Showing posts with label Birthday. Show all posts
Showing posts with label Birthday. Show all posts

Friday, May 13, 2011

தலைமையிலிருந்து ஓர் அவசர அறிக்கை



நாடே பூரிக்கிறது... நற்றமிழ் வித்தகன் அவதார திருநாள்...! - மெஸ்மெரிகோ பால்பாண்டி அறிக்கை!

திருப்பூர்: தமிழிலக்கியத்தின் அச்சாணி பரிசல்காரனின் பிறந்த நாளை முன்னிட்டு ‘பதிவருக்கொரு நாள் திரு நாள்...’ என்று கோவில்களில் ரிக்கார்டுகள் அலற, அவரது உதவியாளர் மெஸ்மெரிகோ பால்பாண்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையாவது:

கத்தாய தங்கம், நம் தானைத்தலைவன் பரிசல்காரன் பிறந்த இந்தச் சிறப்பான நாளில் தலைவரைப் பார்க்க யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என தலைவர் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. (ஏன்னா அவரு சென்னைல இல்லியே!) அதற்காக, தலைவர் வெளிநாடு சென்று விட்டார் என்று கேனத்தனமாக எண்ண வேண்டாம். பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவைத் தவிர, பாஸ்போர்ட் என்ற வஸ்துக்குக்கூட வழியற்ற வெங்கப்பயல்தான் நம் தலைவர். ஆகவே, வாசகர்கள் (படிப்பவர்கள்), நேயர்கள் (அவர் குரலைக் கேட்பவர்கள்), ரசிகர்கள் (முக நூல், பதிவுகளில் அவரை தரிசிப்பவர்கள்) மற்றும் நண்பர்கள் (இதெல்லாம் இல்லாமல் - தலைவர் ஒரு வெத்துச் சோறு என்று அறிந்தவர்கள்) ஆகியோர் இன்றைக்கும் பார்க்க முடியாதா என ஏங்கி எரிச்சல் ஆகி வேறு தலைமையைத் தேடாமல் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

அவரவர் ஊரிலேயே இருந்து கொண்டாட சில வழிமுறைகளை தொண்டர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.


பக்தி மார்க்கம்

உங்கள் ஊரில் உள்ள கோவில்களில் மொட்டையடித்தல், காது குத்துதல், பால்குடம், தீர்த்தக் காவடி, சாதா காவடி, ஸ்பெஷல் காவடி, அலகு குத்தல், முதுகில் கம்பி குத்தி காவடி இழுத்தல் இன்னபிறவற்றை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உங்கள் ஊருக்கு அருகேயுள்ள பிரபலமான திருத்தலங்களில் குடும்பத்தோடு (யார் குடும்பம் என்பது முக்கியம் அல்ல) சென்று திருமஞ்சனக் காப்பு, வெள்ளி அல்லது தங்கத் தேர், பட்ஜெட் இல்லையெனில் சாதா மரத்தேர் இழுத்தல் ஆகியவற்றை செய்யலாம். ஒவ்வொரு தங்கத்தேரிலும் தலைவர் வந்து அமர்வது இயலாத காரியம் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்பதை அவர் அறிவார் என்பதை நான் அறிவேன்.

காக்க காக்க சூழல் காக்க

லைவரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு சமுதாயம் சீர்கெடாமல் இருக்கும் பொருட்டு தலைவர் ஆணைக்கிணங்க, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் விடுப்பு விடப்பட்டுள்ளன. அதற்காக நீங்கள் குடிக்காமல் இருந்து தொலைக்க வேண்டாம். முந்தைய நாள் இரவே மப்பைப் போட்டு விட்டு மத்தாப்பூ கொளுத்துங்கள். மறுநாள், ஹேங் ஓவர் நீங்கி வழக்கமான பணிகளைப் பாருங்கள். அல்லது தங்களைப் போன்ற மப்பு மகாதேவன்கள் முந்தைய நாள் வாங்கி ஸ்டாக் வைத்திருப்பதை பறித்துக் கொண்டு குஜாலாகுங்கள்.

அதே போலவே 5000, 10,000 மற்றும் 20,000 வாலாக்களின் சத்தம் இன்று முழுவதும் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கக் கூடும். உங்கள் அன்பைத் தலைவர் அறிந்தவர்தானெனினும், பக்கிகள் சுற்றுச்சூழலையும் கருத்தில் கொள்ள தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பட்டாசுக்கு ஆகும் தொகையை தலைவர் அக்கவுண்டிற்கு பட்டுவாடா செய்தால் போதுமானது.


எதற்கும் வக்கற்றவர்களுக்கு

முன் சொன்ன எதைச் செய்யவும் வக்கற்ற பக்கிகளுக்காகவும் தலைவர் தாயுள்ளத்தோடு ஒரு நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளார். ட்விட்டர்-1508, வலைப்பதிவு - 969, முகநூல் - 331, பஸ்ஸ் - 565 என்று தங்கம் விலைக்கணக்காக ஏறி எகிறிக் குதித்துக் கொண்டிருக்கும் பின்தொடர்வோர் அனைவரும் இன்று காலை சரியாக 9.32க்கு நாள் கிழக்கு நோக்கி நின்று கும்பிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்களை கவுரவப்படுத்தும் பொருட்டு தலைவர் எங்கிருந்தாலும் மேற்கு நோக்கி நின்று கும்பிடுவார். (சரியாக 9:32:00 லிருந்து 9:32:05 - ஐந்து செகண்டுகள் மட்டுமே)

முக்கியக் குறிப்பு: மேற்சொன்ன பின் தொடர்வோர் மட்டுமே கும்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தவிர RSS ஃபீடர், கூகுள் ரீடர், மின்னஞ்சல் மூலம் தலைவர் வழிநடப்பவர்கள் பொறுத்தருளவும்.

வெளியாகிறது புதிய படம்

நீண்ட நாட்களாக தலைவரின் புகைப்படம் வெளியிடப்படாமல் இருப்பதால் அவரது மிகச் சமீபத்திய புகைப்படம் ஒன்றை வெளியிடுகிறேன். தலைவருக்கு இது பிடிக்காது எனினும், நானும் அவரது தீவிர ரசிகன் என்பதால் இதை அவர் அனுமதி இன்றி வெளியிடுகிறேன்.





ஏராளமான சலுகைகள் அறிவிப்பு

லைவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புச் சலுகைகள் பின்வருமாறு.

BATA காலணிகள் வாங்கும் அனைவருக்கும் ரூ.1/- திருப்பித் தரப்படும்.

ஜன நெருக்கடி மிகுந்த சாலைகளில் தங்கள் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் யூ ட்யூபில் வில்பர் சர்குணராஜின் பாடல்களை ரசிகாஸ் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இன்று எல்லா நாளிதழ்களிலும் சப்ளிமெண்ட் தரப்படும்.

இன்று கடைக்கு வரும் எல்லா தமிழ் பத்திரிகைகளும் தமிழில் இருக்கும்.

இன்று ஒருநாள் மட்டும் சீமான் பற்களை நறநறக்காலும், தங்கர் பச்சான் பேட்டி கொடுக்காமலும், சென்ஷி கவிதை எழுதாமலும் இருப்பார்கள்.

ஐவர் குழு இன்று ஒருநாள் மட்டும் செயல்படாது.

தங்கத்தேர் இழுக்கும் முதல் ஐந்து நபர்களுக்கு டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் 5% சலுகை விலையில் தரப்படும்.

‘இருப்பதைக் கொடுத்திடு...! கொடுத்ததை மறந்திடு...!!’ எனும் அண்ணனின் கொள்கை வாசகங்களை உங்கள் டி சர்ட்டில் உங்கள் செலவில் எழுதிக்கொள்ள அனுமதி.


- தடுக்கி விழுந்த தமிழிலக்கியத்தை துடுப்பு போட்டு போட்டு நகர்த்திய தலைவன் பரிசல்காரன் வாழும் இந்த பூமியின் ஏதோ ஒரு மூலையில் , அவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமை ஒன்றே நம் சந்ததிகளுக்குப் போதும் என்கிற பெருமிதத்தோடு,

-தலைவரின் முதன்மை உதவியாளன்
மெஸ்மெரிகோ பால்பாண்டி




எதிர்க்கட்சிகள் செய்த சதியால் காணாமல் போன இந்தப் பதிவு இன்றைக்கு மறுபதிப்பு செய்யப்படுகிறது.

.


Wednesday, November 5, 2008

எமக்காக வந்தான் இவன்

அவர் தன்னைப்பற்றி சொல்கையில் இப்படிச் சொல்கிறார்.

“அதிரடிச் சிரிப்புக்காரன். டம்ளரில் பிடிக்குமளவு அழுகிறவன். தோன்றும் நல்ல விஷயங்களை அலட்சியப்படுத்துகிறான். கற்பனை செய்யவே முடியாதபடி அல்பமாக ஏதாவது தோன்றும்போது உரத்தகுரலில் அறிவித்துவிடுவான். அன்பர்களுக்கு பயங்கரவாதி. வெறுத்தொதுங்கிப் போனவர்களைத் தொடர்கிறான் கூப்பிய கைகளோடு. எதற்காக வந்தான் இவன்”

தன்னைப்பற்றி அவர் சொன்ன மேற்பேராவில் எதுவும் பொய்யில்லை. அவர் அப்படித்தான்.

அவர் – ரமேஷ்வைத்யா.

ஸோமாவனதேவதா என்ற பெயரில் அவர் எழுதிய கவிதைகளை மாய்ந்து மாய்ந்து படித்திருக்கிறேன். அதில் என் ஃபேவரைட் ‘அறிதல் அறிவித்தல்’ நான் அவரை விட அதிக இடங்களில் இந்தக் கவிதை குறித்துப் பேசியிருக்கிறேன். நேற்றுகூட லண்டன் சென்றிருந்த என் நண்பன் செந்தில் இதுவரை என்னை அழைத்துப் பேசவேயில்லை நீ என்று மெயிலியபோது ‘இவையெதுவும் இல்லாமலும் ஒரு மனசு அறியாதா தன்னைப் போல் இன்னொன்றை’ என்று பதிலினேன்.

அந்த ஸோமாவனதேவதா செத்தாச்சு’ என்பார் ரமேஷ்வைத்யா. இல்லை என்பது என் கணிப்பு அல்லது விருப்பம்.

இவரது கவிதைத் தொகுப்பு ‘உயரங்களின் ரசிகன்’ என் மிகப்பிடித்த புத்தகங்களில் ஒன்று.

குடைபற்றி எழுதும்போது

மழை பெய்தால்
ஆண்கள்
கறுப்புக்கொடி காட்டுகிறார்கள்..
பெண்கள்
பூங்கொத்து நீட்டுகிறார்கள்!

என்கிறார்.

காதலிகளை

எல்லா பாஷையிலும்
காதலிக்கிறார்கள்

கடைசியில்

மௌனபாஷையில்
மறுதலிக்கிறார்கள்

என்று புதிர்மனுஷிகள் என்கிறார்.

இவரை உயிரோடு வாழவைப்பது எது?

துக்கங்களைப் போட்டுப்
புதைக்கின்ற கல்லறைபோல்
துணிந்த ஒரு மூளை


பக்கத்து மனுஷருக்குப்
புன்னகைப்பூ பூக்கின்ற
தாவரமாய் உதடு

பல்வேறு ஒலிகளில்
மெல்லிசை அடையாளம்
காண்பதற்குக் கற்ற காது

கண்ணீர், காமம்,
கயமை இவைதவிர்த்து
கருணையும் வழியும் கண்கள்

பட்சிக்கோ பாம்புக்கோ
தீங்கிழைத் திருந்தாலும்
நஷ்ட ஈடாகும் சதை

பட்ட செடி, பூமலரும்
உத்தரவாதம் தந்தால்
பந்தலாகும் எலும்பு

குடித்தவன், குழந்தையை
அடிப்பதைப் பார்க்கையில்
கொதித்துத் தோல்சுடும் ரத்தம்

இவையெதுவும் இல்லாத

என்னையும் உயிரோடு
வைப்பது, இதற்கேங்கும் மனசு!


இன்றைக்கு இவருக்குப் பிறந்தநாள்!


அதிகாலை சேவலை எழுப்பி என்ற பாடலையும் எழுதிப் பிரபலமான இவர்...

இன்றுபோலில்லாமல்..

கவிதைகள் எழுதிக் குவித்துக் கொண்டிருந்த

அன்றுபோல் இன்றும், இனியும் வாழ வாழ்த்துவோம்!