Friday, May 15, 2009

பரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை

வேலைப்பளு. பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியவர்களுக்கு தனித்தனியே நன்றி சொல்ல இயலாத சூழல். அதையும் தாண்டி அவர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை. (எப்பூடீ?)

******************************

கதை எழுதுவது பற்றி சுரேஷ் கண்ணனின் இந்தப் பதிவை மிக ரசிப்புடன் படித்தேன். கரு என்ன மொக்கையாய் இருந்தாலும் அபாரமான, சுவாரஸ்யமான நடை இருந்தால் எல்லாரை யும் கட்டிப்போடலாம் என்பதற்கு உதாரணமாக இருந்தது அந்தக் கதை.


எனக்கு உடனே நான் வலை ஆரம்பித்த (அட.. போன வருஷம் இதே நாள்!) கொஞ்ச நாளில் ஒரு கதை எழுதி பலரும் வந்து திட்டி.. உடனுக்குடனே முடிவை மாற்றிய ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது. (ஏன் வந்தது என்று கேட்பது சுலபம்.) எழுத நேரமில்லாமல் மீள்பதிவாய் எதைப் போடலாம் என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து இந்தக் கதையை மீள்பதிவாய்ப் போட நினைத்து... இப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கிறது! கண்டுக்காதீங்க பாஸூ!!

*******************************

எதிர்பாராத திருப்பம்



எனக்கு பதட்டமாக இருந்தது..

அவரை நான் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகி விட்டது.. இதுவரை இப்படி ஒரு நாளை நான் சந்தித்ததில்லை..

அப்படி என்னதான் நடந்தது..?

"நாளைக்கு ஆபீஸ்ல நிறைய வேலை இருக்கு" என்று கூறி நேற்று நேரத்திலேயே அவர் படுக்கைக்கு சென்று விட்டார்.

நான் என் வேலைகளை முடித்துக் கொண்டு.. படுக்கைக்கு சென்றபோது.. மணி பத்தரை ஆகி விட்டிருந்தது.. அவர் உறங்கிக் கொண்டிருந்தார். படுத்த சிறிது நேரத்திலேயே அலாரம் வைக்க மறந்தது ஞாபகம் வர.. என் செல்போனைத் தேடினேன். ஹாலிலேயோ, சமையலறையிலேயோ வைத்து விட்டேன் போல. எழுந்து போக சலிப்பாய் இருக்கவே, தலை மாட்டில் அவரது போன் இருக்கிறதா என்று தேடினேன். இருந்தது. சரி.. அதிலேயே அலாரம் வைத்துக் கொள்ளலாம் என்று எடுத்தேன்..

அலாரம் வைத்ததோடு நின்றிருக்கலாம்.. ஸ்க்ரீனில் ஏதோ சிம்பல் தெரியவே அது என்னவென்று பார்த்தேன். அடுத்த நாளைக்கான ஒரு ரிமைண்டர் வைத்திருந்தார்..

"Meeting at Hotel Chalukya - Room No. 205 - To go with Sudha" என்று சொன்னது அந்த ரிமைண்டர். அதற்குப் பிறகு நான் தூங்கவேயில்லை.

யார் இந்த சுதா? அது என்ன ஹோட்டலில் மீட்டிங்?

அவர் எப்போதுமே எதிர்பாராத ஆபீஸ் பற்றியோ, சக ஊழியர்கள் பற்றியோ என்னிடம் பகிர்ந்துகொண்டதே இல்லை. அதனால் எப்படி இதைக் கேட்பது என்று தயக்கம்.. பயம்.

இன்று காலை எப்போதும் போல வழக்கமாக எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு அவர் பாட்டுக்கு கிளம்பி விட்டார்.

"ஏன் இன்னைக்கு ஒரு மாதிரி இருக்க அபி?" என்று என்னைக் கேட்பார் என்று எதிர்பார்த்தேன்.. கேட்கவே இல்லை.

யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் செல்போனை எடுத்தேன்..

ரமணியிடம் உதவி கேட்கலாம்..

"ரமணி.. ஒரு உதவி வேணும் உன்கிட்ட

சொல்லு அபினயா


அவ்வளவுதான்.. ரமணியின் குரலைக் கேட்டதும் நான் உடைந்து விட்டேன். என்னையும் அறியாமல் குரல் கம்ம எல்லாவற்றையும் சொன்னேன்.


ஏய்.. ஸ்டுப்பிட்.. சும்மா எல்லாத்தையும் தப்பாவே எடுத்துக்காதே. ஆபீசுக்கு போன் போட்டு அவர்கிட்டயே கேளு.. மனசுல வெச்சுக்கறதுதான் உன்னைமாதிரி பொண்ணுகளோட பெரிய தப்பு



ரமணி சொன்னது சரியோ என்று தோன்றியது.


எதற்கு மனதில் போட்டு குழப்பிக் கொண்டு? அவரிடம் நேரடியாகவே பேசிவிடலாம்.


அவரின் செல்போனை டயலினேன்.


தொடர்ந்து ரிங் போய் கட்டானது.


என் மனக் குரங்கு மறுபடி கிளை தாவ ஆரம்பித்தது.


வேறு ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் வரும் முன்.. அவரது அலுவலகத்தில் அவருக்கென்றிருக்கும் பிரத்தியேக எண்ணுக்கு போன் செய்தேன்.


நான்காவது ரிங்கில் போன் எடுக்கப்பட்டது.


வேறு யாரோ எடுத்தார்கள். ஆண் குரல்தான்.. யாரது..


ஹலோ.. ராகவ் சார் இல்லயா?”


சார் வாஷ் ரூம் போயிருக்காருங்க மேடம். நீங்க?”


நான் அபினயா.. அவர் மனைவி


வணக்கம் மேடம்


நீங்க?”


நான் சுதாகர் மேடம். சாரோட பி.ஏ


எ..என்ன பேர் சொன்னீங்க?”


சுதாகர்


இன்னைக்கு ஹோட்டல் சாளுக்யால மீட்டிங்.....


நான் முடிக்கும் முன்..


நானும் சாரும்தான் போறோம் மேடம்...


ச்சே.. என்ன பொண்ணு நான்.. சுதாகரை சுதா என்று அவர் ரிமைண்டரில் வைத்திருந்ததால் குழம்பி..


சரி சுதாகர்.. ஒண்ணுமில்ல சாயந்திரம் எத்தனை மணிக்கு வருவார்ன்னு கேக்கத்தான் போன் பண்ணினேன். கொஞ்சம் ஷாப்பிங் போகணும்


எப்படியும் ஒம்பது பத்து மணியாயிடும் மேடம்.. வீட்டுக்கு போய்தான் சாப்பிடணும்னு சொல்லீட்டிருந்தாரு


ஒக்கே.. நான் போன் பண்ணினதா சொல்ல வேண்டாம்.. அப்புறமா அவர் மொபைல்ல பேசிக்கறேன்


சரிங்க மேடம்

போனை வைத்ததும் எனக்கு ரிலாக்ஸாக இருந்தது. இரவு வரும் அவருக்காக என்ன டிபன் செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

-----------------------------------

பரிசல்காரன்: என்னடா உங்களுக்கு வேற வேலையே இல்லயா? ட்விஸ்ட்.. ட்விஸ்ட்ன்னு இந்த மாதிரி எத்தனை கதைடா எழுதுவீங்க என்று சலித்துக்கொள்கிறவர்கள் மட்டும் கீழே படிக்கவும்..

-----------------------------------------


ராகவின் அலுவலகத்தில்...


என்னப்பா.. போன் அடிச்ச சத்தம் கேட்டது? யாரு?”


உங்க மனைவிதான் போன் பண்ணியிருந்தாங்க. நீங்க கணிச்சது சரிதான் சார். நான் நீங்க சொல்லிக்குடுத்த மாதிரியே சொல்லிட்டேன். என் பேருக்காகத்தானே என்னை வேலைலயே வெச்சிருகீங்க..


வெரிகுட்.. நீ போய் மார்க்கெட்டிங்ல இருக்கற சுதாராணிய என் காருக்கு வரச் சொல்லு. சாளுக்யா போகணும்

------------------------------------------------------


மீண்டும் பரிசல்காரன்: என்னடா கட்டின பொண்டாட்டிய ஒருத்தன் ஏமாத்தறதா கதய முடிச்சுட்டியே.. அவ மட்டும் என்ன இளிச்சவாச்சியா?’ ன்னு வருத்தப் படறவங்க மட்டும் கீழே படிக்கவும்..

------------------------------------------


பினயாவின் வீட்டில்:


ராகவின் அலுவலகத்திற்கு பேசிய பின் அபினயா ரமணிக்கு போன் போட்டாள்..


ரமணி.. நான் நெனச்ச மாதிரி ஒண்ணுமில்ல.. அந்த சுதா, சுதாகர். அவரோட பி.ஏ.


எனக்கு தெரியும்.. நீதான் மனசப் போட்டு குழப்பிக்கற


சரி.. அவரு வர எப்படியும் ஒம்பது மணி ஆயிடுமாம்


ஏய்.. ஏய்.. என்ன?”


ப்ளீஸ்டா.. உன்னைப் பாத்து ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு.. வாடா


சரி அபி.. இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்என்றான் ரமணி.

--------------------------

மீண்டும் மீண்டும் பரிசல்காரன்:- "இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. தவிர்க்கவும்என்று உரிமையோடு கடிந்து கொண்ட வடகரைவேலன்.. என்னய்யா குடும்பம் இதுஎன்று ஆதங்கப்பட்ட அகரம்.அமுதா, ச்சின்னப்பையன், விக்னேஸ்வரன்.. எல்லாத்துக்கும் மேல `கேஸ் வரப் போகுதுஎன்று பயமுறுத்திய வெண்பூ ஆகியோரது பின்னூட்டங்களுக்குப் பிறகு மாற்றப்பட்ட முடிவு..

---------------------------------------


பினயாவிடம் வருவதாய் சொல்லிவிட்டு போனைத் துண்டித்த ரமணி காரில் ஏறி நேராக செலுத்தினான். காரை நிறுத்திய இடம்..


ஹோட்டல் சாளுக்யா!


நேராக ரிசப்ஷன் நோக்கி நடந்தவன் தூரத்தில் வந்த ராகவ்-வின் இன்னோவாவைப் பார்த்ததும் ஹோட்டலின் வாயிலிலேயே நின்றான்..


காரை விட்டிறங்கிய ராகவ், ரமணியைப் பார்த்ததுமே முகம் வெளிறினான்.


ர.. ரமணி.. நீ எங்க இங்க?”


ராகவ்.. நீ எல்லை மீறிப் போய்ட்டிருக்க. ஒரு நல்ல நண்பனா உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அபி உன்னைப் பத்தி விசாரிக்க எங்கிட்ட சொன்னா. உனக்கும், சுதாராணிக்கும் இருக்கற லேசான பழக்கம் தெரிஞ்சும் வேறெந்த கெட்ட பழக்கமும் இல்லாத, திறமைசாலியான உன்னை மாத்திடலாம்ன்னு நம்பி உன்கிட்டயே அதப் பத்தி கேட்டேன். நீ அப்படியெல்லாம் இல்ல. சும்மாதான் பழகறோம்ன்ன. ஆனா கல்யாணமாகி இவ்வளவு நாள் கட்டுப்பாடோட இருந்த நீ, இப்போ இப்படி..


ரமணி.. நீ நெனைக்கற மாதிரியெல்லாம் இல்ல


சும்மா இருடா. உனக்காக பொய் சொல்ற சுதாகர் ஆயிரம் ரூபா குடுத்தா உன்னைப் பத்தி என்கிட்டயும் சொல்லுவான்னு புரிஞ்சுக்கோ. இப்பவும் நீ வர லேட்டாகும், போரடிக்குதுடா.. வீட்டுக்கு வான்னு உரிமையோட அபி என்னைக் கூப்பிடறா. நீ சுதாராணிகிட்ட பழகறமாதிரி நான் அபிகிட்ட..


ரமணி... ப்ளீஸ்.. என்னை கொல்லாதே


அட.. நீங்க மட்டும் என்ன வேணா பண்ணலாம். அப்படித்தானே?”


இல்ல ரமணி. ஏதோ ஒரு நொடி பிசகினதுல இப்படி ஒரு தப்பு பண்ண இருந்தேன்.. இனி இந்த மாதிரி நினைச்சுக்கூட பாக்க மாட்டேன். உன் கார் இங்கயே இருக்கட்டும். வா ரெண்டு பேருமா இதுலயே வீட்டுக்கு போலாம்என்ற ராகவ் காரின் பின் சீட்டிலிருந்து இறங்கிய சுதாராணியைப் பார்த்து சொன்னான்..

நாளைக்கு அக்கவுண்ட்ஸ்ல போய் உன் கணக்கை செட்டில் பண்ணிக்கம்மா

****


(தலைப்பைப் பார்த்துட்டு திட்டாதீங்க. ஆனந்தவிகடன்ல என் கதை, நண்பர்கள் கதை வந்தத பார்த்து பலரும் பதிவு போட்டு வாழ்த்தினாங்க. சரி என் வலைப்பூவுல நான் எழுதினத நானே போடலாமேன்னுதான்...... ஹி..ஹி..)

36 comments:

கார்க்கிபவா said...

அப்பாடி.. நான் தான் முதல்ல

Bleachingpowder said...

//பரிசல்காரனின் வலைப்பூவில் பரிசல்காரனின் கதை//

இது சரி :)

கார்க்கிபவா said...

யப்பா..முடியல சாமீ.. நான் உங்களுக்கு போட்ட வாழ்த்து ரொம்ப சரின்னு இப்ப ஃபீல் பண்றேன் சகா :)))

Cable சங்கர் said...

enakku muthal reNdu mudivum pudichirunthathu..

Cable சங்கர் said...

vaazhthukkal..

Bleachingpowder said...

//கார்க்கி said...
யப்பா..முடியல சாமீ.. நான் உங்களுக்கு போட்ட வாழ்த்து ரொம்ப சரின்னு இப்ப ஃபீல் பண்றேன் சகா :)))//

இதுவும் சரி :)))

anujanya said...

இந்த கதை முதலில் வந்த போதே படித்த ஞாபகம் இருக்கு. ஆனால், ஏதோ இரண்டு மூன்று வருடங்கள் போன மாதிரி இருக்கு. நிறைய எழுதி, நிறைய பிரபலமும் ஆனதால், ஜஸ்ட் ஒரு வருடம் தானா என்று தோன்றுகிறது :)

அனுஜன்யா

Unknown said...

வாழ்த்துகள் அண்ணா :)))

sriram said...

இந்த மாதிரி கதை எல்லாம் உளுத்துப் போன பழைய்ய்ய்ய்ய சமாச்சாரங்கள் சார்! இப்படி எல்லாம் இனிமே try பண்ணாதீங்க :)

வால்பையன் said...

புனைவுன்னு வந்த பிறகு ஏன் காம்ப்ரமைசன்!

எனக்கு முடிவு பிடிக்கலை!

வால்பையன் said...

இது சிறுகதை வாரம் போல!

நானும் ஒண்ணு போட்டுருக்கேன்!

Athisha said...

எப்படி நாசூக்கா சொல்றதுனு தெரியல.

:-(

Athisha said...

நேற்று விகடனில் வெளியான உங்களது கதைக்கு எனது வாழ்த்துக்கள் கதை அருமை.

நட்சத்திரமாய் ஜொலிக்க வாழ்த்துக்கள்

selventhiran said...

பரிசல், அந்த கல்யாண வீட்டு கதையை எப்ப எழுதுவீங்க :)

பரிசல்காரன் said...

@ கார்க்கி, ப்ளீச்சிங், கேபிள், அனுஜன்யா, ஸ்ரீமதி, ஸ்ரீராம், வால்பையன், அதிஷா

நன்றி.

@ அதிஷா & கார்க்கி

மிக்க நன்றி!

பரிசல்காரன் said...

@ செல்வேந்திரன்

அடுத்த வாரம் அந்த வரம்...

கார்க்கிபவா said...

//அடுத்த வாரம் அந்த வரம்//

நர்சிம் ஞாபகத்துக்கு வந்தார்

தீப்பெட்டி said...

என்ன கத பாஸ் இது இத்தனை முடிவுகளோட...

சும்மா சுழட்டி சுழட்டி அடிக்குறீங்க...

Unknown said...

பார்ட் - 2 ன்னு ஏதாவது மறுபடியும் தொடரப்போறீங்களா .............?????

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் : பிறந்தநாள் மற்றும் உங்களின் கதை விகடனில் பிரசுரமானதிற்கும்

சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள் : பிறந்தநாள் மற்றும் உங்களின் கதை விகடனில் பிரசுரமானதிற்கும்

Unknown said...

எத்தன..???!!

ஒரு கதைக்கு நிறைய முடிவு படிச்சுருக்கேன்..
நீங்க முடிவுக்கு பல மொக்கைகள் (மன்னிக்கவும் முடிவுகள்) எழுதி இருக்கீங்க..!!

(காலம் கடந்த) பிறந்த நாள் வாழ்த்துகள்..

விகடன் கதைக்கும் வாழ்த்துகள்..

மங்களூர் சிவா said...

:))
வாழ்த்துக்கள் பரிசல்!

ஏகப்பட்ட முடிவுகளோட ஒரு கதை.

Thamira said...

அபியை ரமணியின் கசின்னு சொல்லி சும்மா பார்க்கத்தான் வரச்சொன்னதா முடிச்சு, ராகவுக்கு ஹோட்டலில் வேறு படிப்பினை கிடைப்பதாய் முடித்திருந்தால் இன்னும் நல்லாருந்திருக்குமோ.! இறுதிப்பகுதி தவிர மற்றதெல்லாம் டாப்பு.! அதுவும் ஒவ்வொருத்தரும் கேட்கக்கேட்க முடிவு மாறிக்கொண்டே செல்வது சுவாரசியம்..

Thamira said...

மாடியிலிருந்து ஒருத்தன் விழும்போது துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட விறுவிறு திருப்பங்கள் கொண்ட கதை தெரியுமா? பதிவுலக நண்பர்கள் சொன்னதா? என் அலுவலக நண்பர்கள் சொன்னதா? மறந்து போச்சுது.. நிஜக்கதையாமே? தெரியுமா உங்களுக்கு அதை எழுதுங்களேன்..

sriram said...

ஹாய் கிருஷ்ணா
பிறந்த நாள் வாழ்த்துக்கள் (belated) மற்றும் விகடன் கதைக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்மணத்தில் தலைப்பை பார்த்ததும் போன வாரம்தான் புத்தகத்தில் வந்த கதையை உடனே வலைப்பக்கத்தில் போடக்கூடாது என்று பின்னோட்டம் இட்டு விட்டு இந்த வாரம் அதே வேலையை நீங்க செய்யலாமா என்ற கேள்வியோடு பக்கத்தை திறந்தேன் (Sorry I jumped the gun), You are a gentleman, sorry for thinking wrong about you. இரண்டு கதைகளுமே நன்றாக இருந்தன.
ஒரே ஒரு நெருடல் - சுதராணியை வேலையை விட்டு நீக்குவது எந்த விதத்தில் நியாயம்?
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston, USA.

Kumky said...

என்னமோ போங்க...நல்லாருங்க...நல்லாருந்ததுங்க....

Kumky said...

போகிற போக்க பார்த்தா எல்லாரும் சேர்ந்து விகடன் வாங்க வச்சிடுவாங்க போல்ருக்கே...

நர்சிம் said...

//அனுஜன்யா
15 May, 2009 10:12 AM
இந்த கதை முதலில் வந்த போதே படித்த ஞாபகம் இருக்கு. ஆனால், ஏதோ இரண்டு மூன்று வருடங்கள் போன மாதிரி இருக்கு. நிறைய எழுதி, நிறைய பிரபலமும் ஆனதால், ஜஸ்ட் ஒரு வருடம் தானா என்று தோன்றுகிறது :)

அனுஜன்யா
//

நல்லாச்சொன்னாருய்யா இவரு..அதேதான் எனக்கும்...

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் ....பிறந்தநாள் மற்றும் உங்களின் கதை விகடனில் பிரசுரமானதிற்கும்..
anbudan aruna

பாசகி said...

அசத்தீட்டீங்க-ஜி! Belated Birthday Wishes!!!

விக்னேஷ்வரி said...

ஐயோ, எல்லாருக்கும் பிடிக்கட்டும்னு இத்தனை முடிவா....

தராசு said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், யப்பா, கண்ணக்கட்டுதே, முடிவுகள் முடிஞ்சுருச்சா, இல்ல இன்னமும் ஒரு ரவுண்டு வரப்போறீங்களா.

பட்டாம்பூச்சி said...

Belated Birthday Wishes!!!
Nice story :)

வாழவந்தான் said...

எதிர்பாராத திருப்பம்(கள்)
3,4 ரெண்டுமே நல்லா இருக்கு. 3ஆவது முடிவு ஏற்றுக்கொள்ளக்கூடியதே. வாழ்க்கைல நாம் என்ன செய்கிறோமோ அதன் பலனையே அடைவோம்!
Belated Birthday Wishes!!

சுபஸ்ரீ இராகவன் said...

சில சினிமா படங்கள் சுபமா முடியும் போது அடுத்து குடும்பம் சந்தோஷமா இருக்கிற மாதிரி கதை கொஞ்ச நேரம் தொடரலாமே என தோன்றும்.

மாறிக்கொண்டே இருந்த கதையின் முடிவுகள் அந்த உணர்வை செயல்படுத்தின மாதிரி இருந்துது

வாழ்த்துக்கள்