Monday, November 9, 2009

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்

















மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் வார்த்தைகள் வரவில்லை. ஆகவே வார்தைகளற்ற இந்தப் பதிவு. (ம்க்கும்!)

நாளை சந்திக்கிறேன்! (நாளைக்காஆஆஆஆ?)


.

Thursday, November 5, 2009

டாப் டென் மறதிகள்



ரொம்ப நாள் கழிச்சு பத்து...

மறதி விஷயத்துல நம்மளை அடிச்சுக்க யாரும் கிடையாது. நம்மளைன்னு சொன்னா உங்களையும் சேர்த்துதான். நாம வழக்கமா மறக்கற பல விஷயங்களை பட்டியல் போட்டா டாப்ல வர்ற பத்து மறதிகள்...

1) ஏதாவது இடங்களுக்குப் போனா செல்ஃபோனை கைல வெச்சுகிட்டு, வர்றப்ப எங்க வெச்சோம்னு பத்து நிமிஷம் தேடிட்டு இருப்போம். கடைசில கையிலயும் இல்லாம, பையிலயும் இல்லாம, கடையிலயும் இல்லாம, காருக்குள்ளயே இருக்கும்.

2) வீட்டுக்குப் போறப்ப வழில இருக்கற கடைல இறங்கி ஏதாவது பொருள் வாங்க வேண்டியிருக்கும். அந்தக் கடையைத் தாண்டிப் போனப்பறமோ, வீட்டு காலிங்பெல்லை அடிக்கறப்பவோதான் அது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கும்.

3) விகடனோ, உயிர்மையோ, மணல்வீடோ படிச்சுட்டு இருப்போம். நல்ல கட்டுரையா இருக்கும். ‘இத இப்படிப் படிக்க்க் கூடாது. சண்டே பால்கனில உட்கார்ந்து பொறுமையா படிக்கணும்’ன்னு அத ஜம்ப் பண்ணீட்டுப் போவோம். அவ்ளோதான். அடுத்த இஷ்யூ வரும்போதுதான் ‘அட.. போன இஷ்யூல அதப் படிக்கலியே’ன்னு ஞாபகம் வரும். வீட்டைப் புரட்டிப் போட்டு, மனைவிகிட்ட திட்டு வாங்கி... ச்சே...

4) அலுவலக வேலையா யார்கூடயாவது எம்.டி.முன்னாடி உட்கார்ந்து ஃபோன்ல பேசிகிட்டிருப்போம். அப்போ கால்வெய்ட்டிங்ல இன்னொரு ஃப்ரெண்டு வருவார். எம்.டி.முன்னாடி எடுக்கவும் முடியாதா.. சரி அப்புறமா கூப்பிட்டுக்கலாம்னு விட்டுடுவோம். அது அவ்ளோதான். ரெண்டு நாள் கழிச்சு அவன் கூப்பிட்டு திட்டும்போதுதான் ஞாபகமே வரும். இல்லையேன்னு சமாளிக்கவும் முடியாது...

5) தெரிஞ்சவங்களோட பிறந்தநாள், திருமணநாள்னு குறிச்சு வெச்சிருப்போம். ‘அடுத்த வாரம் வருதா.. ம்ம்.. கூப்பிட்டு வாழ்த்தணும்’னு நெனைப்போம். கரெக்டா அதுக்கு அடுத்த வாரம்தான் ஞாபகத்துக்கு வரும்.

6) ஃப்ரெண்டுகிட்ட ஏதாவது கடன் வாங்கியிருப்போம். பட்ஜெட் போடும்போது அதுமட்டும் எப்படியோ....

7) ‘நாளைக்குக் குளிக்கறப்போ, காலை நல்லா தேய்ச்சுக் குளிக்கணும்’னு நெனைச்சுப்போம். ஆஃபீஸ்ல எப்பவாவது நம்ம காலை நாம பாக்கறப்பதான் அட மறந்துட்டோமேன்னு தோணும்.

8) ஏதாவது குறிப்புகளுக்காக ஆஃபீஸ்ல இணையத்துல உட்கார்ந்து தேடிப் பிடிச்சு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுட்டு, குறிப்பிட்ட மீட்டிங்குக்கு எல்லாத்தையும் வெச்சு கரெக்டா நோட்ஸ் எடுத்து வெச்சுட்டுப் போய் அசத்தணும்னு நெனைச்சுட்டே இருப்போம். கரெக்டா அந்த மீட்டிங்குக்கு போறதுக்கு அரைமணி நேரத்துக்கு முன்னாடிதான் அந்தப் பேப்பர்ஸெல்லாம் எங்க வெச்சோம்னு மறந்து போய்த் தேடிட்டே... இருப்போம்.. அதுக்குள்ள...

9) இந்த மாதிரி பதிவுகள் எழுத பத்து பாய்ண்ட்ஸை குறிப்பெழுதி கிறுக்கி வெச்சிருப்போம். கரெக்டா இத எழுதலாம்னு தோணித் தேடும்போது அது கிடைக்காம, ஒரு வழியா யோசிச்சு யோசிச்சு ஒம்பது பாய்ண்ட்ஸை எழுதி ஒப்பேத்தீடுவோம். அந்த பத்தாவது பாய்ண்ட் மட்டும்.....



.

Wednesday, November 4, 2009

அவியல் 04.11.09




இந்தப் படத்தில் இருப்பவர்களெல்லாம் யார்?

1) ஆதவனுக்கு டிக்கெட் கிடைக்காமல் வெளியே காத்துக் கொண்டிருப்பவர்கள்

2) குருவி படம் பார்த்துவிட்டு, டிக்கெட் காசைத் திருப்பிக் கேட்டு வெளியே காத்துக் கொண்டிருந்தவர்கள்

3) நமீதாவைப் பார்க்க சென்னை சென்று, பார்க்க முடியாமல் ஏமாற்றத்தோடு நின்று கொண்டிருப்பவர்கள்

விடை கடைசி பாராவில்.

**********************************

ண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.

“எங்கய்யா இருக்க? இன்னும் ஆஃபீஸுக்கு வர்லியா?”

“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”

“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.

இதிலென்ன இருக்கு?

பாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன்! ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்!

*********************

ன் தோழி ஒருத்தி தனக்குப் பிறந்த மகளுக்காக ஒரு பெயர் வேண்டுமென்று ரொம்ப நாளாக செலக்ட் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ ஒரு சீரியலில் வந்த (செல்வி?) கேரக்டர் ஒன்றின் மஹிமா என்ற பெயர் குடும்பத்தில் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. அதையே தேர்வு செய்திருக்கிறார்கள். பெயர் வைப்பதற்கு சில நாட்களுக்கு முன், அந்த சீரியலில் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரம் இறந்துவிட்டதாகக் காட்டியிருக்கிறார்கள். உடனேயே எல்லாரும் கெட்ட சகுனமாக நினைத்து பேரை மாற்றிவிட்டார்களாம்! சீரியல்களின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள்.

****************************************

நண்பர் ஒருவர் அடிக்கடி அலைபேசியில் அழைப்பார். எப்போதாவது நானும் எடுப்பேன். அரைமணிநேரம் பேசுவோம். கடைசியில் சொல்லுவார்.. “சரி..சரி.. பிஸியா இருக்கீங்க போல... நீங்க எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்பச் சொல்லுங்க.. கொஞ்சம் பேசணும்”

‘கொஞ்சம்’ பேசணுமா? அப்ப அரை மணிநேரம்கறது ‘கொஞ்சம்’கூட அல்லவா உங்களுக்கு?’ என்று நினைத்துக் கொள்வேன்!

*****************************
சில நாட்களுக்கு முன் நண்பர் செல்வேந்திரன் ஒரு எஸ்ஸெம்மெஸ் அனுப்பியிருந்தார்.

I'm happy to inform that my bike is crossing 10000 kilometers today. I take this opportunity to convey my sincere thanks to Honda company, Ministry of Transport, Road contractors, Indian Oil Corporation, Hindustan Oil Corporation and Mechanic Murugesan.

எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா...


***************************

கீழே சில கவிதைகள். எழுதியது நானல்ல.. என் வலையில் போட்டுக் கொள்ள பிரபலம் ஒருவர் எழுதியது. யாரென்று கண்டுபிடியுங்களேன்...


ஏறுவரிசை - இறங்குவரிசை

அசோகர்
போர்
உயிர்பலி
போதனை
புத்தர்
ஞானம்

புத்தம் சரணம் கச்சாமி

யாழ்பாணம்
சோதனை
ரச பாணம்
மக்கள்
ராஜபக்‌ஷே

புத்தம் ரத்தம் கச்சாமி..!

----------------------

கருணை

எளியவர்களுக்கு அன்னதானம்
செய்து கொண்டிருந்தேன்.
வரிசையில் ஒருவன் இடையே புகுந்தான்.
ராஸ்கல் அவனை அடிச்சு விரட்டுங்கடா..!

--------------------------

போதனை

நான் வேறு உடல் வேறு.
இரண்டும் ஒன்றல்ல.
ஆனால் அடிபட்டால்
எனக்குத்தான் வலிக்கிறது..!

--------------------------

அதிகப்பிரசங்கம்

இன்று மெளனமாய் இருப்பது
எப்படி என வகுப்பு எடுத்தேன்.
அதில் நான் பேசியது
....................................!

----------------------------

முரண் முக்தி

இறவாநிலை பற்றி
பிரசங்கம் செய்த யோகி
இதற்கு முன் ஒருமுறை கூட
இறந்ததில்லை.

-----------------------
அவதார புருஷன்

கல்கி அவதாரத்தை
மக்கள் எதிர் நோக்கினார்கள்
வந்ததோ வராகம்...!

------------------------

வேதாந்த விவாதம் 2009

அஹம் பிரம்மாஸ்மியை
பிரித்து மெய்ந்தார்
சங்கரானந்தா சரஸ்வதி.

மாண்டூக்கிய உபநிஷத்தை
மடக்கி பிடித்தார்
மந்திராகிரி ஸ்வாமிகள்.

நான் விடுவேனா என் பங்குக்கு
பிரம்மசூத்திரதில் சூப் வைத்தேன்.

கடைசியில் அனைவரும்
ஆர்குட்டிலிருந்து வெளியேரினோம்.

----------------------------

ஐங்கரன்


பிளாஸ்டராப் பாரிசில் இருந்தாலும்
நான் இந்தியாவில் தான் கரைகிறேன்.

அடுத்தவருடம் எனக்கு
சிவப்பு வர்ணம் பூச
ஊர்வலத்தில் சிலர் ரத்தம்
சிந்துகிறார்கள்.

என்னில் கரையாமல்
என்னைகரைத்தென்ன பயன்?

----------------------------

மேலே படங்களில் நீங்கள் கண்டதெல்லாம் நான் சொன்ன ஆப்ஷன்களில் ஏதுமில்லை. அவர்களால் ஆதவனையோ, குருவியையோ, நமீதாவையோ பார்க்க முடியாது. அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே...

மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பைப் படியுங்கள்.

(இந்தத் தகவலை என்னோடு பகிர்ந்து கொண்ட நண்பர் குமார் சுப்ரமணியனுக்கு நன்றி!)


.