Showing posts with label tamilnadu government. Show all posts
Showing posts with label tamilnadu government. Show all posts

Thursday, September 4, 2008

மின்சார காண்டம் - பார்ட் 2 (கண்டிப்பா படிங்க பாஸ்!)


கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நான் போட்ட பதிவைப் படிச்சாச்சா? படிக்கலைன்னா படிச்சுட்டு இங்க வாங்க.

------------------

அந்தப் பதிவுல சொல்லப்பட்ட காட்சிகளை விடுங்கள். நிஜவுலகத்துக்கு வருவோம். இந்த மின்சார வெட்டுக்கு அரசு மட்டும்தான் காரணமா? நாமும் மறைமுகமாகக் காரணமில்லையா?

ஒரு கோடியே 98 லட்சம் பயனீட்டாளர்களைக் கொண்ட கொண்ட தமிழக மின்சார வாரியம் மாதம் குறைந்தது அறுபதாயிரம் புதிய மின் இணைப்புகள் தந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு 900 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகத் தேவைப்படுகிறது. எந்த அரசும் இதைச் சமாளிக்க முறையான உற்பத்தித் திட்டங்களைத் தீட்டவில்லை. சமீபத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ள 1800 மெகாவாட் உற்பத்தி செய்யும் புதிய திட்டத்தின் பலன் மக்களுக்குக் கிடைக்க குறைந்தது மூன்று, மூன்றரை வருடங்களாகும்!

இதில் நமது பங்கு என்ன?

முன்பெல்லாம் இப்போதுபோல எல்லோர் வீட்டிலும் மின்சார உபயோக சாதனங்கள் இருந்தனவா? மாதம் குறைந்தபட்சம் 4000 ரூபாய் வருமானமுள்ள குடும்பத்தில்கூட டி.வி, மிக்ஸி, ம்யூசிக் ப்ளேயர் (டி.வி.டி), செல்ஃபோன் ஆகியவை இன்று அத்தியாவசியப் பொருட்களாகிவிட்டன. அதற்கடுத்தபடி கிரைண்டர், ஃப்ரிட்ஜ். பிறகு கம்ப்யூட்டர், ஹீட்டர், மைக்ரோவேவ் அவன், ஏ.ஸி.

நாம் பேசும் செல்ஃபோன் ஒரு நாளைக்கு சார்ஜ் நிற்பதில்லை! அந்த அளவுக்கு பேசுகிறோம். பேசுகிறோம். ஒட்டு மொத்தமாகக் கணக்கிட்டால் செல்ஃபோனை சார்ஜ் செய்வதிலேயே எத்தனையோ வாட் மின்சாரம் செலவாகும் போல! இதில் புதிதாக இன்கமிங்குக்கு வேறு காசு தருகிறார்கள். இன்னும் அதிக செல்ஃபோன் விற்பனையும், மின்சாரச் செலவும் நிச்சயம்!

இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் ஒரு நிமிடம் நிமிர்ந்து பாருங்கள். பகல் நேரத்திலும் தேவையற்ற விளக்கு, ஆளில்லாத இடத்தில் ஓடும் மின்விசிறி, இருவர் அருகருகே இருந்தாலும் த்லைக்கு மேல் இரண்டு மின்விசிறி, அறை முழுதும் குளிர்ந்திருந்தாலும் தொடர்ந்து ஓடும் ஏ.ஸி, செல்ஃபோன் இல்லாத வெறும் சார்ஜர் மட்டும் மாட்டப்பட்டு சுவிட்ச் ஆஃப் செய்யப்படாத ப்ளக் பாய்ண்ட் இவற்றில் ஏதோ ஒன்று உங்களைச் சுற்றி உள்ளதா? நம்மை சுற்றியே எத்தனை மின்சாரம் வீணடிக்கப் படுகிறது?

என்ன செய்யலாம்? எப்படி அரசுக்கு உதவலாம்?


சில யோசனைகள்...


  • செல்ஃபோனை அளவாகப் பயன்படுத்துவோம். அதன் சார்ஜிலேயே நிறைய மின்சாரம் மிச்சப்படுத்தப்படட்டும்.

  • பல அலுவலகங்களில் பகல் நேரத்தில் விளக்குகள் எரியவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதை நிறுத்துவோம்.

  • தேவையற்ற நேரங்களில் கணிணிப் பயன்பாட்டை நிறுத்துவோம்.

  • ஆளில்லாத அறையில் சுற்றும் மின்விசிறியை நிறுத்திவிட்டுச் செல்வோம்.

  • ஆளில்லாத அறையில் விளக்கு, மின்விசிறி, ஏ.ஸி.யைத் தவிர்ப்போம்.

  • முடியுமென்றால் ஹீட்டர் மூலம் நீர் சுட வைத்துக் குளிக்காமல் பச்சைத் தண்ணீரில் குளிப்போம்.


  • வேலை செய்துகொண்டிருக்கும் போதும், சும்மாவே ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியை அணைப்போம்.

  • அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்தால் மனைவி, குழந்தைகளோடு பேசி மகிழ்வோம். இதனால் டி.வி, டி.வி.டி, ம்யூசிக், செல்ஃபோன் அரட்டை போன்ற பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டு மின்சாரம் மிச்சப்படுத்தப்படும்.

  • வீட்டுக்குள்ளே நாம் ஹாலில் இருந்தாலும், எல்லா அறையிலும் விளக்கெரியும். அதை நிறுத்துவோம்.

  • மிக்ஸியோ, கிரைண்டரோ உபயோகிக்கும் முன் அதற்கான முன் ஆயத்தங்களை தயார் நிலையில் வைத்து உபயோகித்தால் நேரம், மின்சாரம் மிச்சமாகும்.

  • வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்லும்போது எல்லா மின்சாதனங்களையும் நிறுத்திவிட்டு, அணைத்துவிட்டு செல்வோம்.

  • குண்டு பல்பெல்லையெல்லாம் கடாசிவிட்டு CFL உபயோகிப்போம்.


இப்போது அரசுக்கு சில யோசனைகள்...

கொஞ்சம் சாத்தியமற்றதாய் தோன்றினாலும்.. முயன்றால் சாத்தியமே.


  • சினிமா தியேட்டர்களுக்கு இப்போதைக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை கொடுங்கள். (எந்தப் படமும் நல்லா வேற இல்லை!) அதற்கப்புறம் வாரத்துக்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை கொடுங்கள். அது திங்கட்கிழமையாயிருத்தல் உசிதம்.

  • வாரத்துக்கு ஒருநாள் கட்டாய விடுமுறை என்ற சட்டம் பல இடங்களில் பயன்படுத்தப் படுவதில்லை. அப்படி விடுமுறை விடப்பட்டாலே நிறைய மின்சாரம் மிச்சமாகும். அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு (இந்த இயந்திரத்துக்கு மின்சாரம் தேவையில்லையே?) விடுமுறையை தீவிரமாக்குங்கள்.

  • கோடம்பாக்கத்துக்கு ஒரு பதினைந்து நாள் கட்டாய விடுமுறை கொடுங்கள். எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். இதனால் கண்டிப்பாக சில நல்ல படைப்புகள் பின்னாளில் வரக்கூடும். அதன்பின், மாதத்துக்கு ஒரு நாள் விடுமுறையை வாரத்துக்கு ஒரு நாளாக மாற்றுங்கள். இந்த ஒருவார விடுமுறையின்போது இந்தத் தொழிலை நம்பி இருக்கும் சிறு ஊதியக்காரர்களை பெருந்தலைகள் கவனிப்பது அவசியம்! (சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்பு நின்றால் எத்தனையோ மின்சாரம் மிச்சமாகும்!)

  • எல்லா தொலைக்காட்சி சேனல் நிறுவனங்களுக்கும், கேபிள்காரர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை விடுங்கள். தினமும் இருமுறை செய்திகளைத் தவிர எந்த ***ம் ஒரு வாரத்துக்கு ஒளிபரப்பு செய்யப்படாமல் இருக்கட்டும். (கண்டிப்பாக அதன் பிறகும் இது தொடரவேண்டும் என்று போராட்டங்கள் நடக்கலாம்!)

  • மின்வாரியத்திலேயே ஒரு தனிக் குழுவை அமையுங்கள். அவர்கள் விஜிலென்ஸ் போல, கடை, ஷோரூம்களுக்கு சென்று தேவையில்லாமல் வீணாகும் மின்சாரத்தைக் கண்காணிக்கட்டும். ஓரிரு முறைகளுக்கு மேல் தொடர்ந்து மின்சாரம் வீணாக்கும் நிறுவனம்/கடைகளுக்கு அந்த மாத யூனிட்டிற்கு 25% அதிகமாக கட்டணம் வசூலியுங்கள். (முக்கியமாக டி.வி.ஷோரூம்கள். வாடிக்கையாளர்கள் யாருமே இல்லாவிட்டாலும் பத்து டி.விக்கள் ஓடிக் கொண்டிருக்கும்!)

  • இனி எந்த அரசு விழாவும் ஆடம்பரமாய் இருக்காது என்று அறிவியுங்கள். அதே போல எந்த பொது, தனிநபர் விழாக்களுக்கும் அலங்கார விளக்குகள், மைக் வகையறாக்களை தவிர்க்கச் சொல்லுங்கள். (வந்தமா, வாழ்த்திட்டு போனோமா என்றில்லாமல் வள வளவென்று என்ன பேச்சு?)

பதிவு ரொம்ப சீரியஸா போறதால இத்தோட முடிச்சுக்கறேன். உங்க யோசனைகளை பின்னூட்டத்துல சொல்லுங்க.

பின்குறிப்பு இல்லாம ஒரு பதிவா?:- இது இந்திய வாழ் மக்களுக்காக, குறிப்பா தமிழ்நாட்டுக்காக எழுதப்பட்ட பதிவு. வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தங்கள் யோசனையை வழங்குங்க. உங்க நாட்டுல எப்படியெல்லாம் மின்சாரம் மிச்சப்படுத்தப்படுது –ன்னு சொல்லுங்க.

ஏதாச்சும் செய்வோம் பாஸ்!

மின்சாரம் அது சம்சாரம் - ஜே.கே.ரித்தீஷ் கவனத்துக்கு!


காட்சி 1:

கதாபாத்திரம் : ஒரு விவசாயி

“நான் நாலு ஏக்கர் நிலம் வெச்சு விவசாயம் பண்ணிகிட்டிருக்கேன். கரண்ட் வர்றப்ப பம்பு செட்டு போட்டு தண்ணி விடறேன். ஆனா அடிக்கடி போகற கரண்ட்னால நாலு ஏக்கருக்கும் முழுசா தண்ணி காட்ட முடியல. ஒவ்வொரு தடவை கரண்ட் வர்றப்பவும் ஒரு ஏக்கர் நனையுது. மறுபடி கரண்ட் கட்டாகுது. அப்புறம் கரண்ட் வந்து போடறப்ப அதே ஒரு ஏக்கர்கிட்ட தண்ணி போயி, தொடர்ந்து போகறதுக்குள்ள மறுபடி போயிடுது. என்ன பண்றதுன்னே தெரியல.”

------------------

காட்சி 2:

கதாபாத்திரங்கள்: ஒரு பொதுஜனம், ஒரு மின்சார வாரிய (இப்ப மின்சாரமே வாரிக்கிட்டுதான் இருக்கு!) லைன்மேன்

“என்ன ஈ.பி.க்காரரே... ஆறு மணிநேரம் கட்டாய மின்வெட்டுன்னு அறிவிச்சுட்டாங்களே. இனி இதுதான் கதியா?”


“ஆறு மணிநேரம்ங்கறது அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே, ரெண்டு மணிநேரம்ன்னப்பவே அஞ்சு மணிநேரம் கட் பண்ணினோம். இப்போ ஆறு மணி நேரம்னிருக்காங்க..”


“அப்ப பத்து மணிநேரம் கட் பண்ணுவீங்களா? இன்னைக்கு பேப்பர்ல, அமைச்சர் ஒருத்தர் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு இந்தப் பற்றாக் குறை தொடரும்ன்னு சொல்லியிருக்காரே...”


“அப்படீன்னா இன்னும் ஆறேழு வருஷத்துக்கு இதுதான் கதி!”


**************


காட்சி 3:

கதாபாத்திரம்: ஒரு படித்த இளைஞன்


“அதொண்ணுமில்ல சார். சென்னையில இருக்கற ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒண்ணு போட்டிருக்காங்க. அதாவது இன்னும் அஞ்சு வருஷத்துக்கு அவங்க நிறுவனத்துக்கு ஒரு நொடி கூடத் தடையில்லா மின்சாரம் வழங்கறதா ஒப்புதல் கொடுத்திருக்காங்க. அதான் இப்படி நம்மளைப் போட்டு வாட்டறாங்க. அந்த நிறுவனம் ஒரு மணிநேரத்துக்கு செலவழிக்கற மின்சாரத்தை வெச்சு ஒரு கிராமத்துக்கு ஒரு நாள் முழுதும் பயன்படுத்தலாமாம்.”


****************


காட்சி: 4

க.பா: ஒரு நடுத்தர வயது அதிகாரி


“சார்.. மின்சாரம் எடுக்கற தனியார் காற்றாலைகளுக்கு ஒரு வருஷம் ஒன்பது மாசமா குடுக்க வேண்டிய பில் அமௌண்டை இன்னும் கவர்மெண்ட் குடுக்கல. அவங்க எப்படி தொடர்ந்து ஓட்ட முடியும்? நிறைய பேர் இழுத்து மூடீட்டு போய்ட்டாங்க. இப்ப நம்ம படற கஷ்டங்களுக்கு அதுவும் ஒரு காரணம். அதுவுமில்லாம அரசு விழா, பொது விழாக்கள்ல பயன்படற மின்சாரத்துக்கு அளவே இல்லை!”


காட்சி: 5

கா.பா: இரண்டு பள்ளி மாணவர்கள்


“டேய்.. என்னடா.. நைட்டு அடிக்கடி கரண்ட் கட்டாகி படிக்கவே முடியலைடா.. கொசுத்தொல்லையால தூங்கவும் முடியல. அதுனால காலைல சரியா எழுந்திருக்கவும் முடியல. பரீட்சையை நினைச்சாலே பயமா இருக்குடா”


“கலைஞருக்கு ஒரு பெட்டிஷன் போடுவோமா? ஒரு ரூபாய்க்கு அரிசியெல்லாம் தர்றீங்க.. இந்தமாதிரி மின்சாரம் இல்லாத கஷ்டத்துலயும் படிச்சு எக்ஸாம் எழுதறவங்களுக்கு 50 மார்க் வாங்கினா, 50 மார்க் இலவசம்ன்னு அறிவிக்கச் சொல்லிடலாமா?”


**************


காட்சி: 6

க.பா: இரண்டு குடும்பஸ்தர்கள்


“காலைல ஆறு டூ ஒன்பது போகற கரண்டால ஒரே தொல்லைப்பா. மிக்ஸில அரைக்க முடியல. ஹீட்டர் போட முடியலன்னு ஆஃபீஸ் போகறதுக்குள்ள அவ டென்ஷனாகி, நம்மளையும் டென்ஷனாக்கிவிட்டுப் போறா. வேலையே ஓடமாட்டீங்குது”


“இங்கயும் அதே கதைதான். கேஸ் சிலிண்டர் ப்ராப்ளம்ன்னு மைக்ரோவேவ் அவன் வாங்கினேன். இப்போ அதுக்கு கரண்ட் ப்ராப்ளம். சம்சாரத்தை சமாளிச்சாலும், மின்சாரத்தை சமாளிக்க முடியலைப்பா”

************


காட்சி: 7

க.பா: இரு நண்பர்கள்

“நேத்து நாயகன் பார்த்தேண்டா. ஜே.கே.ரித்தீஷ் கண்ணுல பொறி பறக்குதுடா. என்னா ஆக்‌ஷன்ங்கற?”


“அப்ப அந்தப் பொறியிலேர்ந்து மின்சாரம் எடுத்து கரண்ட் பிரச்சினையை தீர்க்கவேண்டியதுதானே”


“ஏண்டா.. முடியாதுன்னு நெனைக்கறியா? பண்ணிக் காட்டுவோம்டா!”


“அவரு ரசிகன்தானே நீ. அதான் அவரு மாதிரியே காமெடியா பேசற!”


******************


இதன் தொடர் பதிவை இன்னும் இரண்டு மணிநேரத்தில் படிக்கத் தவறாதீர்கள்
!