Saturday, March 16, 2013

பரதேசி - நியாயம்ம்மாஆஆஆஆரேஏஏஏஏஏஏ...!



ரதேசி திரைப்படத்தின் விமர்சனத்தையெல்லாம் எழுதுமளவு கொஞ்சம் கூட அருகதையெல்லாம் இருக்கிறதா எனக்கென்று தெரியவில்லை. பாலா என்கிற படைப்பாளி இன்னும் என்னை பிரமிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எனக்கு சோகமான படங்கள் என்றாலே பிடிக்காது. ஆனால்- பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தாண்டி, பாலா எதைப் படைத்தாலும் பார்த்துக் கொண்டாடுவேன். பரதேசியும் அப்படியே.

கதை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இந்நேரம். அதைக் காட்சிப்படுத்திய விதம் பாலாவுக்கு மட்டுமே வாய்க்கிற வித்தை. இடைவேளையில் அந்த ஒற்றைக் கை, அசைத்து அழைக்கியிலேயே அழவைத்துவிடுகிறான் மனுஷன். இடைவேளைக்குப் பின், தொடரும் காட்சிகளில் அறைகிறது உண்மைகள். 

அதர்வா, வேதிகா, தன்ஷிகா மற்றும் கருத்தகன்னியாக நடித்திருக்கும் நடிகை, அவர் கணவனாக நடித்தவர், அதர்வாவின் பாட்டி என்று எல்லோரையும் நடிக்க வைத்தவிதத்திலேயே ‘அடிக்கிறாரா பாலா’ என்று விமர்சித்தவர்களையெல்லாம் அடித்துவிட்டார். கொட்டடித்தபடி ‘நியாயம்மாஆஆஆரேஏஏஏ’ என்கிற அதர்வா, கடைசியில் அதே நியாயம்மாஆஆஆரேஏஏஏ-வை நியாயமே இல்லாமல் நடந்து கொள்பவர்களையும் பார்த்துக் கதறிக் கேட்கிற இடம் வலி. இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது அந்தக் கதறல்.

கேமரா- செழியன். முதல் சீனில் இதுதான் இவர்கள் உலகம் என்று சந்து பொந்தெல்லாம் ஓடி, சாலூர் கிராமத்தைக் காட்டும் செழியனின் கேமரா, கடைசிக் காட்சியில் 360 டிகிரி கோணத்தில் தேயிலைத் தோட்டத்தைக் காட்டியதன் மூலமே ‘இனி இதுதான் இவர்கள் உலகம் என்று சொல்லாமல் சொல்லி - கனக்க வைக்கிறது.

நாஞ்சில் நாடனின் வசனம், படத்துக்குப் பொருந்தி வருகிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல், சாலூர் கிராமத்தில் பெரிசுகளெல்லாம் பேசிக் கொள்வதை வசனப்படுத்திய விதம் அருமை. மந்திரி என்றாலே இனி சிரிப்புதான் வரும். 

இசை: ஜி.வி.பிரகாஷ். பாடல்களெல்லாம் சரி. ஆனால், இசைப்பது மட்டும் இசையல்ல. சில இடங்களில் மௌனமும் இசை என்பதை இவர் உணரவேண்டும். பின்னணி இசையில், கடைசி சில இடங்களில் இசை தூக்கலாக இருப்பது உறுத்துகிறது.

கவிஞர் வைரமுத்து, கலை இயக்குனர் பாலசந்தர், கேமராமேன் செழியன் - மூவரும் தங்கள் ஷோகேஸில் ஓர் அடுக்கை காலி செய்து வைக்கலாம். இந்தப் படத்திற்கான விருதுகளை அடுக்கிவைக்க.

இயக்குனர் பாலா?

ஒரு புதிய, பெரிய ஷோகேஸுக்கு ஆர்டர் செய்துவிடுங்கள்.

Friday, March 8, 2013

முதல்கதை எழுதிய கதை

1993-1994 இருக்கும். கதை, கட்டுரைகளை சுவாசம் போல வாசித்துக் கொண்டிருந்த காலகட்டம். சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கமெல்லாம் படித்து - பிடித்த வரிகளையெல்லாம் அடிக்கோடிட்டு, ஒரு கட்டத்தில் ரூல்ட் பேப்பரில் அச்சிடப்பட்ட புத்தகம் போல ஆகிவிட்டது அது. டைரியில் அவ்வப்போது சிலபலவற்றைக் கிறுக்கி வைத்திருக்க, அதைப் பார்த்த நண்பர்கள், ‘உன் நடையே நல்லாத்தான் இருக்கு. நீயும் எழுதலாமே’ என்று ஊக்குவித்தார்கள். அவர்கள் சொன்னது எழுத்து நடையை.

எதற்கு கதை எழுதிப்போடுவது என்று குழப்பம். அப்போது திருப்பூரில் கரும்பு என்றொரு கையெழுத்துப் பத்திரிகை வந்துகொண்டிருந்தது. நூலகங்களில் கிடக்கும். (கிடைக்கும் அல்ல. கிடக்கும்தான்) நான் பார்த்ததுண்டு. யாரைத் தொடர்பு கொண்டேன், எப்படி எழுதி அனுப்பினேன் என்றெல்லாம் நினைவுச்சங்கிலியில் இல்லை. என் சொந்தக் கையெழுத்தில், அந்தப் பத்திரிகையில் முதன்முதலாக ஒரு கதை வந்தது. அதாவது, சேர்க்கப்பட்டது.

அடுத்தநாள் நூலகம் போனபோது அதை அறிந்து கொண்டேன். கடைசியாகக் கோர்க்கப்பட்டிருந்தது எனது கதை. பெரியவர் என்று தலைப்பு. அந்தக் கதைக்குப் பிறகு இரண்டு வெற்றுத்தாள்கள், வாசகர் கருத்துகளுக்காக விடப்பட்டிருந்த்து.


நான், அதை எடுத்துப் படித்தேன். நாலைந்து முறை படித்திருப்பேன். பின்னணியில் இளையராஜாவின் வயலின் இசையோடு படித்தேன். அப்படி ஒரு போதை. பிறகு அதை புத்தகங்கள் கிடந்த டேபிளிலேயே போட்டுவிட்டேன். 

புழுக்கமாக இருந்ததால் ஒரு ஜன்னலோரத்தைத் தேர்ந்தெடுத்தேன். அந்த டேபிள் பார்வைக்குப் படுமாறு அமர்ந்து கொண்டேன்.  கையெழுத்துப் பிரதியை யாராவது எடுக்கிறார்களா / படிக்கிறார்களா என்று ஆவலோடு. இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த நூலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் அந்தக் கதையைப் படித்து, குறிப்புகளுக்கான பக்கத்தில் அதைப் பாராட்டி, யாரிந்த கே.பி. கிருஷ்ணகுமார் என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டு.....

ம்ஹும். ஒன்றுமே நடக்கவில்லை. கையில் ஒரு நாளிதழையும் மறைத்துக் கொண்டு –அதையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தேன். யாரும் சீண்டியபாடில்லை.

என்ன குறை என்று போய்ப் பார்த்தேன்.

பெரிய டேபிள். சுற்றிலும் நாற்காலிகள் முழுக்க ஆட்கள். படிக்க விரும்பும் புத்தகங்களைத் தேடித்தேடி அங்கங்கே கலைந்த புத்தகங்கள். அதில் பலராலும் விலக்கி வைக்கப்பட்ட சில புத்தகங்கள் ஓர் ஓரமாய்ச் சேர்ந்திருந்தன. நல்ல புத்தகங்கள்தான். ஆனாலும் அவற்றைத் தேடுபவர்கள் குறைவு. அதில் - ராமகிருஷ்ண விஜயம், சைவ சிந்தாந்தப் புத்தகங்களுக்குப் பக்கமாக அது கிடந்தது. மார்க்கெட்டிங் சரியில்லை என்று நினைத்து, அந்தக் கையெழுத்துப் பத்திரிகையைக் கையில் எடுத்தேன். நைஸாக வேறு எதையோ தேடுவது போல - அப்போது கிடந்த விகடன், குமுதம் வகையறாக்கள் இருந்த சைடில் – அதைப் போட்டேன். பிறகு மீண்டும் வந்து தூரமாக அமர்ந்து கொண்டேன்.

ஐந்து நிமிடம்.

பத்து நிமிடம்.

பதினைந்து நிமிடம்.

இருபது நிமிடம்.

ம்ஹும். யாரும் அதை எடுத்துப் படிக்கவில்லை. நான் ரொம்ப நேரமாக அங்கேயே இருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி வேறு உந்த, போகலாமா என்று எழுந்தேன். அப்போதுதான் – ஒருவர் அவசர அவசரமாக வேறொரு நாற்காலியிலிருந்து எழுந்து வந்து அந்த கையெழுத்துப் பத்திரிகையை எடுத்தார். தொடர்ந்து படிக்கும் வாசகர் என்று நினைத்துக் கொண்டேன். காரணம், பெயரையெல்லாம் பார்க்கவில்லை. அதை எடுக்க என்றே வந்ததைப் போல, அவசரமாக எடுத்துச் சென்று தூரமாக ஒரு நாற்காலியில் அமரச் சென்றார்.

இந்த நேரத்தில், ஓரிருவர் என்னைக் கடந்து சென்றனர். அந்தப் பிரதியை எடுத்த நபர் என் கண்ணிலிருந்து மறைந்து விட்டார். பெரிய அறை. அப்போதெல்லாம் நூலகங்களில் நல்ல கூட்டம் வேறு இருக்கும். ஆஹா.. அந்த வாசகரை விட்டுவிட்டுமோ என்று மனம் பதற – அவரைத் தேடினேன். ஒவ்வொரு நாற்காலியாக அமர்ந்திருந்தவர்களை உற்று நோக்க ஆரம்பித்தேன். ஆள் அடையாளம் தெரியாது. கையில் அந்தப் பத்திரிகை இருக்கும். முழுக்க முழுக்க வெள்ளைக்காகிதத்தில் எழுதப்பட்ட, நோஞ்சானாய்த் தெரியும் கையெழுத்துப் பத்திரிகை. அதை வைத்துத்தான் பார்க்க வேண்டும்.


சில நொடிகளுக்குப் பிறகு, எனக்கு நேரே ஒரு நாற்காலி கண்ணை மறைக்க –அதையும் தாண்டி, அவர் கை மட்டும் என் கண்ணில்பட்டது. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையோடு தெரிந்த கை. ஆர்வமாக, எழுந்து பார்த்தேன்.

கண்கள் சொருக, அதை வைத்து விசிறிக்கொண்டிருந்தார் அவர்.
.

Thursday, February 7, 2013

அவியல் 07.02.2013


முகப்புத்தகத்தில் இல்லாத, என் லட்சக்கணக்கான (யாருப்பா இவ்ளோ சத்தமா சிரிக்கறது?) வலை வாசகர்களுக்காக அதில் நானெழுதியவற்றின் தொகுப்பு:

--------------------------


நேத்து நடந்தது இது: 

பேங்க்ல அளவான கூட்டம். எனக்குக் கொஞ்சம் தள்ளி நின்னுட்டிருந்தார் அந்த நடுத்தர வயசுக்காரர். திடீர்னு அவர் மொபைல் 'விநாயகனே.. வினை தீர்ப்பவனே'ன்னு அலறீச்சு.

இவர் ஃபோனை எடுத்து, 'சொல்லு மாப்ளே'ன்னார் சவுண்டா. பேங்க்ல சுத்தி நின்னவங்கள்லாம் அவரை ஒரு மாதிரியாப் பார்த்தாங்க. இவரு அதையெல்லாம் கண்டுக்காம, 'மாப்ள.. பன்னெண்டு மணிக்கு வந்துடவா?'ன்னாரு.

இப்ப கவுண்டர்ல இருந்த ஒரு வங்கி அதிகாரி எழுந்து நின்னு, 'ஹலோ.. இது பேங்க்'னாரு.

நம்மாளு 'டக்'னு கொஞ்சம்கூட டெசிபலைக் கொறைக்காம அதே சவுண்ட்ல சொன்னாரு:

"
பேங்க்ல இருக்கேன் மாப்ள. கொஞ்சம் மெதுவா பேசு"

_____________________________________________

ந்த விஸ்வரூபம் பிரச்சினை ஒரு வழியா முடிவுக்கு வருதுன்னு நினைக்கறேன். ஆளாளுக்கு எல்லாரையும் கேள்வி கேட்டுக் கொல்றாய்ங்க. அரசைப் பார்த்து சிலர் கேட்க, கமலைப் பார்த்து சிலர் கேட்க, இஸ்லாமிய அமைப்பைப் பார்த்து சிலர் கேட்க.. பதில் வருதோ இல்லியோ, கேட்டுட்டே இருக்காங்க.

நம்ம பங்குக்கும் யார்கிட்டயாச்சும், இது சம்பந்தமா கேட்கணும். ஆனா பாருங்க.. நம்ம மூஞ்சி சீரியஸா கேட்க சரிவராத மூஞ்சி. நான்லாம் கை வெடிகுண்டை எடுத்துட்டுப் போனாலே, 'ஏன்யா கத்திரிக்கா இவ்ளோ முத்தலா இருக்கு?'ன்னுட்டுப் போய்டுவாங்க. இந்த மூஞ்சியை வெச்சுகிட்டு நான் யார்கிட்ட, என்ன கேட்கறது?

இப்படிலாம் சிந்திச்சுட்டே கக்கூஸ்ல ஒக்கார்ந்து தினத்தந்தி படிச்சுட்டிருந்தப்பதான், நான் ஏன் குருவியார்கிட்ட இது சம்பந்தமா கேட்கக்கூடாது?'ன்னு தோணிச்சு.

இதோ என் கேள்விகள்:

1.
குருவியாரே.. விஸ்வரூபம் பேச்சு வார்த்தைக்கு வந்த இசுலாமிய அமைப்புத் தலைவர்களைப் பார்த்து கமல் சிரித்தாரா.. பதிலுக்கு அவர்களும் சிரித்தார்களா?

2.
குருவியாரே.. அவர்களிடம் கமல் 'வணக்கம்' என்றாரா.. 'சலாம்' என்றாரா? 

3.
குருவியாரே, வடமொழிச் சொல்லான 'ஸ்' தலைப்பில் உள்ளதே.. அது சரியா?

4.
குருவியாரே, அடுத்ததாக பிராமணர் சங்கம் கோவமாக இருக்கிறதாமே? அவர்களும் தடை கோருவார்களா?

5.
குருவியாரே, வடமொழிச்சொல்லான 'ஸ்'ஸை எடுத்து வெளியிட்டால், "'விசுவரூபம்' என்பதில் என் பெயர் உள்ளது.. என் அனுமதி பெறவில்லை" என்று விசு வழக்குப் போடுவாரா?

6.
குருவியாரே, விஸ்வரூப வழக்குகளுக்கென்று தனி நீதிமன்றம் அமைக்கப்படுமா?

7.
குருவியாரே, 'கமல் மீசை எடுத்திருக்கிறார், இது திராவிடக் கலாச்சாரத்திற்கு எதிரானது. தமிழனாக அவர் மீசை வைத்திருக்கவேண்டும்' என்று குருமாஅழகன் வழக்குப் போட வாய்ப்புள்ளதாக வரும் செய்திகள் உண்மையா? 

8.
குருவியாரே, படத்தில் அவர் தமிழ் நாட்டுப்புற ஆடல்கலைகளை உபயோகப்படுத்தாமல் கதக்-கை காட்டியிருப்பது எங்கள் மனத்தை புண்படுத்துகிறது என்று யாரும் கிளம்பவில்லையா?

பாக்கி கேள்விகளை அன்புள்ள அல்லிகிட்ட கேட்டுக்கறேன்.

-------------------

ளம்பெண்களின் டி-ஷர்ட் வாசகங்கள் பல 'ஆஹா.. ஓஹோ' ரகம். சமீபத்தில் 'Push & Pull' என்ற வாசகமிட்ட டி ஷர்ட் அணிந்த பெண்ணைப் பார்த்தேன். என் சந்தேகம் அது டிஷர்ட்டில் இருக்க வேண்டியதா என்பதே.

அதை விடுங்கள்.

நுட்ப காமெடியில் (Sorry Jemo) சுஜாதா கில்லாடி என்றாலும், டிஷர்ட் வாசகத்தில் நம்ம பட்டுக்கோட்டை பிரபாகரை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது! சுசீலா பனியன் வாசகங்கள் ஒவ்வொன்றும் முத்துக்கள்! (யாராச்சும் தொகுத்திருக்காங்களா அதை?)

என் தோழி ஒருத்தியிடம் கேட்டேன்:

'
நீ ஏன் எப்பவுமே ப்ளெய்ன் டிஷர்ட்டே போடற? எதாச்சும் வித்தியாசமான வாசகம் இருக்கற டிஷர்ட்..' -நான் கேட்கக் கேட்க இடைமறித்துச் சொன்னாள்:

'
வாசகத்துக்காகவா டிஷர்டைப் பார்க்கறாங்க?" 

ப்ப்ப்பளாஆஆஆர்!

--------------------------

ந்த துணிக்கடைல ஐநூறு ஓவாய்க்கு துணியெடுத்தா கட்டைப் பைக்கும், காலண்டருக்கும் போராடறது, தண்ணி பாட்டில் வாங்கினா பத்திரமா அதை வூட்ல கொண்டாந்து குப்பை சேர்க்கறது, எங்காச்சும் ஓசில ஃப்ளைட்ல போனா, பேக்ல மாட்டீருக்கற டேகை ரெண்டு மூணுவாரமா கழட்டாம சீன் போடறதுன்னு நம்ம மக்களுக்கே உரிய பழக்கங்கள் சில எனக்கும் உண்டு. 

அதுல சமீபமா சேர்ந்திருக்கறது, வெளியூர்ல நல்ல ஹோட்டல்ஸ்ல தங்க நேர்ந்தா, அங்க ஓசில தர்ற சோப்பு, சீப்பு வகையறாக்களை மறக்காம வீட்டுக்கு எடுத்துட்டு வர்றது.

பேனா, பேப்பர்ஸ், ஷேவிங் க்ரீம்+ரேஸர், சோப்பு, ஷவர் கேப், ப்ளாஸ்திரி, காது கொடையற பஞ்சு, தீப்பெட்டின்னு பலதும் தந்து பார்த்திருக்கேன். இந்த வாட்டி புவனேஸ்வர்ல தங்கின New Marrion ஹோட்டல்ல, ஸ்லிப்பர் தந்தாங்க! 





'அட..'ன்னு வியந்தேன். ஒன் யூஸ் ஸ்லிப்பர். நான் ஏற்கனவே ஸ்லிப்பர் கொண்டு போனதால அதை அப்டியே எடுத்து வெச்சுட்டேன். போதாததுக்கு, மூணாவது நாள் ரூம் சர்வீஸ்ல சொல்லி இன்னொண்ணும் வாங்கி எடுத்து வெச்சுகிட்டேன்!

'
வெக்கமே இல்லியாடா ஒனக்கு?'-ன்னு சந்தானம் வாய்ஸ்ல நீங்க கேக்கறது, எனக்கும் கேட்குது. நம்ம வூட்டு ஒரு மாசவாடகைய ஒரு நாளைக்கு வாங்கறாங்க பாஸ்! சும்மாவா? அதும் நானெல்லாம் ஒண்ணுமேல்ல.. நானாவது அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடற டெய்லி காச்சி. என்னை விட பெரிய பெரிய பணக்கார லார்ட் லபக்குதாஸ்லாம், ஹோட்டல்ல விரிக்கற Bed Spread, டர்க்கி டவல்-லாம் எடுத்துட்டு வருவாங்களாம்! அக்காங்!


சைடு குறிப்பு: இதை முகப்புத்தகத்தில் பகிர்ந்தபோது, ஒரு பெரிய ஹோட்டல் ஒன்றின் மேலாளரான நண்பர் ஒருவர் மெசேஜில் வந்து, ‘அதெல்லாம் உங்களுக்காக வைக்கறதுதான். எடுத்துட்டுப் போனாலும் நோ ப்ராப்ளம். ஒரே நாள்ல நாலைஞ்சு கேட்டாதான் தப்பு’ன்னாரு!

----------------------------------


முழுக்க காவியுடையில், முற்றும் துறந்த முனிவர் கோலத்தில் ஒருவரை புவனேஸ்வர் ஏர்போர்ட்டில் பார்த்தேன். எல்லா காலை விமானங்களும் தாமதம் ஆனதால், செக்யூரிட்டி செக் இன் முடிந்து காத்திருப்புப் பகுதியில் நிற்க இடமில்லாத அளவுக்குக் கூட்டம். அந்த சாமியார் அமர்ந்திருந்த சீட் அருகே நின்று கொண்டிருந்தேன்.

அவர் எழுந்தார். சீட் கெடச்சுடுச்சுன்னு டக்னு போனா, படார்னு அவர்கிட்ட இருந்த லேப்டாப் பேகை அதுல வெச்சு, 'ஐ வில் கம் பேக்'னாரு.

நமக்குன்னா மட்டும் இப்டித்தான். முற்றும் துறந்தவர்கூட சீட்டைத் துறக்க மாட்டீங்கறாரு!

-----------------