Showing posts with label ஆயிரத்தில் ஒருவன். Show all posts
Showing posts with label ஆயிரத்தில் ஒருவன். Show all posts

Thursday, January 14, 2010

ஆயிரத்தில் ஒருவன் - விமர்சனம்



நேற்றைக்கு மதியம் வரை ரிலீஸா, இல்லையா என்று எல்லாரையும் எதிர்பார்ப்பில் வைத்திருந்து, ரிலீஸாகிவிட்டது - ஆயிரத்தில் ஒருவன்.

*******

பண்டைய சோழர் காலத்து மன்னன் ஒருவன் பாண்டிய மன்னர்களுடனான போரின்போது தன் மகனை (இளவரசனை) ஒருவரிடம் கொடுத்து, எத்தனை ஆண்டுகாலமாயினும் இவனைக் காப்பது உன் பொறுப்பு’’ என்றுவிட்டுப் போகிறான்.

------------டைட்டில்---------------

பண்டைய சோழர்கள் இருந்த இடத்தைத் தேடிச் செல்லும் அகழ்வாராய்ச்சியாளர் பிரதாப் போத்தனைக் காணவில்லை. அவரைத் தேடும் குழுவின் தலைமையாய் ரீமாசென் பலத்த பாதுகாப்போடு கிளம்புகிறார். கூடவே பிரதாப் போத்தனின் மகள் ஆண்ட்ரியாவையும் (அவரும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையிலிருக்கிறார்) அழைத்துச் செல்கிறார். வியட்நாம் அருகே இருக்கும் அந்த இடத்திற்கு கப்பலில் செல்லும்போது உதவியாளர்களார் கார்த்தி தலைமையிலான கோஷ்டி வருகிறது.



கப்பலிலிருந்து மாறி, இவர்கள் செல்லும் படகு ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் படகோட்டிகள் எத்தனை கொடுத்தாலும் இதற்கு மேல் வரமுடியாது என்று போய்விட, இவர்களே படகைச் செலுத்தி கரை நோக்கி செல்கிறார்கள்.

கரையை அடையுமுன்னே, கடலிலிருந்து வரும் ஒரு ஜந்து இவர்களை சாரமாரியாகத் தாக்க, பலர் மடிந்து விழ.. போகுமிடத்தின் விபரீதம் புரிய ஆரம்பிக்கிறது.

ஓலைச்சுவடியின் செய்தி மூலம், அந்த இடத்தை அடையுமுன் இதுபோன்ற ஏழு தடங்கல்களை இவர்கள் கடக்க வேண்டும் என்றறிகிறார் ஆண்ட்ரியா. பலவித சிக்கல்களுக்குப் பிறகு, கடந்து சோழர்கள் இருந்த இடத்தை கார்த்தி, ரீமா, ஆண்ட்ரியா அடைகிறார்கள்.

அங்கே...

அந்த சோழர் பரம்பரை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

அதன்பிறகு என்ன நடந்தது.. தஞ்சை மண்ணைத் தொட வேண்டும் என்று ஆண்டாண்டு காலமாய் காத்திருந்த அந்த சோழர்கள் ஆசை நிறைவேறியதா என்பதையெல்லாம் திரையில் கண்டு களியுங்கள்.


கொஞ்சம் சிக்கலான திரைக்கதையால் பலருக்கும் புரியாத வண்ணம் இருப்பதுதான் படத்தின் மைனஸ். அதுவும் படத்தில் பல இடங்களில் பின்நவீனத்துவம் புகுந்து விளையாடியிருகிறது!

படத்தின் ஹீரோ சத்தியமாக ரீமா சென்தான்! கார்த்திக்கு வேலையே இல்லை. படத்தில் ஹெல்பர் கேரக்டரில் வருகிறார். அவர் வேலையும் படத்தில் அது்தான். ஹீரோவாச்சே என்று கடைசியில் அவரை சோழர்களைக் காக்க வந்த தூதுவராய்க் காட்டியிருக்கிறார்கள்.



ரீமா சென். ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா மாதிரி ரீமாவுக்கு ஆயிரத்தில் ஒருவன். எந்த நடிகையும் நடிக்கத் தயங்கும் பல காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். பிரதாப் போத்தனைக் கண்டுபிடிக்க இவர் ஏன் பிரயத்தனப்படுகிறாரென்று பார்த்தால், இவர் சோழர்களைப் பழிவாங்க வந்த பாண்டிய வம்சத்தவர்!





மன்னர் பார்த்திபன் (ஆம். ஆர். பார்த்திபன்) & கார்த்தி தலைமையில் சோழர்களுக்கும், அதிரடிப்படைக்கும் நடக்கும் போர் - தமிழ்சினிமாவிற்கு புதுசு. அந்தப் போர் முறையும், அதைப் படமாக்கிய விதமும் - ராம்ஜியின் கேமராவுக்கு வாழ்த்துகள்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய மற்ற இருவர்: காஸ்ட்யூம் டிசைனர் இரம் அலி. ஆர்ட் டைரக்டர் சந்தானம். பண்டைய காலம், பண்டைய காலத்தவர்கள் இன்று வாழும் இடம் எல்லாவற்றையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

சோழர்கால ஒவியம் மூலம் நடப்பதை கண்டறியும் யுத்தியும் அபாரம்.

இசை:- வழக்கமாய் யுவனோடு கைகோர்க்கும் இவர், இப்போது ஜீ.வி.ப்ரகாஷ்குமாரோடு கைகோர்த்திருக்கிறார். ‘ப்ரகாஷா? செல்வராகவன் படத்துக்கா?’ என்று கேட்டவர்களை ஏற்கனவே சிறப்பான பாடல்களால் வாயடைத்தார். படத்தில் நில்லாடிய சபையெங்கே என்று பார்த்திபன் பாட, ஒரு மாதிரி நெஞ்சையடைக்கிறது.

பிடிபட்ட சோழ மக்களை அதிரடிப்படை கொடுமைப்படுத்துவதும், பார்த்திபனின் பாத்திரப்படைப்பும் இலங்கைத் தமிழர் நிலையைக் கண்முன் நிறுத்துகிறது. :-(

தயவு செய்து குழந்தைகளோடு பார்க்காதீர்கள். இது அவர்களுக்கான படமல்ல. அதேபோல சில பெண்களும் படத்தை வெறுக்கக் கூடும்.


ஆயிரத்தில் ஒருவன் - நூற்றில் ஒரு படம்!



.