Friday, September 3, 2010

மிஸ்.யாமினி - Part 1

‘இன்ஸ்பெக்டர் காலிங்’ –ன அலைபேசித் திரை ஒளிர ஜீப்பை ஓரமாய் நிறுத்திவிட்டு பச்சை நிற பட்டனுக்கு உயிர்கொடுத்தான் அஷோக்ராஜா. சிட்டியின் துடிப்பான சப் இன்ஸ்பெக்டர்.

“எஸ் ஸார்”

“அஷோக்.. ஆர் யூ இன் ரவுண்ட்ஸ் நவ்?”

“எஸ் ஸார். இப்போ குமரன் ரோட்ல இருக்கேன்”

”எ பேட் ந்யூஸ் ஃபார் யூ. பார்க்ல ஒரு டெட்பாடி. உடனே போய்ப் பாருங்க”

”எஸ் ஸார்” - சொல்லிவிட்டு சடாரென தனது ஜீப்பை வலதுபுறம் திருப்பி பார்க்கை நோக்கிச் செலுத்தினான் அஷோக்ராஜா.

இங்கே அஷோக்ராஜாவைப் பற்றி சில குறிப்புகள்:

முப்பதைத் தொடாத வயது. இளம் வயதிலேயே தனது திறமை, உழைப்பின் மூலம் சப் இன்ஸ்பெக்டரானவன். பல கேஸ்களில் மூத்த அதிகாரிகள் மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும்போது கூப்பிடு அஷோக்கை’ என்று சலிப்போடு அழைக்கப்படுவான்.

சலிப்போடு?

இவன் மூக்கை நுழைத்தால் வேறு யார்பேச்சையும் கேட்க மாட்டான். சீனியர் அதிகாரி, அரசியல்வாதி என்று எத்தனை தலையீடுகள் வந்தாலும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் குற்றவாளியை நெருங்கும் வரை பாய்ச்சல்தான்.
அறிமுகம் போதும். இப்போது அஷோக்ராஜா பார்க்கை நெருங்கியிருந்தான்.

பார்க்கில் கூடியிருந்த சொற்ப கூட்டத்தை விலக்கி அந்த பிணத்தின் அருகே சென்றான்..





ஆண். வெற்றுடம்பு. பொட்டுத்துணி இருக்கவில்லை. குப்புற விழுந்த நிலையில் ஒரு கால் முற்றிலுமாக மடங்கியிருந்தது. முகம் முழுவதும் சிதைக்கப்பட்டிருந்தது. உடம்பைச் சுற்றி அங்கங்கே ரத்தக் கோலம். ஈக்கள் தங்கள் சொந்தபந்தக்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, அவனுடம்பில் பெரிய மாநாடே நடத்திக் கொண்டிருந்தன.

சுற்று முற்றும் நோட்டமிட்டான் அஷோக்ராஜா. இவன் திரும்பியதும் கூட்டம் ஓரிரு அடிகள் பின்வாங்கியது.

உடலில் ஒவ்வொரு இன்ச்சிலும் கண்களை ஓட்டினான். ஒன்றுமே பிடிபடவில்லை. ஒரு காயமும் இருப்பதாகத் தெரியவில்லை. காதிலிருந்தும், மூக்கிலிருந்தும் ரத்தம் வந்ததாகத் தெரியவில்லை. ரத்தம் எங்கிருந்து வழிந்திருக்கிறது?

அஷோக்ராஜா பார்த்துக் கொண்டே இருந்த போதே ஜீப்பிலிருந்து ஃபாரன்ஸிக் குழுவும், மோப்பநாயும் வந்து கொண்டிருந்தது.

“என்ன மிஸ்டர் அஷோக்ராஜா? அதே சீரியல் டைப்பா?” ஃபாரன்ஸிக் எக்ஸ்பெர்ட் குணா கேட்டதற்கு மௌனமாய் தலையசைத்தபடி சொன்னான். “போங்க குணா.. போய்ப் பாருங்க. இதோட மூணாவது கொலை. சிட்டில ஒரே வாரத்துல தொடர்ந்து மூணு டெட்பாடி கிடைச்சிருக்கு, என்னத்த ****றீங்கன்னு கேள்வி வரும். நீங்க பாருங்க. ரத்தம் எங்கிருந்து வழிஞ்சிருக்குன்னே தெரியலன்னு டாக்டர் ரிப்போர்ட் தரப்போறார். நீங்க ஒரு தடயமும் சிக்கலன்னு சொல்லப்போறீங்க. முந்தின ரெண்டு கொலைலயும் அதானே சொன்னீங்க?”

கொஞ்ச நேரத்தில் உடம்பைப் புரட்டிப் போட்டுவிட்டு பிதுக்கிய உதடுகளுடன் குணா வர, தயாராய் இருந்த ஆம்புலன்ஸில் இறந்தவன் ஏற்றப்பட்டான்.

“மற்ற இரண்டு பேருக்கும், இவனுக்கும் ஒரே வித்தியாசம்தான் அஷோக். இவன் வித்தியாசமான டிசைன்ல வலது கை புஜத்துல டாட்டூ குத்திருக்கான்”

உடனே சுவாரஸ்யமான அஷோக், இறந்தவனின் உடல் கிடத்தப்பட்ட ஆம்புலன்ஸில் ஏறினான்.

கன்னாபின்னாவென ஏதோ டிசைன் டாட்டூவாக உருமாறியிருந்தது.

சற்று நேரம் அதைப் பார்வையிட்டவன், சலித்தபடி கீழிறங்கப் போன விநாடி, திடீரென ஒளிர்ந்தான்.

“குணா.. இங்க வாங்க..”

“என்ன அஷோக்?”

“அந்த டாட்டூவை இந்த கோணத்திலிருந்து பாருங்க.. ஏதாவது எழுத்துகள் தெரியுதா?”

சில விநாடிகளில் “வாவ்.. எஸ் அஷோக்”

“ஒவ்வொரு எழுத்தா சொல்லுங்க..”

குணா சொன்னார்:

Y - A - M - I - N - I


*******************************************

“மிஸ்டர் வசந்த் ஆதிமூலம்.. நீங்கள் சொல்வது நம்பவே முடியாதது. இது எத்தனை சதவிகிதம் சாத்தியமானது?”

பதினைந்து விஞ்ஞானிகள் அமர்ந்திருந்த அந்த குளிரூட்டப்பட்ட அறையில் நடுநாயகமாய் அமர்ந்திருந்த விஞ்ஞானி வசந்த் ஆதிமூலத்தை நோக்கி சற்றே உயர்த்த குரலில் கேட்டார் ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த விஞ்ஞானி இம்மானுவேல்.

வசந்த் ஆதிமூலம் தொண்டையை செருமிக் கொண்டார். தெளிவான ஆங்கிலத்தில் பேசத் துவங்கினார்.

“என் அன்பு நண்பர்களே... மனித உடலில் மூளை என்பது மிகச் சிக்கலான ஆச்சர்யம். நமது எல்லா செயல்பாடுகளையும் தீர்மானிப்பதும், வழிநடத்துவதும் மூளைதான். ஒரு குழந்தை குழந்தையாய் இருக்கும் வரை உடலுறுப்புகள் தவிர வேறு ஆண் பெண் வேறுபாடுகள் தெரிவதில்லை. வயதுக்கு வந்த பின் ஹைப்போதாலமஸின் செயல்பாட்டால் ஆண் ஒரு மாதிரியும், பெண்கள் ஒரு மாதிரியும் நடத்தையில் வேறுபடுகிறார்கள். அவர்கள் மூளையின் வலது, இடது பாகங்களைப் பயன்படுத்துவதிலும் வித்தியாசம் உள்ளது. ஆண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த பெண்கள் ஆண்களுக்குரிய அம்சங்களோடும், பெண் ஹார்மோன் அதிகம் கொண்டு வளர்ந்த ஆண்கள் பெண்களுக்குரிய அம்சங்களோடுமிருப்பார்கள். உதாரணத்துக்கு பெண்களில் மூளையில் உள்ள ஆண்ட்ரோஜன், எக்ஸ்ரோஜன் சமாச்சாரங்கள் பெண்களிடமுள்ள மானோமைன் ஆக்ஸிடேலின் அளவைக் குறைப்பதால் அவர்கள் ஆண்களை விட அதிக பயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இப்படி பெண்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் மூளையின் மடிப்புகளில் சுரக்கும் திரவ மாறுபாடுகளே காரணம், அதே போலத்தான் ஆண்களுக்கும்..”

இடைமறித்தார் இமானுவேல்..

“ஓகே வசந்த் ஆதிமூலம். நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஆணோ பெண்ணோ நினைத்த மாத்திரத்தில் தங்களை மாற்றிக் கொள்வதால் என்ன பயன் இருக்கப் போகிறது?”

“முதலில் என் கண்டுபிடிப்பைக் கூறிவிடுகிறேன். நானும் இதோ என்னுடன் அமர்ந்துள்ள இளம் விஞ்ஞானிகள் குழுவும் பல வருடம் ஆராய்ந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளோம். இதில் இரண்டு வெவ்வேறு மருந்துகள் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் உட்கொண்ட ஆறு மணிநேரத்தில் ஆண் பெண்ணாகவோ, பெண் ஆணாகவோ மாற்றமடையலாம். இரண்டுக்கும் வெவ்வேறு மருந்து வகைகள் உள்ளது. இந்தப் பேக்கில் உள்ளதில் ஒன்று உடல்ரீதியாக உங்களை ஆண் தன்மைக்கோ, பெண் தன்மைக்கோ மாற்றும். மற்றொன்று இன்ஜெக்‌ஷன். ஒரு பெண் அதைப் போட்டுக் கொண்டால் மூளை ஆண்களுக்கான ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து, அவளை ஆணாகவே மாற்றிவிடும்”

“அதிலிருந்து அவள் மீண்டுவர நினைத்தால்?”

“மாற்று மருந்தான பெண்களுக்கான மருந்தை உட்கொண்டால் போதும்”

“உடல் தன்மையில்...”

“உடல் தன்மையில் மார்பகத்தை பெரிதாக்கவோ, இல்லாமல் சுருங்கச் செய்யவோ எனது மருந்து உதவும். ஆனால் ஜன்னேந்திரியத்தை மாற்றும் சக்தி என்னிடமில்லை. இப்படி பெண், ஆணாக மாறி அல்லது ஆண் பெண்ணாக மாறி நாட்டின் பாதுகாப்புக்காக உளவு பார்ப்பது உட்பட பல வேலைகளுக்கு பயன்படுத்த எண்ணி இதை சமர்ப்பித்தேன். எங்கள் அரசு இதன் நம்பகத்தன்மையை பரிசோதிக்க உலகத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான உங்களிடம் இதை நிரூபிக்கச் சொல்லிவிட்டது”

“எப்படி நிரூபிக்கப் போகிறீர்கள்?”

“எங்கள் குழுவிலிருந்தே யாராவது ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இதைக் கொடுத்து ஒரு மாதத்திற்கு நம்மோடு இருக்கச் செய்வேன். என்னென்ன பயன் என்பதை அப்போது உங்களுக்கு உணர்த்துகிறேன்.”

“யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்?”

“எங்கள் குழுவின் ஏழு பேருமே இதற்கு சம்மதித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஒருவர்தான் என்பதால் உங்கள் முன்னிலையிலேயே யாராவது ஒருவரை தேர்வு செய்யப் போகிறேன்...”

சற்று இடைவெளி விட்ட வசந்த் ஆதிமூலம் தனது குழுவின் ஏழு பேரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, தீர்க்கமான குரலில் சொன்னார்:

“முடிவு செய்து விட்டேன் மிஸ்டர். இமானுவேல்”

“யார் அவர்?”

“மிஸ். யாமினி”

****************************************

வீட்டின் கதவு தட்டப்பட, கணினியில் அமர்ந்து டைப்படித்துக் கொண்டிருந்த நான் எழுந்தேன்.

“பரிசல்காரன்....” வந்தவர் ஒருவித சந்தேகத்தோடு என்னைப் பார்த்துக் கேட்டார்.

“நான்தான்.. உள்ள வாங்க” கதவை முழுவதுமாய்த் திறந்தேன்.

“வணக்கம். ஸாரி பரிசல். ப்ளாக்ல உங்க ஃபோட்டோஸ் பார்த்திருக்கேன். டக்னு அடையாளம் தெரியல. என் பேரு கோபிநாத். பெங்களூர்ல இருக்கேன். உங்க பதிவுகளை ரெகுலரா படிக்கறதுண்டு. ஒரு வேலை விஷயமா கோவை வந்தேன். போற வழில உங்களைப் பார்த்துட்டுப் போலாமேன்னு வந்தேன்..” சொல்லியபடியே தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பேனாவைப் பரிசாய் அளித்தார்.

“இது நாலாயிரம் ரூபா பேனா பரிசல். உங்களுக்குத்தான் பேனாக்கள்னா ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கி வந்தேன்..”

பிரமித்தபடி அதைப் பார்த்த நான் “நன்றிங்க கோபி” என்றேன்.

“பரவால்லைங்க...”

“ஸாரி.. வீட்ல வேற யாரும் இல்ல. நான் சுமாரா காஃபி போடுவேன். இருங்க” என்றபடி எழப்போனவனை கையமர்த்தினார்.

“அதெல்லாம் வேணாம்” என்றவரின் பார்வை உயிர்த்திருந்த கணினித்திரைக்குப் போனது.. “ஏதோ எழுதிகிட்டிருக்கீங்க போல”

“ஆமா கோபி. ஒரு மினி தொடர் எழுதின நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் என்னை அடுத்த தொடர் எழுதச் சொல்லிருந்தார். அவருக்காக ஆரம்பிச்ச தொடர் இது..”

“ஓ.. அவர் மினி.. நீங்க யாமினியா?”

மையமாய் சிரித்தேன்.. “ஆனா இந்த யாமினி தலைப்பு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எழுதப்பட்டது..” நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்கள் கணினியை முழுவதும் ஆக்ரமிக்கத் தொடங்கியது.

நான் காபி போட்டு வரலாம் என்று உள்ளே சென்ற சில நிமிடங்களில் என் பின்னால் வந்து ‘பரிசல்.. செமயான ஆரம்பம். ப்ளீஸ்... எனக்காக அடுத்த அத்தியாத்தைச் சொல்லுங்களேன்..” என்றார்.

“மன்னிக்கணும் கோபிநாத். அது எனக்கே தெரியாது... அடுத்த அத்தியாயம் வரும்போது படிச்சுக்கோங்க”

“எப்ப வரும்?” காஃபியை ருசித்துக் கொண்டே கேட்டார்.

“நாளைக்கு அல்லது திங்கள் வரலாம்”

ஒருவித ஏமாற்றத்தோடு அவர் கிளம்பிப்போக, அடுத்த அத்தியாயத்தை யோசிக்க ஆரம்பித்தேன் நான்.


.

நான்கு அல்லது ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் முதல் பகுதி இது.


.

Thursday, September 2, 2010

பிரபலமல்லாத எனக்கு பிரபலங்கள் எழுதிய கடிதங்கள்

பழைய (குப்)பையை கிளறியபோது கையில் சிக்கிய சில முத்துகள்... -

*************************************

18.9.92

அன்புமிக்க திரு. K.B. கிருஷ்ணகுமார்,

வணக்கம். தங்கள் விரிவான, வித்தியாசமான கடிதம் கண்டேன். தங்கள் உணர்ச்சிபூர்வமான பாராட்டுகளுக்கு என் இதய நன்றி.

உங்கள் கடிதம் உங்கள் ரசனையை உணர்த்திற்று. என் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தது.

கதை எழுதத் தேவையான தெளிவான நடை உங்களிடம் தெரிகிறதே.. முயற்சிக்கலாமே..?

என் வாழ்த்துகள் – உங்கள் எல்லா நல்ல முயற்சிகளுக்கும்.

பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்


**********************************************

11.08.1993

இனிய கிருஷ்ணகுமார்

சில கடிதங்களைக் கண்டவுடன், ‘இது உடனே பதில் எழுதிப் போட வேண்டிய சமாசாரம் அல்ல. ஆர அமர உட்கார்ந்து யோசித்து ஒவ்வொரு வார்த்தையாக பதில் எழுத வேண்டும். எனவே இப்போது பதில் எழுத வேண்டாம்’ என நினைத்து நினைத்து பல கடிதங்களை DUEவில் போட்டிருக்கிறோம். அவற்றில் ஒன்று உங்களுடையது. எனவே இப்போது பதில் ஸாரி, கேட்க மறந்துவிட்டோம் பாருங்கள்!

நலமா? நாங்கள் நலம்.

தங்களுடைய பழைய கடிதங்கள் சிலதுகூட எங்களிடம் கைவசம் உள்ளது. அதில் நீங்கள் வரைந்து அனுப்பியிருந்த சில Strikes நன்றாக இருக்கிறது. அதுபோல் புதுமையாக நீங்களே யோசித்து வரைந்து பத்திரிகைகளுக்கு அனுப்பலாமே? இது ஒரு சிறிய ஆலோசனைதான்!

சில பல இதழ்களில் –உங்கள் ஜூனியர்-உங்கள் கதைகள் – ரசித்தோம், நன்றாயிருந்தது.

அடிக்கடி தங்கள் நலன் குறித்தும் எங்கள் நாவல் குறித்தும் கடிதம் எழுதுங்கள்.

அப்புறம்?
அப்புறமே!

With Love
சுபா

*********************************************

06.09.93
சென்னை-64

அன்புள்ள கிருஷ்ணகுமார்-----

கடிதம் கிடைத்தது. இந்த இதழ் உல்லாச ஊஞ்சலில் பிரசுரமான பரிசுக்கதை ‘முள்ளுக்கும் மலர் சூடு’ நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன்.

இதுதான்-

பஸ் – பயணி – கண்டக்டர் – சில்லறை போன்ற நாம் அனுதினமும் சந்திக்கிற, சாதாரணம் என்று நாம் ஒதுக்கி விடுகிற விஷயங்களை – சற்று நிதானமாய் கவனித்து அதனுடன் சிறிதளவு கற்பனை கலக்கும்போது கதை கிடைத்துவிடுகிறது.

அருமையான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். பலே!

எனது படைப்புகளை ஒன்றுவிடாமல் படித்து ’87 விகடன் சம்பவத்திலிருந்து ‘மல்லிகாவின் ப்ரெய்ன் ட்யூமர்’ வரை மானசீகமாய் உடன் வந்திருக்கிறீர்களே...

நிழலாய்த் தொடர்ந்து வந்த உங்கள் நட்பை மதிக்கிறேன். வரவேற்கிறேன்.

இத்தனை எழுத்து வசீகரம் கொண்ட நீங்கள் ஏன் விமர்சனக் கடிதங்களோடு நின்றுவிடுகிறீர்கள்?

வாருங்களேன்..

கதை உலகில் கைகோர்த்து நடக்கலாம். புதியவர்களுக்காக பத்திரிகையுலகம் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது. மற்ற விஷயங்களை சற்றே ஒதுக்கிவிட்டு, கதைக் களத்தில் புது வாளேந்தி வாருங்கள்.

விரைவில்,

முன்னணிப் பத்திரிகைகளில் எல்லாம் உங்கள் (என்னுடையதும் கூட) படைப்புகள் வெளிவர வாழ்த்துகள்.

அன்புடன்
படுதலம் சுகுமாரன்

*************************************

15.12.93

அன்புமிக்க திரு.கிருஷ்ணகுமார்

வணக்கம்.

உங்கள் ஒவ்வொரு கடிதமும் உடனே பதில் எழுதத் தூண்டுவதென்னவோ உண்மைதான். ஆனால் படவா நிமிடங்கள் என்னை மிரட்டி விடுகின்றன.

உங்கள் நுணுக்கமான விமரிசனங்கள் தங்கள் ரசனையையும், திறமையையும் வெளிப்படுத்தத் தவறுவதில்லை.

‘மனசுக்குள் நான் உன்னை...’ நாவலில் பன்னீர் செல்வம் சுத்தமானவன் என்பதைச் சொல்ல அத்தனை சம்பவங்களா என்று கேட்டிருக்கிறீர்கள். அழுத்தமாகப் பதிய வைக்க விரும்பும் விஷயங்களை இரண்டு வரிகளில் தாண்டக்கூடாது. நீங்கள் குறிப்பிட்ட சிறுகதையில் அவன் அப்பாவி என்பது கதைக்கு அவ்வளவு முக்கியமல்ல. மட்டுமல்லாமல் அது சிறுகதை. ஒரு காதலைச் சொல்லும்போதுகூட ராஜாவும் ரோஜாவும் காதலித்தார்கள் என்று மூன்றே வார்த்தைகளில் சொல்லலாம். முன்னூறு பக்கங்களில் முப்பது சம்பவங்களை அடுக்கியும் அதைச் சொல்லலாம். கதையின் அவசியத்தைப் பொறுத்து அமைக்கும் விதத்தைத் தீர்மானிக்க வேண்டும்.

பிறகு?

நிறையப் படியுங்கள்.
நிறைய கவனியுங்கள்.
கொஞ்சமாய்ப் பேசுங்கள்.
நிறைய எழுதுங்கள்.

புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்
என்றாலும் பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்

*****************************************

07.04.94

அன்புமிக்க கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

உங்கள் கடிதங்களைப் பார்த்து வருகிறேன்.

பதில்தான் எழுத முடிவதில்லை.

விதைத்து மறுநாளே பூமியைக் கிளறி முளை விட்டிருக்கிறதா என்று பார்க்கிற அவசரமில்லாமல் நிதானமாக ஆனால் லட்சியத்தோடு செயல்பட்டு வாருங்கள். நாளைக்கு உங்கள் மரம் வளரும். பூக்கும். காய் தரும். கனி தரும். நிழல் தரும். சுகம் தரும்.

பிரியங்களுடன்
பட்டுக்கோட்டை பிரபாகர்.

***********************************

01.09.2010

அன்புள்ள பரிசலுக்கு

நான் உங்கள் வாசகி. லண்டனில் இருந்து விடுமுறைக்காக தமிழகம் வந்திருக்கிறேன். உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது அமெரிக்காவில் இருந்து வருகிறார்கள் என்றால் எனக்காக ஒரு லேப்டாப்பை அங்கிருந்து வாங்கி வர இயலுமா? யாரேனும் வருகிறார்கள் என்றால் சொல்லவும். மேலதிக விபரங்கள் தருகிறேன்.

அன்புடன்
ஒரு வாசகி



டிஸ்கி: கடைசி கடிதம் தேதி பார்க்கவும். நேற்றைய தேதி. நிஜமாகவே உதவி தேவைப்படுகிறது. நீங்களோ உங்கள் நண்பர்களோ வருகிறீ/றார்கள் என்றால் என் மின்னஞ்சலுக்கு (kbkk007@gmail.com) தொடர்பு கொள்ளவும்.


.

Wednesday, September 1, 2010

பார்க்கவே முடியாத படங்கள் மூன்று...

நானொரு ஞாபகமறதிக்காரன். வாரத்தில் ஆறுநாளைக்காவது வீட்டை விட்டு வந்தபிறகு வண்டி சாவி, ஹெல்மெட், நோட், பேனா என்று எதற்காவது மீண்டும் போய் எடுத்துவருவேன். (வாரத்தில் மற்றொரு நாள் விடுமுறை என்றறிக)

தன்மாத்ரா (ஒரிஜினல்) டிவிடி வாங்கி நானும் மனைவியும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கம்பெனி குவார்டர்ஸில் இருந்த சமயம். திடீரென்று ஃபேக்டரியின் ஃபயர் சைரன் ஒலிக்க என்னமோ ஏதோ என்று ஓடி ஃபேகடரிக்குள் போய்விட்டேன். (அது தவறுதலாக ஒரு தொழிலாளி சுவிட்சை அழுத்தியதால் வந்தது) அப்படியே கொஞ்சநேரம் அங்கிருந்த சக அலுவலக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் உமாவிடமிருந்து ஃபோன்.. “சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என்று.

போனால் அழுகையின் விளிம்பில் இருந்தது கண்கள். என்னைப் பார்த்ததும் அழுதே விட்டார்! தன்மாத்ரா பார்த்ததன் விளைவு!

இந்தப் படத்தில் அல்சைமர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் மோகன்லால் தவறுதலாக ஃபைலை ஃப்ரிட்ஜூக்குள் வைப்பார். அப்புறம் காய்கறி வாங்கி ஆஃபீஸூக்கு வருவார்.. இப்படி பல காட்சிகள். அதைப் பார்த்ததும் உமாவுக்கு என் ஞாபகம் வந்துவிட்டதாம்!

அந்தளவுக்கெல்லாம் இல்லைப்பா நான் என்று நினைத்துக் கொண்டாலும் படம் பார்க்கும்போது பீதியாகவே இருந்தது. ‘என்ன படம் எடுக்கறானுக’ என்றும் தோன்றியது. மோகன்லால் நடிக்கிறாரா இல்லை நிஜமாகவே அப்படி ஆகிவிட்டிருந்தாரா என்று தோன்றவைத்த படம் தன்மாத்ரா.

இன்னொரு முறை பார்ப்பீர்களா என்று கேட்டால் மாட்டவே மாட்டேன் என்று சொல்லும் முதல் படம் தன்மாத்ரா.

*************************************

இன்னொரு படம் மகாநதி.

‘எங்கேயோ தெக்குதிசை காணாத தூரம்தான்..’ என்று கமல் குரல் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஓர் உருண்டை வயிற்றிலிருந்து கிளம்பி தொண்டையை அடைத்துக் கொள்ளும். வலிக்க வலிக்க ஏமாற்றப்படும்போதெல்லாம் ‘போதும்டா.. நான் பாவம்டா’ என்று கண்களாலேயே நடிப்பார் கமல். மகளை விபசார விடுதியில் பார்க்கும்போதும், அப்போது அவள் சொல்கிற வசனமும்.. கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

இப்பொழுதும் இந்தப் படம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் அந்தச் சேனலுக்கு தப்பித்தவறிக்கூட ரிமோட் பட்டன் தாவிவிடாமல் பார்த்துத் தாண்டிச் செல்வேன்.

யதார்த்தமான படம்தான். ஆனாலும் வலிக்கிறதே.. என்ன செய்ய?

**************************

அப்பறம் மூன்றாம் பிறை...


செமயான படம்தான். ஆனா திரும்பத் திரும்ப பார்த்து என்னாச்சுன்னா ஆரம்பத்துலேர்ந்தே அந்த க்ளைமாக்ஸ்தான் மனசுல போட்டு அழுத்தமா உட்கார்ந்துடுச்சு. கமல் இவ்ளோ பண்ணியும் கடசில குரங்கு சேட்டையெல்லாம் பண்ணி அநாதையான பார்வை பார்த்துட்டு நிக்கத்தான் போறாரு.. இவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறதால இந்தப் படம் பார்க்கறதில்ல..

படமாவது பார்க்கலாம்.. ஆனா அந்த க்ளைமாக்ஸ் வந்தா என் வீட்டு ரிமோட் பட்டன் தானா வேலை செஞ்சுடும்.

பாலு மகேந்திரா சாரைப் பார்த்தா, ஏன் சார்.. தொலையுது.. சேர்ந்துட்டுதான் போகட்டுமேன்னு கேட்கணும்னு நினைப்பேன்.. ஒரு ஜெர்கினு, ஒரு வாட்சு, எதைப் பார்த்தாவது அவளுக்கு ஞாபகம் வந்து தொலைக்கற மாதிரி மாத்திருக்கலாம்ல?


அப்படியா ஒருத்தி பழசை மறந்துட்டுப் போவா.. அதும் சரிதான்.. அவளுக்காவது நோய், நிறைய பேர் நல்லா இருந்தே மறக்கறாங்களேன்னு தேத்திக்குவேன்.

அதுவும் ஓடி வரும்போது கம்பத்துல முட்டிகிட்டு விழுவாரு பாருங்க கமல்...

கொடுமை!!


*****************