Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Tuesday, July 29, 2008

ஒரு பாடல் உருவாகிறது

டைரக்டர் கிச்சுகிச்சா இசையமைப்பாளர் மீஜிக் மன்னாருடன் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில்அமர்ந்திருக்கிறார்.

“என்ன டைரக்டரே, இன்னும் பாடலாசிரியரைக் காணோம்?”

“பாடலாசிரியருக்கா வெய்ட் பண்ணீட்டிருக்கீங்க? நான்கூட இன்னும் உங்களுக்கு வர்லியோன்னு நினைச்சேன்”

“வந்திருச்சேய்யா, இப்போதானே டாய்லெட் போய்..”

“இல்லீங்க... மூடு வர்லியோன்னு கேட்டேன்..”

“அது கிடக்குது கழுத. பாடலாசிரியர் எங்கீங்க?”

“ஹி..ஹி.. நாந்தான் இந்தப் படத்துக்கு எல்லாப் பாட்டையும் எழுதறேன்”

“என்னது? நீதான் எழுதறியா? கிழிஞ்சது போ! நீ எழுதற வசனத்தையே எவனும் புரிஞ்சுக்க மாட்டீங்கறான். இதுல பாட்டு வேற எழுத வந்துட்டியா?”

“நீங்க போடற ம்யூசிக்ல பாட்டெங்கே கேக்கப் போகுது?”

“சரி... என்னமோ.. எழுதறது உம் பாடு, கேக்கறது கேக்கறவன் பாடு... சிச்சுவேஷன சொல்லு”

“அந்தக் கிராமத்துல இருக்கற..”

“என்னது? கிராமமா? நேத்துதான் தயாரிப்பாளர்ட்ட இதுவரைக்கும் போகாத நாட்டுக்கெல்லாம் போகணும்ன்னு ஆஸ்திரியாவிக்கு விசாவெல்லாம் ரெடி பண்ணச் சொன்ன?”

“அங்கதாங்க போய் கிராமத்து செட் போடப்போறேன்..”

”அதுசரி! ஏன்யா இங்க இருக்கற கிராமமெல்லாம் என்னாச்சு?”

”இந்த கிராமங்களெல்லாம் தன் சுயத்தை இழந்துவிட்டன. மரங்களில் கூடு கட்டிக் கொண்டிருந்த குருவிகள், இன்று ஃப்ளாட் வெண்டிலேட்டர்களிலே..”

“யோவ்... என்ன கேமராவா ஓடுது? எதுக்கு இவ்ளோ எமோஷன்?”

“சாரிங்க.. ரெண்டு நாளா மனப்பாடம் பண்ணீட்டிருந்தேனா.. அதான்..”

“ஓஹோ... மனப்பாடம் பண்ணித்தான் பேசறியா? அன்னிக்கு ஒரு இண்டர்வ்யூல எல்லாமே என் மனசிலேர்ந்து வருதுன்ன?”

“மனப்பாடம் பண்ணினா, மனசுக்குள்ளதானே இருக்கும்?”

“உன்னையெல்லாம்.. சரி. என்ன சிச்சுவேஷன்?”

”சிச்சுவேஷன் என்னன்னா ஹீரோ உக்கார்ந்திருக்கற கோவில்ல...”

“நீ என்ன `நான்கடவுளா எடுக்கற? ஹீரோவை கோவில்ல உக்காரவெச்சிருக்க?”

”இல்லிங்க நானெடுக்கறது `நான் பிச்சைக்காரன்’”

”தயாரிப்பாளரை மனசுல வெச்சுட்டு எடுக்கற போல... சரி சொல்லு”

“அந்தக் கோவிலுக்கு ஹெராயின்.. ச்சே.. ஹீரோயின் வர்றா, வந்து ஒரு ரூபா ஹீரோவுக்கு போடறா, அப்போ ஒரு ரூபாய்ல என்ன வாங்க முடியும்ன்னு கொதிச்சுப் போய், ஹீரோ நாட்டு விலைவாசிய பாட்டா பாடறான்”

”அடா.. அடா... பிச்சைக்காரன்கூட கேக்கற அளவுக்கு ஆயிடுச்சா நாட்டு நிலைமை?”

“சார்.. பிச்சைக்காரங்கள அவ்வளவு தாழ்வா நினைச்சுடாதீங்க”

“சரி, ம்ம்ம்ம், இது ஓக்கேவான்னு பாரு, தனனா தனனா தனனா, தந்தானா தந்தானா”

“தந்தாளா”ன்னு தானே வரணும்? தந்தானா’ன்னா ஆண்பால் வருது”

“ஆண்பாலா? உன் வாயில கள்ளிப்பால ஊத்த. இது மெட்டுய்யா..”

”ஓ! சரி.. சரி.. தனனா.. தனனா..” (மனதுக்குள் பாடிப்பார்த்து) இந்த வரிகள் ஓக்கேவா பாருங்க...”

“சொல்லு”

“தகஜம் தகஜம் தகஜம், தம்கிடதம் தம்கிடதம்”

“யோவ்... என்ன நக்கலா? மியீசிக்கெல்லாம் நான் போட்டுக்கறேன். நீ பாட்டு வரிய சொல்லு”

“பாட்டு வரிதாங்க இது...”

“பிச்சைக்காரன் எதுக்குய்யா தகஜம்னெல்லாம் பாடணும்?”

“எனக்கு பாரதத்து மேல ஆர்வம் அதிகம்க”

“பாரதத்து மேலயா? அடுத்த ப்ரைம் மினிஸ்டர் ஆகப் போறியா?”

“ச்சே.. பரதத்து மேல’ன்னு சொல்ல வந்தேன்”

“அடிங்க... வேற சொல்லுய்யா” என்றபோது தயாரிப்பாளர் உள்ளே நுழைகிறார்.

“டைரக்டரே... நீரொண்ணும் பாட்டு எழுதிக் கிழிக்க வேண்டாம். அதுக்கு புதுசா மூணு பேரைக் கூட்டியாந்திருக்கேன்” என்கிறார்.

இயக்குனரும், இசையமைப்பாளாரும் வாசலைப் பார்க்க...


அங்கே...

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ட்ராவிட்!


-என் வலையுலக வரலாற்றில் (?) முதல் முறையாக
(தொடரும்)

-----------------------


டிஸ்கி 1: ஒண்ணுமில்ல.. எழுத எழுத இன்னைக்கு கொஞ்சம் நேரமா வரச்சொல்லி எம்.டி.-யிடமிருந்து ஃபோன். அதான் தொடரும் போட்டுட்டேன்.


டிஸ்கி 2: இந்தப் பின்குறிப்புகளை ‘டிஸ்கி’ன்னு ஏன் சொல்றாங்க? அதுக்கு என்ன அர்த்தம்? (அது தெரியாமயே இவ்ளோ நாள் எழுதீட்டிருந்திருக்கேன்!)