Thursday, June 24, 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

'நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது’ என்ற இந்த வரியை இந்த ஐந்து நாட்களில் ஐந்தாயிரம் பேராவது சொல்லக் கேட்பீர்கள் (அ) எழுத படிப்பீர்கள். அப்படித்தான் இருக்கிறது.

நேற்று முன்தினம் (22.06.10) அவினாசி சாலை வழியாக செல்ல வேண்டியிருந்தது. பத்தடிக்கு ஒரு போலீஸ் குழு. அங்கங்கே வாகன பரிசோதனைகள். விழா நடக்கும் கொடிசியா அரங்கம் நெருங்க நெருங்க மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதைக் காணமுடிகிறது.

நல்லதொரு விஷயம்: எங்குமே கட்சிக்காரர்களின் ஜால்ரா பேனர்களைப் பார்க்க முடியவில்லை. விசாரித்த வரையில் கலைஞரே அதெல்லாம் வைக்காதீங்கப்பா என்று வாய்மொழி உத்தரவிட்டதாகத் தகவல்.

சாலையில் இரு மருங்கிலும் உள்ள கட்டிடங்கள் எல்லாம் புதிதாய் வண்ணம் அடிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. எல்லாரும் தத்தமது கட்டிடங்களில் வண்ண வண்ண சீரியல் பல்புகளை தொங்கவிட்டிருந்தனர். இரவில் ஜெகஜ்ஜோதியாய் இருந்திருக்கும்.

*************************************





நேற்று (23.06.2010) மாநாடு தொடங்கியபின் மாலை நடக்கும் இனியவை நாற்பது அணிவகுப்புக்குச் செல்லலாம் என்று புறப்பட்டேன். பல்லடத்தில் கழக உடன்பிறப்புகளால் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்களை எல்லாம் கழட்டிக் கொண்டிருந்தார்கள். ஆளில்லாத இடங்களில், பேனர் ஒருபுறம் கிழிக்கப்பட்டு, மடக்கி வைக்கப்பட்டிருந்தது. நிறுத்திக் கேட்டதுக்கு ‘பேனர் வெச்சதுக்கு திட்டு விழுந்ததுதாங்க மிச்சம். கட்சி பேர்ல வைக்க இது கட்சி மாநாடான்னு கேட்கறாங்க. பொதுவாத்தான் வைக்கணுமாம்’ என்றார் ஒருவர். மகிழ்ச்சியாக இருந்தது. (ஒன்றிரண்டு இடங்களில் மாநாட்டுக்கு வருகை தரும் ஜி கே வாசனை வரவேற்று பேனர்கள்!)

சூலூரில் ஆரம்பித்தது போலீஸ் படை. நகரெங்கும் காக்கிகள்தான். எந்த ஊரிலிருந்தோ வந்து இங்கு தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் பாவம் என்று தோன்றியது. அதுவும் ஒண்டிப்புதூர் பாலத்தில் ஒரு போலீஸ்காரர் தனியாளாய் பாலத்தின் நடுவில் இருந்த வானுயர்ந்த ஸ்ட்ரீட் லைட்டை அண்ணாந்து பார்த்துக் கொண்டு நின்றிருந்த கோலம்.... பரிதாபத்தின் உச்சம்.

ராமநாதபுரத்திற்கு சற்று முன் வலதுபுறம் திருப்பிவிடப்பட்டு, மசக்காளிபாளையம் வழி அவிநாசி சாலையை அடைந்து கிடைத்த இடத்தில் பைக்கைப் போட்டு அவிநாசி சாலைக்குப் போனால்............

தலைகள்... தலைகள்.. தலைகள்.... அத்தனை கூட்டம்.

ஒருவழியாக ஒரு இடம் தேர்ந்தெடுத்து எல்லாருமாய் உட்கார்ந்து பார்க்கலாம் என்று உட்கார்ந்தோம். முக்கால் மணி நேரம் கழித்து, பேரணி நாங்கள் இருக்கும் இடம் நெருங்கியதும் எங்கிருந்தோ வந்த ஒரு காமன்சென்ஸ் இல்லாத ட்ரெய்னி போலீஸ் ஒருவர் ‘பக்கத்துல வந்துடுச்சு.. எல்லாரும் எழுந்திருங்க’ என்றதுதான் தாமதம்... உட்கார்ந்தவர்கள் உட்கார்ந்தே அழகாய் பார்த்திருக்கலாம்.. அவர் சொன்னதும் முட்டாள்தனமாய் சடாரென்று எழுந்திருக்க, பின்னால் நின்றவர்கள் முட்டித்தள்ள உட்கார்ந்திருந்திருந்தவர்களில் இருந்த குழந்தைகள் நிலைமை பரிதாபம்.

போங்கடா நீங்களும் உங்க காவலும் என்ற கோவத்துடன் திரும்ப, எங்களுக்குப் பின்னால் விஐபி கார்கள். பார்த்தபோது, கனிமொழி எம் பி போய்க் கொண்டிருந்தார். என் அருகில் குழந்தைகளோடு அமர்ந்திருந்தவர் ‘போலீஸ் சரியில்லை மேடம்... சரியா கட்டுப்படுத்தவே தெரியல.. அழகா உட்கார்ந்திருந்தோம்.. எந்திருக்கச் சொல்லி சொதப்பீட்டாங்க’ என்று கண்ணாடி வழியே தெரியும் அவர் முகம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டதோ, கேட்கவில்லையோ.. ‘என்ன என்ன?’ என்று புருவமுயர்த்தி கேட்டபடியே அவர் சென்றது அழகாய் இருந்தது. பேரணி அந்த இடத்தை தாண்டுவதற்குள் அவர் சென்றமரும் மேடை நோக்கிப் போகும் அவசரம் அவருக்கு!

திரும்பி வந்து மிகச் சிரமட்டு பைக்கை எடுத்துக் கொண்டு விட்டால் போதும் என்று வீடு வந்து சேர்ந்தேன்.

எப்படி இருக்கிறது கோவை?

சரியாகப் பார்த்தால் தமிழகம் கோவை இருக்கும் பக்கம் கொஞ்சம் சாய்ந்திருக்கும். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம். கார்கள். எல்லாவற்றிலும் கட்சிக் கொடி. வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களில் நூற்றுக்கு 99 சதவிகிதம் பேர் உற்சாக பானத்தின் பிடியில் இருந்தார்கள். பீளமேடில் ஒரு டாஸ்மாக்கில் திங்கள் - செவ்வாய் - புதன் மாலை வரை இரண்டரை தினங்களின் விற்பனை, அதற்கு முன் மூன்று மாத ஒட்டுமொத்த விற்பனைக்கு சமமாய் இருக்கிறதாம்.

சாலை உள்ளிட்ட எல்லா பணிகளும் அவசர கதியில் நடந்தேறியிருக்கிறது. ஹோப் காலேஜின் ஒரு பக்க பாலம் இரண்டாண்டுகளாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதன் மற்றொரு பக்க பாலம், க்யூரிங் கூட சரியாக ஆனதா என்று தெரியவில்லை.. இரண்டே மாதங்களில் முடுக்கிவிடப்பட்டதாம்.

மாநாடு முடிந்தும், விட்ட பணிகளை தொடர்ந்து முழுமையாய் முடித்து, கோவையில் நடத்தியதற்கு கோவைக்காரர்களை பெருமைப்பட வைப்பார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

(இதே போன்றதொரு கட்டுரையை வித்தியாசமான நடையில் படிக்க இங்கே க்ளிக்குங்கள்...)

.

14 comments:

கபிலன் said...

அன்பின் பரிசல்,

நேரில் காணமுடியாத ஏக்கத்தை தீர்த்தது உங்கள் பதிவு.
என்னதான் சொன்னாலும் தமிழின் பேரில் நடக்கும் விழாக்கோலத்தை
எதிர்ப்பவர்களும் உள்ளுக்குள் ரசிப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.
எஞ்சியது எல்லாம் போக தமிழ் அறிவு உலகிற்கு எதாவது கிடைத்தால் சரி.

அன்புடன் கபிலன்

சுசி said...

கூடவே கூட்டிப் போய் காட்டினா மாதிரி இருக்கு.

நன்றி.

பழமைபேசி said...

//நகரமே //

இதுல ஒருத்தர், ரெண்டு எழுத்துகளை முன்ன பின்ன போட்டு இருக்காரு... தெரிஞ்சே போட்டாரா? இல்லத் தெரியாமப் போட்டாரான்னு தெரியலை..... மனசு வலிக்குது... எங்க ஊர்பா அது!!

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி பரிசல்.

புகைபடங்கள் எடுக்கவில்லையா..??

சரி இங்கே... என் வலையில் வந்து பாருங்கள்.

http://mynandavanam.blogspot.com/search/label/Senmozhi

மேவி... said...

1966 தமிழ் மாநாட்டில் எடுக்க பட்ட சில புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன் ......

இப்பொழுது உங்கள் எழுத்துக்கள் முலம் மாநாட்டை பற்றி படிக்கிறேன் ....

நல்ல எழுதிருக்கீங்க.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

மாநாடு முடியட்டும் ஊர் எப்படி இருக்குதுன்னு பாருங்க. விருந்தாளி வந்திட்டு போன வீடு மாதிரி களேபரமாய் இருக்கும்,
இருந்தாலும் கோவை காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

Cable சங்கர் said...

ஊர்வலத்தை பார்த்தீங்களா? இல்லையா?

அஹோரி said...

//நல்லதொரு விஷயம்: எங்குமே கட்சிக்காரர்களின் ஜால்ரா பேனர்களைப் பார்க்க முடியவில்லை. விசாரித்த வரையில் கலைஞரே அதெல்லாம் வைக்காதீங்கப்பா என்று வாய்மொழி உத்தரவிட்டதாகத் தகவல்.//
பேனர கட்ட சொல்லி , அப்புறம் அத அவுக்க சொல்லி .. இதெல்லாம் ஒரு விளம்பரம். மக்களை எப்படி யோசிக்க வைக்கணும் நு கூட கருணாநிதிக்கு தெரியும். ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு இவ்ளோ ஆர்பாட்டம் தேவையா ? குஸ்கா குஞ்சிகளுக்கு நல்ல டைம் பாஸ்.

senthilkumar said...

நேரில் பார்த்த திருப்தி....நல்ல மொழி நடை...நன்றி

☼ வெயிலான் said...

இன்றைக்கும் நல்ல கூட்டம் இருப்பதாக, இணைய மாநாட்டு அரங்குக்கு சென்ற நண்பர்கள் சொன்னார்கள்.

செல்வா said...

அருமை அண்ணா ..!!
நானும் அந்த இனியவை நாற்ப்பது ஊர்வலத்தை காண வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன் ..ஆனால் முடியவில்லை .. உங்கள் இந்த பதிவு அந்த ஏக்கத்தை ஓரளவு தனித்துள்ளது ..

manjoorraja said...

கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தாயா என நண்பர் இன்று தொலைபேசியில் கேட்டார். நான் அப்போது கால்பந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

பதிவு போட ஒரு விசயம் கிடைத்ததே என சந்தோசப்படலாம்.

Thamira said...

உங்களிடம் இன்னும் கொஞ்சம் விரிவாகவும், சப்ஜெக்டிவ்வாகவும் பதிவு எதிர்பார்த்திருந்தேன் பரிசல்.

dana said...

Nicely explained. It's indeed an art to stop new visitors with your attractive writing style. Truly impressive and nice information. Thanks for sharing.