ஒரு சினிமாவுக்குப் போனா நான் ஒரு சாதாரண பார்வையாளன். எனக்கு மாஸான வேட்டைக்காரனும் பிடிக்கும். க்ளாஸான மொழியும் பிடிக்கும். மொத்தத்துல ஏதாவது ஒரு தாக்கம் அந்தப் படம் எனக்குத் தரணும் அவ்வளவே..
நான் மகான் அல்ல அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். சந்தேகமே இல்லை. படத்தின் நாயகனான ஜீவா (கார்த்தி) எதைப் பற்றிய கவலை, சிந்தனைகளென்று ஏதுமில்லாத சாதாரணன். குடித்து விட்டு வண்டி ஓட்டி போலீஸைப் பார்த்து ‘நியூ இயர் மாமே....’ அன்று அலப்பறை செய்கிறவனாய்த்தான் அவரது எண்ட்ரியே வருகிறது. சமுதாயச் சீர்கேடு, நாட்டு முன்னேற்றம் என்ற எந்த ஜல்லியும் அடிக்கவில்லை அவன். அதே போல வீடு பற்றிய கவலையும் இல்லை. வேலையில்லாமல் சுற்றித் திரிகிறான். அதற்காக சில படங்களில் காட்டியதுபோல சுத்தமாக பொறுப்பற்றவனுமல்ல. தேவை வரும்போது அதற்குண்டான முயற்சியை எடுப்பவனாகத்தான் இருக்கிறான். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்கு சுசீந்திரனுக்குப் பாராட்டுகள்.
இப்படியான ஒருவனது தந்தை, நகரில் நடக்கும் இரட்டைக் கொலை ஒன்றின் சாட்சியாக சம்பந்தப்பட்டு இருப்பதால் – அந்தக் கும்பலால் கொல்லப்பட, இவன் எப்படி பழிதீர்க்கிறான் என்பதுதான் கதை. தன் தந்தைக்காக என்று மட்டுமில்லாமல் சமுதாயத்துக்காகவும்தான் என்று சேர்த்திருக்கிறார் இயக்குனர்.
முதல்பாதி – நேரம் போவதே தெரியவில்லை. அவ்வளவு கலகலப்பு. என்னடா இது ட்ரெய்லரில் வயலண்டான படமாகக் காட்டினார்களே.. இவ்வளவு ஜாலியாகப் போகிறதே என்றுதான் நினைக்க வைக்கிறது. ஆனாலும் அந்தக் கல்லூரிக் கும்பலைக் காட்டும்போதெல்லாம் கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்குகிறது.
இரண்டாம் பாதியில் திரைக்கதை விறுவிறுப்பாகிறது. பின் வழக்கமான முடிவு.
காஜல் அகர்வாலை எனக்குப் பிடிக்கவில்லை. படத்தில் அவருக்கும் வேலையொன்றும் இல்லை. அவர் அப்பா மூலம் அந்த தாதா அறிமுகமாகிறார் என்பதற்கும், முதல் பாதி கலகலப்புக்கும் மட்டுமே காஜலின் காதல் உதவியிருக்கிறது.
முதல்பாதியின் கலகலப்புக்கு (இதோட மூணாவது தடவை இதைச் சொல்லிட்டேன்) 90% பங்கு பாஸ்கர்சக்தியின் வசனங்கள். வாய்ப்பே இல்லை..! பின்னியிருக்கிறார் மனுஷன். எல்லாமே நண்பர்களுக்குள் சடார் சடாரென்று அள்ளிவிடும் வசனத் துணுக்குகள் என்றாலும் தியேட்டரில் பல வசனங்களுக்கு க்ளாப்ஸ் அள்ளுகிறது. உதாரணத்துக்கு தோசை சுடும் தோழியின் கணவரிடம் கார்த்தி சொல்வதும், கார்த்தி வசூல்செய்து வந்து கொடுத்த செக்கைப் பார்த்து அவர் நண்பர் சொல்வதும்... ஹாட்ஸ் ஆஃப் டு யூ பாஸ்கர் சக்தி!
டைரக்டருக்கு இரண்டு விஷயங்களுக்காக என் கைகுலுக்கல்கள். ஒன்று திரைக்கதை. அந்தக் கும்பலை வெறும் ஓரிரு காட்சிகள் மட்டும் காட்டி பார்வையாளர்களை –இவனுங்க எப்படா கார்த்திகூட மோதுவானுக-என்று tempo ஏற்றிய திரைக்கதை உத்தி பிரமாதம்.
இரண்டாவது அந்த வில்லன் குழுவின் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்திருக்கும் நடிகர்கள். சத்தியமாக அவர்களை நேரில் பார்த்தால் நான் கொஞ்சம் பயந்து ஒதுங்கித்தான் செல்வேன். அந்தப் பரட்டைத் தலையனையும், கொஞ்சம் தலைசாய்த்து முட்டைக்கண்ணில் பார்க்கும் அவனையும் என்னால் மறக்கவே முடியவில்லை. என்ன ஒரு உடல்மொழி!!
யுவனின் இசையில் ‘வா வா நிலவைப் பிடிச்சுத் தரவா’ ஏற்கனவே என் ஃபேவரைட்டாக இருந்து, படம் பார்த்தபிறகு அவரது குரலில் வரும் ‘இறகைப் போலே அலைகிறேனே’ அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. பின்னணி இசை – கொஞ்சம் அடக்கி வாசித்து வில்லன்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலெல்லாம் மிரட்டலாகக் கொடுத்திருக்கிறார்.
காஜலின் அப்பா மூலம் அறிமுகமாகும் தாதாவுக்கும் கார்த்திக்கும் பாரில் நடக்கும் உரையாடல் சுவாரஸ்ய ட்விஸ்ட்! அவர்களின் சந்திப்பை அப்படியே விடாமல் படம் நெடுக கொண்டு சென்றிருப்பதும் பாராட்டுக்குரிய அம்சம்.
கார்த்தியின் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷ் மிக பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல கார்த்தியின் நண்பனாக வருபவரும். (புரோட்டா ஈட்டர்!)
க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அட்டகாசம். அந்த 19 வயதுப் பையன்களின் வெறி நம்மை என்னவோ செய்கிறது. மொத்தப் படத்திலும் இவர்கள் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் அவர்களின் செயற்கையற்ற நடிப்பும், அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் (ஒளிப்பதிவு: மதி) படம் பார்த்து இரண்டு நாளாகியும் என்னிலிருந்து அவர்கள் பற்றிய பய உணர்வை அகலாமலே வைத்திருக்கிறது.
நான் மகான் அல்ல: ஒரு சாதாரண ஒன்லைன் அசாதரணமான ஓர் இயக்குனரிடம் கிடைத்தால் எப்படி படமாக்கப்படும் என்பதற்கான உதாரணப் படம்.
.