
ஒரு அபார்ட்மெண்டில் குறிப்பிட்ட ஃப்ளாட்டிலிருந்து வழிகிற நீர் ஃப்ளாட்டை முழுதும் ஈரமாக்கி பைப்பில் வழிய, என்னவென்று பார்க்கிறார் வாட்ச்மேன். படத்தின் நாயகி சிந்துமேனன் குடியிருக்கும் ஃப்ளாட்டிலிருந்து வழிகிறது நீர்.
‘மேடம் மேடம்’ என்று கதவு தட்டுகிறார்..
அங்கே.....
**************************
கல்யாணியம்மா பாத்திரம் கழுவ பைப்பைத் திறக்கிறார். தண்ணீர் வரவில்லை.
வெறுப்போடு மாவரைக்க கிரைண்டரைப் போடுகிறார். மின்சாரமில்லை. அப்போது தொலைபேசி மணி ஒலிக்கிறது. போய் எடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். திடீரென்று சிங்க்’கில் திறந்து வைத்திருக்கும் பைப்பிலிருந்து தண்ணீர் வருகிறது. ஓரத்தில் வைத்திருக்கும் கரண்டி வழியே, வழிகிற நீர்.. நேராக.....
*****************************
தியாகராஜன் வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார். திடீரென புயல் காற்று வீசுகிறது. மழைத்துளி கன்னத்தில் விழுகிறது. குடையைத் திறக்க முயற்சிக்கிறார். குடை அவர் கையை விட்டுப் பறந்து செல்கிறது. பறந்து செல்லும் குடையின் முனை அவரை நோக்கி நிற்கிறது. எதுவோ, என்னவோ அவரைக் கலவரப்படுத்த மிரள்கிறார்.. இரண்டடி பின்வாங்குகிறார். திடீரென அந்தக் குடை பறந்து வந்து அவர் கழுத்தில்....
**************************
இந்த மூன்று சம்பவங்களுக்கும் தொடர்புடைய மிஸ்டர். எக்ஸைத் தேட, அவன் சிக்குகிறான். ஒரு தியேட்டரில்... அவனைத் தொடரும் அசிஸ்டெண்ட் கமிஷனர், டாய்லெட்டில் அவன் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அவனைத் தாக்குவது யாரென்று பார்க்கிற ஏ.சி-க்கு அதிர்ச்சி....
*********************
கொலைகளை விசாரிக்கும் அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆதி. அவ்வப்போது நடக்கும் சம்பவங்களிலிருந்து தனக்கும் சிந்துவுக்குமான காதலை அவர் நினைவு கூர்வது நல்ல திரைக்கதை.
மிருகம் படத்தில் நடித்த ஆதி, இதில் ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. அண்டர்ப்ளே. ஆனா குரல்ல போலீஸ் ஆஃபீஸரா இருக்கறப்ப காமிக்கற அதே விறைப்பை, காதல் பண்ணும்போதும் காமிக்கறாரு. மத்தபடி நல்லா பண்ணிருக்காரு. (குரல் அவரோடதா.. உண்ணி மேனனா? மலையாள வாடை!)
ஹீரோயின் - சிந்து மேனன். ஸ்பெஷலா ஒண்ணுமில்ல. சாதாரண குடும்பப் பொண்ணா வந்து, குடும்பப் பொண்ணா சாகறாங்க.
சிந்துவின் கணவனாக நந்தா. அவருக்கும் நல்ல ஸ்கோப். இடைவேளை வரை ஒன்றுமில்லாமல்... இடைவேளையிலிருந்து க்ளைமாக்ஸ் வரை மிக நல்ல வேடம்.

சிந்துவின் தங்கையாக சரண்யா மோகன். நத்திங் க்ரேட் அண்ட் நத்திங் வேஸ்ட்.
கடைசியில் ப்ரஸ்மீட்டில் வில்லன் வாக்குமூலம் கொடுக்கும்போது, ‘எதுக்குய்யா இப்படி ஃபார்மலா திருந்தின மாதிரி காமிக்கறாங்க’ என்று நாம் யோசிக்கும்போது ஒரு சின்ன டயலாக் மூலம் ‘அட’ என்று நிமிர வைக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
படத்தில் ப்ளஸ்.. மேக்கிங். ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஏதோ ஒரு இடத்தில் ஈரம் தெரிகிறது. அதைத் திணிக்காமல் யதேச்சையாகக் காண்பித்ததில் இயக்குனர் மிளிர்கிறார்.
இன்னொரு ப்ளஸ் பின்னணி இசை. தமன். மிரட்டலா இருக்கு.
ஈரம் - ஷங்கர் தயாரிப்பென்றால் தைரியமாகப் பார்க்கலாம் என்று நிரூபிக்கிற படம்.
.