Showing posts with label Ravanan Review. Show all posts
Showing posts with label Ravanan Review. Show all posts

Monday, June 21, 2010

ராவணன் - 15

தை - எல்லா பதிவுகளிலும் படித்திருப்பீர்கள். படிக்காவிட்டாலும் இராமயணம் தெரிந்திருக்கும். விமர்சனமும் நிறைய படித்திருப்பீர்கள். படம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் நிச்சயம் எப்படியாவது பார்த்து விடுவீர்கள். என்னாத்துக்குப் பார்த்துட்டு என்று நினைப்பவர்கள் என் விமர்சனம் பார்த்து ஒன்றும் முடிவை மாற்றிக் கொள்வீர்கள் என்று தோன்றவில்லை. ஆகவே விமர்சனம் என்று முழுதாக இல்லாமல் ராவணன் சம்பந்தமான என் எண்ணச் சிதறல்கள்....

*************************************************

1) திருப்பூர் ஸ்ரீசக்தி தியேட்டரில் பையாவிற்குப் பிறகு சுறாவை திரையிடவில்லை. சக்தி ஃப்லிம்ஸ் அதிபர் திரு. சுப்ரமணியத்தின் தியேட்டர். கையச் சுட்டுக்கறதுதான் மிச்சம் என்று நினைத்திருப்பதாக கேள்வி. மொழியாக்கப் படங்களை இரண்டு வாரமாக திரையிட்டவர்கள் ராவணனை நம்பி எடுத்திருந்தார்கள்.


2) ஆன்லைனில் வெளியிட்ட ஒரு மணிநேரத்திற்கெல்லாம் வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் விற்றுத் தீர்ந்தது. சனிக்கிழமை இரவுக் காட்சிக்கு சென்றோம். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் மணிரத்னபுராணம் பாடிக் கொண்டிருந்தார்கள்.

3) தியேட்டர் வாசலில் விக்ரம் ரசிகர் மன்ற கட் அவுட்கள். சற்றுத் தள்ளி நாப்பது அடிக்கு நீஈஈஈளமாக ஒரு கட் அவுட் இருந்தது. யாருக்கு என்று பார்த்தேன். ‘நவரச நாயகன் கார்த்திக்’ பல வேடங்களில் இருந்தார்.





4) விக்ரம் ப்ருத்வியின் மனைவி ஐஸ்வர்யாராவைக் கடத்துவதற்கான பின்னணியான ஃப்ளாஷ்பேக் எந்தவித சலனத்தையும் பார்வையாளார்களிடையே ஏற்படுத்தவில்லை. ஷங்கரின் இந்தியன் கஸ்தூரி மரண ஃப்ளாஷ்பேக்கையும், ஜீன்ஸின் நாசர்-கீதாவை ராதிகா சந்தேகித்து வசவும் ஃப்ளாஷ்பேக்கையும் உதாரணமாகச் சொல்லலாம். (சட்டென்று நினைவுக்கு வருகிறது. தட்ஸ ஆல்)

5) மேக்கிங்- அபாரம். ஒவ்வொரு காட்சியும் பிரமாதமாய் இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை பிரமாதப்படுத்தியிருப்பவர்கள் காமிராமேன்கள் சந்தோஷ் சிவனும், மணிகண்டனும்தான். எந்தகாரணம் கொண்டும் சின்னத்திரையில் பார்த்துவிடாதீர்கள்.


6) வசனம் – சொதப்பல். சுஜாதாவை மிஸ் செய்கிறோம் என்பது தெரிகிறது.

7) பின்னணி இசையில் புதிய உத்திகளை ரஹ்மான் பரீட்சித்திருக்கிறார் என நினைக்கிறேன். எனக்கு பின்னணி இசை மிகவும் பிடித்திருந்தது. இசைக்கருவிகள் என்றில்லாமல் கோரஸை வைத்து அதிக இடங்களில் பின்னணி இசை கோர்க்கப்பட்டிருந்தது கவர்ந்த்து. அதுவும் அரேபிய பாணியில் பெண் குரல் ஒன்று பாடுமே, மிகவும் அருமை.

8) ராவணன், ராமன், சீதா, லஷ்மணன், அனுமார், விபீஷணன் எல்லாரையும் வேறு வகைகளில் காண்பித்திருக்கிறார்கள். ஆனால் புராதனமான கதையை நவீனமாக்குகிறேன் பேர்வழி என்று சொதப்பியிருக்கிறார்கள். சீதை பாதியில் ராவணனிடம் சலனப்படுவது போலவே பொதுஜனங்கள் நினைக்கும் வண்ணம் ஐஸ்வர்யாராயின் கதாபாத்திரம் குழப்புகிறது.

9) பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் குறையில்லை. ஆனால் மிகவும் எதிர்ப்பார்த்திருந்த ‘உசுரே போகுதே’ தவறான இடத்தில் வருகிறது. இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கலாம். அந்த இடத்தில் ‘கோடு போட்டா’ பாடலை நுழைத்திருக்கலாம்.


10) ‘சோத்துல பங்கு கேட்டா இலையப் போடு இலையை
சொத்துல பங்கு கேட்டா தலையைப் போடு தலையை’

‘வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குப் புரிகின்றது
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குப் புரிகின்றதா?’

வைரமுத்து = வைரமுத்து!

11) ஆர்ட் டைரக்டர் படம் நெடுக வியாபித்து உழைத்திருக்கிறார். அவருக்கும் ஷொட்டு. ப்ரியாமணி கல்யாணம் நடைபெறும் இடம், கோடு போட்டா’ பாடல் நடைபெறும் இடம் எல்லாம் ஆர்ட் டைரக்‌ஷனா லொகேஷனா என்று தெரியவில்லை. லொகேஷன் ஒவ்வொன்றும் மிகப் பிரமாதம். கண்ணிலேயே நிற்கிறது.

12) போலீசாக ப்ருத்விராஜ். அப்படி என்ன விக்ரம் தப்பு செய்தார் என்று இவர் துரத்துகிறார் என்பதே தெரியவில்லை. ஒருவரி வசனத்திலாவது போலீஸ் அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. அதனால் விக்ரம் மீது பரிதாபமோ, ஹீரோயிஸமோ ஒன்றுமே பார்வையாளனுக்குத் தோன்றவில்லை. அதேபோல அவனைப் பிடிக்கப் பாடுபடுகிறாரே எஸ்.பி என்று ப்ருத்விராஜ் பக்கமும் பார்வையாளன் சாயமுடியவில்லை. கிடைத்த கேப்பில் ஐஸ்வர்யா ராயை ஸ்க்ரீனில் சைட்டடித்துத் தொலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. (இது பொதுக்க்ருத்து. எனக்கு ஐஸ் மாதிரியான அழகு ‘பொம்மைகள்’ பிடிப்பதில்லை!)

13) ஐஸ்வர்யா படம் முழுவதும் ஜாக்கெட்டைத் திருப்பிப் போட்ட மாதிரியான காஸ்ட்யூமில் இருக்கிறார். அவ்வளவு இறக்கம். உலக அழகி என்பதற்காக இப்படிக் காட்ட வேண்டியதில்லை.

14) விக்ரம், பிரபு, கார்த்திக் என்று ஒவ்வொருவரும் முதலில் ஸ்க்ரீனில் காண்பிக்கப்படும்போது கைதட்டல் பெறுகிறார்கள். ஆனால் மூன்றோ நான்கோ சீன்களில் வந்தாலும், வரும் சீன்களில் எல்லாம் கைதட்டல் வாங்குவது ஒரே ஒருவர். அவர் - ரஞ்சிதா.

15) விக்ரம் – நடிப்பு வழக்கம்போல அபாரம். மணிரத்னத்தின் சிரமப்படலும் படம் முழுக்கத் தெரிகிறது. ஆனால் நாங்கள் - அட்லீஸ்ட் நான் - மணிரத்னத்திடம் அடுத்ததாக எதிர்பார்ப்பது தமிழுக்கான தமிழ் ரசிகர்களுக்கான ABC செண்டர்களுக்கான ஒரு படம். செய்வீர்களா?


ராவணன் – பார்ப்பதற்கு முன் பேச வைத்த அளவிற்கு பார்த்த பிறகு பேச வைக்கவில்லை.

.

கொசுறு:- படம் ஆரம்பிக்குமுன் மக்களிடையே மணிரத்னபுராணம் என்று சொன்னேனல்லவா? படம் முடிந்தபிறகு ஓர் இளம்பெண் சொன்னது: ‘விக்ரம், ஐஸு, ப்ருத்விராஜ்ன்னு மூணு பேரை வெச்சுகிட்டு ஒரு ரொமாண்டிக்கான படம் எடுக்காம என்ன படம் எடுத்திருக்காங்க?’

.