Friday, January 5, 2018

எலி.. பூனை - ஒரு கூட்டணிக்கதை!

இன்னைக்கு ஒரு கதை சொல்றேன். தெரிஞ்சிருந்தாலும், வேற வழியில்லை. படிங்க. 

பொந்துக்குள் இருக்கிற எலி ஒன்று, வெளியே உலா போகலாமென்று எட்டிப்பார்க்கிறது. வெளியே ஒரு பூனை நின்றுகொண்டிருக்க, டபக்கென்று உள்ளே ஓடிவிடுகிறது எலி.

பூனை பொந்தின் அருகே வந்து, 'வாய்யா ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்’ என்று எலியை அழைக்கிறது.

“நோ. நான் உனக்கு இரை. நாம எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்கறது?” என்று மறுத்துவிடுகிறது எலி. அந்த நேரம் பார்த்து, வேடன் விரித்த வலை ஒன்றில் சிக்கிக்கொள்கிறது பூனை. 

இப்போது வெளியில் வருகிறது எலி. “யோவ்.. மாட்டிகிட்டேன்யா.. வலையைக் கடிச்சு, அறுத்து காப்பாத்து” என்று எலியைக் கேட்கிறது பூனை.

(இதை என் சின்னவயதில், எனக்குச் சொன்னவரிடம் ‘பூனையே கடிச்சுக்கவேண்டியதுதானே?’ என்று கேட்டேன். ‘போடா வெளில’ என்று அனுப்பிவிட்டார். பிறகு மகாபாரதக்கதை என்று கேள்விப்பட்டு தேடிப்படித்தேன் என்பது கிளைக்கதை.)

கதைக்கு வருவோம். இப்போது எலி சொல்கிறது.. “நான் உன்னைக் காப்பாத்தி வெளில கொண்டுவந்தா, என்னை நீ தின்னுப்புடுவ. போய்யா” என்று மறுத்தது. அந்த நேரம் பார்த்து கொஞ்ச தூரத்தில் பாம்பு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதைத் துரத்திக்கொண்டு கீரியும்.

'அச்சச்சோ.. பாம்பு வருதே’ என்று எண்ணிய எலி உடனே பூனையுடன் ஒரு ஒப்பந்தம் போடுகிறது. ”இந்தாய்யா.. நான் வலையைக் கிழிச்சு உன்னையக் காப்பாத்தறேன். ஆனா அதுக்கு முன்ன, வலைக்கு மேலயே உன் சைடுல ஒளிஞ்சுக்கறேன். என்னிய ஒண்ணும் பண்ணிப்புடாத. பாம்பு வருது. அது போனதும்  வலையைக் கட் பண்ணி வுடறேன்” என்கிறது. பூனையும் ஒப்புக்கொள்கிறது. கொஞ்சநேரத்தில் பாம்பும், கீரியும் அந்த இடத்தைக் கடந்துவிட “சரி.. இப்ப கட் பண்ணு” என்கிறது பூனை.

“மாட்டேன்”

“டே... லூசு. வாக்கு குடுத்திருக்க.. மறந்துட்டியா?” என்று கேட்கிறது பூனை.

"குடுத்தேன், மறுக்கல.. மறக்கல. ஆனா இப்ப கட் பண்ண மாட்டேன். இரு வேடன் வரட்டும்” என்கிறது எலி.

“ஏன்யா இந்தக் கொலவெறி?”

“அப்படிலாம் இல்லை. வேடன் பக்கத்துல வர்றப்ப, அறுத்துவிட்டா, அவன்கிட்ட இருந்து தப்பிக்கறதுலதான் உன் கவனம் இருக்கும். நானும் ஓடிரலாம். அதுனால அப்பத்தான் கட் பண்ணுவேன்” என்று தீர்க்கமாகச் சொல்கிறது எலி. அதேபோல, வேடன் அருகே வரவர.. வலையை அறுத்துவிடுகிறது எலி. பூனையும் வெளியே வந்ததும் ஓடிவிடுகிறது.

மீண்டும் கொஞ்சநேரத்தில் எலிப்பொந்தில் அருகே வருகிறது பூனை. “நீயும் எனக்கொரு ஹெல்ப் பண்ணிருக்க.. நானும் ஒரு ஹெல்ப் பண்ணிருக்கேன். வெள்ல வாயேன். நாம ஃப்ரெண்ட்ஸா இருப்போம்” என்று கேட்கிறது.

“நொட்டு! இந்த வேலைலாம் என்கிட்ட வேண்டாம். உனக்கும் எனக்கும் ஒரு தேவை இருந்தது. ரெண்டுபேருமே பரஸ்பரம் உதவியா இருந்துட்டோம். ரெண்டுபேருக்குமே அப்படி இன்னொரு சந்தர்ப்பம் வந்தா பார்க்கலாம். மத்தபடி நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கறதெல்லாம் வாய்ப்பே இல்லை. கெளம்பு கெளம்பு” என்றுவிட்டது எலி.

அவ்ளதான். அப்பறம்.. இதை ஏன் இப்பச் சொல்றேன்னு நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க! 

No comments: