Tuesday, August 26, 2008

வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!




நான் "தலைப்பைச் சொல்லுங்கள்.. பரிசை வெல்லுங்கள்” என்றொரு போட்டி அறிவித்திருந்தேனல்லவா.. அதில் வென்றவர்களை அறிவிக்கும் பதிவுதான் இது.


கொஞ்சம் சுயபுராணத்தோடு இதை எழுதுகிறேனே.. ப்ளீஸ்.. நேற்று சில தலபுராணத்தைப் படித்த நீங்கள் இந்த சுய புராணத்தையும் படியுங்கள்.

*****************

உடுமலைப்பேட்டையில் நானிருந்தபோது எனக்கு இருந்த நண்பர்கள் பலரும் ஆர்டிஸ்ட்தான். ஆர்டிஸ்ட் என்றால் நடிகர்களல்ல. வண்ணக்கலைஞர்கள். ஜனனி ஆர்ட்ஸ்-வெங்கடாசலம், கனலி கலைக்கூடம் - கனலி, ஸஸி ஆர்ட்ஸ் - சசி, பாக்யா ஆர்ட்ஸ் (தற்போது பாரதி கலைக்கூடம்) நாகராஜ், தமிழி கலைக்கூடம் - முத்து, ஜீவன் ஆர்ட்ஸ் - சௌந்தர், பாலு என்று எல்லா நண்பர்களும் கலைத்துறையிலிருந்தார்கள்!

அப்படி அவர்களோடு இருந்தபோது வரும் விளம்பரங்களுக்கு ஏதேனும் கேப்ஷன்
சொல்ல என்னை கலந்தாலோசிப்பார்கள். க்ரியேடீவ்வாக சிந்திக்க உகந்த களமென்பதில் எனக்கும் மிக விருப்பம்.

‘துணிக்கடைகளில் இது தனிக்கடை’, ‘தரம் 100% தள்ளுபடி 50%’, ‘ஆரவாரமான ஆரம்பம்’, ‘வண்ணங்கள் பேசும்போது வார்த்தைகள் எதற்கு’, டைட்டானிக் வந்தபோது அந்த தியேட்டர்முன் வைக்கப்பட்ட ஒரு பேனரில் ‘உண்மையான காதலுக்கு டைட்டானிக், உறுதியான தையலுக்கு பெஸ்ட் டெய்லர்ஸ்’, 'இளமையை விரும்பும் இளைஞர்களுக்காக’ போன்ற பல அப்போது தோன்றி சொன்னவைதான். அவற்றில் பல இப்போது பிரபல வாக்கியங்கள். இதையெல்லாம் நான்தான் சொன்னேனென்று சொல்லவரவில்லை. ஆனால் அப்போது சொன்னபோது நான் கேள்விப்படாத புதியவைகளை தான் சொல்லியிருக்கிறேன்.


என் நண்பர் கனலி (தற்போது திருப்பூர்வாசி) தனது கலைக்கூட போர்டில் ஒரு விரலில் வண்ணத்துப்பூச்சி அமர்ந்திருக்கும் ஸ்டில்லை வரைந்துவிட்டு “இதற்கு ஏற்ற மாதிரியும், ஆர்ட்ஸுக்கு ஏற்ற மாதிரியும் ஒரு கேப்ஷன் குடுங்க கிருஷ்ணா” என்றார். சட்டெனறு சொன்னேன் என்றால் ‘புருடாவைப் பாருடா’ என்பீர்கள். சட்டென்றெல்லாம் சொல்லவில்லை. கொஞ்சம் யோசித்து ‘விரல் நுனியில் விஷயங்கள்’ என்றேன். விரல் நுனியில் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சி படத்துக்கும், விரல் நுனியில் ப்ரஷ்ஷை வைத்து வரையும் வண்ணக் கலைஞர்க்கும் அது பொருந்திற்று.

நகைக்கடை வைத்திருக்கும் வேறொரு நண்பனான செந்தில் தனது கடையின் பர்ஸைத் திறக்கும்போது உள்ளே தெரியும் வண்ணம் ஒரு வாசகம் கேட்க, ‘இனி உங்களுக்கு பொற்காலம்’ என்ற கேப்ஷன் கொடுத்தேன். பலராலும் பாராட்டுப் பெற்றது அது!


ஒரு சிறுவன் அம்பெய்துவது போல ஒரு படம் வரைந்து வாடிக்கையாளர்களை கவர்வது போல கேப்ஷன் கேட்க, ‘வச்ச குறி தப்பாது’ என்று எழுதினோம். இன்னொரு நண்பர் தனது கடைக்கு வித்தியாசமான வாழ்த்து வேணுங்க என்றார்.
அவரிடம் சொல்லாமலே ‘வித்தியாசமான வாழ்த்துக்களோடு’ என்றே எழுதிவைத்தோம்! ‘என்னய்யா இது வித்தியாசமான வாழ்த்து?’ என்று கேட்டவர்களிடம் ‘இது வித்தியாசமான வாழ்த்து இல்லைன்னு யாரும் சொல்ல முடியாதுங்களே’ என்றோம்!


அப்போது ஏதாவது பேனரில் எழுதி விட்டு, இது என்ன கடைக்கான விளம்பரம் என்று மக்களை கொஞ்சநாள் பார்க்கவைத்துவிட்டு, பிறகு எழுதும் ட்ரெண்ட் ஆரம்பமாகி இருந்தது. பொள்ளாச்சியில் ஒரு கடைக்காக இப்படி ஒரு சில பேனர்கள்வைத்துவிட்டு ஒன்றுமே எழுதாமல் என்னை அழைத்து ‘எதுனா சொல்லுப்பா ஒரு வாரம் கழிச்சுதான் கடையைப் பத்தி எழுதணும். அதுவரைக்கும் எல்லாரும் பாக்கறா மாதிரி’ என்று நண்பர் கேட்க ஒரு இடத்தில் ‘நாளைக்கு இந்த விளம்பரத்தைப் பாருங்கள்’ என்று எழுதினோம். (ஏழு நாளும் அதுதான்!)


என்னுடைய இந்த விளம்பர ஆர்வம் நான் டூ-வீலர் வாங்கியபோதும் விடவில்லை. ஸ்ப்ளெண்டர் பைக் வாங்கி ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் வரும் வரை எல்லோரையும் போல FOR REGN என்று எழுதாமல் சினிமா விளம்பரம் போல

RTO வழங்கும்


REGN. No.


விரைவில்
....



என்று எழுதி வைத்திருந்தேன். ஒரு ட்ராஃபிக் சார்ஜெண்ட் நிறுத்தி

படித்து ரசித்துப் பாராட்டினார் அதை!



சரி... போதும்டா உன் புராணம் என்பது கேட்கிறது. இனி போட்டி முடிவுகளுக்கு வருவோம்!

இரு கைகள் இணைந்திருக்கும்(அந்தக் கைகள் இரண்டுமே உமாவின் கைகள்தான்) அந்தப் படத்திற்கு பதிவு வந்த ஒரு சில நிமிடங்களிலேயே வந்து ‘இணைந்த கைகள்’ என்று கேப்ஷன் கொடுத்து ‘புதுகைத்தென்றல்’ என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார்! புதுக்கோட்டையிலிருந்து, சென்னைக்காரரை மணம்புரிந்து தற்போது ஹைதராபாத்வாசியாகிவிட்ட இவருக்கு பரிசு கொடுக்காவிட்டால் நியாயமே இல்லை!

என் ச்சாய்ஸ் புதுகைத்தென்றல்தான்!


வாசகர்கள் ச்சாய்ஸ் அதிஷா! MEETடாத கைகளும் அருமை! (ஒக்கார்ந்து ஓட்டுப்போட்டாரோ? கடைசி நாள் டக டகன்னு ஓட்டு ஏறிடுச்சு இவருக்கு. ஒருவேளை அதுக்கு முன்தினம் பெங்களூர் சென்று கேன்வாஸ் செய்ததன் பலனா?)


ஏற்கனவே NATHAS மற்றும் ஆர்.நாகப்பன் இருவருக்கும் சிறப்பு பரிசு என்றிருந்தேன்.

அதில் NATHAS வெளிநாட்டில் இருப்பதால் அந்தப் பணத்தை வறியவர்களுக்கு உதவ உபயோகித்துக் கொள்ளுங்கள்.. நான் இந்தியா வரும்போது அவன்-அது=அவள் புத்தகத்தை வாங்கிப் படித்துக் கொள்கிறேன் என்றிருக்கிறார். அவரது எண்ணத்துக்கு எல்லோர் சார்பாகவும் கைகுலுக்கல்கள்! அருகிலுள்ள ஒரு பள்ளியில் நோட்டுப் புத்தகம் வாங்க இயலாமல் இருக்கும் ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு நோட்டுகள் வாங்கிக் கொடுக்கலாமென்றிருக்கிறேன்.


ஆர்.நாகப்பன் சென்னைக்காரர். அவருக்கு புத்தகம் நேற்று கொரியரில் அனுப்பப்பட்டு விட்டது. ஒரு ஆச்சரியம் அவர் இருப்பது திருப்பூர் குமரன் சாலை!


ஆகவே புதுகைத்தென்றலும், அதிஷாவும் எனது மின்னஞ்சலுக்கு (kbkk007@gmail.com) தங்களது முகவரியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புத்தகம் பேக் செய்யப்பட்டுவிட்டது. அட்ரஸ் ஒட்டி அனுப்புவதுதான் பாக்கி!


ஒரு முக்கியமான வேண்டுகோள்: ஆர்.நாகப்பன், அதிஷா இருவரும் 31ம்தேதி
நடைபெறும் அவன்-அது=அவள் புத்தக வெளியீட்டுவிழாவிற்கு சென்று ஆசிரியரிடம் புத்தகத்தில் கையெழுத்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்! அதிஷா கண்டிப்பா போவாரு.. நாகப்பன் சார் நீங்க?

26 comments:

Mahesh said...

தரம் 00% -ஆ? 100% இல்ல இருக்கணும்?

குசும்பன் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஜூவியில் அட்டை படத்தில் நீங்கள் வந்ததுக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் முன்பு சொல்லி இருக்கும் கேப்ஷன் எல்லாமே அருமையாக இருக்கு.

Mahesh said...

ஜூ.வி. அட்டப்படமா?அது எப்போ? சொல்லவே இல்ல....

@ பரிசல்: ஸ்கான் பண்ணி மெயிலுக்கு அனுப்புங்களேன் ...ப்ளீஸ்

Venkatramanan said...

பரிசல்!
விளம்பர வாசகங்கள் அனைத்தும் அற்புதம்!
உங்களை நேரில் சந்தித்தால் 'குன்றாத சுவாரசியம் உறுதி'னு தெரியுது! நான் 2003ல் கோவையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியபோது லேசர் சிகிச்சைக்காக (இதை செய்துகிட்டா கண்ணாடி போடறவங்களுக்கு அது இல்லாமயே கண் நல்லாத் தெரியும்) ஒரு வாசகம் எழுதினேன் - "இரு விழிகள் இருக்க இதர வழிகள் எதற்கு?" அப்படீன்னு. ஆனா சிலபல காரணங்களால அது வெளிவரல்லை! ஆனா நான் எழுதினதுலேயே எனக்கு பிடிச்ச வாசகம் அது! (ஒரு விளம்பரந்தான்...!)

அன்புடன்
வெங்கட்ரமணன்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

விளம்பரங்கள் எல்லாமே ரசிக்கும்படி இருந்தது..

ஜூவிக்கு வாழ்த்துக்கள். உள்ளடக்கம் படம் அட்டாச்மெண்டா கிடைத்தது அட்டை படமா பாக்கலயே..?

விஜய் ஆனந்த் said...

// குசும்பன் said...
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

ஜூவியில் அட்டை படத்தில் நீங்கள் வந்ததுக்கும் வாழ்த்துக்கள்.

நீங்கள் முன்பு சொல்லி இருக்கும் கேப்ஷன் எல்லாமே அருமையாக இருக்கு //

ரிப்பீட்டேய்!!!

லக்கிலுக் said...

//"இரு விழிகள் இருக்க இதர வழிகள் எதற்கு?" அப்படீன்னு. ஆனா சிலபல காரணங்களால அது வெளிவரல்லை! //

கேப்ஷன் ரிதமிக்கா இருந்தாலும் அடிப்படை கான்செப்டே தப்பாயிடுதே வெங்கட்ரமணன்?



பரிசலுக்கு!!!

வாழ்த்துகளோ வாழ்த்துகள்!!!

பரிசல்காரன் said...

// ராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தி, நம் பரிசல் பற்றி இருக்கும் பக்கம் நமக்கு அட்டை படமுதல் பக்கம்! //

THank you kusumbare!

நாகா said...

http://www.vikatan.com/jv/2008/aug/31082008/jv0206.asp

வாழ்த்துக்கள் பரிசல்காரரே...! உங்கள் பதிவைப் படித்தபோது இருந்த நெகிழ்ச்சியை விட, இப்போது அதனை விகடனில் கண்ட போது ஏற்பட்ட மகிழ்ச்சி மிக அதிகம்...
Keep your good works continuing...
-SuNa

பரிசல்காரன் said...

@ மகேஷ்

பெரிய தவறு!!

மாற்றி விட்டேன்! நன்றி!

@ குசும்பன்

அட்டைப் படமா? ஓஹோ.. நன்றி குசும்பரே!
நீங்கதான் வராததுக்கு முன்னமே வாழ்த்திட்டீங்களே!!

சரவணகுமரன் said...

விளம்பர வாக்கியங்கள் அருமை...

Mahesh said...

@ பரிசல்: பதிவப் படிக்கும்போது கவனிக்கல.... இப்பொ கவனிச்சேன்

//உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.//

சிலிண்டர பத்த வைக்காதிங்க... ஸ்டவ்வ பத்த வைங்க....

நாகா said...
This comment has been removed by the author.
ரா.நாகப்பன் said...

அன்பு நண்பருக்கு,
நிச்சயம் 31-ஆம் தேதி நிகழ்ச்சிக்கு செல்ல இருக்கிறேன்.
தங்களுடன் இன்று செல்போனில் பேசியதும் பதிவில் நீங்கள் குறிப்பிட்டிருந்த செய்திகளும் இதம்....

தொடரும் நட்ப்புடன்,
ஆர்.நாகப்பன்.

நிஜமா நல்லவன் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

pudugaithendral said...

அர்த்த ராத்திரி பத்துமணிக்கு (!!!)
அப்துல்லா அவார்டுக்கு வாழ்த்துக்கள்னு மெச்ஜ் அனுப்பியிருந்தார். எதுக்குன்னு புரியாம யோசிச்சுகிட்டே குழம்பி குழம்பி தூங்கவேயில்லை. :)

இப்பத்தான் உங்க பதிவை படிச்சேன். நன்றி.

pudugaithendral said...

விளம்பரங்கள் கேப்ஷன்ஸ் பிடிக்கும்.
மிக ரசிப்பேன்.

எங்கள் ஊரில் மீனாஸ் என்று ஒரு சீடி கடை. அந்தக் கடை போர்டில் வேறொன்றும் எழுதாமல் யேசுதாஸ் படம் மட்டும் வரைந்து கீழே சின்னதாக மீனாஸ் என்று எழுதி வைத்திருப்பார்கள்.

யேசுதாஸ் ரசிகர்கள் பலரும் அந்தக் கடைக்கு படை எடுத்து சென்று கேசட் வாங்கியது ஞாபம் இருக்கிறது.

முகவை மைந்தன் said...

அனைத்துத் தலைப்புத் தொடர்களும் (caption?) அருமை. ஜூவி தாமதமாக ஏற்றுக் கொண்டுள்ளதோன்னு நினைக்கத் தோணுது.

வாழ்த்துகள் பல.

பரிசல்காரன் said...

@ mahesh

குசும்பன் என் மீதுள்ள அன்பால் 'அட்டைப்படம்' என்றுள்ளார். நானெழுதிய 'உமாவுக்கு' படைப்பு இந்த வார ஜூ.வி-யில் 39ம் பக்கம் வந்துள்ளது.

வாழ்த்துக்கு நன்றி!

@ வெங்கட்ரமணன்

//உங்களை நேரில் சந்தித்தால் 'குன்றாத சுவாரசியம் உறுதி'னு தெரியுது!//

நன்றி. ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். நாள் குறித்துவிடலாம்!

வால்பையன் said...

பாரேன் அப்பவே இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு

பாபு said...

ஜூ.வி இன்னும் படிக்கவில்லை,எனது வாழ்த்துக்களையும் ஏற்று கொள்ளுங்கள்

KARTHIK said...

// "இரு விழிகள் இருக்க இதர வழிகள் எதற்கு?"//

அருமை வெங்கட்ராமன்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அப்படியே ஜூவியில் வந்ததற்கும் வாழ்த்துக்கள்.

பரிசல்காரன் said...

//பாரேன் அப்பவே இந்த பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு//

இப்பவும் இருக்கு!

புதுகை.அப்துல்லா said...

அண்ணே ரொம்ப நன்றி எங்க அக்காவை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததுக்கு !

வழ்த்துகள் ஜீ.வி.ல வந்ததுக்கு

சின்னப் பையன் said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

பரிசல் சுயபுராணம் சூப்பர்!!! வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்!!!

பரிசல்காரன் said...

// புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே ரொம்ப நன்றி எங்க அக்காவை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததுக்கு !//

அவங்க இன்னும் முகவரி தரல.
என்னான்னு கேளுங்க.

@ ச்சின்னப்பையன்

நன்றி ச்சின்னப்பையன்.
சஹானாவுக்கு இங்கயும் வாழ்த்துக்கள்!