Showing posts with label தன்மாத்ரா. Show all posts
Showing posts with label தன்மாத்ரா. Show all posts

Wednesday, September 1, 2010

பார்க்கவே முடியாத படங்கள் மூன்று...

நானொரு ஞாபகமறதிக்காரன். வாரத்தில் ஆறுநாளைக்காவது வீட்டை விட்டு வந்தபிறகு வண்டி சாவி, ஹெல்மெட், நோட், பேனா என்று எதற்காவது மீண்டும் போய் எடுத்துவருவேன். (வாரத்தில் மற்றொரு நாள் விடுமுறை என்றறிக)

தன்மாத்ரா (ஒரிஜினல்) டிவிடி வாங்கி நானும் மனைவியும் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது கம்பெனி குவார்டர்ஸில் இருந்த சமயம். திடீரென்று ஃபேக்டரியின் ஃபயர் சைரன் ஒலிக்க என்னமோ ஏதோ என்று ஓடி ஃபேகடரிக்குள் போய்விட்டேன். (அது தவறுதலாக ஒரு தொழிலாளி சுவிட்சை அழுத்தியதால் வந்தது) அப்படியே கொஞ்சநேரம் அங்கிருந்த சக அலுவலக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் உமாவிடமிருந்து ஃபோன்.. “சீக்கிரம் வீட்டுக்கு வாங்க” என்று.

போனால் அழுகையின் விளிம்பில் இருந்தது கண்கள். என்னைப் பார்த்ததும் அழுதே விட்டார்! தன்மாத்ரா பார்த்ததன் விளைவு!

இந்தப் படத்தில் அல்சைமர் நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் மோகன்லால் தவறுதலாக ஃபைலை ஃப்ரிட்ஜூக்குள் வைப்பார். அப்புறம் காய்கறி வாங்கி ஆஃபீஸூக்கு வருவார்.. இப்படி பல காட்சிகள். அதைப் பார்த்ததும் உமாவுக்கு என் ஞாபகம் வந்துவிட்டதாம்!

அந்தளவுக்கெல்லாம் இல்லைப்பா நான் என்று நினைத்துக் கொண்டாலும் படம் பார்க்கும்போது பீதியாகவே இருந்தது. ‘என்ன படம் எடுக்கறானுக’ என்றும் தோன்றியது. மோகன்லால் நடிக்கிறாரா இல்லை நிஜமாகவே அப்படி ஆகிவிட்டிருந்தாரா என்று தோன்றவைத்த படம் தன்மாத்ரா.

இன்னொரு முறை பார்ப்பீர்களா என்று கேட்டால் மாட்டவே மாட்டேன் என்று சொல்லும் முதல் படம் தன்மாத்ரா.

*************************************

இன்னொரு படம் மகாநதி.

‘எங்கேயோ தெக்குதிசை காணாத தூரம்தான்..’ என்று கமல் குரல் கேட்கும்போதெல்லாம் ஏதோ ஓர் உருண்டை வயிற்றிலிருந்து கிளம்பி தொண்டையை அடைத்துக் கொள்ளும். வலிக்க வலிக்க ஏமாற்றப்படும்போதெல்லாம் ‘போதும்டா.. நான் பாவம்டா’ என்று கண்களாலேயே நடிப்பார் கமல். மகளை விபசார விடுதியில் பார்க்கும்போதும், அப்போது அவள் சொல்கிற வசனமும்.. கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

இப்பொழுதும் இந்தப் படம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்போதெல்லாம் அந்தச் சேனலுக்கு தப்பித்தவறிக்கூட ரிமோட் பட்டன் தாவிவிடாமல் பார்த்துத் தாண்டிச் செல்வேன்.

யதார்த்தமான படம்தான். ஆனாலும் வலிக்கிறதே.. என்ன செய்ய?

**************************

அப்பறம் மூன்றாம் பிறை...


செமயான படம்தான். ஆனா திரும்பத் திரும்ப பார்த்து என்னாச்சுன்னா ஆரம்பத்துலேர்ந்தே அந்த க்ளைமாக்ஸ்தான் மனசுல போட்டு அழுத்தமா உட்கார்ந்துடுச்சு. கமல் இவ்ளோ பண்ணியும் கடசில குரங்கு சேட்டையெல்லாம் பண்ணி அநாதையான பார்வை பார்த்துட்டு நிக்கத்தான் போறாரு.. இவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலைன்னு மனசு கிடந்து அடிச்சுக்கறதால இந்தப் படம் பார்க்கறதில்ல..

படமாவது பார்க்கலாம்.. ஆனா அந்த க்ளைமாக்ஸ் வந்தா என் வீட்டு ரிமோட் பட்டன் தானா வேலை செஞ்சுடும்.

பாலு மகேந்திரா சாரைப் பார்த்தா, ஏன் சார்.. தொலையுது.. சேர்ந்துட்டுதான் போகட்டுமேன்னு கேட்கணும்னு நினைப்பேன்.. ஒரு ஜெர்கினு, ஒரு வாட்சு, எதைப் பார்த்தாவது அவளுக்கு ஞாபகம் வந்து தொலைக்கற மாதிரி மாத்திருக்கலாம்ல?


அப்படியா ஒருத்தி பழசை மறந்துட்டுப் போவா.. அதும் சரிதான்.. அவளுக்காவது நோய், நிறைய பேர் நல்லா இருந்தே மறக்கறாங்களேன்னு தேத்திக்குவேன்.

அதுவும் ஓடி வரும்போது கம்பத்துல முட்டிகிட்டு விழுவாரு பாருங்க கமல்...

கொடுமை!!


*****************