Tuesday, January 2, 2018

ஸ்க்ரீன் டைம் - ஒரு விளக்கம்

 “பரிசல், இரண்டு நாள்களுக்கு முன் எழுதிய பதிவில் ‘ஸ்கிரீன் டைம் அதிகமாகிவிட்டது’ என்று எழுதியிருந்தீர்கள். மொபைல் பார்த்துக்கொண்டிருப்பதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்பது புரிந்தது. அதிகம் என்பதை எப்படிக் கணக்கிட்டுச் சொல்கிறீர்கள்?”


கீழே ‘வாசுதேவன், மணச்சநல்லூர்’ என்று போட்டால் உட்டாலக்கடி என்பீர்கள். ஆனால் நிஜமாகவே சிலர் அழைத்தும், இன்பாக்ஸிலும் கேட்ட கேள்வி இது.

ஸ்கிரீன் டைம் என்பது மொபைலைப் பார்ப்பது மட்டும் அல்ல. ஒளி உமிழும் எந்தத் திரையையும் பார்த்துக்கொண்டிருப்பது ஸ்கிரீன் டைம்தான்.

டெலிவிஷன், கம்ப்யூட்டர், வீடியோ கேம் கேட்ஜெட்ஸ், மொபைல் ஃபோன் என்று எல்லாமே.

மருத்துவர்கள் ஒருநாளின் அதிகபட்ச ஐடியல் ஸ்கிரீன் டைம் என்பது 2 மணிநேரங்கள் மட்டுமே என்று தயவுதாட்சண்யம் இல்லாமல் சொல்கிறார்கள். ’டாக்டர்.. இந்த ஆய்வெல்லாம் எந்தக் காலத்துல பண்ணிருப்பாங்க. இந்தக் காலத்துல போய் வெறும் 2 மணிநேரம் மட்டுமே ஸ்கிரீனைப் பார்த்துட்டிருக்கணுமா சாத்தியமா’ என்று கேட்டால் ‘20-20-20 ரூல் ஃபாலோ பண்ணு’ என்றார்.

அதென்ன 20-20-20?

ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியிலும், திரையிலிருந்து 20 அடிகள் தள்ளிப்போய், 20 செகண்ட்ஸ் வேறு எதையாவது பார்ப்பதுதான் 20-20-20 ரூல். அது கண்ணுக்கு நல்லது.

தொடர்ச்சியாக ஒளி உமிழ்திரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தால் கண் எரிச்சல், கண் வலி, தூக்கமின்மை, கழுத்து-தோள்பட்டை வலி, அடிக்‌ஷன், Mood disability என்பதில் ஆரம்பித்து சிலபலவற்றை பட்டியல் இடுகிறார்கள்.


மீண்டும் சொல்கிறேன். கிண்டில் அதிக ஒளி உமிழ்வதில்லை. புத்தகங்கள் இன்னும் பெட்டர். எத்தனை டிவைஸ்கள் வந்தாலும், எல்லாவற்றிலும் படித்தாலும் இன்னமும் நான் புத்தகக் கட்சிதான். அதுதரும் ஆதாரசுகம், ஈடில்லாதது.

சும்மா ஓடிக்கொண்டிருக்கும் டிவியை அணைத்துவைப்பது, அலுவலகத்தில் வேலையைத் தாண்டி எதற்கும் கம்ப்யூட்டரை உபயோகிக்காமல் இருப்பது, சாப்பிடும்போது, பேசும்போதெல்லாம் மொபைல் குட்டிச்சாத்தானை பாக்கெட்டை விட்டு எடுக்காமல் இருப்பது, ஓவியம் இசை என்று வேறேதாவதொன்றில் தீவிர கவனம் செலுத்துவது என்று இதிலிருந்து தப்பிக்க குட்டிக்குட்டியாயும், பெரிதாயும் நிறைய வழிகள் உண்டு.

இவையெல்லாவற்றையும்விட முக்கியமாகத் தேவை, இதைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற மனம். தாலிகட்டுவதையோ, பிடித்த ஆளுமையைச் சந்திப்பதையோகூட நேருக்கு நேர் பார்க்காமல் மொபைல் ஸ்கிரீன் வழியாகத்தான் பார்க்கிறோம். அத்தியாவசியமாகிவிட்டவைகளுக்கு வேறு வழியில்லை. சிலவற்றை நிச்சயம் மாற்றலாம்.

மொபைல் ஸ்கிரீன் டைமை கண்காணிக்க, மொபைலிலேயே (:-)) நிறைய Apps உள்ளன. நான் வைத்திருப்ப்பது Moment எனும் ஆப். ப்ரீமியம் மெம்பர்ஷிப் (400 ஓவா!) கட்டி கோச்சிங் எல்லாம் எடுத்தேன். திடீரென்று முதல்நாள் இரவு, ‘நாளைக்கு காலையில் 11 மணிவரை ஃபோனைக் கையில் எடுக்காதே’ என்று மிரட்டும். இப்படிச் சில. அதன் சுவாரஸ்யம் கருதிப் பின்பற்றினேன். ‘குட்நைட் சொல்லல, என் மெசேஜையே பாக்கல, Blah Blah’க்கள் எல்லாம் அரங்கேறின. அதுதந்த திரில்லுக்காகவே அவ்வப்போது தொடர்ந்தேன்.

இந்தப் பதிவை எழுதும்போது, அந்த App-ல் எனது வீக்லி ரிப்போர்ட் பார்த்தேன். சராசரியாக ஒருநாளைக்கு 6 மணிநேரம் 35 நிமிஷம் மொபல் ஸ்கிரீனைப் பார்க்கிறேன். சராசரியாக ஒருநாளுக்கு 107 முறை ஃபோனைக் கையில் எடுக்கிறேன் என்கிறது அது.

இன்றைக்கு மட்டும் - இதை எழுதிய நேரம் காலை 9.30 மணி - இதுவரை 2 மணிநேரம் 22 நிமிஷம் உபயோகித்திருக்கிறேன். இதைத் தாண்டியும், 2 சிறுகதைகள் (சுப்ரமணிய ராஜு... வாவ்...!) படித்திருக்கிறேன். Communication குறித்த ஆங்கிலப்புத்தகம் ஒன்றில் 12 பக்கம் படித்திருக்கிறேன். இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

'முன்னமாதிரி படிக்கவெல்லாம் நேரம் இல்லை’ என்று எவராவது சொன்னால் என் சார்பில் அவர் மண்டையில் நறுக்கென்று கொட்டுங்கள்.. ப்ளீஸ்.

1 comment:

வரதராஜலு .பூ said...

நானெல்லாம் 10 மணிநேரம் கேட்டகரி