Showing posts with label Temple. Show all posts
Showing posts with label Temple. Show all posts

Tuesday, January 20, 2009

ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம்.... - Part 1


‘எனக்கு ரொம்ப நாளா ரங்கநாதனைப் பார்க்கணும்னு ஆசைங்க’ என்று உமா சொன்னபோது கொஞ்சம் பயந்துதான் போனேன். அவரது ஒன்றேமுக்கால்விட்ட தம்பி ரங்கநாதன் என்று ஒருத்தர் புனேவில் இருக்கிறார். அடடா.... இந்தப் பொங்கலுக்கு செலவுதான் போல என்று நினைக்கும்போது ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று விளக்கமாய்ச் சொன்னபோதுதான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.


‘அவரு யாருப்பா’ என்று குழந்தைகள் கேட்கவே தசாதவதாரத்தை விளக்கி (புராணக்கதை இல்லீங்க.. கமலோட தசாவதாரம்) அதுல ஒரு சிலையைக் கடல்ல போடுவாங்கள்ல அதுதான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்’ என்று சொல்ல அவர்களுக்கும் ஆவல் தொற்றிக்கொண்டது.

திருப்பூரில் பஸ் ஏறியபோதே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம். பஸ்ஸில் ‘குருவி’ டிவிடி ஓடிக்கொண்டிருந்தது. கண்டக்டரிடம் பேசி வேறு படம் போடச் சொல்லி தாஜா செய்துகொண்டிருந்தபோது பின்னாலிருந்த இரண்டு இளைஞர்கள் ‘இத மாத்தாதீங்க’ என்று சொல்லவே ‘சரி... உங்க தலையெழுத்து’ என்றவாறு அமர்ந்தேன். (லிஃப்டுடன் பூமிக்கடியில் சென்று ஆற்றுக்குள்ளிருந்து விஜய் வெளிவரும் காட்சியில் வேண்டுமென்றே எழுந்து அவர்களை திரும்பிப் பார்க்க... “ஸாரிங்ணா.. இந்தளவுக்கு எதிர்பார்க்கல” என்றார்கள்.)

************************

எனக்கு ஸ்ரீரங்கம் மிகப் பிடிக்கும். ரங்கநாதரைத்தவிர இரண்டு ரங்கராஜன்களின் ஊர் என்பதால். எப்போதோ சின்ன வயதில் பெற்றோர்களோடு வந்த நினைவு லேசாக இருக்கிறது.

இரவு திருச்சியில் தங்கி, காலை ஸ்ரீரங்கம் பயணித்தோம். வழியில் அகண்ட காவிரியைப் பிரமிப்பாய்ப் பார்த்தவாறே.

அந்த 236அடி ராஜகோபுரத்தை அடையும்போது லேசான மழைத்தூறல் எங்களை வரவேற்றது. 400 ஆண்டுகளுக்கு முன்னால் நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப் பெறாதிருந்த இந்தத் தெற்கு ராஜகோபுரம் அகோபிலமடம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமிகளின் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டதாம். ஆசியாவேலேயே மிக உயரமான கோபுரமான இதன் ஆறாவது நிலைக்கு நன்கொடை அளித்திருப்பவர் இசைஞானி இளையராஜா என்பது உட்பட பல விபரங்களை கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு சந்திதியாக தரிசனம் முடித்து, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்க அவரது மூலஸ்தானம் நோக்கி செல்லும்போது பிரகாரக் கதவுகள் அடைக்கப் பட்டிருந்தன.

“அவரு குதிரை வாங்கப் போயிருக்காரு. ஆயிரங்கால் மண்டபம் போனீங்கன்னா அவரைப் பார்க்கலாம்” என்று உற்சவமூர்த்தி ரவுண்ட்ஸில் இருப்பதாகச் சொன்னார்கள். சரி என்று ஆயிரங்கால் மண்டபத்தை தேடிப் போவதற்குள் ‘அடடா.. இப்போதான் இங்கேர்ந்து கிளம்பறார்ங்க. முன்னாடி இன்ஃபர்மேஷன் செண்டர் இருக்குல்ல? அங்க போய் நின்னீங்கன்னா அந்த வழியாத்தான் வருவார்’ என்றார்கள்.

மறுபடி அங்கேயிருந்து அவர் குறிப்பிட்ட இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து போனபோது “இந்த இடத்தை அவர் க்ராஸ் பண்ணி 10 நிமிஷம் ஆச்சு. பிரகாரத்துக்குள்ள போயிருப்பாரு. 11.30க்கு மூலஸ்தான வாசல் திறப்பாங்க. உள்ள போயிடுங்க. 1 மணிக்குள்ள தரிசனம் முடிஞ்சு சொர்க்க வாசல் வழியா வந்துடலாம்” என்றார்கள்.

‘இதென்னடா.. அப்பல்லோ ஹாஸ்பிடல் சீஃப் டாக்டர் மாதிரி அப்பாய்ன்மெண்டே தரமாட்டீங்கறாரே’ என்று நினைத்தவாறே மூலஸ்தானத்திற்குள் போக நின்றிருந்த நீ............ண்டதொரு க்யூவில் நிற்கும்போது மணி 11. என்னப்பா இன்னைக்கு இவ்ளோ கூட்டம் என்றால் சொர்க்கவாசல் அடுத்த நாள் மூடிவிடுவார்கள். பிறகு அடுத்த வைகுண்ட ஏகாதசிக்குத்தான் திறந்துவிடுவார்களாம். அதனால்தான் கூட்டமாம்.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குறைந்தது ஒன்றிரண்டு கிலோமீட்டர் தூரமாவது இருக்கிறதே.. இந்தக் கோயிலின் பரப்பளவு எத்தனை என்று விசாரித்தபோது பிரமிப்பாய் இருந்தது. மொத்தம் 156 ஏக்கரில் அமைந்துள்ளது இந்தக் கோயிலின் பரப்பு. ஏழு பிரகாரங்கள், ஒன்பது தீர்த்தங்கள், 21 கோபுரங்கள், 13 கலசங்கள் என்று பிரம்மாண்டமான கோயில்தான்.

மணி 11.30...
12....
12.30....
1.....

கதவுகள் திறந்தபாடில்லை. கூட்டம் முட்டித்தள்ள ஆரம்பித்தது. கொஞ்சம் முன்னால் இடையில் தடுப்பை மீறி சிலர் செல்ல ஆரம்பிக்க நான் கூட்டத்திலிருந்து விலகிப் போய் அவர்களை ஒழுங்குபடுத்தி சத்தம் போட்டு எல்லோரையும் பின்னுக்கு வரச் செய்து, ‘முன்னாடி எவனாவது புகுந்தா பக்கத்துல இருக்கறவங்க தட்டிக் கேட்டாத்தானே ஆகும். அங்கேர்ந்து நான் வரணுமா.. என்ன சார் இது’ என்று நியாயம் கேட்டுவிட்டு மீண்டும் நான் நின்றிருந்த இடத்துக்கு வந்தபோது ‘யோவ்.. ஒழுங்கா லைன்ல வா’ என்று நாலைந்து குரல் கேட்டது. ‘வாங்கய்யா... தர்மவான்களா.. இவ்ளோ உடனே அட்வைஸை ஃபாலோ பண்றாங்கய்யா’ என்று நினைத்தவாறே அவர்களுக்கு விளக்கமளித்து மீண்டும் லைனில் நின்றேன்.

1.30.

கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுமையிழந்தது. சிலர் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். திடீரென்று ‘பக்தா... உன் பக்தியை மெச்சினோம். பொறுமையாகக் காத்திருந்தது மட்டுமில்லாமல் கூட்டத்தையும் நெறிப்படுத்திய உமது பண்புக்குப் பரிசாய் உனக்கு எமது விஸ்வரூபத்தைக் காட்ட சித்தமானோம்’ என்று ரங்கநாதர் வந்து உள்ளே கூப்பிட்டால் என்னென்ன வரம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே....

“அப்பா.. இந்தக் கோயிலோட கதையைச் சொல்லுங்கப்பா” என்று மீரா சொல்ல..

மொத்தக் கூட்டமும்... (சரி.. சரி... பக்கத்துல இருந்த நாலைஞ்சு பேர்னு வெச்சுக்கங்க!) கவனிக்க நான் ஆரம்பித்தேன்....