Showing posts with label tommy hilfiger. Show all posts
Showing posts with label tommy hilfiger. Show all posts

Wednesday, September 23, 2009

ஒன்..டூ..த்ரீ................

1: இணையத்தில் ‘கட்டுக் கதையாக’ உலவும் ஒரு செய்தி.... (False News?)


பரா வின்ஃப்ரே (Opera Winfrey)வின் டாக் ஷோ பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.




டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர். உலகப் புகழ் பெற்ற Tommy தயாரிப்புகளின் மூலகர்த்தா.

ஓபராவின் டாக் ஷோ ஒன்றில், டாமியைப் பேட்டி காண்கிறார் அவர்.

ஓபரா கேட்கிறார். “இனவாதத்தை தூண்டும் விதமாய், உங்களைக் குற்றஞ்சாட்டி நீங்கள் பேசியதாக சில அறிக்கைகள் வந்ததே அவை உண்மையா.. நீங்கள் அப்படிப் பேசினீர்களா?”

அவர் சொன்னதாய் வந்த அறிக்கையையும் படிக்கிறார். அது இதுதான்..

“'If I'd known African-Americans, Hispanics, Jewish and Asians would buy my clothes, I WOULD NOT have made them so nice. I wish these people would NOT buy my clothes, as they are made for upper class white people”


டாமி சொல்கிறார்: “ஆம். நான் அப்படிச் சொன்னேன்”

ஓபரா உடனே “ ஷோவை விட்டு வெளியே செல்லுங்கள்” என்று அவரை வெளியேற்றி விடுகிறாராம்!

எப்படியெல்லாம் கதை கட்டுகிறார்கள் பாருங்கள்!

** ** ** ** ** **
2:

ஜோஹன்னஸ்பெர்குக்கும், லண்டனுக்கும் இடையில் பறக்கும் ப்ரிடிஷ் ஏர்வேஸ் விமானத்தில் நடந்தது இது...

50 வயதுள்ள ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி. கறுப்பர் ஒருவருக்கு அருகில் அவருக்கு சீட். பெண்மணியால் பொறுக்க முடியவில்லை. விமானப் பணிப்பெண்ணை அழைக்கிறார்.

பணிப்பெண்: “சொல்லுங்கள்... என்ன விஷயம்?”

வெள்ளைக்காரப் பெண்மணி: “என்ன விஷயமென்று தெரியவில்லையா? என்னை எங்கே அமரவைத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். இப்படி ஒரு விலக்கப்பட்டவரோடு பயணிக்க எனக்கு அருவருப்பாக இருக்கிறது. உடனே எனக்கு வேறு சீட் ஒதுக்குங்கள்”

பணிப்பெண் அவரைப் பொறுமையாய் இருக்கச் சொல்லிவிட்டு விமான கேப்டனிடம் பேசிவிட்டு வருகிறேனெனச் செல்கிறாள்.

சிறிதுநேரத்திற்குப் பிறகு வந்து “மன்னியுங்கள் மேடம்.. எகானமி க்ளாஸில் எல்லா சீட்களும் நிரம்பி விட்டதால் பிஸினஸ் க்ளாஸிலாவது சீட் இருக்குமென பார்க்கப் போனேன். அங்கும் ஒரு சீட்டும் இல்லை.”

வேகமாக இடைமறிக்க வந்த அந்தப் பெண்மணியைக் கையமர்த்தி நிறுத்திய பணிப்பெண் தொடர்கிறாள்:

“ஆனாலும் இப்படி ஒரு பயணியோடு பயணிக்கும் கஷ்டத்தைக் கொடுக்க எங்கள் கேப்டனுக்கு விருப்பமில்லை.. எனவே” என்றவள் சொன்னது கருப்பரின் பக்கம் பார்த்து! “சார்.. தயவுசெய்து உங்கள் உடமை ஏதுமிருப்பின் எடுத்து வாருங்கள். உங்களுக்காக கேப்டன் முதல் வகுப்பில் சீட் ஒதுக்கி காத்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் எங்கள் விருந்தினர்”

சுற்றியமர்ந்தவர்களெல்லாம் ஒருநிமிடம் தொடர்ந்து கைதட்டினார்கள்!

**************************
3:


னக்குத் தெரிந்த நண்பர் ஒருத்தர். தனியார் நிறுவனத்துல குறிப்பிடத்தக்க பதவில வேலை செய்யறாரு. (பாருங்களேன் முரணை... அந்தப் பதவியைக் குறிப்பிடாம-குறிப்பிடத்தக்க பதவி-ன்னு சொல்றேன்...!)

வேலை சார்பாக அரசு அலுவலகங்களுக்கு போறதும், வேலை சம்பந்தமா பலருக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதும் அவர் வேலைகள்ல அடக்கம். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக, அதுக்கான அதிகாரியை தொடர்ந்து சந்திச்சிட்டு இருக்காரு நண்பர். வேலை முடியற நேரம். லஞ்சமா ஐந்திலக்கத்தைத் தொடும் ஒரு தொகையைப் பேசி முடிச்சிருக்காங்க.

பேசிவெச்சுட்ட ஒரு நாள்ல இவர் அங்க போறாரு. தேநீர் உபசரிப்பெல்லாம் முடிஞ்சு, ‘எங்க வெச்சு தர?’ன்னு கேட்டிருக்காரு இவர். ‘இங்கயே கொடுங்களேன்’னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி.

இந்த நேரத்துல அந்த நண்பரை நான் ஃபோன்ல கூப்டிருக்கேன். என் நண்பர் ஃபோனை எடுக்காம பாக்கெட்ல கையை விட்டு காசை எடுக்க முயற்சி பண்ணிகிட்டிருந்தார். திடீர்னு அந்த அதிகாரி எழுந்து ‘மொதல்ல வெளில போங்க... இப்படியெல்லாம் என்கிட்ட நடந்துக்கக் கூடாது’ன்னு ஒரு தினுசா கத்தி இவரை வெளில விரட்டிருக்காரு.

இவர் வெளில வந்து, என்னான்னு புரியாம வேறொரு மத்தியஸ்தர் மூலமா அந்த அதிகாரிகிட்ட பேச, தன்னோட நண்பர் ஒருத்தரை அனுப்பி, பணத்தை வாங்கிகிட்டு வேலையை முடிச்சுக் குடுத்துட்டாரு.

இது நடந்து ரொம்ப நாள் கழிச்சு அன்னைக்கு ஏன் அப்படி நடந்துகிட்டீங்கன்னு நண்பர் கேட்க, அவர் சொன்னது சுவாரஸ்யமான விஷயம்:

அவரோட நோக்கியா ஃபோன்ல எனக்கு அவர் ஸ்பெஷலா ஒரு ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்காரு. Chat Alert ங்கற அந்த டோன் ஒரு மாதிரி விட்டு விட்டு அடிக்கும். அன்னைக்கு நான் கூப்டப்ப, அடிச்ச ரிங் சத்தத்தைக் கேட்டு அந்த அதிகாரி, ஏதோ ரெகார்டிங் நடக்குதுன்னு நெனைச்சிருக்காரு. அதான் விஷயம்!

‘நல்ல நேரத்துல கூப்டீங்க பாஸூ’ம்பாரு இப்பவும் என்னைப் பார்த்தா!

** ** ** ** ** ** ** ** ** **

டிஸ்கி: மொத ரெண்டு மேட்டருமே இனவாதம்ங்கறதப் பேசுது. அது ரெண்டுக்கும் மூணாவதுக்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரி உங்ககிட்ட பகிர்ந்துக்கணும்னு நெனைக்கற ஏதோ மூணு விஷயங்களை குறிச்சு வெச்சு, அப்பப்ப எழுதிட்டிருந்தேன். அது திடீர்னு நின்னுபோச்சு. (நீ எழுதறதே நின்னுபோச்சே.. இது மட்டுமான்னு கேட்கறீங்கதானே?) ஒன் டூ த்ரீன்னு தலைப்பு வெச்சுத் தொலைச்சாச்சு. அதுனால இந்த மூணாவது மேட்டர். அதுமில்லாம இந்த மூணாவது விஷயம் ரொம்ம்ம்ம்........ப நாளா உங்ககிட்ட சொல்லணும்னு நெனைச்சுட்டே இருந்தது. அப்பாடான்னு இருக்கு இப்பத்தான்!



.