Monday, October 13, 2008

சினிமா - மலரும் நினைவுகள்

எல்லாம் ஒரு அரைநாள் லீவு போடுங்கப்பா... ஒரு மகாப்பெரிய பதிவு எழுதியிருக்கேன்!


லக்கிலுக் இந்தத் தொடரில் அதிஷா, முரளிகண்ணன், நர்சிம் ஆகிய மூன்றுபேரையும் அழைக்கும்போதே, இந்த மூவரில் யாராவது ஒருத்தர் என்னை அழைப்பார் என்று அல்பையாகக் காத்திருந்தேன், அப்படி அழைக்காவிட்டாலும் சாருநிவேதிதாவுக்கு பதில் நான் – என்று தலைப்பிட்டு நானே எழுதலாம் என்று நினைத்தேன். காரணம் – வெரி சிம்பிள்:- எனக்குப் பிடித்திருந்தது.

அழைத்த முரளிகண்ணனுக்கு நன்றி...

______________________


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது நினைவில்லை. குடும்பத்தோடு போன ராணுவவீரன்தான் என் ஞாபகத்திற்கு வருகிறது. உடுமலைப்பேட்டை கல்பனா திரையரங்கில். அந்த ஒற்றைக்கண் வில்லன் சிரஞ்சீவியைப் பார்த்து, பயந்துபோயிருக்கிறேன்.



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. மிக ரசித்துப் பார்த்தேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தன்மாத்ரா. (ஒரிஜினல் டி.வி.டி!)

எந்த இடத்திலாவது ஒரு பாட்டு வந்து மோகன்லாலின் மகன் கலெக்டராகி, மோகன்லால் குணமாகி மீராவாசுதேவுடன் டூயட் பாடிக்கொண்டு கேமராவைப் பார்த்து எல்லோரும் சிரிக்க சுபம் போடமாட்டார்களா என்று இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை.



4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

மகாநதி.

இன்னொன்றைச் சொல்லலாம் என்றால் உயர்ந்த உள்ளம். கமல் ஏமாற்றப்பட்டு நிற்கும்போது நானும் அழுதிருக்கிறேன். அப்புறம் பேர் சொல்லும் பிள்ளை. எப்போது தொலைக்காட்சியில் போட்டாலும் தவிர்க்காமல் பார்ப்பேன். ஒவ்வொரு சீனும், வசனமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிப்பதில்லை.

மூன்றுமே கமல் படங்கள். எழுதியபின்தான் பார்க்கிறேன். (நான் ஒரு ரஜினி ரசிகன்!)


5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

விருமாண்டி சர்ச்சை.

இதற்கெல்லாம் பிரச்சினை செய்யும் அரசியல்வாதிகளை என்ன செய்தால் தகும் என்று கோபமாய் வந்தது. அதேபோல ஒரு சீனின் ஏதாவது இருந்தால் ‘டாக்டர்களைப் பற்றி தப்பாய் சொல்லி விட்டார்கள்’ ‘வக்கீல்களைப் பற்றி தப்பாய் சொல்லிவிட்டார்கள்’ என்று தடை கோருபவர்களைக் கண்டால் இப்போதும் கோபமும், சிரிப்பும் வரும்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வ சகோதரர்கள் குள்ள அப்பு! இன்னும் வியக்கிறேன்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிச்சயமாக. குமுதம் லைட்ஸ் ஆனின் ரசிகன் நான். விகடனில் கதிர்வேலனின் எழுத்துக்களும் மிகப் பிடிக்கும்.

முன்பு ஃபிலிமாலயா, சினிமா எக்ஸ்ப்ரஸ் விடாமல் படிப்பேன்.

அவ்வளவு சீரியஸாக கேட்கப்படும் கேள்விகளுக்காகவே தினத்திந்தி சினிமா கேள்விபதிலையும் படிப்பேன். (குருவியாரே.. ப்ரியாமணியின் வலது கன்னத்தில் முத்தம் கொடுக்க ஆசை – டைப் கேள்விகள்!!! எந்த ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் நகைச்சுவைகளையும் மிஞ்சும் கேள்விகள்!)

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜாவின் அதிதீவிர ரசிகன் நான். எதற்காகவும் அவரை விட்டுக் கொடுக்காத அளவுக்கு!

பாடல் வரிகளை உன்னிப்பாக கவனித்து ரசிப்பேன்!

இப்போது ஹாரிஸ் ஜெயராஜையும் விரும்பிக் கேட்கிறேன். லேட்டஸ்ட்:- வாரணம் ஆயிரம் – முன்தினம் பார்த்தேனே அடிக்கடி கேட்கிறேன்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

தன்மாத்ரா (மலையாளம்) பார்த்துவிட்டு டைரக்டரை கன்னாபின்னாவென திட்டினேன். ஒரு படம் பார்த்து விட்டு இப்படி மனசைப் பிழியச் செய்கிறார்களே, இந்தத் தாக்கத்திலிருந்து எப்படா வெளிவருவேன் என்ற கோபத்தில் திட்டிய திட்டு! மோகன்லாலில் நடிப்பு – சான்ஸே இல்லை!

சம்சாரா (திபெத்) – பான் நளின் இயக்கம். துல்லிய ஒளிப்பதிவு. இறுதிக்காட்சியில் “புத்தரைப் பற்றி எல்லாரும் பேசுங்க. அவர் தனியா விட்டுட்டுப் போய்ட்ட யசோதராவைப் பற்றி யார் யோசிச்சீங்க? அவளை மாதிரி என்னால சன்னியாசியா போக முடியாது” என்று ஆரம்பித்து நாயகி பேசும் கடைசிக் காட்சி வசனம் பலமுறை திரும்பத்திரும்ப பார்க்க/கேட்க வைத்தது. அதன் தாக்கத்தில் பான் நளின் இயக்கிய படங்களைத் தேடி – VALLEY OF FLOWERS – வாங்கி வைத்தேன். இன்னும் பார்க்கவில்லை.

செழியனின் உலக சினிமாப் புத்தகத் தொகுப்பு வாங்கி, அதில் சில படங்களைத் தேர்வு செய்து வாங்கிவைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக பார்க்கவேண்டும். அதில் முதலில் பார்க்க நினைப்பது WHERE IS MY FRIEND’S HOME


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கொஞ்சம் விரிவான பதிலைப் பொறுத்தருள்க.

அப்போது உடுமலைப்பேட்டையில் இருந்தேன். யாரோ என்னைத் தேடி வந்து, “நீங்க வார மாதப் பத்திரிகைகள்ல கதையெல்லாம் எழுதிட்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். குமுதம் ஏஜண்ட் மூலமா உங்களைப் பத்தி கேட்டு வந்தோம். ராஜீவ்மேனன்- ஐஸ்வர்யாராய், மம்மூட்டியெல்லாம் வெச்சு ஒரு படம் எடுத்துட்டிருக்காரு. நாளைக்கு ஆனந்த் லாட்ஜ்ல குறிப்பிட்ட சிலருக்கு போட்டுக்காட்டி க்ளைமாக்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணப் போறாங்க. நீங்களும் வரணும்” என்றார். ‘சரி.. சரி’ என்று அவரை அனுப்பி, மம்முட்டிய வெச்சு ராஜீவ் மேனன் பண்றபடத்துக்கு என்கிட்ட ஐடியா கேக்கறாங்களாம்.. என்னமா புருடா விடறாங்க என்று அதை மறந்தே விட்டேன். ஓரிரு வாரங்களுக்குப் பின் ஜூனியர் விகடனில் ‘உடுமலைப்பேட்டையில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தை சிலருக்கு திரையிட்டுக் காட்டி க்ளைமாக்ஸ் பற்றி விவாதித்தார் இயக்குனர் ராஜீவ்மேனன்’ என்று படித்தபோது தவறவிட்டுவிட்டதை உணர்ந்தேன்!

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த என் நண்பர் ஜனனி ஆர்ட்ஸ் வெங்கடாசலம் ஓரிரு படங்களுக்கு டைட்டில்ஸ் எழுதியுள்ளார். (வாழ்க்கைச் சக்கரம், அவசர போலீஸ் 115) இவர் மணிவண்ணன், சுந்தர்.சி-யோடு தங்கியிருந்த அனுபவங்களைச் சொல்வார். சபாஷ் மீனாவை உல்டா பண்ணியதை சுந்தர்.சி-யே மேட்டுக்குடி ஷூட்டிங்குக்கு பொள்ளாச்சி வந்தபோது சொல்லி ரசித்ததை வெங்கடாசலம் பகிர்ந்துகொள்வார். சுந்தர்.சி – குஷ்புவைத் திருமணம் செய்துகொண்ட செய்தி வந்த அன்று இரண்டு ஃபுல் அடித்தார் வெங்கடாசலம்!

இன்னொரு நண்பர் சுந்தர்ராஜன் (சுந்தர்கோல்ட்ஸ்மித் ன்னு டைட்டில்ல வரும் என்பார். நான் பார்த்ததேயில்லை!) ப்ரவீண்காந்திடம் அஸிஸ்டெண்டாக இருந்தார். இப்போதும் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ‘ரட்சகன்னு பேரு. ஏ.ஆர். ம்யூசிக்கு. நாகார்ஜூன் சுஷ்மிதா. படம் வரட்டும். எங்க டைரக்டர் எங்கியோ போயிடுவாரு’ என்று கொஞ்சம்போல கதையைச் சொல்வார். (எனக்குத் தெரிந்து குஞ்சுமோன்தான் ‘எங்கியோ’ போனார்.) விடைபெறும்போது ‘ஒரு அம்பது ரூபா இருந்தா குடு கிருஷ்ணா’ என்று வாங்கிப்போவார்.

அடுத்தமுறை வந்தபோது ‘ப்ரசாந்த்-ஜோதிகா கால்ஷீட் கன்ஃபார்ம்! அதே ஏ.ஆர்தான் ம்யூசிக்.’ என்று கதையைச் சொல்வார். இந்தமுறை கொஞ்சம் முன்னேறியிருந்தார். நூறு ரூபாய் கேட்டார்.

என் மீது அன்பு வைத்திருந்த நல்ல மனுஷன். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

பல்லடம் ஜி.பி.டீலக்ஸ் தியேட்டர் அதிபர் மகன் வசீகரன் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் என்ற படத்தில் நடித்திருந்தார். ஓரிரு வருடங்களுக்கு முன், அந்த தியேட்டர் அதிபரின் தம்பியோ, அண்ணனோ தன் மகனை வைத்து மலரே மௌனமா என்ற படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், அவர் திருப்பூர் மார்க்கெட்டில் இருக்கும் இன்னொருவரை சந்திக்க வரப் போவதாகவும், அங்கே என்னை வரச் சொல்லியும் ஒரு நணப்ர் அழைத்தார். அந்த ஹீரோவும் வந்திருந்தார். அப்போது என்னை அழைத்த நண்பர் நானென்னவோ பெரிய எழுத்தாளர் என்ற ரேஞ்சுக்கு சொல்லிவைத்திருந்தார். அங்கே இருந்த ஒரு தொழிலதிபர் அவருக்கு ஷாலினியின் தந்தையை மிகவும் பழக்கமென்றும், அஜீத் தொடர் தோல்விகளால் விரக்தியில் இருப்பதாகவும் சொல்லி, “அஜீத்துக்கு சூப்பர் ஹிட் தர்ற மாதிரி ஒரு கதையைச் சொல்லுங்க தம்பி. ஃபுல் அண்ட் ஃபுல் கமர்ஷியலா இருக்கணும்” என்றார்.

ஒரு பக்கம் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு (என்னையும் நம்பி இதெல்லாம் கேட்கறாங்களே..) ஒரு அரைமணிநேரம் காலாற நடந்துவிட்டு போய் கதை சொன்னேன். அஜீத் ஒரு கார்ப்பந்தய வீரர். இடையில் சில காதல் காட்சிகள். சில காரணங்களுக்காக கார் ரேஸ் பக்கம் போகக்கூடாது என்று சத்தியம் வாங்கிறாள் காதலி. தாயின் கட்டளைக்காக, தாயைக் காப்பாற்ற காதலி சொல்லை மீறி க்ளைமேக்ஸில் மலேசியாவில் நடக்கும் முக்கியப் போட்டியில் அஜீத் கலந்துகொள்கிறார். இவர் இருந்தால் ஜெயிக்க முடியாதென்று வில்லன் சதித்திட்டம் தீட்டுகிறான். அதை எப்படி அஜீத் முறியடிக்கிறார்...?

‘க்ளைமேக்ஸ் முக்காமணிநேரம் கார் ரேஸ்லயே காட்டறோம்க. இண்டர்வெல்லுக்கு அப்புறம் ஸ்பீடுதான்’ என்று நான் சிரிக்காமல் கலாய்த்ததை நம்பிக் கேட்டுக் கொண்டிருந்த அவர்கள் புளகாங்கிதமெல்லாம் அடைந்துபோய் (நம்ம சொன்னவிதம் அப்படி!) ‘கதையை ஒரு ஸ்க்ரிப்ட்டா எழுதிக் கொண்டாங்க. அஜீத்தை நேர்ல பாத்து நீங்களே கதையைச் சொல்லுங்க’ என்றார்கள்.


“என் பேரு K.B. கிருஷ்ணகுமார்ங்க. இனிஷியல் கவனிச்சீங்கள்ல. K.B.-ங்க. K. பாலசந்தர், K. பாரதிராஜா, K.பாக்யராஜ், K.பாலசந்திரமேனன்னு எல்லா K.B.க்கும் நான்தான் கலையுலக வாரிசு. ஒண்ணும் கவலைப்படாதீங்க. அசத்தீடலாம்”என்று சொன்னதற்கு ஆச்சர்யப்பட்டு இரண்டு புரோட்டா எக்ஸ்ட்ராவாக ஆர்டர் பண்ணினார்கள். சாப்பிட்டுவிட்டு ஓடிவந்துவிட்டேன்.

அதற்கப்புறம் நாலைந்துமுறை ஃபோன் பண்ணிக் கேட்டார்கள். எனக்குள்ளிருக்கும் சோம்பேறியும், சில நண்பர்களின் அனுபவமும் என்னை எழுதவே விடவில்லை. 'வரலாறு' ஹிட் ஆனபிறகுதான் ஆளைவிட்டார்கள். (என்னையும், அஜீத்தையும்!)

கபடிக்குப் பதிலாக கார் ரேஸை நுழைத்து, கில்லியை உல்டா பண்ணியதுகூடவா இவங்களுக்குத் தெரியல என்று இன்றைக்கும் வியப்பாக இருக்கும்!

மேலே கண்ட எதுவும் தமிழ்சினிமா மேம்பட உதவாது என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ஒன்றே ஒன்று, அந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் விவாதத்தில் ராஜீவ்மேனன் நேரடியாக இருந்தாரா என்று தெரியாது. இருந்திருந்தால், நான் போய் கலந்துகொண்டு பேசியிருந்தால் நிச்சயமாக அவரது உதவியாளனாகும் வாய்ப்பை என் பேச்சின் மூலம் பெற்றிருப்பேன் என்று தோன்றும். அப்படிப் பெற்றிருந்தால் ராதாமோகனைப் போன்ற இன்னொரு டைரக்டரை த்மிழ்சினிமா பெற்றிருக்கும்! (ரொம்பத்தான்...)


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், சசிகுமார், வெங்கட்பிரபு, ராதாமோகன், மிஷ்கின் நம்பிக்கை தருகிறார்கள். மெல்லிய நகைச்சுவையோடு உணர்வுகளை/உறவுகளைச் சொல்லும் படங்கள் அதிகம் வரவேண்டும்.

ஒரு படத்தை எடுத்தோமா, கொடுத்தோமா என்பதில் தமிழ்சினிமா கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இரண்டாண்டு, மூன்றாண்டு என்றால் கடுப்பாக இருக்கிறது.


டெக்னிக்கலாக முன்னேறி இந்தியச் சினிமா என்றால் இந்தி மட்டுமே அடையாளம் காட்டப்படுவதைத் தூரம் தள்ளி, தமிழ்சினிமாவை முன்னிறுத்த பெரிய தலைகள் ஏதாவது செய்யணும் பாஸ்!


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

அதிகம் நேரமெடுக்க வைத்த, மிகவும் சுவாரஸ்யமான கேள்வி!

இன்னும் 365 நாட்களே என்று டி.வி.க்களில் கவுண்ட் டவுன் காண்பிக்க ஆரம்பிப்பார்கள். சென்னையில், நடிக, நடிகையரை அடிக்கடி பொது இடங்களில் பார்க்கலாம். பலபேர் வெளிநாடு ஓடிவிடுவார்கள்.

திரைத்துறையினர் கூடிப்பேசி நேரடி நாடகங்கள் நடத்தலாம், ரஜினி, கமல் போன்றோர் நாடகத்தில் நடிக்கலாம். இந்த ஒருவருட இடைவேளையை நாடகத்துறையை மேம்படுத்த திரையினர் உதவலாம்.

ஒரு ஆண்டு என்பது கம்மிதான். மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு இதுபோல தடை இருக்கலாம் என்று சிலருக்கு தோன்றும். திரைத்துறையினரே கூடி, ஐந்து (அ) பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இப்படி இடைவெளி விடலாம் என்று தீர்மானிக்கக்கூடும்!

புத்தகவாசிப்பு அதிகப்படும்.

தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷமாகவே இருக்கும். ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணரப்போகிறோம் என்ற சந்தோஷமே அது. ஆனால் இதில் பேசக்கூடாது என்ற விதி இல்லை. ஆகவே நான், முரளிகண்ணன், லக்கிலுக், நர்சிம், அதிஷா, கேபிள் சங்கர் என்று பலரும் மாதமொருமுறை கூடி சினிமா விவாதம் நடத்த முற்படுவோம். சிறப்பு விருந்தினராய் சசிகுமாரை, ராதாமோகனை, யூகிசேதுவை அழைப்போம்!


தமிழர்கள் அவரவர் ஹீரோக்களை அரசியலுக்கு அழைப்பார்கள். ஒரு வருஷம் சும்மாத்தானே இருக்கோம் என்று சிலர் ஆரம்பிக்கவும் கூடும். செய்திகளில் பெயர்வராமல் இருந்தால் பலருக்கு தூக்கம் வரப்போவதில்லை. அதற்காகவே நடிகர், நடிகைகள் பொதுச்சேவை என்று இறங்குவார்கள். ரசிகர்கள், தொண்டர்கள் என்ற பெயரில் உலாவுவார்கள்.

இதுக்கு ஐந்துபேரைக் கூப்பிடணுமா.. யாரையும் விட மனசில்ல... இருந்தாலும்...


வெயிலான் (எத்தனை நாள் எழுதாம டிமிக்கி குடுப்பீங்க?)
வெண்பூ (மாசத் துவக்கம்தானே... எழுதுங்க பார்ட்னர்)
ச்சின்னப்பையன் (லீவு முடிஞ்சுடுச்சில்ல?)
குசும்பன் (உங்க பாணில கலக்குங்க...!)
மைஃப்ரெண்ட் (மாட்டிகிட்டீங்களா..?)

41 comments:

கோவி.கண்ணன் said...

நான் தான் முதலில் !

கோவி.கண்ணன் said...

உங்கள் கதையை படம் எடுக்காததால் அஜித் தப்பினார், நாங்களும் தல படம் இவ்வளவு மோசமா என்று பெருமூச்சு விடாமல் தப்பித்தோம்.

ஆழமாக எழுதி இருக்கிறீர்கள் பரிசல், பூச்சு இல்லாத நடை, மொத்தத்தில் ஒரு ட்ரைலர் பார்த்தது போல் இருந்தது.

புதுகை.அப்துல்லா said...

மீ த செகண்டு

புதுகை.அப்துல்லா said...

மொத்தத்தில் ஒரு ட்ரைலர் பார்த்தது போல் இருந்தது.
//

அப்போ பரிசல் அண்ணே ஃபிலிம் காட்டுறாருங்குறீங்களா???
:))))))))))))))))

விஜய் ஆனந்த் said...

:-))))....

தியாகராஜன் said...

கருத்துகள் அனைத்தும் ரசிக்குபடியாக எழுதியுள்ளீர்கள்.
ந்ன்றாக உள்ளது.
கேள்வியும் நீரே பதிலும் நீரே.

பரிசல்காரன் said...

//தியாகராஜன் said...

கருத்துகள் அனைத்தும் ரசிக்குபடியாக எழுதியுள்ளீர்கள்.
ந்ன்றாக உள்ளது.
கேள்வியும் நீரே பதிலும் நீரே.//

இது தொடர் விளையாட்டுங்க. கேள்விக்கு மூலம் வேற ஒருத்தர்!

ஜியா said...

:))

anujanya said...

கே.கே.

வழக்கம் போல படு சுவாரஸ்யம். உங்க ஏரியா வேற (அதாவது நீங்க சேரப்போற துறை). ஆல் த பெஸ்ட்.

அனுஜன்யா

☼ வெயிலான் said...

// வெயிலான் (எத்தனை நாள் எழுதாம டிமிக்கி குடுப்பீங்க?) //

எழுதிடறேன் பாஸு!

தருமி said...

//உங்க ஏரியா வேற (அதாவது நீங்க சேரப்போற துறை). ஆல் த பெஸ்ட். //

அப்டியா? உண்மையாயின் வளர வாழ்த்துக்கள்

Mahesh said...

பாலசந்திரபாரதிராஜபாக்கியராஜபாண்டியராஜகிருஷ்ணகுமார்.... அம்மாடி தப்பில்லாம இவ்வளவு பெரிய பேர் எழுதறதுக்குள்ள.....

சுய நேர்காணல் நல்லா இருக்குது.... எல்லா நடையிலயும், எல்லா பாணியிலயும் எப்பிடி எழுத முடியுது? உங்களோட அப்சர்வேஷன் ரொம்ப ஸ்ட்ராங்...

narsim said...

அடடாடா.. உங்க பதிவ பார்க்காம என்னோட உளரல போட்டேனே..

நல்லா எழுதியிருக்கீங்க பரிசலாரே.. சென்னை கனவுத்தொழிற்சாலை உங்கள் வரவுக்காக காத்திருக்கிறது.. KB னா சும்மாவா?

நர்சிம்

Bleachingpowder said...

//ஒரு அம்பது ரூபா இருந்தா குடு கிருஷ்ணா’ என்று வாங்கிப்போவார்.

இந்தமுறை கொஞ்சம் முன்னேறியிருந்தார். நூறு ரூபாய் கேட்டார்.//

:((
உரிமையோடு கேட்டான், நானும் கொடுத்தேன் என்றாலும், ஒருவருடைய ஏழ்மையை வைத்து நகைச்சுவை வேண்டாம் பரிசல்காரரே.இப்பதிவை அவர் படிக்க நேர்ந்தால்,உங்களிடம் பணம் வாங்கியிருக்க கூடாதோ தோனலாம்.

மற்றபடி வழக்கம்போல சூப்பர எழுதியிருக்கீங்க :))

Athisha said...

எழுத்தாளர் பரிசல்க்காரனுக்குள்ள
ஒரு இயக்குனர் பரிசல்க்காரன் ஒளிஞ்சிகிட்டு இருந்திருக்கான் பாரேன்

இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்

முரளிகண்ணன் said...

super post

குசும்பன் said...

எழுதிடுறேன் நண்பரே!

Dr.Rudhran said...

have fun, all the best

பரிசல்காரன் said...

// அதிஷா said...

எழுத்தாளர் பரிசல்க்காரனுக்குள்ள
ஒரு இயக்குனர் பரிசல்க்காரன் ஒளிஞ்சிகிட்டு இருந்திருக்கான் பாரேன்

இந்த பையனுக்குள்ளயும் என்னமோ இருந்திருக்கு பாரேன்//

கூறு கெட்ட குப்பா!

லதானந்த் said...

Dear Krishnaa!

In this browsing centre tmil fonts are not availble.

I feel very happy when we had our telephonic conversations during last night.

Pl give me a missed call if u r free tonight.

Lathananth

பரிசல்காரன் said...

@ லதானந்த்

அங்கிள்...

எனக்கும் உங்ககூட பேசினதுலயும், நீங்க உரிமையோட என்கிட்ட சில விஷயங்களை பகிர்ந்துகிட்டதுலயும் மிக மகிழ்ச்சி!!!

மாலையில் அழைக்கிறேன்!!

புதிய பணி எப்படி இருக்கு? அதப்பத்தி குஜாலா எதுனா எழுதலாம்ல?

ஊட்டியும் தேனிலவு தம்பதிகளும்-ங்கற தலைப்புல எழுதலாமே...

சின்னப் பையன் said...

எவ்ளோஓஓ பெரிய பதிவு... இருங்க படிச்சிட்டு வர்றேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடடா நல்ல சான்ஸ் போச்சா... நம்மளயெல்லாம் கூப்பிடுவாங்களான்னு நினைச்சு நீங்களே குறைச்சு மதிப்பிட்டிருக்கீங்க..
என்னைய கேட்டிருந்தான்னு நம்ம அடிக்கடி கமெண்ட் அடிப்போம்ல அதான் கூப்பிட்டு கேட்டிரலாம்ன்னு கேட்டிருப்பாங்க..:)

கயல்விழி said...

//ஒன்றே ஒன்று, அந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் விவாதத்தில் ராஜீவ்மேனன் நேரடியாக இருந்தாரா என்று தெரியாது. இருந்திருந்தால், நான் போய் கலந்துகொண்டு பேசியிருந்தால் நிச்சயமாக அவரது உதவியாளனாகும் வாய்ப்பை என் பேச்சின் மூலம் பெற்றிருப்பேன் என்று தோன்றும். அப்படிப் பெற்றிருந்தால் ராதாமோகனைப் போன்ற இன்னொரு டைரக்டரை த்மிழ்சினிமா பெற்றிருக்கும்! (ரொம்பத்தான்...)
//

It's never too late!! நல்ல திரைக்கதையுள்ள படங்கள் வருவது ஏறக்குறைய நின்றுவிட்டது, கனவு நிறைவேற வாழ்த்துக்கள் :)

ALIF AHAMED said...

வாழ்த்துக்கள்!!!


:)

சென்ஷி said...

//Bleachingpowder said...
//ஒரு அம்பது ரூபா இருந்தா குடு கிருஷ்ணா’ என்று வாங்கிப்போவார்.

இந்தமுறை கொஞ்சம் முன்னேறியிருந்தார். நூறு ரூபாய் கேட்டார்.//

:((
உரிமையோடு கேட்டான், நானும் கொடுத்தேன் என்றாலும், ஒருவருடைய ஏழ்மையை வைத்து நகைச்சுவை வேண்டாம் பரிசல்காரரே.இப்பதிவை அவர் படிக்க நேர்ந்தால்,உங்களிடம் பணம் வாங்கியிருக்க கூடாதோ தோனலாம்.//

உண்மையில் எனக்கும் இந்த இடத்தில் சற்று மனவருத்தமாய்த்தான் இருந்தது. என்ன செய்வது.. சொல்லாமல் இருக்க முடியவில்லை, மன்னிக்க :(

பதிவு நன்றாய் உள்ளது.

thamizhparavai said...

பரிசலாரே...
பதிவு வழக்கம்போல் சூப்பர்..நீங்க ராஜீவ் மேனனை மிஸ் பண்ணீங்களா இல்ல நாங்க இன்னொரு கே.பி யை மிஸ் பண்ணினோமான்னு தெரியல.எதிர்பார்க்கிறோம்.அது சரி...அது யாரு அஜீத்து...ஏதும் புதுசா நடிக்க வந்தாங்களா...?
//இப்பதிவை அவர் படிக்க நேர்ந்தால்,உங்களிடம் பணம் வாங்கியிருக்க கூடாதோ தோனலாம்.//
இவ்விஷயத்தில் பிளீச்சிங் பவுடர்,சென்ஷியின் கருத்தில் நானும் உடன்படுகிறேன்.இது எல்லாத்தியும் விட எனக்குப் பின்னூட்டடத் தோன்றிய விஷயம் இதுதான்.
நீங்கள் அழுத மூன்று படங்களில் நானும் இரண்டிற்கு அழுதிருக்கிறேன்.'மகாநதி' எல்லோரும் அழுதது.
ஆனால் நிறையப் பேர் 'உயர்ந்த உள்ளம்' மொக்கை என்பார்கள். ஆனால் கமல் நண்பர்களிடம் ஏமாறும்போதும், சாராயம் குடித்துவிட்டு,சாக்கடை அள்ளச்சென்று திரும்பிவந்து அம்பிகாவிடம் கூறும் காட்சியிலும் என் கண்கள் கலங்கிவிட்டன. இது வழக்கமான எஸ். பி,முத்துராமன் படத்திலிருந்து சிறிது வேறுபட்டிருப்பதுபோல எனக்குத் தோன்றியது.
//இளையராஜாவின் அதிதீவிர ரசிகன் நான். எதற்காகவும் அவரை விட்டுக் கொடுக்காத அளவுக்கு!

பாடல் வரிகளை உன்னிப்பாக கவனித்து ரசிப்பேன்!//
இதுக்கு வேறென்ன சொல்ல முடியும் இதைத் தவிர...'ரிப்பீட்ட்ட்டேய்ய்ய்ய்'

வெண்பூ said...

ரொம்ப பெரிய பதிவு.. ஆனா போர் அடிக்காம போகுது, பின்ன எழுத்தாளர்னா சும்மாவா.. :)))

Nilofer Anbarasu said...

//அப்படிப் பெற்றிருந்தால் ராதாமோகனைப் போன்ற இன்னொரு டைரக்டரை த்மிழ்சினிமா பெற்றிருக்கும்! //

Better late than never.

பரிசல்காரன் said...

//உரிமையோடு கேட்டான், நானும் கொடுத்தேன் என்றாலும், ஒருவருடைய ஏழ்மையை வைத்து நகைச்சுவை வேண்டாம் பரிசல்காரரே.இப்பதிவை அவர் படிக்க நேர்ந்தால்,உங்களிடம் பணம் வாங்கியிருக்க கூடாதோ தோனலாம்.//

உண்மையில் எனக்கும் இந்த இடத்தில் சற்று மனவருத்தமாய்த்தான் இருந்தது. என்ன செய்வது.. சொல்லாமல் இருக்க முடியவில்லை, மன்னிக்க :(//

திறமையான அசிஸ்டெண்டுகளின் நிலமையைச் சொல்லவும், நான் திரைத்துறைக்கு போக பயந்ததற்குக் காரணமான இது போன்ற சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டே இதை எழுதினேன்.

ஸாரி. :-(

Rangs said...

Hello Friend!

Are you K.B.Krishnakumar from Krishnapuram? (Sakkara mill?)

Nice to see your blog. I've read lot of your readers letters in Weeklies. Then I would be thinking, OK, atleast a person writes to Mags from Udt.

By the way, as you would've guessed me too from Udt. Mukkonam to Kongalnagaram road la oru kutti graamam..Ippa chennai la vaelai..

OOr nenappau varudhunga unga blog padikkum pothu..

Namma oorla irundhu vandha Kavundamani maari neengalum periya aalaa vara vaazhthukkal!!

Rangs said...

romba sandhoshamga...anaa epdi thamizha comment podaradhunnu therilanga,...Thappa eduthukkadheenga..

Rangs said...

romba sandhoshamga...anaa epdi thamizha comment podaradhunnu therilanga,...Thappa eduthukkadheenga..

thamizhparavai said...

//anaa epdi thamizha comment podaradhunnu therilanga//
pls go to tis url
www.tamileditor.org

Sanjai Gandhi said...

எச்சுச்மீ டியர் கேகே.. இஸ்கூல் படிக்கும் போது கூட இவ்ளோ கேள்விக்கு பதில் சொல்லி இருக்க மாட்டிங்க.. அப்டியே சொல்லி இருந்தாலும் ஒண்ணேமுக்கா வரியில முடிச்சி இருப்பிங்க..

உங்க டீச்சர் பட்ட பரிதாபத்துல பாதியாவது எங்க மேல பட்டிருக்கக் கூடாதா?

ஆனாலும் ஒரு அருமையான பதிவு என்பதால் மன்னித்துவிட்டோம்.. :))

மைஃப்ரண்ட் என்னையும் மாட்டி விட்டுட்டாங்க.. உங்க பதிவுகள எல்லாம் படிக்கும் போது ரொம்ப பயம இருக்கு.. நமக்கு மொக்கை கும்மி விட்டா வேற யாரத் தெரியும்.. நான் எங்க போவேன் :((

எல்லாரும் நல்லா இருங்க :)

Rangs said...

மிக்க நன்றி தமிழ்ப்பறவை! இனிமேல் தடையில்லை!

பரிசல்காரன் said...

Rangs,

Pls mail me n kbkk007@gmail.com

சென்னையில இன்னொருத்தன் சிக்கீண்டாண்டா-ன்னு கத்தற மனசாட்சியை அடங்கச் சொல்லீட்டு எழுதறேன் இந்தக் கமெண்டை!!!

பரிசல்காரன் said...

//Rangs said...

Hello Friend!

Are you K.B.Krishnakumar from Krishnapuram? (Sakkara mill?)//

Exactly!

kbkk007@gmail.com

முதல்ல தப்பா inன்னுக்கு பதிலா n வந்துடுச்சு.

Rangs said...

மெயில் அனுப்பியாச்சுங்க..படிச்சுப் பாத்துட்டு ரிப்ளை பண்ணுங்க..செரிங்களா?

MyFriend said...

//தன்மாத்ரா. (ஒரிஜினல் டி.வி.டி!)//

நம்பிட்டோம்ப்பா. ;-)

MyFriend said...

ஹாஹாஹா.. ;-) கலக்கல். ;-)