Tuesday, January 8, 2013

”டிஷ்”வரூபம்!

மல்ஹாசன்!


உலகசினிமா வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத ஒரு பெயர். என்னைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டிலேயே - சிந்தனையில் - நம்மை விட, குறைந்தது ஐந்து வருடங்கள் முன்னோக்கிச் சென்று கொண்டிருப்பவர்களில் ஒருவர். ஏற்கனவே என் அவியலில் குறிப்பிட்டது போல, திருட்டு சிடியை பலரும்  எதிர்த்தபோது, ‘அதையெல்லாம் நாம ஒழிக்க முடியாது. ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க என்ன பண்ணனும்ன்னு யோசிப்போம்’ என்று வெளிப்படையாகப் பேட்டி குடுத்தவர். இந்த உண்மையைப் பேசும் மனோபாவத்தாலேயே திரைத்துறையினர் சிலராலேயே புறக்கணிக்க, விமர்சிக்கப் படுபவர்.




விஷ்வரூபம், டிடிஹெச் (Direct To Home)-ல் வெளியிடப்போகிறார்கள் என்று ஆரம்பித்ததும் பற்றிக் கொண்டது திரையுலகம். அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தது.

இதில், தியேட்டர்காரர்களின் காமெடி தாங்கமுடியவில்லை. இதைச் சொல்ல எனக்கு முழு உரிமையுண்டு என்றே எண்ணுகிறேன். காரணம், முடிந்தவரை பார்க்கிற திரைப்படங்களை தியேட்டரில் மட்டுமே பார்க்கிற எண்ணம் கொண்டவன் நான். ஆனால் என்னைப் போன்ற தியேட்டரை நாடிச் செல்லும் ரசிகர்களை, மதிக்கத் தெரியாத தியேட்டர்களே அதிகம். குறைந்த பட்ச சுத்தத்துடன் கழிவறையைக் கூட பராமரிக்காத, கேண்டீன் என்ற பெயரில் எவ்வளவுக்கெவ்வளவு ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியுமோ அவ்வளவு அரைக்கிற, பார்க்கிங்கில் வசூல்ராஜாவாக இருக்கிற இந்தத் தியேட்டர் முதலாளிகள், ‘ஐயோ அம்மா’ என்று குதிக்காத குறையாகக் கத்துகிறார்கள்.

ஐயா சாமிகளே.. ஒன்றும் பயப்படாதீர்கள். நான் கண்டிப்பாக தியேட்டரில்தான் பார்ப்பேன். என் போன்றவர்களின் சதவிகிதமே அதிகம். ஆனால், டிடிஹெச்-ல் ஒளிபரப்பும் புதிய முயற்சியை நீங்கள் வரவேற்றே ஆகவேண்டும். கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும், கொஞ்சம் Out of the Box சிந்திக்கிற நண்பர்கள் உங்கள் அசோசியேஷனில் இருந்திருந்தால், கமலின் இந்த முயற்சியை இருகரம் நீட்டி வரவேற்றதன் மூலம், விஸ்வரூபம் தியேட்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கலாம். இதை ஓர் அட்டகாசமாக விளம்பர யுத்தியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்! (இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை)

இந்த விஷயத்தில் நான் எழுத நினைத்ததை ட்விட்டர் நண்பர் அஷோக் அட்டகாசமாக எழுதியிருக்கிறார். கீழே பகிர்ந்திருக்கிறேன். படியுங்கள்.

அதற்கு முன்..



நான் அக்மார்க் ரஜினி ரசிகன். கமலைக் கொண்டாடுகிறவன் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து கொள்கிறேன். :-)


இனி அஷோக் எழுதியது:

-------------------------------------------------
மலின் விஸ்வரூபத்தை தியேட்டரில் மட்டும் ரிலீஸ் செய்யாமல் டிடிஎச்-ல் ஒளிபரப்புவது சரியா என இங்கே ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. என் கருத்து, ஒளிபரப்புவது சரியா என்பதைவிட நாம் தியேட்டரில் பார்க்க போகிறோமா, டிடிஎச் மூலம் வீட்டிலா என்று விவாதிப்பதே சரியானதாக இருக்கும் என்பதே.

சினிமா ஒரு ஊறுகாய் வியாபாரம் எனக்கொள்வோம். கமல் என்ற வியாபாரி தனது ஊறுகாயை வழக்கமான அண்ணாச்சி கடையோடு சேர்த்து, டோர்டெலிவரி செய்யும் அம்பானி கடையிலும் விற்க முயல்கிறார். அது வியாபாரியின் வசதி.

வீட்டைவிட்டு வெளியில் வந்து கடைகளில் வாங்க விரும்பாத மேல்தட்டு கூட்டம் ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கும் தன் பொருள் போய்சேர வேண்டும் என ஒரு வியாபாரி நினைப்பதில் தவறெதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் தெருமுக்கு அண்ணாச்சி கடைகளை மூட வேண்டியதுதான் என்பது அபத்தம். அண்ணாச்சி கடையோ அம்பானி கடையோ மூடப்படுவதற்கு டோர்டெலிவரி சேவை காரணமாக இருக்காது என்பதுதான் எல்லோரும் விளங்கவேண்டியது.

தொலைதூரக் கல்வி துவங்கியதால் ரெகுலர் கல்லூரிகள் மூடப்படவில்லை. கல்லூரிசெல்ல முடியாதவர்களுக்கு துவங்கப் பட்டதுதான் தொலைதூரக் கல்வி. இதுதான் வியாபாரியின் தரப்பிலான சிம்பிள் லாஜிக்.

சரி கடைக்காரர் தரப்பு? 

எந்த ஒரு தொழிலும் காலமாற்றத்திற்கேற்ப இழைந்து கொடுத்தே நிலைத்திருக்கிறது. முன்பு தெருச்சுவற்றில் விளம்பரப் படம் வரையும் அற்புதக் கலைஞர்களின் தற்போதைய நிலையென்ன? கொஞ்சம் புத்திசாலிகள் கணினிவரைகலை  கற்று பிளக்ஸ் பேனர் சுழலில் தப்பிப்பிழைக்கிறார்கள். அப்டேஷன் அவசியம் என்கிறேன். தரமான சேவை வழங்காவிட்டாலோ, கடைக்கு வெளியே அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்றாலோ வாடிக்கையாளர்கள் திசைதிரும்புவது இயல்புதானே. திரும்பும் திசை, திருட்டு ஊறுகாயாக இருப்பதுதான் தொழிலுக்கே வினை.

எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இன்னும் இரண்டே வருடத்தில் இதை கமல் என்ற உள்ளூர் வியாபாரி செய்யாவிட்டாலும் ஹாலிவுட் ஊரிலிருந்து வால்மார்ட் வகையறா வியாபாரிகள் நம்ஊரில் தம் சரக்கை விற்கவருவர், இதே கடைக்காரர்கள் அப்போது எழுப்ப குரலே இல்லாமல் நெரிக்கப்படலாம் (எஃப்டிஐ நினைவில் கொள்க). உள்ளூர் வியாபாரிக்கு உடன்படா கடைமுதலாளிகள் உலக வியாபாரிக்கு கம்பளம் விரிப்பர், வேண்டாவிருப்பாக!

நிற்க..

நுகர்வோராகிய நமது பார்வை எப்படி இருக்க வேண்டும்? ஊறுகாயில் மசாலா குறைவு, உப்பு அதிகம் என விமர்சிக்கும் - விலக்கி வைக்கும் முழு உரிமை காசு கொடுக்கும் நம் எல்லோர்க்கும் உண்டு. அதேபோல், தரமானதாக ஆரோக்யமானதாக இருப்பின் கொண்டாடும் கடமையும்!

நமக்குமுன் இரண்டு தேர்வுகள் வைக்கப்பட்டிருக்கிறது: தியேட்டரா, டிடிஎச்-ஆ. (மூன்றாவதாக ஊறுகாய் டோர்டெலிவரி செய்யவருபவரை இடைமறித்து தாக்கி பிடுங்கித் தின்னும் திருட்டுவிசிடி குணத்தினரை இங்கே விவாதிப்பது வீண்) இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பது முழுக்க முழுக்க நமது சௌகரியம். வியாபாரியோ, அவரின் தயாரிப்பை விரும்பும் ரசிக நுகர்வோரோ எதையும் வற்புறுத்தி திணிக்கவில்லை.

கோடியில் ஒரு சாதாரண நுகர்வோனாகிய நான், அண்ணாச்சி கடைக்கு செல்ல ஆகும் போக்குவரத்து செலவு, காத்திருப்பு நேரவிரயம் கணக்கில் கொண்டு டோர்டெலிவரி சேவையை விரும்பலாம். அல்லது, கடைக்கு சென்றால் கிடைக்கும் கொசுறு, pleasure of travel, outing சந்தோஷங்களுக்காக அதனை தேர்ந்தெடுக்கலாம். அது எனது நேர - பண - குண வசதியைப் பொறுத்தது.
அதைவிடுத்து டிடிஎச் சரியா தவறா, பிழையா முறையா போன்ற கேள்விகளுக்கு இடமேயில்லை என்றே கருதுகிறேன்.

-------------------------

சரிதானே?

முத்தாய்ப்பாக நம்ம ஆதி தாமிரா ஃபேஸ்புக்-ல போட்ட ஸ்டேட்டஸ்:-


தமிழ் சினிமா தியேட்டர் அசோசியேஷன் மீட்டிங்:

ஓனர்:1- விஸ்வரூபத்தை நாம வெளியிடாம இருந்தா மட்டும் பத்தாது. ஒலகம் பூரா வெளியிடாம இருக்கணும். அதுக்கு எதுனா வழி சொல்லுங்க..

ஓனர்:2- ஒலக தியேட்டர் அசோசியேஷன் ஏதாச்சும் இருக்கா?

ஓனர்:3- இல்ல, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒண்ணொண்ணு இருக்குமோ?

ஓனர்:4- அவங்க ஃபோன் நம்பர் ஏதும் கிடைக்குமா? எப்பிடி காண்டாக்ட் பண்றது? அவங்களையும் நம்ப போராட்டத்துக்கு ஆதரவு கேக்கணுமே..

ஓனர்:5- இந்த மாதிரி விஷயம்லாம் எவனுக்கு தெரியுது? பேசாம கமலுக்கே ஃபோனப்போட்டு கேட்டுருவோமா?

பிறர்: ..ங்ஙே!!!


டேய்.. ஆதி..... சிக்ஸர்யா!

....

12 comments:

Pulavar Tharumi said...

குடும்பத்தோடு டிடிஹெச்சில் பார்த்தால் நமக்கு லாபம் தான். ஒட்டு மொத்த தமிழர்களும் தியேட்டருக்கு போய் தான் படம் பார்ப்பது போல் தியேட்டர் அதிபர்கள் புரியாமல் எதிர்ப்பு காண்பிப்பது நகைச்சுவையாக இருக்கிறது :)

Justin Vijay said...

ஹோட்டல், பார் மற்றும் சில இடங்களில் பெரிய சைஸ் ஸ்க்ரீன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.. (பார் களில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே சரக்கடிக்க ஒரு பெரிய கூட்டமே உள்ளது).. அங்கெல்லாம் இப்படம் திரை இட்டால் முதலாளிகளுக்கு நல்ல லாபம்...

அமுதா கிருஷ்ணா said...

நான் தியேட்டர் கட்சி.வீட்டிலே தண்ணீ,காஃபி,முறுக்குன்னு என்னை சப்ளை பண்ண சொல்லி கமல் படத்தின் முக்கியமான சீனை(?) எல்லாம் நாம பார்க்காம செய்துடுவாங்க நம்ம ஆளுங்க.

Thamira said...

அஷோக்கின் பார்வை அழகானது.

ஆனா நம்மாளுகளுக்கு அரட்டைதான் முக்கியம்.. இந்த பிரச்சினை முடிஞ்சப்பிறகு, கமல் எவ்வளவு வசூலித்தார்னு அவர் வரவு செலவு கணக்கையெல்லாம் ரொம்ப ஆர்வமா பாத்து குறைவு, கூடுதல்னு அவரை விட ரொம்ப ஆர்வமா டிஸ்கஸ் பண்ணிகிட்டிருப்பாங்க!

Unknown said...

நானும் தியேட்டர் சென்று பார்பதையே விரும்புகிறேன்

வவ்வால் said...

//கமல் எவ்வளவு வசூலித்தார்னு அவர் வரவு செலவு கணக்கையெல்லாம் ரொம்ப ஆர்வமா பாத்து குறைவு, கூடுதல்னு அவரை விட ரொம்ப ஆர்வமா டிஸ்கஸ் பண்ணிகிட்டிருப்பாங்க!//


ஆமாமாம்... படத்தை பார்த்துட்டு அவரே யோசிக்காத கருத்தெல்லாம் படத்தில இருக்கு ,அத குறியீடா சொல்லியிருக்காருன்னு இல்லாத விவரம் எல்லாம் சொல்லி விமர்சனமும் எழுதுவாங்க :-))

ஒரு காட்சியில ஏன் புறாப்பறக்குதுனா ..அவரு அமைதிப்புறா இப்போ ஆவேசமாயிட்டாருன்னு காட்டினார் ..குறியீடு அபாராம்னு சிலாகிப்பாங்க :-))

படம் எடுத்தவரை விட படம் பார்த்தவங்க செய்யுற டிஸ்கஷன் இருக்கே ...முடியலை அவ்வ்வ் :-))

Unknown said...

தலைப்புலயே கலக்கீட்டீங்க !!!
- ஆகாயமனிதன்

a said...

ஆதி கமெண்ட்ஸ் ஜூப்பரு....

அப்ப பதிவு மொக்கையான்னு மைண்ட் வாய்ஸ் கேக்குது!!!!!!!!!!

Umesh Srinivasan said...

பூவ பூன்னும் சொல்லலாம்,புய்ப்பம்னும் சொல்லலாம், நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம். படம் நல்லாயிருந்தா, எல்லா மீடியாவிலும் மக்கள் பார்ப்பாங்க, எல்லாதரப்புக்கும் லாபம்தான். இதுக்கு போன வருஷம் வந்த சின்ன பட்ஜெட் படங்களே சாட்சி.

Umesh Srinivasan said...

உங்கள் விலைமதிக்க முடியாத நேரத்தை ஒதுக்கி பின்னூட்டமிடுவதற்கு மிகவும் நன்றி!......நக்கலு....?

இரசிகை said...

thalaippu rasikka vaiththathu...

yellaame nallaayirukku.

Ba La said...

விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று. பூஜா குமார் + கமல் கடத்தப்பட்டு கட்டி வைக்கப்பட்டு இருக்கும் கட்டட உச்சியில் ஓர்

விஸ்வரூபம் கார் விபத்து