Thursday, January 22, 2015

இதை எதுல எழுதுவீங்க?

“எதுக்கு இப்ப என் பேரைக் கேட்கறீங்க?” என்று அந்தப் பெரியவர் கேட்டபோது அவர் குரலில் பதட்டம் வழிந்தது. அவரை ஆசுவாசப்படுத்தும் விதமாய், படிக்கட்ட்டில் அமர்ந்திருந்த அவரருகில் அமர்ந்து தோளில் கைபோட்டபடி, ஒரு செல்ஃபி எடுக்க செல்ஃபோனை இடதுகையில் உயர்த்திப் பிடித்தேன்.

ஒரு சில விநாடிகள் மேலே ஃபோனைப் பார்த்தார். ஒரு க்ளிக். இரண்டாம் முறை க்ளிக்கும்போது, ‘ஃபோட்டோவா? அய்யோ.. ஏன் தம்பி.. வேணாம் தம்பி’ என்றார். ‘ஓ..  ஸாரிங்க’ என்று அதை அவருக்குக் காண்பித்து அழித்தேன்.

கடந்த இரண்டு மாதங்களாகத்தான் அவரைப் பார்க்கிறேன். கனரா வங்கி மாடியில் எங்கள் வீடு. எங்கள் வீட்டு படியிறங்கையில், கடைசி படியில் அவர் அமர்ந்திருப்பார். எங்கள் மாடிப்படி துவக்கமும், கனரா வங்கி வாசல்படியும் அடுத்தடுத்து. படிக்கட்டில் அமர்ந்து, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செலான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பார்.

நான் ஆஃபீஸ் லீவு போட்ட ஒருநாள்தான் அவர் வரும் நேரத்தைப் பார்த்தேன். ஒம்பதரைக்கெல்லாம் வந்தார். கையில் மஞ்சள் பை. அதை எடுத்தார். ஒரு சிறிய துணி. அதால் படிக்கட்டை துடைத்தார். பிறகு அந்தப் பையிலிருந்து ஒரு Exam Padஐ எடுத்தார். சில பேப்பர்கள். வெள்ளைக் காகிதங்கள். செலான்கள். எல்லாவற்றையும் ஏதோ ஒரு வரிசையில் அடுக்கி, அட்டையின் க்ளிப்பில் சொருகினார். பேண்டை கீழே கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டுகொண்டார். இந்த வேலையையெல்லாம் அவர் செய்வதற்குள்ளாகவே அவரைச் சுற்றி பத்து பேராவது பாஸ்புக்கை நீட்டியபடி நின்றுகொண்டிருப்பார்கள்.


“இல்லைங்கய்யா... இப்ப ரெண்டு மாசமாத்தான் உங்களைப் பார்க்கறேன். டெய்லி பேங்க் வர்ற எல்லாத்துக்கும் எழுதிக் கொடுத்துட்டிருக்கீங்க. எவ்ளோ கிடைக்குது இதுல?”

உட்கார்ந்தபடியே, உடம்பை மட்டும் நகர்த்தி என்னை ஒரு பார்வை பார்த்தார்.

“இல்ல... ஏன் கேக்கறீங்க? நீங்க யாரு?”

“என்னைத் தெரியாதா? டெய்லி வீட்டுக்கு மேல போறப்ப நீங்கதானே வழி விடறீங்க?”

“ம்ம்ம்” இப்போது அவர் கையிலிருந்த பரீட்சை அட்டையை எடுத்து க்ளிப்பில் பேப்பர்களை சரிவர சொருகினார். அதை மஞ்சள் பைக்குள் வைத்துக் கொண்டார்.

அவர் பதில் சொல்ல தயங்குவதேன் என்று தெரியவில்லை.

“சொல்லுங்க.. எதுனால இந்த வேலைய செய்யறீங்க?”

“நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும்?”

இந்த பதிலை அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நியாயமான கேள்விதான். ஆனால் ஈகோ விடவில்லை.

“எங்க வீட்டு படிக்கட்ல டெய்லி நீங்க போடற குப்பையைக் கூட்டறேன்ல? அதுக்காக சொல்லலாம். உங்களைத் தாண்டிப் போறது தொந்தரவா இருக்குன்னு நினைக்காம போறப்பவும் வர்றப்பவும் பார்த்து சிரிக்கறேன்ல அதுக்காக சொல்லலாம்” - என்றேன்.

புன்னகைக்கலாமா வேண்டாமா என்பதாய்ப் புன்னகைத்தார்.

உடல்மொழியில் அவர் இளகி விட்டார் என்பதும் சொல்லத் தயாரானதும் தெரிந்தது.

 “தம்பி, I worked in Coimbatore One Mill Since 1972. நாலைஞ்சு மாசம் முந்தி ரிட்டயர்ட் ஆகிட்டேன். நான் வேலைக்கு சேர நிறைய பேர் ஹெல்ப் பண்ணாங்க. எனக்கு பெரிசா எழுதப் படிக்கத் தெரியாது. திரும்ப இங்க வந்தப்ப யாருக்காச்சும் உதவணும்னு தோணிச்சு. என்ன பண்லாம்னு பார்த்தப்ப  ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்..”

“ஐயா.. உங்க பேரைச் சொல்லல நீங்க?”

“நீங்க நிருபரா?”

“நிருபர்னு இல்லை.. ஆனா அந்த மாதிரின்னு வெச்சுக்குங்களேன்..”

“கரெக்டா சொன்னனுங்களா? அதான் தம்பி.. நீங்க கிடுக்கிப்பிடி போட்டு என்னைப் பேச வெச்சதுலயே கண்டுக்கிட்டேன்ல.. பத்திரிகையா?”

“பத்திரிகை இல்லைங்கய்யா. Blog... அதாவது.. ”

“புரியலையே தம்பி...”

“ஃபேஸ்புக் தெரியும்களா? நெட்ல எல்லாம் எழுதுவாங்க..”

“தெரியல.. சரி அத விடுங்க.. ஒருநாள் இந்த பேங்க் வந்தேன்.. இந்த மகளிர் சுய உதவிக்குழு ஆளுக எதையோ எழுதித்தரச் சொல்லிக் கேட்டாங்க. எழுதிக் கொடுத்ததும் ஒரு மவராசி டக்னு 10 ரூவா குடுத்துச்சு. அட..ன்னு அடுத்தநாள்லேர்ந்து வந்து உட்கார ஆரம்பிச்சுட்டேன்”

“ஐயா உங்க பேர் கேட்டேனே...”

“பேர்... வந்து.... அத விடுங்க... இதை எதுல எழுதப்போறீங்க?”

“சரி..  உதவின்னா காசு வாங்குவீங்களா?”

அப்போது சரியாக இருவர் வங்கியை விட்டு வெளியே வந்தனர். வந்தவர்கள் இவரைத் தாண்டிப் போக எத்தனிக்க, ‘ஹலோ.. என்னங்க இது?’ என்று சற்று காட்டமான குரலில் கேட்டார். அவர்கள் சட்டென நின்று “அச்சச்சோ.. மறந்துட்டோம்” என்று பாக்கெட்டில் கைவிட்டு நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்தனர்.

“சில்லறை இல்லீங்களா?”

“இல்லீங்களே”

இவர் பத்து ரூபாய்கள் சிலவற்றை எடுத்தார். மொத்தமாக அறுபது ரூபாய் வந்தது.

“உள் பாக்கெட்ல பாருங்க” என்றார்கள் அவர்கள்.

“உள்பாக்கெட்லலாம் எதும் இல்ல” என்றவர் என்ன செய்ய என்பதாய்ப் பார்க்க, நான் ‘கொடுங்க’ என்று இரண்டு ஐம்பதைக் கொடுத்தேன்.

வாங்கியவர்,  அவர்களிடம் 80 ரூபாயைக் கொடுத்தார்.

 “ரெண்டு செலான்” என்றார். அவர்கள் தலையாட்டிவிட்டுச் சென்றனர்.

 “கறாரா வாங்கீடுவீங்க போல?”

“இலவசமா செஞ்சா மதிப்பிருக்காது தம்பி.  ‘அங்க போனா ஒரு கெழவன் ஒக்கார்ந்திருப்பான். எழுதி வாங்கிக்கலாம். அதான் அவன் வேலை’ன்னு இளக்காரமாகிடும்”

அவர் சொல்வது சரியாகத்தான் பட்டது எனக்கு.

“ஒருநாளைக்கு எவ்ளோ வரும்?”

“நான் ரொம்ப பேசிட்டேன் தம்பி.. கெளம்பறேன்” அவர் எழுந்தார்.

“ஐயா உங்க பேரைச் சொல்லவேல்ல நீங்க”

“டீ சாப்டப்போறேன்.. வர்றீங்களா?”

“பேர் கேட்டா டீ சாப்டறீங்களாங்கறீங்க!”

“என் பேரு..” என்றவர் என்னருகில் வந்து சன்னமாய் “...................... ஆனா பேரை எழுத வேண்டாம் தம்பி” என்றார்.

“சரிங்க” என்றேன்.

“இதை எதுல எழுதப்போறீங்க தம்பி?”

“இந்த ப்ளாக், ஃபேஸ்புக், இதெல்லாம் தெரியுமா உங்களுக்கு?”

“தெரியாதுங்களே..”

“நெட்ல எழுதுவேன்னு வெச்சுக்குங்க”

“இணையத்துலயா? சரிங்க. எழுதினா காமிங்க”

“சரிங்கய்யா”

“அப்ப நான் வரட்டுமா? என்றவர் கிளம்பவும் பேங்க் வாசலிலிருந்து ஒருவர் என்னை நோக்கி வரவும் சரியாய் இருந்தது.

“உங்ககிட்ட அவர் பேர் என்ன சொன்னார்”

நான் “சுப்ரமணியன்” என்றேன். ஆனால் அதுவல்ல அவர் சொன்ன பேர். வேறு.

“அதும் பொய்ங்க. எங்கிட்ட அருணாச்சலம்னார்” என்றார். எனக்கு திக்கென்றது.

 “அவர் யார்னு வெளிப்படுத்திக்க விரும்பலைன்னு சொல்றாங்க. வீடு வாசல் மகன்லாம் இருக்காங்க. வீட்ல ப்ரச்னை. அதான் இங்க வந்து எழுதிக் கொடுத்துட்டு காசு வாங்கிட்டிருக்கார். உதவி கிதவில்லாம் டகால்டிங்க” என்றார்.

“நீங்க?”

“நான் இங்கதான் இருக்கேன்”

“எங்க?”

“இதே ஊர்ல..”

“இல்ல.. என்ன பண்றீங்கன்னு கேட்டேன்”

“சும்மாதான் இருக்கேன்” என்றான்.

>>>

1 comment:

Unknown said...

“சும்மாதான் இருக்கேன்”
..
நம்மமையும் சேர்த்து தான் சொல்லியிருக்கார்