Tuesday, June 30, 2009

ஜெனிஃபர்

“ரகு... இன்னைக்கு ஜூன் 30. நீ இந்த நாளுக்காகத்தானே காத்துகிட்டிருந்த? மணி ஒம்பதாகப்போகுது... நான் கெளம்பறேன்” –அறிவழகனின் குரல்தான் என்னை எழுப்பியது. ‘பாழாய்போன சிக்ஸ் தௌஸண்ட்.. இதற்கு கல்யாணி எவ்வளவோ தேவலாம்’ என்றெண்ணியபடியே அவசர அவசரமாக எழுந்து கடமைகளை முடித்துக் கொண்டு அலுவலகம் சென்று சேரும்போது மணி பத்தரையாகிவிட்டிருந்தது.

“எடிட்டர் அரைமணிநேரமா உங்களைக் கேட்டிட்டிருக்காரு” என்ற வனிதாவின் குரலை அவளின் அழகான உதட்டசைவில் கேட்பதற்காகவே நாளைக்கும் லேட்டாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டே எடிட்டரின் அறைக்குள் நுழைந்தேன்.

வழக்கம்போலவே குளிர்சாதனத்தை அணைத்துவிட்டு மின்விசிறியை சுழல விட்டிருந்தார். வெளிச்சத்தில் அதன் இறக்கை நிழல்கள் உட்கார்ந்திருந்த அவர் இடது தோளில் ஆரம்பித்து தலை, வலது தோள், ஒன்றின் மேலொன்றாய் போடப்பட்ட கால்கள் என மாறி மாறி வந்து வந்து போவதை கார்ட்டூனிஸ்ட் கதிரேசன் பார்த்தால் அழகாக வரைந்து கொடுப்பான் எனத் தோன்றியது.

“இன்னைக்கு ஜூன்.30. ஞாபகமிருக்குல்ல?” – என்ற அவரது குரல் எரிச்சலை மூட்டியது. இன்றைக்கென்ன ஆளாளுக்கு கழுத்தில் காலண்டர்
மாட்டிக்கொண்டது போலத் திரிகிறார்கள் என்று தோன்றியது.

“இன்னைக்கு நீ ஸ்ரீதரோட அபார்ட்மெண்ட்ல நடக்கற பார்ட்டிக்கு போகணும். சாயந்திரம் அஞ்சு மணிக்கு. ஞாபகமிருக்குல்ல?” – இந்த ‘ஞாபகமிருக்குல்ல’ இவர் ரத்தத்திலேயே இருக்கும்போல.

“நிச்சயமா ஞாபகமிருக்கு சார்.” என்றேன் நான். “அந்த நியூஸுக்காக ஒருமாசம் சிரமப்பட்டிருக்கேன். எனக்குத் தெரியாதா?” – இது அவரிடம் கேட்டதல்ல.. மனசுக்குள் நினைத்தது.

“அப்ப என்ன பத்தரைக்கு வர்ற? ஆரம்பத்திலேர்ந்து அதைப்பத்தி எழுத ஆரம்பி. சாயந்திரம் நடக்கறதையும் சேர்த்து நைட்டுக்குள்ள குடு. காலைல ரெடிபண்ணி இந்த வார இஷ்யூல ரெண்டு மூணு பேஜுக்குப் போடணும்”

“சரிங்க சார்” என்ற என் குரலில் சலிப்புதான் தென்பற்றிருக்க வேண்டும் அவருக்கு. “இரு.. காஃபி வரும். சாப்ட்டுட்டு போ” என்றார் தொடர்ந்து.
காஃபி வரும் இடைவெளியில் அந்த சம்பவத்தை எப்படி ஆரம்பிக்க என்று அசைபோட ஆரம்பித்தேன்.


ஸ்ரீதர் எங்கள் பத்திரிகையின் புகைப்படக்கலைஞன். கலைஞன் என்ற சொல்லுக்குப் பொருத்தமானவன். அண்ணா சாலையில் இருந்து பத்து நிமிடப் பிரயாணத்தில் அவன் குடியிருக்கும் நுங்கம்பாக்கம் மூகாம்பிகா அபார்ட்மெண்ட்சுக்குப் போய்விடலாம். 30 வயது பாச்சிலர். கோவையில் அவனது வீட்டினர் தீவிரமாக இவனைத் திருமணவாதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவன் திருவல்லிக்கேணி ஜாகையை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றி, மூகாம்பிகா அபார்ட்மெண்டில் மூன்றாவது ஃப்ளோரில் அழகான ஒரு ஃப்ளாட்டை சொந்தமாக்கிக் கொண்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறான்.

அலுவலகத்தில் எல்லாருக்கும் இனியவன் அவன். எனக்கு இன்னும் அதிக நெருக்கம். வாரத்துக்கு இரண்டு நாட்களாவது அவனது ஃப்ளாட்டில் நானும், அவனும், கிங்ஃபிஷரும் சந்தித்துக் கொள்வது வழக்கம். அப்படி ஒரு சனிக்கிழமையில் தான் ‘ஜெனிஃபர் மேடம்’ பற்றிய பேச்சு வந்தது.

ஸ்ரீதரின் ஃப்ளாட்டுக்குப் போக லிஃப்டில் ஏறினால் மூன்றாவது ஃப்ளோரில் லிஃப்ட் நிற்கும் இடத்துக்கு பக்கத்து ஃப்ளாட் ஜெனிஃபருடையது. பலமுறை ஜெனிஃபருக்கு சிரிப்பை உதிர்த்துவிட்டுத்தான் ஸ்ரீதர் ஃப்ளாட்டுக்குள் நுழைந்திருக்கிறேன். அழகான ஆன்ட்டி. ஸ்ரீதர் சொல்லும் வரை ஜெனிஃபர் வயது 46 என்பதை நம்பமுடியவில்லை.

“என்னடா நான் ஏதோ முப்பது முப்பத்தஞ்சு இருக்கும்ன்னு நெனைச்சேன். நாப்பத்து ஆறுங்கற?”

“போடா.. “ என்றான் ஸ்ரீதர். மூன்றாவது பீரைத் திறந்தபடி. “அவங்க ஒரு டைம் எதுக்காகவோ என்கிட்ட ப்ரூஃபுக்கு பான் கார்ட் குடுத்தாங்க. அப்பதான் எனக்கே தெரியும் அவங்க வயசு.”

“அந்த ஃப்ளாட்ல அவங்க தனியாவே இருக்காங்களே? மேரேஜ் ஆகலியா?”

“இல்ல.. அது ரொம்ப இண்ட்ரஸ்டிங் ஸ்டோரி..”

நான் ரோஸ்ட் பார்சலைப் பிரித்தபடி அவனைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

“இவங்களுக்கு பதினேழு வயது இருக்கறப்போ இவங்க வீட்டுக்கு எதிர்ல இருக்கற ஒரு பையன்கூட லவ்ஸ். கிட்டத்தட்ட ஏழெட்டு வருஷம் விடாம காதலிச்சிருக்காங்க. அந்தப் பையன் ஹிண்டு. ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்கல. இவங்க ரொம்பப் பிடிவாதமா இருந்தும் ஒத்துக்கல. அதுனால கல்யாணமே பண்ணிக்கல.”

“அடப்பாவமே... சரி.. இவங்க அப்பாம்மா..”

“அப்பா ஜெனிஃபருக்கு 30 வயசு இருக்கும்போதே தவறிட்டாராம். அம்மாகூடதான் இந்த ஃப்ளாட்டுல இருந்தாங்க. அம்மாவும் ரெண்டு வருஷம் முன்னாடி போய்ட்டாங்க. ஒரே ஒரு அண்ணன் நைஜீரியால செட்டிலாய்ட்டான்.”

“சரி.. ஒனக்கெப்படி இவ்ளோ தகவல் தெரியும்? ஆங்...? ஏய்ய்ய்ய்....” என்று நான் இழுத்ததில் இருந்த கேலிக்கேள்வியை மண்டையில் தட்டி நிறுத்தினான். “போடா லூசு.. என்கிட்டன்னு மட்டுமில்ல.. எல்லார்கிட்டயும் நல்லா பேசுவாங்க. இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கற எல்லா குழந்தைகளுக்கும் ஜெனிஃபர் மேடம் ஃப்ளாட்தான் பார்க் மாதிரி. எல்லார்கிட்டயும் அவ்ளோ சகஜமா பழகுவாங்க. இவங்க தம்பி - சித்தப்பா பையன் - சார்லஸ் எல்.ஐ.சில வேலை செய்யறாரு. இந்த ஃப்ளாட் வாங்கறப்போ லோன் விஷயமா அடிக்கடி அவரைப் பார்த்துப் பேசுவேன். அவர்தான் ஜெனிஃபரோட கதையைச் சொன்னார்”


“சரி... இவங்க லவ் பண்ணின பையனுக்கு கல்யாணம் பண்ணிகிட்டானா?”

“அது தெரியல. ஆனா சார்லஸ் சொல்லுவாரு... ‘இப்போ எதிர்க்கறதுக்கு யாரும் இல்ல. ஜெனிஃபர் கல்யாணம் பண்ணிகிட்டா அவங்க கடைசி காலத்துல துணையா இருக்கும்’ன்னு”


ந்த சம்பாஷணை முடிந்து இரண்டு வாரத்திற்கெல்லாம் ஸ்ரீதர் உற்சாகமாக ஒரு விஷயம் சொன்னான். “டேய்.. ஜெனிஃபர் லவ் பண்ணினவர் பேர் கிருஷ்ணன். சாலி கிராமத்துல இருக்காரு.”

“அதுக்கு ஏன் இவ்ளோ எக்ஸைட்மெண்ட் ஆகற?”

“இதக்கேளு. இவங்க எப்படி இங்க இருக்காங்களோ அதே மாதிரி அவரும் ஒரு ஃப்ளாட்ல தனியாத் தான் இருக்காரு. கல்யாணம் பண்ணிக்கல.”

எனக்கு அவன் சொன்ன செய்தியில் சுவாரஸ்யம் வர ஆரம்பித்தது. என் மண்டையில் ஒரு பல்ப் பளீரிட்டது. இதில் எங்கள் பத்திரிகைக்கு ஒரு தீனி கிடைக்கும் என்று மனது சொல்லியது. எடிட்டரிடம் பேசியபோது அவரும் உற்சாகமானார்.

அதற்குப் பிறகு நானும், ஸ்ரீதரும் கிருஷ்ணன் சாரைப் பார்த்துப் பேசியபோது அவர் சொன்ன விஷயங்கள் இன்னும் படு சுவாரஸ்யம்.

“ரகு... நீங்க நெனைக்கற மாதிரி ஜெனிஃபரும் நானும் சந்திக்காம இல்ல.. மாசத்துக்கு ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ சந்திச்சுக்குவோம்”

“என்ன சார் சொல்றீங்க?” ஸ்ரீதர் உச்சஸ்தாயில் கேட்டான். “எங்க சந்திப்பீங்க?”

“எனக்கோ, அவங்களுக்கோ தனிமையா உணரும்போது ஃபோன் பண்ணுவாங்க. காஃபி டேல போய் ரெண்டு மணிநேரம் பேசுவோம். இல்ல சிட்டி செண்டர்.. பீச்.. ஆனா இதுவரைக்கும் அவ ஃப்ளாட்டுக்கு என்னைக் கூப்டதில்ல. நான் என் ஃப்ளாட்டுக்குக் கூப்டுவேன். வரமாட்டா..”

“சரி சார்... இப்பவும் அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசை உங்களுக்கு இருக்கா?”

“இல்லாம இருக்குமா ரகு?” அவர் குரலில் காதல் இருந்தது. 29 வருடக்காதல்.

“ஜெனிஃபர்கிட்ட பேசும்போது கேட்டிருக்கீங்களா?”

“ம்ஹூம். அந்த தைரியம் இல்லப்பா”

“என்ன சொல்றீங்க சார்?”

“ஆமா. ரெண்டு பேர் விட்லயும் சம்மதிச்சாத்தான் கல்யாணம்கறது நாங்க லவ் பண்ணும்போது பேசிகிட்டது. ரெண்டுபேர் வீட்லயும் சம்மதிக்காம நாங்க வீட்டை மாத்திகிட்டுப் போய்ட்டோம் அப்போ. எங்க வீட்ல அதுக்கப்பறமா – எனக்கு முப்பத்தாறு முப்பத்தேழு ஆகறப்போ- சம்மதிச்சாங்க. ‘அப்போ நீங்க ஒத்துக்கலியே’ன்னு ஒரு வீம்புல வேண்டாம்ன்னுட்டேன். என் தங்கச்சிக்கு கல்யாணமாகி அவளும் பாம்பேல செட்டிலாய்ட்டா. எனக்கு ஒரு துணை இருந்தா நல்லதுதான். ஆனா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்க தயக்கமா இருக்குப்பா. என்னான்னு தெரியல.”

அதற்குப் பிறகு நானும், ஸ்ரீதரும் சார்லஸை சந்தித்துப் பேசி ஜெனிஃபருடைய சித்தப்பாவை சந்தித்து விஷயத்தை சொல்ல அவர்களும் சந்தோஷப்பட்டு.. “ஜூன் முப்பது ஜெனிஃபரோட பர்த்டே. அன்னைக்கு ஒரு பார்ட்டி மாதிரி ஏற்பாடு பண்ணுங்க. நாம ஒரு பத்து பதினைஞ்சு பேர் போதும். ஜெனிஃபர்கிட்ட சொல்லலாம். ரொம்ப சந்தோஷப்படுவா.” என்றார் சித்தப்பா.

நாங்கள் ஸ்ரீதரின் அபார்ட்மெண்டை நெருங்கியபோது மணி ஐந்து. ஜெனிஃபர் வழக்கம்போலவே உற்சாகமாக இருந்தார்.

“ஸ்ரீதர் எல்லாம் உன் வேலையா? பர்த்டேன்னா நான் அபார்ட்மெண்ட்ல இருக்கற அஞ்சாறு வாண்டுகளைக் கூப்ட்டுட்டு வெளில சுத்தீட்டு வருவேன். நீதான் என்னமோ பார்ட்டி வைக்கறேன் அது இதுன்னு பெரிசு பண்ற..” ஜெனிஃபர் இவ்வளவு பேசி இப்போதுதான் கேட்கிறேன். வெறும் ஹலோ, ஹாய்தான் இதற்கு முன். கிருஷ்ணன் இவருக்காகக் காத்திருந்ததில் தப்பே இல்லையென்று தோன்றியது.

பெரிய கேக் வைக்கப்பட்டிருக்க நான், ஸ்ரீதர், சார்லஸ், ஜெனிஃபரின் சித்தப்பா சித்தி மற்றும் நான்கைந்து பேர் மட்டுமே இருந்தோம். அதுபோக அபார்ட்மெண்ட் குழந்தைகள் பத்துபேராவது இருப்பார்கள். வீட்டையே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்கள்.

“சரி... கேக் வெட்டுங்க ஆன்ட்டி” என்றொரு வாண்டு கெஞ்ச, “நீயே வெட்டும்மா” என்று சொன்னார் ஜெனிஃபர்.

“ஒரு நிமிஷம் மேடம். ஒரு முக்கியமான கெஸ்ட் வரணும்” ஸ்ரீதர் சொல்ல ‘யார்’ என்பதாய் புருவமுயர்த்தினார் ஜெனிஃபர்.

“வெய்ட் அண்ட் சீ” என்று சொல்லிய ஸ்ரீதரின் செல்ஃபோன் சிணுங்கியது. எடுத்து ஸ்க்ரீனைப் பார்த்து “வந்துட்டார்...” என்றான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் கதவைத் திறந்தபடி கிருஷ்ணன் வர ஜெனிஃபரின் கண்களில் மின்னல்.

“வாவ்... கிருஷ்! வாட் எ சர்ப்ரைஸ்! கம்..கம்..” என்றபடி உற்சாகமாய் நடந்து சென்று கிருஷ்ணனைக் கட்டி அணைத்து வரவேற்றார்.

“பாருடா கிட்டத்தட்ட முப்பது வருஷக் காதல்” காதில் கிசுகிசுத்தான் ஸ்ரீதர்.

“அவங்க கண்ல பார்த்தியா.. அழுதுட்டாங்கன்னு நெனைக்கறேன்” என்று நான் சொன்னதுக்கு “போடா உடனே எக்ஸ்ட்ராவா நீயே அதையும் இதையும் சேர்த்து -எழுதறமாதிரியே - யோசிப்ப..” என்று திட்டினான்.

கேக் வெட்டி, எல்லாருக்கும் கொடுத்து அண்டை வீட்டாரெல்லாம் போய்விட குழந்தைகளெல்லாம் ஹாலில் விளையாடிக் கொண்டிருக்க.. உள் அறையில் ஜெனிஃபர், அவரது சித்தப்பா, சித்தி, சார்லஸ், ஸ்ரீதர் நான் ஆகியோர் மட்டுமே அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தோம். கிருஷ்ணன் சார் வீட்டை நோட்டமிட்டபடி ஹாலில் குழந்தைகலோடு இருந்தார். (நீங்க பேசுங்க.. நான் வர்ல.. ஒரு மாதிரி ஹெசிடெண்டா இருக்கு)

எங்களில் யார் ஆரம்பிப்பது என்று தெரியாமல், வெட்டிப் பேச்சுகளால் அரைமணி நேரம் கழிய சார்லஸ்தான் உடைத்தார்.

“ஜெனி.... எவ்ளோ நாள்தான் இப்படி ஒண்டிக்கட்டையா இருப்ப? உனக்கு ஒண்ணுன்னா யாராவது வேண்டாமா?” - என்று ஆரம்பித்தவர் என்ன நாடகத்தனமா ஆரம்பிச்சுட்டோமோ என்பதுபோல நிறுத்தி எங்களைப் பார்த்தார்.

ஜெனிஃபர் எங்கள் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து “என்ன சார்லஸ்..? என்னமோ இண்ட்ரஸ்டிங்கா ஆரம்பிச்ச? சொல்லு.. சொல்லு..” என்றார்.

“இல்ல.. உனக்குத் தெரியும்.. கிருஷ்ணன் சாரும் இன்னும் கல்யாணம் பண்ணிக்காமதான் இருக்காரு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கறதுல யாருக்கும் எந்த சங்கடமும் இல்ல. அவருக்கும் துணையாச்சு.. உனக்கும் துணையாச்சு..” - மேற்கொண்டு சார்லஸ் தொடர முடியாமல் இடைமறித்தார் ஜெனிஃபர். “ஏய்.... யார் போட்ட ஐடியா இது? ஆங்? ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு” என்றார் கிண்டலான தொனியில்.

இப்போது ஜெனிஃபரின் சித்தப்பா தொடர்ந்தார்.. “ஜெனி்.. அவன் சொல்றதுல என்ன தப்பு? கல்யாணம் பண்ணிகிட்டா ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கலாம்ல?”

“இல்ல சித்தப்பா... அப்படி இல்ல” தீர்க்கமான குரலில் மறுத்தாள் ஜெனிஃபர்.

“நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க.. ‘எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சது’ன்னு சில பேர் சொல்றத. என் காதல் முடியக்கூடாது.. அதுனால எனக்கு கல்யாணம் வேண்டாம். கல்யாணம் ஆச்சுன்னா எனக்கு குழந்தை வேணும்னு தோணும். நாளைக்கு என் வீட்ல இருக்கற விளையாட்டுப் பொருளெல்லாம் அவனோ அவளோ மட்டும்தான் உபயோகிக்கணும்னு தோணும். ஊர்ல உலகத்துல இருக்கற எல்லா குழந்தைகளையும் பார்த்து இப்போ என்னால சிரிக்க முடியுது. எல்லாரையும் என் குழந்தையா நெனைக்க முடியுது. ஒரு குழந்தைக்கு மட்டும் அம்மாவா என்னால மாற முடியாது”

“குழந்தைக்காக சொல்லல ஜெனி... உனக்கு அவரும் அவருக்கு நீயும் ஒருத்தருக்கொருத்தர்..”

“இப்போ அப்படித்தான் இருக்கோம் சித்தப்பா. கல்யாணமானா நிச்சயமா அப்படி இருக்க மாட்டோம். சமூகத்துக்காகத்தான் கல்யாணம். ஒரே வீட்டுக்குள்ள என் ரசனைக்கு அவரு தலையாட்டுவாரு.. அவர் ரசனைக்கு நான் தலையாட்டணும். விட்டுக் குடுத்து வாழறதுல சுகம்னு டயலாக் பேசணும்... அது எனக்கு வேண்டாம். எனக்கு கிருஷ்ணனைப் பார்க்கணும்ன்னா ஒரு ஃபோன் போட்டு கூப்ட்டு எங்காவது அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பேசிட்டிருப்போம். அந்த அரைமணி நேரம் எனக்கு தர்ற திருப்தியை 24 மணிநேரம் அவர் கூட இருந்தாலும் வராது”

"இப்படியே இருந்தா உனக்கு ஒண்ணுன்னு வரும்போது..”

“அப்பவும் நான் கிருஷ்ணனைக் கூப்பிட முடியுமே.. இல்லைன்னா இதோ ஸ்ரீதர் மாதிரி நாலஞ்சு நல்லவங்களை நானும் சம்பாதிச்சு வெச்சிருக்கேன் சித்தப்பா. அதுக்காக கல்யாணம் பண்ணிக்கணும்கறது எனக்கென்னமோ முட்டாள்தனமா படுது. ஒரு மாசமா நான் கேக்கற ம்யூசிக், படிக்கற புக், பார்க்கற சினிமான்னு அவரைப் பார்க்கறப்போ புதுசா பகிர்ந்துக்க பல விஷயங்கள் இருக்கறது எவ்ளோ சுவாரஸ்யம் தெரியுமா? ஒரே வீட்ல இருந்தா இதெல்லாம் சாத்தியமே இல்ல. இப்போ அவர் வந்தப்போ அத்தனைபேர் முன்னாடி அவரைக் கட்டிப்பிடிச்சு என்னால அன்பைக் காமிக்க முடியுது. உங்களுக்கு இது சாத்தியமா? அவரைக் கல்யாணம் பண்ணிகிட்டா அவர் வேற ஒரு பொண்ணைப் பார்த்தா எனக்கு கோவம் வரலாம், அத பொஸஸிவ்ன்னு அவர் பெருமைப்படலாம். ஆனா நாளாக நாளாக அது அவருக்கு கோவமா மாறலாம். நான் என் வாழ்க்கையையும் அவர் அவர் வாழ்க்கையையும் வாழ்ந்துட்டே ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கோம் இப்போ.. அத கெடுக்கணுமா?”

“வேண்டாம் ஜெனி. யு ஆர் ரைட்” என்றபடி கிருஷ்ணன் அறைக்குள் நுழைய “ஹேய்... இதுல உன் பங்கும் இருக்கா கிருஷ்?” என்று கேட்டார் ஜெனிஃபர்.


“எனக்கு உன்னை மேரேஜ் பண்ணிக்கணும்னு இண்ட்ரஸ்ட் இருந்தது. ஆனா இப்போ இல்ல”

“வெல்.. யூ அண்டர்ஸ்டெண்ட் மீ.. ஐ லவ் யூ கிருஷ்” என்றபடி கிருஷ்ணனை அணைத்தபடி என்னைப் பார்த்தார் ஜெனிஃபர்.

“தப்பா ரகு?”

“இல்ல மேடம்.. நீங்க க்ரேட்” என்று நான் சொன்னபோது எடிட்டரின் அழைப்பு வந்தது செல்ஃபோனில்.

“என்னாச்சு?” என்றார் அவர் எதிர்முனையில்.

“வந்து சொல்றேன் சார். கவர் ஸ்டோரியாவே போடலாம்”

.

இது உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதை

.

Monday, June 22, 2009

தமிழ் சினிமாவின் தற்போதைய டாப் டென் எதிர்பார்ப்புகள்

10. கண்டேன் காதலை




தமிழ்சினிமாவில் இந்தி படங்களை ரீமேக் செய்வது குறைவு. இந்தப் படம் JAB WE MET என்ற சூப்பர் ஹிட் இந்திப் படத்தின் ரீமேக். பரத் - தமன்னா நடிக்கும் இந்தப் படம் கதை விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப் படுகிறது. (பர்சனலாக பரத்-தை ஷாகீத் கபூரின் இடத்தில் பொருத்திப் பார்க்க மனம் மறுக்கிறது!)


9. மெட்ராஸ் பட்டிணம்





ஆர்யா நடிக்கும் இந்தப் படம் 1940களின் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது.

8. இது மாலை நேரத்து மயக்கம்




தனுஷ் ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம். ஆனால் செல்வராகவனின் பிஸி ஷெட்யூல் காரணமாக இந்தப் படம் தற்போதைக்கு நிறுத்திவைக்கப் பட்டுள்ளதாக செய்திகள் உலாவருகின்றன.


7. விண்ணைத்தாண்டி வருவாயா



கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கம். சிம்பு-த்ரிஷா நடிப்பில் ஏ. ஆர். ரகுமானின் இசையில் வரவிருக்கும் படம்.


6. கோவா




சென்னை 600028 மற்றும் சரோஜா பட வெற்றிக்கூட்டணி.

5. ஆடுகளம் & ஆதவன்




ஐந்தாம் இடத்தை இரண்டு ‘ஆ’ படங்கள் பகிர்ந்து கொள்கின்றன. முதலாவது தனுஷின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ஆடுகளம். பொல்லாதவன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது!





அடுத்தது ஆதவன். கமர்ஷியல் ஹிட் கொடுப்பதில் நம்பர் ஒன் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம். சூர்யா படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புள்ள அம்சமாக இருக்கிறது.


4. அசல்



சரணின் இயக்கத்தில் அஜீத்!


3. வேட்டைக்காரன்



விஜய்...!


2. உன்னைப்போல் ஒருவன்




A WEDNESDAY என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக். கமலுடன் மோகன்லாலும் இணைந்து நடித்துள்ளார்.


1. எந்திரன்


என்ன சொல்ல?



.

(thanks for the images: sify, galatta, behind woods... )

Saturday, June 20, 2009

முத்திரை - விமர்சன்ம்



படம் ஆரம்பிக்கும் காட்சியில் நிதின்சத்யாவை அவரது அம்மா துரத்துகிறார். அவரோடு சேர்ந்து ஊரார் எல்லாம் கம்பும், கடப்பாரையும் வைத்துக் கொண்டு அவரைத் துரத்துகிறார்கள்.

அப்போதே தெரிந்திருக்கவேண்டும்... அவர்கள் துரத்துவது நம்மையும்தான் என்று.. எங்கே புரிந்தது மரமண்டைக்கு!

ஊர்க்காரர்களால் துரத்தப்பட்ட நிதின்சத்யா, சென்னையில் (சென்னைதானேப்பா? ஒரு மண்ணும் ஞாபகமில்ல) டேனியல் பாலாஜியைச் சந்திக்கிறார். நிதின் சத்யாவைப் போலவே டேனியல் பாலாஜியும் ஒரு பொறம்போக்கு என்பதால் இருவரும் ஃப்ரெண்டாகி விடுகிறார்கள். டேனியல் பாலாஜி லக்‌ஷ்மி ராயைக் காதலிக்கிறார். அவருக்கு உதவ டேனியலின் அறைக்கு லக்‌ஷ்மி ராயை அழைக்க, அங்கே எதிர் அறையில் இருக்கும் சேத்தனைத் தேடி கமிஷனர் கிஷோர் வர.. தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்றெண்ணி நிதின், டேனியல் மற்றும் அவர்களது இரு காதலிகளும் ஓட.. சேத்தன் தனது லேப்டாப்பை இவர்கள் காரில் போட்டுவிட்டு ஏற முயலும்போது போலீசாரால் சுடப்பட்டு இறக்கிறார்.

அந்த லேப்டாப்பில் பொன்வண்ணன், தனது அண்ணன் சரவணனைக் கொன்றது பதிவாகி இருக்கிறது. முதலமைச்சராக ஆகப்போகும் முயற்சியில் இருக்கும் பொன்வண்ணனும்..

போங்கப்பா சொல்ற எனக்கே இவ்ளோ போரடிக்குது. படிக்கற உங்களுக்கு என்ன கொடுமையா இருக்கும்னு தெரியுது!

பாலிவுட் ஸ்டைலில் படமெடுக்க முயற்சித்திருக்கிறார்கள். குழப்பமான திரைக்கதையால் கோட்டை விட்டுவிட்டார்கள்.

அதுவும் அந்த க்ளைமாக்ஸில் ஆனந்த், பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, நிதின் மாறி மாறிப் பேசும்போது திரையக் கிழித்து விடலாமா என்று தோன்றுகிறது!


லக்‌ஷ்மிராயை பார்க்கும்போதெல்லாம் சம்பந்தமில்லாமல் T 20 ல் இந்தியா செமி ஃபைனலுக்குப் போகாமல் திரும்பியது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. சரியான ஸ்ட்ரக்சர் என்பதை மறுப்பதற்கில்லை.

டேனியல் பாலாஜி தனது மாடுலேஷனையும், பாடி லேங்குவேஜையும் மாற்றிக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. ஒரே ரிப்பீட்டடாக இருக்கிறது.

நிதின் சத்யா மட்டும் ஆறுதலளிக்கிறார். சரக்கடிக்கும்போது ஐஸ் இல்லாததால் எதிரிவிட்டில் வாங்கிவர டேனியல் பாலாஜி சொல்லும்போது ‘குச்சி ஐஸா.. கோன் ஐஸா’ என்று கேட்பதில் தொடங்கி படம் நெடுக ரிலாக்ஸாக இருக்க வைக்க உதவுகிறார். அவரையும் காதலியைப் பார்த்து செண்டிமெண்டலாகப் பேச வைப்பது எரிச்சலூட்டுகிறது.


யுவனின் மகுடத்தில் இந்தப் படம் ஒரு பெரிய சறுக்கல். இதுவரைக்கும் பாடல் காட்சிகளில் கொத்துக் கொத்தாக இப்படி ஆட்கள் எழுந்து போவதைப் பார்த்ததே இல்லை. மூன்றாவது பாடலுக்கு தியேட்டரில் ஒரு ஆள் “அய்யோ.. சிகரெட் தீர்ந்துடுச்சுய்யா.. பாட்டு போடாதீங்க” என்று கத்தியதையும் கேட்க முடிந்தது!


மொத்தத்தில் முத்திரை - ஆள வுடு சாமி!