முதல் பகுதி இது.
.